கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 7, 2025
பார்வையிட்டோர்: 6,365 
 
 

அத்தியாயம் 1.1-1.3 | அத்தியாயம் 1.4-1.6

பாகம்-1

1.1 தளிர்

நாதசுரக்காரன் எழுப்பிக் கொண்டிருந்த தோடி ராகத்தின் இன்னிசையை அமுக்கிக் கொண்டு பாண்டு வாத்தியக்காரர்களின் சப்த ஜாலங்கள் செவிகளில் வந்து பாய்ந்தன. ஊர்வலத்திற்குத் தயாராகக் கார் வந்தாகி விட்டதென்பது தெரியும்படி மூலை முடுக்கில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள், ‘நான் ஏறிக் கொள்ளப் போகிறேன்; நானும் நானும்’ என்று குதித்துக் கொண்டு வாயிற்புறம் ஓடினார்கள். முகூர்த்தத்தின் போது மடிதாறு வைத்து உடுத்திய கூறைப் புடவையின் கசங்கிய பாகங்களைப் பல்லைக் கடித்துக் கொண்டு பெரிய அக்கா இன்னமும் பிரித்துக் கொண்டிருந்தாள். பக்கத்திலே அவளுடைய மூத்த பெண் சாமளி கீழே சாமான் அறையின் குப்பையும் தூசும் புடவையிலே படாதபடி அவள் பிரித்த பாகத்தை முகத்தைச் சிணுக்கி முணுமுணுத்தபடியே தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் முன்பாகக் காரில் போய் உட்கார முடியவில்லையே என்ற துக்கம் அவளுக்கு. பங்குனி மாதத்திய வெப்பமும் புழுக்கமும் நிரம்பிய அறையும், பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சமும், முடமுடவென்று புது ஆடைகளும் எனக்கு வேர்த்துக் கொட்டியது. கசங்கிய மஞ்சள் பட்டிருந்த கைக்குட்டையால் முகப் ‘பவுடரும்’ குங்குமமும் கலந்து வழிந்த வேர்வையைத் துடைத்துக் கொண்டு பொம்மை போல் நின்ற நான், “போதுமே அக்கா! அப்படியே உடுத்தி விடேன்!” என்றேன் அலுப்புடன்.

“நன்றாகத்தான் இருக்கு! ஒரு நாள் கல்யாணத்திற்கு இந்தப் பாடு படுத்தறயே? நாங்களெல்லாம் அஞ்சு நாள் எப்படி இருந்திருப்போம்? ஊர்வலத்துக்கு இப்படி வெறும் பின்னலோடா இருப்போம்? தலையிலே இரண்டு ‘டன்’ கனம் அழுத்தும். கழுத்திலே காசுமாலை முள்ளுப்போல குத்தும். இருக்கிற நகை அவ்வளவையும் சுமந்து கொண்டு வாயைத் திறக்க மாட்டோமே! நலங்கின் போதே புடவை ஒரே சுருக்கமாக இருந்தது; நன்றாக இல்லை. இதோ ஆச்சு. சற்று இரு” என்று ஒரே போடாகப் போட்டு விட்டாள் அவள்.

பிள்ளை வீட்டார் வந்து விட்டார்கள் போல் இருக்கிறது. மாமா அறை வாயிற்படியில் நின்று கத்தினார். “இன்னுமா ஆகவில்லை? மாப்பிள்ளை தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார். சீக்கிரம் ஆரம்பித்தால் தான் தாமதமில்லாமல் முடியும்!”

ஒரு வழியாகப் பதினெட்டு முழப் புடவையைக் கொசுவிக் கொசுவி என் பாவாடைக்குள் வைத்துத் திணித்தாள் அக்கா. கெட்டிச் சரிகைத் தலைப்புத் தோளில் ‘டங்’கென்று நின்று நகைகளுக்கு மேல் அழுத்தியது. பரக்கப் பரக்க ஒட்டியானத்தை மாட்டிவிட்டு மாலையைப் போட்டவள் என் முகத்தைக் கவனித்துவிட்டு, “நெற்றிக் குங்குமத்தை அழிச்சுண்டுட்டியேடி சுசீ. போய் முகத்தையே சட்டுனு அலம்பிண்டு வா. புடவையிலே தண்ணீர்படாமல்” என்று உத்தரவிட்டாள்.

“வேண்டாம், அக்கா. இப்படியே துடைத்துப் பொட்டு வைத்துக் கொண்டால் போதும். இப்பத்தான் சற்று முன்பு முகம் அலம்பினேன். கண்ணாடியை மட்டும் கொடு” என்றேன் நான்.

“கண்ணாடி எங்கே? அடியே சாமளி! சனியன் அதுக்குள்ளே ஓடிப் போயிடுத்து பார். அவதானே வச்சு அழகு பாத்துண்டிருந்தா? சாமளி, சாமளி!” என்று அந்த இரைச்சலில் கத்திக் கொண்டே இடுப்பில் இருந்த கொத்துச் சாவி கிலுங் கிலுங்கென்று சப்திக்க அவள் வெளியே போனாள்.

அந்தக் கண்ணாடியை எத்தனை தரம் தேடியாகி விட்டது அம்மாடி! வீடு விட்டு வீடு வந்து கல்யாணம் என்றால் எத்தனை சிரமம்! வைத்த சாமான் வைத்த இடத்திலே இல்லை. மூலைக்கு ஒரு துணியும் மணியுமாக இறைந்தாலும் சமயத்திற்கு வேண்டிய பொருளைத் தேட வேண்டியதாக அவ்வளவு அமளி துமளியாக இருந்தது.

அக்கா கண்ணாடி கொண்டு வரவில்லை. மாமா மறுபடியும் வந்து விட்டார்.

“இன்னும் என்ன? அதற்குள்ளேயே மாப்பிள்ளையை இப்படியாக் காக்க வைப்பது, சுசீ?” என்று பேச்சோடு கேலியையும் கலந்து துரிதப்படுத்தினார்.

“இல்லையே! நெற்றிக்கு இட்டுக் கொள்ள வேண்டியதுதான் பாக்கி. கண்ணாடியைக் காணோம்” என்றேன்.

“சரி தான் போ. இப்போதுதான் கண்ணாடியைக் காணோம், மூக்காடியைக் காணோம் என்று தேடுகிறீர்களா? தங்கம் எங்கே? அடியே தங்கம்!” என்று கத்திக் கொண்டு அவரும் போனார்.

நல்ல ஊர்வலம் வேண்டியிருக்கிறது! சரியான ஆகாரம் இல்லை; தூக்கம் இல்லை. ‘அம்மாடி’ என்று காலை நீட்டிக் கொண்டு எனக்குப் படுத்துத் தூங்கலாம் போல உடம்பு கெஞ்சியது. அப்போது, “இன்னம் புறப்படவில்லையா?” என்று கேட்டுக் கொண்டே காந்த விளக்கின் ஒளியில் வைர அணிகள் டாலடிக்க அசக்கி அசக்கி நடந்து வந்த என் ஓரகத்தி புன்னகை பூத்தாள்.

“இதோ ஆச்சு” என்று அதற்குள் ஓட்டமும் நடையுமாக வந்த அக்கா, “கண்ணாடி எங்க போச்சோ? நான் இட்டு விடுகிறேன்” என்று என் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்தாள். பரபரப்பில் அவள் முறுக்கிய கொண்டையிலிருந்து ஊசி நழுவியது. புடைவைக் கொசுவம் இழித்து கிழே புரண்டது. எனக்கு அவள் நிலை சிரிப்பை ஊட்டியது. “ஆகட்டும், ஆகட்டும்!” என்று மாமா பராக் சொல்ல என்னைக் கிளப்பி வரும் பெருமைத் தோற்றத்துடன் ஓரகத்தி என் தோளைப் பிடித்துக் கொண்டு நடக்க, நான் ‘தஸ் புஸ்’ என்று புடவை செய்த சத்தத்துடன், வாயிற்புறம் வந்தேன்.

தயாராகப் பன்னீர்ச் செம்பு வைத்துக் கொண்டு நின்ற வெங்கிட்டு அத்தான் “தூங்கி விழுந்து விடாதே அவர் மேல்!” என்று சிரித்தபடியே என் மேல் பன்னீரைத் தெளித்தான். அத்தனை புருஷர்களுக்கு நடுவே அவன் செய்த கேலிக்குத் தலை குனிந்த நான் வாசல் கம்பத்திலே லேசாகச் சாய்ந்து நின்றேன்.

“இன்னும் நிற்பானேன்? வா, வா” என்று பெரிய அத்திம்பேர் அவசரப்படுத்தியதற்கு வெங்கிட்டு, “அட மக்கு அத்திம்பேரே! அவர் வந்து கையைப் பிடித்து அழைத்துப் போக வேண்டாமா?” என்று கூறி இடி இடியென்று நகைத்தான்.

உடனே என் ஓரகத்தி, “என்ன ராமு, அங்கேயே நிற்கிறாயே; வந்து கையைப் பிடித்து அழைத்துப் போ!” என்றாள்.

காஸ் விளக்கின் அடியில் ‘ட்வீட்’ நிஜாரும் ‘கோட்டு’மாக மாலைக் கழுத்துடன் நின்ற என் கணவர் ஜோட்டுக் கால்கள் சத்தம் செய்ய என் அருகில் வந்த போது முகத்திலே புன்னகை அரும்பியது. என் கண்களுக்குப் புதுமையாக இருந்த அவருடைய அந்தக் கோலம் எனக்கு மனத்தில் பிடித்திருந்த அலுப்பை அகற்றிப் புத்துணர்ச்சி ஊட்டியது. சில்லென நான் உணர்ந்த அவரது வலிமை பொருந்திய கரத்துள் பஞ்சு போன்ற என் கை அடங்கி விட்ட போது, ‘ஆணுக்குப் பெண் அடங்கியவள் தான்’ என்று அறிவித்தது போல் இருந்தது. மாப்பிள்ளை பெண்ணுக்கு மட்டும் கணக்காக இடம் ஒதுக்கிவிட்டு, காரின் மற்ற உட்காரும் பாகங்களில் நிரம்பியிருந்த குஞ்சு குழந்தைகளை மேற்பார்வை பார்க்கும் தோரணையில் நின்றான் அம்மாஞ்சி சுப்பிரமணியன்.

என் புடவையின் தலைப்பு அவர் மேல் லேசாக உராய, நான் அவர் அருகிலே அமர்ந்தேன். மேல் மூடி அகற்றி மடக்கி விடப்பட்டிருந்த அந்தப் பழைய கார் ‘கர்… புர்ர்…’ என்று உறுமிக் கொண்டு புங்கனூர் வீதிகளை வலம் வரத் தொடங்கியது.

அப்பாடா! கடைசியில் ஊர்வலம் ஆரம்பமாகி விட்டது! இதற்குத் தான் எத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடந்தன! என் கல்யாணப் பிரச்னை கூட அப்பாவுக்குப் பெரிதாக இருக்கவில்லை. இந்த ஊர்வலப் பிரச்னை எங்கள் வீட்டையே ஒரு கலக்குக் கலக்கிவிட்டது. அப்பாவின் கோப தாபம், அம்மாவின் பட்டினி, கண்ணீர் எல்லாவற்றையும் கிளப்பி வைத்த தனிப் பெருமை இந்த ஊர்வலத்துக்கு உண்டு. விவாகம் நிச்சயமானவுடனேயே அம்மா, “கார் ஏற்பாடு செய்து விட்டீர்களா, மாப்பிள்ளை அழைப்புக்கும் ஊர்வலத்துக்கும்?” என்று கேட்டாள்.

அப்பா அழுத்தம் திருத்தமாக, “சுசி கல்யாணத்திற்கு ஊர்வலம் கிடையாது. ஆமாம், நிச்சயம் பண்ணி விட்டேன். மடப்பயல்! மாப்பிள்ளை அழைப்புக்கும் மறுநாளைய ஊர்வலத்துக்குமாக இருபத்தைந்து ரூபாய் கேட்கிறான். ஓர் ஓட்டைக் காரை வைத்துக் கொண்டு” என்றது அம்மாவைத் தூக்கிவாரிப் போட்டு விட்டது.

“நீங்க சொல்வது நன்றாக இருக்கே! ஆனால் மாப்பிள்ளை அழைக்க வேண்டாமா? பணம் அதிகமாகக் கேட்குறான்னு செய்ய வேண்டிய காரியத்தை நிறுத்தினால் நாலு பேர் என்ன சொல்ல மாட்டார்கள்? கேட்கிறவர்கள் சிரிக்கப் போகிறார்கள், நீங்கள் சொல்வதைக் கேட்டு” என்றாள் அவள்.

“மாப்பிள்ளை வேண்டுமானால் பன்னிரண்டு ரூபாய் தொலைகிறது என்று அழைத்து விட்டுப் போகிறேன். ஊர்வலம் வைக்க வேணும் என்று சாஸ்திரம் கண்டிப்பாகக் கிடையாது. அயோக்கியப் பயல்! இதுதான் சமயம் என்று வாய் கூசாமல் கேட்கிறான்!” என்று அவர் இரைந்தார்.

இரண்டாயிரத்தைந்நூறு ரூபாய் சுளையாக வரதட்சிணை கொடுத்து விட்டு, மேலே கல்யாணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும் போது ஏற்கனவே இரு பெண்களுக்கு விவாகம் செய்வித்து வற்றி வறண்ட எலுமிச்சம் பழத்தோல் போன்ற ஏழை குமஸ்தாவாகிய அவருக்கு ஊர்வலத்துக்கு இருபத்தைந்து ரூபாயாகும் என்றதும் கோபம் வராமல் என்ன செய்யும்? ஆகவே அவர் சல்லிக்குச் சல்லி கணக்குப் போட்டு இதில் சிக்கனம் செய்யலாமா, அதில் மீதம் பிடிக்கலாமா என்று ஆராய்ந்தார். அம்மாவுக்கோ கூடிய வரை எதிலும் மூளி வைக்கக் கூடாது என்று அவா. “ஒரு பெரிய விசேஷமானால் கூட நூறு இருநூறு செலவழியத்தான் செய்யும்? அதற்கு இப்படியா கணக்குப் பார்ப்பா? நம்ம தரித்திரம் இருக்கவே இருக்கு. ஊர்வலம் இல்லாமல் என்ன கல்யாணம்? உங்களிடம் கொண்டு வந்து ஈசுவரன் இப்படி என்னைப் பிணைத்து வைத்தானே? ஏறு என்றால் மாறு என்று கொண்டு!” என்று அவள் தன் வழக்கமான அஸ்திரங்களைப் பிரயோகம் செய்து அப்பாவை ஊர்வலம் விடச் சம்மதிக்க வைத்ததை எழுதினாலே தனிப்பெரும் புராணமாக ஆகிவிடும்.

குழந்தை குஞ்சுகளுடன் எங்களையும் சுமக்க மாட்டாமல் மூச்சுத் திணறுவது போல் சப்தம் செய்து கொண்டு கார் மெதுவாக ஊர்ந்தது. பின்னே பெண்கள் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு வந்தது எங்கள் காதிலே விழாதபடி மாமா ஏற்பாடு செய்திருந்த அந்தப் பாண்டு வாத்திய கோஷ்டி சினிமா கீதங்களை அள்ளி அள்ளி வீசியது. தூங்கி விழுந்த குழந்தை ஒன்று என் காலிலே சாய்ந்தது. இரவிலே வானத்து நட்சத்திரங்களைப் பார்ப்பதில் எனக்கு அளவற்ற ஆசை உண்டு. என் வாழ்க்கை ஆறு, முக்கியமான கட்டம் ஒன்றில் வந்திருக்கும் இன்று, வான வீதியைப் பார்க்கத் திடீரென ஆசை தோன்றியது. அதனுடனே வானவீதி ஒளி பெற்றிருந்தால் நம் வாழ்வும் அது போல ஒளிவிடும் என்ற அர்த்தமற்ற அசட்டு நம்பிக்கை கூட என்னுள்ளே முன்பின் நான் அறியாமலே எழுந்து விட்டது. இந்த எண்ணம் திடீரென எப்படித் தோன்றியது. ஏன் தோன்றியது என்று காரணம் கூற முடியாது. மனக்குதிரை கடிவாளமின்றி ஓடும் போது தனக்குத்தானே இத்தகைய எண்ணங்களில் சபலமுற்று நின்று முரண் செய்வதுண்டு. வானத்து ஒளிக்கும் வாழ்க்கையின் ஒளிர்வுக்கும் என்ன சம்பந்தம். இது என்ன முட்டள் நினைப்பு என்று எனக்கு அப்போது சிறிதேனும் மனத்திலே உறைக்கவில்லை. எப்படி உறைக்கும்? வாயிற் படியில் தலையை அவிழ்த்துக் கொண்டு நிற்கலாகாது. தும்மும் போது எந்தக் காரியத்தையும் ஆரம்பிக்கலாகாது என்பன போன்ற கொள்கைகளூடே பக்குவம் பெற்ற கிராம மங்கைதானே நான்?

ஆனால் மனப்பெண்ணின் மீதே எல்லார் கவனமும் இருக்கும் போது, கழுத்தை நிமிர்த்தி அண்ணாந்து பார்க்கலாமா நான்? ஏற்கனவே அம்மாவும் அத்தையும், “குனிஞ்சு உட்கார், சுசி. கல்யாணப் பெண்ணா லட்சணமா இல்லாமல் அங்கும் இங்கும் இப்படியா திரும்பித் திரும்பிப் பார்ப்பார்கள்?” என்று கோபித்துக் கொள்கிறார்கள். கழுத்து வலி பொறுக்காமல் என்னையும் அறியாமல் மாலை சற்று நிமிர்ந்து விட்டேன் போல் இருக்கிறது. தங்கம் என்னையே கவனித்துக் கொண்டிருந்திருக்கிறாள். மளுக்கென்று என் தலையைப் பிடித்து குனிய வைத்த போது எனக்குக் கழுத்துச் சுளுக்கிக் கொள்ளாமல் இருந்தது நல்ல காலந்தான். அதைப் பார்த்து என் பெரிய ஓரகத்தி வேறு சிரித்தாள். ‘பாவம்’ என்று என் நிலையை நினைத்து நகைத்தாளா, அல்லது எனக்கு மணப்பெண்ணாக இருக்கத் தெரியவில்லை என்று நகைத்தாளா என்பது எனக்கு இன்னமும் விளங்கவில்லை.

புங்கனூர் வீதியின் பள்ளம் ஒன்றில் அறியாமல் வண்டி விழுந்து விட்டது போலும். திடீரென ஏற்பட்ட குலுக்கல் என்னை அவர் மேல் சாய வைத்தது. பக்கத்திலே பன்னீர்ச் செம்பு சகிதம் நெருங்கி வந்து கொண்டிருந்த வெங்கிட்டு ஒரேயடியாகச் சத்தம் போட்டு நகைத்தான்.

எனக்கு முகமெல்லாம் ரத்தம் ஏறிவிட்டது போல் இருந்தது. சமாளித்துக் கொண்டு சரியாக உட்கார்ந்தேன்.

“மாப்பிள்ளை ஸார், எங்கள் சுசி பஞ்சுக் கனங்கூட இல்லாதவள், பார்த்தீர்களா? வண்டியின் குலுக்கலில் அசைந்து விழுந்து விடாதபடி அவளை நன்றாகப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றான் அந்தக் குறும்புக்காரன்.

அவரும் புன்னகை செய்த வண்ணம் என் பக்கம் திரும்பிப் பார்த்தார். நானோ குனிந்த தலை நிமிராமல் என் கைகளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

இதற்குள் பின்னே திரும்பிய மாமா, “டேய் வெங்கிட்டு, சுத்த முட்டாளாக ஏண்டா காரைச் சுத்திச் சுத்தி வரே? இப்படி வா. அவர்கள் ஏதாவது பேசுவதாக இருந்தாலும் இடைஞ்சல் செய்து கொண்டு?” என்று கத்தினார்.

அவன் தலை தெறிக்க ஓடினான்.

விவரம் புரியாத ஓர் உணர்ச்சி என் நெஞ்சைப் படபடக்க வைத்தது. அது சந்தோஷமா, பயமா, கோபமா என்று என்னாலேயே தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் கை எப்படி என் மடிமீதிருந்த கையை எடுத்துக் கொண்டதென்று நான் அறியவில்லை. என் உள்ளங்கையை ஓர் அழுத்து அழுத்தி, “சுசீ!” என்று அவர் என் காதுகளில் மட்டும் படும்படியாகக் கூப்பிட்ட போது திறந்திருந்த என் மனத்திரை காற்றிலே அடித்துக் கொள்ளும் ஜன்னல் திரை போல வேகமாகச் சத்தம் செய்தது. பக்கத்து வீட்டு ஜானி என்னிடம் கூறியவை எல்லாம் திறந்துவிட்ட குழாயிலிருந்து கொட்டுவது போல என் நினைவில் வந்து நிரம்பின. ஜானி என்னை விட இரண்டு வயசு பெரியவள். அவளுக்குச் சென்ற வருஷந்தான் மணம் நிகழ்ந்தது. மனத்திலே குமிழியிடும் மகிழ்ச்சியுடனும் ஆசையுடனும் அவளுடைய ‘அவர்’ முதல் முதலிலே எப்படி அவளிடம் பேசிப் பழகினார் என்ற இன்ப நிகழ்ச்சிகளை என்னிடம் அவள் கூறிய போது எனக்கு அவ்வளவாக ரஸிக்கவில்லைதான்.

இப்போது…? அவர் கூப்பிட்ட குரலுக்கு எப்படிப் பதில் கூறுவது? என்ன கூறுவது? ஆனாலும் ஜானி சொல்வது போல, இந்தப் புருஷர்களுக்கே அசாத்திய துணிச்சல் தான். எனக்கு நாக்கு எழும்பவில்லை. கைக்குட்டையால் நெற்றியைத் துடைத்துக் கொண்டேன்.

“மிகவும் புழுக்கமாயிருக்கிறதில்லை?” என்றார் அவர், அடுத்த படியாக. தலையை அசைக்காமலேயே நான் “ஊம்” என்றேன்.

“கூப்பிட்டால் பதில் சொல்ல மாட்டாயோ என்று பயந்தேன். ஆமாம், இன்று முழுவதும் நீ ஒன்றுமே சாப்பிடவில்லையே; களைப்பாக இருக்காதா? அசடு போல் இப்படியா கூச்சப்படுவது?” என்றார் உரிமையுடன். இந்த அரை நாளில் அவர் என்னிடம் எத்தனை சுதந்திரம் கொண்டாட ஆரம்பித்து விட்டார்.

விருந்தும் உபசாரமும் திருமண வைபவத்தில் ஏகமாக நடக்கின்றன. ஆனால் மணப்பெண்ணைப் பொறுத்த வரையில் கிட்டத்தட்டப் பட்டினி தான். முன்னே அறிமுகம் இல்லாத புது மனிதனுடன் உட்கார வைத்து கும்பல் கும்பலாக ஆண்களும் பெண்களும் கூச்சலும் கேலியுமாக ரகளை பண்ண, விருந்து செய்கிறார்களாம் விருந்து! நான் அன்று இலையையே தொடவில்லை. காபி காபி என்று அதைக் குடித்தே வயிற்றை நிரப்பி இருந்தேன். அதைத்தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார்.

“உள்ளே போய் ஏதாவது சாப்பிட்டாயா இல்லையா?” என்றார் பின்னும்; விடமாட்டார் போல் இருக்கிறதே!

‘இல்லை’ என்ற உண்மையைச் சொல்லாமல் அதற்கும் “ஊம்” என்றேன்.

“ரொம்பவும் வெட்கப்படுகிறாயே, சுசீ; எங்கள் வீட்டில் மன்னி எல்லோரும் எப்படி சகஜமாகப் பழகுகிறார்கள், பார்த்தாயா? அப்படி நீயும் இருக்க வேண்டும். ஆண்பிள்ளையைக் கண்டுவிட்டாலே வாரிச் சுருட்டிக் கொண்டு சமையலறைக்குள் ஓடும் பெண்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது” என்று முதலிலேயே அவர் தம் அபிப்பிராயத்தைத் தெரிவித்த போது நான் பூரித்துப் போனேன்.

அப்பா முதல் நாளே வந்து சொன்னார். “சுசியகத்தில் எல்லோரும் மிகவும் நாகரிகமாகப் பழகுகிறார்கள். மைத்துனருடன் பேசக்கூடாது, மாமனாரைக் கண்டால் எழுந்து ஓட வேண்டும் என்ற தொந்தரவெல்லாம் அவளுக்கு இருக்காது. இன்று மத்தியான்னம் அவளுடைய ஓர்ப்படிகள் சரிக்குச் சமமாக உட்கார்ந்து சீட்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். நாளை நம் சுசீலாவும் அப்படித்தான் இருப்பாள்” என்றார் என்னை நோக்கிச் சிரித்துக் கொண்டே. அப்போது எனக்கு எத்தனை பெருமையாக இருந்தது! பாவம் என் சின்னக்கா ஜகதுவுக்குப் பொறாமையாகக் கூட இருந்திருக்கும். படு கர்நாடகமான பட்டிக்காட்டில் அவள் வாழ்க்கைப்பட்டிருந்தாள்.

மூன்றாம் தடவையாக அவர் கோரிக்கைக்கு நான் ‘ஊம்’ கொட்டினேன். என் கையைக் கொஞ்சம் பலமாக அழுத்தி அவர் “சுசீலா நீ எவ்வளவு இனிமையாகப் பாடுகிறாய் தெரியுமா? அன்றைக்கு நீ பாடினாயே அதை என் ஆயுள் முழுவதும் மறக்க முடியாது. பெண் பார்க்க என்று நான் என் வாழ்க்கையிலே ஒரே ஒரு தரந்தான் வந்தேன். அப்போதே நீதான் எனக்காகப் பிறந்திருப்பவளென்று தீர்மானித்து விட்டேன்” என்றார்.

இந்த வார்த்தைகள் என் செவிகளில் விழுந்த போது இருதயந்தான் எப்படி விம்மியது? நான் இனிமையாகப் பாடுகிறேன் என்று எத்தனையோ பேர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் இன்று அவர் சொல்லும் போது என் மனக்கிண்ணம் அட்சய பாத்திரம் போலப் பொங்கிப் பொங்கிப் பெருகுவானேன்?

அவர் என்னைப் பார்க்க வந்த போது பாடுவதற்குப் பாட்டு அம்மாமி தான் பொறுக்கித் தந்தாள். ‘மனமுவந்தருள் செய்யத் தாமதமேனோ’ என்று துவங்கும் அந்தப் பாட்டை நான் பாடமாட்டேன் என்று தான் மறுத்தேன். “சொன்னால் கேட்க வேண்டும்” என்று அம்மாவும் சேர்ந்து கடிந்து கொண்ட போது விளையாட்டுப் போல அதைப் பாடி விட்டேன். அதைக் குறித்து வைத்துக் கொண்டு இப்போது கேட்கிறாரே, பொல்லாத மனிதர்! பாட்டையும் பாடச் சொல்லிவிட்டுக் கல்யாணம் நிச்சயமான தினத்திலிருந்து அம்மாமி என்னைத் துளைத்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

நானே வேண்டுமென்று அந்தப் பாட்டைப் பாடியதாக அவர் நினைத்திருப்பதை அறிந்து அளவற்ற மகிழ்வெய்தினேன். “என்னையும் முதல் முறையாகப் பார்க்க வந்தவர் நீங்கள் தாம்” என்று கூற மனம் துடித்தது. ஆனால் கூச்சம் தடுத்தது.

“என்ன ராமு? ஒரு நாழிகையாகப் பேச்சு வெளுத்து வாங்குகிறாயா! ஊம், ஊம் என்று அவள் எத்தனை ஊம் கொட்டுகிறாள்?” என்று சிரித்துக் கொண்டே என் பெரிய ஓரகத்தி காரின் பக்கமாக வந்து குரல் கொடுத்தாள்.

நான் இந்த உலக சிந்தனைக்கு வந்தேன். அவருக்குத்தான் எத்தனை துணிச்சல்!

“ஒன்றும் பிரயோசனம் இல்லை, மன்னி. ஊம் ஊம் என்பதைத் தவிர வேறு வார்த்தையே வெளியே வரமாட்டேன் என்கிறது!” என்றார் என்னைத் திரும்பிப் பார்த்து நகைத்துக் கொண்டே.

நான் ஊம் கொட்டினதை அவர் மூலமே அவள் தெரிந்து கொண்டு விட்டதை அறிந்ததும் வெட்கம் என் முகத்தில் சூடேற்றியது. சுமாராக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தவள், தலையை மறுபடியும் கவிழ்த்துக் கொண்டேன்.

அவர் இப்போது முன்னே சென்ற என் மைத்துனரையும், அருகே வந்த ஓரகத்தியையும் பார்த்தேன். அப்போது ‘உங்களுக்கு எல்லோரும் எப்படி எப்படி உறவோ அப்படித்தான் இனி எனக்கும் உங்களுக்கு மரியாதைக்கு உரியவர்கள் எனக்கும் அளவில்லாத மரியாதைக்கு உரியவர்கள்!’ என்று என் மனம் கற்பித்துக் கொண்டபடியே சொல்ல வார்த்தைகள் மேலுக்கு வந்தன. ஆனால் அந்தப் பாழும் சங்கோசம் உள்ளுக்கு இழுத்துக் கொண்டது. ஆம், அவர் குரலில் அவர் விருப்பம் அப்படி இருப்பதாக எனக்குத் தொனித்தது.

என்னையே கவனித்துக் கொண்டிருந்த மன்னி, “நம் வீட்டுக்கு வந்து நாலு நாள் ஆகிவிட்டால் நீ போதும் போதும் என்று முறையிடும்படி பேசிவாள். ஏன் அம்மா சுசிலா? அவன் முதலிலேயே புகார் பண்ணும்படியா நடப்பது?” என்று முறுவலித்தாள். என்னை அறியாமலேயே என் இதழ்கள் அவளைப் பார்த்து மலர்ந்தன. அந்தக் கணத்தில் நான் வண்ண மலர் வாசம் சூழும் உலகம் எதிலோ கவலையற்றுச் சஞ்சரிப்பதாக உணர்ந்தேன். என்னை விட பாக்கியசாலி யாருமே உலகத்தில் இருக்க முடியாது என்று எண்ணினேன். சிறு வயசிலேயே தந்தையை இழந்திருந்த என் கணவர், பெரிய தமையன் மதனி இவர்களுடைய அன்பிலும் அரவணைப்பிலும் வளர்ந்தவர் என்றும் தற்போதும் அவர்களுடனேதான் இருக்கிறார் என்றும் எனக்குத் தெரியும். எனவே அவர்களைத் தாய் தந்தையர் போலப் பாவிப்பது இயல்புதானே? அவர் மூலமாக இந்தச் சொற்கள் வந்த பிறகு மதனி என் கண்ணுக்கு அன்புருவாகத் தென்பட்டாள். அவர் மலர் முகமும் அகலக் குங்குமப் பொட்டும் என் மனத்தில் உயிர் பெற்று நான் அவளுடன் அன்பால் பிணைந்து வாழ்க்கை நடத்தப் போகிறேன் என்ற நினைப்பை எழுப்பி என்னைக் குளிர வைத்தன. இப்படி எந்தப் பெண்ணுக்காவது புக்ககம் வாய்க்குமா? சின்ன அக்கா ஜகது இருக்கிறாளே, அவள் மாமனார் மாமியார் எதிரில் இன்னமும் அத்திம்பேருடன் பேசமாட்டாள். முழுசாக ஒரு நாள் கூட ஆகவில்லை. இவ்வளவு சகஜமாக மதனியை வைத்துக் கொண்டு என்னைப் பேச்சுக்கு இழுக்கிறாரே! சந்தேகமில்லாமல் நான் கொடுத்து வைத்தவள் தான். கிடைத்தற்கரிய கணவனுடன் நல்ல புக்கமும் எனக்குக் கிடைத்திருக்கிறது. என் வாழ்வு ஒளி பெற்று விட்டது. இனிமேல் மலர்ந்து மணம் வீசும்.

‘டுடும் டுடும் டுடு’ என்று பாண்டு கோஷ்டி ஓய்ந்து தவில் முழங்கியது. நான் பக்கவாட்டில் முகத்தைத் திருப்பிக் கவனித்தேன். என்ன ஆச்சரியம்! தெருக்கள் கடந்து நாங்கள் திரும்பவும் கல்யாணப் பந்தலைச் சமீபித்து விட்டோம்!

அதற்குள்ளா முடிந்து விட்டது? இவ்வளவு சீக்கிரமா? அடடா! இது போலச் சந்தோஷம் இனி வருமா? ‘ஊர்வலம் நிச்சயம் விட வேண்டும்’ என்று அம்மா சொன்னாளே, என்று பல எண்ணங்கள் என் மனத்தைச் சங்கிலி போல் தொடர்ந்தன.

காரிலே ஏறுமுன் அவருக்கும் எனக்கும் இடையே இருந்த தூரம் இப்போது வெகுவாகக் குறுகி நான் அவருடன் மிகவும் நெருங்கி விட்டது போலவும், பந்தப் பிணைப்பு என்னை அவருடன் நன்றாக இறுக்கி விட்டது போலவும் எனக்குத் தோன்றியது. திறந்து கிடந்த என் சிந்தனைக் கதவு அவரை உள்ளே குடியேற்றிவிட்டு வேறு ஏதும் உள்ளே புகாதபடி தாழிட்டுக் கொண்டு விட்டது. ஐந்தாறு வார்த்தைகள் தாம். ஆனாலும் முதன்முதலாக அவரிடமிருந்து வந்த அவை என் நெஞ்சைக் கவர்ந்து விட்டன. கார் நின்றது. தூங்கி விழுந்த குழந்தைகளைச் சொந்தக்காரர்கள் எடுத்துக் கொண்ட பின் தான் எங்களுக்கு இறங்க வழி கிடைத்தது. இறங்கும் போது சட்டென்று ஞாபகத்தில் தூண்டப் பெற்றவளாக நான் வானவெளியை அண்ணாந்து பார்த்தேன். என் நெஞ்சம் துணுக்குற்றது. கண்கள் இருண்டு வரும் போல இருந்தன.

ஒரு நட்சத்திரத்தைக் கூடக் காணவில்லை. இரண்டு தினங்கள் சென்றால் பௌர்ணமி. இருந்தும் சந்திரனின் சுவடே தெரியாதபடி நாற்புறமும் கருமேகங்கள் குமுறிக் கொண்டிருந்தன.

“உம், கையைக் கோத்துக் கொண்டு பந்தலுக்குள் வாருங்கள்” என்ற அம்மாவின் உத்தரவும் என் கணவர் என் கையைப் பலமாகப் பிடித்துக் கொண்டு பந்தலுக்குள் நுழைந்ததும் எனக்குக் கனவிலே நடப்பது போல் இருந்தன.

“கிடு கிடு கிடா டமா…” என்று இடி முழங்கியது.

“நல்லவேளை! மழைக்கு முன் வந்து விட்டோம். பெரிய மழை வரும் போல் இருக்கிறது” என்றார் என் மைத்துனர்.

ஜோடனை செய்யப்பட்டிருந்த ஊஞ்சலில் நாங்கள் உட்கார்ந்தோம்.

“நம் வீட்டுப் பெண்கள் கல்யாணம் என்றாலே மழை வராமல் இருக்காதே” என்று அம்மா முணுமுணுத்தது என் காதில் விழுந்தது.

இடி, மின்னல் ஏன் இன்று எல்லாம் வர வேண்டும்? நான் முன்பு நினைத்தபடி இவை என் வருங்காலத்தின் சூசகமா. சே! அதெல்லாம் ஒன்றும் வராது.

சற்று முன் நடந்த நிகழ்ச்சி, இன்னும் சற்று நேரம் நீடிக்காதா என்று எனக்கு ஆசையூட்டிய நிகழ்ச்சி, கொஞ்சமும் மங்காத புத்தம் புதிய அந்த இன்ப நிகழ்ச்சி, என் கலக்கத்தினூடே மழையிடையே வெயில் போலப் பிரகாசித்தது. மழை வராதா? அது ஒரு தப்பா? ஜகது கல்யாணத்தில் மழை பெய்தது ஏன்? ஜானி கல்யாணத்தின் போது கூடத்தான் சாயங்காலம் கொட்டுக் கொட்டென்று கொட்டியது. அதனாலேயே மறுநாள் ஊர்வலம் விட்டார்கள். இதற்கும் என் வாழ்வுக்கும் என்ன சம்பந்தம்?

யாரோ தூங்கி விழுந்த குரலில் பாடினார்கள். நான் என் மனத்தை இழுத்து அந்தப் பாட்டில் செலுத்தினேன்.

படீர் படீர் என்று என் நெஞ்சில் யாரோ குத்துவது போல் வேதனை ஊட்டும்படி, “கண் குளிரக் காண்பதெல்லாம் கனவாகி” என்று வார்த்தைகள் சுழன்று சுழன்று ஒலித்தது.

நான் கண்பதெல்லாம் பொய்யா? நிஜமாக என் வருங்காலம் இன்றைய பொலிவோடு நிகழாதா?

மீண்டும் பயங்கரமாக இடி முழங்கியது. தொடர்ந்து மின்னல் ஒன்று வெட்டியது. “பொய்! பொய்! பொய்!” என்று ஏக காலத்தில் பல குரல்கள் என்னுள் கூச்சலிட்டன. கண்கள் நிலை நிற்காமல் சுழலுவன போல் இருந்தன. என் தலையே தரித்து நிற்க முடியாமல் இருப்பதை உணர்ந்தேன். நெஞ்சில் ஏதோ தடை கட்டியது. என்னையும் அறியாமல் ஊஞ்சற் சங்கிலியில் சாயப்போன எனக்கு அந்த நிலையிலும் கடபுடவென்று மழை விழுந்த சப்தம் கேட்டது. அவ்வளவு தான். வேறு ஏதும் எனக்கு நினைவு இருக்கவில்லை.

1.2 தளிர்

நான் மூர்ச்சித்து விழுந்து விட்டேன் போல் இருக்கிறது. கண்களை விழித்துப் பார்த்த போது, வாசல் அறையில் படுத்திருப்பது புலப்பட்டது. என் தலையில் இருந்த பூவெல்லாவற்றையும் எடுத்திருந்தார்கள். தஸ்புஸ் என்று எனக்கு வேதனை தந்த அந்தப் பதினெட்டு முழப் புடவையைக் கூடக் காணவில்லை. நான் மிகவும் லேசாக இருந்தேன். மெல்ல மெல்ல எனக்கு எல்லாம் நினைவுக்கு வந்தன. என் அருகில் ஜகது அக்காவும் அம்மாவும் இருந்தார்கள்.

“அம்மா மழை கொட்டுகிறதா இன்னமும்?” என்று நான் கேட்டது மிக ஈன சுரத்தில் ஒலித்தது.

“ஏன் அம்மா சுசீ, மழை கொட்டி அப்போதே ஓய்சு போச்சே? கோடை மழை. படபடன்னு ஒரு நாழிகை அடிச்சுது” என்று அம்மாவின் குரல் அறைக்கு வெளியேயும் கேட்டிருக்கிறது.

என் சிறிய மைத்துனர் உள்ளே வந்தார். அவர் டாக்டர் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அம்மாவும் அக்காவும் எழுந்து நின்றார்கள்.

“விழித்துக் கொண்டு விட்டாள் போல் இருக்கிறதே?” என்றார் அவர்.

எனக்கு ஏதோ குற்றம் செய்து விட்டவளைப் போல எல்லோர் முகத்திலும் விழிக்கவே வெட்கமாக இருக்கிறது. அயல் மனிதரைக் கண்டால் தன் சிறு கைகளால் முகத்தை மறைத்துக் கொள்ள முயலும் சிறு குழந்தையைப் போல் நானும் தலையணைக்கு அடியில் என் முகத்தைக் கவிழ்த்துக் கொள்ள முயன்றேன்.

“ஒன்றும் இல்லை, வெயில், உஷ்ணம், சந்தடி. ஏற்கனவே நல்ல திடகாத்திரமில்லாதவள் போல் இருக்கிறது. ஆகாரம் வேறு சரியாக இருக்கவில்லை” என்று அவர் அபிப்பிராயம் சொன்னார்.

“ஆமாம். நான் அப்போதே அதுதான் சொன்னேன். இன்று முழுவதும் அவள் ஒன்றுமே சாப்பிடவில்லை. உள்ளே அழைத்தாவது அவளைக் கவனித்திருக்க வேண்டும் நீங்கள்” என்று என் கணவருடைய குரலும் என் காதில் விழுந்தது. ஆம், அவர் இன்னமும் இங்கே தான் அறை வாசற்படியில் நிற்கிறார். அடடா! எத்தனை கரிசனம் அவருக்கு என் மேல்! அம்மா, அக்காமார்கள், அத்தை, அம்மாமி என்று எத்தனை பேர்கள் இருந்தார்கள். எல்லோரும் என் அலங்காரத்தில் சிரத்தை கொண்டார்களே ஒழிய, “இப்படிப் பட்டினி இருக்கிறாயே அம்மா” என்று அக்கறையாக ஒருவராவது கேட்கவில்லை. வந்தவர்களைக் கவனித்தார்கள். தங்களைக் கவனித்துக் கொண்டார்கள்! என்னை அடியோடு மறந்து விட்டார்கள். ஆனால் அவர் பகலில் தான் என்னைக் கைப்பிடித்து உரிமையாக்கிக் கொண்டவர். நான் உணவு கொள்ளாமலிருந்ததைப் பற்றியே இந்நேரமாகக் கவலைப்பட்டிருக்கிறார்! என்னிடம் முதல் முதலாக அதைப் பற்றித்தானே விசாரித்தார்? எனக்குக் கூட என்மேல் அத்தனை கவலை இருந்திருக்கவில்லையே? “இவா எல்லாம் இருக்காளே, கவனிச்சுக்குவாள்னு அசிரத்தையாக இருந்துட்டேன். எனக்குத்தான் போது எங்கே இருந்தது? அவளே பச்சை குழந்தை. நல்ல நாளிலேயே சரியான வேளைக்குச் சாப்பிட வேணும். இப்போது கேட்க வேணுமா?” என்று கசமுச என்ற குரலில் அம்மா முணுமுணுத்தாள்.

“பந்தியில் உட்கார்ந்து இப்படி ஒரேயடியாக அட்டகாசம் செய்தால்? நான் ‘போதும் பரிகாசம்’ என்று அப்போதே சொன்னேன். யாரும் கேட்கவில்லை” என்று அவர் நேரடியாகவே அம்மாவுக்குப் பதில் கொடுத்தார். இந்த மாப்பிள்ளையிடம் அம்மா அந்த வழக்கத்தைக் கைவிட்டு விட வேண்டியதுதான்.

மேலும் மேலும் அவர் எனக்குப் பரிவதைக் கண்ட என் இதயம் குறுகுறுத்தது. பரிவது மட்டுமா? இன்னும் இருபத்துநாலு மணி நேரம் முடிவதற்குள், நீங்கள் அவளைக் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்! பதினாறு வருஷங்கள் அரும்பாடுபட்டு வளர்த்திருக்கிறார்களே அவர்கள். அதற்குள் நாம் இம்மாதிரி பேசுவது அழகா என்று அவருக்குப் படவில்லையே! என் மைத்துனர் தாம் ஆகட்டும், “அதற்குள் நீ போடு போடு என்ன போடுகிறாயே? கல்யாணாம் என்றால் அப்படித்தான் இருக்கும்” என்று சொன்னாரா? அவர் பக்கமே குழைவாக, “ஆமாம் அம்மா! ராமு சொல்வது போல நீங்கள் அவனைக் கவனியாமல் இருந்து விட்டீர்கள்” என்று ஒத்துப் பாடினார். அம்மாவுக்கு முகம் ஒரு விநாடி கறுத்து விட்டது. ஜகது அக்காவுக்கோ விண்டு வெடித்து விடும் போல் இருந்தது முகம். “சரி, மணி நாலரை தான் ஆகிறது. ஏழு மணிக்கு மேல் ஆசீர்வாதம் வைத்துக் கொண்டால் போதும். போய் எல்லாரும் சற்றுத் தூங்கலாம். பழ ரசம் ஏதாவது அவளுக்குக் கொஞ்சம் கொடுங்கள்” என்று கூறிவிட்டு என் மைத்துனர் வெளியே சென்றார்.

“ஆமாம், அவளுக்கும் அலுப்பாயிருக்கும். தூங்கட்டும்” என்று கூறிக்கொண்டே என் கணவரும் அவரைத் தொடர்ந்து சென்றார்.

அவர்கள் சென்ற பிறகு அருகில் உட்கார்ந்த ஜகது என் கன்னத்தை நிமிண்டி, “அடியம்மா! அவர் எப்படித் துடிதுடித்து விட்டார் பாரேன்! பெரிய ஆர்ப்பாட்டமும் அமர்க்களமும் பண்ணி விட்டாயே. அதுக்குள்ளே நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை என்கிறாரே!” என்று தன் முகத்தில் கையை வைத்துக் கொண்டு அதிசயப்பட்டாள்.

ஆரஞ்சு ரசம் தயாரித்துக் கொண்டிருந்த அம்மா, “ஆமாம், அவர் சொத்தில்லையா இனிமேல்? இருந்தாலும் இந்த நாளைப் பிள்ளைகளே இப்படித்தான் இருப்பார்கள் போலிருக்கு!” என்றாள்.

“இன்னும் சற்றுப் போனா விடியப் போகிறதே. இப்ப என்னத்துக்கம்மா?” என்று நான் சிணுங்கினேன். அத்தனை பேருடைய பரிவும் நான் அறியாமலே என்னைக் குழந்தையாக்கியிருந்தது அப்போது.

“அவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நீ மாட்டேன்னு சிணுங்கு. அப்புறம் அவர் கொடுத்தேளான்னு கேட்டுக் கொண்டு வந்துவிடப் போகிறார். நன்றாகத்தான் இருக்கு. பதினாறு வயசுப் பெண் பச்சைக் குழந்தையாட்டமா இருப்பது!” என்று ஓர் அதட்டல் போட்டாள். நான் பெட்டிப் பாம்பு போல ‘மடக் மடக்’ கென்று வாங்கிக் குடித்தேன்.

“தூங்கு, இன்னும் சற்று நாழிகை. நாளைப் போதுக்குக் கொஞ்சம் மணையிலே உட்கார வேணும்” என்று உத்தரவிட்டவளாக அம்மா என் மேல் போர்வையை இழுத்து விட்டு வெளியே சென்றாள்.

“ஆமாமடி சுசீலா; அப்புறம் நீ தூங்காததற்கு அவர் வந்து எங்கள் பேரில் குற்றம் சொல்லப் போகிறார்” என்று குத்திக் காட்டுவது போல் கூறிக் குறும்புச் சிரிப்புச் சிரித்தாள் ஜகது.

என் நெஞ்சில் குடியேறிவிட்ட அவரைப் பற்றிக் குத்தலாகச் சொன்னால் எனக்கு மட்டும் ரோசமாக இருக்காதா? தங்கள் வீட்டில் இப்படி இருக்கவில்லை என்று இந்த அக்காவுக்கே கொஞ்சம் பொறாமைதான். இல்லாவிட்டால் அவர் இத்தனை பரிவு காட்டுவதற்குச் சந்தோஷம் அல்லவா பட வேண்டும்? “என்னவோ ஒரு வார்த்தை சொல்லி விட்டார் என்று வாய்க்கு வாய் சொல்லிக் காட்டுகிறாயே; அவர் கேட்டதும் வாஸ்தவம் தானே? என்னை நீங்கள் யாராவது கவனிச்சேளா?” என்று சிரித்துக் கொண்டே நானும் கேட்டுவிட்டேன்.

“அடேயப்பா! முழுசாக ஒரு நாள் ஆகலே? அவர்கள் வீட்டுத் தண்ணீர் கூட இன்னும் ஒரு வாய் உள்ளே போகலே. இவளுக்கு வரும் ரோசத்தைப் பாரேன்! லேசுப்பட்டவ இல்லேடி சுசி நீ! உம்! புருஷன் மனைவி என்றால் இப்படி அல்லவா இருக்க வேணும்?” என்று நீட்டி முழக்கிக் கொண்டு அவள் அதிசயப்பட்ட போது ‘நாமும் இருக்கிறோமே’ என்ற ஆற்றாமையும் தொனித்தது. அவளை விட ஒரு படி நான் உயர்ந்து விட்டேன் என்ற எக்களிப்பில் மிதந்தேன். அறையின் விளக்கை அணைத்துவிட்டுக் கீழே ஜமுக்காளத்தை விரித்துக் கொண்டு அவள் படுத்து விட்டாள். படுத்த சிறிது நேரத்திலேயே தூங்கியும் விட்டாள் அலுப்பு, அலைச்சல் அல்லவா?

எனக்குத் தூக்கம் வருமா? வெளியே திண்ணையிலிருந்து ‘பெட்ரோமாக்ஸ்’ விளக்கின் ‘ஹூய்’ என்ற சப்தமும், இரண்டொருவர் விடும் குறட்டையொலியும் நிசப்தத்தைப் பிளந்து கொண்டு வந்தன. தான் சிருட்டி செய்ததைத் திருப்பித் திருப்பி ரஸித்து இன்புறும் கலைஞனைப் போல என் உள்ளமும் அன்றைய நிகழ்ச்சிகளுக்கு உயிர் கொடுத்துத் திருப்பித் திருப்பி அவைகளிலேயே லயிப்பதில் இன்புற்றது.

வாழ்விலே ஒரு நாள். அந்த நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது கூட அவற்றின் உண்மைகளை நான் சிந்திக்கவில்லை. இப்போதோ, அவை யாவும் என்னை அவருடன் நெருக்கிப் பிணைக்கும் புனித காரியங்களாக எனக்குப் பட்டன. அப்போது இல்லாதபடி இப்போது எனக்கு ஏதேனும் ஞானோதயம் வந்துவிட்டதோ?

இல்லையா பின்? அவருடைய அன்பு கனிந்த சொல், உறங்கிக் கொண்டு இருந்த என் மனத்தை மந்திரக்கோல் போலத் தட்டி எழுப்பி விட்டதே! அன்பின் ஒளியை நன்கு கிரகிக்கக் கூடிய சக்தியை இப்போது என் மனம் பெற்று விட்டது. பெரியவர்கள் விதித்த புனித காரியங்களினால் ஏற்படும் பந்தத்துடன் கூடவே பரஸ்பரம் அன்பு கனியவும் இடம் இருந்து விட்டால், தேனும் பாலும் சேர்ந்தது போல் ஏற்படும் பாசப் பிணைப்பில் எத்தனை ஆனந்தம் உண்டாகிறது! இந்தப் புது மகிழ்ச்சியில் என் உடல் நலிந்திருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏதோ புத்துணர்ச்சி பெற்றவளாகவே தோன்றியது. படுத்திருக்கப் பிடிக்கவில்லை. போர்வையைத் தள்ளிவிட்டு எழுந்து உட்கார்ந்தேன்.

முதல் முதலாக என் கண்களிலே எதிரே சுவரில் மாட்டியிருந்த ரோஜாப் பூமாலை, மங்கலான ஒளியில் ஜிகினா மின்னக் காட்சியளித்தது. திறந்திருந்த அலமாரியில் ஒட்டியாணம், அராக் கொடி இரண்டும் சுழற்றி வைத்திருந்தன. என் பழைய அலங்காரத்தின் இன்னொரு சின்னமாக கூறைப் புடவை அறையின் மூலை ஒன்றில் கிடந்தது.

பழையபடி அவைகளை அணிந்து கொண்டு நான் அவர் பக்கலில் அமர வேண்டும்! அந்த நினைவு எனக்கு எப்படி இன்ப மூட்டியது!

பெஞ்சியை விட்டுத் துள்ளிக் குதித்தேன். ஜன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தேன். வீட்டின் வலப்புறம் இருந்த வாய்க்கால் வளைந்து நெளிந்து காலைப் பொழுதில் மங்கிய ஒளியில் தன் மேனியைப் பளபளப்பாகக் காட்டியவாறு பெரியதொரு கரு நாகம் போல் ஓடியது. இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்திருந்த தாழையும் செவ்வரளியும் காலைக் காற்றிலே தங்கள் சுகந்தத்தைக் கலந்து வைத்திருந்தன. அந்தக் கலவையில் இரவு அடித்த மழை காரணமாக லேசான மண் வாசனையும் இருந்தது. கதிரவன் இன்னும் தன் ஒளி முகத்தைக் காட்டவில்லை. ஆனால் இருளும் பிரிந்திருந்தது. காலைப் பொழுதின் அமைதி என்று நான் கதைகளில் படித்திருக்கிறேன். அது இத்தகைய கவர்ச்சி வாய்ந்தது. மனத்திற்கு ஒரு புதுமையையும் உற்சாகத்தையும் ஊட்ட வல்லது என்பதை அப்போதுதான் அறிந்து கொண்டேன்.

எத்தனை நேரமாக இப்படி நின்றேனோ?

ஜகது எழுந்து தோளின் மேல் கையை வைத்து, “ஏண்டி சுசீ, தூங்கலே நீ? என்ன பார்க்கிறாய் அங்கே?” என்று கேட்டாள்.

“ஒண்ணும் இல்லே அக்கா. நேற்று இரவு ரொம்பவும் இடி இடிச்சுதோ?” என்று வினவினேன் நான். என் மகிழ்ச்சியினூடே லேசாக அது உறுத்தியது.

“அழகாயிருக்கே கேள்வி? கோடை மழை. இடி இடிச்சுது. மின்னியது. அதிலே பயந்துதான் மயங்கி விட்டதாக்கும் குழந்தை!” என்று செல்லமாக என்னை இடித்தாள் அவள்.

“இல்லே அப்புறம் ராத்திரி யாரோ பாடினாளே, அது யார் அக்கா?” என்று அடுத்தாற் போல நான் விசாரித்தேன்.

“ஆமாம். இந்த சமயத்தில் இன்ன பாட்டுத்தான் பாட வேணும்னு சில பேருக்குத் தெரியறதேயில்லை.” எனக்குச் ‘சுருக்’ கென்றது. “உன் சின்ன ஓர்ப்பாட்டிதான் பாடினாள். நாலு பேர் சந்தோஷமாயிருக்கும் சமயத்திலே அந்தப் பாட்டையா பாடுவார்கள்? அசட்டுத்தனம்!” என்று பட்டிக்காட்டில் வாழ்க்கைப்பட்டிருந்த நாகரிகம் தெரியாத ஜகது அக்கா, அந்தப் பட்டிணத்தாளுக்குச் ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்தாள்.

இவளே இப்படிக் கூறும் போது கோணல் வகிடும், கைக் கடிகாரமுமாகத் துலங்கும் டாக்டர் மனைவியான என் சின்ன மன்னிக்கு அந்தச் சமயத்திலே அந்தப் பாட்டு பாடக் கூடாது என்று தெரியாதா? பின் ஏன் பாடினாள்? வேண்டும் என்றே பாடினாளா? நாகரிகம் இதற்கெல்லாம் பிரயோசனம் இல்லையா? இந்த உலகம் சதமில்லை என்பது நிசந்தானே? ஒரேயடியாய்ச் சந்தோஷத்தில் மூழ்கி இருப்பவர்களுக்கு உறைக்க வேண்டும் என்றே அந்தப் பாட்டு எழுந்ததோ? ஆனால், தற்போதைய என் மகிழ்ச்சி சதம் அல்லவா?

எள்ளுக்குள் எண்ணெய் போல் சுற்றி வளைத்து என் மனத்தின் உள்ளே கரும் குரும் என்று உறுத்திக் கொண்டிருந்த விஷயத்திற்கே வந்துவிட்டேன். அம்மாவும் பெரிய அக்காவும் பரபரப்பாக உள்ளே வந்தார்கள். “என்னவோ பெண் கண்ணைத் திறக்கலே. துவண்டு கிடக்கிறான்னியே? ரெண்டு பேரும் கதை பேசுகிறார்களே? ஏண்டி சுசீ? இரவு அப்படிப் பயமுறுத்தி விட்டாயே அவரை?” என்றாள் தங்கம்.

அம்மா அதையே மறந்து, “கேட்டாயடி ஜகது? அப்பா சொல்கிறார்: மாப்பிள்ளை கையுடனே சுசியை அழைத்துப் போக வேணும்னு அபிப்பிராயப்படுவதாக” என்றாள். அவள் குரலிலே கவலை, பரபரப்பு, மகிழ்ச்சி எல்லாம் பின்னியிருந்தன. அவர்களுடைய பரிவிலும், குழைவான நடப்பில்ம் அளவற்ற மகிழ்வெய்தியிருந்த என் பெற்றோர், அவர்கள் ஒரு படியில் இருந்தால் இவர்களாகவே இரண்டு படி ஏறி விடுவது போல யாரோ ஏதோ கூறியதை வைத்துக் கொண்டு என்னை உடனே அழைத்துப் போய் விடுவார்கள் என்று நிச்சயம் செய்திருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போது எப்படித் தெரியும்? எனவே ஆச்சரியம் தாளாத மனம், ‘நிஜமாகவா? அப்படி அவர் எண்ணம் இருந்தால் நேற்றுச் சொல்லியிருக்க மாட்டாரோ?’ என்று எண்ணமிட்டது.

“நான் அப்பவே நினைத்தேன். இவ்வளவு தூரம் கவலைப்படுபவர், எப்படி அவளை இங்கே இனி விட்டுட்டு இருப்பார்?” என்று ஜகது என்னை ‘நறுக்’கென்று கிள்ளினாள்.

“இல்லை. தெரிந்தால் தானே அவளுக்கு வேண்டிய சாமான்கள் வாங்கித் தயார் செய்ய ஏற்பாடு பண்ணலாம்? இப்படி அபிப்பிராயம் இருக்கும் என்று அப்பா இப்போது தான் கூப்பிட்டுச் சொல்கிறார்” என்றாள் தாய் கவலையுடன். அவள் விசாரம் அவளுக்கு.

என் பாட்டி சொல்லுவாள். “இந்தப் பெண்களே நன்றியற்றதுகள். ஆயிரம்பாடு அரும்பாடுபட்டு ஆளாக்கினவர்களிடம் ஒட்டாதுகள். வயிற்றுச் சோறு இல்லாவிட்டால் கூட அங்கே தான் ஒட்டும், அதுகளுக்கு” என்று.

எத்தனை அநுபவபூர்வமான வார்த்தை? இத்தனை நாட்கள் அருமையுடன் வளர்ந்த இடத்தை விட்டுப் போக வேண்டுமே என்ற வருத்தமோ கவலையோ எனக்கு ஏற்படவில்லை. ‘அவருடன் போகப் போகிறோம்’ என்ற குதூகலம் பொங்கியது.

‘நேற்றுச் சொல்லாவிட்டால் என்ன? என்னிடம் பிரஸ்தாபித்தால் தாய் தந்தையரை விட்டு உடனே வரப் பயப்பட்டுப் பிடிவாதம் செய்வேனோ என்று கூடத் தோன்றி இருக்கலாம். என்னைப் பார்த்தால் அப்படி நினைக்கும்படி இருக்கிறேனோ என்னவோ! பட்டணம் தெரியாமல் வளர்ந்த நான் படித்திருந்துங் கூட என் மீது கிராமாந்தரத்து ரேகைகள் தென்படாமலா இருக்கும்? இனிமேல் அவர் வீட்டவர்களைப் போல நானும் இருக்க முயல வேண்டும். எனக்கு அப்போதுதான் அங்கே மதிப்பு இருக்கும்’ என்றெல்லாம் கற்பனையுலகில் சஞ்சரித்தேன்.

சடங்குகள் யாவும் முடிந்த பிறகு அவர்கள் இறங்கியிருந்த இல்லத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். சில மணி நேரமே நான் அங்கு இருந்தேன். அந்த வீட்டில் என் மாமியார் எதையும் ம்ன்னின்று செய்பவளாகத் தோன்றவில்லை. அவளுக்குச் சொந்த உடன் பிறந்தவன் மகள் தானாம் பெரிய மதனி. அந்த சலுகையிலேதான் அவ்வளவு உரிமை பெற்றுவிட்டாளோ என்று கூட நான் நினைத்தேன். குடும்பத்தையே அவள் தான் நிர்வகிப்பவள் போல் காட்டிக் கொண்டு, எல்லோரையும் அதிகாரம் செலுத்தும் முறையில் அங்கும் இங்கும் போய் வந்தாள். புறப்படுவதற்கு முன்பு விடைபெற்றுக் கொள்ள எங்கள் விடுதிக்கு எல்லோரும் வந்தார்கள்.

பெரியவளாக லட்சணமாகப் பெரிய மதனி, “கல்யாணம் நன்றாக நடத்தி விட்டீர்கள். எங்களுக்கெல்லாம் சந்தோஷம்” என்று உபசாரமாகக் கூறினாள்.

அக்காவும் அம்மாவும் ஓடி ஓடித் தாம்பூலம் வழங்கினார்கள். பின் அவள், “இனிமேல் ஆடி கீடின்னு அவன் வரமாட்டான். சீர் செனத்தியின்னு பாத்திரமாகவும் பண்டமாகவும் வாங்க வேண்டாம். அவனுக்கு வேஷ்டி அது இதுன்னு நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் பெண்ணுக்கு நகையாகச் செய்து போட்டாலும் ஒரு காரியமாக இருக்கும்” என்றாள் மெதுவாக.

பாத்திரம் பண்டத்திலிருந்து நகை என்ற பெரிய வஸ்துவுக்கு அடி போடுகிறாள் என்ற எண்ணம் எனக்கு உறுத்தவில்லை. அதற்குப் பதிலாக ‘எத்தனை பெருந்தன்மை! அண்டாவைக் கொண்டா, குண்டாவைக் கொண்டா என்று அதட்டி வாங்காமல், வேண்டாம் என்று எந்தப் பிள்ளை வீட்டார் சொல்வார்கள்?’ என்று அவளைப் பார்த்துக் கொண்டே நான் வியந்து நின்றேன். என் தோளைத் தொட்டு அசக்கி, “ஊருக்குப் போறோம். கடுதாசி எழுது. அங்கு வரும் போது உடம்பு நன்றாக தேறி இருக்க வேண்டும். ரொம்ப பூஞ்சையாக இருக்கிறாய்” என்று சிரித்துக் கொண்டே கூறினாள்.

அவர்களுடன் அதே வண்டிக்குப் போகிற பேர்கள் எங்கள் வீட்டில் இருந்தனர். கூடம் முழுவதும், தாம்பூலம் வாங்கிக் கொள்வோரும், மூட்டை கட்டுவோருமாகப் பெண்கள் நிரம்பியிருந்தனர்.

‘படக் படக்’ கென்ற வேஷ்டிச் சத்தம் என் கவனத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. அத்தனை பெண்களுக்கும் மத்தியில் அவர் தாம் என்னை நோக்கிப் புன்னகை செய்து கொண்டு வந்தார். கூடத்துத் தூணின் மேல் சாய்ந்து கொண்டு நின்ற என் கையிலே சிறியதொரு நீளமான அட்டைப் பெட்டியைத் திணித்தார். சின்னக் குழந்தையிடம் சொல்வது போல என் கன்னத்தை லேசாகத் தட்டி, “போய் வரட்டுமா, சுசீ?” என்றார்.

குழுமியிருந்த அத்தனை பேர்களும் தங்கள் தங்கள் செயலை மறந்து பேசாமல் நின்றார்கள். அவர் அப்பால் சென்றாரோ இல்லையோ, வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு சிரித்தார்கள். என்னால் தலையே தூக்க முடியாதபடி அக்காவும் அம்மாமியும் கன்னத்தில் வந்து இடித்துக் கேலி செய்தார்கள்.

“என்னதுடி அது. அவ்வளவு அருமையாக அவர் கொடுத்த பொருள்? பார்த்துவிட்டுத் தரட்டுமாடி நான்?” என்று என் கையில் இருந்ததை ‘வெடுக்’கென்று பிடுங்கினாள் ஜகது.

மதனி சிரித்துக் கொண்டே, “அவள் அண்ணா அவனுக்குப் ‘பிரஸன்ட்’ பண்ணினார் அதை. அவன் அவளுக்குக் கொடுத்து விட்டான்” என்றாள்.

“கடிதம் எழுதப் பேனா கொடுத்திருக்கிறார்” என்று ஜகது திறந்து பார்த்து முடிப்பதற்குள், “எங்கே! எங்கே?” என்று எல்லோரும் ஏதோ அதிசயத்தைக் கண்டது போல் முட்டி மோதிக் கொண்டார்கள்.

‘பட்டிக்காட்டுத் தனத்தை இப்படிக் காண்பித்துக் கொள்கிறார்களே. ஊருக்குப் போய் இந்த ஜனங்களைப் பற்றிச் சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்களோ என்னவோ’ என்று அங்கலாய்ப்பாக இருந்தது எனக்கு.

ஆகா! வாழ்விலே இந்த ஒரு நாள் என் போக்கிலேதான் என்ன மகத்தான மாறுதலைச் செய்து விட்டது! பதினாறு வருஷங்கள் இருந்து வளர்ந்த வீட்டிலிருந்தும் அன்புக்குரிய உறவினர்களிடமிருந்தும், தனியாளாகிவிட்ட நான், மலர்ச்சி எய்திவிட்ட புத்தம் புது மலரைப் போல ஒய்யாரத்துடனும் கர்வத்துடனும் தலை தூக்கி நின்றது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா?

1.3 தளிர்

“சுசி கல்யாணம் ஆகிவிட்டதனால் என் தலை மேலிருக்கும் மலை இறங்கி விடும்” என்று அம்மா அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் இப்போது காரியம் முடிந்த பிறகு அம்மா, அப்பாவைப் பொறுத்தவரை மலை இன்னும் கொஞ்சம் பளுவுடன் உறைந்திருக்கும் என்று தோன்றியதே ஒழிய இறங்கியதாகக் காணவில்லை. அவளுக்குத் தொண்டை பாறாங்கல்லாக இருந்தது. அவரோ பத்து வருஷம் கூடி விட்டவர் போலப் பரிதாபமாகக் காட்சி அளித்தார். சாமானும் சட்டுமாக நிரந்தரமான வீட்டிலே காலை வைத்த போது எல்லோருக்குமே, ‘அம்மாடி’ என்று இருந்தது. சந்தை கலைந்து தத்தம் வீடுகளுக்குத் திரும்புவதைப் போல ஒவ்வொருவராகப் பயணம் கட்டினார்கள். கடைசியாகக் கிளம்பியவர்கள், அத்தை பாட்டி இவர்கள்தாம். அத்தை என் தந்தைக்கு ஒரே சகோதரி. அத்தை புருஷர் மைசூரிலே பெரிய வக்கீலாக இருந்தார். ஆசைக்கு ஒரு பெண் ஹேமாவும், அருமைக்கு ஒரு பிள்ளை வெங்கிட்டுவுந்தான் அத்தைக்குக் குழந்தைகள். வைரமாகவே உடம்பில் இழைத்துக் கொண்டு கெட்டிக்கரைப் பட்டுப் புடவையுடன் வெள்ளிக் கூஜாவைக் கையில் எடுத்துக் கொண்டு அத்தை வண்டியை விட்டு இறங்கி வருவதே ஓர் அலாதி பெருமையையும் கர்வத்தையும் விளக்கும்.

“மாப்பிள்ளை பணமாகக் கொண்டு வந்து கொட்டுகிறான். நச்சுப் பிச்சென்று நாலைந்து பிடுங்கலில்லை” என்று பெண்ணைப் பற்றிய ஒரு தனியான கர்வம் பாட்டிக்கு மிகவும் உண்டு. பெண்ணிடமே அவள் வாசம் செய்ததற்கு இதுதான் காரணம். என் தந்தை அவளுக்கு ஒரே பிள்ளை. அந்த அருமைக் குமாரர் வழி மக்கள் நாங்கள். எங்கள் மீது பாசம் இருந்ததோ என்னவோ. “ஏண்டா வைத்தி, பெண்ணாய்ப் பிறந்தவளை மாசம் மாசம் ஆறும் ஏழும் சம்பளம் கொடுத்துப் படிக்க வைக்கிறாயே, ஏதோ கேட்டுப் பாடுகிறாளே அது போதாதா? பாட்டு வாத்தியார் வைத்து அது வேறு செலவு செய்கிறாய். இந்தப் பணத்தைக் கொண்டு கையிலே இரண்டு வளையாவது அடித்துப் போடலாமே? வயது வந்த கோர்க்காலி ஏணி போல உயர்ந்துவிட்டாள்? இப்படிக் குன்றிமணித் தங்கம் இல்லாமல் நிறுத்தி வைத்திருக்கிறாயே?” என்று என்னைக் குறித்துச் சொல்லும் போது எங்களிடம் உள்ள அலாதி வெறுப்பு தொனிக்காமலிருக்காது. அம்மாவுக்கு ரோசம் பொத்துக் கொண்டு வரும். ஆனால் என்ன பயன்? பல்லைக் கடித்துக் கொண்டு அடக்கிக் கொள்வாள். எப்போதாவது இம்மாதிரி கல்யாணம், கார்த்திகை என்றால் தான் அவர் எங்கள் வீட்டுக்கு வருவது வழக்கம். ஒரு தடவை சமீபமாகப் பாட்டி மட்டும் எங்கள் வீட்டுக்கே விஜயம் செய்தது எனக்கு நினைவை விட்டே அகலவில்லை. அண்டை அயலில் சிநேகம் பிடித்துக் கொண்டு நாள் முழுவதும் உட்கார்ந்து கிடந்தாள்.

“காபிக்கு முதற் கொண்டு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்க வேணும்! போடி சுசீலா, பாட்டியை அழைத்துக் கொண்டு வா!” என்று என் தாய் கோபத்துடன் எனக்கு ஒரு நாள் உத்தரவிட்டாள். நான் சென்ற போது ஜானியின் தாயிடம் அவள், “பாரு கண்டும் காணாமலும் கொள்ளையாகத்தான் இவளுக்குச் செய்கிறாள். துணியாகவும் மணியாகவும் கொஞ்சமாவா கொடுத்திருக்கா? ஜகது வளைகாப்புக்கு வந்திருந்தாளே, குழந்தைகள் கையிலே சுளைபோலப் பத்துப் பத்து ரூபாய் குடுத்துட்டுப் போனா. நாளைக்கு சுசீலாவுக்கு எப்படிக் கல்யாணம் பண்ணப் போறான்? அவள் தான் ஒத்தாசை செய்யணும். என்ன செய்து என்ன நிறக்கிறதடி மீனு? அவளுக்குக் கொஞ்சமும் நன்றி விசுவாசம் கிடையாது. மஞ்சளும் குங்குமமுமா இருக்காளே, ஒரு கார்த்திகை, சங்கராந்தின்னு அஞ்சு ரூபா கொடுக்கணும்னு தோணுமா? மரியாதையே தெரியாது. வைத்தி தேமேனு அப்பாவித்தான். அவன் காலிலே இத்தனை சம்சாரத்தைக் கட்டி வச்சிருக்கு!” என்று பெண் பெருமையையும் நாட்டுப் பெண் சிறுமையையும் பிரலாபித்துக் கொண்டிருந்தாள். விளையாட்டுச் சிறுமியாகக் காலந்தள்ளிக் கொண்டிருந்த நான் அதுவரையில் எங்கள் குடும்பத்தையும் உள்ளேயுள்ள சச்சரவையும் கவனித்தவள் அல்ல. என் தாயைப் பற்றிப் பாட்டி இகழ்ச்சியாகக் கூறியது என் முற்றாத உள்ளத்தில் நன்கு பதிந்து விட்டது. ‘அத்தை இல்லாமல் நாம் இப்படி இருக்க முடியாதா? ஏன் இந்த அம்மாவுக்கு இதெல்லாம் தெரியவில்லை? பணக்கார அத்தையை விரோதித்துக் கொள்ளலாமா? பாட்டியின் மனத்தில் உள்ளதை அம்மாவிடம் தெரிவித்து விட வேண்டும்’ என்று அப்போது கவலைப்பட்டேன்.

இருந்தாற் போலிருந்து மறுநாளே பாட்டி, “இன்னிக்கு வண்டியிலே என்னை ஏற்றி விட்டுடு வைத்தி. எனக்கு என்னமோ இருப்புக் கொள்ளலே. அற்பசி மாதம் தலைக் காவேரிக்குப் போகணும்” என்றாள்.

பாட்டி சென்ற மறுகணமே அம்மா என் தந்தையைப் பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டாள். “பார்த்தேளோ இல்லையோ உங்கள் அம்மா சொன்னதை? ஆமாம், நான் ஏழை, இங்கு மாட்டின் வயிற்றில் குடியிருக்க வேண்டுமென்றால் முடியுமோ? பஞ்சமோ, பட்டினியோ, உன் காலடியில் வந்து நிற்க மாட்டோம்” என்று என்ன என்னவோ சொல்லிக் கொண்டு போனாள்.

பாவம், அப்பாவி அப்பா. தெய்வமே என்று முகத்தில் கையை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார்! அந்த நிமிஷத்தில் எனக்கும் அம்மாவைப் போல ரோசமாகத்தான் இருந்தது. தன் சொந்தக் குழந்தைகளிடமேயா தாய் ஏழை பணக்காரர் என்று வித்தியாசம் பாராட்டுவாள்? அப்படி அவள் பாராட்டிச் சொல்லிச் சொல்லிக் காட்டும் போது, ‘அவர்களிடமிருந்து கை நீட்டி எதையும் வாங்கக் கூடாது’ என்ற சுரணை மேலிட முந்திரிக் கொட்டை போல நான், “அப்படியானால், நாளைக்கு எனக்குக் கல்யாணம் என்று அத்தையிடம் ஒத்தாசை கேட்கக் கூடாது அம்மா” என்றேன்.

உள்ளூற என் மனதில் அந்தப் பேச்சு, கோவையாகவே இருந்தது. ஆனால் வெளிக்குக் குடும்ப விவகாரம் அறியாத குழந்தையாக நடமாடி வந்த நான் சட்டென்று அந்த மாதிரி கூறியது, ஒரு சம்பந்தமுமின்றி அதிகப்பிரசங்கித்தனமாக இருந்தது. அம்மாவும் அப்பாவும் ஒரு கணம் அயர்ந்துதான் போய் விட்டார்கள். மறுவிநாடியே அம்மா என் தலையில் ‘நறுக்’கென்று ஒரு குட்டு வைத்தாள்.

“சிறிசா லட்சணமா இராமல் பெரியவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருக்கிறாயா நீ? இப்படி இருந்தால் நாளைக்குப் புக்ககத்தில் போய்க் குடித்தனம் பண்ணி எப்படிக் குப்பைக் கொட்டுவாய்?” என்று கோபித்தாள். குட்டுப்பட்ட தலையைத் தடவிக் கொண்டு நான் அப்பால் வந்துவிட்டேன். என்றாலும் மனத்தில், ‘அவர்கள் பணக்காரர்கள். ஹேமாவும் வெங்கிட்டுவும் எனக்குச் சமதையாக ஒரு நாளும் ஆக முடியாது’ என்ற வேற்றுமை வேரூன்றி விட்டது. அம்மா அப்போது வைராக்கியமாகப் பேசினாலும், என் விவாகத்திற்கு அத்தை தான் ஏதோ கடன் கொடுத்து உதவியிருக்கிறாள் என்பது எனக்கு உள்ளங் கை நெல்லிக்கனி போல் விளங்கியது. பிடிக்கவில்லைதான். எனினும் பெரியவர்கள் யோசிக்காமலா செய்வார்கள்? தவிர, அவர்களுக்கு இல்லாத பெருமையும் சிறுமையும் எனக்கு என்ன வந்தன? ‘குடும்பம் என்றால் இப்படிச் சிக்கல்கள் இருக்கத்தான் இருக்கும். இவற்றையெல்லாம் பாராட்டாமல் விட்டுவிடுவதுதான் உகந்தது’ என்று என் மனத்தில் படிந்திருந்த பழைய பாசியை அகற்றிக் கொண்டு புதுமைக் கண்களுடன் அவர்களைப் பார்த்தேன். அதுவும் இப்போது என்னுள்ளே ஒளிவிட ஆரம்பித்திருந்த புது அன்பு அந்தப் பழைய தாழ்வு மனப்பான்மையை என்னிடமிருந்து அடியுடன் கல்லி எரிந்து விட்டது.

ஹேமா என்னோடொத்தவள் தான். “அம்மாமி, சுசீ எங்களுடன் ஊருக்கு வரட்டுமே? அப்புறந்தான் புக்ககம் போய் விடுவாள்” என்று அம்மாவிடம் அவள் கேட்டாள். நானும் சந்தோஷத்துடன் குதி போட்டுக் கொண்டு, “ஆமாம் அம்மா, நான் அவர்கள் ஊருக்குப் போனதே இல்லை” என்று கெஞ்சும் பாவனையில் சம்மதி கேட்டேன்.

பேசாமலே நின்ற அம்மாவிடம் அத்தையும், “ஆமாம் மன்னி, குழந்தைகள் ஆசைப்படுகிறார்கள். அங்கே வந்து பத்து நாள் இருக்கட்டுமே” என்று ஆசைக்கு உரமூட்டினாள்.

தாய்க்கு அரைச் சம்மதம் என்று தெரிந்தும் பொங்கிய மகிழ்ச்சியில் அவ்வளவாக நான் பொருட்படுத்தவில்லை.

பின்னாடி நினைத்துப் பார்த்துப் பார்த்து நான் ஆற்றாமையால் மனம் நொந்து போனேன். எவ்வளவு நன்றியற்றவள் நான்! பிறந்து வளர்ந்த இடத்தின் அந்தஸ்தையும் நிலைமையையும் உயரக் கொம்பில் இருந்து பார்ப்பதைப் போல அவ்வளவு துச்சமாகக் கருதும் அத்தை நமக்கு இனிச் சமமானவள் தான். அவளுடைய நிலைக்கு உயர்ந்து விட்டோம் என்று நினைத்தேனே!

உல்லாசமாக ஒத்த சகியுடன் காலம் கழிக்கப் போகிறோம் என்று துள்ளிக் கொண்டிருந்த என் ஆசை அடியுடன் அணைந்து போகும்படி ஊர் வந்து சேர்ந்த அன்றே ஹேமா தலைவலி என்று படுத்தவள் தான். அவளும் நானும் சரிசமமாகத் தோள் மேல் தோள் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் கண்டு களிக்கவில்லை. சிரித்துச் சிரித்து விளையாட்டுக் கதைகள் புகன்று உண்டு மகிழவில்லை. தெருவையும் வீட்டு வாசலையும் தவிர ஒன்றையுமே அறியாமல் அலுத்துச் சோஒர்ந்து ஏனடா வந்தோம் என்று கிலேசமுறும்படி ஹேமாவின் தலைவலி டைபாயிடு சுரமாக வளர்ந்து வீட்டையே களையிழக்கும்படி செய்துவிட்டது. என்னுடன் பேசுவார் யாரும் இல்லை. சிரிப்பார் யாரும் இல்லை. என்னைக் கேலி செய்து அக மகிழ்விப்பாரும் எவரும் இல்லை.

ஹேமா கண்ணையே விழிக்காமல் இருந்ததாகத் தெரிந்தது. டாக்டர் மணிக்கொரு முறை வந்து போனார். நர்ஸ் ஒருத்தி நோயாளிக்காக வீட்டுடனேயே அமர்த்தப்பட்டாள். அத்தைக்கு முகத்தில் ஈயாடவில்லை. பாட்டியோ கண்ட கண்ட தெய்வங்களுக்கு எல்லாம் நேர்ந்து முடிச்சிட்டு வைத்தாள்.

வந்து பதினைந்து தினங்களுக்கு மேல் ஆகிவிட்டன. மாடி வராந்தாவில் நின்று கீழே தோட்டத்தையும், காம்பவுண்டில் கட்டியிருந்த மாடு கன்றையும் பார்த்துப் பார்த்து எனக்குச் சப்பிட்டுவிட்டது. ‘அரைச் சம்மதம் கொடுத்த அம்மாவைத் தட்டிக் கொண்டு வந்தேனே! இப்போது ஊரில் இருந்தால்? எனக்கு அவர் பேனாப் பரிசு கொடுத்ததை ஊர்க்காரர்கள் அனைவரும் தெரிந்து கொண்டு என்னைக் கண்ட இடத்தில் எல்லாம் கேலி செய்வார்கள். கோவிலிலும் குளத்திலும் இன்னும் ஒரு மாதத்திற்காவது என் விவாகத்தைப் பற்றியும் மாப்பிள்ளையைப் பற்றியுமே பேச்சு நடக்கும். ஆமாம் நான் வந்து இத்தனை நாட்கள் ஆகிவிட்டனவே! கடிதம் எதும் எனக்கு வந்திருந்தால்? மதனி கூடத்தான் கடுதாசி எழுதி என்றாள். இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறேனே!’

ஜகது இன்னும் ஊருக்குப் போகவில்லை. இரண்டு மூன்று மாசம் இருக்கப் போகிறாள் என்று எனக்குத் தெரியும்.

‘அவளுக்கு வேணுமானால் எழுதலாமா? எனக்கு ஏதும் கடிதம் வந்தால்…’ நினைக்கவே எனக்கு வெட்கமாக இருந்தது. தவிரவும் பாட்டி அத்தைக்குத் தெரியாமல் கார்டு கவர் வாங்கி நான் எப்படி எழுதுவது? செய்வது நன்றாக இருக்குமா?

புறப்படும் போது அவர்களிடம் இருந்த சகஜ மனப்பான்மை ஹேமாவுக்கும் எனக்குமிடையே நிலவியிருந்த நேசத்தால் தோன்றியது என்று நான் நினைக்கும்படி அத்தையாவது பாட்டியாவது என்னிடம் ஒரு வார்த்தை கூடத் தாராளமாகப் பேசவில்லை. ஹேமா திடீரென்று படுத்துக் கொண்டு விட்டதனால் இப்படி இருக்கிறார்களா அல்லது நான் வந்திருப்பதில் விருப்பம் கொள்ளவில்லையா என்று எனக்குப் புரியவில்லை. ஊரில் இருக்கும் போது பாட்டு மறந்து போகாமலிருக்கத் தினமும் பாடுவேன். இங்கு அவர்கள் கவனியாமல் இருக்கும் போது நானாகப் பாடுவதா? வீட்டிலே ரேடியோ, புத்தகங்கள், பொழுது போக்கு விளையாட்டிற்கான கேரம் பலகை போன்ற சாதனங்கள் எல்லாம் இருந்தன. இருந்தாலும் ஹேமா இல்லாமல் அவைகளைச் சுதந்தரமாக உபயோகிக்க எனக்குத் தைரியம் வரவில்லை. பிடித்து விட்டாற் போல் எப்படி நாட்களைத் தள்ளுவது என்று கவலை கொள்ளலானேன். அன்று வெங்கிட்டு வழக்கம் போல் ரேடியோவில் செய்திகள் கேட்டுக் கொண்டு இருந்தான். நானும் அருகிலேயே இருந்தேன். செய்திகள் முடிந்ததும், “இருக்கட்டுமா? நிகழ்ச்சி முடிந்ததும் இந்த ஸ்விச்சைத் திருகி அணைத்து விடுகிறாயா?” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். யாரோ ஒரு பெண்மணி பாடிக் கொண்டிருந்தாள். அவள் பாடிக் கொண்டிருந்த பாட்டு எனக்கும் பாடம். எனவே என்னையும் அறியாமல் அதிலிருந்து வரும் குரலுடன் நானும் மெதுவாக இழைந்து பாட ஆரம்பித்து விட்டேன். பாட்டி அங்கே வந்ததை நான் கவனிக்கவே இல்லை.

“ஏன்டி சுசீலா, குழந்தை கண்ணைத் திறக்காம கிடக்கிறா; வேதனை பிடுங்கித் தின்கிறது. இப்போ என்ன வேண்டியிருக்கு பாட்டும் கூத்தும்? வெங்கிட்டு எங்கே? அதை அணைக்கச் சொல்லு” என்று அவள் குரல் கேட்டதும் தூக்கி வாரிப் போட்டது எனக்கு. “இல்லை பாட்டி, வெங்கிட்டு வெளியே போய்விட்டான். நானே அணைத்து விடுகிறேன்” என்றேன் ரேடியோப் பெட்டியினருகில் சென்றவளாய். “எத்தையானும் திருகி ஒடிச்சுத் தொலைச்சுடாதே. பணம் பெற்ற சாமான்!” என்று அவள் சொன்ன வார்த்தைகள், எனக்கு எப்படி சுரீர் என்று உரைத்தன. கண்டபடி திருகி ஒடித்து விடும்படி அத்தனை பச்சைக் குழந்தையா நான்? எழுத்து வாசனையற்ற மூட ஜடமா நான்? அடேயப்பா! பணப்பெருமை, தன் வழிக் குழந்தை தானே என்பதையும் மறந்து எத்தனை நீசமாகப் பேசச் சொல்கிறது? ஹேமாவுக்குச் சமமாக நான் உயர்ந்து விட்டதாக மனப்பால் குடித்தது எத்தனை பேதமை!

அந்தக் கணமே எனக்கு அங்கு விட்டு இறக்கை கட்டிக் கொண்டாவது பறந்து ஊரில் குதித்து விட வேண்டும் போலிருந்தது. பாலும் பழமுமின்றிப் பழையமுது சாப்பிட்டாலும் அந்த வீடு, அந்தச் சுதந்திரம் நினைக்கவே இன்பமாக இருந்தது. ரேடியோவும் புத்தகங்களும் இல்லா விட்டால் என்ன? ஜகது அக்கா வேறு இருக்கிறாள். தமாஷாக இரண்டு பேரும் சாயங்காலம் காற்றாடக் குளத்தங் கரைக்குப் போவதில் உள்ள ஆனந்தத்திற்கு ஏது ஈடு? பாவம், ஜகது! அவளோடு சேர்ந்து நான்கு நாட்கள் இல்லாமல் ஓடி வந்தேனே; வேண்டும் நன்றாக எனக்கு!

ஹேமாவுக்குச் சிறிது ஜுரம் இறங்கியது. கண்ணை விழித்துக் கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று கேட்கிறாள் என்று சொல்லிக் கொண்டார்கள். நாமும் பயணம் கட்ட வேண்டியதுதான். அத்தையிடம் மெதுவாகத் தெரிவிக்கலாம் என்று கீழே வந்தேன். பாட்டியும் அவளும் சாப்பிட உட்கார்ந்தனர் போலிருக்கிறது. உள்ளே நுழையுமுன்பே எனக்குப் பேச்சுக் குரல் கேட்டது.

“அவளா? அடேயப்பா, பலே கெட்டிக்காரி. பேச்சும் வார்த்தையுந்தான் சர்க்கரையாக இருக்கு. இந்தப் பெண்ணை ஆட்டி அம்பலத்தில் வச்சுடுவாள். பிள்ளையாண்டானுக்கு வயசு கிட்டத்தட்ட முப்பதாகப் போகிறதாம். இளையாளைப் போலப் பதினாலு வயசா வித்தியாசம்? ஆயிரம் நட்டாங்க் சொல்லுவாளே மன்னி? தானாகப் பார்த்து இதை எப்பிடிப் பொறுக்கினாள்?” என்றாள் அத்தை.

“இதுக்கேதான் ரூவாய் இரண்டாயிரத்தைந்நூறு கழற்றி இருக்காளே? பிள்ளையாண்டான் எங்கேயோ மாசம் அம்பது ரூபாய் சம்பாதிப்பதற்கு” – இது பாட்டி.

“வேலை கூடக் காயமில்லை. பி.டபிள்யூ.டி.யில் டெம்ப்ரரியாகத்தான் இன்னும் இருக்கானாம்” என்றாள் அத்தை மறுபடியும்.

என்னைப் பற்றித்தான் இவை என்று கூடப் புரியாத முட்டாளா நான்?

“சுசீலா அதிருஷ்டக்காரி. நல்ல வரனாகக் கிடைத்து விட்டது. அவர்கள் எல்லோரும் பெண்ணைத் தலைமேல் வைத்துத் தாங்கக் கூடியவர்கள்” என்று அம்மாவிடம் அபிப்பிராயம் கொடுத்த அதே அத்தையா இப்போது பேசுவது? எதற்காக இப்படி உள்ளொன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுகிறாள்.

நிஜமாக என் ஓரகத்தி அவ்வளவு பொல்லாதவளா? அவருக்கு நான் இளையாள் போல என்கிறாளே? அப்படியானால்… அவர் சீக்கிரமாக… நான்… சட்! எப்படி இருந்தால் என்ன? அவர் என் மீது அளவற்ற பிரியம் கொண்டிருக்கிறார். அது ஒன்றே எனக்குப் போதாதா? எப்பேர்ப்பட்ட குறைவும் மன நிறைவில் மறைந்து விடுமே!

சந்தர்ப்பம் சரியில்லை என்று வந்த சுவடு தெரியாமலே நான் திரும்பி விட்டேன். ஆனால் களங்கமற்றிருந்த என் இருதய வானிலே ஒரு சிறு புள்ளி விழுந்து விட்டது. அத்தையின் அபிப்பிராயம் ஏற்கனவே அமிழ்ந்து கிடந்த அந்த அர்த்தமற்ற நம்பிக்கையைக் கிளப்பிவிட்டு என்னை உறுத்த ஆரம்பித்தது.

குற்றங்கள் நம்மை அறியாமல் உள்ளே புதைந்து உணர முடியாமலே போவதற்குக் காரணம் அவைகளை அமுக்கி விடக் கூடியதாகச் சந்தோஷம் எழுப்பி விடுவதால் தான். என் புக்ககத்தாரின் மேற்படி குறைகள் நிஜமானவை தாமோ? ஏதோ உணர்ச்சி வசப்பட்ட புது ஆசையில் நான் அவைகளை நிறைவாகக் கருதலாம். நாள்பட்ட மெருகு அழிந்து போவதால் பல்லைக் காட்டும் முலாம் பூசப்பெற்ற பாண்டம்போல என் புது ஆசை மெருகும் அழியுமானால் குறை பெரிய மடுவாகக் காட்சியளிக்குமோ எனக்கு?

தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சிகள், இடி, மின்னல், பாட்டு எல்லாம் சங்கிலித் தொடர் போல என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டன. நினைக்கவே பயம் கொடுத்த இவ்வேதனை கட்டி வைத்தாற் போன்ற அந்தச் சுழ்நிலையில் வளர்ந்து வளர்ந்து என்னை வருத்தியது.

இரவு தூங்காமல் புரண்டு கொண்டிருந்த என்னை பக்கத்துப் பெஞ்சியில் வந்து படுத்துக் கொண்ட பாட்டி கூப்பிட்டாள்.

“ஏன் பாட்டி?” என்று கேட்ட நான் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தேன்.

“உன் அப்பா கடுதாசி போட்டிருக்கானாம்!” என்றாள் மெதுவாக. இதைச் சொல்லவா இந்த யோசனை? ஏன், வந்தவுடனேயே எனக்குச் சொல்லக் கூடாதா? “என்ன பாட்டி?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“உங்களாத்தில் உன்னைக் கொண்டு விடச் சொல்லி எழுதியிருக்கிறார்களாம்!”

“என்னது?” என் நெஞ்சு ‘டப்டப்’பென்று அடித்துக் கொண்டது.

“ஆமாண்டியம்மா, ஆமாம்! ஐந்நூறு ரூபாய்க்கு அடி போட்டிருக்கிறான் உன் அப்பா!” என்றாள் பாட்டி வேப்பங் காயைத் தின்று விட்டுத் துப்புவதுபோல்.

அப்பா இங்கே பணம் கேட்டு எழுதியிருக்கிறாரா?

நான் புரியாமல் விழித்தேன்.

அவள், “புடவை, வேட்டி, பெட்டி, படுக்கைன்னு ரூபாய் அஞ்சு நூறுக்கு இங்கே எழுதியிருக்கானாம். கல்யாணத்துக்கேதான் வேண்டியது செய்தாளே. ஒருத்தரையே உருவி உருவிக் கேட்கணும்னு ஏன் புத்தி போகிறது? அப்படித்தான் ‘நறுக்’குனு நூறு ரூவாயிலே ஒரு புடவையை வாங்கி மங்கிலியப் பெண்டுகள் இட்டு, சபை நிற்கப் பாருவுக்குக் கொடுத்தாளா? எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்கிறது. உன் அம்மாதான் எழுதச் சொன்னாள் என்றால் உன் அப்பாவுக்கு ஏன் இப்படி எழுதத் தோன்றுகிறது? இத்தனை வரதட்சிணை கொடுத்து, பி.ஏ. படிச்ச மாப்பிள்ளை பார்க்க வேண்டாமே? தன் விரலுக்குத் தக்கபடி வீங்கினால் போதுமே. குழந்தை மலை போலப் படுத்துக் கொண்டு விட்டாளே என்று அவாளுக்கு முகத்திலே ஈயாடலே. இப்பத்தான் பணத்துக்கு எழுதுவாளா?” என்று சரமாரியாகப் பொரிந்து தள்ளினாள்.

ஏற்கனவே அத்தையகத்து அந்தஸ்திற்கும் அகம்பாவத்திற்கும் முன் முதுமையின் தோலைப் போல் சுருங்கிப் போயிருந்த என் மனம். இப்போது அப்பா வேற எனக்குத் தேடித் தந்துவிட்ட அவமானத்தினால் கடுகிலும் கடுகாகப் போய்விட்டது போலிருந்தது.

இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என்று தெரியாதோ? ஏன் இங்கு எழுதினார்? ஏதோ கல்யாண காலத்தில் நாலுபேருக்கு முன் சகஜமாக அளவளாவுவது போல காண்பித்துக் கொண்டால் அதையும் நிசம் என்ற நம்பி விடுகிறாரே இந்த அப்பாவி அப்பா! அம்மாவா எழுதச் சொல்லுவாள்? ஏற்கனவே தான் சமயம் வாய்த்த போது எல்லாம் பணக்காரத் தங்கை என்று குத்திக் காட்டுவாளே! இந்த ஐந்நூறு ரூபாய் எங்கும் கிடைக்காதா? இங்கு வந்து ஏன் முட்டிக் கொள்ள வேண்டும்? ஆனால் அப்பாவுந்தாம் என்ன செய்வார்? அவர் மீதில் என்ன தப்பு? ஐந்நூறு ரூபாய் இவர்களுக்குப் பெரிதா? இதோ ஹேமாவுக்குப் பணிவிடை செய்கிறாளே, அந்த நர்ஸுக்கு மட்டும் நாளைக்கு இருபது ரூபாய் என்று பேசிக் கொள்கிறார்களே! இன்னும் டாக்டர், மருந்து, என்று எத்தனையோ? ஆயிரம் ஆயிரமாக செலவழிக்கிறார்கள். அத்திம்பேருக்குத்தான் மாதம் ரண்டாயிர ரூபாய் போல் வரும் என்று கூறுகிறார்களே! ஐந்நூறு ரூபாய் கொடுக்க அப்பா என்ன அல்லா, அசலா? கூடப் பிறந்தவர்தாமே அத்தைக்கு? அப்படியாவது திராக்கிரகச் செலவுக்குக் கேட்கிறாரா? எனக்காக இந்த அற்பக் காசைக் கொடுப்பது இவர்களுக்குப் பிரமாதமில்லையே? அவர்களுக்கும் இந்தக் கடின சித்தம் வேண்டாம்; பாட்டிக்கும் இந்த ஏளனம் வேண்டாம். எப்படியாவது ஊருக்குப் போய் இவர்களுடைய மனப்பான்மையைத் தெளிவாக உடைத்து விட வேண்டும் போல் மனம் துடித்தது எனக்கு.

அப்படித்தான் இருக்கும். பாட்டி இதெல்லாமா என்னிடமா பேசுவது? பெரியவர்கள் பாடு ஆயிரம் இருக்கும். இந்த நிஷ்டூரங்களை அம்மாவின் ஸ்தானத்தில் என்னை மதித்துக் கூறுவது அழகாகுமா? ‘ஐயோ பாவம்! சின்னச் சம்பளம். இரண்டு பெண்களுக்கு முதலிலேயே கல்யாணம் செய்து சளைத்து விட்டான். அவனுக்கு உதவி செய்யத்தான் வேண்டும்’ என்று இரக்க புத்தியும் அநுதாபமும் இந்தப் பாட்டிக்கு ஏன் தோன்றவில்லை? பெண் என்றாலே தாய்மார்களுக்கு அலாதி வாஞ்சை உண்டு என்று நான் கண்டிருக்கிறேன். அதிலும் அத்தை சாமானியப் பெண் இல்லையே! பாரபட்சம் அதனால் தான் மலையும் மடுவுமாக உருவெடுத்திருக்கிறது போலும்!

இத்தகைய என் மனக்கிலேசங்களில் என்னைப் புக்ககத்தில் கொண்டு விடப் போகிறார்கள் என்ற நினைவு அமுங்கியே போய்விட்டது. ஐந்நூறு ரூபாய்ப் பிரச்னை இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வராமல் மலைபோல் என் முன் தோன்றிப் பயங்கரமாகக் காட்சி அளித்தது.

ஈசுவரன் ஏன் இப்படிக் கடின புத்தியுடன் செல்வத்தையும் ஏழ்மையுடன் மக்களையும் படைக்க வேண்டும் என்று அநாதி காலம் தொட்டு மக்கள் ஆராய்ந்தும் விடை கண்டறியாத புதிருக்குள் தலையை விட்டுக் கொண்டு நான் குழம்பிப் போனேன்.

– தொடரும்…

– நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது – 1953.

– பெண் குரல், முதல் பதிப்பு: 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *