தெப்போ-76







(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
அத்தியாயம்-1
“ஹலோ, கோபால் ராவ்! டில்லிக்கு எப்ப வந்தீங்க? எங்கே இப்படி நடந்தே…” என்று வியப்போடு கேட்டான் பஞ்சு.

“உன்னைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருக்கேன். இப்ப நீ ‘ஜாப்னீஸ் எம்பஸி’யிலே பெரிய ‘பொஸிஷன்’லே இருப்பதாகக் கேள்விப்பட்டேன்” என்றார் கோபால் ராவ்.
“ஆமாம், இப்பவெல்லாம் நினைத்தால் ஜப்பானுக்குப் போறேன், வரேன். ஜப்பானிலிருந்து உமக்கு என்ன வேணும் சொல்லுங்க. கேமரா, டிரான்ஸிஸ்டர், வாட்ச்… ஏதாவது?”
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் ஜப்பானுக்குப் போகணும். அங்கே போய்க் கார் ஓட்டணும்..”
“என்னது? ஜப்பான்லே கார் ஓட்டணுமா? டாக்ஸி டிரைவர் வேலையா? போயும் போயும் உமக்கு இப்படி ஒரு அல்ப ஆசையா? அங்கே கார் ஓட்டுவதென்றால் அவ்வளவு சுலபம் இல்லேய்யா. அதற்குத் தனி சாமர்த்தியம் வேணும். எக்கச்சக்க ஸ்பீட் ஓட்டணும். மணிக்கு ஐம்பது மைல், அறுபது மைல்..”
“நான் ஓட்ட ஆசைப்படறது உம்ம ‘டொயோடா கார் இல்லை. டெம்பிள் கார். அதாவது நம்ம ஊர்த் தேர் ஒண்ணு ஓட்டணும். இது வரைக்கும் அவ்வளவு பெரிய தேரை யாருமே பார்த்திருக்கக் கூடாது. திருவாரூர்த் தேரைவிடப் பெரிசா இருக்கணும்.”
“திருவாரூர்த் தேர் மாதிரி ஜப்பான்லே ஒட்டிப் பார்க்கிறதா? என்னய்யா, தமாஷ் பண்றீரா? இதெல்லாம் நடக்கிற கதையா?”
“நடக்கிற கதையில்லை. ஓடுகிற கதை.”
“நல்ல ‘ஐடியா’ வாத்தான் இருக்கு. ஆமாம்; அவ்வளவு பெரிய தேருக்கு நாம் எங்கே போவது? அதை யார் செய்து கொடுப்பாங்க? முதல்ல அதைப் பற்றி யெல்லாம் யோசித்தீரா?”
“ஜப்பான்லே, ‘எக்ஸ்போ ஸெவண்ட்டி’ நடத்தினாங்க இல்லையா? அதே மாதிரி இது ‘தெப்போ -76’! தேரோடு ஒரு தெப்பம். அவ்வளவுதான்” என்றார் கோபால் ராவ்.
“ரொம்ப ஸிம்பிளாச் சொல்லிட்டீங்க நீங்க. “எக்ஸ்போ – 70′ என்றால் அதுக்கு எத்தனை வருஷம் எவ்வளவு பணம் செலவழிச்சாங்க தெரியுமா?” என்று கேட்டான் பஞ்சு.
“இதுக்கு வேண்டியதெல்லாம் ஒரு தேர், ஒரு தெப்பம். அவ்வளவுதான். வேணுமானால் முத்துப் பல்லக்கு ஒண்ணும் செஞ்சுடலாம். ஜப்பான்லே முத்துக்கு என்ன பஞ்சம்? கொட்டிக் கிடக்குமே! தரக்குறைவான முத்தெல்லாம் கடலிலே கொண்டு போய்க் கொட்டி விடுகிறார்களாமே!”
“கோபால் ராவ்! உம்ம திட்டம் பிரமாதமாகத்தான் இருக்கு. இதுக்கெல்லாம் யாரய்யா பணம் செலவழிப்யாங்க? அதைச் சொல்லுங்க முதல்லே” என்று கவலையோடு கேட்டான் பஞ்சு.
“அமெரிக்காவிலே ‘வாஷிங்டனில் திருமண’த்தையே நடத்தினவனாச்சே நீ! உனக்கு நான் சொல்லித் தரணுமா? யாரைப் பிடிப்பாயோ? என்ன செய்வாயோ? அதெல்லாம் எனக்குத் தெரியாது. ‘டோக்கியோ கின்ஸா விலே தமிழ் நாட்டுத் தேர் ஓட்டம்’னு விளம்பரப்படுத்தினால் அமெரிக்கா, ஐரோப்பாவிலேருந்தெல்லாம் கூட்டம் கூட்டமாக வேடிக்கை பார்க்க வருவாங்களே! வெளி நாட்டுப் பணம் வந்து குவியுமே! பெரிய டூரிஸ்ட் அட்ராக்ஷனாச்சே…”
“கோபால் ராவ்! உமக்குத்தான்யா இந்த மாதிரி ‘எக்ஸெண்ட்ரிக்’ ஐடியாவெல்லாம் வரும். சரி, தேர் என்றால் அதிலே எந்த சாமியை வைக்கிறது?”
“தெப்பத்திலே பிள்ளையாரை வைப்போம். முத்துப் பல்லக்கிலே நடராஜாவை வைப்போம். தேரிலே திருவள்ளுவரை வைத்துடலாம். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாரதியாரே பாடியிருக்கிறாரே. வள்ளுவர்தான் இண்ட்டர்நேஷனல் ஃபிகர்.”
“சொல்லச் சொல்ல எனக்கு ஒரே த்ரில்லிங்கா இருக்கய்யா! தேங்காய் உடைத்து தீபாராதனை காட்டறதுக்கு அம்மாஞ்சி வாத்தியார், சாம்பசிவ சாஸ்திரி இரண்டு பேரையும் அழைச்சுண்டு போயிடலாம். அவங்க நம்ம பழைய ஃப்ரண்ட்ஸ்!” என்றான் பஞ்சு.
“ஆமாம், டோக்கியோவே அல்லோலகல்லோலப்படணும். நமக்கும் ஒரு நல்ல பொழுது போக்கு. ஜப்பான் மக்களோடு கலாசார உறவுக்கு ஒரு வழி. நம் கலைச் சிறப்புகளை யெல்லாம் உலக மக்கள் கண்டு களிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம். நம் ஊர் நாதசுரம், மல்லிச்சரம், தண்டமாலை, கோயில் குடை, தேர்ச்சீலை, பொய்க்கால் குதிரை, தாரை தப்பட்டை, வாண வேடிக்கை, கொம்பு வாத்தியம், கொம்பு மிட்டாய், பொரி கடலை பட்டாணி, தண்ணீர்ப் பந்தல், நீர் மோர்.”
“நீர் மோர்னா?” என்று குறுக்கிட்டான் பஞ்சு.
“More நீர்னு அர்த்தம்!” என்றார் ராவ்.
“நம் ஊர் நீர் மோரெல்லாம் அங்கே கொண்டு போகக் கூடாது. ஜப்பான் தூய்மையான, துல்லியமான தேசம். அங்கே போய்த் தண்ணீர்ப் பந்தல் அது இது என்று வைத்து அசிங்கப்படுத்திவிடக் கூடாது” என்றான் பஞ்சு.
“திருவிழான்னா ஒரு தண்ணீர்ப் பந்தல் வேண்டாமா?”
“தண்ணீர்ப் பந்தல் என்ன? அவங்களிடம் சொன்னால் ‘ஸன்ட்டோரி’ப் பந்தலே வைத்துக்கொடுப்பாங்க.”
“ஸன்ட்டோரியா? அப்படின்னா?”
“அது ஜப்பான் தேசத்து ட்ரிங்க். ரொம்ப ஒஸ்தி. அதிலே கொஞ்சம் உள்ளே போனால் ஜப்பானே ஆடும்.”
“பூகம்பத்திலேயா?”
“ஜப்பான் ஆடாது; நீர்தான் ஆடுவீர்! அது சரி; கொம்பு மிட்டாய்னு சொன்னீங்களே, அதென்ன?” என்று கேட்டான் பஞ்சு.
“நீளமா கொம்பு நுனியிலே கலர்லே ஜவ் மிட்டாய் இருக்கும். ஒருத்தன் அந்தக் கொம்பைத் தோள் மீது சாய்த்துக்கொண்டு ‘கிணுகிணு’னு மணி அடிச்சிட்டே போவான். சின்னப் பசங்களெல்லாம் அவனைச் சூழ்ந்து கிட்டு நிப்பாங்க. அவன் பைசா வாங்கிட்டு அந்தக் கொம்பு நுனியில உள்ள பாகுமிட்டாயை ரப்பர் மாதிரி இழுத்து வளைத்து அந்தப் பசங்க கையிலே ரிஸ்ட் வாட்ச் கட்டி விடுவான்…”
“பலே, பலே! ரொம்பத் தமாஷாத்தான் இருக்கும். வாட்சுக்குப் பெயர் போன ஜப்பான் நாட்டிலே மிட்டாய் வாட்சா? ரொம்ப வேடிக்கைதான்!”
“இது மட்டும்தானா? இன்னும் எத்தனையோ தமாஷெல்லாம் இருக்கே..?”
“சரி; தேர் என்றால் அதை யார் செய்து கொடுப்பாங்க? யார் ஓட்டுவாங்க?”
“திருவாரூர் வி.எஸ். டி. கிட்டே இதைப் பற்றியெல்லாம் ஏற்கெனவே விவரமாப் பேசிட்டேன். தேர் விடறதிலே அவர் ஒரு ‘எக்ஸ்பர்ட்’டாச்சே! ஓடாத தேரை ஓட வைத்தவராச்சே! இந்தத் தேரைச் செய்து கொடுக்கிற பொறுப்பு அவருடையது. அப்புறம் என்ன கவலை? அவர் தான் நமக்கெல்லாம் லீடர்…”
“கோபால் ராவ்! பெரிய ஆளய்யா நீர்! எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்துவிட்டுத்தான் என்னிடம் வந்தீரா? ரொம்ப சரி. தேரை யார் இழுப்பாங்க?”
“ஒரு வடத்தை ஜப்பான்காரங்க இழுக்கட்டும். நாம் இன்னொரு வடத்தை இழுப்போம். கலாசார உறவுக்கு இது நல்ல வழி. இதுதான் ரியல் கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்ச்” என்றார் கோபால் ராவ்.
“நாம் என்றால் எத்தனை பேர்?”
“ஆயிரம் பேர்.”
“போதுமா அவ்வளவு பேர்?”
“கூடத்தான் நாலைந்து யானைகளைக் கொண்டுபோகப் போகிறோமே!”
“யானைகளா? அதுங்க எதுக்கு?”
“பின் பக்கத்திலிருந்து தேரைத் தள்ளி விடுவதற்கு. பாலக்காட்டிலே தேர் தள்ளுவதற்கென்றே யானைகளைப் பழக்கி வைத்திருக்காங்க. கல்பாத்தி தேர். பார்த்திருக்கீங்களா? அந்தத் தேரை யானைகள் முட்டித் தள்ளுகிற காட்சியை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கிட்டிருக்கலாம்.”
“அப்படியா? யானைகளுக்கு யார் தீனி போடறது?”
“தீனி போடுவதற்கென்று பத்து ஆளை அழைத்துக் கொண்டு போனால் போச்சு. இந்த சாக்கிலே அந்தம் பத்துப் பேரும் ஜப்பான் பார்க்கலாமே!”
“சரி, என்ன தீனி?”
“கரும்புதான். ஜாவாவில் இருந்து வரட்டும். இல்லைன்னா இந்தியாவிலேருந்து கொண்டு போவோம். ஜப்பான் நாட்டிலே இப்போது கரும்பு சாகுபடி அவ்வளவாகக் கிடையாது. அவங்களே வெளி நாட்டிலேருந்து தான் சர்க்கரை வரவழைக்கிறாங்களாம்.”
“ஆமாம்; இங்கிருந்து யானைகளை எப்படிக் கொண்டு போவது?” என்று கேட்டான் பஞ்சு.
“ஏன்? அக்பர் சக்கரவர்த்தி இருக்கிறபோது நமக்கென்ன கவலை?”
“அக்பர் சக்கரவர்த்தியா? அது யார்?”
“ஏர் இந்தியா ஜம்போ ஜெட்டைத்தான் சொல் கிறேன். அவரைத் திருப்பித் திருப்பி டோக்கியோவுக்கும் மெட்ராஸுக்கும் விட்டால் போச்சு. இப்போதெல்லாம் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டுக்கே வர ஆரம்பிச்சுட்டாரே. ஒரு ட்ரிப்புக்கு முன்னூறு பேர் போகலாமாம். அப்படியே யானைகளுக்கும் ஒரு ட்ரிப் அடிச்சுட வேண்டியதுதானே!”
“முக்கியமாக ஒன்று கேட்க மறந்துவிட்டேன். தேருக்கு முட்டுக்கட்டை போட ஆள் வேண்டாமா?” என்று கேட்டான் பஞ்சு.
“நம்ம நாட்டிலே அதுக்கென்ன பஞ்சம்? எந்த நல்ல காரியத்துக்கும் முட்டுக்கட்டை போடுவதற்கென்றே சில பேர் இருக்காங்களே, அவங்களை அழைச்சிட்டுப் போயிட்டாப் போச்சு” என்றார் ராவ்.
“இங்கிருந்து தேரை எப்படிக் கொண்டு போவது? அதைச் சொல்லவில்லையே?” என்று கேட்டான் பஞ்சு.
“தேரைக் கொண்டு போவதா? தேர் தெப்பம் இரண்டையும் ஜப்பானிலேயேதான் செய்யணும். அதற்காக நம்ம சிற்பிகளையும், ஆசாரிகளையும் ஸ்பெஷலா அழைத்துக்கொண்டு போகணும். தேர் செய்வதையே ஒரு எக்ஸிபிஷனா காட்டலாமே. இழைப்புளி, கொட்டாப்புளி, இலுப்பை மரம், தேக்கு மரம் அவ்வளவும் எக்ஸ்போர்ட் ஆகவேண்டியதுதான். அதோடு, பல்லக்கு ஜோடிக்கிறவங்க, பந்தல் போடறவங்க தஞ்சாவூர்லே ஏராளமா இருக்காங்க. அவங்களையும் அழைச்சுக்கிட்டுப் போயிடுவோம்.”
“சரி ; தேரை டோக்கியோவிலே விட்டால், தெப்பத்தை எங்கே விடுவது? கியோட்டோவிலே விடலாமா? அதுதான் ஜப்பானின் பழைய தலைநகரம். அங்கேதான் இண்டர்நேஷனல் கான்பரன்ஸ் ஹால் இருக்கு. அதற்குப் பக்கத்திலே ஒரு பெரிய ஏரி இருக்கிறது. தெப்ப விழா நடத்துவதற்கு ஏற்ற இடம். அந்தக் கட்டடத்திலே ஆயிரம் பேர் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம்.”
“எனக்குத் தெரியும். அந்த இடமெல்லாம் நானும் பார்த்திருக்கிறேன்” என்றார் கோபால் ராவ்.
“நீங்க ஐப்பான் போயிருக்கீங்களா?”
“ஒரே ஒரு முறை போயிருக்கிறேன். ஆனால் அதிக நாள் தங்கினதில்லை. எதற்கும் நாம் நாலைந்து பேர் முதலில் ஒரு ‘ட்ரிப்’ போய்ப் பார்த்து லொகேஷனை முடிவு செய்து வீட்டு வருவோம்” என்றார் கோபால் ராவ்.
“எனக்கு ஒரு சந்தேகம். தேர் ஓடுகிறபோது அதுக்கு முன்னாலும் பின்னாலும் யார் போவாங்க?”
“பின்னாலே ஓதுவார்கள்.முன்னாலே ஊதுவார்கள்” என்றார் ராவ்.
“ஊதுவார்னா?”
“பீ! பீ!”
“கின்ஸா ஏரியாவிலே தேர் விடுவதென்றால் ரொம்பக் கஷ்டமாச்சே. உலகத்திலேயே ரொம்ப பிஸியஸ்ட் ஏரியாவாச்சே அது?”
“அந்த இடத்திலே தேர் விடறதுதான் சாதனை! வேகமா ஓடறவங்களுக்கு நடுவிலே, சுறுசுறுப்பான மக்களுக்கு மத்தியிலே, நிதானமா, சாவகாசமா நகரப் போகிற ஒரு தேரை விடப் போறோம். அதிலேதான் வேடிக்கை இருக்கு. எப்படி என் யோசனை? எப்படியாவது நீ ஜப்பான் கவர்ன்மெண்டை சம்மதிக்க வைத்துவிடு. அப்புறம் பாரேன் வேடிக்கையை!”
“எனக்குத் தெரியும். ஜப்பான் கவர்ன்மெண்ட் இதற்கு மறுப்பே சொல்ல மாட்டாங்க. சந்தோஷமா ஒப்புக்குவாங்க. ஏன்னா அவங்களே இப்படி ஏதாவது ஒன்று செய்யணும்னு கொஞ்ச நாளா யோசிச்சுக்கிட்டிருக்காங்க. வெளி நாட்டு டூரிஸ்ட்டுகளை ‘அட்ராக்ட’ பண்ணுகிற மாதிரி என்ன செய்யலாம்னு கேட்டுகிட்டு இருக்காங்க. நம்முடைய இந்த ஐடியாவைச் சொன்னால் உடனே ‘ஓகே’ தான். தே வில் ஜம்ப் அட் தி ஐடியா! ஆமாம், நீங்க டில்லியிலே எங்கே தங்கியிருக்கீங்க…?”
“இங்கே பக்கத்திலேதான், அசோகா ஓட்டல்லே.”
“அப்படியா! நாளைக்கே மறுபடியும் மீட் பண்ணுவோம். பை, பை! நான் வரட்டுமா?” என்று சொல்லிக் கொண்டே பஞ்சு தன்னுடைய ‘டொயோடா’ காரை அறுபது மைல் வேகத்தில் செலுத்தினான்.
‘அவ்வளவுதான்; பஞ்சுவுக்கு ஃபுல்லா கீ கொடுத்தாச்சு! இனி, காரியம் நடந்த மாதிரிதான்’ என்று தமக்குள்ளாகவே சொல்லி மகிழ்ந்து கொண்டார் கோபால் ராவ்,
அத்தியாயம்-2
“சாஸ்திரிகளே, அடிச்சுதய்யா உமக்கு ப்ரைஸ்!…” என்று உற்சாகத்தோடு கூவிக் கொண்டே வந்தார் அம்மாஞ்சி வாத்தியார்.
“எதைச் சொல்றீங்க? ராஜஸ்தான்லே ஒரு டிக்கெட், கர்நாடகாவிலே ஒரு டிக்கெட் வாங்கி வச்சிருக்கேன் எந்த லாட்டரியிலே அடிச்சுது?” என்று ஆர்வத்தோடு கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“லாட்டரி இல்லேய்யா. அடுத்த வாரம் நாம் இரண்டு பேரும் ஜப்பானுக்குப் போகிறோம். நாளைக்கே டில்லிக்குப் புறப்படணும். அங்கிருந்து டோக்கியோ! ரெடியா இருங்க.”
“டில்லிக்கா? அங்கே நமக்கு என்ன வேலை?”
“ஜப்பான் அம்பாசிடரைப் பார்க்கப் போகிறோம்” என்று தக்ளியைத் திருகி நூல் நூற்றபடியே சொன்னார் அம்மாஞ்சி வாத்தியார்.
“யாரிடம் சரடு விடுகிறீர்? ஜப்பான்லே கூட அம்பாசிடர் கார் பண்றாங்களா?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“அம்பாசிடர் என்றால் கார் இல்லேய்யா; வெளி நாட்டுத் தூதரை இங்கிலீஷ்லே அம்பாசிடர்னு சொல்லு வாங்க. ஜப்பான் நாட்டுத் தூதர் டெல்லியிலே இருக்கார். கடகாஷிஸுஸூ என்று பெயர். ரொம்ப நல்லவராம். அவர் நம்மைப் பார்க்க ஆசைப்படுகிறாராம். ஜப்பான்லே நம் தமிழ்நாட்டுத் தேர் ஒன்று ஓட்டப் போகிறார்களாம்.
நாம் முன்னாடியே ஜப்பானுக்குப் போய் பூர் வாங்க ஏற்பாடுகளை யெல்லாம் கவனிக்கணுமாம். பஞ்சு எழுதியிருக்கான். அவன் இப்போ டில்லி ஜாப்னீஸ் எம்பஸியிலே ஒரு முக்கியமான ஆபீசர், தெரியுமோல்லியோ?”
“யார், நம்ப பஞ்சு ஸாரா? முன்னே அமெரிக்காவுக்கு அழைச்சிண்டு போனார். இப்போ ஜப்பானுக்கா? பலே, பலே! அது சரி, ஜப்பான்லே நாம் எங்கே தங்கப் போகிறோம்? சாப்பாட்டு அரேஞ்ச்மெண்டெல்லாம் எப்படி?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“இம்பீரியல் பாலஸ்லே ஜப்பான் சக்கரவர்த்தியின் ‘கஸ்ட்’டா தங்கப் போகிறோம்” என்றார் அம்மாஞ்சி.
“இத பாருங்க, நாம் ஜப்பான் போகப் போகிற விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். தெரிஞ்சா ஒவ்வொருத்தரும் வாட்ச், காமிரா, டேப் ரிகார்டர்னு பிராணனை எடுத்துடுவாங்க…” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“ரொம்ப சரி; ஆனால் நம்ம ஜப்பான் சாஸ்திரிகளை மட்டும் அழைச்சுண்டு போயிடலாம். பார்க்கறதுக்குக் குள்ளமா ஜப்பான்காரன் மாதிரி இருக்கார். அத்தோடு நல்ல சுறுசுறுப்பு. பேரும் ஜப்பான் சாஸ்திரி. அவரை நினைச்சாலே எனக்குச் சிரிப்பு வரது…” என்றார் அம்மாஞ்சி.
“ஏன்?”
“ஒரு நாள் வெற்றிலைக்குக் கீழ்ப் பாதியிலே மட்டும் சுண்ணாம்பைத் தடவிக் கொண்டிருந்தார். ‘என்ன சாஸ்திரிகளே, மேல் பாதிக்கு சுண்ணாம்பு தடவலையா?’ என்று கேட்டேன். ‘நான் குள்ளமோன்னோ, மேல் பாதி எட்ட வில்லை’ என்று ஜோக் அடிக்கிறார். அவர் கூட இருந்தால் பொழுது போவதே தெரியாது. ரொம்ப தமாஷ் பேர்வழி” என்றார் அம்மாஞ்சி.
“அவர் அசல் பேரென்ன?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“ஹரிஹர சாஸ்திரிகள். பாஸ்போர்ட்டுலே அந்தப் பெயரைத்தான் எழுதணும். வாங்க, இப்பவே அவரைப் போய்ப் பார்த்துடலாம்…”
ஜப்பான் சாஸ்திரி ஊஞ்சலில் உட்கார்ந்து விசிறிக் கொண்டிருந்தார். இவர்களைக் கண்டதும், “வாங்கோ, வாங்கோ! எங்கே இப்படி இந்த வெய்யில்லே?” என்று விசாரித்தார்.
“உம்மைப் பார்க்கத்தான். அடுத்த வாரம் ஜப்பானுக்குப் போகிறோம். நீரும் வருகிறீரா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“ஜப்பானுக்கா? என் மருமானுக்குக்கூட டோக்கியோவிலேதான் உத்தியோகம். அங்கே போனால் சாப்பாட்டுக்குக் கவலையில்லை. ஆமாம், ஜப்பானில் என்ன விசேஷம்?” என்று கேட்டார் குள்ள சாஸ்திரி.
“நம் ஊர் தேர் தெப்பமெல்லாம் அங்கே விடப் போறாங்க. நாம் தான் முன் கூட்டியே போய் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்து எந்த இடத்திலே தேர் விடறது, எந்த ஏரியிலே தெப்பம் விடறது என்பதை முடிவு செய்யணுமாம். டில்லி பஞ்சு லெட்டர் எழுதியிருக்கான். இப்ப அவன் ஒரே பிஸி. ஜப்பான் கவர்ன்மெண்ட்டோடு ஓவர்ஸீஸ் கால் போட்டு ஓயாமல் பேசிண்டிருக்கானாம். ஏக தடபுடல் பட்டுக் கொண்டிருக்கிறதாம்.”
“பலே பலே!” என்றார் குள்ள சாஸ்திரி.
“உம்ம பேரே ஜப்பான் சாஸ்திரியாச்சே! அதனாலே உம்ம ஞாபகம் வந்தது. நாளைக்கே டில்லிக்குப் புறப்படணும். ரெடியாயிருங்க” என்றார் அம்மாஞ்சி.
“ஜப்பானுக்குப் போனா நல்ல விசிறியா நாலு வாங்கிண்டு வரணும். இந்த விசிறியிலே காத்தே வர மாட்டேங்கறது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“விசிறியிலிருந்தா காத்து வருகிறது? ஊரிலே காத்து இல்லேன்னா விசிறி என்ன பண்ணும்?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“என்ன இருந்தாலும் ஜப்பான் சாமான் ஆகாதய்யா. ஜப்பான் மாதிரி ஒரு அழகான நாடும் கிடையாது. ஜப்பான் தேசத்திலே கெய்ஷா கர்ல்ஸ் விசிறி வெச்சிண்டு நடக்கிறதே ஒரு தனி அழகாம். என் மருமான் சொல்லுவான்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“கெய்ஷான்னாலே கர்ல் என்றுதான்யா அர்த்தம். அதனாலே கெய்ஷான்னு மட்டும் சொன்னால் போதும். ஆம்பளை கெய்ஷா கிடையாது” என்று திருத்தினார் சாம்பசிவம்.
“ஜப்பானுக்குப் போனால் ஒரு கெய்ஷா அழகியைப் பார்த்துவிட்டு வரணும்” என்றார் அம்மாஞ்சி வாத்தியார்.
“உமக்கு அப்படி ஒரு சபலமா! அது சரி, உமக்கு ஜப்பான் பாஷை தெரியுமா?”
“பாஷை என்ன பிரமாதம்? நாம் சிரிச்சா அவளும் சரிக்கிறா க்யூஷு, ஷிகோகு, ஹோன்ஷு, ஹொக் காய்டு – இவ்வளவு தானே ஜப்பான்?’ என்றார் குள்ள சாஸ்திரி.
“ஓய், ஓய்! உமக்கு ஜப்பான் பாஷை தெரியுமா!” என்று வியந்தார் அம்மாஞ்சி.
“இது பாஷை இல்லை. முக்கியமான நாலு ஜப்பான் தீவுகளின் பெயர். ஹோன்ஷா தீவிலேதான் டோக்கியோ இருக்கு. டோக்கியோவிலேதான் இண்டியன் எம்பஸி இருக்கு. அங்கேதான் என் மருமான் இருக்கான்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
சாம்பசிவ சாஸ்திரி தலையை நிமிர்த்தி யோசனையில் ஆழ்ந்தார்.
“என்ன பலமா யோசிக்கிறீங்க?” என்று சாம்பசிவ சாஸ்திரியைப் பார்த்துக் கேட்டார் அம்மாஞ்சி.
“ஒன்றுமில்லை; முதல் முதல் புறப்படும் போது மூன்று பேராகப் புறப்படலாமா என்று தான் யோசிக்கிறேன்” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“அம்மாஞ்சி வாத்தியார் ஒன்று, நீங்க ஒன்று, நான் ரெண்டு பேர் – ஆக நாலு பேராச்சே!” என்றார் ஜப்பான் சாஸ்திரிகள்
“என்ன புதிர் போடறீங்க? நீங்கள் எப்படி ரெண்டு பேரானீங்க?” என்று வியப்போடு கேட்டார் அம்மாஞ்சி..
“ஆமாம், என் பெயர் ஹரிஹரன் இல்லையா? ஹரி ஒன்று ஹரன் ஒன்று ஆக இரண்டு பேராச்சே!” என்றார் ஜப்பான் சாஸ்திரிகள்.
“ரொம்ப வேடிக்கையாப் பேசறீங்க. அவசியம் நீங்க எங்களோடு வந்தே ஆகணும்” என்று சிரித்தார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“வெறும் கை, வெறும் கழுத்தோடுதான் வரப் போகிறேன்” என்று கூறிக் கொண்டே தன் கையிலிருந்த பழைய வாட்சையும் கழுத்திலிருந்த ருத்திராட்ச மாலையையும் கழற்றி ஊஞ்சல் மீது வைத்தார் ஜப்பான் சாஸ்திரிகள்.
“எதுக்கு இதையெல்லாம் கழட்டி வெச்சுட்டீங்க?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“அப்பத்தானே ஜப்பானிலிருந்து திரும்பி வரபோது கையிலே ஸீக்கோ வாட்சும், கழுத்திலே முத்துமாலையும் போட்டுக்கொண்டு வரலாம்” என்றார் குள்ள சாஸ்திரி.
கோபால் ராவ், பஞ்சு, அம்மாஞ்சி வாத்தியார், சாம்ப சிவ சாஸ்திரி. ஜப்பான் சாஸ்திரி – ஆக ஐந்து பேரும் டோக்கியோ இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் போய் இறங்கிய போது இவர்களை அழைத்துச் செல்ல இம்பீரியல் பாலெஸைச் சேர்ந்த ‘கெடிலாக்’ கார் ஒன்று வந்து ரெடியாகக் காத்திருந்தது. கோபால் ராவ் ஒரு கூடை நிறைய செடி கொடிகளை அடைத்துக்கொண்டு போயிருந்தார்.
“இதெல்லாம் என்ன குப்பை?” என்று கேட்டான் பஞ்சு.
“ஜப்பான் சக்கரவர்த்திக்குக் கொடுப்பதற்காகக் கொண்டு வந்திருக்கிறேன். இதெல்லாம் நம் ஊர் குளங்களிலிருந்தும் ஏரிகளிலிருந்தும் தண்ணீருக்கு அடியில் மூழ்கி எடுத்து வந்தேன்” என்றார் கோபால் ராவ்.
“சக்கரவர்த்தியை முதல் முதல் பார்க்கும்போது எல்லோரும் பழங்களைக் கொண்டு போய்க் கொடுப்பாங்க. அதுதான் மரியாதை. நீங்க செடி கொடிகளைக் குப்பை மாதிரி அள்ளிக் கொண்டு வந்திருக்கீங்களே! கஷ்டம்! கஷ்டம்!” என்று தலையில் அடித்துக்கொண்டான் பஞ்சு.
“எனக்கென்ன கஷ்டம்! ஒரு கஷ்டமுமில்லை. ஜப்பான் சக்கரவர்த்திக்கு மெரீன் ப்ளாண்ட் லைஃப்லே ரொம்ப இஷ்டம். பயாலஜி ரிஸர்ச் எல்லாம் செய்து கொண்டிருக்கிறாராம். இதெல்லாம் அவருக்காக இண்டியாவிலிருந்து ஸ்பெஷலாகக் கொண்டு வந்திருக்கிறோம் என்று தெரிந்தால் ரொம்ப சந்தோஷப்படுவார்'” என்றா கோபால் ராவ்.
“இன்றைக்கு எங்கே சாப்பாடு?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“இன்று நான் சோமவாரம். எனக்கு உபவாசம். சாப்பிட மாட்டேன்” என்றார் ஜப்பான் சாஸ்திரிகள்.
அம்மாஞ்சி வாத்தியார் மற்ற நால்வரையும் பெட்டி படுக்கைகள் வரும் கன்வேயர் வட்டத்துக்கு அருகில் விட்டுவிட்டுத் தான் மட்டும் தனியாக ஏர் போர்ட்டிலிருந்து வெளியே செல்லும் வாயிற் கதவுக்கருகில் போய் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
பெரிய பெரிய கண்ணாடிக் கதவுகள் டக்கென்று திறந்து கொள்வதும் மூடிக் கொள்வதுமாக இருந்தன. அவை எப்போது திறக்கும், எப்போது மூடிக்கொள்ளும் என்பது அம்மாஞ்சி வாத்தியாருக்குப் புரியவில்லை. அது எலெக்ட்ரானிக் ஸிஸ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்ததால் ஆள் அருகில் போனதும், திறந்து கொள்ளும் என்ற ரகசியம் அவருக்குத் தெரியாது. அது திறக்கும் போது உஷராக இருந்து பாய்ந்து வெளியே போக வேண்டும். அது தன்னால் முடியாத காரியம் என்று எண்ணிக் கொண்டார். வெளியே செல்ல வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று அவர் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்த பஞ்சு, “ஓய் அம்மாஞ்சி, எல்லாருக்கும் முன்னால் இங்கே வந்து என்ன செய்கிறீர்? வாரும், போகலாம்” என்று அழைத்துக் கொண்டே வேகமாக நடந்தான். அவன் அந்தக் கதவருகில் போகும்போதே கதவு சட்டென்று திறந்து கொண்டுவிட்டது. அம்மாஞ்சி வாத்தியாருக்கு வியப்புத் தாங்கவில்லை. ‘பஞ்சுவைக் கண்டால் ஜப்பான் கதவுகள் பயந்து வழிவிடுகின்றன. ஜப்பானில் பஞ்சுவுக்கு நல்ல செல்வாக்கு’ என்று எண்ணிக் கொண்டார்.
அரண்மனையிலிருந்து வந்திருந்த காரில் ஐவரும் ஏறிக்கொண்டனர். அது வாயு வேகத்தில் பறந்தது. “அப்பா, என்ன ஸ்பீட்?” என்றார் அம்மாஞ்சி.
“இங்கிருந்து டோக்கியோ நகரத்துக்கு மானோ ரயில் போகிறது. ஒற்றைத் தண்டவாளம். அந்த ரயிலின் வேகத்தைப் பார்க்கணும் நீங்க!” என்றார் கோபால் ராவ்.
ஏர்போர்ட்டிலிருந்து இம்பீரியல் பாலெஸ் போய்ச் சேருவதற்குள் பல பாலங்கள் குறுக்கிட்டன. அங்கங்கே ‘ஃப்ளை ஓவர்’கள் பல்வேறு திசைகளில் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தன. அம்மாஞ்சி வாத்தியார் எல்லாவற்றையும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே போனார்.
“இத்தனை பாலங்களுக்கும், ஃப்ளை ஓவர்களுக்கும் இடையில் எப்படித் தேர் விடப்போகிறோம்? இதெல்லாம் தடுக்காதா?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“இந்தப் பாலங்களையெல்லாம் பார்க்கும்போது எனக்கு நம் ஊர் பன்னீர்தாஸ் சகோதரர்கள் ஞாபகம் தான் வருகிறது!” என்றார் குள்ள சாஸ்திரி.
“ஏன்?”
“ஒரு பாலம் பாக்கி விடாமல் அவர்கள் பெயரை எழுதி வைத்து விடுவார்களே!” என்றார் குள்ள சாஸ்திரி.
“இன்று மாலையே டோக்கியோ டவர்மீது ஏறி ஒரு ஏரியல் ஸர்வே நடத்தி விடலாம். அப்போதுதான் டோக்கியோ பற்றி நமக்கு ஒரு ஐடியா கிடைக்கும்” என்றார் கோபால் ராவ்.
“மாலை ஐந்து மணிக்கு மேல் போனால் பகல் வெளிச்சத்திலும் ஊரைப் பார்க்கலாம். இரவு மின்சார விளக்குகளின் வண்ண ஜாலக் கண் சிமிட்டுகளையும் காணலாம்” என்றான் பஞ்சு.
“க்யோபாஷி, நிஹோம்பாஷி, இடோபாஷி, ஷிம்பாஷி” என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தார் ஜப்பான் சாஸ்திரி.
“என்ன அது, பாஷி பாஷின்னு ஜபிக்கீறீங்க? என்ன மந்த்ரம் அது?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“பாஷின்னா பிரிட்ஜ் என்று பெயர். ஜப்பான்லே தொட்ட இடமெல்லாம் பிரிட்ஜ்தான்” என்றார் கோபால் ராவ்.
“இத்தனையூண்டு மீன் குஞ்சு மாதிரி சின்னஞ்சிறு தேசம். முப்பதே வருஷத்திலே என்னமாய் வளர்ந்துட்டான்! ஆண்டவன் வாமன அவதாரம் எடுத்து உலகத்தையே அளந்த மாதிரி இருக்கு” என்றார் குள்ள சாஸ்திரி.
“நீரே வாமனாவதாரம்தானே!” என்று கேலி செய்தார் அம்மாஞ்சி.
அரண்மனை கஸ்ட் ஹவுஸில் ஐந்து பேருக்கும் தனித் தனி அறை ஒதுக்கியிருந்தார்கள்.
”ஜப்பான் சக்கரவர்த்தி இந்தத் தேர் ஓட்டத்திலே ரொம்ப ஆர்வமாயிருக்கிறாராம்” என்றான் பஞ்சு.
“அவரை நாம் எப்போது சந்திக்கப் போகிறோம்?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“முதலில் குளியலை முடியுங்க. மற்றதெல்லாம் அப்புறம்” என்றான் பஞ்சு.
ஒரு மணிக்கு எல்லோரையும் லஞ்ச்சுக்கு அழைத்த போது சாம்பசிவ சாஸ்திரிகளை மட்டும் காணவில்லை. அவர் எங்கே போனார் என்பது யாருக்கும் தெரியவில்லை. அம்மாஞ்சிக்கோ பசி தாங்கவில்லை.
“சாஸ்திரிகள் எங்கே? எங்கே?” என்று அலறிக் கொண்டிருந்தார் அம்மாஞ்சி.
“இவ்வளவு பெரிய அரண்மனையிலே அவரை எங்கே போய்த் தேடுவது?” என்று கவலைப்பட்டார் குள்ள சாஸ்திரி.
“அவர் டயட்லே இருக்காராம். சாப்பிட வரவில்லை என்று சொல்லி விட்டார்” என்றான் பஞ்சு.
“டயட்லேயோ? அவருக்கென்ன டயட்? உடம்பு இன்னும் இளைக்கணுமாமா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“இல்லே; டயட்னா கவர்ன்மெண்ட் பில்டிங் பேர். பார்லிமெண்ட் கூடுகிற இடம். டோக்கியோவிலேயே முக்கியமான இடம்” என்றான் பஞ்சு.
“சரி சரி; நாம் சாப்பிடப் போகலாம் வாங்க” என்றார் அம்மாஞ்சி.
“நாளைக்கு நாம ஐந்து பேரும் ஒரு டீ ஸெரிமனிக்குப் போகணும்” என்றான் பஞ்சு.
“ஸெரிமனியா? எங்கே? ஜப்பான்காரர்கள்கூட சிராத்தமெல்லாம் பண்ணுவாளா! அது சரி; சிராத்தத்திலே டீ தான் கொடுப்பாளா? சாப்பாடு போட மாட்டாளோ?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“ஐயோ, டீ ஸெரிமனி என்றால் தவசம் இல்லேய்யா. ஜப்பானியப் பெண் ஜப்பானிய முறையிலே டீ தயாரித்துக் கொடுக்கிற ஒரு ஏற்பாட்டுக்கு டீ ஸெரிமனி என்று பெயர். அது ஒரு பெரிய கலை” என்றான் பஞ்சு.
“டீ என்றதும் எனக்கு நம் ஊர் நாயர் கடை ஞாபகம் வந்துவிட்டது இந்த ஊரிலே கூட நாயர் ஒருத்தர் ஓட்டல் வைத்திருக்கிறாராமே! மசாலா தோசை கூடப் போடறாங்களாம் அங்கே. நாமெல்லாம் ஒரு நாள் அங்கே போய்விட்டு வரணும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
அத்தியாயம்-3
“எனக்கு ஒரு சந்தேகம்” என்றார் அம்மாஞ்சி.
“என்ன அது?'” என்று கேட்டார் சாம்பசிவம்.
”பெண்ணுக்குத் தானே கெய்ஷான்னு சொல்வது? அப்புறம் எதுக்கு ஆம்பிள்ளை மாதிரி ஷான்னு சொல்லணும்? கெய்ஷின்னே அழைக்கலாமே!” என்றார் அம்மாஞ்சி.
“எனக்கு ஒன்று தோன்றுகிறது. ஜப்பான் வந்ததற்கு அடையாளமா இனிமே அம்மாஞ்சியை அம்மாஞ்ஷின்னே அழைக்கலாம்” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“அது சரி; ராத்திரி நன்றாய்த் தூங்கினீரா?” என்று சாம்பசிவ சாஸ்திரியைக் கேட்டார் அம்மாஞ்சி.
“இல்லை; கட்டில் மேலே படுத்திருந்தேனா? தூக்கமே வரவில்லை. பூகம்பம் வருமோன்னு பயமாக இருந்தது. அப்புறம் என்ன செய்தேன் தெரியுமா? துண்டை உதறித் தரையிலே போட்டுக் கொண்டு நிம்மதியாப் படுத்து விட்டேன்” என்றார் சாம்பசிவம்.
“காளிதாசன் கட்டிலில் படுத்த கதைதான்! ஏர்கண்டிஷன் ரூமிலே மெத்தென்ற ‘குஷன்’ கட்டிலில் சுகமாகப் படுத்துத் தூங்கக் கொடுத்து வைக்கணுமே! உமக்கு அவ்வளவுதான் பிராப்தம்” என்று கேலி செய்தார் அம்மாஞ்சி.
“அப்படி ஒண்ணும் இல்லை. எந்த நிமிஷத்திலே பூகம்பம் வருமோ, என்னைக் கட்டிலிலிருந்து கீழே தள்ளுமோ என்று பயந்துவிட்டேன்” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“மணி நாலு ஆகப் போகிறது. நேரமாச்சு. புறப்படலாமா?” என்று கேட்டுக்கொண்டே அம்மாஞ்சி தம் கைக்கடிகாரத்தைப் பார்த்தார். அது நின்று போயிருந்ததால் அம்மாஞ்சியின் முகத்தில் அசடு வழிந்தது.
“உம்ம ‘வாச்’சை ஏதாவது ஒரு ரயில் தண்டவாளத்தின் மீது கொண்டுபோய் வையும். அப்புறம் நிற்காமல் ஓடும்” என்று கேலி செய்தார் ஜப்பான் சாஸ்திரி.
“இன்று செவ்வாய்க்கிழமை. மூணு நாலரை ராகு காலம். இந்த நேரத்தில் புறப்படலாமா?” என்று ஒரு பிரச்னையைக் கிளப்பினார் சாம்பசிவ சாஸ்திரி.
“பரவாயில்லை; நம்ம பூமிக்குதான் ராகுகாலம், எமகண்டம் இதெல்லாம். இது ஜப்பான்” என்றார் குள்ள சாஸ்திரி.
“பஞ்சு ஸாரும் கோபால் ராவும் எங்கே போனாங்க? ரொம்ப நேரமாக் காணோமே?’” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“அவங்க இரண்டு பேரும் டயட் பில்டிங் போயிருக்காங்க. அங்கே கல்ச்சுரல் அஃபேர்ஸ் மினிஸ்ட்ரியிலே இன்று டிஸ்கஷன் நடக்கிறதாம். தேரோட்டம் பற்றி ‘த்ரெட்பேரா’ எல்லா விவரங்களையும் டிஸ்கஸ் பண்ணப் போறாங்களாம்” என்றார் சாம்பசிவம்.
“த்ரெட்பேர் என்றால் என்ன அர்த்தம்?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“தேர் இழுக்கிற கயிற்றுக்கு ‘த்ரெட்’னு சொல்லுவாங்க. ‘பேர்’னா தேர் இழுக்கிறவங்க எத்தனை பேர் என்று அர்த்தம். அதுதான் த்ரெட்பேர்” என்று விளக்கினார் சாம்பசிவம்.
“ஓய், சாம்பசிவ சாஸ்திரி! உமக்கு இங்கிலீஷே தெரியாது. கண்டபடி உளறாதேயும். த்ரெட் பேர்னா நம்ம மூணு பேரையும் பற்றிப் பேசுவாங்க. நாம்தானே பேர் பாடியா இருக்கோம். அந்த பாடியிலே ஒரு த்ரெட் போட்டுக் கொண்டிருக்கோம். அதுக்குத்தான் த்ரெட்பேர்னு சொல்லுவாங்க” என்று தமது பூணூலைக் காட்டி விளக்கினார் அம்மாஞ்சி.
“நாம் மூவரும் டோக்கியோ டவருக்குப் போகணுமே. அதுக்கு என்ன அரேஞ்ச்மெண்ட்?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“வாசலில் கார் ரெடியா நிற்கிறது.நாம் அதில் ஏறிக் கொண்டு இஷ்டப்பட்ட இடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரவேண்டியதுதான்” என்றார் சாம்பசிவம்.
“நமக்கு மொழியும் தெரியாது. வழியும் தெரியாதே!” என்றார் அம்மாஞ்சி.
“டிரைவர் விட்ட வழி” என்றார் சாம்பசிவம்.
“சரி, முதல்லே டிரைவரிடம் டோக்கியோ டவருக்குப் போகச் சொல்லணுமே, அதற்கு என்ன வழி?” என்றார் அம்மாஞ்சி.
‘நான் சொல்றேன். எனக்கு ஜப்பான் பாஷை தெரியும்” என்று முந்திக் கொண்டார் ஜப்பான் சாஸ்திரி.
“ஜப்பான் சாஸ்திரி வந்தது சௌகரியமாப் போச்சு! அவருக்கு இங்கிலீஷும் சுமாராத் தெரியும்” என்றார் சாம்பசிவம்.
மூவரும் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள். “டோக்கியோ டவர், ஸுகுயுகிமாஷோ” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
அவர் அப்படிச் சொன்னதுதான் தாமதம். டிரைவர் வாயு வேகத்தில் டோக்கியோ டவரை நோக்கிப் பறந்தான்.
“ஜப்பான் பாஷை எப்போது கற்றுக் கொண்டீர்கள்?” என்று குள்ள சாஸ்திரியை வியப்போடு கேட்டார். சாம்பசிவம்.
“கய்ட் புக்லே இருக்கிறது. டூரிஸ்ட்களுக்கு வேண்டிய முக்கியமான வார்த்தைகளெல்லாம் அதிலே போட்டிருக்கு. மத்தியானம் படிச்சு வைத்தேன். அதிலே இப்படி ஒரு வார்த்தை இருந்தது. அடிச்சு விட்டேன்!” என்றார் குள்ள சாஸ்திரி பெருமையோடு.
“டோக்கியோவிலிருந்து கின்ஸாவுக்குப் போகணுமே, அப்ப என்ன செய்யப் போறீங்க?”
“இதே வார்த்தை தானே? ‘கின்ஸா, ஸுகுயுகி மாஷோ’ என்பேன்” என்றார் குள்ள சாஸ்திரி.
டோக்கியோ டவர் அருகில் பெரும் கூட்டம் கூடியிருந்தது. அந்தக் கூட்டத்துக்கிடையில் இவர்கள் மூவர் மட்டும் பளிச்சென்று வித்தியாசமாகத் தெரிந்தார்கள்.
அமெரிக்க டூரிஸ்ட் ஒருவர் அம்மாஞ்சியைப் பார்த்து, “வாட் இஸ் யுவர் நேம்?” என்று கேட்டார்.
“அம்மாஞ்ஷி” என்றார் அம்மாஞ்சி.
“”ஓ! இட் ஸௌண்ட்ஸ் லைக் ஜாப்னீஸ்'” என்றார் அந்த அமெரிக்கர்.
அம்மாஞ்சி பெருமையோடு தம் கையிலிருந்த தக்ளியை ஒரு சுழற்றுச் சுழற்றி விட்டார். அது ‘கிர்’ ரென்று அழகாகச் சுழல்வதைக் கண்ட டூரிஸ்ட்டுகள், ‘ஒண்டர் ஃபுல்!’ என்றனர்.
“மின்சாரமே இல்லாமல் எப்படிச் சுழல்கிறது பாருங்கள்” என்றார் அம்மாஞ்சி.
ஜப்பான் சாஸ்திரிகள் கையில் வைத்திருந்த பனை ஓலை விசிறியைப் பார்த்துவிட்டு, ”இது என்ன மெடீரியல்” என்று கேட்டார் ஒரு அமெரிக்கர்.
“பல்மைரா லீஃப்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“பல்மைரா ட்ரீ எப்படி இருக்கும்?” என்று கேட்டார் அமெரிக்கர்.
“நெட்டையா உயரமா இருக்கும். முப்பது நாற்பது அடி உயரம் இருக்கும்” என்றார் சாம்பசிவம்.
“அவ்வளவு உயரத்திலுள்ள இந்த ‘லீஃப்’களை எப்படி எடுப்பீர்கள்?”
“எங்கள் ஊரில் ஒவ்வொரு பல்மைரா ட்ரீக்கும் ஒரு லிஃப்ட் வைத்திருக்கிறோம். அதில் ஏறிப் போய்ப் பறித்து வந்து விடுவோம்'” என்று ஒரு போடு போட்டார் சாம்பசிவம்.
“இண்டியா மஸ்ட் பி எ வெரி ரிச் கண்ட்ரி.எவெரி பல்மைரா ட்ரீ ஹேஸ் எ லிஃப்ட்!” என்றார் அமெரிக்கர்.
“நான் கீழேயே நிற்கிறேன். நீங்க ரெண்டு பேரும் லிஃப்ட்லே மேலே போய்ப் பார்த்துவிட்டு வாங்க” என்றார் சாம்பசிவம்.
“நீங்க இல்லாமல் எப்படி ஏரியல் சர்வே நடத்துவது? நீங்களும் வாங்க” என்றார் அம்மாஞ்சி.
“எனக்குப் பயமாயிருக்கு. இந்த ஊரிலே அடிக்கடி பூகம்பம் வருமாமே!” என்று நடுங்கினார் சாம்பசிவம்.
“ஏன் இப்படி நடுங்கறீங்க?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“அது சாதா நடுக்கமில்லை; நில நடுக்கம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
அம்மாஞ்சியும் குள்ள சாஸ்திரியும் அவர் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.
மூவரும் மேலே போனதும் முப்பது ‘யென்’ கொடுத்து ஆளுக்கொரு பைனாகுலரை வாடகைக்கு வாங்கிக் கொண்டார்கள்.
“அதோ இம்பீரியல் பாலெஸ் தெரியுதே!” என்றார் ஜப்பான் சாஸ்திரி மகிழ்ச்சியோடு.
சாம்பசிவம் கீழே சாரிசாரியாகப் பார்க் செய்யப்பட்டிருந்த கார்களைக் கண்ணோட்டமிட்டார்…
“நம்ம டிரைவர் தெரியறானா பாருங்க” என்றார் அம்மாஞ்சி.
“அந்தக் கார்கள் எவ்வளவு அழகாகத் தெரியுது பாருங்க, ‘பளபள’ன்னு பாதம் பெப்பர்மின்ட்டைச் சப்பிவிட்ட மாதிரி” என்றார் சாம்பசிவம்.
“இந்தப் பக்கம் பார்த்தீங்களா, ஸுமிடா நதியை!” என்றார் அம்மாஞ்சி.
“நதியைக் கண்டதும் நீங்க ஸ்நானம் பண்ணக் கிளம்பிடாதீங்க” என்றார் ஐப்பான் சாஸ்திரி.
சாம்பசிவம் பைனாகுலரைத் திருகித் திருகித் தொலைவில் தெரிந்த கட்டடங்களுக்கு அட்ஜெஸ்ட் செய்தார்.
“கின்ஸா எந்தப் பக்கம் இருக்கிறது?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
சாம்பசிவம் ஏநோ ஒரு பக்கத்தில் சந்தேகமாகக் கையைக் காட்டினார்.
“என்னய்யா, கின்ஸா எந்தப் பக்கம் என்று கேட்டால் ஒரு ‘குன்ஸா’ கையைக் காட்டுகிறீரே!” என்றார் அம்மாஞ்சி.
“மொத்தம் மூன்று கின்ஸா இருக்கு. கிழக்கு கின்ஸா மேற்கு கின்ஸா, நடு கின்ஸா – அது தெரியுமா உமக்கு?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“தெரியும்; அந்த மூன்றும் சேர்ந்தாற்போல் ஒரே இடத்திலேதான் இருக்கு. நீர் கை காட்டுகிற பக்கம் இல்லை” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“நாம் மூன்று பேரும் கின்ஸா மாதிரி எப்போதும் சேர்ந்தே இருக்கணும். கூட்டத்தில் தனித் தனியாகப் பிரிந்து விடக் கூடாது” என்றார் அம்மாஞ்சி.
“கின்ஸான்னு என்ன பேரு? அது எப்படி வந்தது?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“ஒரு காலத்திலே அந்த இடத்திலே வெள்ளி நாணயங்கள் செய்கிற தொழிற்சாலை இருந்ததாம். ‘கின்’ என்றால் வெள்ளி, ‘ஸா’ என்றால் தொழிற்சாலை என்று அர்த்தமாம். அதனால்தான் அந்த இடத்துக்கு அந்தப் பெயர் நிலைத்து விட்டதாம்'” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“உமக்கு இதெல்லாம் யார் சொன்னது?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“என் மருமான் சொன்னான்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“அடாடா, இந்த டவரை எப்படித்தான் கட்டினாங்களோ?” என்று வியந்தார் சாம்பசிவம்.
“நாற்பது மாடி ஐம்பது மாடிக் கட்டடமெல்லாம் அங்கங்கே எப்படி உயர்ந்து நிற்கிறது பாருங்க”, என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“யுத்தத்தின்போது தரைமட்டமாகப் போய்விட்ட ஒரு தேசத்தை என்னமாய் ‘டெவலப் பண்ணி விட்டான்!” என்று வியந்தார் சாம்பசிவம்.
“பூகம்பத்துக்குப் பயந்து உயரமான கட்டடங்களே கட்டக் கூடாதென்று இங்கே ஒரு சட்டம் போட்டிருக்காங்க. அதனால்தான் உயரமான கட்டடமே அதிகமில்லை. பத்து மாடி பதினோரு மாடியோடு சரி. இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா உத்தரவைத் தளர்த்திக்கிட்டு வராங்க. இல்லைன்னா இதுக்குள்ளே எல்லாமே நியூயார்க் மாதிரி அறுபது மாடிக் கட்டடங்களா உயர்ந்து விட்டிருக்கும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“இந்த டவர்லே நாலாயிரம் டன் ஸ்டீல் இருக்காமே!” என்றார் சாம்பசிவம்.
“இரும்பே இல்லாத ஒரு நாட்டிலே ஸ்டீல் டவர்? என்ன ஆச்சரியம்!” என்றார் அம்மாஞ்சி.
“மலையே இல்லாத தஞ்சாவூர் ஜில்லாவிலே கல்லிலேயே கோயில் கட்டவில்லையா? நம்ம நாட்டுப் பெருமை நமக்குத் தெரிவதில்லை” என்று குறைப்பட்டுக் கொண்டார் சாம்பசிவம்.
“நம் நாட்டின் பெருமைகளை நிலை நாட்டத்தானே இங்கே தேர் தெப்பமெல்லாம் விடப்போகிறோம். ஜப்பானே மூக்கிலே விரல் வைத்து ஆச்சரியப்படப் போகிறது” என்றார் குள்ள சாஸ்திரி,
“ஜப்பானியர்களுக்கு மூக்கு இருந்தால்தானே விரல் வைத்து ஆச்சரியப்படுவதற்கு? எல்லாம் சப்பை மூக்குன்னா?” என்றார் சாம்பசிவம்.
“கல் என்றதும் எனக்கு இம்பீரியல் பாலெஸுக்கு வெளியே ரோடுகளுக்குப் பக்கத்தில் அழகாகப் பரப்பி வைத்திருக்கிறார்களே, அந்தக் கூழாங்கற்களின் ஞாபகம் வருகிறது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“உருளைக் கிழங்கு மாதிரி இருக்கு ஒவ்வொன்றும்” என்றார் அம்மாஞ்சி.
“உருளைக் கிழங்கு என்றதும் மசாலா தோசை சாப் பிடணும் போல இருக்கு எனக்கு” என்றார் சாம்பசிவம்.
“இந்த ஊரிலே கிடைக்காத கறிகாயே கிடையா தாம். புடலங்காய் கூடக் கிடைக்கிறதாம். மார்க்கெட்டிலே பச்சை பச்சையாகக் கறிகாய் கொட்டி வெச்சிருக்குமாம். மூணு பேரும் நாளைக்குப் பையை எடுத்துண்டு: போய்க் கறிகாய் வாங்கி வந்து நாமே சமையல் செய்யலாமா?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“ஃபஸ்ட்க்ளாஸ் ஐடியா! நான் ரெடி! புடலங்காய் பொரிச்சக் கூட்டு, உருளைக் கிழங்கு பொடிமாஸ், முருங்கைக்காய் சாம்பார், பச்சைப்பட்டாணி, கோஸ், பீன்ஸ் மூணும் போட்டு ஒரு கறி, ஒரு பச்சடி, ஒரு அப்பளம்!] எப்படி?” என்றார் அம்மாஞ்சி.
“அடிச்சு நொறுக்கிடலாம்” என்றார் சாம்பசிவம்.
“அடாடா! நாக்கிலே ஜலம் சொட்றது” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“பச்சைப்பட்டாணி, கோஸ், பீன்ஸ் இந்த மூணும் நல்ல காம்பினேஷன்” என்றார் சாம்பசிவம்.
“பீன்ஸ் கறியில் பச்சை மிளகாயை வெட்டிப் போட்டு விடாதீங்க. இரண்டுக்கும் வித்தியாசம் தெரியாமல் பச்சை மிளகாயைக் கடித்து விடுவோம். அப்புறம் நாக்கிலே.. மட்டும் ஜலம் சொட்டாது. கண்ணிலிருந்தும் கொட்டும்” என்றார் சாம்பசிவம்.
“பச்சை மிளகாய், எலுமிச்சம் பழம், இஞ்சி, கொத்து மல்லி, கறிவேப்பிலை இந்த அஞ்சும் இருந்துட்டா சமையல் ருசியே தனி. அஞ்சும் பஞ்சரத்னம் மாதிரி” என்றார் அம்மாஞ்சி.
“ஜப்பான் ரோடுகளைப் பார்த்தீங்களா, எவ்வளவு க்ளீனா இருக்குது! ஒரு தும்பு தூசு இல்லையே!” என்றார் சாம்பசிவம்.
“ரோடா அது? மொஸைக் தரை மாதிரின்னா இருக்கு. ரோடிலேயே இலை போட்டுச் சாப்பிடலாம். அத்தனை சுத்தமாயிருக்கு.”
“இங்கே தேர் விட வந்தீங்களா? பந்தி போட்டுச் சாப்பிட வந்தீங்களா?…” என்று கடிந்து கொண்டார் சாம்பசிவம்.
“ஊரை விட்டு வந்து முழுசா மூணு நாள் கூடஆகவில்லை. இதற்குள் நாக்கு செத்துப் போச்சு” என்றார் அம்மாஞ்சி.
“எனக்கு மூக்கு செத்துப் போச்சு. கொண்டு வந்த பொடி ஸ்டாக் தீர்ந்து போச்சு” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“உமக்கு மூக்கே இல்லை ஜப்பான்காரன் மாதிரி. இந்த லட்சணத்திலே பொடி வேறேயா!” என்று கேலி செய்தார் அம்மாஞ்சி.
“ஓய் அம்மாஞ்சி! உம்ம வாச்சிலே இப்ப என்ன டைம்?” என்று கேட்டார் சாம்பசிவம்.
“ஸெவனே கால்!” என்றார் அம்மாஞ்சி.
“மணி ஆறரை கூட இருக்காது. ஸெவனே காலாம். உம்ம வாச் ரொம்ப ஃபாஸ்ட்டா ஓடறது” என்றார் சாம்பசிவம்.
“ஜப்பானோல்லியோ! இங்கே எல்லாமே ஃபாஸ்ட்டாத்தான் ஓடும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
இதற்குள் மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கியது. அதே சமயம் ஒரு மாயா ஜாலம் நிகழ்வது போல் டோக்கியோ நகர் முழுதும் ஒளி பெற்று வைர வைடூரியங்களாக மாறி மின்னத் தொடங்கின. நியான் விளக்குகளும், பேப்பர் விளக்குகளும், பூச்சி எழுத்துக்களும் சேர்ந்து வண்ணக் கோலங்களாய் நெளிந்து வளைந்து கொண்டிருந்தன.
“சற்றுமுன் பகல் வெளிச்சத்தில் பார்த்த டோக்கி யோவுக்கும் இப்போது இரவில் பார்க்கும் டோக்கியோவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!” என்றார் அம்மாஞ்சி.
“கின்ஸா விதியில் தேர் நகரும் போது கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும்'” என்றார் சாம்பசிவம்.
“வள்ளுவருக்கு நுங்கம்பாக்கத்திலே தேர் எழுப்பினோம். இங்கே கின்ஸாவிலே தேரிலேயே அவரை வைத்து இழுக்கப் போகிறோம்” என்று பெருமை பொங்கக் கூறினார் அம்மாஞ்சி.
“கின்ஸா என்கிற பெயரில் 236 வீதிகள் இருக்கின் றனவாம். எந்தத் தெருவிலே தேரை விடப் போறீங்க?”- என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“மெயின் ஸ்ட்ரீட்லே தான் விடணும். அந்த வீதி தான் நம்முடைய கம்பீரமான தேருக்கேற்ற வகையில் விசாலமாக இருக்கும்” என்றார் அம்மாஞ்சி.
“பிஸினஸ் ஏரியாவாச்சே! பிஸினஸ் ட்ராஃபிக் இருக்காதோ?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரிகள்.
“ஸண்டே ஸண்டே அந்த வீதியிலே கார்களே போகக்கூடாதாம். எந்த வண்டியும் அனுமதிக்கப்படு தில்லையாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“யார் சொன்னது?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“என் மருமான் சொன்னான்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
மூவரும் கின்ஸாவுக்குப் போய் அந்த வீதிகளில் நடக்கத் தொடங்கினார்கள். திடீரென்று ஓர் இடத்தில் ஆணி அடித்த மாதிரி நின்று கொண்டார் ஜப்பான் சாஸ்திரி.
“இங்கே எதற்கு நிற்கிறீர்?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
“இப்போது நான் இருபதாயிரம் டாலர் மீது நின்று கொண்டிருக்கிறேன்” என்று ஒரு புதிர் போட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“என்ன சொல்றீங்க? இருபதாயிரம் டாலரா? உம்மா காலடியில் கிடக்கிறதா? யாராவது பர்ஸைக் கீழே தவற விட்டுவிட்டாங்களா, என்ன?” என்று கேட்டார் சாம்பசிவம் திகைப்போடு
“அதெல்லாம் இல்லை; நாம் நிற்கிற இந்த இடம் இந்த டோக்கியோவிலேயே மிகவும் காஸ்ட்லியான இடம். ஒரு சதுர அடி நிலம் இருபதாயிரம் டாலர்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“யார் சொன்னது? உங்க மருமான் சொன்னாரா?” என்று கேட்டார் அம்மாஞ்சி.
சாம்பசிவ சாஸ்திரி ஆகாசத்தையே பார்த்துக் கொண்டு நடந்தார்.
“மேலே என்ன பார்க்கிறீங்க? தேர் ஆகாசத்திலா ஓடப் போகுது?” என்று சுேட்டார் அம்மாஞ்சி.
“தேர் போகிறபோது மேலே எதுவும் இடையூறு இருக்கக் கூடாதல்லவா? அப்படி ஏதாவது இருக்கிறதா என்றுதான் பார்க்கிறேன். நல்ல வேளை. குறுக்கே ஒரு ஓயர்கூட இல்லை” என்றார் சாம்பசிவம்.
“அது மட்டுமா? இரண்டு பக்கமும் பத்து மாடிக் கட்டடங்கள். கட்டடத்தின் மீதெல்லாம் ஜனங்கள் உட் கார்ந்து வேடிக்கை பார்க்க ரொம்ப வசதியான இடம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
திடீரென்று சாம்பசிவ சாஸ்திரிகளைக் காணவில்லை.
“பின்னோடு தானே வந்து கொண்டிருந்தார்…” என்று இழுத்தார் ஜப்பான் சாஸ்திரி.
“எங்கே போயிருப்பார்?’ என்று கவலையோடு கேட்டார் அம்மாஞ்சி.
“வழியிலே யாராவது கெய்ஷா அழகியைப் பார்த்து விட்டு இளித்துக்கொண்டு நிற்கிறாரோ, என்னவோ?” என்றார் ஐப்பான் சாஸ்திரி.
“நீர் இங்கேயே நில்லும். நான் போய்த் தேடி அழைத்துக் கொண்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்த வழியாகவே திரும்பி நடந்தார் அம்மாஞ்சி வாத்தியார்.
“நடைபாதையில் ஸப்வே எண்ட்ரன்ஸ் இருக்கிறது. ஒரு வேளை அந்த வழியிலே இறங்கிப் போயிட்டாரோ என்னவோ?” என்றார் ஜப்பான் சாஸ்திரி.
“திண்டாடித் தெருவில் நிற்கட்டும். ஊரெல்லாம் அலைந்துவிட்டுக் கடைசியிலே எப்படியாவது வந்து சேருவார்” என்றார் அம்மாஞ்சி.
“தனியாக நடந்து வந்தால் இம்பீரியல் பாலெஸ் கேட்டில் உள்ளே விடமாட்டானே இவரை” என்று கவலைப் பட்டார் ஜப்பான் சாஸ்திரி.
“ராகு காலத்தில் புறப்பட்டோம் இல்லையா? பலன் கிடைச்சுட்டுது” என்றார் அம்மாஞ்சி.
– தொடரும்…
– 1975-76இல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.
– தெப்போ- 76, முதற் பதிப்பு: அக்டோபர் 1976, பூம்புகார் பிரசுரம், சென்னை.