பொருத்தங்கள்





(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு கையில் இரண்டு சாதகக் குறிப்புகளும், மறுகையில் வெள்ளிப் பிடிபோட்ட அந்தப் பழைய குடையும், ‘சேட்’ இல்லாத வெறும் இடையில் மடித்துக் கட்டிய வெள்ளை வேட்டியும், மடியில் சொருகிய ஐந்து ரூபா நோட்டுமாக விரைந்து நடந்து கொண்டிருந்தார் நடராசா உபாத்தியாயர். விரதாதிகளால் மெலிந்து வெளிறிப் போயிருந்த அந்த உடலைத் தூக்கிக்கொண்டு நடப்பது சிரமமாய் இல்லாவிட்டாலும்கூட மகளின் விஷயம் இன்னும் நிறைவேறவில்லையே என்ற வேதனையில் உறைந்து இறுகிப் போயிருந்த பாரமான மனம் அவரை அழுத்தி, அவரது நடையில் ஒரு சோர்வை ஏற்படுத்தி விட்டிருந்தது.
சௌமியமான ஒரு காலைப்பொழுது. மரம் நிறைய மஞ்சள் மஞ்சளாய்ப் பூத்துக் குலுங்கும் அந்தப் பெரிய கொன்றை மரத்தடியில், கிழக்கே திரும்பிச் செல்லும் வெள்ள ஒழுங்கையில் இறங்கி நடந்தால், இடதுகைப் பக்கத்தில் இரண்டாவது ஓலை வீடுதான் சாத்திரி சிதம்பரியின் வீடு கனகசபை விதானையாரின் ஓட்டு வீட்டில் பெரிதாக அலறிக்கொண்டிருக்கும் வானொலியில் பிறந்தநாள் வாழ்த்து இன்னும் முடியவில்லை என்பதிலிருந்து நேரம் இன்னும் காலை 7-15 ஆகவில்லை என்பதை மதித்துக்கொண்ட உபாத்தியாயர் கொஞ்சம் வேகத்தைக் குறைத்துக்கொள்கிறார்.
விடிய நாலு மணிக்குச் சொல்லத் தொடங்கினால் காலை எட்டு மணி வரைதான் சிதம்பரிச் சாத்திரியாரின் சாத்திரம் உருப்படியாக இருக்கும். எட்டு மணிக்கு எழுந்து தாக சாந்திக்காக அவர் ‘கோப்பரேஷன்’ பக்கம் போனால், பின்னர் சாத்திரியாரைப் பிடிக்க முடியாது. அந்த ஊரைச் சுற்றிச் சுற்றி வரும் கை ஒழுங்கையெல்லாம் சுற்றிக்கொண்டு,
“டோய்…! இந்தச் சிதம்பரிச் சாத்திரி சொல்லி நடக்காத விஷயம் எது எண்டு கேக்கிறன்… இப்ப சொல்லுறன்… இந்த வரியம் முழுதும் ஒரு துளி மழையும் பெய்யாது. இருந்து பாருங்கோ எல்லாரும்… இந்த ஓல் சிலோன் இலங்கையிலை வேறை எவன் இப்பிடிச் சொல்லுவன்… இல்லை… தெரியாமல்தான் கேக்கிறன்…”
என்று நாக்குழறக் குழறி வான சாத்திரம் சொல்லிக்கொண்டு ஆங்காங்கே விழுந்து கிடப்பார்.
சாத்திரியாரின் வீட்டுப் படலையை உபாத்தியாயர் அடையும்போது உள்ளே சிதம்பரி சாத்திரம் சொல்லும் கம்பீரமான குரல் ஒருவித தாள லயத்துடன் வெளியே கேட்கிறது. அதையும் மேவிக் கொண்டு சாத்திரியாரின் கடைக்குட்டிப் பையன் தாயிடம் அடி வாங்கிக்கொண்டு ‘வீல்’ என்று கதறும் போர்த் தந்திரமுறை காதின் செவிப்பறை மென்சவ்வை இடிபோல் தாக்குகிறது. உபாத்தியாயர் படலையை மெதுவாகத் திறந்து உள்ளே சென்று சாத்திரியார் சொல்லுவதை உற்றுக் கேட்கிறார்.
“ஒருத்தரும் கையாடேல்லை. தென்கிழக்கு மூலையிலை தென்னைமர நிழலிலை மண்ணுக்கை மறைஞ்சுபோய்க் கிடக்குது. சனிபார்வை இருக்கிறபடியால் பாக்கிறவர் கண்ணை மறைக்கும். கிடைக்கிறதெண்டால் மூண்டு நாள் தவணை தாறன், அதுக்குள்ளை கிடைச்சால் சரி பிறகு கிடைக்காது…”
ஏதோ தொலைந்துபோன நகை சம்பந்தமாய் ஆச்சிக்குட்டி ஆச்சிக்கு நினைத்த காரியம் சொல்லிக் கொண்டிருந்த சாத்திரியார் உபாத்தியாயரைக் கண்டு,
“வாருங்கோ வாத்தியார்! இருங்கோ… இரண்டு நிமிஷத்திலை வாறன்” என்று உபசரித்துவிட்டு நினைத்த காரியத்தைத் தொடருகிறார்.
“வடக்கை பாத்துக்கொண்டிருக்கிற ஒரு வைரவருக்கு கற்பூரம் கொழுத்திப் போட்டுத் தேடுங்கோ… கிடைக்கும்… சுத்தமான உடம்போடை, மனத்தோடை கொழுத்தவேணும்… இல்லாட்டிக் கிடைக் காது…
தொலைந்த பொருள் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி தனது சாத்திரம் பிழைத்துப் போகாதவாறு இரண்டு பக்கமும் வாதிடக்கூடிய முறையில் சாத்திரம் சொல்வதில், சிதம்பரிச் சாத்திரியாருக்கு, அவரே சொல்வதுபோல் “இந்த ஓல் சிலோன் இலங்கையிலை வேறை ஆள் கிட்ட நிக்கேலாது.’
ஆச்சிக்குட்டி ஆச்சி விடைபெற்றுச் சென்ற பின்னர். மூன்று வெற்றிலையில் பழம், பாக்கு ஐந்து ரூபா காசு ஆகியவை வைத்துச் சாத்திரியாருக்கு முன்னால் சப்பாணி கொட்டி அமர்ந்து கொள்கிறார் உபாத்தியாயர், நீண்டு நெளிந்து வளைந்திருக்கும் தன் தாடியைத் தடவிக்கொண்டே.
“சாதகத்தோடை வந்திருக்கிறியள். கலியாணப் பொருத்தமோ?” என்று கேட்கிறார் சிதம்பரி
“உங்களுக்குத் தெரியுந்தானே சாத்திரியார்… என்ரை பிள்ளைக்கு என்ன குறை? படிப்பில்லையோ? வடிவில்லையோ? கேட்டபடி அள்ளிக் குடுக்கக் காசு இல்லையோ? என்ன இருந்தும் என்ன சுகம்? ஏழிலை செவ்வாய்க் குற்றம் எண்டு…. ஒரு சாதகமும் பொருந்துதில்லை. பிள்ளைக்கும் இந்த ஐப்பசியோடை முப்பத்திரண்டு வயதாகுது. எத்தினை செருப்புத் தேஞ்சு போச்சுது. வயித்திலை நெருப்பைக் கட்டிக்கொண்டுதானே நானும் அலையிறன்…” மேலே தொடர முடியாமல் உபாத்தியாயரின் கண்களில் நீர் கலங்கி மைகளை நனைக்கிறது. சால்வைத் தலைப்பினால் அதை அவர் தட்டி விடும்போது,
“என்ன செய்யிறது வாத்தியார்? ஏழில் செவ்வாய் எண்டால் கவனமாகத்தானே பாக்கவேண்டி இருக்கு. முன் வீட்டுக்காரரைப் பாக்கேல்லையா! அந்தப்பிள்ளை பரிமளத்திற்கு உதயச் செவ்வாய் எண்டு எனக்குத் தெரியும். அந்தப் பெடியன் ராசாவோடை ‘லவ்வோ, இளவோ ஏதோ எண்டு சாதகப் பொருத்தம் பாக்காமல் செய்தினம். என்ன நடந்தது பாத்தியளோ!”
“என்ன நடந்தது?”
“பிறந்த பிள்ளைக்கு நெடுகலும் வருத்தம். உதுகளிலை ஒண்டும் இல்லை எண்டு சொல்லேலாது…” என்று தன்னிடம் முன் வீட்டுக்காரர் சாத்திரம் கேட்க வராத கோபத்தைப் பொரிந்து தள்ளினார் சாத்திரியார். பிறந்த குழந்தைக்கு வருத்தம் வருவது ஒரு அசாதாரண நிகழ்ச்சி அல்ல என்பதைப் புரிந்துகொண்ட உபாத்தியாயர் சாத்திரியாரை எதிர்த்துக் கதைக்க விரும்பாதவராய்க் கலங்கிய தன் மனதைத் தேற்றிக்கொண்டே மீண்டும் தன் விடயத்தைத் தொடர்ந்தார்.
“இந்தப் பெடியன் எல்லா விதத்திலும் நல்ல பெடியன். கொழும்பிலை நல்ல உத்தியோகம். ஒரு குடிவெறி, மச்ச மாமிசம் இல்லை. சிகரெட் ஊதிற பழக்கம்கூட இல்லை. எங்களைப்போலை சாதுவான பிள்ளை. சீதனம் எல்லாம் பேசி ஒழுங்காக்கியாச்சு… பிள்ளை கந்தசாமியார் கோயிலுக்குப் போன இடத்திலை கண்டு, தனக்குப் பிடிச்சிருக்கு எண்டும் சொல்லிப்போட்டானாம். உருவத்திலையும் இரண்டு பேரும் நல்ல சோடி. சாதகம் மாத்திரம் பொருந்திட்டுது எண்டால், வாற முதல் நாளுக்கே தாலி கட்டிப் போடலாம்…”
இரண்டு சாதகங்களையும் வாங்கி ஆறுதலாக ஆராய்ந்தார் சாத்திரியார்.
“மனுஷ கணம்… இது இராட்சத கணம்… சரி யோனியைப் பாப்பம். ஆண் பாம்பு, பெண் கீரி… அதுவும் அப்பிடி… ம்… சிரோரச்சு. மற்றது அவிட்டம்… அவிட்டம் அதுவும் சிரோரச்சு, புருஷ மரணம்… ம்… உஹும்…”
என்று தனக்குள்ளே ஏதேதோ முனகிக்கொண்டே பொருத்தம் பார்த்த சாத்திரியார் இறுதியாகச் சொன்னார்.
“வாத்தியார் நானும் தெண்டிச்சு உங்களை… ‘செய்யுங்கோ வாத்தியார்’ எண்டுதான் சொல்லப் பாத்தன். ஆனால் என்ன செய்யிறது? நட்சத்திரப் பொருத்தம், இரச்சுப் பொருத்தம், கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம் இப்பிடி முக்கிய பொருத்தங்களே இல்லை. கிரகநிலையும் பொருந்தேல்லை. உங்களைச் செய்யச் சொல்லிப் போட்டுப் பிறகு… நாளைக்கு ஒண்டு வந்திட்டால் என்னையெல்லோ திட்டுவியள்… வாத்தியார் நான் சொல்லுறன்… கவலைப்படாதேங்கோ, உதை விட்டிட்டு வேறை இடம் பாருங்கோ…”
உடலின் குருதியெல்லாம் சிதறிக் காட்டாற்று வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓட, அதில் தானே உயிரற்று மிதந்து செல்வது போன்றதொரு பயங்கரப் பிரமை உபாத்தியாயருக்கு ஏற்பட்டது. இதையும் விட்டால் இனி எங்கே மாப்பிள்ளை தேடுவது? வேதனையில் பஞ்சு பஞ்சாக நைந்து பிய்ந்த உள்ளத்துடன் உபாத்தியாயர் புறப்பட ஆயத்தமானபோது, படலையில் ஏதோ அரவம் கேட்டுத் திரும்பி நிமிர்ந்து பார்த்தார் அவர்.
அழுத கண்ணும் சிந்திய மூக்கும் ஒரு கையில் எடுக்குப் பிள்ளையும் மறுகையில் ஒரு சூட்கேசுமாக வந்தாள் ஒரு பெண்.
“என்னாலை அங்கை இருக்கேலாது அம்மா. எந்த நேரமும் அடியும் உதையும். எத்தினை நாள் தாங்கிறது? நான் என்ன மாடோ மிருகமோ?” என்று விம்மி அழுது பொருமியபடி நிற்பது சாத்திரியாரின் மகள் என்பது உபாத்தியாயருக்குப் புரியச் சில விநாடிகள் எடுத்தன. உள்ளே சமையல் அறையில் இருந்த சாத்திரியாரின் பெண்சாதி பதறிக்கொண்டு ஓடி வந்தாள்.
“என்ன மோனை? என்ன நடந்தது?” மகளைக் கட்டிக் கொண்டாள் தாய். சாத்திரியாருக்கு அந்தச் செயலில் ஒப்புதலில்லை.
“நீ குடுக்கிற செல்லந்தான் பிழை. திருப்பி விடு. அடுத்த பஸ்ஸிலை போகட்டும். அடிச்சால் என்ன… புருஷன்தானே! எனக்குத் தெரியும். சாதகப்படி அவன் தங்கமான பெடியன். ஒரு முன்கோபம்… அதுக்கென்ன செய்யிறது?”
“ஓமோம்… பதினாறு பொருத்தமும் சரி வருதெண்டு சொல்லித்தானே செய்து வைச்சியள். இப்ப என்ரை பிள்ளை கண்ணீரும் கம்பலையுமா எப்போதும் ஓடி வருது. அதுக்கு ஒரு ஆறுதல்கூடச் சொல்ல மனமில்லை” எரிந்து விழுந்தாள் சாத்திரியாரின் மனைவி.
“எடியே… அப்ப என்ரை சாத்திரம் பொய் எண்டு சொல்லுறியே? இந்த ஓல் சிலோன் இலங்கையிலை அப்பிடிச் சொன்னவன் இல்லை. நீ சொல்ல வந்திட்டியே…” என்று உரத்துக் கத்தித் தும்புக்கட்டை எடுத்துக்கொண்டு மனைவியை நோக்கிப் பாய்ந்தார் சாத்திரியார்.
“வாத்தியாற்றை பிள்ளைக்கு வாற மாப்பிள்ளையைப் பொருத்தமில்லை எண்டு குழப்பிறியள்! நீங்கள் பதினைஞ்சு பொருத்தமும் சரியாப் பாத்துச் செய்த உங்கடை பிள்ளை இப்பிடி வந்து ஏன் நிக்குதெண்டு கேக்கிறன்.”
அவள் விடுவதாக இல்லை. உபாத்தியாயர் முன்னிலையில் தன்னை அவமானப் படுத்திவிட்ட ஆவேசத்தில் அவளைத் தும்புக் கட்டையால் விளாசு விளாசென்று விளாசி விட்டார் சாத்திரியார்.
இந்தக் குழப்பங்களுக்கிடையில் மெதுவாக இடத்தைவிட்டு நழுவினார் உபாத்தியாயர். சாத்திரியார் பொருத்தமில்லை என்று சொன்ன திருமணத்தைச் செய்வதா? விடுவதா? அல்லது இன்னொரு சாத்திரியாரிடம் கேட்பதா? சாத்திரியார் சரியாப் பொருத்தம் பார்த்துச் செய்த திருமணமும் நிறைவாக இல்லையே! அவருக்கு எல்லாம் ஒருவித குழப்பமாயிருந்த அதேநேரத்தில் அந்தக் குழப்பத்தில் ஒரு தெளிவும் தோன்றுவதுபோல் இருந்தது. முன்வீட்டுப் படலையில் நின்று நடந்ததெல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பரிமளா வின் தந்தை.
“வாத்தியார்! என்ரை பிள்ளைக்கு நான் பொருத்தம் பாக்கேல்லை. அவள் மனம் விரும்பியபடி செய்து வைச்சன். இப்ப என்ன குறை வந்திட்டுது? அவளை மருமேன் இராசாத்தி மாதிரி வைச்சிருக்கிறார். எல்லாம் பொருந்தி வந்தால் சாதகத்தை மாத்திரம் நம்பிக் கலியாணத்தைக் குழப்பிறது புத்தியில்லை.” என்று சொல்வது உபாத்தியாயரிடம் ஏற்பட்டிருந்த தெளிவை மேலும் துலக்கி விடுகிறது.
“சாத்திரியார் நல்ல பொருத்தம் என்று சொன்னவர்” என்று ஒரு பொய்யைச் சொல்லித் திருமணத்தை நடத்தி விடுவது என்ற திடமான முடிவுடன் வெளியேறி, விழிப்புடன் நிமிர்ந்து நடக்கிறார் உபாத்தியாயர்.
– 1979 ஒக்டோபர் ‘மல்லிகை’ இதழில் பிரசுரமானது.
– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.