மின்னல், மழை, மோகினி






(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 32-33 | அத்தியாயம் 34-35 | அத்தியாயம் 36-37
அத்தியாயம்-34
அந்த இரவில் இருவர் மட்டும் நின்று கொண்டிருந்தனர்.

இனக்கவர்ச்சியின் இன்பத்தை உணர்ந்து அனுபவித்து விட்டு இப்போது அதைத் துறந்து வாழும் பிரம்மச்சாரி அவன். இனக்கவர்ச்சியின் பிறப்பை அப்போதுதான் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்த கன்னி அவள். இருவருக்கும் இயற்கை, வலிமையும் அழகும் நிறைந்த உடலைக் கொடுத்திருந்தது. இருவரும் ஒன்றும் பேசவில்லை. என்ன பேசுவதென்று இருவருக்குப் புரியவில்லை. ராஜுவின் பார்வையில், மோகினியின் பருவத் துடிப்பு அவள் பயத்தோடு சுவாசித்த முறையில் நன்கு தெளிவாகியது. அவன் துடிக்கும் உதடுகள். நடுங்கும் கைவிரல்கள், அவனுடைய வெறித்த பார்வை எல்லாம் சேர்ந்து அவன் மனக்குழப்பத்தைத் தெளிவாக்கின. ரத்த நாளங்களில் வேகமாக ஓடிய இரத்தம், “மனிதா! நீ என்ன படித்தாலும், பயின்றாலும் அடிப்படையில் நீயும் விலங்கு தான்!” என்ற பல்லவியைப் பாடியபடி இருந்தது.
வார்த்தைகள் வெளிவரவில்லை யென்றாலும் ஒருவர் மனத்தில் என்ன எண்ணங்கள் உதிக்கின்றன என்ப மற்றவருக்குப் புரியாமல் இல்லை. நாடி துடிக்க நயனம் பேச நின்றனர் இருவரும்.
முதலில் சுய உணர்வுக்கு வந்தவள் மோகினி தான். சேலை ஒதுங்கியிருப்பதையும் தோள் தெரியத் தான் உட்கார்ந்திருப்பதையும் உணர்ந்தாள் அவள். எஜமான் நின்று கொண்டிருக்கும் போது அவர் முன்னிலையில் தான் பெஞ்சில் உட்கார்ந்திருப்பது சரியல்ல என்பதை அறிந்தாள். உடனே எழுந்து சேலையைச் சரி செய்து கொண்டு தலைகுனிந்து கால்கட்டை விரலால் தரையைக் கீறியபடி நின்றாள்.
அடுத்தபடி என்ன நடக்கும் என்ற ஆவல் ஒரு பக்கம். ஒரு தவறும் நடக்கக்கூடாதே என்ற பயம் மறுபக்கம். தன் மனத்தில் பயம் அதிகமாயிருந்ததா, ஆவல் அதிகமாயிருந்ததா என்று மோகினிக்கே புரியவில்லை.
ராஜு, “மோகினி” என்று கூப்பிட்டான். அப்புறம் பேசாமல் நிறுத்திவிட்டான்.
மோகினி பதில் சொல்லாமல் நின்றாள். மறுபடியும் ராஜு அவளை நெருங்கி வந்தான், “மோகினி” என்று மறுபடியும் கூப்பிட்டான். மோகினி தலையை நிமிராமல் தரையைப் பார்த்தபடி இருந்தாள். ஒவ்வொரு விநாடியும் ராஜு அடுத்தபடி என்ன செய்வானோ என்று எதிர் பார்த்தபடி இருந்தது அவள் மனம்.
“மோகினி, என்னை மன்னித்துவிடு. எனக்கு வேறு வழியில்லை. இம்மாதிரி திருட்டுத்தனமாகத்தான் வந்து உன்னுடன் பேச வேண்டி இருக்கிறது” என்று கூறிவிட்டு அடுத்தபடி சொல்ல வார்த்தைகளைத் தேடினான் ராஜு. மோகினி அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் நெற்றி வியர்த்திருந்தது. அவன் கண்கள் சிவந்து இருந்தன.
“சித்தப்பாவும் நீயும் செய்த இந்தச் சூழ்ச்சி விஜயாவுக்குத் தெரியாது. இனி மேலும் தெரியக் கூடாது. அதனால்… அதனால்…” மேலே அவனால் பேச முடிய வில்லை.
மனத்திலுள்ளதைச் சொல்ல ஏன் இவ்வளவு தயக்கம் என்று ஆத்திரமாக வந்தது மோகினிக்கு. “இப்போது… இப்போது நான் என்ன செய்வது?” என்று கேட்டாள்.
“உன் மேல் எனக்குக் கோபமில்லை மோகினி. உன்னைப் பள்ளியிலிருந்து காரணமில்லாமல் நீக்கியது என் குற்றம். குழந்தை கௌரியிடம் நீ அன்பு வைத்தது தவறு இல்லை, அதற்கு நன்றி செலுத்துவதற்குப் பதிலாக உன்னை வேலை இல்லாமல் செய்துவிட்ட நான் தான் இரக்கமில்லாதவன். என்னை மன்னித்து விடு மோகினி” என்று கெஞ்சிக் கேட்டான் ராஜு.
‘இவர் எதற்கு இவ்வளவு பெரிய பீடிகை போடுகிறார்? இரவு வேளையில் ஒரு பெண்ணிடம் தனிமையில் வந்து பேசுவதற்கு இது அஸ்திவாரமா?’ என்று மோகினி நினைக்க ஆரம்பித்தாள். இந்த நினைப்பு எழுந்ததுமே அவள் மனத்தில் கவர்ச்சி இருந்த இடத்தில் உறுதி எழுந்தது. வார்த்தைகள் பேசாது திடீரென்று அவன் அவளைத் தொட்டிருந்தால் அவளால் குழப்பத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் போயிருக்கும். ராஜுவின் வார்த்தைகள் அவளைச் சூழ்ந்திருந்த மயக்கத்தைக் குறைத்து அவனைச் சாதாரண மனிதனாகக் காட்டியது.
மோகினியின் பார்வையினால், அலை அலையாக எழுந்த அந்தப் புரியாத உணர்ச்சியின் ஓசைகள் அடங்கின.
“சித்தப்பா செய்ததும் சரி. நீ இங்கு கௌரிக்குப் பாடம் சொல்லித் தர வந்ததும் சரி. ஆனால் நான்தான் தவறு செய்தவன்” என்று தயங்கித் தயங்கிச் சொன்னான் ராஜு, அவன் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளாமல் மோகினி அவனை ஆச்சரியத்தோடு பார்த்தாள். ராஜு தொடர்ந்து, “நீதான் ஷோரனூர் பள்ளியில் வேலை பார்த்த மோகினி என்பது மட்டும் எனக்குத் தெரியாமலே இருந்திருந்தால் ஒரு வம்பும் இல்லை. அப்போது இந்த ஏமாற்று நாடகத்தின் ரகசியம் எனக்குத் தெரியாமலே போயிருக்கும். நான் என் மனைவியை ஏமாற்றியிருக்க மாட்டேன். இப்போது உண்மை தெரிந் பின் நான் ஒன்றும் பேசாதிருந்தால் விஜயாவை ஏமாற்றியதுபோல் ஆகாதா, மோகினி?” என்று கேட்டான்.
“ஆரம்பத்திலிருந்தே இது ஏமாற்றம்தான். அதில் உடந்தையாயிருந்ததற்கு நான் வருந்துகிறேன்” என்றாள் மோகினி.
“நீயோ சித்தப்பாவோ உண்மையை மறைத்துப் பெரிய லாபம் அடைந்துவிடவில்லை. இதனால் என் குழந்தை கௌரிக்குத்தான் லாபம். அவள் மனச் சந்துஷ்டியோடு இருக்கிறாள். எனக்கு ஒரு நஷ்டமும் ஏற்பட வில்லை. ஆனால் விஜயாவுக்குத் தெரியாமல் ஒரு விஷயத்தை மூடிவைக்கும்போது அவளுக்கு துரோகி யாகிறேன் நான். இப்போது போய் அவளிடம் உண்மையைச் சொல்வதில் பலனில்லை. நீ வேலையை இழக்கும்படி நேரும், அவ்வளவுதான். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. விஜயாவுக்கு வாழ்வில் எந்த இன்பமும் இல்லை. என் அன்பும் போய்விட்டது என்ற சந்தேகம் அவள் மனத்தில் ஏற்பட்டால் அவள் வாழ்வே வீணாகிவிடும். ஆதலால் இந்தச் சிக்கலிலிருந்து விடுபட நீ தான் ஒருவழி சொல்லவேண்டும். காலைவரை யோசித்து ஒரு முடிவுக்கு வா மோகினி” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு வெளியேறினான்.
மோகினிக்கு முதலில் ஒன்றும் விளங்கவில்லை. ‘இதைச் சொல்லவா இவ்வாறு பயந்து பயந்து உள்ளே திருடனைப்போல் வந்தார்? இல்லை, அறையில் நுழையும் போது வேறு எண்ணத்தோடு இருந்தவர், வந்த பிறகு மனம் மாறிவிட்டாரா? தனக்குத் தெரிந்த ஒரு ரகசியத்தை மனைவிக்குத் தெரியாமல் மூடிவைப்பதே துரோகம் என்று நினைத்து வருந்தும் பண்பு உடையவர். தவறான ஆசையால் உந்தப்பட்டு அறையில் நுழைந்திருப்பாரா?’ என்ற சந்தேகம் எழுந்தது. ‘அவரை எவ்வளவு கேவலமாக எடை போட்டோம்!’ என்று நினைத்து வருந்தினாள். ராஜு அவளிடம் என்ன எதிர்பார்க்கிறார்? ‘வேலையைவிட்டு விலகிக்கொள் என்று மரியாதையாகச் சொல்கிறாரா?’ புரியாமல் தவித்தாள்.
சத்தமில்லாமல் மாடியில் படுக்கைக்கு வந்து படுத்த ராஜுவுக்குத் தூக்கமே வரவில்லை. சிறிது சிறிது தூரத்தில் நிம்மதியாகத் தூங்கும் மனைவியைப் பார்த்தான். அவன் மனச்சாட்சி அவனைத் திருடன் என்று சுட்டியது. அவளை எழுப்பி உண்மையைச் சொன்னால் அவள் அவன்மீதுதான் சந்தேகப்படுவாள். சாந்தினிதான் மோகினி டீச்சர் என்று தெரிந்தால் சாந்தினியை வேலையைவிட்டு நீக்கவேண்டி வரும். குழந்தை கெளரிக்குப் பெரிய ஏமாற்றம் ஏற்படும். சித்தப்பா சாமியாரின் மனம் கசந்துவிடும்…
சாந்தினி வீட்டைவிட்டு வெளியேறுவதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாருகுட்டி அம்மாள் அந்த வீட்டுக்கு வந்துபோனபின் ஏற்பட்ட விளைவுகளைப்பற்றி ஒன்றுமே அறியாமல் இருந்தாள் விஜயா. ஆனால் காலையில் அவள் பலகாரம் சாப்பிடும்போது ராஜுவும் மாடியறையில் ஒரு புத்தகத்தைப் படித்தபடி அவளுடனேயே இருந்தான்.
மோகினி பலகாரத்தை எடுத்துப் பரிமாறியபடி இருந்தாள். அவள் முகத்தில் ஏற்பட்ட சோர்வைக் கவனித்த விஜயா, “என்ன சாந்தினி, முகம் சோர்ந்திருக்கு? ராத்திரி பூராவும் தூங்கவில்லையா?” என்று கேட்டாள்.
மோகினியின் பார்வை அவளையுமறியாமல் ராஜுவின் பக்கம் சென்றது. ராஜுவின் கையில் புத்தகம் இருந்தது. ஆனால் அவன் கண்கள் மூடியபடி இருந்தன. மோகினி அதைக் கவனிக்கும்போதே விஜயாவும் கவனித்து விட்டாள்.
“என்னங்க, என்னங்க!” என்று விஜயா கூப்பிட்டாள். சட்டென்று விழித்துக்கொண்டான் ராஜு. கண்கள் சிவந்து சோர்வோடு காணப்பட்டன.
“என்னங்க, நீங்க பொழுது விடிஞ்சப்புறம் தூங்கி நான் பார்த்ததில்லையே! ஏன், ராத்திரி தூங்கலையா?” என்று விஜயா ராஜுவைக் கேட்டாள்.
ராஜுவின் பார்வை ஒரு விநாடிக்கு மோகினியின் பார்வையைச் சந்தித்தது. “இல்லை, விஜயா! நேற்று ராத்திரி எனக்குச் சரியான தூக்கம் இல்லே. விடிகிற வரையிலே இந்தப் புத்தகத்தைப் படிச்சிட்டிருந்தேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான். அவன் வெளியே செல்லும்போது மோகினி அவனைப் பரிவோடு பார்த்தாள். அந்தப் பார்வையைக் கவனித்த விஜயாவுக்கு குழப்பம் ஏற்பட்டது.
“இந்த வீட்டிலே நான்தான் நாயாளி. தினமும் தூக்க மாத்திரை சாப்பிட்டால்தான் நான் சரியாகத் தூங்கமுடியும். அப்படிப்பட்ட நானே நேத்திக்கு எந்த மாத்திரையும் சாப்பிடாமல் நல்லா தூங்கியிருக்கேன். ஆனால் இந்த வீட்டுலே மத்தவங்கதான் நேத்திக்குத் தூங்கலை போலிருக்கு?” என்று உள்ளர்த்தம் தொனிக்க ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு, மோகினியைக் கவனித்தாள்.
மோகினி எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் காப்பியை டம்ளரில் ஊற்றி விஜயா முன் வைத்து விட்டு, அவள் பலகாரம் சாப்பிட்ட தட்டுக்களை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிச் சென்றாள். சமையல் அறையில் தட்டுகளை வைத்துவிட்டுத் தன் அறைக்கு வந்தாள். பெஞ்சியில் உட்கார்ந்து கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்தாள். ஒரு பொய் சொல்ல, அந்தப் பொய்யை மறைக்கத் தொடர்ந்து பொய்களாகவே கூறிக்கொண்டிருக்கும் படியான நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டதே என்று வருந்தினாள்.
அழுதுகொண்டே நிமிர்ந்து பார்த்தவள் திகைத்தாள். அறையின் வெளிப்புறம் ராஜு நின்று அவள் அழுவதை கவனித்துக் கொண்டிருந்தான்.
“ஏன் மோகினி அழுகிறே? விஜயா ஏதாவது சொன்னாளா?” என்று கேட்டான் ராஜு.
“இந்த வீட்டிலே தன்னைத் தவிர மத்தவங்க தூங்கலை போலிருக்குன்னு சொன்னாங்க. ஒரு தவறும் செய்யாத நாம் இரண்டு பேரும் கூட்டுக் குற்றவாளிங்க போல மறைஞ்சு மறைஞ்சு பேசவேண்டியிருக்கு. இது எனக்குப் பெரிய வேதனையா இருக்கு. எனக்காக நான் வேதனைப்படலே. பண்பும் ஒழுக்கமும் நிறைந்த நீங்கள் கஷ்டப்படறதைப் பார்க்க எனக்கு வேதனையா இருக்கு. நான் இரண்டு நாளிலே வேலையை விட்டு விலகிக்கிறேன். அதுதான் சரியான வழி என்று தோணுது” என்றாள் மோகினி.
“குழந்தை கெளரியின் மனம் வேதனைப்படாதா?”
“அவளுக்கு ஏதாவது ஆறுதல் சொல்லிச் சரிப்படுத்தறேன்…மோகினி என்ற டீச்சர் இந்த வீட்டிலே சாந்தினியாக வந்து இருந்தாள் என்பதே உங்கள் மனைவிக்கு என்றைக்கும் தெரியவேண்டாம்” என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தாள், அன்பும் ஏக்கமும் ராஜுவின் முகத்தில் பிரதிபலித்தன. அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் நகர்ந்து சென்றான்.
அன்று பிற்பகல் கௌரிக்குப் பாடம் சொல்லித் தரும் போது மோகினி, “கௌரி, உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லப் போறேன்” என்று ஆரம்பித்தாள்.
“என்ன விஷயம் டீச்சர்!”
“பொய் சொல்றவங்களுக்கு நிம்மதியே கிடையாது கௌரி! நான் இந்த வீட்டிலே சாந்தினி என்கிற பெயரிலே அடியெடுத்து வைத்த நாள் முதல் எனக்கு அமைதியில்லை கௌரி!”
“அப்படீன்னா நீங்க வீட்டை விட்டுப் போயிடுவீங்களா டீச்சர்?” என்று ஏக்கத்துடன் கேட்டாள் கௌரி.
“விலகிக்கிறதுதான் சரி என்று தோணுது, கௌரி.”
“அம்மாவுக்கு நீங்கதான் மோகினி டீச்சர்னு தெரிஞ்சு போயிட்டுதா?”
“இல்லை, கௌரி. அப்பாவுக்குத் தெரிஞ்சு போயிடுச்சே, அது போதாதா?”
“அப்பாவுக்குத்தான் உங்கமேலே கோபம் இல்லையே! நீங்க ஏன் போகணும்?”
“நான் போறதுதான் உங்க அப்பாவுக்கும் பிடிக்கும்.”
“நேத்திக்கு மில்லுக்குக் காரிலே போறப்போ உங்க மேல் கோபம் இல்லேன்னு அப்பா எங்கிட்ட சொன்னாரே? எங்கிட்டகூட, ‘கௌரி! நீ நல்லா சாப்பிட்டு ஓடி ஆடி விளையாடினால் உங்க டீச்சர் மாதிரி நீயும் அழகானவளாயிடுவே’ அப்படீன்னு சொன்னாரே? அப்பாவுக்கு உங்களைப் பிடிச்சுப் போச்சு, டீச்சர்” என்றாள் கெளரி. இதைக் கேட்டதும் வேதனையின் நடுவே மோகினிக்குச் சிரிப்பும் வந்தது.
”அதில்லே, கௌரி! சொன்னால் உனக்குப் புரியாது. நான் இந்த வீட்டை விட்டு விலகிக்கிறதுதான் சரி.”
“உங்களை விட்டு எப்படி நான் பிரிஞ்சு இருக்கிறது, டீச்சர்?” என்று அழும் குரலில் சொன்னாள் கௌரி.
“என்னை ஏன் பிரிஞ்சிருக்கணும்? ஒவ்வொரு வருஷமும் நீ ஷோரனூருக்கு உங்க பங்களாவுக்கு வா. இரண்டு மாசம் அங்கே பொழுது போக்குக்குத் தங்கியிரு. அப்போ நாம் சந்திக்கலாம்.”
கௌரிக்குக் குழப்பமாயிருந்தது. “அதைப்பத்தி ஏன் டீச்சர் இப்ப பேசணும்? அம்மாகிட்டே நீங்க யாருன்னு நான் சொல்லமாட்டேன். அப்பாவும் சொல்லமாட்டார். நீங்க கவலைப்படாதீங்க, இன்னிக்குச் சாயந்தரம் பட்டம் பறக்க விடலாமா, டீச்சர்” என்று விஷயத்தை மாற்றிப் பேச ஆரம்பித்தாள்.
“உன் இஷ்டப்படியே செய்வோம், கௌரி. காகிதம், நூல் எல்லாம் வாங்கியாச்சு. இனிமேல் பட்டம் தயார் செய்யவேண்டியதுதான் பாக்கி. அதுவும் இன்னம் ஒரு மணி நேரத்திலே தயார் செய்துடறேன் கௌரி” என்று சொல்லிவிட்டுப் பட்டம் செய்வதில் முனைந்திருந்தாள் மோகினி. மாலை ஐந்து மணி சுமாருக்குச் சிவப்பும் வெள்ளையுமாய் கலந்த பட்டம் ஒன்று தயார் செய்தாள் அவள். அதை நூலில் கட்டி அதற்கு ஒரு நீல நிற வால் கட்டிவிட்டு கௌரியிடம் தந்ததும், அவள் அதைப் பறக்க விட்டாள்.
மாடி பால்கனியிலிருந்து விஜயா மகிழ்ச்சியோடு மகள் பட்டம் விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பட்டம் காற்றில் பறப்பது, தானே பறப்பது போன்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது கௌரிக்கு.
உடல் என்ற பளுவைத் துறந்து, தானே காற்றில் பறக்க வேண்டும் என்ற ஆசை, ஒவ்வொரு ஜீவனுக்கும் இயற்கையாக ஏற்படும் உணர்வல்லவா? மனிதன் விஞ்ஞான ரீதியாக விமான மூலம் பறக்கக் சுற்றுக் கொண்ட போதிலும் அவன் சுயமாகவே பூ ஆகர்ஷணச் சக்தியை வென்று வென்று பறப்பது இன்றுவரை முடியாத சாதனையாகவே இருக்கிறது.
அந்த விஷயத்தில் பறவைகள் மனிதனையும்விடச் சாமர்த்தியசாலிகளாகவே இருக்கின்றன. நினைத்தபோது சிறகடித்துப் பறந்து வீட்டின் உச்சியிலே உட்கார முடியும். வானத்தில் பறக்க முடியும். நினைத்த இடத்தில் இறங்கி இளைப்பாற முடியுமே…
இவ்வாறு சிந்தித்தவண்ணம் தன் மகள் பறக்க விட்ட பட்டம் காற்றில் பறப்பதைக் கவனித்தபடி தோட்டத்தில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தான் ராஜு. அந்தப் பறக்கும் பட்டம் போல் தன்னை அழுத்தும் குடும்பச் சூழ்நிலையை விட்டு விடுதலையடைந்து வெளியேற விரும்பினான் போலும்! அப்போது அவனுக்கு சித்தப்பா குழந்தைச்சாமியின் நினைவு வந்தது. பணம், சொத்து, அந்தஸ்து குடும்பம், ஆசைகள் இம்மாதிரியான சுமைகளைத் துறந்துவிட்டதால் அவர் ஒரு பட்டம்போல் நிம்மதியாக உயர்ந்த இடத்தில் உலவி வாழ முடிகிறது
மோகினி, பட்டத்தைக் கௌரியின் கையில் கொடுத்து விட்டு, தன் வேலைகளைக் கவனிக்கலானாள் தாய். பால்கனியிலும் தந்தை தரையிலும் இருந்தபடி பறக்கும் பட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
வேறு ஒரு பட்டம் கௌரியின் பட்டத்தை நோக்கிப் பறந்து வந்தது. அது நீல வர்ணப் பட்டம். சற்றுப் பெரிதாக இருந்தது. அந்த நீல வர்ணப் பட்டம் சிவப்பும் வெள்ளையுமான கௌரியின் பட்டத்தைக் கொத்துவது போல் தொட்டுவிட்டு நகர்ந்தது.
மோகினி தரையில் நின்றபடி இதைக் கவனித்தாள். “கௌரி! உன் பட்டத்தை ஒதுக்கு. இல்லைன்னா அந்த நீலப் பட்டம் உன் பட்டத்தை அறுத்துவிடும்!” என்று எச்சரித்தாள்.
கௌரி கைகளை அசைத்துப் பட்டத்தை வேறு திசைக்குத் திருப்புவதற்காகப் பின்புறம் நகர்ந்தபடி தன் பட்டத்தை நீலப் பட்டத்திடமிருந்து நகர்த்தினாள்.
நகர்ந்து கொண்டே பூமி மட்டத்துக்குமேல் அரை அடி உயரமான கிணற்றின் கைப்பிடிச் சுவர்மீது ஏறினாள்.
எல்லோர் கவனமும் பட்டணத்தில் இருந்தது.
நீல வர்ணப் பட்டம் கௌரியின் பட்டத்தை நெருங்கி வந்தது. ஆனால் கௌரின் பட்டம் நகர்ந்து கொடுத்தது. ஆகாயத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பில் அனைவரின் கவனமும் இருந்தது. கௌரியின் பட்டம் இப்படியும் அப்படியுமாக ஆடித் தப்ப முயன்றது. அவள் கவனமும் பட்டத்தில் இருந்ததால், தான் எங்கு நிற்கிறோம் என்பதைக் கவனிக்கவில்லை. கிணற்றின் கைப்பிடிச் சுவர்மீது நின்றிருந்தாள் அவள். கால்கள் மெள்ள நகர்ந்து கிணற்றை மூடியிருந்த பலகைமீது நின்றன. அடுத்து, பலகை மீது நடக்க ஆரம்பித்தன. பாதிக் கிணறுதான் பலகையால் மூடப்பட்டிருந்தது. மறுபாதி திறந்து கிடந்தது. கெளரியின் கால்கள் பலகையின் விளிம்பில் இருந்தன.
ஏதேச்சையான மோகினியின் பார்வை கெளரியின் மீது திரும்பியது. கௌரியின் ஆபத்தான நிலையை மோகினி உணர்ந்தாள். மோகினியின் நெஞ்சில் மின்னல் போல் பயம் பாய்ந்தது, “கௌரி” என்று அலறியபடி கிணற்றை நோக்கி ஓடினாள்.
அதே சமயத்தில் கௌரியின் கால்கள் நகர்ந்தன. பட்டத்தை நூலால் இழுத்தபடி அவள் கிணற்றுக்குள் மறைந்தாள்.
பால்கனியில் இருந்த விஜயா மின்சாரத்தால் காக்கப் பட்டவள்போல் “கண்ணே, கௌரீ!” என்றலறியபடி அதிர்ச்சியில் தன்னையும் மறந்து சக்கர நாற்காலியிலிருந்து எழுந்தாள்; அலறியபடி ஆடித் தரையில் சாய்ந்தாள். மோகினி கிணற்றினுள் குதித்தாள். ராஜு கிணற்றை நோக்கி ஓடினான்.
இவை எல்லாம் ஒரு வினாடிக்குள் நிகழ்ந்துவிட்டன. கௌரியின் பட்டத்தைக் கிழிக்க வந்த நீலவர்ணப் பட்டம் அமைதியாக இறுமாப்போடு வானத்தில் பறந்த படி அந்த வீட்டுத் திறந்த வெளியில் நடப்பதை வேவு பார்த்தது.
அத்தியாயம்-35
ஒரு வினாடிக்கு ராஜுவுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவன் பார்வையில் கிணற்றின் உட்புறம் செல்லும் இரும்பு ஏணி தென்பட்டது. அதன் வழியாகக் கிணற்று மோட்டாரை ரிப்பேர் செய்யும் மெக்கானிக் உள்ளே சென்று வெளி வருவது வழக்கம். அதன் வழியே கிணற்றினுள் வேகமாக இறங்க ஆரம்பித்தான்.
மலையாளத்தில் இருந்தபோது மோகினிக்கு நீச்சல் பழக்கம் ஏற்படடிருந்தமையால் அவள் கிணற்றினுள் குதித்ததுமே கிணற்றின் அடி தளந்திற்குச் சென்று குழந்தை கௌரியைத் தூக்கிவிட்டாள். மெள்ள முயன்று கௌரியை மேலே கொண்டு வந்தாள். நடுக் கிணற்றில் விழுந்தமையால் கிணற்றின் சுவர்களில் மோதாமல், இரும்பு ஏணியின் சம்பிகளில் உரசாமல் தப்பியிருந்தாள்.
விழுந்த அதிர்ச்சியில் கௌரிக்கு மயக்கம் ஏற்பட்டிருந்தது. தண்ணீர் அவள் மூக்கின் வழியே சென்றிருந்தது. நீர் மட்டத்துக்குக் கௌரியைத் தூக்கி வந்து, மோகினி. ஏணியின் படிகளில் ஏற ஆரம்பிக்கும் போது ராஜு படிகளில் இறங்கி வருவதைப் பார்த்தாள், குழந்தையை ராஜுவிடம் கொடுத்து, “சீக்கிரம் மேலே எடுத்துச் செல்லுங்கள்,'” என்று கட்டளை யிட்டாள்.
ராஜு மறு பேச்சுப் பேசாமல் ஒரு கையில் குழந்தையை உடலோடு அணைத்து மேலே ஏறினான். அவனைப் பின் தொடர்ந்து மோகினியும் மெல்ல ஏணியில் ஏற ஆரம்பித்தாள்.
கிணற்றுக்கு வெளியே வந்ததும் மோகினி குழந்தையை ராஜுவிடமிருந்து வாங்கிக் கொண்டு வீட்டின் உட்புறம் ஹாலுக்கு ஓடினாள். குழந்தையைத் தரையில் கிடத்தி முதல் சிகிச்சை செய்து கௌரியின் மூக்கினுள் சென்றிருந்த நீரை வெளிப்படுத்தினாள்.
சுற்றிச் சூழ்ந்திருந்த வேலைக்காரர்கள் திகைத்திருந்தனர். ராஜுவுக்கு ஒன்றும் புரியாமல் வேலைக்காரர் களோடு நின்றிருந்தான். மோகினி முதன் முதலாகச் சுயஉணர்வுக்கு வந்து ராஜுவிடம், “குழந்தைக்கு
பயமில்லை. குழந்தை கிணற்றிலே விழும்போது விஜயா அம்மா மாடி பால்கனியில் இருந்தாங்க. அவுங்களை போய்க் கவனியுங்க,” என்று உத்தவுவிட்டாள்.
அப்போதுதான் ராஜுவுக்கு விஜயாவின் ஞாபகம் ஏற்பட்டது. விஜயாவுக்கு ஏற்கெனவே பலவீனமா இருதயம் என்பது தெரிந்த விஷயமல்லவா! ராஜு மாடிப்புறம் நோக்கி ஓடினான்.
மோகினி எதிரே நின்று கொண்டிருந்த சமையல்காரனிடம், ஹார்லிக்ஸ், ஓவல்டின் ஏதாவுது இருந்தால் கொண்டு வாப்பா என்று உத்தரவிட்டாள்.
மாடிப்படிகளில் கிடந்த விஜயாவை தூக்கி ராஜு வந்து படுக்கையில் வைத்தான். அவள் கால்கள் ஜில்லிட்டு இருந்தன. சுவாசம் லேசாக வந்துப் போய்க் கொண்டிருந்தது. பரபரப்புடன் போனை எடுத்து டாக்டருக்கு போன் செய்தான்.
சில வினாடிகளில் டாக்டரும் வீடு வந்து சேர்ந்தார். மாடியில் படுத்திருந்த விஜயாவின் இருதயத்தை வலுப்படுத்தும் இன்ஜெக்ஷன் ஒன்று கொடுத்தார்.
விஜயா மெல்லக் கண் விழித்துப் பார்த்தாள். பார்த்ததும். “கௌரி… என் கௌரி” என்று படபடப்புடன் பேச ஆரம்பித்தாள்.
ராஜு, “கௌரி பிழைத்துவிட்டான் விஜயா, கௌரிக்குப் பயமில்லை,” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறையின் கதவு திறந்தது. அதன் வழியே மோகினி குழந்தையைத் தூக்கி கொண்டு நுழைந்தாள்.
கௌரியின் கண்கள் திறந்து இருந்தன. அதிர்ச்சி பூராவும் தெளியவில்லையாகையால் கௌரி ஒரு வித மயக்கத்தோடு திடீரென்று தூக்கத்தில் எழுப்பிய குழந்தை போல் காணப்பட்டாள். கெளரியை மோகினியிடமிருந்து வாங்கி மார்போடு அணைத்துக் கொண்டாள் விஜயா.
மோகினி டாக்டரிடம், “அம்மாவுக்கு எப்படீங்க இருக்கு?” என்று கேட்டாள்.
விஜயா நன்றியோடு மோகினியைப் பார்த்தாள்.
டாக்டர், “அதிர்ச்சி இருதயத்துக்கு ஆபத்து ஏற்படுத்தியிருக்கிறது. விஜயா, நீ மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எந்த விதமான உணர்ச்சிக்கும் வசப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும்” என்று சொன்னர்.
அப்போது விஜயா கேலியாகப் புன்னகை செய்தாள். படுத்திருந்தப்படியே தன் கால்களை நகர்த்தினாள். கால்களை மெள்ள நகர்த்தியபடி எழுந்து உட்கார்ந்தாள்.
டாக்டர். “நீங்க ஸ்ட்ரெயின் பண்ணிக்கொள்ளக் கூடாது,” என்று எச்சரித்தார்.
அந்த எச்சரிக்கையைச் சிறிதும் கவனியாமலே, “டாக்டர் சார், பாருங்கள் என் கால்களை. என்னால் அசைக்க முடிகிறது. கௌரியின் பிரசவத்திலிருந்து இவைகளை என்னால் நகர்த்தக் கூட முடியாது. பாருங்கள். விரல்களை ஆட்ட முடிகிறது. கௌரி கிணற்றில் விழுந்த போது என்னையுமறியாமல் நாற்காலிருந்து எழுந்து நின்றுவிட்டுத்தான் மயக்கமடைந்தேன்.
டாக்டரும் ராஜுவும் மகிழ்ச்சியோடு விஜயாவைப் பார்த்தனர்.
டாக்டர் ஆச்சரியத்துடன், “குழந்தை கிணற்றில் விழுந்துவிட்டாளா?” என்று கேட்டார்.
அப்போதுதான் தடந்தது பூராவும் டாக்டருக்குத் தெரியாது என்பதை உணர்ந்தார்கள் அனைவரும். விஜயாவைப் பற்றியிருந்த கவலையில் டாக்டரிடம் யாரும் விஷயத்தைச் சொல்ல வில்லை.
ராஜு விஷயத்தை விளக்கியதும் டாக்டர். “இந்த அதிர்ச்சிதான் விஜயாவுக்குக் கால்களை இயக்கும் சக்தியைக் கொடுத்திருக்கிறது. ஆனால் இருதயத்தை அது தாக்கி, பலவீனப் படுத்தியிருக்கிறது. ஒன்றைக் கொடுத்து மற்றென்றைக் கெடுத்திருக்கிறது.” என்று சொன்னார்.
விஜயா “என் கௌரி பிறந்த போது கால்களை இழந்தேன். அவள் செத்து மறுபடி பிழைத்து என் கால்களைக் கொடுத்துவிட்டாள்,” என்று கௌரியை அணைத்துக் கொண்டே மோகினியைச் கவனித்தாள். ஈரப் புடவை ரவிக்கை உடலோடு ஒட்டியபடி நீர் சொட்டும் தலையோடு நிற்கும் மோகினியைக் கவனித்தாள். ஒரு சகோதரியின் பரிவோடு, “டாக்டர்! அவள்தான் என் குழந்தை கிணற்றில் விழுந்ததும், தன் உயிரை மதிக்காமல் கிணற்றில் குதித்தவள். தாயும் தந்தையும் கௌரிக்குச் செய்ய முடியாததைச் செய்தவள். சாந்தினி எவ்வளவு நேரமாய் ஈரப் புடவையோடு நிற்க முடியும்? போய் உடை மாத்திட்டு வாம்மா” என்று முதன் முறையாகச் மோகினியை அன்போடு அழைத்தாள்.
மோகினி அறையைவிட்டு அப்புறம். சென்றாள். மாற்று உடை அணிந்து மோகினி மாடியறையில் நுழைந்ததும் கௌரிக்கு மயக்கம் பூராவும் தெளிந்திருந்தது. “டீச்சர்!” என்று ஓடி வந்து மோகினியை அணைத்துக் கொண்டாள்.
“டீச்சர், நன்றி டீச்சர்.” என்று சொல்லியபடி அழுதாள்.
விஜயா, “நீ உயிரோடு இருக்கறதுக்கே காரணம் உன் டீச்சர். டீச்சர் காலைத் தொட்டு வணங்கு கெளரி,” என்று கட்டளையிட்டாள்.
குழந்தை கௌரியும் டீச்சர் காலைத் தொட்டு வணங்கி எழுந்தாள். விஜயாவின் பார்வையில் இப்போது மோகினியிடம் பொறாமை இல்லை; வெறுப்பு இல்லை, அன்புதான் இருந்தது. விஜயா, “சாந்தினி! நீ சாப்பிட்டாகி விட்டதா?” என்று கேட்டாள்.
மோகினி, ”இல்லையம்மா. இனி மேல்தான் சாப்பிட வேண்டும்,” என்றாள்.
“நீ ஒன்றும் தனியாகச் சமையலறையில் சாப்பிட வேண்டாம். இன்று, என்னோடு நீ சாப்பிடலாம்,” என்று சொன்னாள்.
அன்றிரவு மோகினி, ராஜு, விஜயா மூவரும் மாடியிலேயே சாப்பிட்டனர். ராஜு சாப்பிடும் போது தலை குளித்தபடியே இருந்தான். அவன் அவர்கள் இருவரும் பேசுவதில் கலந்து கொள்ளவே இல்லை. விஜயா, “சாந்தினி, உனக்கு உறவினர்கள் யாருமே இல்லையா?” என்று கேட்டாள்.
”குழந்தைப் பருவத்திலே அம்மா இறந்துவிட்டாள். தந்தையும் இறந்து விட்டார். எனக்கு உறவு என்று சொல்லிக் கொள்ள நாராயணி அம்மாள் என்ற ஒரு விதவையும் அவர்களுக்குப் பிறந்த சங்கரன் குட்டி என்ற ஒரு மகனும்தான் இருக்கிறார்கள்” என்றாள் மோகினி.
“எங்களை மறந்துவிட்டாயே! நாங்கள் இருவரும் என்றும் உனக்கு உறவினர்களாக இருப்போம்,” என்று சொல்லி கணவன் ராஜு வைப் பார்த்தாள் விஜயா.
“ரொம்ப நன்றியம்மா!”
“அந்தச் சங்கரன் குட்டி என்ன உத்தியோகத்தில் இருக்கிறான்? அவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டதா?”
“சங்கரன் குட்டிக்குப் புத்தி சரி யில்லை. அவன் இப்போது சாமியாரோடுதான் இருக்கிறான்,” என்ற உண்மையைச் சொன்னாள் மோகினி.
விஜயாவின் கேள்விகள் மோகினி ஷோரனூரில் பார்த்த பழைய உத்தியோகத்தைத் தொடவில்லை. அதனால் மோகினி விஜயாவிடம் பொய் சொல்லும்படியான தேவை ஏற்படவில்லை.
சாப்பிட்டு முடிந்ததும், மோகினி படுக்க அவள் அறைக்குச் சென்றாள். அப்போது ராஜுவும் எதேச்சையாக மோகினியைப் பின் தொடர்ந்தான்.
ஹாலுக்கு வந்ததும் ராஜு, “மோகினி! காலம் தாழ்த்தி நான் நன்றி சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு,” என்றான்.
“எனக்கு நீங்கள் நன்றி. கூடச் சொல்லவேண்டுமா? கௌரி என் உயிர் போல் அல்லலா? அவளைக் காப்பாற்றுவதற்கு நன்றி கூடத் தேவையா?”
ராஜு பேசாமல் இருந்தான். மோகினி ராஜுவை ஒரு முறை பார்த்தாள். “கவலைப்படாதீர்கள். சீக்கிரமே நான் இந்த வீட்டை விட்டுப் போய்விடுகிறேன். நான் ஆரம்பித்த சூது நாடகத்தின் முடிவுக் காட்சி, நல்லவேளை கண்ணியமாக முடிந்து விட்டது. நான் நல்ல பெயரோடு இந்த வீட்டை விட்டு விலகிக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.” என்று சொல்லிவிட்டு மோகினி அவள் அறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.
மறுநாள் காலை விஜயாவிடம் வேலையை விட்டு விலகிக் கொள்வது பற்றிப் பேச வேண்டும் என்று நினைத்தாள். இப்போது விஜயாவுக்கு இருக்கும் அன்பு நிலையில் அவள் அதைத் தடுப்பாள். எப்படியாவது சாமர்த்தியமாகப் பேசி அவளை ஒப்புக்கொள்ளச் செய்து விலகிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தாள்.
மறுநாள் காலை மோகினி மாடிக்குச் சென்றதும் விஜயா, “சாந்தினி, அந்த இரும்புப் பெட்டியைத் திற” என்று சொல்லி, சாவியை அவள் கையில் கொடுத்தாள்.

மோகினி நடுக்கத்தோடு மெள்ளச் சென்று இரும்புப் பெட்டியைத் திறந்தாள். அதிலிருந்து ஒரு நகைப் பெட்டியை எடுக்கச் சொன்னாள். பிறகு பக்கத்திலுள்ள பிரோவிலிருந்து விலையுயர்ந்த புடவை, அதற்குப் பொருத்தமான ஒரு ஜாக்கெட் இரண்டையும் எடுக்கச் செய்தாள். புடவை நீல நிறம். ஜாக்கெட் நல்ல வெண்பட்டு, அதில் நடுநடுவே சிவப்புப் பூக்கள் போடப்பட்டிருந்தன. நகைப் பெட்டியிலிருந்து ஒரு ஐதை வைரக் கம்மலை எடுத்து வைத்தாள்.
பிறகு, “சாந்தினி, நீ குளித்துவிட்டு வா,” என்று உத்தரவு பிறப்பித்தாள்.
மோகினி ஊமை போல் பதில் சொல்லாமல் குளித்துவிட்டு வந்தாள். விஜயா, “சாந்தினி, அடுத்த அறையில் சென்று இந்தப் புடவை ஜாக்கெட் நகை எல்லாம் அணிந்துகொண்டு வா” என்றாள்.
“என்னம்மா சொல்றீங்க! நான் இந்தப் புடவை நகை எல்லாம் அணிந்து கொள்ளவா?” என்று அச்சத்தோடு கேட்டாள் மோகினி.
விஜயாவின் கண்கள் கலங்கியிருந்தன, “சாந்தினி! நீ நல்ல புடவை, நகை அணிந்திருக்கும்போது எப்படி இருக்கிறாய் என்று பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது. நான் சொல்றபடி செய்,” என்றாள்.
மோகினி ஒன்றும் பதில் சொல்லாமல் அடுத்த அறைக்குச் சென்று நகையணிந்து வந்தாள். அவனைப் பார்த்ததும் விஜயா அப்படியே. அயர்ந்துவிட்டாள். நீலநிறப் புடவையில் தந்தச் சிலைபோல் நெற்றியில் குங்குமம் துலங்க வந்து நின்ற மோகினியைப் பார்த்து விஜயா, “சாந்தினி. நீ ராணி போல இருக்கே. அருகே வா”, என்றாள்.
மோகினி பயந்தபடி அருகே வந்தாள். அன்போடு அவனை ஒரு முறை பார்த்துவிட்டு, “நீ எனக்குச் சகோதரியாகப் பிறந்திருந்தால் எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும்!” என்றாள்.
அதே நிமிஷத்தில் அறைக் கதவு திறந்தது. ராஜு உள்ளே நுழைந்தான். அவன் ஏதோ பிரயாணத்துக் தயாரானவன் போல் சில்க் ஜிப்பாவும் ஜரிகை அங்கவஸ்திரமும் அணிந்திருந்தான். பட்டும் வைரமும் மின்ன நிற்கும் மோகினியைப் பார்த்ததும் அவன் மனம் படபடத்தது. தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு தரையைப் பார்த்தான்.
அவனோடு வந்த கௌரி, டீச்சரைப் பார்த்துவிட்டு, “அம்மா, டீச்சர் எவ்வளவு அழகா இருக்காங்க பார்த்தியாம்மா?” என்று தன்னையும் அறியாமல் சொன்னாள்.
விஜயாவின் அன்பு திடீரென்று வெறுப்பாக எப்போது மாறுமோ என்று பயந்தபடி நின்றாள் மோகினி.
ராஜு, “விஜயா! நானும் கௌரியும் உடுமலைப்பேட்டை கல்யாணத்துக்குப் போயிட்டு வர்றோம்”, என்றான்.
விஜயா, “நீங்க ரெண்டு பேர் மட்டும் போக வேண்டாம். சாந்தினியும் வரட்டும். அவள் கௌரியைக் கவனித்துக் கொள்வாள்” என்றாள்.
ராஜு தயங்கினான். “அப்படீன்னா சாந்தினியும் கௌரியும் போயிட்டு வரட்டும். நான் எதுக்குப் போகணும்?”
“இல்லை. இல்லை. எங்கப்பாவின் சகோதரன் மகள் கல்யாணத்துக்கு நான் போகவில்லையென்றாலும் நீங்களாவது போக வேண்டாமா? அப்படியே பழனிக்கும் போயிட்டு வாங்க. குழந்தை உயிர் பிழைச்சதுக்கு முருகனுக்குக் காணிக்கை செலுத்த வேண்டாமா?”
“நான் போயிட்டா உங்களுக்கு மருந்து கொடுக்க, சாப்பாடு கொடுக்க…” என்று சொல்லி மோகினி நிறுத்தினாள்.
“நீதான் இரவிற்குள் வந்துடப் போறியே? அதுவரையில் சமையல்காரன் கவனிச்சுக்குவான்”.
இந்த அளவுக்குத் திடுமென்று விஜயாவுக்கு ஏற்பட்ட மனப்போக்கு ராஜுவுக்குப் புரியலில்லை.
மோகினி கௌரியோடு அறையை விட்டுச் சென்றாள். அவள் போனதும் விஜயா ராஜுவிடம், “என்ன குழம்பிப் போயிருக்கிங்க? எனக்குப் பெரிய உண்மை தெரிஞ்சது. தன் உயிரை மதிக்காமல் என் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற திணற்றில் குதித்த ஒரு பெண் எந்த விதத் தப்பும் செய்யமாட்டா. அவளை வெறும் வேலைக்காரியா மட்டும் நினைக்கறது சரியில்லேன்னு தோணுது. உங்க சித்தப்பா நம்ம வீட்டுக்கு உண்மையிலேயே சிறந்த உத்தமி யைத்தான் அழைச்சிட்டு வந்திருக்கார். அவளைக் கார்லே அழைச்சிட்டுப் போறது கேவலம்ணு நினைக்கிறீங்களா?” என்று கேட்டாள்.
ராஜுவால் ஒரு பதிலும் சொல்ல முடியவில்லை. “உன் இஷ்டம் விஜயா,” என்று சொல்லிவிட்டு அறையைவிட்டு நகர்ந்தான்.
– தொடரும்…
– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.