மனித சொரூபங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2025
பார்வையிட்டோர்: 444 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கூட்டுறவு வைத்திய மனையின் வாயிலை என் கார் அடைந்தபோது தெருவில் நிலைத்திருந்த விழிகளை அகற்றி நேரத்தைப் பார்த்துக்கொண்டேன். இரவு 11-30 மணியாகின்ற இந்த அகால வேளையில் வாசலில் அரைத் தூக்கத்தில் வழிந்து கொண்டிருந்த காவலன் என்னைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத பரபரப்பில் நிமிர்ந்து படபடப்புடன் வாயிலைத் திறந்து விட்டான். அவசர அவசரமாகக் காரை நிறுத்திவிட்டுக் கையில் வீசிய மார்பு காட்டியுடன் இந்த ‘வார்ட்’டை நோக்கி நடக்கும்போது. மாலையில் அநுமதிக்கப்பட்டு, உயிருடன் போராடிக்கொண்டிருந்த அந்த நோயாளியின் நினைவே நெஞ்சில் பளிச்சிடுகிறது. நான் சொல்லிவிட்டு வந்தது போன்றே தாதி நாடித்துடிப்பை மணித்தியாலத்திற்கு ஒருமுறை பார்த்துக் குறித்து வைத்திருப்பாள் என்ற எதிர்பார்ப்புடன் அங்கே நுழைந்தபோது, அந்த நோயாளி இளைஞரின் தாய்தான் என்னை எதிர்பார்க்காத மகிழ்வில் பதறிக்கொண்டு ஓடிவந்தாள். 

“நல்ல நேரத்திலை தெய்வம் மாதிரி வந்திட்டீங்க டொக்டர். நாடித்துடிப்பைக் காணேல்லை. ஏதாவது செய்யுங்கோ. என்ரை ஒரே பிள்ளையைப் பறிகொடுத்திட்டு என்னாலை உயிரோடை இருக்க முடியாதம்மா…” என்ற அத்தாயின் பரிதாபமான கதறல் ஒலி நடந்துகொண்டிருந்த என்னை ஓடவே வைத்துவிட்டது. ஒரு இளைஞன் அநியாயமாக இறக்க விட்டுவிடலாமா? கூடாது! 

நோயாளிக்கு அருகில் தாதியோ அல்லது வேறு உதவியாளர் யாருமோ இல்லாதது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் விசாரணை செய்துகொண்டிருக்கும் நேரம்… அவகாசம்… இப்போது கிடையாது என்பதை உணர்ந்தவளாய் விரைந்து 

நோயாளியைப் பரிசோதிக்கிறேன். சுவாசம் வெகுவாகக் குறைந்து விட்டிருந்தாலும் உயிர் இன்னும் பிரியவில்லை என்பது எனக்குப் புலனாகிறபோது உள்ளார்ந்த குமுறலுடன் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். செயற்கைச் சுவாசம் அளிப்பதற்குத் தேவையான ஆயத்தங்களை என் உடல் விரைந்து செய்து கொண்டிருக்கும்போதே அத் தாயைப் பார்த்து, 

“இங்கே இருந்த ‘நர்ஸ்’, ‘அட்டென்டன்ற்’ எல்லாம் எங்கே போயிட்டினம்?” என்று கேட்கிறேன். 

“அந்த அறையிலே ஒரு ஆளும் இங்கை ஒரு ஆளுமாய்ப் படுத்திட்டினம் அம்மா…” 

“நீங்க போய் அவையளை எழுப்பேல்லையா!” 

“எழுப்பினன் அம்மா, ஒன்றுக்குப் பலமுறை போய் எழுப்பினன்… “உயிர் போகாதெணை, சத்தம் போடாமல் கிடவெணை” என்று ஏசி அனுப்பிட்டினம். எழும்பி வரேல்லை”. 

