மின்னல், மழை, மோகினி






(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 | அத்தியாயம் 25-27
அத்தியாயம்-22

புமுதி மண்டலத்தில் மின்னி மறைந்த ‘சவர்லட்’ வானைப் பார்த்து நின்ற மோகினிக்கு, அது செவ்வானத்தில் திடீர்த் தோற்றம் தந்து மறைந்த மின்னல் போல் தோன்றியது. அந்த ‘வாள்’ போன திசையிலிருந்து, அது பாலக்காடு அல்லது அதற்கு அப்பாலுள்ள கோயமுத்தூர் தான் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள்.
அன்று காலையிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியும் எதிர்பாராத திடீர் நிகழ்ச்சியாகவே இருந்தது. முதலில் மோகினியின் வேலை நிறுத்தம், பின்பு விஜயாவுக்கு ஏற்பட்ட விபத்து, இப்போது அவர்கள் ஊரைவிட்டே பயணமாகிச் செல்வது!
அந்தக் காரில் கண்களை மூடிப்படுத்திருந்த விஜயாவின் முகம், போட்டோ பிடித்தது போல் மோகினியின் மனத்தில் பதித்திருந்தது. விஜயாவின், உண்மை நிலை என்ன என்பது புரியவில்லை. யாகையால், திகிலும் ஏற்பட்டது. முடிந்த அல்லது முடியும் நிலையாக இருந்தால், வண்டியில் அப்புறப்படுத்த மாட்டார்கள்.
ஏதோ ஒருவித அபாய நிலை – ஆனால் நம்பிக்கை வைக்கும்படியான நிலையாக இருந்தால்தான், இம்மாதிரிப் பயணத்தை மேற்கொள்வார்கள் என்று அவளது பகுத்தறிவு கூறியது.
சலனமில்லாமல், நிம்மதியாக, நீரோடைபோல் சென்று கொண்டிருந்த அவளது பள்ளி வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தவளின் எதிர்காலத்தைப்பற்றி நிர்ணயித்துக் கொண்டிருக்கும்போது, பங்களாக் குதிரை வண்டி, சாலையில் மோகினி நின்ற இடத்தை நோக்கி வந்தது.
அதில் ஆயுர்வேத ஆஸ்பத்திரி வைத்தியர் இருந்தார். மோகினியைப் பார்த்ததும் அவர் வண்டியை நிறுத்தினார். “என்ன மோகினி! ஆஸ்பத்திரியிலிருந்து திரும்பி வர்றியா?” என்று கேட்டார்.
“ஆமாம். சங்கரன்குட்டி விஷயமா உங்களைப் பார்க்கத்தான் வந்தேன். ஆனால்….” என்று கூறி முடிப்பதற்குள் வைத்தியர் குறுக்கிட்டு, “என்ன செய்யறது? பங்களாவிலிருந்து வந்து அவசர அவசரமாகக் கூப்பிட்டாங்க. ஆனால் அங்கே போனப்புறம், ஏன் என்னைக் கூப்பிட்டாங்கன்னு எனக்கும் புரியல்லே. அவுங்களுக்கும் புரியல்லே. அவ்வளவு கேவலமாயிட்டது. தன்வந்திரி வைத்தியமென்றால்!” என்று குறைபட்டுக் கொண்டார்.
அவர் மனத்தில் விஜயாவைப்பற்றிய கவலைகூட அவ்வளவு அதிகமாக இல்லை. தனக்கு நேர்ந்த மரியாதைக் குறைவே அவர் மனத்தை வாட்டி வதைத்தது.
“பங்களாக்காரர் சம்சாரத்துக்கு என்ன?”
“ஏதோ ஸ்நானத்துக்குப் போயிருக்கிறாள். வலிப்பு வந்திருக்கு, பிரக்ஞை தப்பிடுத்து நாடி விழுந்திடுத்து. உடனே மெழுகு தடவி, ஒத்தடம் கொடுத்திருந்தா எல்லாம் சரியாப் போயிருக்கும். யாரு என் பேச்சைக் கேட்கருங்க? அந்தக் குழாய் வைத்தியன், கோயமுத்தூருக்குக் கொண்டு போகச் சொல்லிட்டான்.”
“அவுங்க பிழைப்பாங்க இல்லியோ?” என்று ஆவலோடு கேட்டாள் மோகினி.
“நாடி விழுந்தப்புறம், என்னத்தைச் சொல்றதும்மா,” என்று சொல்லி விட்டு சங்கரன்குட்டியைப்பற்றிப் பேச்செடுத்தார்.
சங்கரன்குட்டி வைத்தியம் செய்த கொள்ள மறுக்கிறான் என்றும், அவனுக்குப் பாதுகாவலோடு தான் வைத்தியம் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் தன் கஷ்டத்தைக் கூறிக் குறைபட்டு கொண்டார்.
மிகுதிப் பணம் இருநூறு ரூபா கேட்டால் என்ன செய்வது என்று மனம் பதைத்தபடி நின்றாள் மோகினி.
ஆனால் வைத்தியருக்கு இருந்த மன வேதனையில், அவர் பணத்தைப்பற்றி, பேசவே இல்லை.
வண்டி நகர்ந்தது. ஆஸ்பத்திரி நோக்கி.
மோகினியும் வீடு நோக்கி நகர்ந்தாள். வீட்டை நெருங்க நெருங்க மோகினிக்குக் குழப்பம் அதிகமாயிற்று.
குழந்தை முதல் மோகினி பொய் சொல்லியதே கிடையாது. பொய் சொல்ல அவளுக்குத் தேவையும் இல்லை. தவறான ஆசைகள், நோக்கங்கள் இருந்தால் தானே அவள் பொய் சொல்ல வேண்டும்? அவளது சிறு ஆசைகள், நிறைவேறும் அளலில் இருந்தன. படிக்க விரும்பினாள். படிப்பு குழந்தைச்சாமியாரால் எளிதில் கிட்டியது. ஆசிரியை ஆக விரும்பினாள். அதுவும் கிடைத்தது. இயற்கையின் அழகுப் பொருள்களான மலர், மரம், கொடி – இவைகள் பொய் சொல்கின்றனவா? அது போலத்தான் மோகினியும் இருந்தாள். அவள் எதையும், யாரிடமிருந்தும் மூடி வைத்ததில்லை. அவள் மூடிய தெல்லாம் பொங்கும் அவள் உடல் அழகை ஆடையால் மூடிய குற்றம் தான்.
அதிலும் அவள் பூரண வெற்றி காண முடியவில்லை. ஆடையால் உடலை மறைப்பதால், அழகு மறைந்துவிடாது என்று பறை சாற்றியது அவள் பருவம்.
இன்று நாராயணி அம்மாளிடம், வேலை போன விஷயத்தை மூடிவைக்க நினைத்தாள். வீட்டில் நுழைந்ததும் வழக்கம் போல் பின்கட்டுக்குப் போய்க் கால் முகம் கழுவி வந்தாள்.
நாராயணி அம்மான் வழக்கம்போல் தேநீரைக் கொண்டுவந்து வைத்தாள்.
அதை வாங்கிக் குடித்தாள். அடுத்தபடி வழக்கம் போல் காய்கறிகள் பறிக்கச் சென்று வாழை இலை, காய்கறிகள் பறித்து வந்தாள்.
சமையலறைக்குச் சென்று நாராயணி அம்மாளுக்குச் சமையலில் உதவியாக இருந்தாள். இரவு ஏழரை மணி ஆனதும் வழக்கம்போல் உணவருந்த உட்கார்ந்தாள்.
சாப்பிட்டு முடிந்ததும் மோகினி வெளி அறைக்கு வந்தாள். அவளுடைய அன்றாட நிகழ்ச்சி நிரவில் அடுத்த விஷயம் மறுநாள் வகுப்புக்குப் பாடம் தயாரிப்பது.
எதிரே உள்ள மூங்கில் மேஜை மீது உள்ள புத்தகங்களைப் பார்த்தாள். அவைகளை இன்று ஒப்புக்காகப் புரட்டுவது ஓர் அர்த்தம் இல்லாத விஷயமாகத் தோன்றியது. “நாளைக்கு எந்த வகுப்புக்குப் பாடம் நடத்தப் போகிறோம்? ஏன் இந்தப் புத்தகங்களை வீணாகப் புரட்ட வேண்டும்? அம்மாவை ஏமாற்றுவதற்கா?” என்று நினைத்தாள்.
பிறகு தன்னுடைய படுக்கையை உதறித் தரையில் விரித்தாள்.

சமையல் அறையில் பாத்திரங்களைக் கழுவி எடுத்து மர ஷெல்பில் வைத்துக் கொண்டிருந்த நாராயணி அம்மாள் காதுகளில் மோகினி ஜமக்காளத்தை உதறும் சப்தம் கேட்டது.
நாராயணி எவ்வித சந்தேகமும் இல்லாமல், “என்ன மோகினி! இன்று புத்தகம் படிக்கவில்லையா?” என்று கேட்டாள்.
இந்தச் சாதாரண கேள்வி குற்றமுள்ள மனத்தோடு இருந்த மோகினிக்கு திக் திக் என்று இருந்தது. என்ன பொய் சொல்வது? தலைவலி, களைப்பாக இருக்கிறது என்று ஏதாவது சொல்வோமா என்று நினைத்தாள்.
வாய் திறந்து பொய் சொல்வதை விட மௌனமாக இருந்துவிடுவதே சரி என்று பேசாமல் படுக்கையில் படுத்துக் கொண்டாள்.
நாராயண சமையல் அறைக் கதவை மூடிக்கொண்டு வந்தாள். அதிசயமாக அவ்வளவு சீக்கிரம் படுத்துக் கொண்ட மோகினியைப் பார்த்துப் புன்முறுவதுடன், “தினமும் நீ படிச்சு முடிக்க மணி பத்தாகும். இன்றைக்குத் தான் அதிசயமாச் சீக்கிரம் படுத்திட்டே. தினமும் நீ இப்படி இருந்தாத்தான் எனக்குப் பிடிக்கும்.” என்று சொல்லி விட்டு அந்த அறையின் மூலையில் இருந்த ஒரு மரப்பெட்டியிடம் சென்றாள்.
மரப்பெட்டியைத் திறந்து அதன் உட்புறமிருந்து ஒரு மூன்றடுக்கு டிபன் பெட்டியை எடுத்தாள்.“பார் மோகினி. உனக்கு என்ன வாங்கி வந்திருக்கேன்!” என்று பெருமையோடு சொல்லி நிறுத்தினாள்.
மோகினி ஆச்சரியத்துடன் புத்தம் புதிய டிபன் பெட்டியைப் பார்த்தாள். “அம்மா? இதை எப்போ வாங்கினீங்க?” என்று கேட்டாள்.
நாராயணி, “மோகினி! நீ தினமும் அந்தச் சின்னப் பாத்திரத்திலே டிபன் கொண்டு போறது, எனக்கு என்னவோ பிடிக்கவே இல்லே. நல்லாச் சாப்பிட் டாத்தானே பள்ளிக்கூடத்திலே நல்லா வேலை செய்ய முடியும்? பள்ளிக்கூடத்திலே உன் பலகாரத்திலே பங்கு கொள்ள அந்தப் பெண் கௌரி வேறே இருக்கா, அவளுக்குக் கொடுக்காமல் உன்னாலே சாப்பிட முடியாது. அதுதான் காலையிலே கடைத்தெருவுக்குப் போய்ப் பழைய பாத்திரத்தைப் போட்டுக் கொஞ்சம் பெரிசா ஒரு டிபன் பாக்ஸ் வாங்கிட்டு வந்தேன். இனிமேல் அந்தக் குழந்தை கௌரிக்கும் சேர்த்துப் பலகாரம் எடுத்துக்கிட்டுப் போகலாம்”, என்று சொல்லி மோகினியைப் பார்த்தாள்.
“இனிமேல் நான் பள்ளிக்குப் போகத் தேவை இல்லை. பள்ளியிலிருந்து என்னை நீக்கிவிட்டார்கள். கௌரியை இனிமேல் நான் சந்திக்கும் வாய்ப்பே இருக்காது. அவள் வேற்றூர் சென்று விட்டாள்”, என்று மோகினி பதில் சொல்லவில்லை.
காலம் தாழ்த்தி வாங்கப்பட்ட அந்த டிபன் பெட்டியைப் பார்த்தபடி ஒன்றும் பேசாமல் இருந்தாள்.
உண்மையைச் சொல்லிவிடுவோமா என்று அவள் மனம் துடித்தது. ஆனால் நாராயணி அம்மாள் மனம் உடைந்து போய்விடுவாளே என்ற பயம் அவளைச் சும்மா இருக்கச் செய்தது.
ஒன்றும் பேசாமல் விறைத்துப் பார்த்தபடி இருந்த மோகினியைக் கண்டு ஏமாற்றமடைந்தாள் நாராயணி அம்மாள். “என்ன மோகினி, ஒன்றும் பேசாம இருக்கே? உனக்கு இது பிடிக்கல்லியா?”‘ என்று வருத்தம் தொனிக்கக் கேட்டாள்.
மோகினி பொங்கும் தன் வருத்தத்தை அடக்கிக்கொண்டு, “இல்லேம்மா, டிபன் பெட்டி ரொம்ப நல்லாயிருக்கும்மா. ஆனால்…” என்று தொடங்கி முடிக்க முடியாமல் குழம்பினாள்.
“ஆனால் என்னம்மா மோகினி?”
“இல்லேம்மா. நம்ம குட்டிக்கு வைத்தியச் செலவு இருக்கு, இப்போ போய் ஏன் இந்தப் புதுப் பாத்திரம் வாங்ணும்?” என்று ஒருவாறு சொல்லிச் சமாளித்தாள்.
மோகினியின் மனத்தில் உள்ள உண்மையை உணராத நாராயணி, “மோகினி, நீ ஒரு விசித்திரப் பிறவியம்மா. உனக்குத் துணி பாத்திரம் எதிலேயும் ஆசையில்லை. உனக்கு உன் சுகம், உன் தேவையைப் பத்தியே அக்கறையில்லை,'” என்று சொல்லிவிட்டு விளக்கைச் சிறிதாகத் தூண்டிவிட்டுப் படுத்துக் கொண்டாள்.
படுத்த சில வினாடிகளில் தூங்கியும் விட்டாள். ஆனால் மோகினி மட்டும் இரவு வெகு நேரம்வரை தூங்காமல், இனி எதிர்காலத்துக்கு என்ன செய்வது என்று யோசித்தபடி இருந்தாள்.
மன உளைச்சல், உடல் அயர்வு இரண்டின் காரணமாக, விடிந்து வெகு நேரமாகியும் மோகினி எழுந்திருக்கவில்லை.
நாராயணி, காலையில் மோகினி பள்ளிக்குப் போக வேண்டுமே என்று பரபரப்பாகச் சமையல் செய்து கொண்டிருந்தாள்.
அன்று வெள்ளிக்கிழமை. ஆகையால் மோகினி எண்ணெய் ஸ்நானம் செய்ய வேண்டுமென்று வெந்நீர் காய வைத்திருந்தாள்.
மோகினி எழுந்து பல் துலக்கிவிட்டுச் சமையல் அறைப்பக்கம் வந்தாள்.
நாராயணி மோகினியைப் பார்த்து, “நேரமாகிறது மோகினி! போய் எண்ணெய் தேய்த்துக் குளிச்சிட்டு வா சீக்கிரம்,” என்றாள்.
மோகினி, “எனக்கு உடம்பு சரியில்லேம்மா. இன்றைக்கு நான் எண்ணெய் தேய்த்துக் குளிக்கப் போறதில்லே.” என்று சொல்லிவிட்டு வெளிப்புறம் நகர்ந்தாள்.
வீட்டின் வெளிப்புறம் காட்டில் சூரியன் ஒளியில் செடிகள் பூத்துக் குலுங்கின. ஓங்கி வளர்ந்த மரம், பூத்துக் குலுங்கும் செடி, அசையாது, அமைதியாக விண்ணை நோக்கித் தவம் செய்யும் மலை. பாடிப் பறந்து வரும் பறவைகள் – ஆகியவைகளைப் பார்த்தாள். மோகினிக்குப் பொருமையாக இருந்தது. மலைச்சரிவில் மிக உயர்ந்த மரத்தில் ஒரு தாய்க் குரங்கு, தன் குட்டியை அணைத்தபடி கிளைக்குக் கிளை லாகவமாகத் தாவும் காட்சியைப் பார்த்தாள்.
பறவைகள், வானரங்கள்! இவைகள் மட்டும் ஏன் கவலையில்லாமல் இருக்கின்றன? இந்தப் பூமியையே ஆளும் மனித இனம் மட்டும் ஏன் கவலையில் தோய்ந்து வாழ வேண்டியிருக்கிறது?
மனிதன் சிந்திக்கும் வாய்ப்புப் பெற்றிருக்கிறான். மற்ற மிருகங்களுக்கு அது இல்லை, மனிதன் வாழ்ந்தால் உன்னதமாக வாழ்கிறான். அதே போல் வீழ்ந்தாலும் அவன் வீழ்ச்சி பயங்கரமாகத் தான் இருக்கிறது.
‘இயற்கையின் ஓர் அங்கமான மனிதன் மட்டும், இயற்கையோடு ஒத்து வாழாமல் பிரிந்து வாழ்கிறான். அதுவே அவன் வெற்றியின் ரகசியம். அதுவே’ அவன் துக்கத்தின் காரணமும்கூட, என்று நினைத்தாள். ஏன் இன்று மட்டும் தத்துவ விசாரணையில் இறங்கினோம் என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள் மோகினி.
ஒரு வேளை தனக்கு வேலை போகாதிருந்தால் இம்மாதிரிச் சிந்தனையில் ஆழ்ந்து நிற்போமா என்று மீண்டும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள். எதிர்பாராத ஒன்று நிகழும் போதுதான் வேதனை ஏற்படுகிறது. வேதனையின் வயிற்றில் ஆத்ம விசாரமும் பிறக்கிறது என்று உணர்ந்த போது மோகினிக்குத் தன்னை யறியாமலேயே சிரிப்பு வந்தது.
அவள் பார்வைக்கு நூறு கெஜ தூரத்தில் உள்ள ஒரு திட்டுத் தெரிந்தது. அதை அடுத்தாற்போல் மலைச் சரிவும், சரிவு முடியும் இடத்தில் குருவாயூர்ச் சாலையும் தெரிந்தன. அந்த சாலையிலிருந்து உருண்ட பஸ்தானே அவளை நாராயணி அம்மாள் வீட்டுக்குக் குழந்தையாக இருந்தபோது கொண்டு வந்து சேர்த்தது? அவள் அந்த வீட்டுக்கு வந்ததே எதிர்பாராத வகையில்தானே?
குழந்தைச்சாமியைச் சந்தித்ததே சற்றும் எதிர்பாராத முறையில்தானே! அதே போல் பள்ளியிலிருந்து விலக்கம் பட்டதும் முற்றிலும் எதிர்பாராத ஒரு நிகழ்ச்சிதானே! எதிர்பாராத நிகழ்ச்சிகள் நடப்பதுதானே அவள் வாழ்க்கை இலக்கணமாக இருந்து வந்திருக்கிறது!
இதை நினைத்தவுடன் மோகினியி மனத்தில் அழுத்திக் கொண்டிருந்து ஒரு சுமை விலகியது போல் உணர்தாள். எதற்காக நடந்து போனதை பற்றிக் கவலைப்பட வேண்டும்? அடுத்து நடக்க வேண்டியதைப் பற்றியல்லவா சிந்திக்க வேண்டும் என்று தீர்மானத்துக்கு வந்தாள்.
நாராயணியின் குரல் கேட்டுத் திரும் பினாள். “மணி ஒன்பது ஆகப்போகிறது. எப்போ குளிக்கப் போறே?” என்று அவள் கேட்டாள்.
நாராயணியின் முகத்தைப் பார்ததும் திடீரென்றுமோகினியின் மனதில் ஒரு தீர்மானம் உருவாகியது. “அம்மா! நான் வேலைக்குப் போகப் போறதில்லை,” என்று சொல்லிவிட்டுத் தனது துணிவைக் கண்டு தானே ஆச்சரியப்பட்டாள். நாராயணி மிகுந்த ஆச்சரியத்தோடு ஒன்றும் பேசாமல் நின்றாள்.
“அம்மா! என்னை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. நான் கௌரியோடு நெருங்கிப் பழகினது அவுங்க அம்மாவுக்குப் பிடிக்கல்லே. இனிமேல் நான் வீட்டிலேதான் இருக்கப் போறேன். உனக்கு ஒரு சுமையா, சம்பாதிக்காம இருக்கப் போறேன் அம்மா,” என்று சொல்லிவிட்டு நாராயணியிடம் ஓடினாள்.
நாராயணியை அனைத்துக்கொண்டு விம்மி அழுதாள்.
உண்மை விளங்க, நாராயணிக்குச் சில வினாடிகள் ஆயிற்று. அவள் ஒன்றும் பேசவில்லை. மோகினியைத் தடவிக் கொடுத்தபடி ஒன்றும் பேசாமல் இருந்தாள், “அம்மா! அடுத்த மாதச் செலவுக்கு என்னம்மா செய்வோம்! வேலையைவிட்டு நீக்கினபோது கொடுத்த பணத்தையும் சாமியார் ஞாபகார்த்த வாசகசாலை நிதிக்குக் கொடுத்துட்டு வந்துட்டேம்மா. ஆஸ்பத்திரிக்கு இரு நூறு ரூபாய் வேறே கட்டியாகணும். என்னம்மா செய்யறது?” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள்.
நாராயணியின் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. நாராயணி தன் முந்தானையால் மோகினியின் கண்களைத் துடைத்தாள். முயற்சி செய்து மோகினியைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். “அதைப்பத்தி எல்லாம் நீ ஏன் கவலைப்படறே மோகினி? உன்னை இழந்த பள்ளிக்கூடம்னா கவலைப்படணும்? போய்க் குளிச்சிட்டு வந்து சாப்பிடு” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள்.
இப்படிப் பதட்டமில்லாமல் விஷயத்தை எடுத்துக் கொள்வாள் தன் வளர்ப்புத் தாய் என்று மோகினி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மோகினி குளித்துவிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்ததும் வழக்கம்போல் சிரித்த முகத்தோடு பரிமாறினாள்.
பள்ளியைப் பற்றியோ, ஆஸ்பத்திரியில் இருக்கும் சங்கரன்குட்டியைப் பற்றியோ பேச்சே எடுக்கவில்லை.
நாராயணி மனத்தில் என்ன நினைக்கிறாள் என்றே தெரியாமல் தவித்தாள் மோகினி.
சாப்பிட்டு முடிந்ததும். ”அம்மா! நான் வேணும்னா பாலக்காட்டுக்குப் போய் அங்கே பள்ளிக்கூடத்தில் வேலை இருக்கான்னு பார்த்துட்டு வரட்டுமா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நீ பாளக்காட்டிலே போய் வேலை பார்த்தால் உன்னைப் பிரிஞ்சு நான் எப்படி இங்கே தனியா இருக்கிறது? வயசுப் பொண்ணு நீ தனியா அங்கே இருக்கறதும் சரியில்லே.” என்று நாராயணி பதில் கூறினாள்.
“செலவுக்கு என்னம்மா செய்யறது?”
“குருவரயூரப்பன் ஏதாவது ஒரு வழிவிடாமல் போகமாட்டார். நீ போய் ஓய்வெடுத்துக்கோ.”
“வேலை செய்யாமல் சும்மா இருக்கிறது கஷ்டமா இருக்கம்மா.”
நாராயணி யோசித்தாள். பிறகு, “மோகினி! வாழைக்கன்றுகள் வாங்கி வச்சிருக்கேன். அதை வாடிப்போறதுக்கு முன்னால் நட்டாகணும். பொழுது போகல்லேன்னா தோட்டத்தைக் கொத்தி சரிபண்ணு,” என்று சொல்லி விட்டு, வீட்டு வேலைகளைக் கவனிக்கஆரம்பித்தாள். அன்று பிற்பகல் பூராவும் தோட்டத்தில் முளைத்திருந்த தேவையற்ற செடிகளைப் பிடுங்கி, மண்ணைக் கொத்தி, பாத்தி கட்டினாள். மாலை ஐந்து மணி வரையில் வேலை சரியாக இருந்தது.
அவள் கைகளில் மண் படிந்து, வியர்த்து, களைப்பாக இருந்தது.
இருட்டும் நேரம் வந்துவிடவே, வீட்டுக்கு அருகிலுள்ள குளத்தில் குளிக்க வேண்டுமென்ற ஆசை மோகினிக்கு வந்தது. அந்தக் குளம் ஓர் ஒதுக்குப் புறமான இடத்தில் இருந்தது. அந்தக் குளத்தைச் சுற்றி வட்டமாகத் திரை போட்டது போல் மரங்களும் புதர்களும் அடர்ந்து இருந்தன.
அந்தக் குளத்தில் குளிப்பவர்களை வெளியில் இருந்து பார்க்கவே முடியாது. யாரும் அங்கு வருவதும் இல்லை. விடுமுறை நாட்களில் தன்னையும் மறந்து மோகினி அங்கு குளிப்பது வழக்கம். உலகக் கவலைகளையெல்லாம் மறந்து தனிமையில் அந்தக் குளத்தில் மிதப்பாள்.
மணிக்கணக்காக நீந்துவாள். குளத்தில் மிதக்கும் போது தன்னை ஒரு ராணியாகவும், குளத்தை தன்னுடைய ராஜ்யம் போலவும் நினைத்துக் கொண்டு மகிழ்வாள்.
அந்தக் குளம் அவள் விலை கொடுத்து வாங்காத ஒரு சொத்து. யாரும் அங்கு வருவதில்லையாதலால், அது அவளுடைய ஏகபோக உரிமைக்கு உட்பட்டு இருந்தது. மங்கிய வெளிச்சத்தில் குளக்கரைக்கு வந்தாள். மேற்கில் சூரியன் மறைந்து பூமியை இருள் கவ்வும் நேரம். கிழக்கில் முழு நிலவு உதயமாகி இருளை விரட்டும் நேரம், மங்கிய ஒளியில் அக்குளம் ஒரு கனவுக் காட்சி போல் தோன்றியது.
அதைப் பார்க்கப் பார்க்க மோகினிக்கு ஒரு பக்கம் இன்பமும், மறுபுறம் அச்சமும் ஏற்பட்டன. அசையாது கண்ணாடித் தகடு போல் இருந்த குளத்தின் நீர்மட்டத்தை உற்றுப் பார்த்தபடி நின்றாள்.
நீரில் அவள் நிழல், மிகவும் மங்கலாகத் தெரிந்தது. எது போனால் என்ன, எனக்கு அழகு இருக்கிறது என்று நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டாள்.
அப்படியே தனக்குத்தானே சிரித்துக் கொண்டபடி நீரில் குதித்து நீந்த ஆரம்பித்தாள். கண்களை மூடியபடி. உலகத்தை மறந்து நீந்திக் கொண்டே இருந்தாள்.
அவளுக்குப் பொழுது போவதே தெரியவில்லை.
இரவு வந்து அவளைச் சூழ்ந்து கொண்டதையும் உணரவில்லை, இளந் திங்களின் ஒளி அவளது அவயவங்களைப் பன்மடங்கு அழகுபடுத்தியதையும் அறியவில்லை.
குளத்தை அடுத்த புதரில் ஏற்பட்ட சலசலப்பும் அவள் காதுகளில் விழவில்லை! நீரின் குளிர்ச்சி அவள் மேனியை நடுங்க வைத்த பின்பு தான், அவள் எழுந்து வீடு செல்ல வேண்டும் என்று நினைத்தாள்.
நீந்திக் கரை நோக்கி வந்தாள். கரையில் வந்து நீரைத் துடைக்கத் துண்டை எடுத்தபோது, அப்படியே திடுக்கிட்டு நின்றாள்.
ஒரு வினாடிக்குள் சேலையை எடுத்து அவசர அவசரமாகச் சுற்றிக் கொண்டாள். மீண்டும் நோக்கினாள். எதிரே உள்ள மரங்களின் நடுவில் சங்கரன் குட்டி நின்று கொண்டு அவளையே உற்றுப் பார்ப்பதைப் பார்த்தாள்.
அவன் கண்கள் சிவந்து ஒருவித அரக்க வெறியோடு தன் உடலைக் கவனிப்பதை உணர்ந்தாள். இத்தனை ஆண்டுகள் அவனோடு அவள் வாழ்ந்து வளர்ந்து வந்திருந்தாலும், இன்று அவன் அவளைக் கவனித்த விதம், அவனை ஒரு மனிதனாகத் தோற்றுவித்தது. புதிய மோகினிக்கு திக்கென்று பயம் பிடித்துச் கொண்டது. ஷோரனூர் ஆஸ்பத்திரியில் இருந்தவன், இங்கு திடீரென்று எப்படி வந்தான் என்ற கேள்வி எழுந்தது. “குட்டி! நீ ஆஸ்பத்திரியிலே இல்லாம இங்கே ஏன் வந்தே?” என்று கேட்டாள்.
சங்கரன்குட்டி பதில் சொல்லளில்லை. கண்களைக் கொட்டாமல் அவளையே பார்த்தபடி நகர ஆரம்பித்தான்.
அவளை நோக்கி, தூக்கத்தில் நடப்பவன் போல் நடந்து வந்தான். அவன் உதடுகள் துடித்தன. அவன் நெற்றி வியர்த்திருந்தது.
அவன் அவனாக இல்லை. அவன் உடலில் ஏதோ ஒரு புது அரக்க சக்தி புகுந்து அவளை நோக்கி அவனை உந்தி தள்ளுகிறது என்பதை உணர்ந்தாள் மோகினி. அவனுடைய பலம் பொருந்திய கைகள், அவனுடைய ஆஜாபாகுவான உடல் தோற்றம், என்று மில்லாமல் இன்று மோகினிக்கு மிகுந்த பயத்தை விளைவித்தன.
ஒருவிதப் பயங்கரச் சிரிப்புடன் சங்கரன்குட்டி மோகினியை நெருங்கினான். அவனுக்கும் அவளுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது. அதோடு மோகினியின் மனத்தில் பயம் அதிகமாகி கொண்டே வந்தது.
அத்தியாயம்-23
சங்கரன்குட்டி மோகினியின் மனத்தில் இதுவரை பச்சாதாப உணர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருக்கிறான்.
நாராயணி அம்மாள் கட்டளையிட்டால் கூட மறுத்துக் கீழ்ப்படியாதவன், மோகினியின் குரல் கேட்டுக் கீழ்ப்படிவான். ஓங்கி வளர்ந்த திருமேனியாக இருந்தாலும், மோகினியைப் பொறுத்தவரையில் தவறு செய்யும் குழந்தை தந்தையிடம் பயப்படுவது போல்தான் சங்கரன்குட்டியும் பயந்து வந்தான்.
சங்கரன்குட்டியின் சிறுவயதிலேயே அவனுடைய தந்தை இறந்துவிட்டதால் வீட்டில் பொதுவாக உள்ள தந்தையின் நிலை என்ன என்பதே அவனுக்குத் தெரியாமல் இருந்தது. மற்றவர்கள் வீட்டில் தந்தையர்களிடம் குழந்தைகள் பயப்படுவதைக் குட்டி பார்த்திருக்கிறான். அதே போல் அவன் வீட்டில் தந்தையின் அந்தஸ்தை குட்டி மோகினிக்குக் கொடுத்திருந்தான்.
மேலும், மோகினி தானே அந்த வீட்டில் ஆணைப்போல் வெளியே சென்று சம்பாதித்து வந்தவள். சம்பாதிக்கும் நபருக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்ற கருத்தைக் குட்டி எப்படியோ புரிந்துகொண்டு, மோகினியிடம் பயந்து நடந்து வந்தான்.
மோகினியும் ஒரு நிலையில் பயப்படுவாள் என்பது ஒரு நாள் இரவு வேளையில் வஹாப், வண்டியை மறித்து அவளைப் பலாத்காரம் செய்ய முயன்ற போதுதாள், குட்டிக்கு முதன் முதலாகந் தெரிய வந்தது.
அன்றிரவு வஹாபின் பிடியில் திமிறிய யின் படி ஆடைகுலைந்து நிற்கும் மோகினியின் உடலைக் கவனித்த போதுதான், சங்கரன்குட்டியின் இருண்ட மனத்தில் அவனுக்குப் புரியாத ஆண்மை உணர்ச்சி கொழுந்துவிட ஆரம்பித்தது.
அதன் பிறகு அவனுக்கு மோகினியைப் பார்க்கும்போதெல்லாம், அடிக்கடி ஒருவிதக் குழப்பமான கிளர்ச்சி ஏற்பட ஆரம்பித்தது.
மோகினி அவனைக் கவனிக்காத பொழுதெல்லாம், அவன் மறைவாக அவளைக் கவனிக்க ஆரம்பித்தான்.
அவளிடம் இருந்த பயம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. அவள் ஒரு பெண் என்று புரிந்து கொண்டான்.
நடுப்பகலில் கடைவீதிகளில் சுற்றும் போது, அங்குள்ள இளவட்டங்களோடு பேசும்போது, அவர்கள் பேச்சிலிருந்து மோகினியின் அழகைப்பற்றி நன்கு புரிந்துகொண்டான்.
அவர்கள் அவனுக்கு, ஆண் பெண் உறவு பற்றிய சொல்லக்கூடாத விவரங்களையெல்லாம் புரளியாகப் பேசிப் பாடம் கற்பித்தனர்.

பொழுது போகாதவர்களுக்கு வேடிக்கைப் பேச்சாக இருந்த இந்த ஆண் பெண் உறவு பற்றிய பேச்சு, சங்கரன் குட்டிக்கு ஆரம்பப் பாடமாக அமைந்தது.
தனக்குக் கல்யாணம் செய்துவைக்க வேண்டும் என்று தன் தாயை அவன் துன்புறுத்த ஆரம்பித்ததற்குக் காரணம் கடைவீதி நண்பர்களின் தொடர்பு ஏற்பட்டதுதான்.
சங்கரன்குட்டிக்குப் பெண்களைப் பற்றிய அக்கறை ஏற்பட்ட பின்பு தன் வீ ட்டில் பாத்திரங்களை நொறுக்கவும், தோட்டத்துக் காய்கறிகளை வெட்டிப்போடவும் ஆரம்பித்தாள்.
இந்த நிலை ஏற்பட்ட பின்பு தான் அவனை ஷோரனூர் ஆஸ்பத்திரியில் சேர்த்து அவனுக்கு வைத்தியம் பார்க்க ஆரம்பித்தனர்.
பித்தம் தெளியாவிட்டாலும் அவன் பழையபடி அமைதியாக இருந்தால் போதும் என்றுதான் மோகினி அவனுக்கு வைத்தியம் செய்ய ஆரம்பித்தாள்.
அவனுக்குக் கடை வீதி சுற்ற ஆரம்பித்ததால், தகாத உறவுகள் ஏற்பட்டுவிட்டன என்பதை மோகினி உணர்ந்தே இருந்தாள்.
பள்ளியிலிருந்து வீடு திரும்பும்போது பண்பில்லாமல் சில இளைஞர்கள் சங்கரன் குட்டியை அருகில் வைத்துக்கொண்டே அவளைப் பார்த்து ஒருவிதமாகச் சிரிப்பதும், பொருத்தம் இல்லாமல் பேசுவதும் அவளுக்குத் தெரிந்திருந்தது.
நாராயணி அம்மானிடம் சொன்னால் வருத்துவாளென்று மோகினி இந்த விஷயத்தை மூடியே வைத்திருந்தாள்.
இப்போது சங்கரன்குட்டி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவந்ததும், ஓடிவந்த அவன் நேரே வீட்டுக்குச் செல்லாமல் குளத்துக்கு வந்ததும், மோகினிக்கு மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.
அவன் கண்களில் ஒளி வீசிய ஒருவித வெறி அவளுக்கு அச்சத்தையே கொடுத்தது.
அவன் பார்வை பூராவும் அவள் உடலில் நின்றது. அரை குறையாக, அவசரத்தில் சேலையால் சுற்றி மூடப்பட்ட உடலை ஊடுருவிப் பார்ப்பவனாக அவன் நின்றான்.
“குட்டி! வீட்டுக்குப் போ.” என்று தன் பயத்தை வெளியில் காட்டாமல் கட்டளையிட்டாள் மோகினி.
ஆனால் சங்கரன்குட்டி அசையவில்லை. மோகினியின் வார்த்தைகள் சங்கரன் குட்டியின் காதில் விழுந்ததோ! இல்லை.
அவனுடைய ஐம்புலன்களில் கண் என்ற புவனைத்தவிர, மற்ற புலன்கள் தற்காலிகமாக வேலை செய்ய மறுத்தன!
குட்டி பார்த்துக்கொண்டே நின்றான். அவனது மூச்சு, வெகு தூரம் வெகு நேரம் தொடர்ந்து, வண்டி இழுத்த எருதுகளின் மூச்சைப்போல இரைச்சலுடன் இயங்க ஆரம்பித்தது.
அவன் உதடுகள் படபடவென்று துடித்தன.
அவனது பலம் பொருந்திய கைகள் அவள் சேலையைப் பறித்தன.
மோகினி, சட்டென்று கைகளால் உடலைப்’ போர்த்திக் கொண்டுவிட்டாள்.
ஆனாலும் சங்கரன்குட்டி கண் இமைக்கும் நேரத்தில் மோகினியின் கைகளைப் பிரித்தான். தன் இரு கைகளால் அவளது கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
அவனது இரும்புப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள மோகினி திமிறினாள்.
அதன் விளைவாக அவளுடைய கால் இடறியது. மோகினி புல் தரையில் விழுந்தாள். சங்கரன்குட்டியும் அவளருகில் விழுந்தான்.
அவன் கைகள் மோகினியின் கைகளையும் சிலுவையில் அறைவது போல், தரையில் அழுத்திப் பிடித்துக் கொண்டன.
கைகளை அசைக்க முடியாத நிலையில், கால்களால் அவனை எட்டி உதைத்தாள் மோகினி.
அந்த உதை சங்கரன்குட்டியின் வயிற்றில் பலமாக விழவே, அவனுடைய கைகள் தாமாக விலகின.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொண்டு அவளை நெருங்கிய குட்டியின் முகத்தில், மோகினி பலமாகக் குத்தினாள்.
எவ்வளவு முறை குத்தினாள் என்பது மோகினிக்கே தெரியாது.
குட்டியின் உதட்டிலிருந்து ரத்தம் வழிவதைத்தான் உணர்ந்தாள்.
சங்கரன்குட்டியும் உதட்டிலிருந்து சிந்தும் ரத்தத்தைக் கவனித்தான். அவன் கண்களில் மருட்சி தோன்றியது.
அவன் உதடுகள், “ரத்தம்! ரத்தம்!” என்று முணுமுணுத்தன.
தன் கைகளால் உதட்டைத் துடைத்துக்கொண்டான்.
விரல்களில் படிந்த ரத்தக் கறையைப் பார்த்தான்.
மோகினி அவன் மோவாயிலும், தலையிலும் ஓங்கிக் குத்திக்கொண்டே இருந்தாள்.
ரத்தத்தைக் கண்டதும் சங்கரன் குட்டியிடம் ஏற்பட்ட மாறுதலை அவள் உணரவில்லை.
“அடிக்காதே மோகினி! என்னை அடிக்காதே மோகினி!” என்று ஒரு குழந்தை போல் கதறிக்கொண்டே எழுந்தான்.
சில சிறிய ஸ்டேஷன்களில் நிற்காமல் தாண்டிச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிபோல், சங்கரன்குட்டியைச் சில வினடிகள் ஆக்ரமித்த காமம், அவனை விட்டு விலகிச் சென்றது.
வெறி இருந்த இடத்தில் பயம்தான் மிகுந்து இருந்தது.
வழியும் ரத்தத்தையும், மோகினியையும் மாறி மாறிப் பார்த்தான். உடனே வீல் என்று பயத்தில் அலறிய படி, அந்தக் காட்டைவிட்டு ஓட்டம் பிடித்தான்.
மோகினிக்கு ஒன்றுமே புரியவில்லை. அவளைச் குழ்ந்திருந்த ஆபத்து இப்படித் தானாகவே விலகும் என்று அவள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
மெள்ள எழுந்தாள். உடைகள் அணிந்துகொண்டாள்.
குட்டி இப்படி நடந்து கொள்வான் என்ற சற்றும் எதிர்பார்க்கவில்லை மோகினி.
குட்டியா இப்படி நடந்து கொண்டான்? இல்லை. குட்டிக்கும் அப்பாற் பட்ட, குட்டியே புரிந்து கொள்ளாத இயற்கையின் ஒரு சக்தியல்லவா மின்னல் போல் பாய்ந்து அவனை அந்தச் சில வினாடிகளுக்கு ஆட்டிவைத்திருக்கிறது.
அந்த மின்னல் மறைந்ததும், குட்டி பழையபடி குழந்தையாகிவிட்டான்.
ஸ்விட்ச் போட்டவுடன் சாதாரண இரும்புக் கம்பிகளில் மின்சாரம் பாய்வதுபோல்தான், மனிதன் உடலில் காமம், கோபம் என்ற உணர்ச்சி அலைகள் பாய்கின்றனவா? உடலில் அந்த ஸ்விட்சை போடுவது யார்? அதை அணைப்பது யார்?
உலகத்தில் தவறு செய்பவர்கள் எல்லாம், தெரிந்து தவறு செய்கிறார்களா, இல்லை, குட்டியைப்போல் ஏதோ ஒன்றால் உந்தப்பட்டு இயங்குகிறார்களா?.
வீட்டை நோக்கிப் புறப்பட்ட மோகினிக்குப் பயமும், குழப்பமும் ஏற்பட்டன.
‘குளக்கரையில் நடந்ததைப்பற்றி நாராயணியிடம் சொல்வதா? சொல்லாமல் வீடுவதா? குட்டியிடம் இனி எப்படி நடந்து கொள்வது? அவனே எப்படிச் சமாளிப்பது’ என்றெல்லாம் மோகினியின் மனத்தில் சிந்தனை எழுந்தது.
ஒன்றன்பின் ஒன்றகப் பலப் பிரசினைகளைச் சமாளிக்க வேண்டியவளாயிருந்தாள் மோகினி.
முதல் பிரசினை, சம்பாத்தியம்.
இரண்டாவது பிரசினை, சங்கரன் குட்டியின் எதிர்காலம். இந்தச் சிந்தனையினால், வெகுநேரம் தயக்கத்துடன் அந்தக் குளக்கரை அருகிலேயே நின்று கொண்டிருந்தாள்.
காற்றில் சேலையும் உலர்ந்தது. அவள் கேசமும் உலர்ந்தது.
மெள்ள யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.
வீடு நோக்கி நடந்தாள். வீட்டு வாசல் திண்ணையில் சங்கரன்குட்டி படுத்திருந்தான்; நித்திரை செய்வது போல்.
நாராயணி அம்மாளுக்கு அவன் ஆஸ்பத்திரியிலிருந்து ஓடிவந்த விவரம் தெரிந்துவிட்டது என்பதை மோகினி புரிந்து கொண்டாள்.
அடுக்களையில் இருந்தபடியே நாராயணியின் குரல் கேட்டது, “யாரு? மோகினியா?” என்று.
“ஆமாம்மா,” என்று தயக்கத்துடன் பதில் அளித்தாள் மோகினி.
“ஒரு பெண்ணு குளிக்கப்போனால் இவ்வளவு நேரமா? சாப்பாட்டை வைச்சிட்டு எவ்வளவு நேரம் காத்துக் கிட்டிருக்கிறது?” என்று கடுகடுப்பாகச் சொன்னாள் நாராயணி.
இதைக் கேட்டதும் மோகினிக்குச் சங்கடம் நீங்கியது. நாராயணிக்குக் குளக்கரையில் நடந்தது இன்னும் தெரியாது என்பது தெளிவாயிற்று.
மெள்ளச் சமையல் அறையில் போய் இலை முன்னால் உட்கார்ந்தாள். சற்று ஆறி உலர்ந்து போன சோற்றையும், அதற்கு நேர் எதிர்மாறாகப் பூசணித் துண்டங்களை மிளகும் உப்பும் போட்டுத் தயார் செய்து வைத்திருந்த ஒரு விதக் கூட்டையும் பரிமாறினாள் நாராயணி.
மோகினி ஒன்றும் பேசாமல் சாப்பிட்டாள்.
பிறகு சோறும் மோரும் போட்டாள். அதற்கு ஊறுகாயாக எலுமிச்சம்பழம் பிழிந்து உப்பு போட்ட பச்சை மிளகைப் போட்டாள்.
மோகிளி பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.
அப்போது நாராயணி, “குட்டி ஆஸ்பத்திரியிலிருந்து ஓடிவந்துவிட்டான்,” என்று சொல்லி நிறுத்தினாள்.
இயிைலிருந்த சோற்றைப் பார்த்தபடி மோகினி, “தெரியும், திண்ணையில் படுத்திருக்கிறான். பார்த்தேன்,” என்று சொல்லிவிட்டு வேறு ஒன்றும் கூறாமல் மறுபடியும் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
“பச்சை மிளகு ஊறுகாய் என்றால் உனக்குப் பிடிக்குமே! அதைத் தொடாமலே சாப்பிடுகிறாயே, எங்கே மோகினி உன் கவனம்?” என்று நாராயணி கேட்டாள்.
மோகினிக்கு இருந்த மனக் குழப்பத்தில், இலையில் என்ன பரிமாறப் பட்டிருக்கிறது என்று கூடக் கவனிக்க முடியாமல், இயந்திரம் போல் சாப்பிட்டாள்.
சாப்பிட்டு முடிந்ததும் மோகினி வீட்டின் நடுக்கட்டில் படுத்துக் கொண்டாள்.
நாராயணி அம்மாள் சமையல் அறையில் பாத்திரங்களைக் கழுவி எடுத்து வைக்கும் சப்தம் கேட்டது. பிறகு திடீரென்று சிணுங்கும் ஒலி கேட்டது
மோகினி படுக்கையில் படுத்தபடி தூங்காமல் இருந்தாள்.
நாராயணி சமையல் அறைக் கதவை மூடிவிட்டு நடுக்கட்டுக்கு வந்தாள்.
ஒரு பழைய கம்பளியை எடுத்துக் கொண்டு வாசல்புறம் சென்றாள்.
மகனுக்குப் போர்த்திவிட்டு, கதவைத் தாளிட்டுக்கொண்டு திரும்பி வந்து பாயை விரித்துக்கொண்டு படுத்தாள்.
படுத்தவுடன் நாராயணியின் உடல் குலுங்கியது. சத்தமில்லாமல் அழுது கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்த மோகினிக்கு ஓன்றும் விளங்கவில்லை.
படுக்கையை விட்டு எழுந்து நாராயணி அம்மாள் அருகில் போய் உட்கார்ந்தாள். அப்போது தான், நாராயணி அம்மாளின் கிழிந்த ஒட்டுப் போட்ட சேலையைப் பார்த்தாள்.
கடந்த சில வருடங்களாகத் தனக்கென்று ஒரு சேலை கூட வாங்கிக் கொள்ளாது ஓயாமல் உழைத்து வரும் அந்தத் தியாக உருவம் எதை நினைத்து அழவேண்டும் என்று மோகினிக்குப் புரியவில்லை.
மோகினி வேலை போன செய்தியைச் சொன்னபோதுகூட நாராயணி கலங்கவில்லை.
சங்கரன்குட்டி குளக்கரையில் நடந்து கொண்ட முறையைப்பற்றி மோகினி நாராயணியிடம் சொல்லவில்லை.
பின் எதை நினைத்து நாராயணி அழக்கூடும்?
“அம்மா! அம்மா! ஏம்மா அழறீங்க?” என்று நாக்குழறக் கேட்டாள்.
நாராயணி மோகினியை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் விசித்து அழ ஆரம்பித்தாள். “ஏம்மா அழறே! என்னம்மா நடந்தது? சொல்லும்மா,” என்று திரும்பவும் கேட்டாள் மோகினி.
“மோகினி! என்ன நடந்ததுன்னு என்னையே கேட்கறியா அம்மா? மோகினி, நீ ரொம்பப் பெரியவளா விஷயங்களை மூடிவைக்கிற அளவுக்குப் பெரியவளாயிட்டே,” என்று சொல்லி விட்டு, அழுகை நடுவே ஆத்திரத்தோடு மோகினியைப் பார்த்தாள்.
மோகினி என்ன சொல்வது என்று உணராமல் இருந்தாள். “குட்டி எங்கிட்டே எல்லாம் சொல்லிட்டான் மோகினி! நீ குளக்கரைக்குப் போனது, அங்கே நீ குளிச்சிட்டு இருந்தது. உன்னை அவன் கட்டிப் பிடிச்சு உங்கிட்டே கேவலமா நடந்துக்கிட்டது. நீ அவனை அடிச்சது. எல்லாம் எனக்குத் தெரியும். அவன் தான் பைத்தியமாச்சே, செய்யறதையும் செய்துட்டு எல்லாத்தையும் சொல்லவும் சொல்லிட்டான், நீ கெட்டிக்காரி. பெரிய மனுஷி, அவனை மூடி வைக்கிறே,” என்று படபட வென்று சொல்லிக் கொண்டே போனாள்.
“குட்டி வேனும்னு ஒண்ணும் செய்யலேம்மா. அவன் எப்பவும் என் எதிர்லே நின்னு பேசவே பயப்படுவான். இன்னிக்கு மட்டும் ஏன் அப்படி நடந்துக்கிட்டான்னு எனக்கே புரியல்லேம்மா, தப்பு ஒண்ணும் நடந்துடலே, உங்ககிட்டே சொல்லி உங்களுக்கு ஏன் வேதனையைத் தருவானேன்னுதான்…” என்று கூறிறாள் மோகினி.
“நல்லாயிருக்கு. விபரீதமா ஏதாவது நடந்திருந்தா அப்போ என்னடி பண்ணுவே? இத்தனை வருஷம் எனக்கும் குட்டிக்கும் நீ உழைச்சு சம்பாதிச்சுப் போட்டது போதாது? ஆயுசு பூராவும் நீ லீணாகப் போறதை தான் எப்படிப் பொறுப்பேன் மோகினி? என் பிள்ளை தான் உபயோகமில்லாமல் போயிட்டான்ன, என்னைத் தேடி வந்த பெண்ணும் வீணாகப் போகணுமா! நாளைக்கே பாலக்காடோ, எர்ணாகுளமோ போயி ஒரு வேலையைப் பாரு. இனிமே நீ இந்த வீட்டிலே இருக்கிறதே ஆபத்துன்னு தோணுது,” என்று கூறினாள் நாராயணி.
அதற்கு மோகினி, “அம்மா! குட்டி எங்கிட்டேயாவது பயப்படுவான். உங்க கிட்டே அவனுக்குப் பயமே கிடையாது. நீங்க எப்படியம்மா தனியா அவனை வச்சுக்கிட்டு இருக்க முடியும்?” என்றாள்.
“முடியுதோ, முடியல்லியோ என் தலைவிதி. அவனை நான்தான் கட்டி அழுதாகணும், அதற்காக உன் வாழ்வு பாழாகக்கூடாதும்மா. இன்னிக்கு நடந்த மாதிரி இருக்கு, உங்கம்மா எரியும் பஸ் அருகே விழுந்து கிடந்ததும், நீ இடி மழை, மின்னலோட அந்த அர்த்த ராத்திரியிலே என் வீட்டு வாசல் படியிலே நின்னுக்கிட்டு கதவைத் தட்டினதும். மோகினீ! நீ நல்ல இடத்திலே ணந்து சுகமா இருக்கணும்மா, அப்போதான் எனக்கு நல்ல கதி கிடைக்கும். நான் நிம்மதியாச் சாக முடியும்”, என்று நாராயணி சொல்லி விட்டு மோகினியை அணைத்துக் கொண்டு அழுதாள்.
தாயின் இவ்வளவு வேதனைக்குக் காரணமான சங்கரன்ருட்டி நிம்மதியாகக் குறட்டை விட்டபடி திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தான்.
அதே இரவு கோயமுத்தூர் ஆஸ்பத்திரியில் பிரத்தியேகமான அறையில் விஜயா உயிரோடு போராடிக் கொண்டிருந்தாள்.
பிராணவாயு அடைக்கப்பட்ட உருளையிலிருந்து விஜயாவின் நாசிக்கு ரப்பர் குழாய் வழியாகப் பிராண வாயு செலுத்திக் கொண்டிருந்தனர்.
அவள் கையில் உள்ள ரத்தக் குழாய் வழியாக உணவு திரவ ரூபத்தில் சென்று கொண்டிருந்தது.
இவ்வித உருளைகளும் அதில் இருந்து தொடங்கும் ரப்பர்க் குழாய்களும் தாயின் மயங்கிய நிலையும், தந்தையின் சிவந்த கண்கள், கலைந்த தலை, கவலை பிரதிபலிக்கும் முகம் – யாவும் குழந்தை கௌரிக்குப் புதிய அனுபவங்கள்.
பிரம்மாண்டமான ஹாலில் பல பேர் வரிசையாகக் கட்டில்களில் படுத்திருப்பதை கெளரி பார்த்தாள். அதுவே அவளுக்குப் பயமாக இருந்தது.
வெள்ளை உடை அணிந்த நர்ஸுகள், டாக்டர்கள் வந்து போவதும், ஒருவரும் அவளிடம் நின்று பேசாமல் செல்வதும் அவள் மனத்தை உறுத்தியது. அம்மாவுக்கு ஏதோ ஆபத்து என்று மட்டும் புரிந்து கொண்டாள்.
ஆஸ்பத்திரியில் எல்லா டாக்டர்களும் அங்கு கூடிவிட்டனர்.
அப்பாவின் முகத்தைப் பார்க்கவே கௌரிக்குப் பரிதாபமாக இருந்தது.
அவருக்கு தேறுதல் சொல்ல வேண்டும்போல் தோன்றியது.
எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை, மெள்ளத் தந்தையை நெருங்கினாள்.
தந்தை டாக்டரைப் பார்த்து, “எப்படி இருக்கு டாக்டர்?” என்று கேட்டார். அதற்கு டாக்டர், “ஒன்றும் சொல்ல முடியாது. ஷி மஸ்ட் டர்ன் தி கார்னர் எட்,” என்று கூறினார்.
இரண்டு நாட்களாக ஒரு முடிவு தெரியாத அழற்சி ராஜுவுக்கு ஏற்பட்டது.
பெருமூச்சு விட்டான். அவன் மனம் பெரும் சலிப்போடு இருந்தது.
கௌரி தந்தையின் சட்டையை இழுத்தாள்.
ராஜு திரும்பினான்: “அப்பா! இந்த சாக்லெட் சாப்பிடப்பா” என்று சொல்லி, சாக்லெட்டை நீட்டினாள் கௌரி.
குழந்தையின் மனத்தில் அவள் தன் தந்தைக்கு ஆறுதல் சொல்வதாக நினைப்பு.
ஆனால் மனம் உடைந்து போயிருக்கும் தந்தைக்கு அது கோபத்தைத்தான் கொடுத்தது. “கௌரி! நீ சும்மா இருக்கமாட்டே,” என்று கடுகடுப்புடன் சொன்னான்.
தந்தையின் கடுமையான குரல் கேட்டு கௌரி நடுங்கிவிட்டாள்.
எல்லோர் கவனமும் சுட்டிலில் படுத்திருக்கும் விஜயாவின் ஊசலாடும் உயிரின் மீது நின்றது.
அத்தியாயம்-24
ஊசலாடிக் கொண்டிருந்த விஜயாவின் உயிர் இந்த உலகத்தில் தங்குமா, இல்லை வேறு உலகத்துக்குச் சென்றுவிடுமா என்று புரியாமல் இருந்த போது, குழந்தை கௌரியின் உணர்ச்சிகளைப் பற்றிக் கவனிக்க அவகாசம் ஏது?
கௌரிக்கு அங்குள்ளவர்களின் மனம், அந்தச் சூழ்நிலை யாவும் சரியாகப் புரியவில்லை. அங்குள்ளவர்களுக்கும் அவளுடைய குழந்தை மனத்தின் வேதனை தெரியவில்லை. மோகினி டீச்சர் இங்கிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கௌரி நினைத்தாள். அந்த அறையில் நாம் இருப்பதே சரியில்லை என்று நினைத்து, மெள்ள அந்த அறையிலிருந்து நழுவினாள்.
அந்த ஆஸ்பத்திரியின் நீண்ட வராந்தாவில் நடந்து சென்றாள். அது வளைந்து ஓர் இடத்தில் திரும்பியது. கௌரியும் திரும்பினாள். இப்படிப் பல திருப்பங்களைத் தாண்டியதும், கௌரிக்கு ஆஸ்பத்திரியில் எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை. இரவு வேளை, மங்கிய வெளிச்சம். இந்த நிலையில் எல்லா வராந்தாக்களும் ஒரே மாதிரியாக இருந்தன. வராந்தாவை அடுத்த ஹால்களில் ஒரே படுக்கைகளாக இருந்தன. மூலைக்கு மூலை ஒரே முக்கல், முனகல், இருமல் சப்தங்கள்.
அந்தக் கோயமுத்தூர் ஆஸ்பத்திரியில் அம்மா படுத்திருக்கும் அறை எது என்றே கௌரிக்குத் தெரியவில்லை. அங்கும் இங்கும் ஓடினாள். ஓர் அறையினுள் நுழைந்தாள். அங்கு ஒரு தாய் பிரசவ வேதனையில் அலறிக் கொண்டிருந்தாள். அளைனைச் சுற்றிச் சில நர்ஸ்கள் நின்று கொண்டிருந்தனர்.
கௌரி அங்கிருந்து நகர்ந்து வராந்தாவின் மறு கோடிக்கு வந்தாள். திடீரென இறந்துவிட்ட ஒருத்தியைச் சக்கர வண்டியில் வைத்துத் தள்ளிச் சென்று கொண்டிருந்தனர், ஆஸ்பத்திரி ஆட்கள்.
ஆஸ்பத்திரி ஒரு பிரயாண விடுதி அல்லவா? இந்த உலகத்தில் வந்து வாழ நுழையும் ஜீவன்களும், இந்த உலகத்தை விட்டுப் பிரியும் ஜீவன்களும் ஆஸ்பத்திரியில்தானே சந்திக்க வேண்டியிருக்கின்றன! ஒரு மூலையில் பிறப்பு; இன்னொரு மூலையில் சாவு. இரண்டுக்கும் ஒரே ரக மரியாதை காட்டும் ஆஸ்பத்திரி சிப்பந்திகள்!
கௌரி எதையும் புரித்து கொள்ளாமல் ஒருவித புரியாத பயத்தோடு அங்குள்ள படிக்கட்டில் இறங்கினாள். ஆஸ்பத்திரியை அடுத்த திறந்த வெளிக்கு வந்தாள். அங்கு மரங்களிடையே பலவிதக் கார்களும், குதிரை வண்டிகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. விளக்குக் கம்பத்து அடியில் ஒரு சிமென்ட் பெஞ்சு போடப்பட்டிருந்தது. அதில் சாய்ந்தபடி எதிரே உள்ள ஆஸ்பத்திரியைப் பார்த்தாள். அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் தன் தாய் படுத்திருக்கும் அறை எது என்று புரியாமல் உட்கார்ந்திருந்தாள். விளக்கைச் சுற்றி மொய்க்கும் பூச்சிகள் அவள் மீது பறந்து விழுந்தன. அது அவளுக்கு அருவருப்பாய் இருந்தது. விளக்கடியிலிருந்து நகரலாம் என்றால் சுற்றிலும் இருளாக இருந்தது. இருள் பயத்தைக் கொடுத்தது. இருக்கவும் முடியாமல் நகரவும் முடியாமல் தனியே நின்றாள், கௌரிக்கு அழுகை அழுகையாய் வந்தது.
விஜயா படுத்திருக்கும் அறையில் குழந்தை எங்கு சென்றாள் என்பதைப் பற்றி யாரும் சிந்திக்கவில்லை. விஜயாவின் கரத்திலிருந்து இணைக்கப்பட்டிருக்கும் உணவுத் திரவம் ஒரு கண்ணாடி ஜாடியிலிருந்து சொட்டுச் சொட்டென்று விழுந்து கொண்டிருந்தது. அது தீர்ந்ததும் அங்குள்ள நர்ஸ் மாற்றி வேறு ஜாடியை எடுத்துப் பிணைக்கும் போது, விஜயா மெள்ளக் கண் திறந்தாள். அவள் பார்வைக்கு எல்லாம் பனிப்படலம் போல் தெரிந்தது. கண்ணாடி ஜாடிகள், பிராண வாயு சிலின்டர்கள்.. மறுபடியும் கண்களை மூடிக் கொண்டாள்.

அந்த ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் அவளை நெருங்கினார். அவள் கைகளை எடுத்து நாடித் துடிப்பைப் பார்த்தார். அவர் முகத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்தான் ராஜு, எல்லோர் கவனமும் பிரதம டாக்டரின் முகத்தில் லயித்து நின்றது. குதிரைப் பந்தயத்தில் குதிரைகள் பிரிக்க முடியாதபடி ஒரு தொகுப்பாக ஓடி வெற்றிக் கம்பத்தைத் தாண்டிய பின்பு எந்த நம்பர் குதிரை வென்றது என்று தெரியாமல் பணம் கட்டியவர் கூட்டம், ஒரு பலகையை அண்ணந்து பார்த்து நிற்கும். பந்தய மைதான நீதிபதிகள் போட்டோ பார்த்து முடிவு சொல்லச் சில வினாடிகள் பிடிக்கும். அதுவரை சூதாடிகள் உள்ளே சுவாசித்த மூச்சை வெளியே விடாமல் நம்பர் பலகையைப் பார்த்து நிற்பார்கள். அவ்வாறு ராஜுவும் அவன் உறவினர்களும் ஆஸ்பத்திரி பிரதம டாக்டரின் முகத்தைப் பார்த்து முடிவுக்காகக் காத்து நின்றனர்.
டாக்டர் முகம் எந்தவித உணர்ச்சியையும் காட்டாமல் இருந்தது. அவர் பக்கத்திலுள்ள டாக்டரிடம் திரும்பி, “கோரமைன் ப்ளீஸ், சீக்கிரம்!” என்றார்.
அந்த டாக்டர், அறையின் மூலைக்கு ஓடி ஓர் இன்ஜக்ஷன் ஊசியில் ஏதோ மருந்தை நிரப்பிக் கொண்டு வந்தார். ஈதரில் தோய்த்த பஞ்சும், இன்ஜக்ஷன் ஊசியும் சின்ன டாக்டர் கையிலிருந்து பிரதம டாக்டரின் கைக்கு மாறின. அவர் ஊசியை விஜயாவின் கைகளில் பாய்ச்சினார். விஜயா முகம் சுளித்தாள். ஊசியை எடுத்துவிட்டுப் பிரதம டாக்டர் திரும்பினார். ராஜு அவரைப் பார்த்தபடியே நின்றான். அவர் உதடுகளும் ஒன்றும் சொல்லவில்லை. அவர் முகமும் ஒன்றும் சொல்லவில்லை. அவர் அறையின் வெளிப் புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தார், டாக்டரின் மௌனம் எல்லோருடைய மனத்திலும் பீதியைக் கொடுத்தது. டாக்டர் மறுமுறை படுக்கையில் படுத்திருக்கும் விஜயாவைப்பார்த்தார். ஒரு பெருமூச்சு விட்டபடி அறையின் வெளிப்புறம் சென்றார். ராஜு அவரைத் தொடர்ந்து வந்தான், “என்ன டாக்டர்! என்ன டாக்டர்! ” என்றான்.
டாக்டர் தரையைப் பார்த்தபடி, “என்னாலே ஆனதைச் செய்துட்டேன். எனக்கும் ஒண்ணும் புரியல்லே மிஸ்டர் ராஜு” என்று சொல்லும்போதே கட்டிலில் படுத்திருந்த விஜயாவின் உடலில் அசைவு ஏற்பட்டது.
அவள் மெள்ளக் கண்களைத் திறந்தாள், அவள் உதடுகள் மெள்ள அசைந்து அவள் எதையோ சொல்ல முயன்றாள். ராஜுவும், டாக்டரும் அவள் அருகே ஓடினர், டாக்டர் முகத்தில் ஒருவித மலர்ச்சி ஏற்பட்டது. அவர் ஸ்டெதாஸ்கோப்பால் அவள் மார்பைச் சோதித்தார். பிறகு நாடித் துடிப்பையும் பரிசோதித்தார். புன்முறுவலோடு ராஜுவிடம் திரும்பி, “மிஸ்டர் ராஜு! ஷி இஸ் கமிங் ரவுண்ட், இம்முறை பிழைத்துவிட்டாள்,” என்று ராஜுவின் கையைக் குலுக்கினார்.
அந்த அறையில் கூடியிருந்தவர்களுக்கு மனதிலிருந்து பெரும் சுமை அகன்றது போல் இருந்தது. ஆனால் படுக்கையில் படுத்திருந்த விஜயாவுக்கு டாக்டர் சொன்னது எதுவும் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. அவள் கண்கள் ஒரு வினாடி திறந்து மறுபடியும் மூடியபடியே இருந்தன. அவள் முகத்தில் முன்பு ஒரு வெண்திரை படிந்து இருந்தது. அது இப்போது விலகியிருந்தது. அவள் உதடுகள் மென்மையாக, எதையோ உச்சரிக்க முயன்றபடி இருந்தன.
ராஜு மிகக் கனிவோடு, “என்ன விஜயா? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான்.
ராஜு கேட்ட தொனியிலிருந்தும் அவன் ஆர்வத்திலிருந்தும், விஜயா கோயமுத்தூரையே விலைக்கு வாங்கித் தரும்படி கேட்டிருந்தாலும் அவன் தயங்கியிருக்க மாட்டான் என்பது தெரிந்தது. விஜயா கண்களைத் திறந்து, விட்டத்தைப் பார்த்தாள். சுற்றுமுற்றும் பார்த்தாள், நெருங்கிய உறவினர்களின் முகங்களைப் பார்த்தாள். ‘நாம் மலையாளத்துப் பங்களாவில் இல்லை. கோயமுத்தூரில் இருக்கிறோம்’ என்று புரிந்து கொண்டாளோ என்னவோ?
கணவனை அன்போடு பார்த்தபடி, “நாம் எங்கே இருக்கிறோம்?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
”விஜயா! நீ பாத்ரூம்லே மயங்கி விழுந்தவுடனேயே டாக்டரை அழைச்சிக் காண்பித்தேன். அவர் உன்னைக் கோயமுத்தூருக்குக் கொண்டு போகணும்ணு சொல்லிட்டார். இப்போ கோயமுத்தூர் ஆஸ்பத்திரியிலே தான் இருக்கோம்,” என்று ராஜு விளக்கினான்.
அவள் பார்வை அப்படியே ராஜுவின் முகத்தில் லயித்து நின்றது. புன்முறுவல் செய்தபடி, ”உங்க முகம் வாடியிருக்கே! கண் சிவந்திருக்கு! நீங்க தூங்கவே இல்லியா? சாப்பிடக் கூட இல்லியா?” என்று விஜயா வேதனை ததும்பக் கேட்டாள்.
ராஜு ஒன்றும் பதில் சொல்லாமல் இருந்தான்.
டாக்டர், விஜயாவிடம், “என்னம்மா அவர் சாப்பிடறதாவது? இரண்டு நாளா அவர் உங்களை விட்டு நகரவே இல்லை. இவ்வளவு அன்பு வைச்ச புருஷனை நான் பார்த்ததே கிடையாது,” என்று புன்முறுவல் செய்தபடி சொன்னார்.
விஜயாவுக்கு அதைக் கேட்கவே மிகப் பெருமையாக இருந்தது. அவள் மனம் பூரித்தது. அடுத்த நிமிடம் ஏதோ நினைவு வத்தவள் போல் கணவன் பக்கம் திரும்பினாள். “கௌரி எங்கே? அவளைத் தனியா பங்களாவிவே விட்டுட்டு வந்துட்டீங்களா?” என்று கேட்டாள்.
அப்போதுதான் ராஜுவுக்குக் குழந்தையின் நினைவு வந்தது. “இல்லையே, இங்கே கூட்டிட்டுவந்துட்டேனே. இங்கே தானே இருந்தாள்?” என்று அறையில் பார்வையைச் செலுத்தினான் ராஜு.
குழந்தை எங்கே சென்றிருப்பாள் என்ற பீதி அவனுக்கு ஏற்பட்டது. தன் பீதியை வெளியில் காட்டாமல், “இங்கே ரூம்லேதான் இருந்தாள். ஒரு வேளை பாத்குமுக்குப் போயிருப்பா, போய்ப் பார்த்துவிட்டு வர்றேன்”, என்று கூறிவிட்டு, அறையை விட்டு வராந்தாவுக்கு வந்தான். வராந்தாவில் கௌரி இல்லை. வராந்தாவை ஒட்டிய பாத்ரூம்களிலும் அவள் இல்லை, ராஜுவின் மனம் கலவரம் அடைந்தது.
கடந்த இரண்டு நாட்களாகவே எதிர்பாராத அதிர்ச்சிகளுக்கு ஆளாகியிருந்த ராஜுவின் மனம், நரம்புகள் எல்லாம் முறுக்கேறி இருந்தபடியால் அவன் ஏதேதோ நினைக்க ஆரம்பித்தான். மருண்டவன் பார்வையில் இருண்டதெல்லாம் பேய் என்பது போல், பயங்கரமான சிந்தனைகள் ராஜுவின் மனத்தில்’கொத்துக் கொத்தாய் முளைத்து எழுந்தன.
ஒரு வேளை கௌரி ஆஸ்பத்திரியை விட்டு வெளியே நடந்து சென்றிருந்தால்? வைர லோலக், பச்சை நெக்லஸ் அணிந்திருக்கும் அவளை, இருட்டில் யாராவது தூக்கிச் சென்றுவிட்டால்.. அதற்குமேல் அவனால் நினைக்கவே முடியவில்லை, தடதட என்று அவன் படிக்கட்டுகளில் இறங்கி, ‘ஷெவர்லே வேன்’ நிற்கும் இடத்துக்கு வந்தான்.
டிரைவர் மட்டும் முன் சீட்டில் படுத்து நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தான். கௌரியைக் காரிலும் காணவில்லை. ஆஸ்பத்திரியில் அவளுக்கு யாரையும் தெரியாது. இரவு வேளையில் குழந்தை எங்கு துணிச்சலோடு போயிருக்க முடியும்? விஜயாவிடம் போய் என்ன சொல்வது? குழந்தையைக் காணோம் என்று சொன்னால் அவளுடைய பலவீனமான இதயத்துக்கு என்ன நேருமோ? ஆஸ்பத்திரி வராந்தாவில் அங்குமிங்கும் ஓடினான், ஆஸ்பத்திரியின் வெளிப்புறம் வந்தான்.
வெளிப்புறத்தில் ஒரு குதிரை வண்டியில் ஒரு மில் கூலி, அழுகின்ற மனைவியோடும், மயங்கிக் கிடக்கும் குழந்தையோடும் ஏறிக்கொண்டிருந்தான். அந்தக் குழந்தையின் கை கால்கள் மாந்தத்தினால் இழுத்துக் கொண்டிருந்தன. குதிரை வண்டிக்காரன் அவனிடம் வாடகை பேரம் செய்துகொண்டிருந்தான். அந்த மில் கூலி, “வாடகையைப் பத்தி என்ன பேச்சப்பா? ஒழுங்கா வைத்தியம் செய்து என் செல்வத்தை வீட்டுக்கா கொண்டு போறேன்? நேராகக் காட்டுக்குக் கொண்டு போறவன் கிட்டே என்ன பேச்சப்பா பேசறே? நீ கேட்கறதை நான் கொடுக்கறேன்.” என்று கூறினான்.
வண்டிக்காரன் திகைப்படைந்து வாயை மூடிக்கொண்டான. அந்த மில் கூலியின் சுருண்ட தலை மயிர் பறந்து, பஞ்சு படிந்து கிடந்தது, நேராகப் பருத்தி மில்லிலிருந்து வந்தவன் அவன் என்று தெரிந்தது. ராஜு அந்தக் குதிரை வண்டியை நெருங்கினான். நான்கு வயதுப் பெண் குழந்தை ஒரு விதமாக இழுத்தபடி கிடந்தது.
ராஜு ஒரு விநாடிக்குத் தன் மகள் கௌரியை மறந்தான், “என்னப்பா! குழந்தைக்கு இழுத்துக்கிட்டிருக்கு? வைத்தியம் செய்யாமல் போறே?” என்று கேட்டான்.
திரும்பிப் பார்த்த மில் கூலி, ராஜுவிடம், “என் மகள் இறந்து போகணும்ணு நான் நினைப்பேனுங்களா? சின்ன டாக்டர், ஆஸ்பத்திரியிலே இடமில்லே, பெட் இல்லேன்னுட்டாருங்க. எனக்குப் பணம் இருந்தா பெட் கிடைச்சிருக்கும்!” என்று கூறிவிட்டு வண்டியில் ஏறப் போனான்.
ராஜு கண் மூடிப்படி இருந்த குழந்தையைப் பார்த்தான், ஒருவித உணர்ச்சி அவனை உந்தியது. “வாப்பா, உனக்கு பெட் நான் வாங்கித் தர்றேன்,” என்று சொல்லிவிட்டு, தன் நிலையை மறந்தபடி பாய்ந்து வண்டியில் கிடக்கும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு டாக்டரின் அட்மிஷன் அறை நோக்கி நடந்தான்.
பெரிய புள்ளி ஒருவரே சொல்லும் போது, மறுக்க முடியுமா டாக்டரால்? உடனே ஆஸ்பத்திரி வராந்தாவிலே கட்டில் போடச் சொல்லி வைத்தியத்துக்கு ஏற்பாடு செய்தார் டாக்டர். அந்த மில் கூலியின் குழந்தை, இழுப்புக் குறைந்து தூங்கும் வரையில் ராஜு தன் மகள் கௌரியை மறந்திருந்தான்.
குழந்தை பிழைத்துவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதும்தான், மில் கூலி, ராஜுவை முதன் முறையாக நன்கு கவனித்தான். அவன் முகத்தில் மாறுதல் ஏற்பட்டது. “நீங்க. நீங்க.. பெரிய ஐயா மகன் ராஜு இல்லீங்களா?” என்று கேட்டான்.
ராஜு அலட்சியமாக, “ஆமாம்,” என்றான்.
கூலி நெடுஞ்சாண்கிடையாக அவன் காலில் விழுந்தான். “எஜமான்! நான் உங்க கோகிலா மில்லுலே வேலை செய்யற கூலிங்க, நீங்க எஜமான் மட்டுமில்லே, என் மசுளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்த கடவுளுங்க,” என்று அழுதபடி சொன்னான்.
அவனுடைய இளம் மனைவியும் ராஜுவை வணங்கினாள். ராஜுவின் மனத்திற்குள் ஒரே வேதனையாக இருந்தது. மகளைக் காணோமே என்று மனம் குழம்பிப் போயிருந்தபோது, ஏதோ உணர்ச்சி வயப்பட்டுச் செய்த உதவிக்கு என்ன பாராட்டுதல்!
அடுத்த கணமே கெளரி எங்கு போயிருப்பாள் என்ற கவலை அவனைப் பற்றிக்கொள்ளவே. ஆஸ்பத்திரி வராந்தாவிலிருந்து வெளிப்புறம் நோக்கி நகர்ந்தான்.
“டாக்டர்! டாக்டர்!” என்ற குரல் ராஜுவின் காதில் விழுந்தது. ராஜுவுக்கு அந்தக் குரல் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலம் நோக்கி எழுந்த பழகிய குரலாய் இருந்தது. அந்தக் குரல் தொடர்ந்து, “பாவம்! யாரோ ஒரு குழந்தை ஆஸ்பத்திரிக்கு வெளியே சிமென்ட் பெஞ்சிலே அனாதையாப் படுத்துக்கிட்டிருந்தது. நகை நட்டெல்லாம் பார்த்தா பெரிய இடத்துப் பெண்ணாகத் தெரியுது.” என்று சொன்னவுடனே நடந்து கொண்டிருந்த ராஜு நின்றான். திரும்பினாள். பார்த்தான். அப்படியே திகைத்துப் போய் விட்டான்.
அவன் சித்தப்பா குழந்தைச்சாமி, தூங்கும் கௌரியைக் கையில் சுமந்தபடி டாக்டரிடம் நின்று கொண்டிருந்தார்.
“இது ராஜுவின் மகள் கௌரி அல்லவா? இது எப்படி ஆஸ்பத்திரிக்கு வெளியே வந்தது? ஸ்பெஷல் வார்டு ரூம்வே அல்லவா இருக்கணும்?” என்று டாக்டர் அவரைப் பார்த்துக் கேட்டார்.
அதற்குக் குழந்தைச்சாமி, “ராஜு சம்சாரம் விஜயாவுக்கு உடம்பு சரியில்லேன்னு இங்கே ஆஸ்பத்திரியிலே இருக்கிறதா ஒரு சிநேகிதர் சொன்னார். உடனே ஓடி வந்தேன். வெளியிலே இந்தக் குழந்தையைப் பார்த்தேன். தூக்கிட்டு வந்தேன். விஜயா படுத்திருக்கும் ரூம் எங்கே சொல்லுங்க டாக்டர்,” என்று கேட்டார்.
குழந்தைச்சாமி கேள்வியை முடிப்பதற்குள் ராஜு ஓடி வந்தான், “சித்தப்பா! சித்தப்பா!” என்று வார்த்தைகள் தடுமாற அவரையும் அவர் முதுகில் சாய்ந்தபடி தூங்கும் மகளையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றான்.
– தொடரும்…
– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.