கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் த்ரில்லர்
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 14,510 
 
 

(1964ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 28-29 | அத்தியாயம் 30-31 | அத்தியாயம் 32-33

அத்தியாயம்-30

மாடி பால்கனியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த விஜயாவுக்குப் புது அதிர்ச்சி ஏற்பட்டது. இது தான் முதன் முறையாகத் தன் கணவன் வேறொரு பெண்ணை உற்றுக் கவனித்ததை அவள் கவனிக்கும்படி ஆயிற்று.

விஜயாவுக்குக் கல்யாணமான வருஷத்தில் அவர்களிருவரும் குற்றாலத்துக்குப் போயிருந்தபோது, ஒரு பிரபல நடிகை அவர்கள் தங்கியிருந்த பங்களாவுக்கு அடுத்த பங்களாவில் தங்கியிருந்தாள். அவள் அடிக்கடி விஜயாவின் வீட்டுக்கு வந்து செல்வாள். ஒவ்வொரு முறை அந்த நடிகை பேசும்போதும், அவள் கண்கள் விடாமல் ராஜுவையே கவனித்தபடி இருக்கும். உதடுகள் மட்டும் நான் விஜயாவிடம் பேசிக் கொண்டிருக்கும். அருவியில் குளிக்கப் போகும் போது நடிகையும் விஜயாவைப் பின் தொடர்வாள். ஏதாவது சளசளவென்று பேசிக்கொண்டே இருப்பாள். ஒருமுறை, திறந்த மார்போடு ராஜு குளிக்க அருவியருகில் வந்தபோது அந்த நடிகை ராஜுவின் ஆண்மையில் மனத்தைப் பறிகொடுத்துவிட்டு, நாம் எங்கு இருக்கிறேம் என்பதையே மறந்து நின்ற காட்சி, விஜயாவுக்கு ஆத்திரத்தை விளைவித்தது. ராஜு ஒன்றும் உணராமல் அவளைத் தாண்டிச் சென்று அருவியில் குளிக்க ஆரம்பித்தான்.

ராஜுவிடம் விஜயா அன்றிரவு பேசுகையில், அந்த நடிகையின் அழகைப் பற்றியே பேசினாள். ராஜு விஜயாவின் சூழ்ச்சி மனத்தைப் புரிந்து கொள்ளாமல், “என்ன விஜயா! அந்த நடிதை அவ்வளவு அழகு என்று சொல்கிறாய்? அவளுக்கு எப்படி சினிமாவில் சான்ஸ் கொடுத்தார்கள் என்று எனக்குப் புரியவில்லை. அவள் சிரிப்பதும், அவள் நெளிப்பதும், அவள் குலுங்கிக் குலுங்கி நடப்பதும் வேடிக்கையாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது,” என்றான்.

அதற்கு விஜயா, “அப்படியா? அவளுடைய சுவர்ச்சிக்காகவே அவளுக்கு லட்ச ரூபாய்க்கு மேல் ஒரு படத்துக்குத் தருகிறார்கள். நாடே அவளை விரும்பிப் பார்க்கக் கூடுகிறதாம். இன்று அருவியில் அவ்வளவு கூட்டம் கூடியிருந்தது யாருக்காகத் தெரியுமா?” என்று கேட்டாள்.

ராஜு உண்மையிலேயே புரியாமல் விழித்தான். “அப்படியா? அப்போது அவள் அழகாகத்தான் இருக்க வேண்டும். எனக்குத்தான் புரியவில்லை,” என்று சூதில்லாமல் அமைதியாகச் சொன்னான்.

அதே சமயத்தில் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அந்த நடிகையே வந்தாள், அவளுக்கு அன்பளிப்பாக யாரோ மங்குஸ்தீன் பழங்களும், தித்திப்புப் பலகாரங்களும் கொண்டுவந்து கொடுத்தார்களாம். அவற்றில் சிலவற்றை விஜயாவுக்குக் கொடுத்துப் போக வந்தாள். ராஜு இம்முறை அவளையே முறைத்துப் பார்த்தான். அந்த நடிகைக்கு அது மகிழ்ச்சியையே கொடுத்தது. அவள் அர்த்தம் மிகுந்த புன்னகையை ராஜு மீது வீசிவிட்டு நகர்ந்தாள்.

அவள் போனதும் விஜயா. “என்ன நீங்க அப்படிப் பாக்கறீங்க?” என்று கடிந்து கொண்டாள்.

அதற்கு ராஜு குழந்தை போல், “விஜயா! இப்போதுதான் நான் அவளை நல்லா கவனித்தேன். நெற்றி அழகாகத் தான் இருக்கு. உதடுகள் சற்றுப் பருமனாக இருக்கின்றன. உடல்கட்டு எல்லாம் கூட நன்றாகத்தான் அமைந்திருக்கிறது. அதனால்தான் ஜனங்களுக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிருக்குமென்று நினைக்கிறேன்,” என்றான்.

“உங்களுக்கு…?” என்று விஜயா கேட்டாள்.

“எனக்குப் பிடித்தது..” என்று சொல்லிவிட்டு ராஜு விஜயாவின் உதடுகளை விரல்களால் தொட்டு மூடினான்.

அந்தக் கடந்த காலக் காட்சிகள் விஜயாவின் நினைவுக்கு வந்தன. அன்று அவன் அந்த நடிகையைப் பார்த்தது போல், இன்று இந்தச் சாந்தினியை உற்று நோக்குவதை அவன் கவனித்தாள். அவன் பார்வை சாந்தினியின் மீதே நின்றதை பால்கனியில் இருந்து விஜயா பார்த்தாள். அன்று அவன் பார்த்தபோது அதில் புரளிதான் இருந்தது. இன்று அவன் குழப்பத்தோடு சாந்தினியைப் பார்த்தான். அந்த நடிகையை ஆராய்ச்சி நோக்கோடு கவனித்தான். ஆனால் சாந்தினியை அவன் கவனித்தது வெறும் ஆராய்ச்சி அல்ல. அந்தப் பார்வையில் ஆச்சரியம், ஒருவிதமான விண்ணப்ப உணர்ச்சி தெரிந்தது.

அதே சமயத்தில் மோகினிக்குத் தன்னுடைய முதலாளி தன்னைக் கவனிப்பதைப் பார்த்தபோது, முதலில் அது கூச்சத்தைக் கொடுத்தாலும், அது மறைமுகமாக அவளுக்கு ஒரு புரியாத இன்பத்தையும் கொடுத்தது.

“சாந்தினி!” என்ற இடியோசை போன்ற குரல் மாடியிலிருந்து கேட்டவுடன்தான் மோகினி இந்த உலகத்துக்கு வந்தாள்.

உடனே அவசர அவசரமாக முந்தானையைச் சரி செய்து கொண்டு, தலையை தூக்கி எஜமானியம்மாளைப் பார்த்து, “என்னம்மா வேண்டும்?” என்று பணிவன்போடு கேட்டாள்.

விஐயா பால்கனியில் இருந்தபடியே, “சாந்தினி! எனக்கு மருந்து கொடுக்க வேண்டாம்? அதை மறந்துட்டு விளையாடிக் கொண்டு இருக்கியே?” என்று கடுமையாகக் கேட்டாள்.

‘”இதோ வந்துட்டேம்மா, கௌரி! கௌரி நீ அப்பாவோடு ஆடு,” என்று மட்டையைக் கௌரியிடம் கொடுக்கப் போனாள்.

ஆனால் உடனே ராஜு அவளைத் தடுத்தான். “பரவாயில்லே சாந்தினி. நான் போய் மருந்து கொடுக்கிறேன். நீ குழந்தையோடு விளையாடிக்கிட்டு இரு”, என்று சொல்லிவிட்டு மட்டையைக் கௌரியிடம் கொடுத்துவிட்டு மாடியை நோக்கிச் சென்றான்.

சாந்தினி எஜமான் சொல்வதைக் கேட்பதா, எஜமானி சொல்வதைக் கேட்பதா என்று புரியாமல் திகைத்துப் போய் மாடியைப் பார்த்து நின்றாள். மாடி பால்கனிலிருந்து விஜயா, “சரி, சாந்தினி, நீ விளையாடு,” என்று உத்தரவிட்டாள்.

சாந்தினி பேட்மின்டன் கோர்ட்டில் இறங்கி விளையாட ஆரம்பித்தாள். ராஜு மாடி அறைக்குச் சென்று மருந்தை எடுத்து ஊாற்றிக்கொண்டு வந்து, பால்கனியில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த விஜயாவிடம் கொடுத்தான். விஜயா மருந்தை வாங்கிக் குடிக்கும் போது ராஜுவின் முகத்தையே கவனித்தாள். அவன் என்ன நினைக்கிறான் என்பதை அவளால் கண்டு கொள்ள முடியவில்லை. மருந்தைக் குடித்து விட்டு அவுன்ஸ் கிளாஸை ராஜுவிடம் கொடுத்தாள்.

“சாந்தினி நல்ல ஹெல்தி கேர்ல் இல்லே?” என்று ராஜுவைப் பார்த்துக் கேட்டாள்.

ராஜு ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தான். விஜயா விஷயத்தை அதோடு விடவில்லை.

“சாந்தினி நல்ல அழகி இல்லையா?” என்று மறுபடியும் கேட்டாள்.

ராஜு சற்றுப் படபடப்புடன், “அவள் எப்படி இருந்தா எனக்கு என்ன? விஜயா! இது என்ன அர்த்தமில்லாத கேள்வி?” என்று கடுமையாகச் சொல்லி விட்டு பால்கனியைவிட்டு நகர்ந்தான்.

விஜயா எதிர்பார்த்தது வேறு. அன்று குற்றாலத்தில் நடிகையை அழகி என்று சொன்னபோது ராஜு, ‘அவள் அழகி என்றா சொல்கிறாய்?’ என்று குழந்தை போல் திருப்பிக் கேட்டான். அதே பதிலை இன்று ராஜு சொல்லியிருந்தால் விஜயாவுக்குத் திருப்தியாக இருந்திருக்கும். அவன் அந்தக் கேள்விக்குக் கோபமாகப் பதில் சொன்னது விஜயாவின் மனத்தில் சந்தேகத்தைக் கிளறியது. ராஜு, சாந்தினி அழகி என்று ஒப்புக் கொள்வதில் ஒரு வித தப்பும் இல்லை. அந்த அழகு அவன் மனத்தைக் கவராத வரையில். சாந்தினியின் அழகு ராஜுவைப் பாதிப்பதனால் தானே, அந்தக் கேள்வியைக் கேட்டதும் அவன் எரிச்சலுடன் பதில் சொல்கிறான் என்று நினைத்தாள், விஜயாவின் நிம்மதி குலைத்தது.

வேகமாகச் சக்கர நாற்காலியைக் கைகளால் தள்ளிக்கொண்டு ஹாலுக்குள் வந்தாள். அப்போதுதான் ராஜு ஒரு டவலுடன் பாத்ரூமுக்குள் சென்று கொண்டிருந்தான். அந்த மாடி ஹாலை அடுத்த பாத்ரூமின் ஜன்னலிலிருந்து பேட் மின்டன் கோர்ட் தெரியும். பாத்ரும் கதவு மூடியதும் விஜயாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது. ஒரு வேளை ராஜு பாத்ரூமில் இருந்தபடி பேட்மின்டன் கோர்ட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் சாந்தினியைக் கவனிக்கிறானோ? பாத்ரூமில் சில வினாடிகளுக்கு நிசப்தம் நிலவியது. ஒருவர் உண்மையிலேயே குளிக்கப் போனால், உடனே தண்ணீர் கொட்டும் சப்தமல்லவா கேட்க வேண்டும்? விஜயாவின் சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வது போல் பாத்ரும் அறையிலிருந்து ராஜுவின் குரல் கேட்டது.

ராஜு பேட்மின்டன் கோர்ட்டிலிருக்கும் கௌரியிடம் பேசிக் கொண்டிருந்தான். “கௌரி! நீ விளையாடினது போதும். உடனே ஹார்லிக்ஸ் சாப்பிட்டுவிட்டுப் படிக்கப் போ” என்று உத்தரவிட்டான்.

“இன்னும் கொஞ்சம் நேரம் விளையாடறேம்ப்பா,” என்று கீழேயிருந்த குழந்தையின் குரல் கேட்டது. குழந்தையின் குரலைத் தொடர்ந்து சாந்தினியின் குரல் கேட்டது: “போதும் கெளரி. அப்பா சொல்றபடி செய். இன்னிக்கிக் கோவிலுக்குப் போக வேண்டாம்?”

“சரி டீச்சர்”, என்று வேண்டா வெறுப்புடன் கௌரி கூறுவதும் கேட்டது.

அப்புறம் நிசப்தம் நிலவியது. பாத்ரூமில் தண்ணீர் பாத்டப்பில் கொட்டும் ஒலி கேட்டது. உண்மையிலேயே ராஜு, சாந்தினி விளையாடுவதைக் கவனிக்கும் நோக்கத்தில் பாத்ரூமுக்குள் சென்றிருந்தால் அவன் அங்கிருந்து கூச்சல் போடுவானா? இல்லை. ஆடுவதை நிறுத்தச் சொல்லிக் கட்டளை தான் இடுவானா? ராஜுவின் செல்வமென்ன? அவனுக்குள்ள சந்தர்ப்பங்கள் எவ்வளவு? அவன் தவறு செய்ய நினைத்தால் அவனை யார் தடுக்க முடியும்? ‘என்ன அவலட்சணமான சந்தேகம் என் மனத்தைப் பிடித்துக் கொண்டது? எனக்கு உடல் மட்டும் ஊனமாகவில்வை, என் மனமும் ஊனமாகிவிட்டது.’ என்று தன்னைத் தானே வெறுத்துக் கொண்டாள்.

சக்கர நூற்காலியைத் தள்ளியபடி படுக்கை அருகில் வந்து படுக்கையில் படுத்துக் கொண்டாள். ‘எனக்கு மட்டும் நடக்கும் சக்தி இருந்தால் நான் மட்டும். பழையபடி இருந்தால் ஏன் இவ்வளவு வேதனை?’ என்று நினைத்து வருந்தியபடி அழுது கொண்டிருந்தாள்.

பாத்ரூம் கதவு திறந்து ராஜு குளித்து விட்டு டிரஸ்ஸிங் ரூமுக்குள் நுழைவதைப் பார்த்தாள். அவன் படுக்கையில் படுத்து அழுது கொண்டிருக்கும் விஜயாவைக் கவனிக்கவில்லை.

“அம்மா! அம்மா!'” என்ற குரல் கேட்டுத் திரும்பினாள் விஐயா.

ஒரு தட்டின்மீது ஒரு கிளால் டம்ளர் நிறைய ஹார்லிக்ஸ் கலக்கி எடுத்துக் கொண்டு வந்து சாந்தினி நின்று கொண்டிருந்தாள், “ஹார்விக்ஸ் சாப்பிடுங்கம்மா, குழந்தைக்கு ஹார்லிக்ஸ் கொடுத்திட்டேன்,” என்று அவள் சொன்னாள்.

படுத்திருந்த விஜயா படுக்கையிலிருந்து மெள்ள எழுந்திருக்க முயன்றாள். அதற்குள் சாந்தினி ஹார்லிக்ஸை அங்குள்ள மேஜையில் வைத்துவிட்டு, விஜயாவைத் தூக்கிவிட்டாள். விஜயா சாந்தினியை முறைத்துப் பார்த்தபடி எழுந்து உட்கார்ந்தாள். சாந்தினி விஜயாவைத் தூக்கி உட்கார்த்தி வைக்கும் போதே டிரஸ்ஸிங் அறையிலிருந்து ராஜு வெளி வந்தான்.

தன்னைச் சாந்தினி தூக்கி உட்கார்த்தி வைக்கும் காட்சியை ராஜு பார்க்கும்படி ஆகிவிட்டதே என்ற ஆத்திரம் சாந்தினியின் மீது கோபமாகத் திரும்பியது விஜயாவுக்கு.

சாந்தினி ஹார்லிக்ஸை நீட்டிவிட்டு ராஜுவை நோக்கித் திரும்பினாள். “உங்களுக்குக் காப்பி கொண்டு வரவா, இல்லை ஹார்லிக்ஸா, இல்லை ஓவல்டின்னா?” என்று பணிவோடு கேட்டாள்.

விஐயா ”போதும். நீ ஹார்லிக்ஸ் கொண்டு வந்திருக்கிற லட்சணம். பச்சைத் தண்ணி மாதிரி இருக்கு. சமையல்காரங்க கிட்ட சொல்லிக் கொஞ்சம் சூடா கொண்டு வரக்கூடாது? உனக்குத்தான் பேட்மின்டன் விளையாடவே பொழுது சரியாகப் போகுது. இதெல்லாம் கவனிக்க நேரம் ஏது?” என்று எதையாவது சொல்லிப் பொங்கும் ஆத்திரத்தைக் காட்ட நினைத்தாள்.

அதற்குள் ராஜு ஹார்லிக்ஸ் கிளாஸை எடுத்தான். அது குடாக இருப்பதை ஸ்பரிசத்தால் உணர்ந்தான். “இது தான் சூடாக இருக்கே விஜயா?” என்று சாதாரணமாகக் கேட்டான்.

“நான் சூடு இல்லேன்னு சொல்றேன். அது சூடா இருக்குன்னு சொன்னா என்ன அர்த்தம்; நான் சொல்றது பொய்யா? சாந்தினி! போய் ஹார்லிக்ஸைச் சூடு பண்ணிக் கொண்டா போ,” என்று கட்டளையிட்டாள்.

சாந்தினி சூடாக இருக்கும் ஒன்றை இன்னும் எப்படிச் சூடு செய்வது என்று புரியாமல் தவித்து நின்றாள். ராஜுவுக்கு விஜயாவின் கோபம் அர்த்தமற்றது என்று நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும் அவன் அதைச் சொல்லிப் பயன் இல்லை. கூடப்பாடித்தான் ஆக வேண்டும் என்பதை உணர்ந்திருந்தான்.

ஆகையால் ராஜு அன்போடு சாந்தினியின் பக்கம் திரும்பி, “சாந்தினி! அம்மா சூடில்லேன்னா போய்ச் சுட வைச்சுத்தான் கொண்டு வாயேன்”, என்று தன் கண்களால் கெஞ்சினான்.

சாந்தினி ஒன்றும் பேசாமல் ஹார்லிக்ஸை எடுத்துக் கொண்டு ராஜுவைப் பார்த்து, “உங்களுக்கு என்ன கொண்டு வர்றது?” என்று கேட்டாள்.

“எது கொண்டு வந்தாலும் சரி.” என்று ராஜு சொன்னான்.

சாந்தினி அறையைவிட்டு வெளியே சென்றதும் ராஜு, “வீணாக ஏன் இப்படி மனசை அலட்டிக்கிறே? பொறுமையா இரு விஜயா,” என்றான்.

“பொறுமையாக இல்லாமல் இப்போ என்ன பண்ணிட்டேன்?” என்று கேட்டாள் விஜயா.

“முன்னூறு ரூபாய் சம்பளத்துக்கு ஒரு ஆளைப் போட்டுட்டு, மூணு ரூபாய்ச் சம்பளத்துக் கூலிக்காரி மாதிரி விரட்டினேன்னா, பொறுத்துக்குவாளா?” என்று கேட்டான் ராஜு.

“உங்களுக்கு ஏன் சாந்தினியைச் சொன்னா, இவ்வளவு கோபம் பொத்துக்கிட்டு வருது?”

“கோபமில்லே விஜயா..” என்று ஏதோ சொல்லப் போகு முன்பே சாந்தினி அறையில் நுழைந்தாள்.

ராஜு பேச்சை நிறுத்திக் கொண்டான். ஹார்லிக்ஸை விஜயாவிடம் நீட்டினாள் சாந்தினி. விஜயா, “ஹார்லிக்ஸை அதுக்குள்ளேயும் சுட வச்சுட்டியா?” என்று கேட்டாள்.

அதற்குச் சாந்தினி, “இல்லேம்மா. அவருக்காகச் சூடாப் போட்டு இருந்த ஹார்லிக்ஸை உங்களுக்கு எடுத்துக்கிட்டு வந்தேன்,” என்றாள்.

“அவருக்கு ஆறிப்போன ஹார்லிக்ஸைத் திருப்பி எடுத்திட்டு வந்தியா?”

“இல்லேம்மா அவருக்கு ஓவல் கொண்டு வந்திருக்கேன். அதுதான் அவருக்குப் பிடிக்கும்”, என்று சொல்லி நிறுத்தினாள் சாந்தினி.

விஜயா, “ஓகோ, ஓவல்தான் அவருக்குப் பிடிக்கும்ணு உனக்கு எப்படித் தெரியும்? இந்த வீட்டிலேயே பல வருஷம் இருந்த மாதிரிப் பேசறியே?” என்றாள்.

அதற்குச் சாந்தினி, “இல்லேம்மா தினமும் இந்த நேரத்துக்கு அவர் ஓவல் தான் கேக்கறாரு. என்னைக்காவது ஒரு நாள் தான் காப்பி குடிக்கிறாரு” என்று கூறினாள்.

“சரி சரி. அதை வைச்சுட்டுப் போ” என்று சொன்னாள் விஜயா.

சாந்தினி ஓவல்டின்னை ராஜுயின் முன்னால் வைத்துவிட்டு நகர்ந்தாள். ராஜு தலை குனித்தபடியே உட்கார்ந்திருந்தான். சாந்தினி சென்ற பின்பு சில வினாடிகளுக்கு அங்கு மௌனம் நிலவியது.

“ஓவல்டின்னைச் சாப்பீடுங்க” என்றாள் விஜயா.

ராஜுவின் முகம் சிவந்திருந்தது. “வேண்டாம் விஜயா. என்னை உட்கார வைத்துக்கொண்டு நீ அவளைக் குறுக்கு விசாரணை செய்வது அவளுக்கு அவமானமா இருக்காதா? என் கௌரவத்துக்குத்தான் அது குறைச்சல். எண் ஆண்மைக்கே அது கேவலமாய் இருக்கும் உனக்குத் தோணவில்லையா விஜயா?” என்று சொல்லிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்தான் ராஜு.

“இன்றைக்குத்தான் நான் இப்படி முதன் முறையாக நடந்துக்கறேனா? இதுக்கு முன்னாலே நான் கோபப்பட்டதில்லையா? இதுவரையிலும் நீங்க உங்க ஆண்மைக்குக் கேவலம் ஏற்பட்டதாகத் சொன்னதே இல்லையே!” என்று பட படப்புடன் கேட்டாள் விஜயா.

அப்போது தான் ராஜுவுக்கும் ஓர் உண்மை புலனாயிற்று, மற்ற மேலைக்காரர்கள் முன் விஜயா பொறுமை இழந்து பேசியது, அவனைப் பாதிக்கவில்லை. சாந்தினியின் முன்பு பேசிய போது அவன் ஆண்மை இழந்து கோழையாக இருப்பது போல் தோன்றியது. சாந்தினியின் முன்னால் மட்டும் அவன் ஆண் மகனாகக் காட்சியளிக்க வேண்டும் என்று ஏன் விரும்பினான் என்று அவனுக்கே புரியவில்லை.

“சரி சரி. நான் ஏதாவது சொன்னால் உனக்கு இன்னமும் கோபம் அதிகமாகும். நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்,” என்று சொல்லி வெளியே போனான்.

அவன் படிக்கட்டில் இறங்கும்போது சாந்தினி படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தாள், அவள் கண்கள் அவனுடைய கண்களைச் சந்தித்தன. ராஜுவின் பார்வை சாந்தினியை ஊடுருளிற்று.

அவன் அவளைத் திரும்பிப் பார்ப்பான் என்று எதிர்பார்க்காத சாந்தினிக்கு அவன் திரும்பிப் பார்த்தது வெட்கத்தைக் கொடுத்தது. வேகமாக மாடி ஹாலுக்குள் நுழைந்தாள். அங்கு அவள் ராஜுவுக்கென்று எடுத்து வந்த ஓவல் டின் சாப்பிடப்படாமல் அப்படியே வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்ததும், உள்ளத்தில் வேதனை ஏற்பட்டது.

பணம், பொருள், அந்தஸ்து, மனைவி, ஒரு படை போன்ற ஆட்கள் – இவ்வளவையும் பெற்றிருக்கும் ராஜுவைப் பார்த்து, எந்தவித ஆதரவுமில்லாத, அனாதையான மோகினி ஏன் பச்சாதாபப்பட வேண்டும்? குழந்தை கௌரி பள்ளியில் சேர்ந்த போதும், மோகினிக்கு அவள் மீது பச்சாதாப உணர்ச்சிதான் ஏற்பட்டது. கௌரியின் கெஞ்சும் கண்கள் தான் அன்று அவள் மனத்தை இழுத்தன. இன்றும் கெளரியின் தந்தையின் அதே கண்கள்தான் அவள் மனத்தில் ராஜுவின் மீது பச்சாதாப உணர்ச்சியைக் கொடுத்தன. பரிதாப உணர்ச்சி மட்டும்தானா, அதோடு துணையாக வேறு உணர்ச்சியும் இருந்ததா? படிக்கட்டில் ராஜுவைக் கடந்து வந்த போது மோகினியின் மனம் படபடத்தது. அவள் நெஞ்சில் ரத்தம் நிறைந்து அவள் மூச்சுத் திணறியது. நெற்றி வியர்த்தது. விரல்கள் துடித்தன. இது நாள் வரை மோகினி அவள் அழகே அவளுக்குச் சத்துரு என்றுதான் நினைத்து வந்தாள். ஏன் அழகாய்ப் பிறந்தோம் என்று மனம் நொந்திருக்கிறாள். ஆனால் இன்று விஜயாவின் அறையில் கண்ணாடியில் அவள் பிம்பத்தைப் பார்த்து போது அவளுக்கே திருப்தி ஏற்பட்டது. ஓர் இறுமாப்பும் பிறந்தது.

எதிரே பட்டும், சரிகையும், வைரமும் மின்ன, காலிழந்து கிடக்கும் விஜயாவை நோக்கினாள். மோகினியின் மனக்கண் முன் விஜயா இருளடைந்த இறந்த காலத்தின் சின்னமாகவும், தான் ஒளிமயமான எதிர் காலத்தின் முத்திரை யாகவும் தோற்றம் அளித்தாள். ‘யாருடைய இறந்த காலம், யாருடைய எதிர்காலம் நான்?’ என்ற நினைவு வந்ததும் தன் சிந்தனைகள் பாபமானவை என்று மோகினியின் அடிப்படைப் பண்பு அவளுக்கு அறிவுறுத்தியது.

“என்ன கண்ணாடியிலே அழகு பார்த்துக்கிட்டு நிக்கிறே சாந்தினி” என்று விஜயா கேட்டதும் கற்பனை மேகங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்த மோகினி, பூமிக்கு வந்தாள்.

“என்னம்மா, என்ன வேணும்?” என்று பணிவோடு கேட்டாள்.

விஜயா அவளைக் கொடூரமாகப் பார்த்துவிட்டு, “சாந்தினி! சின்னப் பொண்ணு நீ. கனவு காணாதே. கனவு காணறவங்க ஒரு நாள் கண்ணீர் சிந்த வேண்டி வரும்,” என்று அர்த்தம் தொனிக்கக் கூறினாள்.

மோசினி ஒன்றும் பதில் சொல்லாமல் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த கண்ணாடி டம்ளர் முதலியவற்றை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல அடி எடுத்து வைத்தாள். அறைக் கதவருகே சென்றவளை விஜயா. “சாந்தினி! இங்கே வா,” என்றழைத்தாள்.

மறுபடியும் மோகினி விஜயாவை நோக்கி நடந்து வந்தாள்.

“இப்படி உட்கார்,” என்று கட்டிலில் ஓர் இடத்தைக் காட்டினாள் விஜயா.

மோகினி உட்கார்ந்தாள். கட்டிலின் ஸ்ப்ரிங்கு மோகினியின் பளுவுக்கு ஈடு கொடுத்துத் தொய்ந்தது. விஜயா, “சாந்தினி! உன் கையை இப்படிக் கொடு,” என்று கேட்டாள்.

மோகினி பயத்தோடு நீட்டிய கையைத் தடவிப் பார்த்தாள். தன் கையில் நோயின் காரணமாக ஏற்பட்ட சுருக்கங்களும், உலர்ந்து போன வரட்சியுமே இருப்பது அவளுக்குத் தெரிந்தது. விஜயா பெருமூச்சு விட்டாள். “தங்கத்தினால் ஆன வாழைத் தண்டு போல இருக்கு வழவழன்னு…”

மோகினி பதில் சொல்லவில்லை. விஜயா திடீரென்று மோகினியின் தோளைப் பிடித்து உலுக்கி, “சாப்பாட்டுக்கு வசதியில்லாத ஏழை நீ. உனக்கு எப்படியடி இவ்வளவு அழகு வந்து சேர்ந்தது?” என்று கேட்டாள்

விஜயாவின் குரலிலிருந்து அவள் எவ்வளவு தூரம் தன்னை வெறுக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்ட மோகினிக்கு, ஏதாவது சூடாகப் பதில் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

“என்னம்மா செய்யறது? அழகு தேடியா வருது? தானா ஏற்படுது. பண்பு நிறைந்த நல்ல மனசுதாம்மா உடலைச் செழிப்பாக்குது,” என்றாள்.

“எனக்குப் பண்பு இல்லே, கெட்ட மனசுன்னுதானே சொல்றே?” என்று ஆத்திரத்துடன் மோகினியின் கன்னத்தில் அறைந்தாள் விஜயா.

மோகினிக்கு ஒரு வினாடிக்கு ஒன்றும் தோன்றவில்லை. அப்படியே முறைத்துப் பார்த்தபடி நின்றாள். விஜயா கூச்சலிட்டபடி, “ஏண்டி, பேசாமல் நிக்கறே? ஏதாவது சொல்லேண்டி, உனக்கு உணர்ச்சி இல்லே? நான் கன்னத்திலே அறைஞ்சேன். உனக்குக் கோபம் வரல்லியா? பதிலுக்கு நீ அடிக்கமாட்டியா? ஏண்டி, அப்படியே பாத்துக்கிட்டு நிக்கறே?” என்று அடுக்கிக் கொண்டே போனாள். மோகினி புன்முறுவல் செய்தாள். “ஏண்டி சிரிக்கறே? உனக்குக் கோபமே வராதா?” என்று விஜயா கேட்டாள்.

“சிரிக்காம என்னம்மா பண்றது? அடிச்சவங்க நீங்க. அடிபட்டவளைவிட அதிகமாத் துடிக்கறீங்களே, அது போறாதா உங்களுக்கு?” என்று சொல்லி விட்டு எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.

விஜயாவிடம் வேலைக்காரர்கள் பயந்திருக்கிறார்கள். விஜயாவிடம் வெறுப்பைக் காட்டியிருக்கிறார்கள். ஆனால் யாரும் இதுவரை அவளை அலட்சியப் படுத்தியதில்லை. விஜயா மனம் குமுறியபடி படுக்கையில் கிடந்தாள்.

அத்தியாயம்-31

மோகினி சென்றபின் விஜயாவின் சிந்தனைகள் பல கோணங்களில் சென்ற வண்ணம் இருந்தன. மோகினியின் அமைதியான பதில் விஜயாவின் மனத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ‘அடிச்சவங்க நீங்க, அடிபட்டவளை விட அதிகமாகத் துடிக்கிறீங்களே? அது போறாதா உங்களுக்கு?’ என்று மோகினி சொன்ன வார்த்தைகள் திரும்பத் திரும்ப விஜயாவின் மனதில் எழுந்தபடி இருந்தன. ‘இந்த சாந்தினிக்கு வலிமை உடலில் மட்டும் இல்லை. அவளுக்குத் திடமான மனமும் இருக்கு. செல்வம் இல்லை. வாழ்வில் அனாதை, என் வீட்டு வேலைக்காரி, அவளுக்கு இருக்கும் மனோபலம் கூட எனக்கு இல்லையே!’ என்று வருந்தினாள் விஜயா. சாந்தினியின் மீது அளவில்லாத வெறுப்பு ஏற்பட்டது. அதோடு அவளுக்கு சாந்தினியிடம் ஒரு பயமும் ஏற்பட்டது. ‘இவள் ஒரு சாதாரண வேலைக்காரியல்ல. உள்ளத்தளவில் தன்னைவிட உயர்ந்தவள்,’ என்ற கசப்பான உண்மை விஜயாவுக்குப் புலப்பட்டது.

அதே சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறிய ராஜு தன் மனத்தோடு போராடியபடி நடந்து சென்று கொண்டிருந்தான்.

பேட்மின்டன் கோர்ட்டில் அவள் பலமாகப் பூப்பந்தை அடித்ததும், அது போய் சாந்திவியின் மார்பில் விழுந்ததும், அவள் ராஜுவை லஜ்ஜையோடு பார்த்ததும் அவன் ஞாபகத்துக்கு வந்தன. சற்று முன் சாந்தினி படிக்கட்டில் ஏறி வரும்போது, அவன் அவளைக் கடந்த போது, அவனுடைய பார்வையில் விழுந்த அவளுடைய தோளும், புஜமும், அந்தத் தந்தக் கழுத்தும், அவனுக்குப் புரிந்தன. ஆனால் மறந்து விட்ட நினைவுகளை எழுப்பின. படிக்கட்டின் உச்சியிலிருந்து அந்த சாந்தினி பார்த்த பார்வை அவன் கண்முன் அகலாமல் நின்றது.

நடந்து கொண்டே ராஜு ஒரு பூங்காவில் வெளிப்புறம் உள்ள மைதானத்தை நெருங்கினான். பல வருடங்களுக்கு முன் அதே மைதானத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளில் அவன் பங்கெடுத்துக் கொண்டு விளையாடியது அவன் ஞாபகத்துக்கு வந்தது. அங்கு அவன் விஜயாவை முதன் முதலாகச் சந்தித்தான். விஜயா அவனை யாரோ ஓர் ஏழை என்று நினைத்து, தன் காரில் ஏறிக் கொள்ளச் சொல்லி அழைத்ததும் ஞாபகத்துக்கு வந்தது. அன்று அவன் பணமில்லாதவனாக ஒரு பெண்ணுக்குத் தோற்றமளித்ததும், அந்தப் பெண் அவனை அவனுக்காகவே விரும்பிய இன்பமும் இன்று நடந்தது போல் தோன்றின. சுபாவத்திலேயே கர்வியாக இருந்த விஜயா, அவன் ஏழை என்று நினைத்த நிலையிலும் அவனிடம் எவ்வளவு பயத்தோடும், ஆசையோடும், பணிவோடும் நடந்து கொண்டாள்! அந்தச் சில மாதங்களில் தான் விஜயாவின் சிறந்த பண்பையெல்லாம் அவன் கண்டான்.

அந்தக் காலத்தில் விஜயாவும் ராஜுவும் சந்தித்த ரகசிய சந்திப்புகளில், விஜயா காட்டிய ஆர்வம் அவளைக் கூச்சம் அற்றவளாகக்கூடத் தோற்றமளிக்கச் செய்தாலும், அவள் ஆசையின் தன்மை புனிதமானது என்பதில் சந்தேகமில்லை. பணத் திமிர் பிடித்த விஜயா, அவள் ஏழை என்று நினைத்த ராஜுவிடம் முழுச் சரணாகதியடைந்தாள். துணிக்கடை மாடிக்கு, கையில் பலகாரங்களுடன் திருட்டுத்தனமாக வருவாள். அப்போதெல்லாம். குழந்தைக்கு ஊட்டுவது போல் பலகாரங்களை அவனுக்கு ஊட்டுவாள்! அவனுடைய உடலைப் பிடித்து விடுவதில் அவளுக்கு அலாதி இன்பம். புழுதி படிந்த அந்தத் துணிக்கடை மாடி அறையில் இன்பமாக இருக்கும்போது அவன் தோள்மீது சாய்ந்தபடி அவள் சொன்ன வார்த்தைகள் இப்போது ஞாபகத்துக்கு வந்தன. “இன்பத்தின் எல்லைக்கே என்னைக் கொண்டு போய் விட்டீர்களே. இனிமேல் நான் வாழவே விரும்பவில்லை, இப்படியே உங்கள் தோள்மீது சாய்ந்த படியே இறந்து விட்டால் போதும். என் வாழ்வு பூரணத்துவம் அடைத்து விடும்,” என்று விஜயா சொல்வாள்.

அவள் உடல் அடைந்த எல்லையில்லா மகிழ்ச்சியில் பிறந்த வார்த்தைகள் அவை! அதை ஒரு பெண்தான் கூறமுடியும். ஏன் என்றால் அவளுக்குத்தான் ஆண் பெண் உறவில் நிறைவு காணமுடியும். அந்த நிறைவை எல்லாப் பெண்களும் வாழ்நாள் பூராவும் அடைவதில்லை. ஆயிரத்தில் ஒருவருக்கு அது ஏற்படுகிறது. அந்த நிறைவு ஏற்படும்போது அவளுக்கு அது ஓர் ‘உடல் முக்தி’யாகி விடுகிறது. அவள் பரம்பொருளில் கலந்த ஒரு பக்தன் போல் ஆகிவிடுகிறாள். அவள் பின்பு வேறு ஒன்றும் வேண்டுவதில்லை. அந்த நிறைந்த இன்பத்தைப் பெண்ணுக்குக் கொடுத்தவன் அவனது கணவனாகாமல், வெறும் காதலனாக மட்டும் இருந்து விட்டால் அந்தப் பெண் சீரழிந்து வாழ வேண்டி வருகிறது.

ஆனால் விஜயாவின் அதிருஷ்டம் ராஜு அவள் காதலனாகவும் பிறகு கணவனாகவும் மாறினான். உடல் அடையக்கூடிய இன்பம் இவ்வளவுதான் என்று ஆண்டவன் ஒரு கணக்கு வைத்திருந்தானோ, என்னவோ! விஜய அந்த எல்லையைத் தாண்டிவிட்டாள் போலும்! இன்பப் போதையான வாழ்வு முடிந்து, அவள் காலிழந்து நொண்டியாகிவிடும்படி ஆகிவிட்டது. அப்புறம் கணவனோடு விஜயா அந்த இன்பத்தின் எல்லையையே அடையவில்லை. அந்த நிலை அவளைப் பொறுத்த வரையில் வெறும் ஞாபகமாகவே இருந்தது.

ராஜுவைப் பொறுத்தவரையில் அவனுக்கும் விஜயாவுக்கும் ஏற்பட்ட தொடர்பில் அவனுக்கு ‘உடல் முக்தி’ கிடைத்ததா என்பது சந்தேகம். அவன் அவளிடம் பரிவு காட்டினான். அவளிடம் மிகவும் பொறுமையாக இருந்தான். அவளுடைய கோபப் புயல்களைச் சகித்துக் கொண்டான். ஆனல் அவன் பொறுமைக்குக் காரணம், அவன் குற்றவாளி என்று தன்னைத்தானே நினைத்துக் கொண்டதுதான். குழந்தை பிறந்ததால் விஜயாவுக்கு ஊனம் ஏற்பட்டது. அதற்குக் காரணம் தானல்லவா என்று நினைத்தான். அதோடு, ‘என்றே எப்போதோ நாம் பெரிய தவறு செய்திருக்கிறோம். அதனால்தான் தமக்கு இந்தக் கஷ்டம்’, என்று நினைத்தான். அவன் தந்தை வேங்கடபதியின் மன அமைப்பு ராஜுவுக்கு இருந்திருந்தால் அவன் அவ்வளவு வருந்தியிருக்க மாட்டான். நடந்ததைப்பற்றிச் சிந்திக்காமல் அடுத்து நிகழ வேண்டியவற்றைப் பற்றி மட்டும் கவலைப்படும் வெற்றி வியாபாரியின் மன அமைப்பு ராஜுவுக்கு இல்லை.

ராஜுவுக்கு, அவன் சித்தப்பா குழந்தைச்சாமியைப் போல் ஒரு சிந்தனையாளன் மனம் தான் இருந்தது. ஒரு வேளை அவனுக்கும் குழந்தைச்சாமியைப் போல், போலீஸ் விசாரணை முதலிய சோதனைகள் ஏற்பட்டிருந்தால் அவனும் சாமியாராக மாறி இருப்பான். அவன் கொண்டிருந்த உடல் வலிமை, உள்ளத்தில் அடிக்கடி காம இச்சைகளை, முற்றுப்பெறாத தணியாத வேட்கைகளை, ஏற்படுத்தியது. அவனுடைய மன வலிமையும், இயற்கைப் பண்புமே அந்த வேட்கைகளை அவ்வப்போது தணித்தும் வந்தன. அவன் ஒழுக்கம் தவற வாய்ப்புகளும் செல்வமும் இருந்தும், கட்டுப்பாட்டுடன் சீலமாக வாழ்ந்ததற்கு அவன் மன உறுதிதான் காரணம். அந்த மன உறுதியையே குலைத்தது சாந்தினியின் அழகு. உள்ளத்துக்குக் கட்டுப்படாமல் கூட உடல் இயங்க முடியுமா என்ற சந்தேகம் அவனுக்கு எழுந்தது.

சாந்தினியை மறக்க வேண்டி, உடலை வருத்தி வியர்வை வரும் வரையில் நடந்து போய்க் கொண்டே யிருந்தான் ராஜு. கால் சளைக்கும் வரை நடந்து கொண்டே கோயமுத்தூரிலிருந்து பீளமேடு வரை வந்து விட்டதை உணர்ந்தான். பிறகு மறுபடியும் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். வழியில் ஒரு நண்பர் காரில் செல்லாமல் கால் நடையாகச் சென்று கொண்டிருக்கும் ராஜுவைப் பார்த்ததும் தன் காரை நிறுத்தினர். “என்ன ராஜு நடந்து போறீங்க? கார் பிரேக் டவுனா?” என்று கேட்டார்.

ராஜா அசடு வழிய, “இல்லை. சும்மா இப்படியே வாக்கிங் வந்தேன்,” என்று சொல்லிச் சமாளித்தான்.

வீடு திரும்பும்போது மணி எட்டாகி இருந்தது. உடனே பாத்ரூமூக்குச்சென்று குளித்துவிட்டு வந்து சாப்பிட உட்கார்ந்தான். வேலைக்காரன் பரிமாறிய போது தலை குனிந்தபடி சாப்பிட்டான். சாப்பிட்டுவிட்டு மாடி ஏறும்போது மாடிப்படியை அடுத்த அறையில் கௌரி சாந்தினியிடம் பாடம் படித்துக் கொண்டு இருந்தாள். கம்பராமாயணத்தில், சீதை மிதிலையில் நுழையும் ராமரைக் கண்ட காட்சியைப் பாடமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் மோகினி. அந்தக் காட்சியை அவள் மனம் வயித்துக் கூறியபடி இருந்தாள். ராஜு படிக்கட்டில் நின்று கேட்டான்.

உட்புறமிருந்த கௌரி கேட்டாள்: “தோள் கண்டார் தோளே கண்டார்னா என்ன அர்த்தம், டீச்சர்?”

“ஸ்ரீ ராமரின் அழகான தோள்களைப் பார்த்தவங்க அதையே பார்த்தபடி இருந்தாங்க. வேறே எதையும் பார்க்கவில்லை. கௌரி,” என்றாள் மோகினி.

“அது எப்படி டீச்சர் முடியும்? தோளை மட்டும் பார்க்க முடியுமா? தோளைப்பார்த்தா கழுத்து தெரியாதா? முஞ்சி தெரியாதா, டீச்சர்?” என்று கௌரி கேட்டாள்.

“கௌரி, நீ குழந்தை. உனக்கு இப்போ அதெல்லாம் புரியாது.”

“எனக்கு எப்போ புரியும் டீச்சர்?”

கௌரிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தாள் சாந்தினி. “நீ பெரியவளானப்புறம் புரியும். ராமர் தோள் ரொம்ப அழகாயிருந்தது. அதனாலே அதைப் பார்த்தவங்க அதையே பார்த்திட்டிருந்தாங்கன்னு கம்பர் சொல்றாரு.”

“அழகான தோள்ளு அது எப்படி இருக்கும் டீச்சர்?”

“ராமர் ஒரு பெரிய வீரர். அதனாலே அவர் தோள் உயர்ந்து பலம் பொருந்தியிருந்தது…” என்று சொல்லிக் குழம்பி நிற்கும்போதே, ராஜுவின் கால்கள் அவனைக் கௌரி பாடம் படித்துக் கொண்டிருக்கும் அறைக்கு வெளியே கொண்டு வந்துவிட்டன. கௌரியோ சாந்தினியோ அறைக்கு வெளியே ராஜு நிற்பதைக் கவனிக்கவில்லை.

கௌரி, “டீச்சர், எங்கப்பா தோளும் தொட்டுப் பார்த்தால் கல் மாதிரி இருக்கும். ராமர் தோள் மாதிரி எங்கப்பா தோளும் அழகானதுதானே?” என்று கேட்டாள்.

“சரி. உங்கப்பா தோளு மாதிரின்னு வச்சுக் கொள்ளேன்,” என்று சொல்லும் போது சாந்தினி தலை நிமிர்ந்து பார்த்தாள். ராஜு நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவளுடைய முகம் வெட்கத்தால் சிவந்தது. ராஜுவும் குழப்பமடைந்தான்.

மோகினியின் குழப்பம் சற்றுக் கோபமாக மாறியது. அதைப் புரித்து கொள்ளாமல் கௌரி தந்தையைப் பார்த்ததும் “அப்பா, ராமர் தோள் மாதிரிதான் உங்க தோள், டீச்சரை வேணும்னா கேட்டுப் பாருங்கப்பா,” என்று சொன்னாள்.

ராஜு, “சரி, சரி, என்ன சாந்தினி. குழந்தைக்கு இந்தப் பாடம்தானா சொல்லித் தரணும்? வேறே கணக்கு, இங்கிலீஷ் ஏதாவது சொல்லித் தரக் கூடாது?” என்று சொல்லிவிட்டு நகரப் போனான்.

சாந்தினிக்கு ஒன்றும் ஓடவில்லை. பாடத்தைத் தொடர்ந்து சொல்லித் தரவே அவளால் முடியவில்லை. டீச்சரின் குழப்பத்தைக் கண்டு கௌரிக்கு வேதனையாயிருந்தது. அப்பாவின் மீது கோபம் வந்தது. “என்னப்பா, டீச்சர், உங்க தோள் ராமர் தோள் மாதிரி இருக்குன்னு சொன்னா உங்களுக்குக் கோபம் வருது! சந்தோஷம்னா வரணும்?” என்று தந்தையைக் கேட்டாள்.

ராஜுவின் கடுகடுப்பு மறைந்தது. அவன் திரும்பி, சாந்தினியைப் பார்த்தான். அவளது பார்வையில் இருந்த பயத்தைக் கவனித்தான். ‘என் மனதில் இருக்கும் களங்கத்துக்காக டீச்சரிடம் குற்றம் சொல்வானேன்’ என்று ராஜு நினைத்தான். “அதில்லை, தமிழ் படித் தால் மட்டும் போறாது. இங்கிலீஷும் கணக்கும் சொல்லித் தரணும்னு சொன்னேன்,” என்று சொல்லிவிட்டு மாடியை நோக்கி நகர்ந்தான் ராஜு.

மாடியில் விஜயா உணவருந்திவிட்டுப் படுக்கையில் படுத்திருந்தாள். ராஜு உள்ளே நுழைந்தான்.

“வாக் போயிருந்தேன். திரும்பிவர நேரமாயிட்டது. நீ மருந்து சாப்பிட்டியா?” என்றான்.

“ஆச்சு, சாந்தினியை விட்டு மருந்து கொடுக்கச் சொன்னேன்,” என்று சொல்லிவிட்டு விஜயா கணவன் முகத்தில் நோட்டம் விட்டாள்.

ராஜு எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் படுக்கையில் சாய்ந்து அருகில் ஷெல்பில் வைத்திருந்த ஒரு புத்தகத்தைப் பிரித்தான், அது, டீ.எச்.லாரன்ஸ் எழுதிய ‘லேடி சாட்டர்லீஸ் லவர்’ என்ற நாவல்.

தான் அடிக்கடி விரும்பிப் படிக் கும் ‘லேடி சாட்டர்லியின் காதலன்’ என்ற நாவலுக்கும் தன் வாழ்க்கைக்கும் உள்ள ஒற்றுமையை நினைக்க ராஜுவுக்கு வியப்பாக இருந்தது.

”என்னங்க, எப்போ பார்த்தாலும் அந்தப் புஸ்தகத்தையே படிச்சிட்டிருக்கீங்களே. அதிலே என்ன அவ்வளவு சுவாரசியம்?” என்று விஜயா கேட்டாள்.

“அப்படி ஒன்றும் சுவாரசியமான புஸ்தகமல்ல. ஏதாவது பொழுது போகணுமில்லே. அதனாலேதான் படிக்கிறேன்.”

“அதைப் பார்த்தால் பொழுது போக்குப் புஸ்தகமாத் தெரியல்லியே, என்ன கதைங்க அது?” என்று கேட்டாள். அந்த நாவலின் கதையை ராஜு விஜயாவிடம் சொல்ல விரும்பவில்லை.

“அப்புறம் சொல்றேன் விஜயா.”

“இல்லை, இப்பவே சொல்லுங்க. ஏன் அந்தக் கதையை மூடி வைக்கிறீங்க?”

ராஜுவுக்கு ஆத்திரம் வந்தது. “நான் ஒன்றும் மூடி வைக்கவில்லை. நான் இப்போ கதை சொல்கிற ‘மூட்லே” இல்லை” என்று எரிந்து விழுந்தான்.

ராஜுவின் குரல் அவனையும் அறியாமல் கூச்சலாக மாறியிருந்தது.

மனைவியைப் பார்த்துக் கணவன் கூச்சலிடும் சமயத்தில் சாந்தினி இரண்டு பால் டம்ளர்களுடன் நுழைந்தாள்.

தன்னிடம் உரத்த குரலில் பேசும் போது, இந்தப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறளே என்ற ஆத்திரம் விஜயாவுக்கு வந்தது.

அவள் சாத்தினியிடம் திரும்பி, “உள்ளே வர்ரப்போ கதவைத் தட்டிட்டு உத்தரவு கொடுத்தாத்தான் வரணும்”, என்று கண்டித்தாள்.

“கதவை தட்டினேன். உங்க காதிலே விழல்லிங்க. இனிமேல் கூப்பிட்டுட்டே வாரேன்,” என்று பதில் சொன்னாள்.

“வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லாதே. கௌரி எங்கே?” என்று கேட்டாள் விஜயா.

“குழந்தை என்னோடவே படுத்துக்கிறேன்னு சொன்னாம்மா.”

“உன்னோடு ஒன்றும் படுக்க வேண்டாம். உடனே அவளை மாடிக்கு வரச் சொல்லு.”

“சரிம்மா,” என்று சொல்லிலிட்டு வெளியே போகும்போது ராஜு சாந்தினியையே பார்த்தபடி. இருந்தான்.

– தொடரும்…

– 1964, குமுதம் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *