இன்னும் சாகாத சம்பிரதாயங்கள்!





உலகத்துல சாகாமலிருக்கிற எத்தனையோ விஷயங்கள்ல இன்னும் சாகாமலிருக்கற சம்பிரதாயங்களுக்கு அப்படியென்ன மார்கண்டேய ஆசீர்வாதமோ தெரியலை!.
வில்வம் அந்த கடை வாசல் முன்னால் நின்றான். காரிலிருந்தபடியே அவன் மனைவி கல்பனா சொன்னாள், ‘ஏங்க மாமாவுக்கு ஸ்வீட் வேண்டாம்! அவருக்கு சுவீட் பிடிக்காது! மாம்பழம்னா ரொம்ப உசிரு! ரெண்டு மூணு வெரைட்டில கொஞ்சம் கொஞ்சம் வாங்கிங்க!’

இந்த பெருசு போயும் சேரமாட்டேங்குது… பொழைச்சும் மீள மாட்டேங்குதே!.. இழுத்துட்டே இருக்கு! மாசக்கணக்கா..! வருஷக் கணக்கா..! நொந்து கொண்டான் வில்வம்.
‘தீன கருகணாகரனே நடராஜா நீலகண்டனே!’ மனசுக்குள் ரீங்காரமிட்டது பாடல். மவுன குருவே.!. ஹரனே.!. எனையாண்ட நீல கண்டனே!’ ஞானிகள் மனம்விரும்பும் நீல கண்டனே என்பதுதான் ஹைலைட்! இவன் ஞானத்தின் வெளிப்பாடே இந்தக் கதை!
காரணம் இந்த நீலகண்டப் பெருமான்தானே மார்கண்டேயனாக சம்பிரதாயங்களைச் சாகாமல் காத்துவருவது?!
யாரையாவது எதற்காகவாவது எப்படி இருக்கார்னு பார்க்க வரும்போதெல்லாம் எதையாவது வாங்க்கீட்டு வரணும்கறது என்ன சம்பிரதாயம்?
அப்படியே வாங்க்கீட்டு வந்தாலும், அவர்… ‘இனிமே இதெல்லாம் வாங்கீட்டு வரவேண்டாம்னு தீர்மாணமாச் சொல்றதில்லே.! சொன்னால் செலவாவது மிஞ்சுமில்லே?!
எதுவும் சொல்லாம வாங்க்கீட்டு வந்ததும் ’ஒவ்வொரு தடவையும் எதையாவது வாங்க்கீட்டு வரணுமான்னு?’ வாய் வார்த்தைக்குச் சொல்றது, அது ஒரு ஸ்ம்பிரதாயம்.! சொன்ன கையோடு நாம் கொண்டுபோன பையைப் படக்குனு பிடிங்கிட்டு உள்ள போயிடறது! அதுவும் சம்பிராதாயம்தான். விட்டா, திருப்பியாவது கொண்டுபோய், நாம, நல்லா ரெண்டு நாளைக்கு உக்காந்து நம்ம வீட்டுல திங்கலாம் விடறது இல்லே..! பையைக் கையோடு வாங்க்கீட்டுப் போய் உள்ளே எல்லாம் ஆராய்ச்சி பண்ணி, நாம் கொண்டு போனதையே நமக்கு சாப்பிடப் பரிமாறுற சம்பிரதாயம்! ஸ்வீட்டும் சரி பழங்களும் சரி நாமே பட்ஜெட் பார்த்து பழகுதிர் நிலையத்துல இல்லே..பரிதாபமான கடைல வாங்கியிருப்போம்! அதையே நமக்கு அறுத்துவச்சா..?! எரிச்சல் வரதா..?! சரி நாமதான் அதைத் திங்காம வந்திடறோமா? அதையும் ஒரு வெட்டு, வெட்டிட்டு ஒரு காப்பித் தண்ணியைக் காலிபண்ணீட்டுத்தான் திரும்புறோம்கறது வேற கதை!.
மாம்பழத்தை மோந்து பார்த்து செலக்ட் பண்ண மூர்க்கமானார் கடைக்காரர் ‘அதெல்லாம் மோந்து பார்த்துட்டு வாங்கினது அந்தக் காலம்!’ என்றார்.
உண்மைதான் பலாச் சுளையை உருட்டைப் பார்த்து நல்லதான்னு செலக்ட் செய்யலாம். மாம்பழத்தை மோந்து பார்த்தாலே வாசம் புளிப்பா இனிப்பான்னு பிடிபட்டுடும். அதெல்லாமும் சம்பிராதாயம்தான்.
கல்யாண வீட்டுக்குக் கூப்பிட்டா, சாப்பிட்டுப் போங்கண்ணு ஒரு வார்த்தை சொன்னானா?! அவனை விடு! அவன் பிசி! பொண்ணு மாப்பிள்ளை ஒண்ணு சேர்ந்து உறவுக்காரங்க்களை சாப்பிடச் சொல்லிச் சொல்லணுமாம்.., சொன்னாங்களான்னு கேட்பது ஒரு சம்பிரதாயம்.
பந்தில உட்கார்ந்ததும் பக்கத்துல வந்து பார்த்துப் பார்த்துக் கேட்டு சர்வ் பண்ணனுமாம். திங்க உக்கார்ந்தாச்சு! இவன் வயிற்றுக்கு இவன் திங்க வேண்டியதுதானே?! பந்தி வைக்கிறவன் எதுக்கு வந்து வந்து கேக்கணும்?! எல்லாம் சம்பிரதாயம். இதெல்லாம் சாகணும்… உயிரோடு எரிச்சு பொதைக்கணும்.
எதைச் செய்தாலும் ஆத்மார்த்தமா செய்யணும்… சம்பிரதாயமாச் செய்யக் கூடாது! சம்பிரதாயங்கள் சங்கடத்தை உண்டுபண்ணும். எப்படி இருக்காங்கன்னு பார்க்கப் போய்.. இப்படி ஆயிட்டேன்னு சொல்ல வச்சிடக் கூடாது!
சாமீபியத்துவத்தை வளர்ப்போம்! சம்பிரதாயத்தை சாகடிப்போம்! மனம் மறுபடியும் பாடியது தீனகருணாகரனே நடராஜா நீலகண்டனே! நின்னருள் வேண்டிப் பணியும் என்னையும் நினைந்து அருளும்!
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |