
கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 – ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர்.
நூல்கள்
பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை.
கா.ஸ்ரீ.ஸ்ரீ மொழியாக்கம் செய்த காண்டேகரின் நூல்கள்
நாவல்கள்
எரிநட்சத்திரம்
இருதுருவங்கள்
மனோரஞ்சிதம்
வெண்முகில்
இருமனம்
வெறுங்கோயில்
சுகம் எங்கே
முதற்காதல்
கருகிய மொட்டு
கிரௌஞ்சவதம்
கண்ணீர்
யயாதி
அமுதக்கொடி
சிறுகதைகள்
காண்டேகர் கதைகள் ( இரண்டு பகுதிகள்)
கூட்டுக்கு வெளியே
ஆஸ்திகன்
அரும்பு
கா.ஸ்ரீ.ஸ்ரீ செய்த மற்ற மொழியாக்கங்கள்
பகவான் புத்தர், சாகித்ய அகாதெமி – பழனியப்பா பிரதர்ஸ், 1957 (மராட்டிய மூலம்: தர்மானந்த தாமோதர் கோசாம்பி)
கா.ஸ்ரீ.ஸ்ரீ நூல்கள்
நாவல்
காந்தம் 1945
காற்றாடி 1949
சிறுகதை
நீல மாளிகை
அன்னபூரணி
பொது
சைவ தத்துவம்
என் முதல் கதை – பிப்ரவரி 1967
‘உமா’ ஆசிரியர் என் முதல் கதையைப்பற்றி எழுதச் சொன்னார். காக்கைச் சிறகினிலே கண்ணனுடைய கருமையைக் கண்டு களித்த கவியைப்போல, என் நெஞ்சம் என் கதைகளின் கதையிலே திரிந்துகொண்டு, முதல் கதை யைத் தேடி ஓடி இன்புற்றது.
“தற்கொலைக்கு மிகவும் எளிய வழி ஒன்று இருக்கிறது” என்று வியாசர் ஒரு தடவை அர்ஜுனனிடம் சொன்னாராம்.
”அது என்ன?” என்று கேட்டான் அர்ஜுனன்.
“நிறைந்த சபைதனிலே உன்னைப் பற்றியும் உன்னுடைய நற்குணங்களைப் பற்றியும் வீரதீர பராக்கிரமங்களைப் பற்றியும் சிறிது நேரம் பேசிக்கொண்டிரு; போதும்!” என்று வியாசர் சொன்னாராம்.
ஆனால், இப்படி நடந்தது மகாபாரத காலத்திலே. இப்பொழுது ஒருவருடைய தமுக்கை மற்றவர் அடித்துக் கொள்ள வேண்டிய நிலை வந்திருக்கிறது. அதனால்தான் ‘உமா’ ஆசிரியர் சொல்கிறார். “அப்பனே, உன் முதல் கதை எது? அந்த டமாரத்தை இப்படிக்கொண்டு வந்து ‘டம் டம்’ வென்று அடி!” என்று.
2
குயில் தானாகப் பாடுகிறது; மயில் தானாக ஆடுகிறது; ஆறு தானாகப் பாய்கிறது; தென்றல் தானாக வீசுகிறது. ஆயினும் இவையனைத்துக்கும் ஒரு தூண்டுதல் வேண்டும். இளவேனில், மேக மண்டலம்,மாமலை, தென்திசை- இப் படிப் பல. இவற்றின் இயக்கத்துக்குக் காரணமாகின்றன. அதுபோலவே கதை எழுதவும் ஒரு தூண்டுதல், ஓர் எழுச்சி வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள். உள்ளத்தை உந்தும் உணர்ச்சி,தன்னம்பிக்கையை எழுப் பும் பத்திரிகாசிரியரின் கடிதம், வாசகரின் பாராட்டு, இலக்கிய உலகில் நமக்கு மாறுபட்ட கருத்து உடையவ ருடைய உத்வேகமூட்டும் இகழ்ச்சி – இப்படிப் பல காரணங்கள் கதை எழுதத் தூண்டுகோலாக அமைகின்றன. ஒவ்வொரு கதையின் கதைக்கும் பின்னால் இப்படிப் பல சூழ்நிலைகள் குவிந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் எழுத் தாளன் தானே எழுத முடியுமே அல்லாமல், விமரிசகரோ, வாசகரோ கற்பனை செய்துகூட வரைய இயலாது. பிராய் டின் தத்துவத்தைக் கொண்டு வேண்டுமானால் இந்த முயற்சியைச் செய்யலாம், நிற்க.
என் கதைகள் ஆரம்பமான காலத்துச் சூழ்நிலையை முதலில் சொல்லுகிறேன். சத்தியம், அஹிம்சை, இரக்கம், எனிய வாழ்வு, உயர்ந்த சிந்தனை, சாத்துவிகம், மனுஷத் தனம்,நீதி,கற்பு முதலிய நூற்றுக்கணக்கான கனவுகளில் வளர்ந்த, அல்லது வளர்க்கப்பட்ட நான், அப்பொழுது ஒரு புதிய உலகைக் கண்டேன். ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான் சொல்லொணாத வறுமைக்கு இரையாகி, வாழ்வதற்கு வழி தேடிக்கொண்டிருந்த நாள் அது. ஏறக் குறையப் பத்து ஆண்டுகள் நாலாறு துறைகளில் அல்லும் பகலும் உழைத்து, உழைப்புக்குப் போதிய பாராட்டை யும், வாழ்வுக்குப் போதாத ஊதியத்தையும் பெற்று நான் கதிகலங்கிக் கிடந்த காலம் அது. ஓர் அழகிய கனவிலிருந்து அப்பொழுதுதான் விழிப்புற்று, மனிதன் என்று சொல்லப் படும் பிராணியினுடைய கோர வினைகளைக் கண்டேன். ஏராளமான தருமங்களும் தானங்களும் செய்வதாகப் பாசாங்கு செய்துகொண்டு கறுப்புச் சந்தையில் பண்டங் களை விற்ற வியாபாரிகளைக் கண்டேன்: தருமம், அதருமம்; நீதி, அநீதி; சொர்க்கம், நரகம்; கற்பு, விபசாரம் என் பவை போன்ற பழைய உண்மைகள் யாவும் இந்த உலகில் தூள் தூளாயின. ஆத்மா வேறு, உடல் வேறு; இம்மை வேறு, மறுமை வேறு; சமூகம் வேறு, தனிமனிதன் வேறு என்ற வேற்றுமைத் தளைகள் படபடவென்று அறுந்தன். மனிதனுடைய ஆசை இமயத்துக்குமேல் ஓங்கியது; அகங் காரம் பூலோக – புவர்லோக-ஸுவர்லோகங்களைக் கடந்து சுடந்து மேலே எழும்பியது; ‘குவி, குவி’ என்ற வேட்கை, கடலாழத்தோடு போட்டியிட்டது. ‘தேவர்களுக்கும் தானவர்களுக்கும் மூண்டது போர்’ என்று தொடங்கும் பழங்கதைகள் யாவும் இந்தக் காலத்துக் கதைக்கு நிகரல்ல என்று தோன்றிற்று. அக்கம் பக்கத்தில் நல்ல எண்ணத் தைக் காண்பது குதிரைக் கொம்பாக இருந்தது. ஒருபுறம் லோப மோகங்கள்: மறுபுறம் பீதியும் நடுக்கமும். இப்படி இருந்த அந்தக் காலந்தான்,இரண்டாவது உலகப் போர்க் காலம்.
இப்படி நீதியே தலைகவிழ்ந்துபோன காலத்திலும், நல்ல ஆத்மாக்கள் இல்லாமல் இல்லை. வாழ்வைக் கோயி லாகவும் கலையைத் தெய்வமாகவும் போற்றி வாழும் மக் கள் எந்தக் காலத்திலும் இருக்கிறார்கள். இந்த நிலையில் நான் ‘கலைமகளை’ப் புகலடைந்தேன்.
இறைவனின் படைப்பிலே எல்லாப் பொருள்களும் சமமானவை; எல்லாம் பயனுடையவை. இலக்கிய உலகிலே ஆலமரங்களும் தென்னையும் பலாவும் மாவும் உண்டு; என்னைப் போன்ற புற்பூண்டுகளும் உண்டு. சமதரிசிக ளான வாசகர்கள் என்னையும் ஆதரித்தார்கள்.
3
என் முதல் கதை – ‘மழையிடையே மின்னல்’. இது 1942-ல் ‘கலைமக’ளில் வெளிவந்தது. ‘நீலமாளிகை’ என்ற என் முதல் கதைத் தொகுதியில் முதல் கதையாக விளங்கு கிறது. இந்தத் தொகுதிக்கு முன்னுரை அளித்த புதுமைப் பித்தன்’, ‘இவருடைய சொந்தக் கற்பனைகள் எல்லாம், முக்கால்வாசிப் பேர் திரை போட்டு மறைத்து வைக்க வேண்டியவை என்று சொல்லும் விவகாரங்களைப் பற்றி அமைந்திருக்கின்றன. அவைகளைப் பற்றி இவர் தெம்பு குன்றாமல், கை தழுதழுக்காமல் எழுதக்கூடியவர் என் பதை இவர் கதைகளே சொல்லும்” என்று குறிப்பிட்டார்.
4
‘மழையிடையே மின்னல்’- வெளியுலகில் மயக்கமுறும் இளைஞன் ஒருவன், தன் மனைவியின் அன்பை விளக்கமாகக் கண்ட வரலாறு அது.
எனக்கு அக்கம் பக்கத்தில் இருந்த உலகில் நான் கண்ட காட்சிகளின் சித்திரந்தான் அது. “இவரது கதை கள் வாழ்க்கையை ஒட்டியவை; எங்கும் நிகழாதவற்றை யும் நிகழ முடியாதவற்றையும் எழுதிப் படிப்பவருக்குப் போதை ஊட்டி மயக்கும் நோக்கம் ஆசிரியர்க்கு இல்லை” என்று பேராசிரியர் மு.வ. புகன்றிருப்பது நூற்றுக்கு நூறு உண்மையாகும்.
– புனைபெயரும் முதல் கதையும், தொகுத்தவர்: பூவை எஸ்.ஆறுமுகம், முதற் பதிப்பு: பிப்ரவரி 1967, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
ஜூலை 28. கா.ஸ்ரீ.ஸ்ரீ. யின் நினைவு தினம்.

மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் சுடராக ஒளிவிட்டு மற்ற தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு முன்னோடியான அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீனிவாசாச்சார்யா அவர்கள், கோதாவாி சலசலக்கும் நாசிக் நகரத்தில் 28.7.99 அன்று தமது 87ம் வயதில் மறைந்தார்.
அறிஞர் அண்ணா ஒருமுறை (1961ம் ஆண்டு,செங்கல்பட்டு) இலக்கிய மாநாட்டில் கா.ஸ்ரீ.ஸ்ரீயை ‘தமிழக காண்டேகர் ‘ என பாராட்டினார். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் மொழிபெயர்ப்புகளால் தமக்கு தற்கால இலக்கிய ஆர்வம் ஏற்பட்டதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி குறிப்பிட்டதுண்டு. இலக்கிய உலகில் தனக்கென ஒரு பாணி, தனி நடை ஏற்படுத்திக்கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீயின் எழுத்துப் பணி மகத்தானது!
நேர்மை, எளிமை, வாய்மை, தூய்மை, பன்மொழிப்புலமை, சொல்வளமை, ஆன்மிகத் தன்மை, எண்ணத்தில் இளமை என அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் அரும்பெரும் குணங்களைப் பற்றி நிறைய எழுதலாம். எதையுமே ஆராய்ந்து பார்த்தபின் ஏற்பதோ மறுப்பதோ அவருடைய நிதானத்தைக் காட்டியது. உள்ளத்திருந்ததை ஒளிக்காமல், யாரையும் புண்படுத்தாமல் பேசும் திறமை அவருக்கு கைவந்த கலை. பழுத்த வயதிலும் பண்பு, அடக்கத்துடன் வாழ்ந்த அவாிடம் (ஜூன் 99ல் ஒரு நாள்), ‘தற்கால தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன ? ‘ என்று கேட்டபோது, அவர் தயங்காமல், ‘வயதான பின்பு புதிய தமிழ் நூல்களை நான் அதிகம் படிக்கவில்லை. எனவே தற்கால தமிழ் எழுத்தாளர்பற்றி ஏதும் கூற எனக்குத் தகுதியில்லை ‘ என்று நேர்மையான மறுமொழி தந்தார்.
சில குறிப்புகள்
மகாத்மா காந்தி 1937ல் சென்னை வந்தபோது, உ.வே.சாமிநாத ஐயாின் தமிழ் வரவேற்புரையை கி.வா.ஜகந்நாதனின் வேண்டுகோளுக்கிணங்கி, இந்தியில் மொழிபெயர்த்தது கா.ஸ்ரீ.ஸ்ரீ.தான். மகாத்மா காந்தி அந்த உரையை வெகுவாகப் பாராட்டினார். அப்போது கி.வா.ஜ.வுடன் ஏற்பட்ட உறவு கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்கு சுமார் 40 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘கலைமகள் ‘ பத்திாிகைக்கு துணையாசிாியராகவும் பதிப்பாசிாியர்களுள் ஒருவராகவும் பல ஆண்டுகள் பணிபுாிந்தார். ‘மஞ்சாி ‘ பத்திாிகையில் ஏராளமாக எழுதினார்.
பன்மொழிப்புலவரான கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழுக்கு சிறப்பிடம் தந்தார். சென்னை இந்தி பிரசார சபாவில் அவர் வேலை செய்த போது நடந்த சம்பவம் அவருடைய தமிழுணர்வை இலக்கிய உலகுக்கு வெளிகாட்டியது. ‘இந்தியைத் தவிர வேறு இந்திய மொழியில் சிறந்த இலக்கியம் இல்லை, நாமே இலக்கியச் சக்கரவர்த்திகள் ‘ என்ற தொனியில் சில இந்தி எழுத்தாளர்கள் பேசினார்கள். இதைக்கேட்டு வெகுண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘இந்தியை விட தமிழில் சிறந்த கதை கட்டுரைகள் இருக்கின்றன ‘ என்று வாதாடினார். அப்போதிலிருந்து தமிழ் கதைகள், கட்டுரைகள், தமிழிலக்கிய வளம்பற்றின கட்டுரைகள் என பலவற்றை இந்தியில் மொழி பெயர்த்து இந்தி இலக்கியப் பத்திரிகைகளில் வெளியிட்டு வெற்றிகண்டார். ‘இந்தியச் சிறுகதைகள் ‘ என்ற நூல் இந்தியில் வெளிவந்தபோது அதில் கல்கி, புதுமைப்பித்தன், பி.எஸ்.ராமையா, கு.ப.ரா, சிதம்பர சுப்ரமணியன் போன்றோர் படைப்புகளை இந்தியில் அமைத்து இடம் பெறச் செய்த அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.தான். இந்த முயற்சிக்கு முத்தாய்ப்பு வைத்ததுபோல பாரதியின் ‘தராசு ‘ (கட்டுரைகள்) படைப்பை உள்ளது உள்ளவாறே இந்தி வடிவாக்கி வெளியிட்டார்.
மொழிபெயர்ப்புத் துறையில் சுடராக விளங்கிய கா.ஸ்ரீ.ஸ்ரீ. ஒரு சிறந்த படைப்பாளரும்கூட என்பது குறிப்பிடத் தக்கது. ‘காந்தம் ‘ என்பதுதான் இவர் எழுதிய முதல் தமிழ் நாவல் – 1945ல் கலைமகள் வெளியீடாக வந்தது. இரண்டாம் நாவல் 1949ல் வெளியிடப்பட்ட ‘காற்றாடி ‘ என்ற தமிழ் நாவல். மேலும் ‘நீல மாளிகை ‘ ‘அன்னபூரணி ‘ போன்ற சிறுகதைத் தொகுதிகளையும் கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழ் வாசகர்களுக்கு அளித்தார். குமுதம் பத்திாிகை நிறுவிய திரு. எஸ்.ஏ.பி.அண்ணாமலை கேட்டுக்கொண்டபடி, கா.ஸ்ரீ.ஸ்ரீ. சொந்தச் சிறுகதையை குமுதம் முதல் இதழுக்கு அனுப்பினார். மேலும், கா.ஸ்ரீ.ஸ்ரீ.தமிழில் மொழிபெயர்த்த காண்டேகாின் நாவலான ‘வெண்முகில் ‘ குமுதம் வெளிவர ஆரம்பித்த 1947 நவம்பர் மாதம் அதில் முதல் தொடர்கதையாக வெளிவந்தது. 1940-50களில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் கதைகளை வெளியிடாத தமிழ் பத்திாிகைகளே இல்லையென்றால் மிகையாகாது.
இளம் வயதிலேயே வடமொழிப்புலமையும் மராட்டி மொழி பழக்கமும் பெற்ற கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் சரளமாக எழுத பேசக் கற்றுக்கொண்டார். இவர் வி.ஸ.காண்டேகாின் மராட்டி இலக்கியத்தைத் தமிழில் மொழிபெயர்த்துக் குவித்தார். காண்டேகருடன் இவருக்கு இருந்தது கடிதத்தொடர்பு மட்டுமே. இருவரும் நோில் சந்தித்துக்கொள்ள வாய்ப்பே ஏற்படாமல் போனது. ‘காண்டேகாின் நூல்களை ஏன் மொழி பெயர்க்க விரும்பினீர் ? ‘ என்ற கேள்விக்கு, கா.ஸ்ரீ.ஸ்ரீ.அளித்த பதில் – ‘வங்க, இந்தி நாவல்கள் தமிழில் பெரும்பாலும் வந்து ஓய்ந்திருந்த காலத்தில், புதுமையான காண்டேகாின் இலக்கியத்தை தமிழாக்க விரும்பினேன். 1940-50களில் காண்டேகாின் 13 நாவல்களையும், சிறந்த 150 சிறுகதைகளையும் தமிழாக்கினேன். வாசகர் காண்டேகர் இலக்கியத்தை ஆர்வத்துடன் விரும்பிப் படித்தனர். ‘
‘சமூக அமைப்பு முறையில் மிகப்புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு – காண்டேகரின் கதைகள் ‘ என்று அறிஞர் அண்ணாவால் குறிப்பிடப்பட்ட அந்த கதைகளை தமிழ் வாசக உலகுக்கு அயராமல் அளித்த கா.ஸ்ரீ.ஸ்ரீ.யைப் பற்றி, ‘மராத்தியில் நான் பெற்ற புகழைவிட, தமிழில் என் இலக்கியத்தை மொழி பெயர்த்து கா.ஸ்ரீ.ஸ்ரீ.பெற்ற புகழ் அதிகம். அதற்கு அவர் தகுதியானவருங்கூட ‘ என்று காண்டேகரே ஒருமுறை கூறியுள்ளார்.
காண்டேகாின் படைப்புகளில் கா.ஸ்ரீ.ஸ்ரீ.யை மிகவும் கவர்ந்த நாவல் ‘யயாதி ‘தான். ‘புராண பாத்திரமான யயாதியை இக்காலத்திய மிதமிஞ்சிய வேட்கை வெறியிலாழ்ந்த மனிதனாக காண்டேகர் சித்தாித்திருக்கிறார். புராணக்கதையொன்றை அற்புதமான நவீனமாய் படைக்க முடியுமென்பதற்கு இது தக்க சான்று ‘ என புகழ்ந்தார் கா.ஸ்ரீ.ஸ்ரீ. காண்டேகாின் மராட்டிய ‘யயாதி ‘க்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சாகித்ய அகாதெமியின் பாிசும் பிறகு அதற்கு பாரதீய ஞானபீட பாிசும் கிடைத்தன. கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் தமிழ் மொழிபெயர்ப்பு ‘யயாதி ‘க்கு 1991ல் சாகித்ய அகாதெமியின் மொழிபெயர்ப்புப் பாிசு கிடைத்தது!
மொழி நம்மைப் பிாிக்கும் என்று எண்ணுவது குறுகிய கண்ணோட்டம். சமுதாயப் பிரச்னைகளை விளக்கிட்டுகூ காட்டும் நூல்கள் எந்த மொழியிலிருந்தாலும் தாய்மொழியில் தரப்படும்போது, பிரச்னைகளை நம்மால் நன்கு புாிந்துகொள்ளமுடிகிறது. தேசிய ஒருமைப்பாட்டுக்கு இவ்வகையில் மகத்தான தொண்டு புாியும் இலக்கியவாதி கள்தாம் மொழிபெயர்ப்பாளர்கள். ஆரவாரமில்லாமல் ஆயுட்காலம் முழுதும் இந்த இலக்கியப் பணியில் ஈடுபட்டிருந்த வர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. ‘மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுண்கலை. நல்ல சங்கீதம், ஓவியம் போல பிசிறில்லாமல் இருக்க வேண்டும். அதற்காக எவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டாலும், எவ்வளவு பாடுபட்டு உழைத்தாலும் தகும் ‘ என்று சொன்னவர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
வடமொழிப்புலமை கொண்ட கா.ஸ்ரீ.ஸ்ரீ. வான்மீகி ராமாயணத்தை நன்கு அறிந்தவர். இந்த இலக்கிய ஆராய்ச்சின் விளைவாக, ‘சுதர்ஸனம் ‘ என்ற வைணவ மாத இதழில் ராமாயணத்தையொட்டி பல மனோதத்துவ ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதினார். வேதங்கள் பற்றி விாிவான ஆராய்ச்சியை பல ஆண்டுகள் செய்தார். பல பாகங்கள் கொண்ட வேதநூல்களை தமிழில் எழுத வேண்டும் என்பது இவருடைய பொிய இலக்கிய இலக்காக இருந்தது. ஆனால் அதற்குள் முதுமை இவரை வென்றது. இவர் கடைசியாக ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறிய நூல் வேதத்தைப் பற்றியதுதான். கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் நூல்களை சீராக வெளியிட்ட, 2000ல் நூற்றாண்டை கொண்டாடப்போகும் மயிலை அல்லயன்ஸ் பதிப்பகத்தார்தான் இந்த ஆங்கில நூலையும் வெளியிடுவதாக இருக்கிறார்கள். இது ஒரு ஆன்மிகக் கருத்துக்கோவை – கா.ஸ்ரீ.ஸ்ரீ.யின் இலக்கியப் பணிக்கு ஒரு சிகரம்போன்றது எனலாம்.
‘இலக்கியப் பணி என்றால் அதில் சமூகப் பணியும் ஆன்மிகப் பணியும் அடக்கம் ‘ என்று சொன்ன அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ. இன்று இந்தியாவை ஆக்கிரமித்துள்ள (சமூக)நோய் என்ன என்ற கேட்டபோது, ‘தன்னலம் ‘ என்று ஒரே சொல்லில் பதில் தந்த அறிஞர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.க்கு நமது அஞ்சலி.
(இந்த அஞ்சலியின் சுருங்கிய வடிவம் கல்கி 15.8.99 இதழில் இடம்பெற்றது. – வாசன்)