கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: April 20, 2025
பார்வையிட்டோர்: 18,361 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-29

அத்தியாயம்-25

குழந்தைசாமியும் ராஜுவும் ஒருவரையொருவர் பார்த்தபடி நின்றனர். சித்தப்பாவை அவன் சிறிதும் எதிர் பார்க்கவில்லை. அதுவும் கோவை ஆஸ்பத்திரியில் அவன் எதிர்பார்க்க வில்லை. புரியாத ஒரு நிம்மதி சித்தப்பாவைப் பார்த்தவுடன் அவனுக்கு ஏற்பட்டது. ஜுரத்தால் பீடிக்கப் பட்டவனுக்கு ஜுரம் தணிந்தது போல் இருந்தது.

எதுவும் விளங்காமல் திருதிரு வென்று விழித்துக் கொண்டிருந்த கௌரியைக் குழந்தைச்சாமி ராஜுவிடம் கொடுத்தார். “குழந்தையைக் காணாமல் தவியாத் தவிச்சிட்டேன், சித்தப்பா” என்று சொல்லி, கௌரியை வாங்கி முத்தமிட்டான் ராஜு.

கௌரிக்கு முன்பு தந்தை கடிந்து கொண்டது தான் நினைவில் இருந்தது. திடீரென்று ஏற்பட்ட தந்தையின் அன்பு அவளை குழப்பியது. யாரோ ஒரு காவி அணிந்த சாமியார் தன்னைத் தூக்கத்தில் தாக்கியதும், அவரைத் தன் தந்தை சித்தப்பா என்று அழைப்பதும் இணைக்க முடியாத சம்பவங்களாகத் தோன்றின.

சாமியாரையே விழித்து நோக்கும் கௌரியிடம், ராஜு, “கௌரி! இதுதான் என் சித்தப்பா. உன் சின்னத் தாத்தா. இவர் ஒரு பெரிய சாமியார்” என்று அறிமுகம் செய்வித்தான்.

குழந்தைச்சாமி தந்தையின் தோளில் நின்றபடி தன்னை மருட்சியோடு பார்க்கும் குழந்தையை நோக்கிப் புன்னகை செய்து, “உங்கப்பா சொல்றது சரியில்லை, குழந்தை. நான் பெரிய சாமியார் இல்லை. சின்னச் சாமியார் கூட இல்லை, சின்னச் சின்னச் சாமியார். என் பேரு என்ன தெரியுமா? குழந்தைசாமி,” என்று சொல்லி விட்டுச் சிரித்தார். கௌரியும். சிரித்தாள். குழந்தைச்சாமி ராஜுவிடம் திரும்பி “கோகிலா மில் வீவிங் மாஸ்டர் ஒண்டிப் புதூர் நாராயணசாமி வீட்டுக்குப் போயிருந்தேன். அவன் தான் விஜயாவின் உடல்நிலை பற்றிச் சொன்னான். ஆஸ்பத்திரியிலே இருக்கிறதையும் சொன்னான். உடனே வந்தேன், ராஜு, விஜயாவுக்கு இப்போ எப்படி இருக்கு?” என்று கவலையோடு கேட்டார்.

“அவள் நிலை கவலைக்கிடமாய்த் தான் இருந்தது, சித்தப்பர். கொஞ்சம் முன்னாடி தான் கண் திறந்து பார்த்தாள். இப்ப பயமில்லை என்று டாக்டர் சொல்கிறார். உங்களைப் பார்த்த பிறகு, டாக்டர் சொல்றது பொய்க்காது என்று ஊர்ஜிதம் ஆயிட்டுது, சித்தப்பா. நீங்க ஆஸ்பத்திரி எல்லைக்குள்ளே நுழைந்தப்புறம் விஜயாவுக்குத் தீங்கு வரமுடியுமா? நீங்களே சொல்லுங்க, சித்தப்பா.”

ராஜுவும் குழந்தைச்சாமியும் விஜயா படுத்திருக்கும் அறைக்கு சென்றனர். விஜயா படுக்கையில் அமைதியாகப் படுத்திருந்தாள். அவள் கண்கள், மூடியிருந்தன. ராஜு அறையினுள் நுழைந்ததும் உற்சாகத்துடன் “விஜயா! கெளரி வந்திருக்கிறாள், பாரு,” என்று பலமான குரலில் ஆவலோடு கூறினான். அருகிலிருந்த நர்ஸ், “உஸ்.. சத்தம் போடாதீங்க!” என்று ஆள் காட்டி விரலை உதடுகள் மீது வைத்து ராஜுவுக்குச் சைகை செய்தாள்.

ராஜுவின் குரல் கேட்ட விஜயா கண் விழித்து ஆவலோடு கௌரியைப் பார்த்துப் புன்னகை செய்தாள். ராஜு குழந்தையைப் படுக்கையில் உட்கார வைத்தான். விஜயாவின் கண்களில் அவள் உள்ளத்திலுள்ள தாய்மை உணர்ச்சியெல்லாம் கண்ணீராய் வெளிப்பட்டது. “என் செல்வமே, கௌரி.” என்று சொல்லிக் குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டாள்.

கௌரியின் உள்ளமும் நெகிழ்ந்தது. வெகு நாட்களாகத் தாயின் கோபத்தைத்தான் உணர்ந்திருந்தாள். இன்று தான் தாயின் பரிவையும் அன்பையும் உணர்ந்தாள். “சாப்பிட்டியா கௌரி?” என்று விஜயா கேட்டாள் “நான் சாப்பிட்டுவிட்டேன், அப்பா தாம்மா இரண்டு நாளாச் சாப்பிடலே,” என்று கௌரி செல்லமாக முறையிட்டாள். தன் விழிகளின் ஓரத்தால் ராஜுவை ஒரு முறை காதலோடு பார்த்தபடி. “நீங்க இரண்டு நாளாச் சாப்பிடாதது டாக்டருக்குத் தெரிஞ்சிருக்கு… குழந்தைக்குக் கூடத் தெரிஞ்சிருக்கு. என் மேலே உங்களுக்கு அன்பு இருக்கிறதை இப்படியா பட்டினி இருந்து விளம்பரப்படுத்தணும்? போய் ஏதாவது பழம் பாலாவது வாங்கிச் சாப்பிடுங்க,” என்று கண்டிப்பது போல் செல்லமாகச் சொன்னாள். ராஜு தலை குனிந்தான். அந்தச் சிறு குடும்பத்தில் உலவிய நட்பைக் கவனித்து மகிழ்ந்து நின்றார் குழந்தைச்சாமி.

விஜயாவின் விழிகள், அறையின் ஜன்னலோரத்தில் ஒன்றும் பேசாமல் நின்று கொண்டிருந்த சாமியாரைச் கவனித்தன. அதைப் பார்த்த கௌரி, “சின்ளத் தாத்தா வந்திருக்காங்கம்மா” என்றதும், ராஜுவும், “ஆமாம், விஜயா, சித்தப்பாதான் வந்திருக்கிறார். அவர் போன தரம் இதே ஊரிலே நம்ம பங்களாவுக்கு வந்தப்போ கௌரி பிறந்திருந்தாள். இதைவிட ஆபத்தான நிலையிலே நீ இருந்தாய். டாக்டரிகள் கூடக் கை விட்டுட்டாங்க. சித்தப்பாதான் உனக்கு ஒன்றும் வராதுன்னு உறுதி கொடுத்தார். அவர் சொன்னபடி நீ பிழைத்தாய், விஜயா. இப்பவும் நீ கண் திறந்து பத்து நிமிஷம் ஆகல்லே, சித்தப்பா வந்துட்டார்.” என்று பல வருஷங்கள் இடைவெளியிலே நடந்த இரு நிகழ்ச்சிகளையும் இணைத்துச் சொன்னான். விஜயா ஒன்றும் பேசாமல் தன் கண்களைத் தாழ்த்தினாள்.

குழந்தைச்சாமி அவள் படுக்கையை நெருங்கினார். அவர் இடுப்பில் எங்கோ மறைத்திருந்த சிறு துணிப்பையை எடுத்து. அதிலிருந்து விபூதியை எடுத்து விஜயாவின் நெற்றியில் அணிவித்தார். “விபூதி எனக்குத் தாங்க, தாத்தா,” என்று கௌரி கேட்டாள்.

“விபூதியா? உனக்கா விபூதி வேண்டும்? பாளையன் விபூதியே தானே கௌரி?” என்று விபூதி என்ற பதத்தை இரட்டை அர்த்தத்தில் பிரயோகித்துவிட்டுச் சிரித்தபடி குழந்தைக்கும் ராஜுவுக்கும் விபூதி கொடுத்தார் குழந்தைச்சாமி. சிறிய மாமனாரிடம் எந்தவித மரியாதை உணர்ச்சியும் இல்லாதவள் தான் விஜயா. இருந்த போதிலும், அவர் அறையில் நின்று கொண்டிருக்கும் போது நாம் கால் நீட்டிப் படுத்துக்கொண்டு இருக்கிறோமே என்று அவளுக்கு வஞ்ஜையாக இருந்தது. மற்றப் பத்துக்கள் – பணக்காரப் பத்துக்கள் – வந்த போது கூட அவளுக்கு அந்தக் கூச்சம் ஏற்படவில்லை. அரை மணிக்கு முன்புதான் அவள் மரண வாசலிலிருந்து திரும்பியிருக்கிறாள். மற்றவர்களைப் பற்றியும், அவர்களின் உபசரணை பற்றியும், அவள் கவலைப்படத் தேவையில்லை. விஜயாவின் வழக்கமான பண்புக்கு மாறாக அவள் உதடுகளிலிருந்து வார்த்தைகள் வெளிவந்தன. கணவனைப் பார்த்து, “பெரியவர் நின்னுகிட்டிருக்காரே. நாற்காலியை இழுத்துப் போட்டு அவரை உட்காரச் சொல்லுங்க,” என்று சொன்னாள். சித்தப்பாவை ஒரு மன்னிக்க முடியாத குற்றவாளி என்று சந்தேகமற்ற, தீர்மானமான அபிப்பிராயம் கொண்ட விஜயா இவ்வாறு சொல்வது, ராஜுவுக்கே ஆச்சரியமாயிருந்தது. நாற்காலியை இழுத்துப் போட்டு, “உட்காருங்க சித்தப்பா,” என்றான்.

“இல்லை ராஜு, விஜயா ரெஸ்ட் எடுத்துக் கொள்ளட்டும். நாம் வராந்தாவுக்குப் போவோம்,” என்று சொல்லிவிட்டு வராந்தாவை நோக்கி நடந்தார் குழந்தைச்சாமி. அவரும் ராஜுவும் வெளியே போனதும் விஜயா கௌரியை அந்த அறையில் மறு கோடியில் உள்ள ஒரு பெஞ்சில் படுக்கச் சொன்னாள். பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்ட கௌரியும் உடனே போய்ப் பெஞ்சியில் படுத்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். விஜயா நர்ஸை அழைத்து ரொட்டியும் பாலும் கொண்டு போய்க் கணவனுக்குக் கொடுக்குமாறு சுட்டளையிட்டாள். “இரண்டு நாட்களாகத் துணி போல் எந்த உணர்வும் இல்லாமல், உயிருக்கு ஊசலாடிக் கொண்டு இருந்தவள், ஞாபகம் வந்ததும் கட்டளையிட ஆரம்பித்து விட்டாள் பார்!” என்று எண்ணிக் கொண்டாள் அந்த நர்ஸ். ‘கண்திறந்த உடனே கணவன் மீது எவ்வளவு அக்கறை இந்த அம்மாளுக்கு!” என்று அவள் திநினைத்தாள். அந்த நர்ஸின் மனக் கண் முன் ஆண்மையின் விளக்கமாக அமைந்த ராஜுவின் உருவம் தோன்றியது. இவ்வளவு அழகான, செல்வந்தனான கணவனைப் பெற்ற மனைவி பின் எவ்வாறு இருப்பாள் என்று தன் மனத்தில் எழுந்த கேள்விக்குத் தானே பதில் கொடுத்துக் கொண்டான் அவள். விஜயா படுத்திருந்த அறையை அடுத்த சிறு அறையில் இருந்த அலமாரியைத் திறந்து தட்டுகளில் ரொட்டித் துண்டுகளை எடுத்து வைத்தான். பிறகு. பிளாஸ்கிலிருந்து பாலை எடுத்து ஒரு கண்ணாடி கிளாஸிக் ஊற்றிக்கொண்டு அறையைவிட்டு நகர்ந்தாள்.

இதைப் பார்த்த விஜயா, நர்ஸ் தன் கட்டளையை நிறைவேற்றிவிட்டாள் என்பதை உணர்ந்து கொண்டு நிம்மதியாகக் கண்ணை மூடித் தூங்க ஆரம்பித்தாள்.


மறுநாள் காலைப் பொழுது சூரியன் உதித்து மணி ஒன்பதாகியும் விஜயா கண் விழிக்கவில்லை. ஒன்பதரை மணிக்கு விஜயா விழித்தெழுந்ததும் அவளுக்கு வயிற்றில் பசி ஏற்பட்டது. பல் விளக்கியதும் ‘ஹார்லிக்ஸு’ம் ‘திரிப்டின்” பிஸ்கட்டும் நர்ஸ் கொண்டு வந்து கொடுத்தாள். டாக்டர் மறுபடியும் வந்து விஜயாவைச் சோதனை செய்து பார்த்தார். விஜயாவுக்கு இனி பயமில்லை என்றும் முற்றிலும் குணமான நிலைதான் என்றும் சொன்னார்.

திடீர் என்று ஏதாவது ஏற்பட்டால் உடனே கவனிக்க, ஆஸ்பத்திரி அருகில் உள்ள ஓர் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று ராஜு தீர்மானித்தான். கோயம்புத்தூரில் திருச்சி ரோடில் உள்ள கோகிலா மில்லைச் சேர்ந்த பங்களாவிலேயே தங்குவதுதான் சரி என்று தோன்றியது. அந்தப் பங்களாவில் இதுவரை உதகையில் அவர்கள் எஸ்டேட்டை நிர்வாகம் செய்து வந்த ‘ஸ்மித்’ என்ற ஒரு ஆங்கிலோ இந்தியச் குடும்பம் வாழ்ந்து வந்தது.

அவர்கள் குடும்பம் தற்காலிகமாக உதகமண்டலத்துக்குச் சென்றிருந்ததால், அந்தப் பங்களா காலியாக இருந்தது. டாக்டர் அனுமதித்தவுடன் விஜயாவை நேராக அந்தப் பங்களாவுக்கு கொண்டு செல்வது என்று தீர்மானித்தான் ராஜு. ஆங்கிலோ இந்தியர் குடும்பம், ரத்தின சபாபதிபுரத்தில் உள்ள ஒரு பங்களாவில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோகிலா மில் மானேஜர் காமத் என்பவர் எல்லா ஏற்பாடுகளையும் தொலைபேசி மூலம் சில மணி நேரங்களில் பேசி முடித்தார்.

குழந்தைச்சாமி ராஜு, கௌரி மூவரும் அன்று மாலை திருச்சி ரோடு பங்களாவுக்குச் சென்றனர். அந்தப் பங்களா பத்து ஏக்கர் நிலப்பரப்பின் நடுவில் வீற்றிருந்தது. சிவப்புச் செங்கல்களால் ஒரு பழங்காலக் கட்டிடம். ஓங்கி வளர்ந்த தென்னை, மாமரங்கள் நடுவே, புகை நடுவே உள்ள ஜுவாலை போல் அமைத்து இருந்தது. ஓர் ஐரோப்பியனால் சுட் டப்பட்டு பிறகு வெங்கடபதியினால் வாங்கப்பட்ட அந்த பங்களாவில் இதுவரை ஆங்கிலேயர் அல்லது ஆங்கிலேய ஆசாரத்தில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியர்கள் தான் வாடகைக்கு வாழ்ந்து வந்தனர். பங்களாவின் இடப் புறத்திலேயே ஒரு சிறு பூப்பந்து ஆடும் கோர்ட், சிறு நீச்சல் குளம் இருந்தன. குழந்தைகள் விளையாடச் சங்கிலி ஊஞ்சல், சீசா, ஸ்லைட் எனப்படும் சிமென்டால் செய்த சறுக்குமரம் வையெல்லாம் அதில் வாழ்ந்த குழந்தைகளின் பொழுது போக்குக்காக ஏற்படுத்தப் பட்டிருந்தன. பங்களாவின் வலது புறத்தில் திறந்த வெளி இருந்தது. அதில் தரையோடு தரையாக அமைந்த ஒரு வட்டமான கிணறு. அந்தக் கிணறு வட்டமான கம்பிகளால் ஆன சட்டம் போன்ற மூடியால் மூடப்பட்டிருந்தது. கிணற்றைச் சுற்றிய கைப்பிடிச் சுவர் ஓர் அடி உயரத்துக்கும் குறைவாக இருந்தது. அந்தக் கிணற்றை மூடிய வட்ட வடிவமான சட்டத்தை விரும்பும் போது இழுத்துக்கொள்ளலாம். வேண்டியபோது நகர்த்தி, பூரா கிணற்றையும் முடலாம். அரைக் கிணற்றை மூடி அரை கிணற்றை சூரிய வெளிச்சத்துக்குத் திறந்து வைக்கலாம்.

குழந்தைச்சாமி அதைக் கவனித்துப் பார்த்துவிட்டு, “இது மிகவும் ஆபத்தான அமைப்பு, இரவு வேளைகளில் வேலைக்காரர்கள் மறந்து கிணற்றைப் பாதி திறந்து வைத்துவிட்டுச் சென்று விட்டால், முன்பின் தெரியாதவர் கிணற்றில் தவறி விழலாம். இந்தக் கிணற்றின் கைப்பிடிச் சுவரை உயர்த்த வேண்டும்” என்று சொன்னார்.

வீட்டின் பின்புறத்தில் காம்பவுண்டு சுவர் உயரமாக கட்டப்பட் டிருந்தது. அந்தச் சுவருக்கு ஆறுகஜ தூரத்துக்கு முன் நீண்ட சதுரமான மண் திட்டுகளும் அவற்றின் மீது தகர”டார்கெட்’டு ள் வைக்கப்பட்டிருந்தன. அது துப்பாக்கிப் பயிற்சிக்காகச் செய்துள்ள ஏற்பாடு என்பது தெரிந்தது. பின் சுவரில் புள்ளி புள்ளியாகப் பள்ளங்கள், சுவருக்கு வைசூரிநோய் வந்த உடல் போன்ற ஒரு தோற்றத்தைக் கொடுத்திருந்தது.

வீட்டின் மாடியில் திரு சதுரமான ஹால், அந்த ஹாலைச் சுற்றி ஒரு பால்கனி. அந்த பால்கனியிலிருந்து வீட்டின் நான்கு புறங்களையும் பார்க்கலாம். விஜயா சக்கர நாற்காலியோடு நான்கு புறமும் நகர்ந்து செல்லட்டும், ஓர் அறையிலேயே அடைபட்டுக் கிடக்கவேண்டாம் என்ற எண்ணம் ராஜுவுக்கு வந்தது. விஜயா போன்ற நோயாளிகளுக்கு மலையாளத்தை விடக் கோயம்புத்தூர் சீதோஷ்ணதி எவ்வளவோ மேல் என்று குழந்தைச்சாமியும் சொன்னார். மறுநாட் காலையிலேயே திருச்சிரோட் பங்களாவின் மாடி ஹாலுக்கு விஜயா மாற்றப்பட்டாள். பங்களாவில் கோயம்புத்தூர் வேலையாட்களையே வைத்துக்கொள்வது என்று தீர்மானித்தான் ராஜு. விஜயாவுக்கு மட்டும் கோயம்புத்தூரிலேயே நோயாளியாகி தங்குவதில் அவ்வளவு விருப்பம் இல்லை. தினமும் உறவினர்கள், தெரிந்தவர்கள், பால்ய சிநேகிதிகள் என்று பலபேர் வருவார்கள். அவர்கள் பார்வையில் காலிழந்த முடமாக, படுக்கையோடு படுக்கையாகக் கிடக்க வேண்டியிருக்குமே என்று நினைத்து வருந்தினாள்.

குழந்தை கௌரிக்கு, குழந்தைச்சாமியிடம் சில மணி நேரங்களில் மாறுதல் ஏற்பட்டது. அன்று பிற்பகல் உணவருந்திய பின் குழந்தைச்சாமி பங்களா வெளி வராந்தாலில் ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி சிந்தித்துக் கொண்டிருந்தார். அவரிடம் மெல்லப் பேச்சுக் கொடுத்தபடி கௌரி நெருங்கினாள். மலையாளத்தில் அவள் பள்ளியில் படித்தது. அவளுக்குப் பயத்தைப் போக்கி எல்லாக் குழந்தைகளையும் போல் ஓடியாடச் செய்த மோகினி டீச்சரைப் பற்றி எல்லாம் குழந்தைச்சாமியிடம் சொன்னாள் கௌரி.

குழந்தைச்சாமிக்கு, கௌரி மோகினியைப் பற்றிப் புகழ்ந்து சொன்னதும் சந்தோஷம் தாங்கவில்லை. “கிட்டத்தட்ட உன் வயசு இருக்கும்போது நான்தான் உன் மோகினி டீச்சரை முதல்லே பார்த்தேன். நான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கேன். உன் டீச்சருக்கே நான் டீச்சர்! தெரியுமா?” என்று பெருமையோடு சொன்னார்.

“தாத்தா, மோகினி டீச்சரை நீங்க அப்போ பார்த்திருக்கீங்க. இப்போ பார்த்தால் உங்களுக்கு அடையாளமே தெரியாது. அவ்வளவு அழகா இருப்பாங்க, டீச்சர்” என்று சொல்லிவிட்டு கௌரி கண் கலங்கி நின்றாள்.

“ஏன் கௌரி அழறே? மோகினி டீச்சர் சுகமாகத்தானே இருக்காங்க?” என்று கேட்டார் குழந்தைச்சாமி.

கௌரியின் முகத்தில் ஒரு விதக் குழப்பம் நிறைந்தது. “தாத்தா, மோகினி டீச்சரைப்பத்தி இங்கே பேசாதீங்க. அம்மா அப்பாவுக்கு டீச்சரைக் கண்டாலே பிடிக்காது”.

“ஏன், உங்க டீச்சரை உங்க அம்மா அப்பாவுக்கு பிடிக்காமல் போச்சு? டீச்சர் ஏதேனும் தவறு செய்தாளா?”

“மோகினி டீச்சர் ரொம்ப நல்லவங்க, ஒரு நாளும் தவறு செய்ய மாட்டாங்க. அம்மாவும் அப்பாவும் என் டீச்சரை ஒரு தரம் கூடப் பார்த்ததே கிடையாது. பாத்திருந்தாங்கன்ன இப்படி வெறுத்திருக்க மாட்டாங்களே. டீச்சர் எனக்கு ஒரு கவுன் கொடுத்தாங்க, தாத்தா, அது அம்மாவுக்குப் பிடிக்கல்லே. டீச்சரை வேலையை விட்டுத் தள்ளிட்டாங்க.”

கௌரியின் விளக்கம் சாமியாரின் குழப்பத்தை அதிகப்படுத்தியது. மோகினி, அவர் ஆரம்பித்த பள்ளியில் இப்போது இல்லை என்பது மட்டும் அவருக்குத் தெரிந்தது.

“இதெல்லாம் எங்கிட்டே ஏன் கௌரி சொல்றே?” என்று சாமியார் கேட்டார்.

கௌரி, சாமியாரை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு, “தாத்தா! மோகினி டீச்சர் உங்ககிட்டே ரொம்ப மதிப்பு வச்சிருக்காங்க. கடவுளே மனித உருவத்தில் வந்தா உங்க மாதிரிதான் இருப்பார்னு டீச்சர் என்கிட்டே சொன்னாங்க. அதனாலேதான் உங்ககிட்டே விஷயத்தைச் சொல்றேன். அம்மா கிட்டே சொல்லிடாதீங்க,” என்று சொன்னாள்.

இதைக் கேட்டதும் சாமியார் நெஞ்சில் ஒருவித வேதனையும், அந்த வேதனையோடு புரியாத ஒரு இன்பமும் ஏற்பட்டது. மோகினியைப் பார்க்க வேண்டும். என்ற ஆசையும் எழுந்தது. தரையைப் பார்த்தபடி சாமியார் உட்கார்ந்திருந்தார். கௌரி, “தாத்தா, நான் இனிமே மோகினி டீச்சரைப் பார்க்கவே முடியாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

சாமியார் சிரித்தார். குழந்தையை அன்போடு முத்தமிட்டார்.

அன்று மாலை ராஜுவிடம் விடைபெற்றுக்கொள்ள மாடி ஹாலுக்குச் சென்றார் குழந்தைச்சாமி, ராஜு அவரைத் தன்னோடு தங்கும்படி வேண்டிக் கொண் டான். “காற்றும், நீரும் காவி அணிந்தவனும் ஓரிடத் திலே தங்க முடியுமா ராஜு?” என்று கூறிவிட்டு, கட்டிலில் படுத்திருக்கும் விஜயாவைக் கவனித்தார். படுத்திருக்கும் விஜயாவின் உருவம், அவர் பார்வையில் பழனியில் கண்ட அஞ்சலை என்ற பிச்சைக்காரியின் உருவமாக மாறியது. அந்தப் பிச்சைக்காரி ஒரு மனிதனின் கொடுமையால் கால் இழந்தவள். அண்ணன் வெங்கடபதியின் காரின் சக்கரங்கள், அந்த அஞ்சலையை முடமாக்கின. ஆனால் விதி விஜயாவின் கால்களைப் போக்கியது.

நினைக்கும்போதே செவந்திலிங்கத்தின் மனைவி அஞ்சலை கூறிய வார்த்தைகள் குழந்தைச்சாமியின் ஞாபகத்துக்கு வந்தன. “சாமி, அந்தப் பணக்காரன் ஊரையும் கோர்ட்டையும் ஏமாத்தி இருக்கலாம். ஆனால் கடவுளை ஏமாத்த முடியாதுங்க. என் காலை மொண்டியாக்கின பாவியோட காலை மொண்டியாக்காம ஆண்டவன் விடமாட்டான்.”

‘அண்ணன் வெங்கடபதி செய்த தவறுக்கு மருமகள் விஜயா வருந்த வேண்டுமா? கடவுளின் கர்மா என்ற கணக்குப் புரியவில்லையே! அந்தக் கணக்கு ஒழுங்காக இல்லையே!’ என்று குழந்தைச்சாமி கடவுளையே நொந்து கொண்டார். அஞ்சலையின் சகோதரனிடம் பண உதவி செய்வதாகக் கூறிவிட்டு வந்ததும் அவர் ஞாபகத்துக்கு வந்தது. ராஜுவைத் தனியே அழைத்து, “ராஜு, நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்,” என்றார். “என்ன சித்தப்பா? என்ன செய்ய வேண்டும்?” என்று அவன் கேட்டான்.

“பழனியில் அஞ்சலை என்ற பிச்சைக்காரியைப் பார்த்தேன். பாவம், அவள் காலிழந்தவள். அவளுக்கு மாதா மாதம் பணம் அனுப்புவதாகச் சொல்லி விட்டேன். பழனியிலுள்ள டாக்டர் சுப்பையாவின் விலாசத்துக்கு மாதம் முதல் தேதி தவறாமல் நூறு ரூபாய் அனுப்பிவிடு. டாக்டர் வீட்டுக்கு வந்து அந்தப் பிச்சைக்காரியின் சகோதரன் பணம் வாங்கிச் செல்வான்,’ என்று கூறி, ஒரு பேப்பரில் டாக்டர் சுப்பையாவின் விலாசத்தைக் குறித்துக் கொடுத்தார். ராஜு தவறாமல் பணம் அனுப்புவதாக ஒப்புக் கொண்டான்.

சாமியாரின் வேண்டுகோளை கேட்டபடி படுத்துக்கொண்டிருந்த விஜயாவுக்கு மனத்தில் வெறுப்புத்தான் ஏற்பட்டது. சாமியார் வெளியே சென்றதும் ராஜுவிடம். “இது என்ன கேவலமாயிருக்கு? ஊரிலே இருக்கிற பிச்சைக்காரிகளுக்கு உங்க சித்தப்பா பணம் அனுப்பச் சொல்றார். பணத்தை சித்தப்பா அனுப்பின மாதிரி அனுப்பி விடுங்க. உங்க பேரிலே அனுப்பாதீங்க. யாராவது பார்த்தால் கேவலமாயிருக்கும்,” என்று கூறினாள்.

அறையைக் கடந்து பால்கனியில் சென்று கொண்டிருந்த சாமியாரின் காதுகளில் விஜயாவின் வார்த்தைகள் விழுந்தன. அப்படியே திடுக்கிட்டு நின்றார். ஒரு நொண்டி பிச்சைக்காரிக்குப் பணம் உதவுவதிலும் இம் மாதிரியான ஒரு தப்பு விளக்கம் ஏற்பட முடியும் என்பதை அவர் அப்போதுதான் உணர்ந்தார். புன்னகை செய்தபடியே மேலே நடந்தார்.

அவர் மனத்தில் சிறிதுகூட விஜயா மீது வருத்தமோ கோபமோ ஏற்படவில்லை. முப்பத்தாறு மணி நேரங்களுக்கு முன் மரணப் படியில் நின்று கொண்டிருந்த அதே விஜயாவுக்கு, பழைய சுபாவம் எவ்வளவு சீக்கிரம் திரும்பிவிட்டது என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டார். முன்பின் பாராத மோகினியை வேலையை விட்டு நீக்கியவள் விஜயா என்று நினைக்கும் போது சாமியாருக்கு ஆச்சரியம் ஏற்பட வில்லை. விஜயாவின் கால்கள் மட்டும் மூடமாக இல்லை, அவள் இதயமே ஊனமாகிவிட்டதே என்று எண்ணும் போது அவருக்கு விஜயாவின் மீது பச்சாதாபமே ஏற்பட்டது. சத்தமில்லாமல் அந்த வீட்டைவிட்டு வெளியேறி இருளில் நடக்க ஆரம்பித்தார்.

அத்தியாயம்-26

ஷோரனூர் பஸ் பாலக்காட்டுக் குறுகிய கடைத்தெருவில் வந்து நின்றது. அதிலிருந்து மோகினி இறங்கினாள்.

தூய வெண்மையான புடவை, கறுப்பு ஜாக்கெட், கறுப்பு ஜாக்கெட்டின் நிழல் வெண்மையான புடவையின் உட்புறம் தெரிய, அந்த ஜாக்கெட்டின் உட்புறமிருந்து அவள் தங்க மேனியின் மஞ்சள் நிறம் ஒரு சிறிது வெளிப்புறம் தெரிய, பஸ் ஸ்டாண்டில் ஒரு வினாடி நின்றாள்.

மோகினி கையிலே தாங்கிய சணல் பையில், அவளுடைய சர்ட்டிபிகேட்டுகள் இருந்தன. சிறு பர்ஸில் கொஞ்சம் பணமும், அதே பையில் நடுப்பகல் உணவுக்கென்று பாக்குப் பட்டை இலையில் கட்டிவந்த தயிர் சோறும் இருந்தன. பாலக்காட்டுப் பள்ளியில் வேயை கிடைக்குமா என்று வேலை தேட வந்தவள், குறுகிய கடைத்தெரு வழியே நடக்க ஆரம்பித்தாள்.

தெருவின் இருபுறமும் குறுகிய கடைகள். கடையில் உட்கார்ந்திருந்தவர்கள் பார்வை, நடந்து செல்லும் மோகினியின் அழகைப் பருகியபடியே இருந்தது.

காற்றின் அசைவால் எப்போதும் தோள்புறம் நழுவிக் கீழே விழ முயற்சிக்கும் சேலையை, உடம்பை ஓட்டினாற் போல் அழுத்தமாக சுற்றிக் கொண்டு நடந்தாள்.

சேலையை அழுத்தமாகச் சுற்றியதும் அவள் பருவத்தின் பூரிப்பு இன்னும் கவர்ச்சியாகத் தோற்றம் கொடுக்கவே, மற்றவர்கள் பார்வை, அவள் உடல் மீது இன்னும் அழுத்தமாகப் பாய்ந்தது.

முன்பின் தெரியாதவர்களின் ஆசைப் பார்வை உடலை ஊடுருவியது. மோகினிக்குப் பரம வேதனையாக இருந்தது. நாம் ஏன் அழகாகப் பிறந்தோம் என்ற வருத்தம்தான் அவள் மனத்தைப் பற்றியது.

வேகமாகக் கடைத்தெருவைக் கடந்து அவன் தேடிவந்த பள்ளியை அடைந்தாள்.

பள்ளியின் வெளிப்புறத்தில் குழந்தைகள் உள்ளே நுழைந்தபடி இருந்தனர். அதைப் பார்க்கவும் மோகினிக்கு ஓரளவு ஆறுதலாக இருந்தது.

பள்ளியினுள் நுழைத்தாள்.

பள்ளியின் வெளிப்புறம் ஒரு மணி தொங்கியது. அதன் அருகில் காக்கி உடை அணிந்த ஒருவன் நின்று கொண்டிருந்தான். அவன் அணிந்திருந்த அரை நிஜார், காக்கிக் கோட்டு – இரண்டையும் பார்த்தவுடன் அவன் பள்ளிப் பியூனாக இருப்பான் என்று புரிந்து கொண்டாள்.

அவனிடம் நெருங்கி, தலைமை ஆசிரியரைப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தாள்.

அவன் மோகினியை ஏற இறங்கப் பார்த்தான், அவனும் அவளது அழகை எடைபோடுவதுபோல் தெரித்தது. “உங்களைப் பார்த்தா தலைமை ஆசிரியரைப் பார்க்க வந்ததாகத் தெரியலியே அம்மா, பள்ளி கரஸ்பாண்டண்டைப் பார்க்க வந்து இருக்கீங்களா அம்மா?” என்று கேட்டான்.

பள்ளி கரஸ்பாண்டண்ட் என்பவர் பொதுவாகத் தலைமை ஆசிரியரைவிடப் புது ஆளை நியமிக்கும் தகுதி உடையவர் என்பதை உணர்த்திருந்தாள் மோகினி.

ஆகையால் ஆவலோடு, “ஆமாம். கரஸ்பாண்டண்டைத்தான் பார்க்கணும்,” என்று சிரித்தபடி சொன்னாள்.

அதற்குப் பதிலாக அந்தப் பியூன் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. ஒரு விதமாகச் சிரித்தான். “கரஸ்பாண்டண்ட் ஐயாவை இங்கேயேயா பார்க்கணும்னு சொல்றீங்க?” என்று சொல்லி, இழுத்தான்.

“ஆமாம்ப்பா. அவரை இங்கேதான் பார்க்கணும்,” என்று ஒன்றுமறியாத மோகினி பதில் கூறினாள்.

பியூன் கொஞ்சம் யோசித்தான். பிறகு மோகினியிடம் நெருங்கி, ”ஐயாவின் சம்சாரம் உள்ளே பேசிக்கிட்டிருக்காங்க. அப்புறம் வாம்மா,” என்று எச்சரிப்பது போல் ரகசியமான குரலில் சொன்னான்.

அதற்கு மோகினி, “அவுங்க போற வரையிலும் காத்துக் கிட்டிருக்கேம்ப்பா,” என்று சொல்லிவிட்டு அங்கு போட்டிருந்த பெஞ்சியில் உட்கார்ந்தாள்.

மோகினி உட்கார்ந்தவுடன் உட்புறமிருந்து நாற்பது வயது மதிக்கத்தக்க ஓர் அம்மாள் முகம் சிவக்க வெளியே வந்தாள்.

அந்த அம்மாளுக்கு அவசர அவசரமாகக் கும்பிடு போட்டான் பியூன்.

அந்த அம்மாள் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, “டேய் நாராயணா, ஏண்டா கூழைக் கும்பிடு போடறே? நீ ஒழிஞ்சாத்தாண்டா ஐயா உருப்படுவாரு. அவரைக் குழியிலே தள்ளாம விடப்போறதில்லேடா நீ,” என்று சொல்லிவிட்டு அருகிலே பெஞ்சியில் உட்கார்ந்திருந்த மோகினியைப் பார்த்தாள். “அந்தம்மா ஐயாவைப் பார்க்கத்தானே வந்திருக்காங்க?” என்று கேட்டாள்.

உடனே நாராயணன் என்ற அந்த பியூன், “இல்லீங்க. அவுங்க ஹெட் மாஸ்டருக்குச் சொந்தம்,” என்று சொல்லிவிட்டுக் கெஞ்சியபடி சிரித்தான்.

அந்த அம்மாள் குழப்பத்தோடு மோகினியைப் பார்த்தாள். பிறகு அந்த இடத்தைவீட்டுச் சென்றாள்.

மோகினிக்கு, தன்னைப் பற்றி அந்த பியூன் அந்தம்மாளிடம் ஏன் இப்படிப் பொய் சொல்கிறான் என்று புரியவில்லை.

பியூன் அந்தம்மானின் பின்னால் ஓடினான். அந்த நடுத்தர வயது மாது ஒற்றை மாட்டு வண்டியில் ஏறிக் கொள்ளும் வரை, தூண் மறைவிலி ருந்தே கவனித்தபடி வண்டி நகர்ந்ததும் பெருமூச்சு விட்ட படி மோகினியிடம் வந்தான். “ஒழிஞ்சாங்க.” என்று சொல்லிவிட்டு, “இனி மேல் நீங்க ஐயாவைப் பார்க்கலாம்மா. நான் போய் ஜாடையா ஐயாகிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு வர்ரேன்,” என்று சொல்லி மோகினியைப் பார்த்து விஷமமாகச் சிரித்துவிட்டுச் சென்றான்.

அவன் சற்றுத் தொலைவில் உள்ள அறைக்குள் நுழைவதைப் பார்த்தாள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து ”வாங்கம்மா,” என்று அழைத்தான்.

மோகினி. “என்னப்பா, என் பேரைக்கூட கேட்டுக்காம போயிட்டியே. கரஸ்பாண்டன்ட்கிட்டே என்ன பேர் சொன்னே?” என்று கேட்டாள்.

“உங்க பேரைக்கூடக் கேட்டுத் தெரிஞ்சுக்கணுமா? பார்த்தே புரிஞ்சிக்கலாமே”, என்றான். மேலும், “மனத்தை மயக்கும் இவ்வளவு அழகுள்ளவங்களுக்கு வேறே என்ன பேர் இருக்க முடியும்மா? உங்க பேர் மோகினிதானே?” என்று கேட்டான்.

மோகினி வாய் அடைத்துப்போய் விட்டாள். தன்னையுமறியாமல், ”ஆமாம்,” என்று சொன்னாள்.

“சரி. சரி, இப்படி வாங்கம்மா.” என்று அவளை அழைத்துக்கொண்டு, சற்று முன்பு அவள் நுழைந்த அறைக்குள் நுழைத்தாள்.

மோகினி சர்ட்டிபிகேட்டுகள் வைத்திருந்த பையிலிருந்து தனது சர்ட்டிபிகேட்டுகளை எடுத்துத் தயாராக வைத்துக் கொண்டாள்.

அவள் நுழைந்த அறையை ஒரு ஹால் என்று சொல்ல வேண்டும். அகலமான, நீண்ட மரத்தாலான ஸ்க்ரீன் அந்த ஹாலை இரண்டாகப் பிரித்தது. ஸ்க்ரீனுக்கு அப்பால் என்ன இருக்கிறது. யார் இருக்கிறார்கள் என்று மோகினி நின்ற இடத்திலிருந்து தெரியாது. மோகினி நின்ற பகுதியில் பல மர நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. சிறு மேஜைகளும் போடப்பட்டு அதன் மீது பத்திரிகைகள் வைக்கப்பட்டிருந்தன. அது வரவேற்பு அறை போல் தெரிந்தது.

“உட்காருங்கம்மா,” என்று சொல்லி விட்டு, பியூன் ஸ்க்ரீனுக்கு அப்பால் உள்ள பகுதியில் நுழைந்தான். உட்புறம் இருந்து ஒரு பலத்த ஆண் குரல் கேட்டது.

”இதை என்னன்னு நினைச்சீங்க? இது ஸ்கூலாக்கும். இங்கே ஒழுக்கத்துக்குத் தான் முக்கிய இடம். நான் கரஸ் பாண்டண்டா இருக்கிற ஸ்கூல்லே இந்த மாதிரித் தப்பை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.”

“இல்லை, மிஸ்டர் சாக்கோ. நான் சொல்றதைக் கேளுங்க. நான் ஏழை தான். சாதாரண ஆசிரியர்தான். இருந்தாலும் ஸ்கூல் பணத்தை எடுத்து – அதுவும் பிள்ளைகளின் விளையாட்டுக் கென்று ஒதுக்கப்பட்ட தொகையை எடுத்துச் சொந்த செலவு செய்யறவன் இல்லைசார் நான். இது அபவாதம். பதினைந்து வருஷமா நான் ஸ்போர்ட்ஸ் செக்ரட்ரியாக இருந்திருக்கிறேன். என் மேலே எந்தப் புகாரும் கிடையாது, கணக்கைப் பார்த்துவிட்டு அப்புறம் பேசுங்க”

“கணக்கு என்னய்யா பிரமாதம். கணக்கு! ஏமாத்தறவங்க கணக்கு எப்பவும் ஒழுங்காகத்தான் இருக்கும்.”

“மிஸ்டர் சாக்கோ! நான் அன்னிக்கும் இன்னிக்கும் வெறும் டீச்சர். புனிதமான டீச்சர் தொழில் செய்யறவன். உங்க மாதிரி வக்கீல் தொழில் செய்து விட்டுப் பொழுதுபோக்குக்கு ஒரு பள்ளிக்கூடத்து கரஸ்பாண்டண்டா இல்லை. ஆசிரியர் வேலையிலே ஏமாத்தறதுக்கு வாய்ப்பும் இல்லை – பழக்கமும் கிடையாது.”

“அப்படியா! என்னை நேரடியாகவே தாக்க ஆரம்பிச்சிட்டீங்க, இல்லியா? நீங்க யார்கிட்டே பேசறீங்கன்னு மறந்து பேசாதீங்க.”

“நான் யார்கிட்டே பேசறேன்னு எனக்குத் தெரியும். நீங்க மிஸ்டர் சாக்கோ, பிரபல வக்கீல். இந்த ஸ்கூல் கரஸ்பாண்டண்ட். கல்வி மந்திரிக்கு வேண்டியவர் – எல்லாம் எனக்குத் தெரியும். நான் சாதாரண டீச்சர். நீங்க நினைச்சா என்னை இந்தப் பள்ளியைவிட்டு நீக்கலாம். ஆனால் ஒன்று தெரிஞ்சுக்குங்க. நான் நல்லவன் என்கிற பேரை உங்களுக்கு முன்னால் இருந்த மூணு கரஸ்பாண்டண்டும் ரிக்கார்ட்லே எழுதி இருக்காங்க. நீங்க ஒரு நல்லவர் என்று ஊரிலே யாரும் சொல்லமாட்டார்கள். உங்க சம்சாரம்கூடச் சொல்ல மாட்டாள்.”

அதை அடுத்து உடனே “கெட் அவுட். வெளியே போடா,” என்ற ஆத்திரமான குரல் வந்தது.

அதைத் தொடர்ந்து ஒரு மெலிந்த ஐம்பது வயது மதிக்கக்கூடிய உருவம் வேகமாக வெளியே செல்வதை மோகினி கவனித்தாள்.

‘நாம் வேலை தேடி வரும் சமயத்தில் இம்மாதிரி நிகழ்ச்சி நிகழ வேண்டுமா? இவ்வளவு முரட்டு ஆசாமியிடம் ஒரு சிபாரிசுக் கடிதம்கூட இல்லாமல் வேலை தேடி வந்திருக்கிறோமே’ என்று எண்ணி பயந்தாள்.

“அவ வந்திருக்கா. மோகினி வந்திருக்கா.” என்று பியூன் சொல்வது அடுத்தபடியாகக் காதில் விழுந்தது.

“இந்தச் சமயம் பார்த்தா நீ அவளை அழைச்சிகிட்டு வரணும்? அதுவும் ஸ்கூலுக்கா அழைச்சிகிட்டு வரணும்? டேய், நீ சுத்த, முட்டாள்டா,” என்று கோபமாகப் பதில் சொன்னார்.

“அவ வெளியிலே உட்கார்ந்திருக்கா” என்று பியூன் சொல்வது மோகினியின் காதில் விழுந்தது.

பிறகு சில வினாடிகளுக்கு ஏதோ ரகசியமாகப் பேச்சு நடப்பதுபோல் தெரிந்தது.

மோகினிக்கு ஒரே குழப்பமாக இருந்தது. அடுத்தபடி ஏதோ நாற்காலிகள் நகரும் சப்தம். உட்புறம் ஏதோ கதவு திறக்கும் சப்தம், குழாயிலிருந்து வாஷ் பேசினில் தண்ணீர் கொட்டும் சப்தம், வாய் கொப்பளிக்கும் சப்தம், யாவும் கேட்டன.

அடுத்தபடி மறுபடியும் கதவு மூடப்படும் சப்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து பியூனின் குரல், “இந்தாங்க கண்ணாடி, சிப்பு,” என்று சொல்வது கேட்டது.

வினாடிகளுக்கெல்லாம், “இந்தாங்க பவுடர்”, என்று பியூன் மெல்லிய குரலில் சொல்வது மோகினியின் காதுகளில் விழுந்தது.

மோகினிக்கு எல்லாம் புதிராக இருந்தது.

ஸ்கிரினுக்கப்புறம் அமைதி நிலவியது. உடனே பியூன் வெளிப்புறம் வந்தான்.

“வாங்கம்மா. ஐயா உள்ளே இருக்கார். நீங்க பார்க்கலாம்.” என்று சொல்லி பியூன் அழைத்தான்.

மோகினி தயங்கினாள், பிறகு ஏதோ ஒரு சக்தி அவளை உந்த அவள் உள்ளே சென்றாள். உட்புறம் மேஜை முன்னால் பருத்த உருவம் உட்கார்ந்திருந்தது.

அவர் தலை மயிர் இயற்கைக்கும் மாறாக அதிகக் கறுப்பாக இருந்தது.

அவர் முகத்தில் அவசர அவசரமாக பவுடர் போட்டதன் விளைவாகச் சில பகுதிகளில் பவுடர் திட்டுத் திட்டாக இருந்தது.

அவர் வயது ஐம்பதுக்கு மேல் இருக்கலாம். ஆனால் அதை அவர் முப்பதாகக் காட்ட முயலுகிறார் என்பது தெரிந்தது. வாய் திறந்து புன்னகை செய்தபடி மோகினியை உட்காரச் சொன்னார்.

அவருடைய பற்கள் வெண்மையாக மின்னின. தலைமயிரின் கறுப்பு நிறம், அவை சாயம் என்பதையும், பற்களின் பளபளப்பு அவை பொய்ப் பற்கள் என்பதையும் தெளிவாகக் காட்டின.

அவர் கண்கள் மருண்டு மோகினியின் முகத்துக்கும் அவள் உடலுக்கும் மாறி மாறிப் பிரயாணம் செய்தபடி இருந்தன.

மோகினி ஒன்றும் கூறாமல் அவரையே விறைத்துப் பார்த்தபடி நாற்காலியில் உட்கார்ந்தாள்.

அவர் மேல் உதட்டிலிருந்த ஹிட்லர் மீசை துடித்தது. நல்ல பசி வேளையில் ஒரு தட்டு நிறைய ஜிலேபியைப் பார்த்த சிறுவன் வாயை சப்புக் கொட்டி உமிழ் நீரை விழுங்குவது போல் சாக்கோ விழுங்கினர். ”ஒன்டர்புல்! ஒன்டர்புல்! இவ்வளவு பிரமாதமாக இருக்கும்னு நான் எதிர்பார்க்கலே,” என்று சொன்னார்.

அதே சமயத்தில், பியூன் ஸ்கிரீனுக்கு வெளிப்புறம் சென்றான். ”திருச்சூர்லேயிருந்து எப்போ வந்தே மோகினி?” என்று அன்பு ததும்பக் கேட்டார் சாக்கோ.

அதற்கு மோகினி, “நான் திருச்சூர்லேயிருந்து வரல்லே, ஷோரனூர் லேயிருந்து வர்ரேன்,” என்று சொல்லி விட்டு, மேலும் ஏதோ சொல்லுவதற்குள, சாக்கோ குறுக்கிட்டு, “லெட்டர்லே திருச்சூர் மோகினின்னு இல்லே சொல்லி இருந்தான் கோவிந்தன்! ஊருக்கு வெளியே இருக்கிற என் பங்களா அட்ரஸுக்கு அனுப்பறதாகச் சொல்லியிருந்தானே! பாரு என் மனைவி ரொம்பப் பெரிய நியூசன்ஸ். அதனாலே நான் பிரண்ட்ஸை அந்தப் பங்களாளிலேதான் சந்திக்கிறது.. ஹி…ஹி…எல்லா என்டர்டெயின்மென்டும் அங்கேதான். எனக்குத் தொழில் முறையிலே வருமானவரி ஆபீஸர்கள், போலீஸ் கமிஷனர்கள், ஜட்ஜுகள் – இப்படியெல்லாம் சிநேகிதர்கள் உண்டு. அவுங்க ஹாப்பியா இருந்தா, நானும் ஹாப்பியா இருக்கேன். அதனாலே ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஊருக்கு வெளியே இருக்கற நம்ம பங்களாவிலே பார்ட்டி – அது ஒரு பக்கம். இந்த ஸ்கூல்லே அறிவாளிகள், ராமாயண சாஸ்திரிகள், பிஷப்பு கள் – இவங்களை வரவழைச்சுப் பிள்ளைகளுக்கு நல்ல புத்திமதிகளைச் சொல்லச் செய்வேன். கடவுளுக்குச் செய்யவேண்டியதையும் செய்யறேன், சைத்தானுக்குக் கொடுக்க வேண்டியதையும் கொடுக்கறேன். எப்படி நம்ப வாழ்க்கை ஏற்பாடு?” என்று சொல்லிவிட்டு, ”ஹி..ஹி..ஹி..” என்று சிரித்தார்.

அவர் சொன்னதில் ஓரளவுதான் மோகினிக்கு புரிந்தது.

போட்டி ஜுரம் நிறைந்த உலகில் மனிதன் வாழ என்னென்ன செய்கிறான் என்பதை உணராத மோகினியால் சாக்கோ சொன்னதன் அர்த்தத்தைப் பூராவும் புரிந்துகொள்ள முடியலில்லை.

“ஏதோ தப்பிருக்கணும், நீங்க நினைக்கிற அந்த திருச்சூர் மோகினி இல்லை நான். எந்த கோவிந்தனும் என்னை அனுப்பல்வே. நான்….. நான், ஷோரனூர் பக்கத்துக் கிராமத்திலிருந்து வந்த மோகினி,” என்று கூறினாள்.

சாக்கோ ஒரு வினாடி திகைத்தார். தன் திகைப்பைச் சமாளித்துக் கொண்டு மோகினியைப் பார்த்துச் சிரித்தார். “எந்த ஊரா இருந்தா என்ன மோகினி? முக்கியமான விஷயம் நீ ஒன்டாபுல்லா இருக்கறப்போ, கோவிந்தன் நாயர் அனுப்பினா என்ன, நீயே வந்தா என்ன? எனக்கு ஒன்றும் திருச்சூர் மேலே அன்போ, ஷோரனூர் மேலே கோபமோ கிடையாது,” என்று சொல்லி விட்டு மோகினியைப் பார்த்தார்.

“நீங்க சொல்றது எனக்குப் புரியல்லே. எனக்குப் புரியவும் வேண்டாம். நான் தேடி வந்தது சாதாரண டீச்சர் வேலை. அந்த வேலைக்கு எனக்குத் தகுதி இருக்குன்னு காட்ட சர்ட்டிபிகேட்டுகள் கொண்டு வந்திருக்கேன். எனக்காகச் சிபாரிசு செய்ய யாரும் கிடையாது,” என்று சொல்லிவிட்டு, சர்ட்டிபிகேட்டுகளைப் பையிலிருந்து எடுக்க முயன்றாள்.

சாக்கோ உரத்த குரலில் சிரித்தார், ”மோகினி! இந்தப் பள்ளிக்கூடத்திலே இப்போ டீச்சர் வேலை காலி இல்லே, அப்படிக் காலியிருந்தாலும் அந்த வேலையை நீ செய்யறது பொருத்தமில்லே. இந்தப் பர்சனாலிட்டியை வச்சிக்கிட்டு நீ டீச்சரா இருக்கிறதா? நோ. நோ. இவ்வளவு அழகையும் வேஸ்ட் பண்றதா? யாராவது காப்பி சாப்பிட்ட தம்ளரைக் கழுவுறதுக்கு சிவசமுத்திரம் நீர் வீழ்ச்சியை உபயோகப் படுத்துவார்களா? தம்ளரைக் குழாய்த் தண்ணீரிலே தான் கழுவணும். நீர் வீழ்ச்சியை மின்சார உற்பத்திக்குத்தான் உபயோகப்படுத்தணும். உனக்கு இது தெரியல்லியே. நீ உன்னைக் கண்ணாடியிலேயே பார்த்திட்டதே இல்லையா? வாட் எ பிடி?” என்று சொல்லி விட்டு எழுந்து வந்து மோகினியைத் தொட முயற்சித்தார்.

மோகினி அவரை உதறித் தள்ளி விட்டு வெளியே ஓடினாள்.

ஆத்திரமும் துக்கமும் ஒருங்கே வந்து அவள் மனத்தைத் தாக்கி அவளை அழவைத்தது.

மோகினி தன் அழகான உடலை வெறுத்தாள். அதே சமயத்தில் பள்ளியின் உட்புறம், உதட்டில் சிவப்புச்சாயம் தடவி, முகத்தில் அரை அங்குலம் பவுடர் பூசி அலங்கோவமாக ஒரு பெண் நுழைவதைப் பார்த்தாள்.

அவள்தான் தன் பெயர்கொண்ட திருச்சூர் மோகினி என்பதை உணர்ந்து கொண்டாள். மோகினிக்கு அடி வயிற்றில் பூகம்பம் நிகழ்வது போல் கலக்கம் ஏற்பட்டது.

பள்ளியைவிட்டு வேகமாக ஓடினாள். எங்கு செல் கிறோம் என்ன செய்யப் போகிறோம் என்று புரியாமல் தெருவில் நடந்தாள். பரத்த உலகத்தில் ஆண்கள் பார்வையில் எப்படி வாழப்போகிறோம். என்ன வேலை செய்யப் போகிறேம், நாராயணி அம்மாளிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தாள்.

வஹாப் சாயபு, ஷோரனூர் கடைத் தெரு ஆண்கள், புத்தி குழம்பிய சங்கரன்குட்டி – இப்போது சாக்கோ! இந்த ஆண்கள் எல்லோருக்குமே தன்னிடம் ஒரே நோக்கம் தானா? தந்தம் போன்ற தன் சிவந்து உருண்ட கரங்களையும், திமிரோடு விம்மி எழும் உடலையும் பார்த்தாள். ‘ஒரு வைசூரி நோய் வந்து என்னை ஒரு குரூபியாக்கி விட்டால், இந்த ஆண்களின் கொள்ளிக் கண்களின் பார்வையிலிருந்து தப்பலாம் அல்லவா?’ என்று நினைத்து வெதும்பினாள். இவ்வாறு வேதனை யோடு நடந்து வந்து கொண்டு இருந்தவள், குறுகிய கடை வீதியின் ஒரு மூலையில் எதையோ பார்த்துத் திகைத்து நின்றாள்.

தாம் பார்ப்பது உண்மையா, பொய்யா என்று தெரியாமல் யோசித்து நின்றாள்.

பிறகு மோகினி கண்களைத் துடைத்துக்கொண்டு நோக்கினாள், அதே உருவம். காலம் என்ற அடிவானத்தில் பல வருஷங்களுக்கு முன்பு கண்டு பூஜித்த அதே உருவம்! அதே மேனி. புன்னகை. கடவுள் என்ற அறியாத ஒரு அரூப சக்திக்கு உருவம் கொடுத்து நிற்கும் அதே மேனி, மறக்கமுடியாத அதே புன்னகை, ஆம், அவரேதான் என்று நினைத்தாள்.

துண்பக்கேணியின் அடியில், குழம்பிய சிந்தனைகளால் மருண்டு நிற்கும் மோகினிக்கு ஊன்றுகோல் போல் தோன்றினார் அவர், அது பாலக்காட்டுக் கடைவீதி என்பதை மறந்தாள். தெரு நடுவே ஓடுகிறோம் என்று உணராமல் ஓடினாள்.

“சாமி. சாமி, சாமி!” என்று உரக்கக் கூவியபடி ஓடினாள்.

குழந்தைச்சாமி ஒரு கடைமுன் நின்று வாழைப்பழம் வாங்கியபடி நின்றார்.

‘சாமி’ என்ற குரல் கேட்டுத் திரும்பினார். தன்னை நோக்கி அழகுத் தேர் போன்ற ஒரு பருவப் பெண் ஓடி வருவதைப் பார்த்தார்.

சாமியின் உருவத்தில் அதிக மாறுதல் இல்லை. மோகினி அவரை அடையாளம் கண்டு கொண்டாள். பாவாடை கட்டிய சிறுமி, பருவப் பெண்ணாக மலர்ந்தபின், மோகினியை சாமி எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? யார் என்று தெரியாமல் திகைத்து நோக்கினார். மோகினி ஓடிவந்து அவரை அணைத்துக் கொண்டு குழந்தை அழுவதுபோல் அழுதாள்.

மோகினியின் உதடுகள் ‘சாமி, சாமி’ என்று முனு முணுத்தன. இரு பக்கமும் கடைக்காரர்கள் இந்தக் காட்சியை ஒரு விதமாகக் கவனிப்பதை உணர்ந்தார் குழந்தைச்சாமி. காவி அணிந்த மொட்டைத் தலைச் சாமியை மோகினி போன்ற பெண் வந்து நடுத்தெருவில் அணைப்பதென்றால் உலகம் என்ன நினைக்க முடியும்?

மோகினியின் மனத்தில் ஆண்மை, பெண்மை என்ற இன உணர்வே இல்லை, என்பதை உலகம் உணர முடியுமா?

மோகினியின் குரல், சாமி, சாமி. என்று கூறும்போது, குழந்தைச்சாமியின் ஞாபகத்தைத் தாக்கியது.

மோகினியைத் தன் உடலில் இருந்து விலக்கி அவள் முகத்தை நோக்கினார். அதே மூன்றாம் பிறை நெற்றி, அந்த நெற்றியில் அசைந்தாடும் கூந்தல் சுழல், அதே கண்கள்! ஆம். அதே வண்டு விழிகள். பருவம் மாறினும் அவை மாறவில்லை. குழந்தை உருவத்தில் கண்ட அதே தெய்வீக அழகு.

பாவா திரிபுர சுந்தரியின் கற்பனை உருவம்தான் மறுபடியும் அவர் மனக்கண் முன் தோன்றியது. அவர் கண்களில் நீர் நிறைந்தன.

“நீ…நீ…” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார். “ஆம். நான்தான்,” என்று வார்த்தைகளால் சொல்லாமல் தலையசைப்பால் தெரிவித்தாள் மோகினி.

“நீதானே என் தாய் மோகினி! என் உபாசனா தெய்வம், பாலாதிரிபுர சுந்தரியின் மனித உருவம்! நீ பாலக்காட்டிலேயா இருக்கே?” என்று சொல்லி நிறுத்தினார்.

மோகினியின் வாழ்வில், கல்யாணமாகாத அவளைத் தாய் என்று அழைக்கும் ஒரே ஜீவன் இந்தக் குழந்தைச்சாமி தான்.

மோகினி சிரித்தாள். “இல்லை. நான் உங்கள் தாய் அல்ல. உங்கள் அன்பால் வளர்ந்து உருவாகியிருக்கும் மகள் மோகினி,” என்று சொன்னாள்.

குழந்தைச்சாமி அதைக் கேட்டுச் சிரித்தார். “யார் என்னைப் புறக்கணித்தாலும் நீதான் என் தாய். இந்த வயதான ஏழையைப் புறக்கணிக்கக் கூடாதம்மா,” என்றுவாறு அவளைக் கெஞ்சியபடி பார்த்தார்.

அத்தியாயம்-27

நடுத் தெருவில் இருக்கிறோம் என்பதை முதலில் உணர்ந்தவர் குழந்தைச்சாமிதான். விபரீத நோக்குடன் மற்றவர்கள் தன்னையும் மோகினியையும் கவனிப்பதைப் பார்த்தார் அவர். அண்ணன் மகன் ராஜுவின் மனைவி, முதல் நாள்தான் பழனி பிச்சைக்காரி பூஞ்சோலைக்குப் பண உதவி செய்யச் சொல்லிய போது, அதை எவ்வளவு தப்பாகப் புரிந்து கொண்டு பேசினாள் என்பதைக் காது கொடுத்துக் கேட்டிருந்தார். உடல் பசியினால் உந்தப்பட்டு உழலும் உலகத்தில், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே கண்ணியமான தொடர்புகள் இருக்க முடியும் என்று கற்பனை செய்து பார்க்கவும் திறனற்றுப் போய் விட்டது என்பதை வேதனையோடு புரிந்து கொண்டார்.

எப்போதும் அமைதியாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் வாழ்ந்து வந்த மோகினிக்கோ தன்னுடைய நடத்தை தன்னாலேயே நம்ப முடியாததாய் இருந்தது. ‘நடுத்தெருவில் தன்னையும் மறந்து ஓடிவந்து குழந்தைச்சாமியை அணைத்துக்கொண்டு விட்டோமே! அது தப்பல்லவா?’ என்று உணர்ந்தாள். உடனே தப்பைத் திருத்துபவள்போல் தரையில் குனிந்து குழந்தைச்சாமியின் கால்களைத் தொட்டுக் கும்பிட்டாள். இந்தச் செய்கை குழந்தைச்சாமியின் மனத்தை உருக்கியது.

“வா மோகினி! பஸ் ஸ்டாண்டுக்குப் போவோம்,” என்று சொல்லி அழைத்தார்.

இருவரும் ஒன்றும் பேசாமலே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தனர். இருவரும் தரையைப் பார்த்தபடியே நடந்தனர். இருவர் மனமும் நிறைந்து வழிந்தமையால் வார்த்தைகளுக்கு இடமில்லை. மோகினியும் குழந்தைச்சாமியும் ஷோரனூர் நோக்கிச் செல்லும் பஸ்ஸில் ஏறினார்கள். ஷோரனூர் வரும் வரை இருவரும் ஒன்றும் பேசவில்லை. மோகினி தலை நிமிர்ந்து பார்த்தாள். குழந்தைச்சாமியின் முகத்தில் ஒருவிதக் களைப்பும் அவர் கன்னங்கள் இளைத்துக் குழி விழுந்திருந்ததையும் அறிந்தாள். அவருடைய மொட்டைத் தலையில் நரைத்த ரோமம் அரும்பு விட்டு இருப்பதையும் பார்த்தாள். குழந்தைச்சாமி தன் தலையை மோகினி பார்ப்பதைக் கவனித்தார். சிரித்தார்.

“ஏன் சாமி சிரிக்கிறீங்க?” என்று கேட்டாள் அவள்.

“மோகினி, நீ குழந்தையா இருக்கிறப்பவும் இப்படித்தான் என் தலையை அடிக்கடி பார்ப்பே. அப்போ நீ என்ன சொன்னே ஞாபகம் இருக்கா?”

‘”ஞாபகமில்லையே!”

”என் தலையை ஈயச் செம்புபோல இருக்குன்னு சொன்னே. நான் அது ஈயாத செம்புன்னு பதில் சொன்னேன்.”

மோகினியும் சிரித்தாள். ஷோரனூர் வந்ததும் இருவரும் பஸ்ஸை விட்டு இறங்கினார்கள். மோகினி குழந்தைச்சாமியை வீட்டுக்கு அழைத்தாள். அவர் மறுநாள் வருவதாகவும் நேரே பள்ளிக்கூடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும் சொன்னார். குழந்தைச்சாமி பள்ளிக்கூடம் என்று சொன்னதும் மோகினிக்குச் சுருக்கென்றது. அவள் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டது, அவள் வேலை தேடிப் பாலக்காட்டுக்கு வந்தது போன்ற விவரங்களை இன்னும் அவரிடம் சொல்லவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது.

“நான் பள்ளியிலே வேலையாயில்லே,” என்று மெல்லிய குரலில் சொன்னாள்.

அவரோ, “அது எனக்குத் தெரியும். எல்லா விஷயமும் குழந்தை கௌரி சொல்லிச்சு”, என்று சொல்லிவிட்டு எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் மோகினியைப் பார்த்தார்.

“குழந்தை கெளரியா? அவ எங்கே இருக்கா? அவுங்க அம்மா நல்லா இருக்காங்களா? அவுங்களுக்கு… அவுங்களுக்கு ஆபத்து ஒன்றுமில்லையே?”

“எல்லோரும் நல்லா இருக்காங்க, கௌரிதான் உன் நினைவாகவே இருக்காள். நீ என்னைப் பத்தி ஏதேதோ தப்பா கௌரியிடம் சொல்லி யிருக்கே மோகினி” என்று கண்டிப்பான பார்வையோடு சொன்னார்.

மோகினி இதைக் கேட்டதும் பதறி விட்டாள். “நான் உங்களைப்பத்தித் தப்பா யாரிடமும் சொன்னதில்லையே!” என்றாள்.

“கடவுளுக்கு ஓர் உருவம் இருந்தா, அது என் மாதிரி இருக்கும்னு சொன்னியாமே? அது தப்பில்லையாம்மா மோகினி?” என்று சொல்லிவிட்டுச் சிரித்தார் அவர்.

மோகினி தலை குனிந்தாள்.

“சங்கரன்குட்டி நல்லா இருக்கானா?” என்று கேட்டார்.

மோகினி, “அப்படியேதான் இருக்கான்,” என்றாள்.

“சரி. நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்னு நாராயணி அம்மாளிடம் சொல்லு,” என்று சொல்லிவிட்டு நடந்தார்.

மோகினியும் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். திடீரென்று குழந்தைச்சாமி, மோகினியைக் கூப்பிட்டார். ஓடி வந்தாள். அவர் மோகினியிடம் தன் கையிலிருந்த வாழைப் பழத்தையும் கல்கண்டு பொட்டலத்தையும் எடுத்துக் கொடுத்தார். அவற்றைத் திகைத்துப் பார்த்து நின்றாள் மோகினி.

“முன்பெல்லாம் – உன்னை – அதாவது என் தாயைப் பார்க்க வெறும் கையோடு வரமாட்டேன், பழம் கல்கண்டோடு தான் வருவேன். என் தாய் அதை மறந்துட்டாளா? இன்று பாலக்காட்டுக் கடைத் தெருவில் பழம் கல் கண்டு வாங்கிட்டிருக்கறப்போ என் தாயே என்னைத் தேடி வந்துவிட்டாள். அவளுக்கென்று வாங்கின கல்கண்டையும் பழத்தையும் அவளுக்குத் கொடுக்காமல் போகலாமா?” என்று கேட்டார்.

மோகினி பதில் பேசாமல் பழத்தை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு அங்கிருந்து நடந்தாள். வீடு சென்றதும் மோகினி பாலக்காட்டுப் பள்ளியில் சாக்கோ அவளிடம் நடந்து கொண்டது. பஸ் ஸ்டாண்டுக்கு வந்தது. அங்கு குழந்தைச்சாமியைச் சந்தித்து அவருடன் பஸ்ஸில் திரும்பியது போன்ற எல்லா விவரங்களையும் சொன்னாள்.

நாராயணிக்குக் குழந்தைச்சாமி திரும்பிவிட்டார் என்று தெரிந்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி. “இனி ஒரு கவலை இல்லே. உன்னைப்பத்திக் கவலை தீர்த்துபோச்சு மோகினி, அந்த மகான் வருகை எப்போதுமே நமக்கு நல்லது தான் செய்திருக்கு.” என்று சொல்லி விட்டு வேலையில் ஈடுபட்டாள்.

மறுநாள் காலை எழுந்ததும் மோகினி வீட்டு வேலைகளைப் பரபரவென்று செய்ய ஆரம்பித்தாள். குழந்தைச்சாமி அன்று வீட்டில் சாப்பிடவேண்டும் என்று அவருக்காக அவியல், ஓலன் எல்லாம் தயார் செய்தாள்.

காலை பத்துமணி சுமாருக்கு வந்தார் அவர். நாராயணி அவரைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினாள். “உங்க பெண்ணே உங்களுக்காக ரொம்ப ஆசையோடு சமையல் செய்திருக்கா, சாப்பிடாமல் போகக்கூடாது.”

“அப்போ நான் மறுக்க முடியாது; சங்கரன்குட்டி. நீயும் சாப்பிடவா,” என்று அவனை அழைத்து அருகில் உட்கார வைத்தார்.

இருவருக்கும் மோகினியே உணவு பரிமாறினாள். சாப்பிட்டு முடிந்ததும் நாராயணி பழத்தட்டை அவர் முன் வைத்து விட்டு, மெள்ள சாமர்த்தியமாக அவள் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தாள். “மோகினி நீங்க ஏத்திவைச்ச விளக்கு. அவள் படிச்சதும் உங்களாலே, அவளுக்கு வேலை கிடைச்சதும் உங்களாலே. அவள் ஒரு தப்பும் செய்யல்லே. உங்க அண்ணன் பேத்தியிடம் கொஞ்சம் அன்பா பழகின. அதுக்காக அவளை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. இது நியாயமா சொல்லுங்க?” என்று கேட்டாள்.

“நியாயம் உலகத்திலேயே ஆர்வ மாகத்தான் இருக்கு. என்ன செய்யறது? உலகத்திலே யாரும் மத்தவங்க உணர்ச்சிகளைப் பற்றியோ கஷ்டங்களைப் பற்றியோ கவலைப் படறதாத் தெரியல்லே. என் அண்ணன் மருமகள் விஜயாவும் அப்படித்தான். அவளும் எவ்வளவோ கஷ்டப்பட்டுவிட்டாள். ஆனால் இன்னும் அவளுக்குப் பரந்த உள்ளம் ஏற்படல்லே,’ என்று ஒரு விதமாகச் சொல்லிவிட்டு நிறுத்தினார்.

“நீங்க மனக வைச்சா மறுபடியும் மோகினி இழந்த வேலையை அவளுக்கு வாங்கித்தர முடியாதா?”

குழந்தைச்சாமி ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.

நாராயணி, “என்ன சாமி, பேசாமல் இருக்கீங்க?” என்றாள்.

“மோகினி எந்தத் தவறும் இல்லாமல் வேலையை இழந்திருக்கா. அதனாலே அது ஆண்டவன் நடத்திய நிகழ்ச்சி யாத்தான் நான் நினைக்கிறேன். விஜயா வெளிக் காரணமாயிருந்து அவளை அப்புறப்படுத்தியிருக்கா. உண்மையிலேயே மோகினி அந்தப் பள்ளியிலே வேலை செய்யறது அவ்வளவு சரியில்லைன்னு தோணுது,” என்று சொல்லியிட்டு மோகினியைப் பார்த்தார்.

“சாமி முடிவு எதுவானாலும் அது எனக்குச் சரிம்மா,” என்று தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்துவிட்டு, மோகினி, நாராயணி அம்மாளை பார்த்தாள்.

நாராயணி குழம்பி நின்றாள். அவள் பார்வை சட்டென்று சங்கரன்குட்டியின் மீது பாய்ந்தது.

“இனிமேல் மோகினி இந்த வீட்டில் இருப்பது அவள் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. மோகினியின் எதிர்காலம் நல்லா இருக்க ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்வது என்றுதான் எனக்குப் புரியவில்லை.” என்று சொல்லிவிட்டு நிறுத்தினாள்.

குழந்தைச்சாமி ஒன்றும் சொல்லாமல் சிந்தனையில் லயித்திருந்தார். பிறகு அவர் முகத்தில் ஒரு புன்னகை பிறந்தது. நாராயணியைப் பார்த்து, “அம்மா, கொஞ்சம் வெளியே வர்றீங்களா? உங்களோட தனியாக் கொஞ்சம் பேசணும்,” என்று சொல்லிவிட்டு எழுந்து நடந்தார்.

நாராயணி அம்மாளும் மரியாதையோடு அவரைப் பின்தொடர்ந்தாள். சங்கரன்குட்டியும் மோகினியும் அந்த வீட்டில் தனியாக விடப்பட்டனர். அன்று குளக்கரையில் மோகியிடம் தவறாக நடந்ததிலிருந்து சங்கரன்குட்டி மோகினியிடம் பேசியது யில்லை. அவளைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை, இப்போது அவளைப் பார்க்கவும் பயந்து தலையைத் தொங்க விட்டுத் திரும்பிக் கொண்டான்.

மோகினி அதை லட்சியம் செய்யாது “குட்டி, இப்படித் திரும்பி என்னைப் பார்,” என்று கட்டளையிட்டாள்.

குட்டி மெள்ளப் பயத்தோடு திரும்பினான். மோகினி அவனையே முறைத்துப் பார்த்துவிட்டு, “குட்டி, நீ மறுபடியும் ஆஸ்பத்திரிக்குப் போகணும் . ஒழுங்கா மருந்து சாப்பிடணும். இந்த மாதிரி ஓடி வந்துவிடக் கூடாது.” என்று சொன்னாள்.

சங்கரன்குட்டியின் முகத்தில் கலவரம் ஏற்பட்டது. “வேண்டாம் மோகினி. ஆஸ்பத்திரிக்கு மட்டும் என்னை அனுப்பாதே! ஆஸ்பத்திரிக்கு மட்டும் என்னை அனுப்பாதே!” என்று கூச்சலிட்டான்.

“ஆஸ்பத்திரிக்குப் போகாம உனக்கு எப்படிக் குணம் ஆகும்?”

“எனக்கு ஆஸ்பத்திரிக்குப் போனாக் குணம் ஆகாது மோகினி. ஆஸ்பத்திரிக்குப் போறதுக்கு முன்னாலே நான் ஏதாவது தப்பு செய்திருக்கேனா? அன்னிக்குக் குளக்கரையிலே உன்னைப் பார்த்ததும் அப்படி நடத்துட்டேனே ஏன் தெரியுமா? எனக்கே புரியல்லே. ஒன்றும் தெரியாமல் இருந்தேன். எனக்கு ஆஸ்பத்திரியிலேதான் புத்தி கெட்டுப் போச்சு,” என்று சொல்லி விட்டு நிறுத்தினான்.

“ஆஸ்பத்திரியிலே புத்தி கெட்டு போச்சா? என்ன உளர்றே?” என் கேட்டாள் அவள்.

“இல்லை மோகினி, ஆஸ்பத்திரியிலே மாதவன் சம்சாரம்—அவதான் அங்கே தைலம் காச்சறவள். பார்வதின்னு பேரு. ஒருநாள் விடியற்காலம் நாலு மணிக்கு என்னை எழுப்பி பாரதபிழாவிலே குளிக்கணும்னு சொல்லிக் கூட்டிட்டு போனாள். என் தலையிலே தைவத்து வைச்சுத் தேச்சா. அதனாலேதான் மோகினி, நீ குளக்கரையிலே குளிக்கிறப்போ எனக்கு உன்னைப் பார்த்தது என்னவோ போல ஆயிட்டது. வஹாப் மாதிரி நானும் உங்கிட்டே தப்பா நடந்திட்டேன். என்னை மன்னிச்சுடு மோகினி. ஆஸ்பத்திரிக்கு மட்டும் என்னை அனுப்பாதே மோகினி. அங்கே – அங்கே பார்வதியைப் பார்க்கறத்துக்கே எனக்குப் பயம்மா இருக்கு” என்று அழாத குறையாகச் சொன்னான்.

சங்கரன்குட்டியின் உளறலிலிருந்து மோகினி அவன் நடத்தையில் ஏற்பட்ட திடீர் மாறுதலின் காரணத்தைத் தெரிந்து கொண்டாள். ஆஸ்பத்திரி சிப்பந்தியின் தவறுக்கு ஆஸ்பத்திரியைக் குறை கூற முடியுமா? இல்லை, சங்கரன் குட்டியைத்தான் குறை கூறவா?

குழந்தைச்சாமி மறுபடியும் நுழைந்தார். நாராயணியும் பின் தொடர்ந்தாள். அவர் அன்று மாலை மோகினியைத் வந்து தன்னுடன் கோயம்பத்தூர் அழைத்துப் போவதாகவும், அங்கு ஏதாவது வேலை பார்த்துத் தருவதாகவும் சொன்னார். சங்கரன்குட்டியைத் திரும்பிப் பார்த்தார். “என்ன மோகினி, குட்டி ஆஸ்பத்திரியிலிருந்து ஓடிவந்து விட்டானாமே! அம்மா இப்பத்தான் சொன்னாங்க. அவனை நல்ல பாதுகாவல்லே வச்சு வைத்தியம் செய்யச் சொல்றேன். அவனுக்குத் தொழில் படிப்பும் சொல்லித்தர ஏற்பாடு செய்யறேன்,” என்றார்.

சங்கரன்குட்டி பயத்தோடு மோகினியைப் பார்த்தான். மோகினி என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றாள். நாராயணி, “சாமியே! ஆகிற வைத்தியச் செலவை ஏற்றுக் கொண்டுவிட்டார் மோகினி”, மகிழ்ச்சியோடு சொன்னாள்.

மோகினி சங்கரன்குட்டியை ஓரி முறை பார்த்தாள், அவன் மருட்சியோடு காணப்பட்டன. “சாமி, அவனை அந்த ஆஸ்பத்திரிக்கு மட்டும் அனுப்பவேண்டாம். வேண்டுமென்றால் உங்களுடனே வைத்துக்கொண்டு வைத்தியம் செய்யுங்கள். இல்லாவிட்டால் அவன் அம்மாவோடு வீட்டிலிருக்கட்டும். ஆஸ்பத்திரியில் அவனைத் தனியாக விட வேண்டாம்,” என்று மோகினி சற்றுக் கண்டிப்புடனேயே கூறினாள். உடனே சங்கரன்குட்டியும், “சாமி, நான் உங்ககூட இருக்கேன் சாமி. தோட்டத்துப் பூவைப் பறிக்கமாட்டேன். ஒரு குறும்பும் செய்யமாட்டேன். உங்க காவி வேஷ்டி சட்டை தோச்சுப் போடறேன்” என்று கெஞ்சினன்.

“மோகினி, அவனை ஆஸ்பத்திரியிலே சேர்க்கணும்னு ஒரு கால்லே நின்றவள் நீதானே மோகினி இப்ப வேண்டாமென்கிறியே!” என்று நாராயணி ஆத்திரத்துடன் கேட்டாள்.

“அம்மா, நம்ம குட்டிக்கு அந்த ஆஸ்பத்திரி சரிப்பட்டு வரல்லே, ராசியில்லை. வேண்டாம்மா?” என்று மோகினி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

குழந்தைச்சாமி ஏதோ தக்க காரணத்தோடுதான் மோகினி மறுக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டார்.

“மோகினி. சொல்றபடி, குட்டி மடத்திலேயே என்னுடனே இருந்துட்டுப் போகட்டும். மோகினி, மாலை நாம் ரயிலில் கோயம்புத்தூர் போவோம்”, என்று சொல்லிவிட்டுப் போனார்.

சங்கரன்குட்டி நன்றியோடும் மரியாதையோடும் மோகினியைப் பார்த்தான்.

அன்று மாலை ஷோரனூர் ஸ்டேஷனில் ரயில் ஏறி இரவு குழந்தைச்சாமியும் மோகினியும் கோயம்புத்தூர் வந்து சேர்ந்தனர். கோயம்புத்தூரில் உள்ள பிரயாண விடுதியில் மோகினியைத் தங்கச் சொல்லிவிட்டுக் குழத்தைச்சாமி, நண்பர்களைப் பார்க்கச் சென்றுவிட்டார். இரவு பூராவும் அவர் திரும்பவில்லை. மறுநாள் காலையிலும் அவர் ஹோட்டலுக்கு வரவில்லை.

ஹோட்டல் சப்ளையர்கள் மோகினியைச் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் ஓர் ஆரம்ப நட்சத்திரம் என்று நினைத்து அவளிடம் பேச்சுக் கொடுத்தனர். அவள் தங்கியிருந்த அறைக்கு எதிரே இருந்த ஓர் இளைஞள் அடிக்கடி அவள் அறையைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்தான். பல வருஷங்களுக்கு முன் டீச்சர் ட்ரெயினில் படிக்க மோகினி கோயம்புத்தூர் வந்திருந்தாள். அன்று இருந்த கோயம்புத்தூருக்கும், இன்றுள்ள கோயம்புத்தூருக்கும் எவ்வளவோ வித்தியாசம். ஹோட்டல் வெளிப்புறம் வந்து செல்லும் பெரும் கார்கள் ஹோட்டலில் உள்ள இரைச்சல் இவையெல்லாம் மோகினிக்குப் புதுமையாக இருந்தன. ஒரு வித மிரட்சியையும் கொடுத்தன.

ற்பகல் ஒரு மணிக்குக் குழந்தைச்சாமி ஹோட்டலுக்கு வந்தார். அவர் முகத்தில் ஒருவித விஷமப் புன்னகை இருந்தது. “மோகினி, உனக்கு பெரிய மனிதர் வீட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டேன். சம்பளம் முன்னூறு ரூபாய்,” என்றார்.

“முன்னூறு ரூபாயா?”

“என் தாய்க்கு முன்னூறு ரூபாய் ஒரு பெரிதாகுமா?” என்றார் அவர் சிரித்தபடி.

“என்ன வேலை சாமி?” என்று கேட்டாள் மோகினி.

“பலவிதமான வேலைகள் இருக்கும். நீ செல்லும் விட்டில் எஜமானியின் ஸ்தானத்தில் இருந்து நீ மற்ற வேலையாட்களிடம் வேலை வாங்கவேண்டும். மாதம் நூறு ரூபாய் என் மூலமாக நாராயணிக்கு அனுப்பப்படும். மாதம் நூறு ரூபாய் பாங்கில் உன் பெயரில் போடப்படும். மீதி 100 ரூபாய் உன் கையில் செலவுக்குக் கொடுக்கப்படும். அந்த வீட்டிலேயே தங்கவேண்டியிருப்பதால் உனக்குச் சாப்பாட்டுச் செலவு கிடையாது. ஏற்பாடு பிடித்திருக்கிறதா மோகினி?” என்று கேட்டார்.

“உங்கள் ஏற்பாட்டில் குறை சொல்லமுடியுமா?” என்றாள் அவள்.

திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டவர். போல், “இந்த ஏற்பாட்டில் ஒரு பெரும் குறை இருக்கிறது. நீ ஒரு பொய் சொல்லவேண்டி வரும்.” என்று சொல்லிவிட்டு மோகினியைக் கவனித்தார்.

மோகினி ஒன்றும் புரியாமல் விழித்தாள். “நேரமாகிறது. சாமான்களை எடுத்துக் கொண்டு வா” என்று அறையை விட்டுப் புறப்பட்டார் அவர்.

மோகினி குழப்பத்தோடு தன் சிறு பெட்டியைத் தூக்கிக்கொண்டு பின் தொடர்ந்தாள். இருவரும் வாசலில் காத்திருக்கும் டாக்ஸியில் ஏறினார்கள். டாக்ஸி கோயம்புத்தூர் வீதிகள் வழியே சென்றது. இருவரும் மௌனமாக இருந்தனர். சற்று நேரத்தில் டாக்ஸி தோப்பின் நடுவில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்தது. அந்த வீட்டின் எதிரே உள்ள திறந்த வெளியில் நின்றது. வீட்டின் வெளிப்புறம் உள்ள இரும்பு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததும் மோகினி வியப்படைந்தாள். அந்தப் பெண் மோகினியைப் பார்த்ததும், “டீச்சர்..” என்று கூவிக்கொண்டு ஓடிவந்தாள். குழந்தைச்சாமியைப் பார்த்ததும் தன்னத் திருத்திக் கொண்டாள்.

“தாத்தா, மறந்தே போயிட்டேன். டீச்சர்ன்னு கூப்பிடக்கூடாது. சாந்தின்னு கூப்பிடணும் – இல்லையா?” என்று கேட்டாள் கெளரி.

“ஆமாம் கெளரி. இந்தம்மாவை உனக்குத் தெரியாது. இவுங்க பேரு சாந்தி, பாலக்காட்டிலேருந்து வந்திருக்காங்க. மறந்துடாதே கெளரி.”

“சரி தாத்தா. அப்பா மில்லுக்குட் போயிருக்கார். அம்மா மாடியிலே இருக்காங்க. சாந்தியைக் கூட்டிட்டு போங்க,” என்று அன்போடு மோகினியைப் பார்த்தாள் கெளரி.

“இதெல்லாம் என்னங்க. சாமி எனக்கு ஒன்றுமே புரியல்லியே!”

“தாத்தாவும் பேத்தியும் சேர்ந்து செய்த ஒரு சதி. அந்த சதிக்கு நீ உடந்தையா இருக்கணும்.”

“இது பெரிய பொய்யில்லையா? நீங்களா இந்த மாதிரிச் செய்யறீங்க?”

குழந்தைச்சாமி கலங்கிய கண்களோடு மோகினியைப் பார்த்தார்.

“நீ கடவுளின் உருவம்ணு நினைச்ச நான் பொய் சொல்றது உனக்கு அதிர்ச்சியா இருக்கு இல்லையா? என் வாழ்நாள் பூராவும் நான் எவ்வளவோ பொய் சொல்லியிருக்கேன். ஆனா அந்தப் பொய்களாலே எனக்கு எந்த விதப் பிரயோசனத்தையும் தேடிக்கல்லே. எல்லாப் பொய்களும் மத்தவங்களுக்கு நன்மையிலேதான் முடிஞ்சிருக்கு. இந்தப் பொய்யும் அப்படித் தான் முடியும்ணு நினைக்கிறேன். ஒரு சமயம் நான் செய்யாத ஒரு குற்றத்தைச் செய்ததாக ஒப்புக்கிட்டு, தண்டனைகூட அடைஞ்சிருக்கேன் மோகினி,” என்று சொல்லிவிட்டு மோகினியைப் பார்த்தார்.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *