மின்னல், மழை, மோகினி






(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 30-31 | அத்தியாயம் 32-33 | அத்தியாயம் 34-35
அத்தியாயம்-32

ராஜு புத்தகம் படிக்கத் தன் அருதில் வைத்திருந்த டேபிள் விளக்கின் மங்கிய ஒளியில் மோகினி அணிந்திருந்த சந்தனக் கலர்ச் சேலை உடம்போடு ஒட்டி உடம்பு நிறமாகவே இருந்தது. ராஜுவின் பார்வையில் அவள் சந்தனப் பாவை போலத் தோன்றினாள்.
ராஜு அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்த விஜயா, “என்ன அவளையே முறைச்சுப் பார்க்கறீங்க?” என்று கேட்டாள்.
இந்த வார்த்தைகள் அறையைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்த மோகினியின் காதில் விழுந்தன.
வெளியே சென்று நின்றாள்.
“விஜயா, சாத்தினியை உனக்குப் பிடிக்கவில்லை யானால் போகச் சொல்லி விடு. பொருத்தமில்லாமல் ஏதாவது பேசாதே.” என்று கோபமாகக் கண்டித்தான் ராஜு.
“எனக்குப் பிடிக்கல்லேன்னா போகச் சொல்விடுன்னு சொல்றீங்களே. அப்போ உங்களுக்கு அவளைப் பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க,” என்று பதில் சொன்னாள் விஜயா.
ராஜு அதற்குப் பதில் சொல்ல வில்லை.
“ஏன் பேசாமல் இருக்கிங்க? பதில் சொல்லுங்க,” என்று தொடர்ந்து கேட்டாள்.
“விஜயா, உன் சந்தேகம் அர்த்தமில்லாத ஒரு சந்தேகம், அத்தப் பெண் அழகாக இருப்பது, அவள் குற்றமுமல்ல, அது என் குற்றமும் இல்லை.”
“காலில்லாமல் தொண்டியாகக் கிடக்கிறேனே. அதுதான் என் குற்றம்.”
“அவள் இருப்பதனால் உனக்கு வேதனை ஏற்படுகிறதே என்றுதான் சொல்கிறேன். அவளை அனுப்பிவிடுவோம். அவளுக்குத் தேவையான பணம் கொடுத்து வேண்டுமானால் அனுப்பி விடுவோம். அவளால் நமக்குள் ஏன் சச்சரவு ஏற்பட வேண்டும்?” என்று தணிவாகச் சொன்னான் ராஜு.
படிக்கட்டருகில் நின்று ராஜுவின் வார்த்தைகளைச் கேட்டுக் கொண்டிருந்த மோகினிக்கு அவை பெரும் வேதனையைத் தந்தன. ‘கூசாமல் அவளை அனுப்பி விடுவோம்’ என்று சொல்கிறாரே. என்னைப் பற்றி அவருக்கு அக்கறையே இல்லையா?’ என்று நினைத்து வருந்தினாள். வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுவார்களோ என்று பயந்தாள்.
ஆனால் அடுத்த வினாடியே விஜயா சொன்ன வார்த்தை அவளுக்கு ஆறுதல் அளித்தது. “அவளை ஏன் இங்கிருந்து அனுப்ப வேண்டும்? அவ்வளவு அழகானவள் இந்த வீட்டில் இருக்கும் போது தானே உங்கள் உறுதியைப் பரிசோதிக்க முடியும்? உங்களுக்கு என் மீதுள்ள அன்பு உண்மையானதா என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது? அதற்காகவாவது அவள் இந்த வீட்டில் இருக்கட்டும்”, என்று கடுமையாகச் சொன்னாள். ராஜுவுக்கு இந்தப் பதில் ஆத்திரத்தைக் கொடுத்தது.
“விஜயா, அன்பை இழக்க ஒரே வழி என்ன தெரியுமா? அதை தொடர்ந்து பரிசோதிப்பது தான். இத்தனை வருஷங்களில் உனக்கு என் அன்பைப் பற்றிப் புரியவில்லை என்றால் உனக்கு இனிமேலா நம்பிக்கை வரப்போகிறது?” என்று மனம் கசந்தபடி கூறிவிட்டு எழுந்து அடுத்த அறைக்குச் சென்றான்.
இந்த விபரீத உரையாடலைக் கேட்ட மோகினிக்கு, பெண்கள் இப்படியும் இருப்பார்களா என்று ஆச்சரியமாக இருந்தது.
கீழே இறங்கிச் சென்று கௌரியை மாடி அறைக்குக் கொண்டு வந்து தாயிடம் ஒப்பித்தாள் மோகினி. தன் அறைக்குத் திரும்பி வந்து படுத்தவளுக்குத் தூக்கமே வரவில்லை. இந்தப் பொய் வாழ்க்கையை எப்படியாவது முடித்து விட்டு அந்த வீட்டைவிட்டு விலகிச் சென்றாள் போதுமென்று தோன்றியது.
அந்த வீட்டில் நுழைந்தபோது செல்வத்தின் பளபளப்பு அவள் கண்ணைப் பறித்தது. ஆனால் அந்தப் பளபளப்பின் அடியில் முட்கள் – சூர்மையான முட்கள் – இருப்பதை உணர்ந்தாள். லட்சக்கணக்கில் சம்பாதனையுள்ள வீட்டில் உள்ளே மூன்றே ஜீவன்கள், அந்த எப்படி அமைதி இழந்து நிற்கிறார்கள் என்பதை நினைக்கவும் அவளுக்கு விசித்திரமாயிருந்தது.
பணம் ஒன்றால் மட்டும் இன்பம் அடையமுடியாது என்பது விஜயா- ராஜு விஷயத்தில் தெரிந்தது.
மறு நாள் காலை எழுந்தவுடனேயே அவளுக்கு ஒரு சோதனை காத்திருந்தது. விஜயாவுக்குச் சிற்றுண்டி எடுத்துச் சென்றபோது ராஜு டெலிபோனில் யாரிடமோ கோபமாகப் பேசிக் கொண்டிருந்தான். “உடனே போலீஸாருக்கு ரிப்போர்ட் செய்து அந்த சின்னய்யனை அரஸ்ட் செய்யுங்கள்”, என்று உத்தரவு பிறப்பித்தான்.
விஜயா, “யார் அந்த சின்னய்யன்? அவன் என்ன தவறு செய்தான்?” என்று கேட்டாள்.
“அந்த சின்னய்யன் முன்பு நமது மில்லில் உதவி மானேஜராக இருந்தான். திடீரென்று நான்கு மாதங்களுக்கு முன்பு நடத்தை சரியில்லையென்று அவனை நிறுத்திவிட்டோம். நல்ல தொகை போனஸாக கொடுத்துத் தான் நிறுத்தினேன். அந்த நன்றி கெட்டவன் என்னுடைய லெட்டர் பேப்பரில் பொய்க் கடிதம் எழுதி என்னைப்போல் என் பெயரில் நடித்து பம்பாய் கவீகத்தா ஸேட்டுகளிடமிருந்து முப்பதினாயிரம் வரையில் அட்வான்ஸாகப் பெற்றுக் கொண்டு செலவழித்திருக்கிறான். பொய்க் கடிதம் எழுதுவது, பொய்ப் பெயரில் உலாவுவது, இந்த விஷயமெல்லாம் எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலில்லை விஜயா,” என்று கூறினான்.
“யோக்கியதை தெரியாமல் ஆசாமிகளை வேலைக்கு வைத்துக்கொள்ளதன் தொந்தரவு இது. அவனை ஏன் முதன் முதலாக மில்லில் சேர்த்தீர்கள்?” என்று கேட்டாள் விஜயா.
“என்ன செய்வது விஜயா? சித்தப்பா சிபாரிசின் பேரில் அப்பா சாவதற்கு ஒரு மாதம் முன்புதான் அவனைச் சேர்த்தார். அவன் ஷோரனூர் மடத்தில் சித்தப்பாவுக்கு உதவியாக இருந்தவன். அவன் இப்படி நடந்து கொள்வான் என்று எப்படி நினைக்க முடியும்?” என்று ராஜு பதிலுரைத்தான்.
“சித்தப்பா சிபரரிசு செய்த ஆளா? பின்னே எப்படி இருப்பான்?” என்று விஜயா சொன்னவள், சிற்றுண்டியை டேபிள்மீது வைத்துக் கொண்டிருக்கும். மோகினியின்மீது பார்வை செலுத்தினாள்.
பிறகு திடீரென்று. “என்னம்மா சாத்தினி, நீயும் சித்தப்பா, சிபாரிசில் வந்தவள். உனக்கும் சாத்தினி என்ற பெயரைத் தவிர வேறு பெயர் உண்டோ?” என்று புரளியாக விசாரித்தாள்.
விஜயா கேலியாகக் கேட்டாலும், அந்தக் கேள்வியில் இருந்த உண்மையை நினைத்து மோகினி நடுங்கிவிட்டாள்.
ராஜு உடனே குறுக்கிட்டு, “விஜயா, சின்னய்யன் தவறுக்கு, சித்தப்பா என்ன செய்வார்? ஷோரனூர் மடத்தில் இருந்த போது அவன் நல்லவனாகவேதான் இருந்தானாம். கோயமுத்தூர் வாழ்க்கைதான் அவனைக் கெடுத்திருக்கிறது. சித்தப்பா ல்லவர். அவர் எல்லாரிடமும் நல்லதையே பார்க்கிறார்.” என்றான்.
மோகினி மாடி அறையிலிருந்து சத்தமில்லாமல் நகர்ந்தாள். இந்த வேதனை நாடகத்தில் புனைப்பெயர் தாங்கி நடிக்கும் வேலையை நம் தலைமீது சுமத்திவிட்டுச் சென்று விட்டாரே சாமியார் என்று மனம் வருந்தினாள்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுத் தானே தீரவேண்டும்? அவள் பெயர் சாந்தினி அல்ல, மோகினி என்று தெரிந்துவிட்டால் அப்புறம் எவ்வளவு கேவலம்? உண்மையைச் சொல்லி விடலாம் என்றால் சாமியாரையும் சம்பந்தப்படுத்தி ஆகவேண்டும். அடுத்த முறை அவர் வந்தால்அவரிடம் சொல்லி விடவேண்டும். ‘போதும் இந்த நாடகம். நான் வேறு எங்காவது நிம்மதியாக வேலைசெய்ய விரும்புகிறேன்’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.
கௌரி காலையில் குளித்துவிட்டு பாடத்துக்காகக் காத்திருந்தாள். அவள் முகத்தைப் பார்த்ததும் மோகினிக்கு ஒரு தெளிவு ஏற்பட்டது.
“என்ன டீச்சர், ஒரு மாதிரியா இருக்கீங்க?” என்று கேட்டாள் கெளரி.
மோகினி, “இல்லை கௌரி நான் சாந்தினி என்கிற பெயரிலே இங்கே வாழறது எனக்குப் பிடிக்கல்லே. உங்கம்மாவுக்கு உண்மை தெரிஞ்சா என் நிலை என்னாகும்? உங்கப்பா என்னைப் பற்றி என்ன நினைப்பார்?” என்றாள்.
“அம்மா என்ன நினைப்பா என்கிறதைப் பற்றித்தான் கவலைப்படணும், அப்பாளைப் பற்றிக் கவலைப்படாதீங்க டீச்சர். அவருக்குத் தெரிஞ்சாலும் ஒண்ணும் செய்யமாட்டார்!”
“எனக்கென்னமோ உங்கம்மா கோபப்படறதுகூட அவ்வளவு பெரிசாத் தெரியல்லே. உங்கப்பா என்னைக் கொஞ்சம் தப்பா நினைச்சாக்கூட என்னாலே பொறுக்க முடியாது கௌரி.”

“ஏன் டீச்சர் நீங்கள் அப்பா நினைக்கிறதைப் பத்திக் கவலைப்படறீங்க? நீங்க என்ன நினைக்கிறீங்க என்கிறதைப் பத்தி அவர் கவலைப்படறாரா?” என்று கேட்டாள்.
கௌரியின் மறு கேள்விக்குப் பதில் சொல்ல முடியவில்லை மோகினியால். உடனே பாடத்தைத் தொடங்கி நடத்த ஆரம்பித்தாள். பாடத்தை நடத்தும் போது உள்ள சுவாரசியத்தில் மோகினி ஓரளவு தன் உள்ளத்து வேதனைகளை மறந்தாள்.
பூமி, சுக்கிரன், செவ்வாய். சனி, போன்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் விந்தையை மோகினி குழந்தைக்குப் படம் போட்டு விளக்கினாள்.
“இல்லை கௌரி. ஒவ்வொரு கிரகமும் திட்டமான தூரத்திலேயேதான் சென்று கொண்டிருக்கும். இந்த மாதிரி கிரகங்கள் செல்வதன் காரணம் ஓர் ஆதர்ஷண சக்தி. பூமியினுடைய ஆகர்ஷணசக்தி தான், எந்தப் பொருளை பூமியிலிருந்து வீசி எறிந்தாலும் அதை மறுபடியும் பூமிக்குக் கொண்டு வருகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வருவதும் ஒரு விதக் கவர்ச்சிதான். புவனமே ஒரு காந்த வலை,” என்று விளக்கினாள்.
கெளரி ஒரு விநாடி யோசித்தபடி இருந்தாள். பிறகு திடீரென்று சிரித்தாள், “டீச்சர், அப்பா, அம்மாவைச் சுத்தி வர்ரார். நாள் அவுங்க ரெண்டு பேரையும். சுத்தி வர்ரேன். என்னைச். சுத்தி நீங்க. சக்கர நாற்காலியைச் சுத்தி அம்மா. இந்த வீடும் ஒரு காந்த வலைதானே டீச்சர்?”
“ஆமாம், எல்லாருமே ஒரு காந்த அலைக்குள்ளே மாட்டிட்டுத்தான் இருக்கோம் கௌரி.” என்று சொல்லிச் சிரித்தாள்.
“ஏன் டீச்சர், இந்தக் கிரகங்கள் எல்லாம் ஒன்றேடு ஒன்று ஒருநாள் மோதிடாதா!”
மோகினியின் பார்வை கதவுப் பக்கம் சென்றது. மோகினி திகைத்து விட்டாள். அவள் கொஞ்சமும் எதிர் பார்க்காத உருவத்தை அங்கு பார்த்தாள், மோகினியில் பாடம் அப்படியே நின்றுவிட்டது.
பாடம் சொல்லிக் கொண்டிருந்த டீச்சர், எதையோ பார்த்துவிட்டுப் பேச்சிழந்து விட்டதைக் கண்ட கௌரியும் கதவுப்புறம் திரும்பி நோக்கினாள்.
கதவருகில் பாருக்குட்டி அம்மாள் நின்று கொண்டிருந்தாள். வேலையிலிருந்து தன்னை நீக்கிய அந்தப் பாருக்குட்டி அம்மாள் கோயம்புத்தூருக்கு வருவாள் என்று கொஞ்சமும் எண்ணிப் பார்க்க வில்லை மோகினி. மோகினிக்கு இருந்த ஆச்சரியத்தைவிட, பாருக்குட்டி அம்மாளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சிதான் அதிக மாயிருந்தது.
தனக்கு மிகவும் பிடித்த டீச்சரை, உடனே பள்ளியிலிருந்து விலகும்படி சொன்னதே ராஜுதான். பள்ளி போஷகர் உத்தரவை மீறமுடியாதே என்று அழாத குறையாகத்தான் பாருக்குட்டி அம்மாள் மோகினியைப் பள்ளியிலிருந்து விலக்கினாள்.
‘மிகவும் திறமையுள்ள மோகினியைக் குற்றம் கூறிப் பள்ளியிலிருந்து விலக்கச் சொல்லிவிட்டு, அவளையே தன் வீட்டில் வைத்து இப்போது குழந்தைக்குப் பாடம் சொல்லச் செய்திருக்கிறாரே ராஜு? இதற்கு என்ன அர்த்தம்?’ என்று புரியாமல் திகைத்தாள்.
“மோகினி, இப்போ இங்கேயா வேலை செய்கிறாய்?”
“ஆமாம். இப்போ இந்த வீட்டிலே தான் வேலை செய்யறேன்”, என்று சொல்லிவிட்டு வணக்கம் தெரிவித்தாள் மோகினி. அதே வினாடி ராஜு மாடியிலிருந்து இறக்கி ஹால் நோக்கி வந்தவன் பாருக்குட்டி அம்மாள் நிற்பதைப் பார்த்ததும், “வாங்க ஹெட் மிஸ்ட்ரஸ்… ஏது இவ்வளவு தூரம்? ஏதாவது பள்ளி விஷயமா வந்தீர்களா?” என்று கேட்டான்.
“ஆமாம். பள்ளி விஷயமா டி.ஈ.ஓ ஆபீஸிலே கொஞ்சம் வேலையிருந்தது. அத்துடன், பள்ளிக்கு ஒரு புது ஹால் தேவைப்படுகிறது. அரசாங்கம் பாதிச் செலவுக்கு ஒப்புக் கொள்கிறர்கள். நீங்கள் பாதிச் செலவை ஏற்றுக் கொண்டால் அடுத்து மாசமே ஹாலைக்கட்டி முடித்துவிடலாம். இப்போ நிறையக் குழந்தைகள் படிக்கிறார்கள். இடம் போதவில்லை….”
“எவ்வளவு தொகை தேவைப்படும்?” என்று ராஜு பாருக்குட்டி அம்மாளைக் கேட்டான். அவன் பார்வை பயந்து நிற்கும் மோகினியின் மீது விழுந்தது.
“நீங்கள் இருபதினாயிரம் கொடுத்தால் போதும்.”
“இவ்வளவுதானே? ஆடிட்டரை ஒரு வார்த்தை கேட்டுவிட்டு உடனே செக் அனுப்பிவிடுகிறேன்,” என்று சொன்னான்.
ராஜு தொடர்ந்து, “கௌரியை இப்போது ஸ்கூலுக்கு அனுப்பாமல், வீட்டிலேயே டீச்சர் போட்டுச் சொல்லித் தருகிறேன்,.’
“மோகினிக்கும் கௌரிக்கும் பள்ளிக் கூடத்திலே இருக்கிற போதே ரொம்ப பிடிச்சுப் போயிருந்தது. மோகினி ரொம்ப நல்லவ. ஏதோ ஒரு மனசிலே நீங்கள் அவளை வேலையை விட்டுப் போகச் சொன்னாலும் மறுபடியும் அவளையே டீச்சராகப் பொறுக்கினது பாராட்ட வேண்டியதுதான். உங்க சித்தப்பா பாடம் சொல்லித் தந்து வளர்ந்த பெண். உங்க பெண்ணுக்கு டீச்சராகிறது ரொம்பப் பொருத்தமே,” என்று சொல்லி நிறுத்தினாள்.
“நீங்க யாரைப்பற்றிச் சொல்கிறீர்கள்?’ என்று ஒன்றும் புரியாமல் கேட்டான் ராஜு.
“இதோ, எதிரே நிற்கிறாளே மோகினி, அவளைத்தான் சொல்கிறேன். இவள் குழந்தைச்சாமியார் வளர்த்து ஆளாக்கினவள் தானே?” என்றாள் பாருக்குட்டி.
தந்தையின் குழப்பத்தையும் மோகினியின் பீதியையும் பார்த்த கெளரிக்குப் பயம் ஏற்பட்டது.
எப்படியாவது மோகினியைக் காப்பாற்ற வேண்டுமென்று தோன்றியது. உடனே தந்தையிடம் ஓடினாள்.
“அப்பா, பெரிய டீச்சர் மோகினி டீச்சரோடு பேசிக் கொண்டிருக்கட்டும். நான் உங்களுக்கு எல்லாம் சொல்கிறேன்,” என்று கூறி அப்பாவின் கையைப் பிடித்து இழுத்தாள், ராஜு தலைகுனிந்து நிற்கும் மோகினியைத் திரும்பிப் பார்த்தபடி, குழந்தை கௌரி இழுக்க ஹாலுக்குச் சென்றான்.
அத்தியாயம்-33
ராஜு அங்கிருந்து நகர்ந்ததும் மோகினியின் மனத்தில், ஓரளவு சுமை குறைந்தது. ஆனால் பூராவும் நிம்மதி ஏற்படவில்லை.
பாருக்குட்டி அம்மாளிடம் உண்மையைச் சொல்லி விடுவதுதான் சரி என்று நினைத்தாள். “அம்மா! நான் இந்த வீட்டில் சாந்தினி என்ற பெயரில் இருக்கிறேன். அவர்களுக்கு நான்தான் மோகினி டீச்சர் என்பது தெரியாது,” என்ற உண்மையைக் கூறினாள்.
பாருக்குட்டி அம்மாளுக்குப் புரியவில்லை, “என்ன மோகினி, மாறு பெயரில் இங்கு இருக்கிறாயா? இது… இது… ஏமாத்துற மாதிரி ஆகாது?” என்று கண்களைக் கொட்டியபடி ஆச்சரியத்துடன் கேட்டாள்.
“ஆமாம். தப்புத்தான். ஆனால் சாமிதான் என்னை இங்கே அழைச்சு வந்து, இந்த வேலையில் அமர்த்தினார். சாந்தினி என்கிற மாறு பெயரும் அவர் தான் எனக்குக் கொடுத்தார். இந்தச் சூதில் என்னை ஏன் பங்காளி ஆக்கினார் என்று எனக்கே புரியவில்லை. ஆரம்பத்திலேயே தெரியும், இது ஒரு நாள் வெளியாகிவிடும் என்று”, என்று கூறினாள். பாருக்குட்டி அம்மாளுக்குக் குழந்தைச்சாமிதான் மோகினியை மாறு பெயரில் அழைத்து வந்து வேலை வாங்கிக் கொடுத்தார் என்பதைக் கேட்க, ஆச்சரியம் அதிகமாயிற்று. மோகினி பொய் சொல்கிறாள், அவள் செய்த தவறுக்குக் குழந்தைச்சாமியின் பெயரைப் பக்க பலமாக உபயோகப் படுத்துகிறாள் என்று நினைத்திருப்பாள். ஆனால் இருபது நாட்களுக்கு முன்பு குழந்தைச்சாமி ஷோரனூர் வந்த போது சொன்ன வார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன. “மோகினியை ஒரு நல்ல இடத்தில் அமர்த்தி விட்டேன். அவள் உலகமறியாக் குழந்தையாக இருக்கிறாள். அவள் இன்னும் ஒரு வருஷத்துக்குள் உலகத்தைப் புரிந்து கொள்வாள். அம்மாதிரியான ஒரு குழ்நிலையில் அவளுக்கு வேலை பார்த்து வைத்திருக்கிறேன். அதன் உண்மையைப் பூராவும் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.” என்று அவர் சொன்னார்.
இந்த நாடகத்தில் குழந்தைச்சாமிக்கு உள்ள பங்கைப் பற்றிச் சந்தேகம் ஏற்படவில்லை. சூதுவாதில்லாத பெண் என்று நினைத்த மோசினி, பொய்யே தெரியாதவர் என்று நம்பிய சாமியார் – இருவரும் சேர்ந்து அவருடைய அண்ணன் மகள் வீட்டிலேயே நாடகத்தை நடத்த வேண்டுமா? குழந்தைச்சாமி மோகினிக்கு வேறு இடத்தில் வேலை வாங்கித் தர முடியாதா இல்லை, ராஜுவிடம். ‘மோகினியை மறுபடியும் பள்ளியில் சேர்த்து கொள்,’ என்று சொல்லியிருந்தால் ராஜு மறுத்திருப்பாரா? உலகத்தை ஒரே சீரான அமைப்பாகப் பார்த்து வந்த பாருக்குட்டி அம்மாளுக்கு இந்த விஷயம் குழப்பத்தைக் கொடுத்தது. ஆனால் குழந்தைச்சாமி கெட்ட நோக்கத்தோடு எதையும் செய்யமாட்டார் என்பது பாருக்குட்டி அம்மாளுக்கு, தெரியும். அவர் செய்தது எதுவாயினும் அதுவே சரி என்று நினைத்துப் பின்பற்றுவதே பொருத்தமானது என்பதை உணர்ந்தாள்.
ராஜுவுக்கும் அவள் மனைவிக்கு தெரியாத ஓர் உண்மை நம்முடைய பேச்சால் வெளியாகிவிட்டதே, ஒரு வேளை ராஜு இந்த உண்மையை தெரிந்த நிலையில் மோகினியை வேலையிலிருந்து நிறுத்திவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் ஏற்பட்டது. “மோகினி! என் பேச்சால் நீ யார் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டேன். எனக்கு ஒரே வேதனையாயிருக்கு. முதலாளி உன்னை வேலையைவிட்டு நீக்கிட்டா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டு நிறுத்தினாள்.
“என்னை வேலையிலிருந்து நீக்கினா பெரிய நிம்மதியாய் இருக்குமே.! முன்னூறு ரூபாய் பணத்துக்காகத் தினமும் பொய்யான வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கு. என் விஷயம் இருக்கட்டும். ஊரிலே நாராயணி அம்மாவும் சங்கரன்குட்டியும் நல்லா இருக்காங்களா?” என்று மோகினி விசாரித்தாள்.
“அவுங்களுக்குக்கூட நீ பங்களா நாயக்கர் வீட்டிலே இருக்கிறதாகத் தெரியாது போலிருக்கு. போன வாரம் நாராயணி அம்மாளைப் பார்த்தேன். நீ கோயமுத்தூரிலே இருக்கிறதாகவும், எந்து இடத்திலேங்கிறது தெரியாதுன்னும் சொன்னாங்க. சங்கரன்குட்டி குழந்தைச்சாமியோடு மதுரைக்குப் போயிருக்கிறதாகக் கேள்விப்பட்டேன்…” என்று பாருக்குட்டி ஷோரனூர் பற்றிய விஷயங்களைக் கூறிக் கொண்டிருக்கும்போது ராஜு அங்கு வந்தான்.
பாருக்குட்டி அம்மாளிடம் பேசிக் கொண்டே பங்களா வாசலுக்குச் சென்றான், ராஜு ஒருமுறைகூட மோகினியின் பக்கம் திரும்பவில்லை. பள்ளித் தலைவியை அவனுடைய காரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு அனுப்பிவிட்டு, நேராக மாடிக்குச் சென்றுவிட்டான்.
பள்ளித் தலைவியும் ராஜுவும் என்ன பேசினார்கள் என்பது மோகினிக்குத் தெரியவே இல்லை. ராஜு மாடிக்குச் சென்ற பின் மோகினி கௌரியைத் தனியே அழைத்துப் போய் மெள்ள விசாரித்தாள். “அப்பா என்ன சொன்னார் கௌரி?”
“டீச்சர்! நீங்கதாள் மோகினி டீச்சர்னு தெரிஞ்சா, அப்பா உங்களைத் விரட்டிடுவாரோன்னு எனக்குப் பயமாப் போயிடுச்சு. அது தான் அவரைத் தனியா அழைச்சிட்டுப் போய் உண்மையைச் சொல்லிட்டேன்.”
”என்ன சொன்னே கௌரி?”
“அப்பா! என்னாலே மோகினி டீச்சரைப் பிரிஞ்சு இருக்க முடியல்லே. நான் தான் தாத்தாவிடம் சொல்லி மோகினி டீச்சரை அழைச்சிட்டு வரச் சொன்னேன். டீச்சர் ஒரு தப்பும் செய்யல்லே. அவுங்களைத் திட்டாதீங்கன்னு சொல்லிட்டேன்.”
“அதுக்கு உங்கப்பா என்ன சொன்னார்?”.
“அப்பா கொஞ்ச நேரத்துக்கு ஒண்ணும் சொல்லலே. பேசாம இருந்தாரு, அப்புறம் என்னைப் பார்த்துச் சிரிச்சாரு. நான் லபக்குன்னு அப்பாவுக்கு முத்தம் கொடுத்தேன்,”
“உங்கப்பா என்னைப்பத்தி ஒன்றுமே சொல்லலியா?”
“உங்களைப்பத்தி ஒண்ணும் சொல்லே டீச்சர். ஆனா அப்பா ஒண்ணு சொன்னாரு, கௌரி! இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிய வேண்டாம்ணு சொன்னாரு,” என்று கூறிவிட்டுக் கௌரி சிரித்தபடி மாடிப்புறம் சென்றாள்.
‘விஷயம் அம்மாவுக்குத் தெரிய வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்? இனிமேல் அவரும் இந்த நாடகத்துக்கு உடந்தையாகப் போகிறாரா? என்ன நோக்கத்தோடு அவரும் விஷயத்தை முடி வைக்க விரும்புகிறார்? ஒரு பெண் ஆடவன் பார்வையில் தப்புச் செய்கிறவள் போல் ஆகிவிட்டால் அப்புறம் அவளுக்குத் தன்மானம் இல்லாமல் போய் விடுகிறது, அவளை எந்த வழிக்கு வேண்டுமானாலும் இழுக்கலாம் அல்லவா?’ இம்மாதிரி எண்ணங்கள் தொடர்ந்து மோகினியின் மனத்தில் எழுந்ததும், மோகினிக்கு ராஜுவின் மேல் கோபமே வந்தது.
ராஜு தன்னிடம் வந்து, “மோகினி! நீ ஒரு கபட வேஷக்காரி. இன்றே விலகிக் கொள்.” என்று சொல்லியிருந்தால், அவள் ராஜுவைப் பாராட்டி இருப்பாள். அப்போது அவளுக்கு வேலை மட்டும்தான் போயிருக்கும். மனத்தில் அவள் ராஜுவைப் பற்றி வரைந்திருந்த ஒரு லட்சிய புருஷன் என்ற உருவம் மறைந்திருக்காது. வேலை போனாலும் பரவாயில்லை. ராஜு தனியான சிறப்புடையவர் அல்ல என்ற எண்ணம் தோன்றும்படி அவர் நடக்காமல் இருந்தால் போதும் என்று நினைத்தாள்.
அன்று சாப்பிடும் அறையில் ராஜு வுக்கு உணவு பரிமாறும் போது, ராஜு ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவன் நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

மாலைச் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டு மோகினி மாடி அறைக்குச் சென்றாள். கணவனும் மனைவியும் இருந்தனர். இருவர் முன்னிலையிலும் மோகினி பலகாரங்களை வைத்தாள். விஜயா எதேச்சையாக ராஜுவிடம் ஷோரனூர் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேச்சுக் கொடுத்தாள்.
“உங்க சித்தப்பாவுக்காக எவ்வளவு தான் கொடுக்கிறதுன்னு அளவு கிடையாதா? ஷோரனூர் பள்ளிக்கூடத்துக்காக எதுக்கு இருபதினாயிரம் ரூபாய் அழணும்?” என்று விஜயா கேட்டாள்.
ராஜுவின் முகம் சிவந்தது. “இதைப் பற்றி அப்புறம் பேசுவோம் விஜயா” என்றான்.
“ஏன், சாந்தினி இருக்காளேன்னு சொல்றீங்களா? அவள் உங்க சித்தப்பா கொண்டு வந்து வச்ச ஆள்தானே! அவள் முன்னாலேயே பேசுவோம். அவள் வேணும்னா அவரிடம் போய்ச் சொல்லட்டும்,” என்று விஜயா கூறினாள்.
ராஜு பதிலே சொல்லவில்லை. சிற்றுண்டி சாப்பிட்டபின் ராஜு கிழே இறங்கி வந்தான். அப்போது கீழ் ஹாலில் யாரும் இல்லை. மோகினி மட்டும் நின்று கொண்டு இருந்தாள், இப்போதாவது ஏதாவது சொல்வான் என்று எதிர்பார்த்தாள். ராஜு ஒன்றும் சொல்லவில்லை, ஒரு முறை அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையின் அர்த்தம் புரியவில்லை. வெளியே சென்றுவிட்டான்.
அப்புறம் ஒவ்வொரு மணிக் காலத்தைக் கழிப்பதும் மோகினிக்குப் பெரிய வேதனையாக இருந்தது. அதை மறக்கக் கெளரியோடு காலத்தைப் போக்கினாள். கெளரிக்குத் தன் தாயை ஏமாற்றுவதில் தப்பு இருப்பதாகத் தெரியவில்லை. அவள் தோட்டத்துத் திறந்த வெளியில் நின்றபடி பட்டம் விடுபவர்களைப் பார்த்து மகிழ்ந்தாள். “டீச்சர்! எனக்குப் பட்டம் விடணும் போல் ஆசையாயிருக்கு,” என்று கௌரி கேட்டாள்.
மோகினி சமையல்காரனை அனுப்பி, காகிதம், நூல்கண்டுகள் முதலியன வாங்கி வரச் செய்தாள். அன்று மாலை நேரம் முடியும் தருணம் ஆகிவிடவே கௌரிக்குப் பட்டம் செய்து தர முடியவில்லை. மறுநாள் மாலை கௌரி பட்டம் விடலாம் என்று சொல்லி, அவளைத் திருப்தி செய்து வைத்தாள்.
இரவு எட்டு மணி சுமாருக்கு ராஜு திரும்பி வந்தான். வீட்டினுள் நுழையும் போது, மோகினி சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு படிக்கட்டில் அடி எடுத்து வைத்தாள். ராஜு, “மோகினி!” என்று அழைத்ததும் விர்ரென்று திரும்பிப் பார்த்தாள்.
ராஜு அவளை நோக்கியபடியே இருந்தான். ராஜுவின் பார்வை மோகினியின் உடலை ஊடுருவிச் சென்றது. அவளுக்குச் சிலிப்பு ஏற்பட்டது. இது தான் ராஜு முதல் முறையாக அவளை, “மோகினி” என்று அழைத்தது.
தொடர்ந்து ஒன்றும் பேசாமல் அவளையே பார்த்தபடி இருந்தான். மோகினியும் ராஜு என்ன சொல்லப் போகிறான் என்று காத்துக் கொண்டிருந்தாள். ராஜு ஒரு முறை கனைத்துக் கொண்டான். கம்மிய குரலில், “மோகினி! இன்று நீ எனக்குச் சாப்பாடு பரிமாற வேண்டாம். சமையல் காரனைப் பரிமாறச் சொல்”, என்றவன், விருட்டென்று இடதுபுறமுள்ள அறைக்குள் சென்றுவிட்டான்.
ராஜுவுக்கு ஓவல்டின் கொண்டு வருவது, அவனுக்கு உணவு பரிமாறுவது போன்ற பணிகளில் அலாதி இன்பத்தை அடைந்து வந்த மோகினிக்கு இந்தக் கட்டளை மிகுந்த வேதண்யைக் கொடுத்தது. தன் கையால் உணவு சாப்பிடுவதைக்கூட அவர் விரும்புவில்லையா? தன் மீது அவருக்கு அவ்வளவு வெறுப்பு இருந்தால் அவர் தன்னைப் பார்க்கும் போது மட்டும் ஏன் அந்த வெறுப்புத் தெரிவதில்லை? அந்தப் பார்வையின் அர்த்தம் அவளுக்குப் புரியாமல் இல்லை. அவள் பருவப் பெண் ஆனதிலிருந்து அந்தப் பார்வையை அடிக்கடி ஆண்களிடம் சந்தித்திருக்கிறாள். ஆனால் ராஜு பார்க்கும்போது மட்டும் மற்ற ஆடவர்களிடம் அவள் வெறுத்த பார்வை, அவளுக்கு இன்பச் சிலிர்ப்பைக் கொடுத்தது.
சாப்பாட்டுத் தட்டை எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றாள். விஜயா வழக்கத்துக்கு விரோதமாகக் கடிந்த கொள்ளாமல், பொறுமையாக இருந்தாள். சாப்பாடு முடிந்ததும் தட்டை எடுத்துக் கொண்ட மோகினி சமையல்காரனிடம், “இன்று எஜமானருக்குப் பரிமாறு,” என்று கூறிவிட்டுத் தன் அறைக்கு வந்தாள்.
அன்று அவளுக்குச் சாப்பிடவும் பிடிக்கவில்லை. சாப்பிடவும் இல்லை. ஆனால் தன் அறையில் இருந்தபடியே ராஜுவுக்கு உணவு அளிக்கப்படுவதை கவனித்துக் கொண்டிருந்தாள். “போதும்,” “ஊறுகாய் போடு.” என்று ராஜு சொல்வது, வட்டிலில் கரண்டி மோதும் சப்தம், முடிவா ராஜு வாஷ்பேஷினில், கை கழுவி வாய் கொப்பளிக்கும் சப்தம் எல்லாவற்றையும் தன் அறையின் மறைவிலிருந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
மெள்ளக் கதவின் இடைவெளியில் வந்து நின்றாள். இருளில் கதவின் பின்புறம் மோகினி நிற்பது, ஹாலில் நிற்பவர்களுக்குத் தெரியாது. ராஜு சாப்பிட்டு விட்டு டவலால் கைகளைத் துடைத்துக் கொண்டு ஹாலுக்குள் வந்தான். சமையல்காரன் அவனிடம் பீடாவை நீட்டினான். பீடாவை வாயில் போட்டுக் கொண்டு ராஜு முதல் முதல் படிக்கட்டில் நின்றான். சமையல்காரன் சமையல் அறைக்குள் செல்லும்வரை காத்திருந்தான். பிறகு மோகினியின் அறையை ஒரு முறை பார்த்தான். மெள்ள அவள் அறையை நோக்கி நடந்தான்.
மோகினியின் நெஞ்சு தீக்திக்கென்று அடித்துக் கொண்டது. திடீரென்று நின்றான். திரும்பி மாடியை நோக்கி நடந்தான். இவ்வளவையும் இருளில் நின்று கவனித்துக் கொண்டிருந்த மோகினிக்குப் பயமாக இருந்தது. ராஜு சென்ற பின் ஹாலில் உள்ள விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்துவிட்டுத் தன் அறைக்கு வந்தாள். கதவை ஒட்டித் தரையில் தன் படுக்கையை விரித்தாள். அறையில் உள்ள நீண்ட நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தை ஒரு முறை பார்த்துக் கொண்டாள். மனத்தில் உள்ள குழப்பத்தாலும் வெப்பத்தாலும் உடல் வியர்த்திருப்பதை உணர்ந்தாள். அறையிலும் புழுக்கம். மனத்திலும் புழுக்கம். படுக்கையில் உட்கார்ந்தாள். சேலைத் தலைப்பால் சற்றே விசிறி விட்டுக்கொண்டு படுத்தாள். கண்களை மூடினாள், தூக்கம் வரவில்லை.
கபடமாக வேறு பெயரில் வாழ்ந்தும், ராஜு அவளை ஒரு வார்த்தைகூடக் கண்டிக்கவில்லை. மாடிக்குப் போக வேண்டியவர் ஏன் சமையல்காரன் போகும் வரையில் படிக்கட்டில் காத்திருக்க வேண்டும்? நான் இருக்கும் அறையை அப்படி முறைத்துப் பார்க்க வேண்டும்? இவரும் மற்றவர்களைப் போல் என்னை… என்னை… மேற்கொண்டு நினைக்கவே அவளுக்கு மனம் கூசிற்று. மற்றவர்களிடமாவது அவள் திமிறி, தப்பி ஓடிவிட முடியும். ராஜுவின் பார்வையே அவளுக்கு இவ்வளவு வேதனை தருகிறதே! அவன் கரம் பட்ட பின்பும் அவள் மனம் அவளுடையதாகவே இருக்குமா? அவளுக்கு அவள் மானத்தைக் காத்துக் கொள்ள வலிமை இருக்குமா?
பயத்தோடு அவள் இவ்வாறெல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த போது படிக்கட்டில் சப்தம் கேட்டது. யாரோ அடிமேல் அடிவைத்து ரகசியமாக வருவது போல் தெரிந்தது. மோகினியின் இதயத்தில் ரத்தம் வேகமாக ஓட ஆரம்பித்தது. காலடி சப்தம் தன் அறையை நோக்கி வருவது போல் தோன்றியது. சில வினாடிகளுக்கு நிசப்தம்.
ஹால் கடியாரத்தில் மணி பதினென்று அடித்தது. அடுத்த வினாடி அவள் அறையின் கதவு மெள்ளத் திறந்தது. அறையின் வெளிப்புறத்திலிருந்து ராஜு உள்ளே நுழைந்தான். தரையில் தூங்காமல் உட்கார்ந்திருக்கும் மோகினியைப் பார்த்து ஆச்சரியமடைந்தான். அவன் பனியனோடு நின்று கொண்டிருந்தான். அவனது சிவந்த தோள்கள் மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தன. படுக்கையில் வீற்றிருக்கும் மோகினியைக் கவனித்தான், “மோகினி! இன்னும் நீயும் தூங்கலியா?” என்று கேட்டான்.
‘நீயும் தூங்கலியா?’ என்ற வாக்கியத்திலுள்ள ‘உம்’மைக் கேட்டதும் மோகினியின் இதயத்தில் மிஞ்சியுள்ள சிறு உறுதியும் அவளை விட்டுப் பறந்து போய்விட்டது. அவள் கை கால்கள் பலமிழந்து தொய்வதை உணர்த்தாள். புரியாத புதிருக்கும் விடை உண்டு. திறக்க முடியாத பூட்டுக்கும் ஒரு சாவி உண்டு. உறுதியான கற்பு நெறியுள்ள பெண்ணின் உறுதியையும் குலையச் செய்யும் ஓர் அழகன் உண்டு. இவர் முன்னால் என் வைராக்கியம் என்னைக் காப்பாற்றுமா என்று கலங்கி நின்றாள். இருவரும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தனர்.
அந்த அறையில் மோகினியும் ராஜுவும் விட்ட சுவாசத்தின் ஓசை மட்டும் தான் ஒலித்தது.
– தொடரும்…
– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.