குமுறி வெடித்துக் கொண்டிருந்த அத்தாயின் அழுகை ஓலம் தற்போது குறைந்து விம்மல்களாகவும், முனகல்களாகவுமே வெளிவந்து கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கு அயர்வு வருவது இயற்கையே என்பதும், மனிதர்கள் யந்திரங்கள் அல்ல என்பதும் உண்மைதான் என்றாலும், மனிதனின் உயிருடன் விளையாடுகின்ற வேளைகளில் ‘அயர்வு’ என்பதை என் உள்ளம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. செயற்கைச் சுவாசமும் தேவையான ஊசி மருந்தும் கொடுக்கப்பட்டு, நோயாளி இனிமேல் உயிர் தப்பிவிடுவான் என்ற நிலை வரும் வரையில் நித்திரையானவர்கள் எழுந்து வரவில்லை. நோயாளி சலனமில்லாமல் அயர்ந்து தூங்கும்பொழுது, நான் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொள்வதை வழிந்தோடும் கண்ணீர்ப் பெருக்குடனும் நன்றியுடனும் அத்தாய் பார்த்துக் கொண்டிருக்கிறாள். 

நேரம் அதிகாலை நாலு மணியாகிற போதுதான் ஏதோ அரவத்தினால் எழுந்துவிட்ட தாதி என்னைக் கண்டு சற்றுத் தடுமாறியபடியே, 

“டொக்டர்… நீங்க…” 

என்று இழுத்தவள் என் முகத்தைப் பார்த்துத் தலையைத் தாழ்த்திக் கொண்டாள். அப்படி ஒரு நிகழ்வு என் வாழ்நாளில் ஏற்பட்டதில்லை எனும்படி என் விழிகள் சிவந்து உடல் படபடத்துக் கொண்டிருந்தது. என் கோப எல்லைமீறி வார்த்தைகள் மெய்ப்பாடு நெருப்பாய் வெளிவந்தன. 

“யூ… கெட் அவுட் பிரம் திஸ் பிளேஸ்… இவ்வளவு நேரமும் செய்த மாதிரி உன்னுடைய வேலையையும் சேர்த்துச் செய்ய என்னாலை முடியும். உங்களைப் போலை ஆக்களை நம்பி வாழவேண்டிய இளந்தமிழ் உயிர்களைப் பலி குடுக்க என்னாலை முடியாது. ஐ சே… ஐ… டோன்ற் நீட் யூ… கெட்… அவுட்…”. 

அந்தக் கட்டடமே அதிரும்படி உரத்துக் கத்திவிட்ட என் குரல் அவளைச் சிறிதே அதிர்வுற வைத்தாலும், சில விநாடிகளில் சுதாரித்துக் கொண்டு பேசாமல் வெளியேறிப் பக்கத்து ‘வாட்’ தாதியுடன் கதைக்கச் சென்றுவிட்டதை நான் அவதானிக்கத் தவறவில்லை. 

“எங்களுக்கு இவர்கள் அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் கொண்டு பயந்து பணியாற்ற வேண்டியதில்லை. ஆனால் அதற்காக… மற்றவனின் உயிரைப் பற்றியே கவலைப்படாத இந்தப் போலித் தன்மையும் பம்மாத்தும்… என்னால் இலகுவில் ஜீரணிக்க முடியவில்லை. 

அடுத்த நாள் நான் உள்ளே நுழைந்தபோது, ‘முற்போக்கு’ என்ற தலைப்பில் யாரோ எழுதிய புத்தகத்தை வைத்து வாசித்துக் கொண்டே ஸ்டைலாகக் காலை ஆட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் என் தாதி. என்னையோ என் வரவையோ இலட்சியம் செய்ததாகக் காட்டிக்கொள்ளவில்லை. 

என்னுடன் எதிர்ப்புக்கொடி காட்ட ஆரம்பித்துவிட்டாள், என்பதை மெதுவாகப் புரிந்துகொண்டேன். முற்போக்கு…? 

மனிதனுக்கு மனிதன் உள்ள வாத்சல்யம், மன நெகிழ்வு, ஒரு மனிதனின் துயர் களைய இன்னொரு மனிதன் செய்யும் தியாகம், இதைப் போன்ற அடிப்படை உணர்ச்சிகள் எல்லாம் மரத்துப் போவதுதான் முற்போக்கா? நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் சிந்திக்கிறேன். சிந்தனையின் நடுவில் நானே சகல வேலைகளையும் செய்துகொள்கிறேன். தாதியின் வேலைகள் பலவற்றை நானே செய்து கொள்வதை எல்லா நோயாளிகளும் அதிசயத்துடன் பார்க்கின்றனர். 

அடுத்த நாள் அந்த வைத்திய மனையின் நிர்வாகசபைத் தலைவர் என்னைக் கூப்பிட்டனுப்பினார். 

“நீங்க எங்கடை நேர்சஸ், அற்றெண்டன்ற்ஸ் மற்ற ஸ்ராவோடை எல்லாம் வலு ஸ்டிறிக்ற் ஆ இருக்கிறீங்களாம். அது பிழை எண்டு நான் சொல்லேல்லை. ஆனால் இந்தக் காலத்திலை இப்பிடி இருக்கேலாது. ஒரு மாதிரி மற்றவையோடை சேர்த்து அவையும் விரும்பக் கூடியதாய்த் தானே நடக்கவேண்டி இருக்கு…’ என்று குழைந்தார். 

“நான் மனித உணர்வுகளை மதிப்பவள்தான். மனிதனின் குறைபாடுகளையும் அறிந்தவள்தான். ஆனாலும் இப்படியான கவலையற்ற கடமை தமிழனின் குணமாக மாறிவருவதை நான் முற்றாக வெறுக்கிறேன்…” என்றேன். 

“அது சரி டொக்டர்… இந்த மைனர் ஸ்ராவ் எல்லாம் கூடி… யூ நோ… டொக்ரேஸ் தங்களை அடக்கி ஆள்றதையும் பேஜண்ட்ஸுக்கு முன்னாலை தங்களை அவமதிக்கிறதையும் எதிர்த்து ஒரு நாள் “ரோக்கின் ஸ்றைக்’ செய்யப் போயினமாம். எல்லாம் வீண் தொல்லைதானே!” என்றார். என் இயல்பான கூர்வுணர்ச்சி என்னை விறைப்படைய வைத்தது. அப்படியானால்… அவர்களின் வேலை நிறுத்தம்பற்றி இவரும் பயப்படுகிறாரா? அல்லது நான் செய்தது தவறு என்று எல்லோரும் சேர்ந்து கோஷமிடுகிறார்களா? 

“அப்போ அவர்களைப் போல நானும் இரவில் நன்றாக நித்திரை கொண்டுவிட்டு… ‘சாகிறவன் சாகட்டும்’ என்று விட்டிருக்க வேண்டுமா? என்று கேட்டேன். 

“ஐ டோன்ற்… சே தட்… பட் யூ… நோ…” என்று விழித்தார். 

நான் விறைப்புடன் வெளியேறிவிட்டேன். வாரங்கள் பல ஓடின. என் குணத்தில் எதுவித மாற்றமும் ஏற்படவில்லை. சந்தர்ப்பத்திற்குத் தக்கதாய் என் நடத்தையை மாற்றிக்கொள்ள என்னால் முடியவில்லை. எதையும் எப்போதும் முழுநிறைவுடன் செய்யும் வலுக்கட்டாயப் போக்கு என்னிடம் இருப்பதைப் போலவே எல்லோரிடமும் இருக்க வேண்டும் என்பதில் வலு கண்டிப்பாகவே இருப்பேன். வேலை நேரத்திற்குப் பிந்தி வருபவர்கள், விரைவாக வேலை செய்யாதவர்கள், இரவு வேலை நேரத்தில் தூங்குபவர்கள், நோயாளிகளுடன் எரிந்து விழுபவர்கள், கவலையீனமாக இருப்பவர்கள்… எல்லாருக்குமே நான் ஒரு பிரச்சினை தான். 

ஒரு நாள், வெயிலில் காத்திருக்கம் நூற்றுக் கணக்கான நோயாளிகளுக்கிடையில் தனது மனைவியை ஒழுங்கு மீறி, பிரத்தியேக சலுகை தந்து, முதலில் பார்க்க நான் மறுத்துவிட்டதில் ஒரு ஆண் தாதிக்கும் எனக்கும் பெரிய வாக்குவாதமாய்ப் போய்விட்டது. 

“இங்கை வேலை செய்யிற எங்கடை குடும்பத்துக்கு இந்த ஆஸ்பத்திரியிலை சலுகை இல்லையெண்டால்…’ என்று அவன் தொடங்க நான் இடைமறித்தேன். 

“நீங்கள் இங்கே வேலை செய்வதால் உங்களிடம் ஆஸ்பத்திரிக் காசு வாங்காமல் விடலாம். அதுதான் சலுகை. காலை முதல் காத்திருக்கும் நோயாளிகளை ஒழுங்கு மீறிக் கவனிப்பது குற்றம். அது சலுகை அல்ல. மிகக் கடுமையான, அவசரம் பார்க்க வேண்டிய நோய் என்றால் முதலிடம் கொடுப்பேன்…” அவன் திருப்பிக் கதைக்க முடியாத கண்டிப்பு என் வார்த்தையில் இருந்தது. உள்ளுக்குள் மறுகிக்கொண்டு போய்விட்டான். இவன்தான் சிற்றூழியர் சங்கத் தலைவன் என்பதும் எனக்குத் தெரியும். நான் எதிர்பார்த்தபடியே இரண்டு நாளில் நிர்வாக அதிபர் மறுபடியும் என்னைக் கூப்பிட்டனுப்பினார். 

“ஐ ஆம் சோ சொறி டொக்டர்… ரு சே… திஸ்… நீங்கள் ஒரு தவறாத, நேர்மையான, கஷ்டப்பட்டு உழைக்கிற டொக்டர் என்பது எனக்குத் தெரியும். ஐ நோ இட்… இருந்தாலும் இங்கே உள்ள எல்லா ஊழியருமாகச் சேர்ந்து உங்களுக்குக் கீழை பணியாற்ற முடியாதெண்டு விண்ணப்பம் செய்திருக்கினம். தாங்கள் எல்லாரும் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்யப் போவதாகப் பயமுறுத்தி யிருக்கினம்…” என்று தயங்கியபடியே அவர்களின் தீர்மானத்தை என்னிடம் காண்பிக்கிறார். நான் அதைப் படித்துக் கொண்டிருக்கும் போதே, 

“ஐ வுட் அட்வைஸ் யூ ரு… றிசைன் திஸ் போஸ்ட்… நீங்கள் சொந்தமாய்க்கூட ஒரு ஆஸ்பத்திரி அல்லது டிஸ்பென்சரி ஆரம்பிக்கலாம் தானே” என்றார். 

எதையும் முழு நிறைவோடு செய்யும் வலுக் கட்டாயப் போக்கு அமைதியைப் பெறுவதில்லை என்று வைத்தியக் கல்லூரியில் உளத்துறைப் பேராசிரியர் போதித்தது நினைவுக்கு வந்து மறைகிறது. 

வேலையில் வருகின்ற இடமாற்றம் இதயம் நின்று விடுவதற்குத் தேவையான முந்நூறு அதிர்ச்சிப் புள்ளிகளில் இருபத்தைந்தைப் பெற்றுத் தருவதாக எங்கோ வாசித்ததும் ஞாபகம் வருகின்றது. அந்த இருபத்தைந்து புள்ளிகளையும் பெற்றுக்கொண்டு அந்தரங்கமாய் உடைந்து நொருங்கிய எத்தனையோ விதமான மனோராஜ்யச் சிதைவுகளையும் சுமந்து கொண்டு, கடமையை நிறைவுறச் செய் தமைக்கும், மற்றவர்களைக் கடமையைச் செய்யும்படி நிர்ப்பந்தித் தமைக்குமாய் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மௌனமாக ஏற்றுக்கொண்டு மனித சொரூபங்கள் சிலவற்றைத் தரிசித்துவிட்ட திருப்தியில் என் கார் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறி விரைந்து கொண்டிருக்கிறது. 

– 1979 வைகாசி சுடர் இதழில் பரிசுக் கதையாகப் பிரசுரமானது.

– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *