வாழப் பிறந்தவள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2025
பார்வையிட்டோர்: 152 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கோலாலம்பூரில் இருந்து கிளம்பி ஒரு மணி நேரம் ஓடி இருக்கும். புதிய நெடுஞ்சாலையில் அவளது ஈஸ்வரா நிதானமாய் ஓடிக் கொண்டிருந்தது. நெளிந்து நெளிந்து செல்கின்ற வேளையில் வானளாவ நிற்கும் மலைத் தொடர்களும் அதை மூடி நிற்கும் மரங்களும் அதன்மேல் வந்து விழுந்து, எழுந்து, புகுந்து, ஓடி விளையாடும் மேகக் குழந்தைகளும் அவள் பார்வையில் படாமல் இல்லை.

நேராகச் செல்கின்ற பாதை வளைவுகளில் திரும்பும் போது அவள் கொஞ்சம் ஆர்வத்துடன் அவற்றைப் பார்ப் பாள். எங்கோ ஓரிடத்தில் திரும்பிய போது மலையிலிருந்து இரண்டு சிறு அருவிகள் கீழே இறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தாள். காரை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடிப்போய்க் கால்களை நனையவிட்டுக் கொண்டு நேரம் போவது தெரியாமல் உட்கார்ந்திருக்க வேண்டும் போல் இருந்தது.

மனிதன் சும்மா உட்கார்ந்திருந்தாலும் அவன் மனம் அவனுடன் உட்கார்ந்திருப்பதில்லை என்பது போல், அவளது கை கால் கண் யாவும் காரில் இருந்தாலும் பாழாய்ப் போன மனம் மட்டும் ஏன் இப்படி அலை பாய்கிறது? கட்டுப்படுத்துகிறாள். கட்டுக்கடங்காமல் ஓடிய கன்றுக்குட்டியைப் பிடித்து வந்து ஓரிடத்தில் கட்டிப் போட்டதும் திகைத்து நிற்குமே அதைப் போல அந்த மனமும் அப்படியே ஒரு வினாடி திகைத்து நின்றது. மறுபடியும் ஓட ஆரம்பித்து அவளையே சுற்ற ஆரம்பித்தது. சுற்றிச்சுற்றி வந்தது. நீலாம்பரி என்ற அந்த அறிவார்த்தமான பெண்ணைச் சுற்றி இப்போது நகர்வலம் வருவதுபோல அவளுடன் சேர்ந்து கொண்டு, அவளையும் இழுத்துக் கொண்டு சுற்றுலாச் செல்கிறது.

நீலாம்பரி அதனுடன் அடிமையாகிப் போய் இன்று படும்பாடு போதாதென்று மறுபடியும் அவளைத் தன் வழிக்கு இழுத்துச் செல்கின்றது. நீலாம்பரி விழித்துக் கொண்டாள். ஒரு முறை உடம்பு சிலிர்த்தது. விசுக்கென்று மனக்குருவி ஓடிப்போய் எங்கேயோ ஒளிந்து கொண்ட டது.

நீண்டு கிடக்கும் அந்த நெடுஞ்சாலையைப் பார்க்கும் போது அதன் அழகும், தெளிவும், கம்பீரமும் உறுதியும் அவளுக்கு எதையோ நினைவுபடுத்தியது. நினைத்துப் பார்க்கிறாள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சாலைக்கு இப்படி ஓர் அழகும் கம்பீரமும் கிடையாது. குண்டும், குழியுமாகக் கிடந்த அந்தச் சாலைதான் இன்று இவ்வளவு அழகாகவும் நேர்த்தியாகவும் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியும் போது நீலாம்பரிக்குத் தன்னைப் பற்றிய நினைவும் சுடுமணலில் விழுந்து பொரியும் சோளம் போலப் பளிச்சென்று மின்னலாக விரிகின்றது.

கடந்து போன காலங்களில் நடந்து வந்த பாதைகளில் பெற்ற அனுபவங்கள் அவள் கால்களில் தைத்திருந்த ஆணிகளாக நெஞ்சில் நெருடுகின்றன. அணிந்திருக்கும் அழகிய காலணியின் மிருத்தத் தன்மையைக் கடந்து அந்த நெருடல் வலிக்கின்றது.

சாலையோரத்து மரங்களின் ஊடே நிமிர்ந்து நிற்கும் தென்னைமரம் ஒன்று கண்ணில் படுகிறது.

அந்த மலையடிவாரத்தில் அழகாகப் படர்ந்து விரிந்து நிற்கும் மா மரங்களின் நடுவே புகுந்து வெளியே வந்துவிட்ட வடிவமரத்தின் இடையே சென்று உயரத்தில் கொத்தும் குலையுமாய்க் காய்த்துக் குலுங்கும் அந்த மரத்தில்கூட எத்தனை வடுக்கள் ?

அந்த வடுக்கள் யாவும் அது பெற்ற அனுபவத்தின் கால முத்திரைகள் தாமே? அது ஒவ்வொரு மட்டைகளை உதிர்த்துவிட்டு எழுந்த போதெல்லாம் ஒவ்வொரு பாடத்தைப் பெற்றுதானே உயர்ந்து நிற்கின்றது.

தேங்காயின் வயிற்றிலிருந்து வெளியே வந்த நாளில் இருந்து ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சியிலும் அது பெற்ற அனுபவம் போல், அவள் பிறந்தது முதல் இன்றுவரை கிடைக்கின்ற அனுபவங்களின் முதிர்ச்சிதானே இன்றுள்ள வளர்ச்சி!

தாயின் வயிற்றைக் கிழித்துக்கொண்டு வெளியே வந்த தென்னங்கன்று, அது வளர்ந்து மீண்டும் காய்களைத் தருகின்றபோதும் அதன் தாய் அதன் பிடியிலேயே ஒட்டிக் கொண்டே இருந்து மண்ணோடு மண்ணாகி மறைந்து போகிறது என்றாலும் அது வேறு, கன்று வேறாய்ப் பிரிந்த கதை எப்போதும் கிடையாது. ஆனால் பெண்..!

அவள் தாயின் வயிற்றிலிருந்து வெளியே வந்து, அவளும் பெண்ணாகித் தாயாகித் தன் வம்சம் விளங்க வாழையடி வாழையாய்த் தொடர்கின்ற போதுதானே சம்பவங்களும், சரித்திரங்களும் நிகழ்கின்றன. ஒவ்வொரு பெண்ணிலும் ஓராயிரம் சம்பவங்கள்… ஒவ்வொரு பெண்ணிலும் ஒரு சரித்திரம்!!

அப்படி அவள் சரித்திரமாகி இராவிட்டால் உலகம் போற்றும் உத்தமர்கள்! தியாகச் சீலர்கள், அறிஞர்கள், விஞ்ஞானமேதைகள் இம்மண்ணிலே முளைத்திருக்க முடியுமா?

மண்ணைவிடப் பொறுமையாகி, பூவைவிட மென்மை யாகி… பொன்னைவிட மேன்மையாகித் திகழ்கின்ற பெண்மைக்குதான் எத்தனை எத்தனை வேதனைகள்!

உரசி உரசிப் பார்த்தபின்தானே தங்கம் உயர்வாக மதிக்கப்படுகின்றது. பெண்ணும் பல சோதனைகளைக் கடந்து துனிந்து நின்ற பின்னால்தானே உற்றார் பெற்றோர், சுற்றத்தாரால் சூழ்ந்து நிற்கும் உலகத்தாரால் மதிக்கப் படுகிறாள்.

தியாகம் என்றும் அர்ப்பணிப்புத் தன்மை என்றும் எத்தனை எத்தனை காரணங்களால் பெண் தன்னையே தந்து மண்ணாகிப் போகிறாள்.

பிறந்தது முதல், மண்ணில் மீண்டும் புதைகின்ற வரை அவள் அடைகின்ற கஷ்டங்கள் நஷ்டங்கள்தாம் எத்தனை எத்தனை, எதிர்ப்படும் கஷ்டங்களைக் கண்டு அஞ்சியும், ஏற்படுகின்ற நஷ்டங்களைக் கண்டு அலுப்படைந்தும், வாழ்க்கையை வீணடித்துவிடாமல் எல்லா நிலைகளிலும் விவேகமாய் அவற்றைச் சந்தித்ததால் அடைந்த வெற்றிதானே இப்பயணம்.

நீலாம்பரியின் ஈஸ்வரா கோலக்கங்சார் வந்து சேர்ந்த போது அவளுக்கு ஏதாவது சாப்பிட வேண்டும் போல் இருந்தது. காரைக் கார் நிறுத்துமிடத்தில் போட்டு விட்டுக் குளியலறையில் போய் முகம் கழுவிக் கொண்டு திரும்பிய போ து உள்ளமும் உடம்பும் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருந்தன. மெல்ல அங்கிருந்த கடைகளில் பார்வையைச் செலுத்தியவளாய் நடந்தாள்.

நீண்ட நேரம் காரைச் செலுத்தியதால் ஏற்பட்ட இடுப்பு வலி. ஸ்டால்களில் காணப்பட்ட ஒவ்வொரு பொருளிலும் ஆழ்ந்து தனது பார்வையைச் செலுத்தினாள். அவற்றின் அழகான தோற்றம் அவள் மனத்தை மிகவும் கவர்ந்தது. எல்லாவற்றையும் பார்க்கின்றாள். பார்ப்பதை எல்லாம் வாங்க வேண்டும் என்ற ஆவல் மேலிடுகின்றது. ஆனால் எதை வாங்குவா….யாருக்காக வாங்குவாள்? உல்லாசமாய் வானில் பறந்து கொண்டிருந்த பறவையை யாரோ கல்லால் அடித்து வீழ்த்தியது போல் அவள் மனக்குருவி சுருண்டு போய் அடங்குகின்றது. திரும்புகிறாள். சிற்றுண்டி விற்கப்படும் இடத்திற்குச் சென்று ஒரு தட்டை எடுத்து அதில் சில பலகாரங்களை எடுத்து வைத்துக் கொண்டு அமர்கிறாள்.

“தண்ணி ஏதாச்சும் வேணுமாக்கா…?” அவளது மேசைக் கருகில் சுத்தமான உடையில் சுறுசுறுப்பான கண்களுடன் பத்து வயது மதிக்கத்தக்க சீனப் பையன் ஒருவன் அவளைப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

அவனுக்கும் அந்த மொழிக்கும் வித்தியாசம் இருந்ததால் சந்தேகத் தவிப்புடன் சுற்றுமுற்றும் பார்க்கிறாள் அவள். இவன்! இவனா, தன்னை அப்படி விசாரித்திருப்பான்? மனத் துக்குள் கேள்வி எழுந்ததை முகம் காட்டிவிட்டது போலும் பையன் பேசினான்.

“நான்தான் கேட்டேன்… என்ன தண்ணி சாப்பிடறீங்க… மைலோவா, நெஸ்கபேயா இல்லே பசுப் பாலா..?””

மிகமிகத் தெளிவாக அழகாக அந்தச் சீனப் பையன் மறுபடியும் கேட்டான். துள்ளும் உவகையுடன் அவனைத் தன் வலது கையால் இழுத்து அணைத்துக் கொண்டாள் நீலாம்பரி.

“நீ…நீயா தமிழ்ல பேசினே! நீ சீனப் பிள்ளையாட்டம் இருக்கியே! தமிழ் படிக்கிறியா?”

ஆர்வத்துடன் கேட்கிறாள். அவன் சிரிக்கிறான். “நான் சீனப் பையனும் இல்லே… தமிழ்ப் பையனும் இல்லே… நான் ஒரு மிக்ஸ்…” சம்போர்லா… சிரிக்கிறான். அவனது விளை யாட்டுத்தனமான பேச்சில் மயங்கியவளாய் அவளும் சிரிக்க, அச்சிறுவன் அவள் முகத்தைத் திருப்பி-

“அங்கே பாருங்க… அந்த ஜீன்ஸும் பனியனுமாய் நிக்கறாங்களே அவுங்கதான் எங்க அம்மா. பேரு கங்கா, அதோ அரைக்கால் சிலுவாரும் பனியனுமாய் நிக்கறாரே அவர்தாம் எங்க அப்பா…! அப்பா சீனம், அம்மா தமிழ். இதுதான் என்னோட லைஃப் ஸ்டோரி…

“உங்க சந்தேகம் தீர்ந்து போச்சுன்னு நெனைக்கிறேன். இப்ப சொல்லுங்க… என்ன ட்ரிங்க்ஸ் எடுக்க போறீங்க..'”

பெரிய கிழவனைப் போல் பேசினான். அவனை வளைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு “ரெண்டு மைலோ, உனக்கொண்ணு எனக்கொண்ணு – கொண்டு வா சீக்கிரம்” அவனுக்குக் கட்டளையிடுகிறாள்.

சிறுவன் சுறுசுறுப்பாய் ஓடிப்போய் அவள் முன் மைலோவைக் கொண்டு வந்து வைக்கிறான்.

“இது பிஸினஸ் டைம், இப்ப நான் உங்களோட உட்கார்ந்து சாப்பிட முடியாது. உங்களுக்கு ஓய்வு கெடைச்சா இன்னொரு நாளைக்கு வாங்க, அப்ப நான் உங்களுக்குக் கம்பெனி கொடுக்கறேன்..!”

அவள் அசந்து போகிறாள். அவன் கடமையில் கண் ணானான். பணத்தைக் கொடுத்து விட்டு மறுபடியும் அந்தக் கைவினைப் பொருள்கள் விற்கும் கடைக்குப் போய் அழகிய தொப்பியும் ஒரு மேற்சட்டையும் வாங்கிக் கொண்டு திரும்பி வந்து அவன் பெற்றோர்களிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.

“நீங்க ரெண்டு பேரும் ரொம்பவும் கொடுத்து வெச்சவுங்க..உங்க பையன் ரொம்ப சமர்த்தா இருக்கான். இவனை என்னால மறக்க முடியாது. இது என்னோட அன்பளிப்பு.”

அவர்களுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. “நெஜமாவே நாங்க அதிர்ஷ்டம் பண்ணினவுங்கதான். கடவுள் எங்க காதலுக்குக் கொடுத்த சன்மானம் இவன்.’

இருவரும் ஒருகுரலாய்ச் சொன்ன அந்த வார்த்தை எவ்வளவு உயர்வான வார்த்தை. ஒரு கணம் சிலிர்த்துப் போகிறாள். மெல்ல புன்னகை இதழ்களில் தவழ்ந்தோட

“ஒட்டுமாங்கனி இல்லையா… அதுதான் தரமும் சிறப்பாகவே இருக்கு…! மறுபடியும் வந்தா நிச்சயம் இங்கே வருவேன்…உங்க பையனுக்காகவே வருவேன்”

விடைபெற்றுக் கொண்டு காருக்கு வருகிறாள். காலை வெயில் முகத்தைக் கிள்ளியது. வானம் தெளிவாகிச் சூரியன் மலை உச்சியைத் தாண்டி வந்து கொண்டிருந்தான்.

மறுபடியும் பயணம் தொடங்குகின்றது. வயிறு நிரம்பிப் போனதும், புதுப்பையன் அறிமுகமும் உற்சாகமாய் வண்டியை ஓட்ட வைத்தது. கடந்த சில சிந்தனைக்குச் சென்ற மனத்தை அந்தச் சிறுவன் முழுதுமாய் வியாபித்துக் கொண்டிருந்தான்.

“எங்க காதலுக்குக் கிடைச்ச சன்மானம்”. மனம் ஒத்த தம்பதிகளின் வாக்குமூலம் அது! அந்தப் பிள்ளையின் மீதுதான் அவர்களுக்கு எவ்வளவு பெரிய மரியாதை! எவ்வளவு பெரிய நம்பிக்கை! மரியாதையும், நம்பிக்கையும் பெருகும் போதுதானே மனம் அங்கே கோட்டை கட்ட ஆரம்பிக்கின்றது.

பிள்ளையின் மீது பெற்றோர்கள் வைக்கின்ற நம்பிக்கைதானே அவர்களுக்காக அவர்களை உழைக்க வைக்கின்றது. உயிரையே பணயம் வைக்கச் சொல்கின்றது. நீலாம்பரியின் நினைவில் அவளது அப்பா வந்தார்.

இந்திய நாட்டின் ஈடு ஈடு இணையற்ற கலாச்சார பாரம்பரியக் கலைகளை அந்த நாட்டுக் கலைஞர்களுக்கு ஈடாகத் தங்களாலும் படைக்க முடியும் என்பதைத் தங்களின் அளப்பரிய திறமை மூலம் நிரூபித்துக் காட்டி வரும் சிங்கப்பூர் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து படைக்கும் மாபெரும் கலைவிழாவில் மலேசிய நாட்டிலிருந்து சிறப்புக் கலைஞராக நீலாம்பரி அழைக்கப்பட்டிருந்தாள். சித்தார்த் தனின் நீண்ட நாளைய கனவு அது!

சிங்கையில் நடைபெற்ற அனைத்துலகப் புகைப்படக் கண்காட்சியில் அவன் கலந்துகொள்ளச் சென்றிருந்த போது அங்கே சந்தித்த முக்கிய பிரமுகர்களின் வேண்டுகோளுக் கிணங்க நீலாம்பரியிடம் கேட்காமலேயே அந்த நிகழ்ச்சிக்கு அவன் ஏற்பாடு செய்திருந்தான். நீலாம்பரியிடம் கேட்டு அவள் மறுத்துவிட்டால் மனக் கஷ்டம் வருமே என்று தனக்குத் தானே முடிவு செய்துவிட்டு அவளிடம் வந்து விஷயத்தைச் சொன்னபோது அவள் பூவாய்ச் சிரித்தாள்.

“என்னால் முடியும்னு நினைக்கிறீங்களா! இனிமேலும் நான் இதெல்லாம் செய்யணுமா…? என் மாணவிகள் இருக்கிறப்போ அவங்களை வெச்சு இதைச் செய்யக் கூடாதா…?”

மறுத்துவிட்டான் சித்தார்த்தன். “நீ… நீதான் செய்யணும் நீல….உன்னோட மாணவிகள் செய்யறது வேற விஷயம். நீ செய்யறது மிகப் பெரிய விஷயம். உன்னோட பிரதிபலிப்புகள் உன் மாணவிகளிடத்திலேருந்து வரலாம். ஆனா உண்மை யான விஷயங்களை நீதான் கொடுக்க முடியும்.

“இந்த உலகத்திலே உன்னோட பேர் நிலைக்கணும். உன்னால் பரதக் கலைக்கு இன்னொரு சாதனை கிடைக் கணும். ஒரு சுவர்ண முகியை, ஒரு பத்மா சுப்ரமணியத்தை மறுபடியும் ரசிகர்கள் இங்கே பார்க்கணும். உன்னாலே அது முடியும். தயவு செய்து மறந்திடாதே நீலாம்பரி!”

அவன் தன் மீதும் தன் கலையின் மீதும் வைத்திருக்கும் நம்பிக்கையை நினைக்கும்போது அவள் கண்களில் நீர் பெருகியது. அரங்கம் நிறைந்த ரசிகர்கள் கூட்டம். அறிவிப்பாளரின் மூன்று மொழி அறிவிப்பும். இடை இடையே போகும் உள்ளூர் கலைஞர்களும் அரங்கின் அவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்திற்கு மகிழ்ச்சியைத் தந்து போக, மலேசிய நாட்டியமணியின் நடனம் அரங்கேற இருக்கிறது என்று அறிவிப்பு, மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிறைந்த கைத்தட்டலை வெளிப்படுத்தியது.

வானவில்லின் ஏழு வண்ணங்கள் ஒன்று கலந்த வண்ண விளக்குகள் ஜொலிக்க விலகிய திரையினில் இருந்து அந்தக் கோலமயில் மெல்ல அடி எடுத்து மேடையின் மையத்திற்கு வருகிறாள். அவளது அற்புதமான தோற்றமும் கூப்பிய கரங்களும் ரசிகர்கள் உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்ய மண்டபம் அதிர்வது போன்ற ஒலி.

நீலாம்பரியின் கால்கள் உயிர் பெற்றன. மீண்டும் உணர்வுகள் துடித்தெழுந்தன. மின்னல் கொடி ஒன்று எழுந்து மறைந்தது போல் திரைக்குள் மறைகிறாள். அரங்கில் நிசப்தம்! மெல்லிய இசை முழங்கால் சலங்கை குலுக்குகின்ற ஒலி.

“ஆடற்கலைக்கு அழகு தேடப் பிறந்தவள், ஆடாத பொற்பாவை ஆட வந்தாள்…” சித்தார்த்தன் உணர்வுகள் சிலிர்த்து எழுகின்றன.

அந்த வரிகள், அந்தப் பாடல் வரிகள்.. அவளை முதன் முதலாய் முகம் பார்க்க வைத்த வரிகள்.! இன்று மீண்டும் காதுகளில் புகுந்து எழும்பிவிட, அவன் இப்போதும் சுழன்று ஓடும் ஒரு புகைப்படக் கலைஞனாகிப் போனான். கேமரா அவளின் கால்களில் பதிந்தது. அவளது கை பாவங்களில் படிந்தது. அங்க அசைவுகளில், முகபாவங்களில் ஒவ்வொரு அங்கமாய்ப் புகுந்து வந்த கேமிராவுக்குள் மின்னும் அந்த இரு விழிகள் அவன் கவனம் பட்டென்று விழ, அதிலே கொஞ்சம் லயித்துப் போகிறான்.

சில நிமிடங்கள், அந்தச் சில நிமிடங்களில் தான் எவ்வளவு பெரிய விஷயம் அவனுக்கு உணர்த்தப்பட்டு விட்டது. பேசும் அந்த விழிகளில்தாம் எத்தனை எத்தனை மாற்றம்?

அன்று காணப்பட்ட அந்த இனம் கண்டு கொள்ள முடியாத சோகம், இப்போது இப்போது புதிய ஒளிபடைத்த பார்வையுடன் சுழல்கின்ற அந்த விழிகளில்தாம் எவ்வளவு பெரிய நம்பிக்கையொளி.

எப்படி வந்தது அந்த நம்பிக்கை! எங்கிருந்து வந்தது இந்த இனிய தோற்றமும் எடுப்பான படைப்புகளும்! அவள் ஆடினாள் என்பதை விட அவள் தன் ரசிகர்களை ஆட்டி வைத்தாள் என்பதுதான் பொருத்தமாக இருக்கும். அவள் கால்கள் நின்றபோது அரங்கில் இருந்த ரசிகர்களின் உயிர்மூச்சே நின்றது போன்ற அமைதி!

இரு கரம் கூப்பி அவள் விடைபெற்றுக் கொண்டு உள்ளே போய்விட்டாள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கி அவளுக்குச் சிறப்புச் செய்தார்கள். அவள் மேடையில் பாராட்டப் படுவதையும், ரசிகர்கள் மத்தியில் அவளுக்குக் கிடைத்த பாராட்டுதல்களையும் முன் வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த டேவிட் தன் மனத்துக்குள் வருந்தத் தொடங்கினான்.

இவ்வளவு பெருமைக்குரிய கலையரசியைத் தன் பணியை முழுமையாகச் செய்ய விடாமல் காலத்தைக் கழித்து விட்டோமே என்ற கவலை மிகுந்தது. “என்னுடைய வேண்டுகோளை ஏற்று என் விழிகளை நீங்கள் பெற்று ஒரு முறை நீலாம்பரியைப் பார்த்துவிட்டால் ஏழேழு பிறவிக்கும் அவளே வேண்டும் என்று பிரார்த்தனை செய்வீர்கள்” என்று எழுதி வைத்துவிட்டு தன் கண்களைத் தனக்கு தானமாகக் கொடுத்துச் சென்றுவிட்ட நாகராஜனை நினைக்கிறான்.

அவனது ஆரம்ப கால நடவடிக்கைகள் முறை யில்லாமல் போனாலும், கடைசிக் காலத்தில் அவன் நல்லதைத்தான் சிந்தனை செய்திருக்கிறான் என்பதை அவன் முடிவே உறுதிப்படுத்தியது. நீலாவைக் கொண்டு தனது சம்பாத்தியத்தைப் பெருக்கவும் வாழ்க்கை வசதிகளை அதிகமாக்கிக் கொள்ளவும் ஒரு காலத்தில் நினைத்தவன் இப்போது அவளை, மனத்தில் வைத்தே தனது குற்றங்களுக்கெல்லாம் பரிகாரம் தேடிக்கொண்டு விட்டான் என்பதை நினைக்கும்போது அவனுக்காக மனம் வருந்தியது.

நிகழ்ச்சி முடிந்து நீலாம்பரி கீழே வந்தாள். உள்ளம் நிறைந்த பூரிப்புடன் டேவிட் அவளை வாழ்த்துகிறான். ஸ்ரீதர் கூடவே நின்று “இனிமேலும் நீ ஆடிக்கிட்டிருந்தா அப்புறம் என் கதி என்னாகுமோ நீலா..” என்று கிண்டலாய்ச் சொல்லி அவளது அற்புதத் திறமையைப் பாராட்டுகிறான். அனைவரும் அவர்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வரு கின்றனர். அங்கே சித்தார்த்தனின் சிங்கை நண்பர்கள் அவர்களுக்குச் சிறப்பான விருந்துபசரிப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அந்த விருந்தின் முடிவில் நீலாம்பரியும் சித்தார்த்தனும் எதிர்பார்க்காத வேண்டுகோள் ஒன்று அங்கே விடுக்கப் பட்டது.

சிங்கையில் உள்ள கலைஞர்களின் கலை ஆர்வம் நல்ல திசையில் போய்ப் பயன் மிக்க வகையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதால் அங்குள்ள இளையர்களுக்கு நடனப் பயிற்சியை நடத்தவிருப்பதாகவும், அதை முறையாகக் கற்றுக் கொடுக்கத் தமிழ்நாட்டிலிருந்து தாங்கள் ஓர் ஆசிரியரை ஏற்பாடு செய்யவிருந்ததாகவும், இப்போது அந்த முடிவை மாற்றிக் கொண்டு நீலாம்பரியை அதற்குத் தேர்வு செய்துள்ள தாகவும், அதை மறுக்காமல் ஏற்று நடத்தித் தரவேண்டும் என்பதே அவர்களின் அந்த வேண்டுகோள்.

சித்தார்த்தன் வெகுவாக மகிழ்ந்து போனான். தான் போட்ட விதை ஒன்று முளைத்து அன்றே வளர்ந்து கனி தந்த மகிழ்ச்சி அது. அந்த நண்பருக்கு மனமார்ந்த நன்றியைக் கூறி கை குலுக்கினான். நீலாம்பரி அதிர்ச்சியில் தடுமாறிப் போயிருந்தாள். அவளுக்கு மனத்துக்குள் விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனாலும் சித்தார்த்தன் தவறாக நினைத்துவிடுவான் என்று தன் வாயை மூடிக் கிடந்தாள். கண்கள் மட்டும் டேவிட்டைப் பார்த்தன.. அவள் பார்வையில் அவள் தவிப்பை உணர்ந்து கொண்டவனாய்…

“நீ சங்கடப்பட இதுல எதுவுமே இல்லே நீலா… உன்னால் முடியும்மா… ஓகே சொல்லு…” என்று உற்சாகப் படுத்தினான்.

வாரத்திற்கு ஒரு நாள் வகுப்பு என்ற அடிப்படையில் அவர்கள் ஒப்பந்தம் செய்து கொண்டபின் அழகிய சிங்கை நகரின் எழிலில் மனம் பறிகொடுத்து இரண்டு தினங்கள் அங்கே சுற்றிப் பார்ப்பதில் கழித்தார்கள்.

தன்னுடைய பட்டப் படிப்புச் சமயத்தில் இருமுறை சிங்கப்பூர் வந்ததை டேவிட் நினைவு கூர்ந்தான். சுதந்திரத் திற்குப் பின் நாடு மிக வேகமாக முன்னேறியுள்ளதைப் பார்க்கும் போது வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிற தென்றான்.

அவன் சொன்னதை நேரில் காணும்போது ஸ்ரீதர் அதை மனதார ஒப்புக் கொண்டான். ஒரு நாடு எல்லா வழிகளிலும் முன்னேற வேண்டுமானால் அது அந்த நாட்டுக் குடி மக்களின் கையில்தான் இருக்கிறது என்றான். தனிப்பட்ட ஒரு மனிதனின் சிந்தனை வளர்ச்சியும் அறிவு மேம் பாடும்தான் அவன் சார்ந்துள்ள சமுதாயத்தை வலுப்படுத்த முடியும்.

சமுதாயம் முன்னேறினால் நாடு முன்னேறுவதில் எவ்விதத் தடையும் இல்லை. எங்கெல்லாம் தனி மனிதனின் அறிவு மழுங்கிப் போயிருக்கின்றதோ அங்கெல்லாம் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியாது என்று கவலையுடன் சொன்னான். அப்போது அவன் மனம் அன்னை பூமியை எண்ணி வாடியது. எத்தனை எத்தனை மகான்கள் என் தாய் மண்ணில் தோன்றியும் இன்னும் அங்கே ஒரு தாய்ப் பிள்ளை என்ற உணர்வே வரவில்லையே என்ற ஏக்கம் மனத்தில் எழுந்தது.

அவர்கள் குட்டி இந்தியா என்று அழைக்கப்படும் சிராங்கூன்…..சாலைக்கு வந்தார்கள். சித்தார்த்தனுக்கு அந்த மாலை நேரத்தில் அங்கே கூடியிருக்கும் கூட்டத்தைப் பார்த்தபோது தப்பித் தவறி சென்னையில் நிற்கிறோமோ என்ற அச்சம் வந்துவிட்டது. அந்தக் கூட்டத்தைப் பற்றிய விளக்கத்தைச் சித்தார்த்தன் சொன்னதும் அவனுக்கு உடனே ஊருக்குக் கிளம்ப வேண்டும் என்று அவா பிறக்கிறது. நீலாம்பரியிடம் சொல்கிறான். மலேசியாவுக்குப் போனதும் கிளம்பலாம் என்கிறாள். மறுநாள் அவர்கள் கேலாலம்பூர் வருகிறார்கள்.

சித்தார்த்தன் ஸ்ரீதரின் டிக்கெட்டை உறுதிப்படுத்திக் கொண்டு வந்துவிட்டான். அவனும் பயணத்திற்குத் தயாராகிவிட்டான்.

“நீலாம்பரி உன்னை நினைத்து நான் மட்டுமல்ல நம்ம குடும்பம் பெருமைப்படுது. இந்த மண்ணுல வாழ வந்து இங்கேயே ஒரு வரலாறு படைச்சிருக்கே நீ… ஒவ்வொரு உடம்பிலேயும் ஒரு சக்தியை ஆண்டவன் வெச்சுதான் இந்த மண்ணுக்கு அனுப்பி வைக்கிறான். அந்தச் சக்தி என்னன்னு புரிஞ்சுக்கிட்டு நீ அதை நிரூபிச்சக் காட்டீட்டே.

“ஒருத்தனுக்கு மனைவியா இருந்து அவனோட வாழ்ந்து குழந்தைகளைப் பெற்று வளர்க்கிறதுதான் வாழ்க்கை என்கிற கதையை மாற்றி, நெஞ்சில் துணிவும் நேர்மைத் திறனும் இருந்தா ஒரு பெண்ணால சாகாத சரித்திரம் படைக்க முடியும்னு நீ சாதிச்சுக் காட்டிட்டே.. உன்னோட தூய்மையான கலைப் பயணம் தொடரணும்… அதுக்கான இரண்டு கண்களாக டேவிட்டையும், சித்தார்த்தனையும் உனக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். நான் புறப்படு கிறேன்…மீண்டும் வருவேன்…”

அலைகடல் தாண்டி நான் போனாலும் உன் முகம் என் கண்களை விட்டுப் போகாது. நீலக்கடல் அலைகள் பாடும் நீலாம்பரியில் நான் உன்னைப் பார்த்த உள்ளம் நிறைஞ்சு வாழ்த்திகிட்டிருப்பேன்.

இந்த வானத்து நிலவும் தென்றலும் எப்பவும் நம்ம உறவுக்குத் தூது சொல்லி வந்து போகும்.

அவள் பட்டுக்கரங்களிலே முத்தம் ஒன்று தந்துவிட்டுப் பயணப்பட்டான் ஸ்ரீதரன். தன் பொன்வண்ணச் சிறகு விரிந்து பறந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் அவனை அன்போடு சுமந்து சென்றது.

வாழ்த்துங்கள்…! வாழப்பிறந்தவளை! உங்கள் வாழ்த்துகள் அவள் வாழ்க்கையை வளமாக்கும்.

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *