எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..!





ஜன்னலோரம் அமர்ந்திருந்த ஜானகிராமன் ரொம்ப நேரமாக கண்ணிமைக்காமல் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தான். ஜன்னலுக்கு கொசுவலை அடிக்கப்பட்டிருந்தது. ஜன்னலின் அந்தப் புறத்தில் இரண்டு செவ்வெறும்புகள் ஒரு உணவு உருண்டையை இழுத்து கொசுவலைத் தடுப்பைத் தாண்டி இந்தப் பக்கம் கொண்டு வர எவ்வளவு முயன்றும் முடியவில்லை.

உதவிக்கு வரும் எறும்புகளும் இழுத்துப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் பின்வாங்கிப் போயின. இவை இரண்டு மட்டும் விட்டுப் போகவுமில்லை., வெளியேறிவிடவுமில்லை!
ஓரு செகண்ட் யோசித்தவன் கொசுவலை ஸ்டிக்கரைப் பிரித்து அவை உள்ளே வர அனுமதிக்கலாமா யோசித்தான். பிறகுதான் மனசுக்குள் ஒன்று உதயமாயிற்று.
‘அவரவர் பிரச்சனையை அவரவர்தான் சமாளிக்கணூம்.!, ஸ்டிக்கரை பிரித்து அவை உள்ளே வர அனுமதித்தால், அவை உணவு உருண்டையோடு உள்ளே எளிதில் வந்துவிடும். ஆனால், அது அவை மட்டுமல்ல இன்னும் தங்கள் சகாக்களை உள்ளே பிரவேசிக்கவிட்டு பிரச்சனையை உண்டு பண்ணிவிடும். உள்ளே வந்து புதிதாய் புத்து வைக்கும். பிறகு போகாது’. படுக்கப்போய்விட்டான்.
மறுநாள் காலை எழுந்து சனியன்கள் போய்விட்டனவா?! என்று பார்த்தால், அப்போதும் அவை போராடிக் கொண்டுதான் இருந்தன.
முடிவாக ஒன்று புரிந்தது ஜானகிராமனுக்கு…!
வாயிலிருந்த உருண்டையை தன் சக எறும்புகளோடு பங்கித்தின்னத்தான் பிரயத்தனப்பட்டனவேயொழிய தனித்துத் தின்று தம் பசியைத் தீர்க்க அவை முயலவில்லை!
‘எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்!’ என்று எறும்புகள் நினைப்பது ஏன் நமக்குப் புலப்படுவதில்லை?!’ யோசித்தான். ஓ! அவற்றிக்கு பகுத்தறறிவு எனும் ஆறாம் அறிவு இல்லையே!?., ஆனால் நமக்கு மட்டும்தான் பகுத்தறிவை பதுக்கறிவாய் மாற்றி ரேஷன் அரிசியைக் கூட பதுக்கிவிற்கும் பண்பு உண்டே! என்று நினைக்கையில் வெட்கமாகப் போய்விட்டது!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |