கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 30, 2025
பார்வையிட்டோர்: 9,086 
 
 

· 

(1976ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12

அத்தியாயம்-7

டீ ஸெரிமனி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆயிற்று. 

“போர், சரியான போர்!இது நிஜமாகவே சிராத்தம் தான். ரொம்பப் பொறுமை வேண்டும் இதற்கு” என்று அலுத்துக் கொண்டார் அம்மாஞ்சி. 

“வேகத்துக்கும் சுறுசுறுப்புக்கும் பெயர் பெற்ற ஜப் பான்காரர்கள் இந்த டீ ஸெரிமனி விஷயத்தில் இப்படி ஆமையாக இருக்க வேண்டாம்” என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள். 

“போர் அடிப்பதுதான் இந்த டீ ஸெரிமனியின் தனிச் சிறப்பு. சாவகாசமாக உட்கார்ந்து அவசரத்தை யெல்லாம் மறந்து அமைதியாக ‘தியானம்’ செய்வது போன்ற ஒரு கலை இது” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“பச்சையா ஒரு டீ பவுடரை எடுத்து வெந்நீரில் போட்டுக் கலக்கிச் சாப்பிடுவதற்கு இத்தனை நிதானமா? யாவது நன்றாயிருக்கிறதா என்றால் அதுவுமில்லை என்றார் அம்மாஞ்சி. 

“அந்த டீக் கோப்பைகளை எத்தனை நேரம்தான் அழகு பார்ப்பது? இந்தக் கையிலிருந்து அந்தக் கைக்கும் அந்தக் கையிலிருந்து இந்தக் கைக்கும் எத்தனை தடவை மாற்றுவது? இப்படி ஒரு கலையா? மடமடன்னு குடிக்கக் கூடா தாம்! உரக்க பேசக் கூடாதாம்! கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடணுமாம். ரகசியக் குரலில் பேசணுமாம். நல்ல தண்டனை இது” என்றார் சாம்பசிவம். 

“மொத்தத்தில் அந்த டீ வாசனையே எனக்குப் பிடிக்கல்லே…” என்றார் அம்மாஞ்சி. 

“கற்பூரத்தின் வாசனை நமக்குத் தெரியும். வெள்ளி மூக்குக் குதிரைக்குத் தெரியுமோ? அந்த மாதிரிதான் இதுவும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

ஜப்பானைப் பழித்தால் உமக்கு ஏன் ரோஷம் பொத்துக் கொள்கிறது?” என்று கேட்டார் சாம்பசிவம். 

“வாங்க, ரூமுக்குப் போவோம். அங்கே பஸ்ட் கிளாஸா எல்லோருக்கும் ஒரு நெஸ் காப்பி தயார் பண்ணிக் கொடுக்கிறேன். அதைச் சாப்பிட்டால்தான் வயிற்றெரிச்சல் தீரும்” என்றார் அம்மாஞ்சி வாத்தியார். 

“ரமேஷைக் காணோமே! அவன் எங்கே போயிட்டான்?” என்று சுற்றும் முற்றும் தேடினார் ஜப்பான் சாஸ்திரி. 

“அதோ, அந்த மரத்தடியில் யாரோ ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டு நிற்கிறானே” என்றார் அம்மாஞ்சி. 

இவர்களைக் கண்டதும் ரமேஷ் விரைந்து வந்து, “என்ன மாமா! ஸெரிமனி முடிஞ்சுட்டுதா? புறப்படலாமா?” என்று கேட்டான். 

“யாருடா அந்தப் பெண்?” என்று அர்த்தபுஷ்டியோடு கண் சிமிட்டி விட்டு ஒரு கேள்வியைப் போட்டார் அம்மாஞ்சி. 

“மிஸ் இகிடான்னு பேரு. எங்க ஆபீஸ்லே ஸ்டெனோவா இருக்கா… எங்களோடு எக்ஸ்கர்ஷன் வந்திருக்கா” என்றான் ரமேஷ். 

“இகிடாவா..இகிடீயா?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“இப்பத்தான் புரியறது நீ உள்ளே வராத ரகசியம்!” என்று அம்மாஞ்சி சிரித்தபடி கூறினார். 

“ரொம்ப அழகாயிருக்காளே” என்றார் சாம்பசிவம்.

“கொள்ளை அழகு! ரமேஷுக்கு ஏற்ற ஜோடிதான்” என்றார் அம்மாஞ்சி. 

“ஏண்டா அப்படி ஏதாவது அபிப்பிராயம் இருக்கா என்ன?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. 

“அதெல்லாம் இல்லை மாமா. ஃப்ரீயாப் பழகுவோம்… அவ்வளவுதான்” என்றான் ரமேஷ். 

“முதல்லே ஃப்ரீயாப் பழகுவா, அப்புறம் லவ் பண்ணுவா, கடைசியில் கலியாணத்தில் முடியும்” என்றார் சாம்பசிவ சாஸ்திரி. 

“ததாஸ்து” என்றார் அம்மாஞ்சி. 

சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த மிஸ் இகிடாவைப் போய் அழைத்து வந்து சாஸ்திரிகளுக்கு அவளை அறிமுகப்படுத்தினான் ரமேஷ். 

அந்தப் பெண், “யுரோஷாய் மாஸே'” என்று கூறி இடுப்பை வளைத்து அவர்கள் மூவரையும் வணங்கி வரவேற்றாள். 

“உங்களுக் கெல்லாம் வெல்கம் சொல்கிறாள் மாமா!” என்று மொழி பெயர்த்தான் ரமேஷ். 

“அப்படியா! ரொம்ப சந்தோஷம்னு சொல்லுடா” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

மிஸ் இகிடா சிரித்துக்கொண்டே ஜப்பானிய மொழி யில் ரமேஷிடம் ஏதோ கூறினாள். 

“என்னடா! என்ன சொல்கிறாள் உன் கர்ல் பிரண்ட்?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. 

“நீங்க கையிலே வைத்துக் கொண்டிருக்கிற விசிறி ரொம்ப அழகாயிருக்காம்'” என்றான் ரமேஷ். 

“இந்தியாவுக்கு வரச் சொல்லு. வேண்டிய விசிறி தரேன். ஜப்பான் விசிறியின் அழகு உலகப் புகழ் பெற்றது. இவளுக்கு நம் ஊர் பனை ஓலை விசிறி பிடிச்சிருக்கு. இக் கரைக்கு அக்கரை பச்சை” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“ரமேஷ், உன் கலியாணத்தில் பரதேசிக் கோலம் புறப்படுகிறபோது ஒரு விசிறி கொடுப்பார்கள். அதை இவளிடம் கொடுத்து விடு” என்று வேடிக்கையாகப் பேசினார் அம்மாஞ்சி. 

ரமேஷ் தன் கைக் கடியாரத்தைப் பார்த்தான். மணி நாலாகியிருந்தது. 

“புறப்படலாமா? நேரமாகிறது!” என்று கூறிய ரமேஷ் இகிடாவிடம் விடை பெற்றுக் கொண்டான். ஒரு டாக்ஸியைக் கூப்பிட்டு சாஸ்திரிகளோடு ஓட்டலுக்கும் போய்ச் சேர்ந்தான். 

அங்கே அம்மாஞ்சி வாத்தியார் தயாரித்துக் கொடுத்த காப்பியைச் சாப்பிட்டு விட்டு நால்வரும் ஸூப்பர் எக்ஸ் பிரஸைப் பிடித்து டோக்கியோவுக்குப் புறப்பட்டார்கள். 

“அடாடா! ரயில் என்றால் இதல்லவா ரயில்? தனித் தனி ஸீட். ஒவ்வொரு ஸீட் மீதும் தும்பைப்பூ மாதிரி ஒரு வெள்ளைத் துணி!” என்று வியந்தார் அம்மாஞ்சி. 

“இவ்வளவு துல்லியமா ஸீட் மீது துணி போட்டு வைத்தால் நம் ஊரில் அழுக்காக்காமல் விட்டு வைப்பார்களா?” என்று கேட்டார் சாம்பசிவம். 

“முதலில் துணியையே விட்டு வைப்பார்களா? அதைச் சொல்லுங்க” என்றார் அம்மாஞ்சி. 

“இங்கிருந்து டோக்கியோ போகிற வரைக்கும் லைனுக்குக் குறுக்கே ஒரு தட்டுத் தடங்கல் கிடையாதாம். வழியில் லெவல் கிராஸிங், ஆடு, மாடு எதுவும் இருக்காதாம். ரயில் ஓட்டத்தை எலெக்ட்ரானிக் ஸிஸ்டம்தான் மாரமே கண்ட்ரோல் பண்றதாம். லைன் மீது ஒரு மட்டையோ விழுந்து கிடந்தால் ரயில் ஆட்டமாடிக்கா நின்று விடுமாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“இப்படிப்பட்ட ஒரு தேசத்துலே வந்து நாம் தேர் ஓட்டப் போகிறோம் என்பதை நினைச்சா வேடிக்கையா யிருக்கு!” என்றார் அம்மாஞ்சி வாத்தியார். 

“நாம்கூடத் தேரை ரயில் மாதிரி எலெக்ட்ரானிக் ஸிஸ்டத்திலே ஓட்டிவிடலாம். அது ஒரு பிரமாதமா என்ன? ஆனால் அப்படிச் செய்யக் கூடாதுங்கறதுதானே இதுலே முக்கியம். நம்மூர்லே எப்படித் தேர் ஓட்டறமோ அப்படியே இங்கே ஓட்டிக்காட்டணும்.ஜப்பான்காராளுக்கு டீ ஸெரிமனி எப்படியோ அப்படி நமக்குத் தேரோட்டம்!” என்று தத்துவ விளக்கம் தந்தார் சாம்பசிவ சாஸ்திரி. 


“சாஸ்திரிகளே, ஹெலிகாப்டர் ரெடியா இருக்காம். நாம் அஞ்சு பேரும் ராத்திரியே அடாமிக்குப் போயிடலாமா?” என்று கேட்டான் பஞ்சு. 

“அடாமின்னா அது என்ன?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“ஹகோனே ஏரிக்குப் போவதற்கு முன்னால் உள்ள ஒரு ஊர். ரொம்ப அழகான இடம். அங்கிருந்து கேபிள் கார் மலைமேல் போகிறது. ராத்திரியே அடாமி போயிட்டா காலையில் மலை மீது ஒரு பாயிண்ட் வரை போய் உதய சூரியனைப் பார்க்கலாம்” என்றான் பஞ்சு. 

“அடாமியிலே எங்கே தங்கறது?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. 

“அங்கே ஓட்டல்கள் நூற்றுக்கணக்கில் இருக்கு. ஏதாவது ஒரு ஓட்டலில் போய்த் தங்கிக் கொள்ளலாம். எந்த ஓட்டலில் தங்கினாலும் அந்த ஓட்டல் ஜன்னல் வழியாக ஃப்யூஜி மலையைப் பார்க்கலாம்” என்றான் பஞ்சு. 

“ஹெலிகாப்டர் எங்கிருந்து புறப்படப் போகிறது?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“இங்கே அரண்மனைத் தோட்டத்திலிருந்துதான். சக்கரவர்த்தி பயணம் செய்கிற ஹெலிகாப்டராக்கும்!3 என்றான் பஞ்சு பெருமையோடு. 

“நாமெல்லாம் ஏக் தின்கா சுல்தான்!” என்றார் அம்மாஞ்சி. 

“அடாமியிலே ஹாட் ஸ்ப்ரிங்ஸ் நிறைய இருக்கு மாமே, அந்த மினரல் வாட்டர்லே ஸ்நானம் செய்ய ணுமே” என்று தம் ஆசையை வெளியிட்டார் ஜப்பான் சாஸ்திரி. 

“அதுக்கென்ன பிரமாதம்? ஆயிரக்கணக்கிலே இருக்கு. சுடச் சுட ஸ்பிரிங்லேருந்து பொங்கி வரும் வாட் டரை ஓட்டல் பாத் ரூமுக்குள் கொண்டு வருகிறார்கள். அந்தத் தண்ணீர் உடம்புக்கு ரொம்ப நல்லது. கந்தகம் இருக்கோல்லியோ?” என்றான் பஞ்சு. 


இரவு டின்னரை முடித்துக் கொண்டு ஐந்து பேரும் ஹெலிகாப்டரில் ஏறிக் கொண்டார்கள். 

“பஞ்ச பாண்டவர்களுக்குக் கிட்டாத அதிருஷ்டம் நமக்கு அடித்திருக்கிறது. அவர்கள் வனவாசம் போன போது ஹெலிகாப்டர் ஏது?” என்றார் அம்மாஞ்சி. 

“அசட்டுப் பிசட்டென்று உளறாதேயும். நாம் இப்போது வனவாசமா போகிறோம்?” என்று கேட்டார் கோபால் ராவ். 

“ஒரு விதத்தில் அம்மாஞ்சி சொல்வது சரிதான். ஹகோனே ஏரி, இஸு நேஷனல் பார்க் இதெல்லாம் இருக்கிற இடம் காடு தானே? வன போஜனம் பண்றதுக்கு ஏற்ற இடமாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“எப்பவும் சாப்பாட்டு ஞாபகம்தான் உமக்கு!” என்றார் அம்மாஞ்சி. 

“ஏரியல் ஸர்வே நடத்துவதற்கு ஹெலிகாப்டர்தான் ஏற்ற வாகனம்” என்றார் சாம்பசிவம். 

“ஏரியல் ஸர்வேயா? ஏரிகள் சர்வேயா?” என்று சிலேடையாகக் கேட்டார் அம்மாஞ்சி. 

“அதுவும் சரிதான். ஹகோனே ஏரி என்றால் ஒரே ஒரு ஏரி இல்லை. தொடர்ந்தாற்போல் ஐந்து ஏரிகள்” என்றான் பஞ்சு. 

“நான் விடியற்காலை நாலு மணிக்கே எழுந்து ஏரி யிலே முங்கிக் குளித்து நீச்சல் அடிக்கப் போகிறேன்” என்றார் சாம்பசிவம். 

‘”ங்களும்தான்” என்றனர் அம்மாஞ்சியும் குள்ள சாஸ்திரியும். 

“காலையில் கேபிள் காரில் போய் உதயசூரியனைப் பார்க்க வேண்டும். நீங்கள் பாட்டுக்கு நீச்சல் அடிக்கப் போயிட்டா எப்படி?” என்றான் பஞ்சு. 

“ஐந்து மணிக்குள்ளாகவே ஸ்நானத்தை முடித்து விடுவோம். எங்களால் டிலே இருக்காது” என்றார் அம்மாஞ்சி, 

ஸ்நானத்துக்குப் பிறகு அம்மாஞ்சி தயாரித்துக் கொடுத்த ‘நெஸ்’ பானத்தை முடித்துக் கொண்டு ஐவரும் கேபிள் காரில் ஏறிச் சென்றனர். அங்கே சூரியோதயம் பார்ப்பதற்கெனத் தனியாக ஓர் இடம் அமைத்திருந்தார் கள். அந்த இடத்தில் கைகளை ஊன்றிப் பார்ப்பதற்கு வசதியாக கனமான மரக்கட்டை வேலி ஒன்று அமைக்கப் பட்டிருந்தது. ஐவரும் அங்கே போய் நின்று கொண் டனர். எங்கே பார்த்தாலும் மலைகளும் மலர்கள் மண்டிய மரங்களும் தெரிந்தன. வசந்தத்தின் இதமான குளிர் காற்றும் காலை வேளையின் சுகமும் மனதுக்கு இனிமை ஊட்டின. 

ஐவரும் ஜப்பான் சமுத்திரத்தைப் பார்த்தார்கள். சூரியன் புறப்படும் போது கறுப்பு மேகங்கள் அதை மறைத்து விட்டிருந்தன. 

“அழகான சூரியோதயக் காட்சியைப் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை” என்று வருத்தப்பட்டார்  அம்மாஞ்சி. 

“உதயசூரியனுக்கு இப்போது நல்ல காலம் இல்லை. கருமேகம் மறைக்கிறது” என்றார் கோபால் ராவ். 

திரும்பி வரும்போது மலைப் பாதைகளெங்கும் செர்ரி மரங்கள் மெளனமாகச் சிரித்துக் கொண்டிருந்தன. 

நீர் நிலைகள் ஒரு மோன நிலையில் சலனமின்றிக் காணப்பட்டன. 

“டோக்கியோ நகரின் பரபரப்புக்கும் இங்கே நிலவும் அமைதிக்கும் எவ்வளவு வித்தியாசம்!” என்று வியந்தார் அம்மாஞ்சி. 

“ப்யூஜி மௌண்டனைப் பார்த்தீரா? எவ்வளவு அழகு!” என்றார் கோபால் ராவ். 

சாம்பசிவ சாஸ்திரி கீழே குனிந்து பார்த்தார். 

“மலையைப் பார்க்கச் சொன்னால் கீழே குனிந்து பார்க்கிறீரே?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“ஏரித் தண்ணீரில் அந்த மலையின் பிரதிபிம்பம் எவ்வளவு அழகாகத் தெரிகிறது பாருங்கள், ஜப்பான் விசிறியைப் பிரித்து வைத்த மாதிரி!” என்றார் சாம்பசிவம். 

“ஜப்பானுக்கு வருகிறவர்களில் பெரும்பாலோர் டோக்கியோ நகரைப் பார்த்துவிட்டுப் போய் விடுகிறார்கள். ஜப்பானே அவ்வளவுதான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். இந்த ஹகோனே ஏரியையும் இங்குள்ள தேசியப் பூங்காவையும் வந்து பார்த்தால்தானே தெரியும்? ஜப்பானின் ஆத்மா இங்கேதான் இருக்கிறது!” என்றான் பஞ்சு. 

“அட்டா! பௌர்ணமியன்று, வட்ட நிலா வான வீதியில் பவனி வரும்போது, அந்த நிலவின் ஒளி ஏரித்தண்ணீரில் வெள்ளியாகப் பளபளக்கிற போது, இங்கே தெப்பம் விடணும். அந்தத் தெப்பத்திலே, நாமகிரிப்பேட்டை, ஏ.கே.ஸி.,லால்குடி, ஏ.கே.ஸி., லால்குடி, குன்னக்குடி, சிட்டிபாபு, மதுரை சோமு, எம்.எல்.வி. இவர்களெல்லாம் கச்சேரி செய்ய ணும். இந்தக் காற்றுக்கும் கச்சேரிக்கும் எப்படி இருக் கும்?” என்று கூறி மானசீகமாக ரசித்துப் பார்த்தார் சாம்பசிவ சாஸ்திரி. 

“குன்னக்குடின்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்குப் பக்க வாத்தியம் யாரு?”  என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“வலையப்பட்டிதான். நாமகிரிப் பேட்டை, குன்னக்குடி இரண்டு பேருக்குமே அவர்தான்” என்றார் கோபால் ராவ். 

“ஒரு கல்லில் ரெண்டு மாங்காயா!” என்றார் அம்மாஞ்சி. 

“நாமகிரிப்பேட்டை தோடி வாசிச்சார்னா இந்த ஏரியே ரொம்பிப் போயிடும்” என்றார் சாம்பசிவம். 

“குன்னக்குடியை சீக்கிரமே புறப்பட்டு வரச் சொன் ல் தேவலை” என்றார் அம்மாஞ்சி. 

“ஏன்? என்ன சமாச்சாரம்?” என்று கேட்டார் சாம்ப சிவம். 

“அவர்தான் பட்டை பட்டையா நெற்றி பூராவையும் அடைச்சு விபூதி பூசுவார். அவர் வந்தால் நமக்கு விபூதிப் பஞ்சம் தீரும். கொண்டு வந்த ஸ்டாக்கெல்லாம் தீர்ந்து போச்சு” என்றார் அம்மாஞ்சி. 

“இந்த ஏரியையும் சூழ் நிலையையும் பார்க்கிறப்போ, தெப்ப உற்சவத்தன்று இங்கே வரவங்க எல்லாருக்கும் ஒரு வெண் பொங்கல், புளியோதரை, மசால்வடை, தயிர் சாதம் அவ்வளவையும் தனித் தனியா பொட்டலம் பொட் உலமாகக் கட்டிக் கொடுத்து விட்டால் அவங்கவங்க, கும்பல் கும்பலா ஏரியைச் சுற்றி புல்தரையிலே உட்கார்ந்து ஆனந்தமாச் சாப்பிடுவாங்க…” என்று ஓர் ஆசையை வெளி யிட்டார் ஜப்பான் சாஸ்திரி. 

“செஞ்சுட்டாப் போறது! எப்படியும் சமையல்காரர் கள் மட்டும் ஐந்நூறு பேருக்கு மேலே வரப் போறாங்க. இங்கேயே மரத்தடியில் செய்யச் சொல்லி விட்டால் போச்சு. வனபோஜனம் மாதிரியும் ஆயிடும்” என்றான் பஞ்சு. 

‘‘சமையல்காரங்க பார்ட்டி வரபோது அப்படியே அம்பிகா அப்பளம், அசோகா பொட்டலம் பாக்கு, டி. ஏ. எஸ். ரத்னம் பட்டணம் பொடி மறக்காமல் கொண்டு வரச் சொல்லுங்க’ என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“நேரமாச்சு. புறப்படுங்க, டோக்கியோ போகலாம்” என்றான் பஞ்சு. 

“பஞ்சு ஸாரும் கோபால் ராவும் ஹெலிகாப்டரில் முன்னாடி போகட்டும். நாம் மூவரும் ரயலில் போகலாம். நமக்கென்ன அவசரம்? இங்கிருந்து டோக்கியோவுக்கு ஸூப்பர் எக்ஸ்பிரஸ் போகிறது. ஐம்பத்தைந்தே நிமிஷம் தான். வழியிலுள்ள இயற்கைக் காட்சிகளையெல்லாம் பார்த்துக் கொண்டே போகலாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 


ஹெலிகாப்டரில் டோக்கியோ போய்ச் சேர்ந்ததுதான் தாமதம்; பஞ்சுவும் கோபால் ராவும் அவசரம் அவசரமாக டயட் ஆபீசுக்குப் போய் வேலையைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். அங்கே அவர்களுக்காக பெட்டி பெட்டி யாகத் தபால்களும் தந்திகளும் காத்துக் கிடந்தன. 

“தெப்போ எப்போது?> என்று கேட்டுச் சில தந்திகள். 

“ஓட்டலில் ரூம் ரிஸர்வேஷன் செய்து தரமுடியுமா?” என்று விசாரித்துச் சில தந்திகள். 

பஞ்சு அவற்றை யெல்லாம் தள்ளி வைத்து விட்டு பாப்ஜி கொடுத்திருந்த தந்தியை எடுத்துப் படித்தான். 

வி.எஸ்.டி. பார்ட்டி மறுநாள் மாலை ஏர் இண்டியா அக்பர் சக்கரவர்த்தியில் டோக்கியோ வருகிறார்கள் என்பதே பாப்ஜி அனுப்பியிருந்த செய்தி. 

“பலே, பலே! நாளைக்கு வராங்களாம் வி.எஸ்.டி. பார்ட்டி” என்றான் பஞ்சு. 

“தஞ்சாவூர் சமையல்காரர்கள், காரைக்குடி ஆசாரி கள், மகாபலிபுரம் ஸ்தபதிகள் எல்லாம்கூட வருகிறார்களாம்”. என்று இன்னொரு தந்தியை எடுத்துப் படித்துச் சொன்னார் கோபால் ராவ். 

“இவர்களையெல்லாம் எங்கே இறக்கலாம்?” என்று கேட்டான் பஞ்சு. 

“எல்லாரையும்பலெஓட்டலில் இறக்கி விடுவோம். அதுதான் வசதியான ஓட்டல். அரண்மனைக்குப் பக்கத்திலேயும் இருக்கிறது” என்றார் கோபால் ராவ். 

”வி. எஸ்.டி. பார்ட்டியை மட்டும் பாலெஸ் கஸ்ட் ஹவுஸில் இறக்கி விடலாம். சக்கரவர்த்தியின் விசேஷ விருந்தாளியாச்சே அவங்க” என்றான் பஞ்சு. 

கோபால் ராவ் பத்திரிகைக்காரர்களுக்கு ஃபோன் செய்து தெப்போ -76 சம்பந்தமான புதிய செய்திகளைச் சொல்லத் தொடங்கினார். 

அத்தியாயம்-8

“பிரயாணம் செய்தால் ஜப்பான் ரயிலில் செய்யணும். ப்ளேனில் போனால் கூட இவ்வளவு வசதியா இருக்காது துளி அலுப்பு இல்லையே!” என்றார் அம்மாஞ்சி. 

ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்த சாம்பசிவ சாஸ்திரி, “ஒரு ‘இஞ்ச்’ நிலத்தைக் கூட வீணாக்காமல், எங்கே பார்த்தாலும் பயிர் பண்ணியிருக்கான் ஜப்பான்காரன். கண்ணுக்கு எட்டின வரைக்கும் ஒரே நெல் வயலா இருக்கு…” என்றார். 

“ஜப்பான் பூமியை முக்கால் பங்குக்கு மேல் மலைகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அந்த மலைகளுக் கெல்லாம் ராஜா ஃப்யூஜி” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“ரொம்பச் சின்ன தேசம். இதிலே எங்கே பார்த்தாலும் மலை. மிச்சம் இருக்கிற துளியுண்டு இடத்திலே குடியிருக்க வீடு, கார் போக ரோடு, ரயில்வே லைன்கள், தொழிற்சாலைகள், கோயில்கள் இவை தவிர ஆறு, காடு மேடு இதெல்லாம் வேறே. இவ்வளவும் போகப் பயிர் பண்றதுக்கு இடம் ஏது?” என்று வியந்தார் அம்மாஞ்சி. 

“இதிலே வேடிக்கை என்ன தெரியுமோ! ஜப்பான்லே எப்பவுமே அரிசிக்குப் பஞ்சம் கிடையாது. ‘தி ஜாப்னிஸ் பீபிள் வில் நெவர் ஸ்டார்வ்’னு என் மருமான் எனக்கொரு சமயம் லெட்டர் எழுதியிருந்தான்’ என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“பணப் பஞ்சம், சாப்பாட்டுப் பஞ்சம் இரண்டும் இல்லாத நாடு இது. ஆனால் இடம் போதாமல் தவிக்கிறாங்க, பாவம்” என்றார் அம்மாஞ்சி. 

“நம் ஊர்லே இடத்துக்குப் பஞ்சம் இல்லே. மிச்ச இரண்டுக்கும் திண்டாட்டம்…” என்றார் அம்மாஞ்சி. 

“ஒண்ணு செய்யலாம்; கொஞ்ச காலத்துக்கு இந்த ஜப்பான்காரங்களை இண்டியாவிலே குடியேறச் சொல்லி விட்டு நாம் ஜப்பானுக்கு வந்துடலாம்!” என்றார் சாம்ப சிவம். 

“ஏன்? ஐப்பான் நன்றாயிருப்பது உமக்குப் பிடிக்க வில்லையா?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே டோக்கியோ, ஷிஞ்சுகு ஸ்டேஷன் வந்து விட்டது.மூவரும் டாக்ஸி பிடித்து பாலெஸ் போய்ச் சேர்ந்தார்கள். 


பார்லிமெண்ட் கட்டடத்தின் பக்கத்தில் அமைந் துள்ள தெப்போ -76 அலுவலகம் ஒரே பரபரப்பாயிருந்தது. ஓயாத டெலிபோன் கால்கள் ஒரு புறம். வெளிநாட்டும் பயணிகளின் விசாரணை ஒருபுறம். கோபால் ராவ், பஞ்சு- இருவருமே எல்லாவற்றுக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருந் தார்கள். பஞ்சுவின் மேஜை மீது டைப் அடிக்கப்பட்ட காகிதங்கள் அவன் கையெழுத்துக்காகக் காத்திருந்தன. புதிதாக வந்துள்ள நியான் ஸைன் போர்டை எங்கே வைத்தால் பொருத்தமாயிருக்கும் என்ற பிரச்னையில் பஞ்சு- வும் கோபால் ராவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள்.. The Japan Association for Theppo-76 என்று அந்த போர் டில் ஆங்கிலத்திலும் ஜப்பான் மொழியிலும் எழுதப்பட்டி ருந்தன. தெப்போ-76-ன் சின்னமாக வட்ட வடிவத்தில் சிவப்பு நிற உதயசூரியனும் அதன் பக்கத்தில் திருவாரூர்த் தேரின் உருவப் படம் ஒன்றும் வரையப் பட்டிருந்தன. 

“எக்ஸலண்ட் ஐடியா! சின்னம் ரொம்ப நன்றாக அமைந்து விட்டது” என்றார் கோபால் ராவ். 

“கின்ஸாவில் தேர் ஓடப் போகிற வீதிகளைக் காட்டி வரை படம் ஒன்று தயாரித்திருக்கிறார்கள். பத்து லட்சம் பிரதிகள் பிரிண்ட் செய்திருக்கிறார்களாம்” என்றான் பஞ்சு. 

“அத்தனை பிரதிகளை நாம் என்ன செய்வது?” என்று கேட்டார் கோபால் ராவ். 

“எல்லா ஓட்டல்களிலும், விமானக் கம்பெனி அலுவல கங்களிலும் கொடுத்து வைத்தால் வெளிநாட்டுப் பயணிகள் வாங்கிப் பார்ப்பார்கள். பப்ளிஸிடிதானே? என்றான் பஞ்சு. 

“அதன் பின்பக்கத்தில் திருவாரூர்த் தேரின் உயரம், கனம், அதிலுள்ள சிற்பங்கள் பற்றிய விவரம், சக்கரங் களின் சுற்றளவு, தேர் இழுப்பதற்குத் தேவையான ஆட் கள் எத்தனை பேர் போன்ற நுணுக்கமான விவரங்களை யெல்லாம் அச்சிட்டுக் கொடுத்தால் வெளி நாட்டுக்காரர் களுக்கு ரொம்ப உபயோகமா யிருக்கும்” என்றார் கோபால் ராவ். 

“இங்கிலீஷ் பேசத் தெரிந்த ஆயிரம் பெண் கய்டுகள் தேவை. மிஸ்டர் யோஷினாரியிடம் சொல்லி இன்றே பத்தி ரிகைகளில் விளம்பரம் செய்யச் சொல்லிவிடுங்கள்” என்றான் பஞ்சு. 

“ஜப்பானில் பெண்களுக்கும் ஓட்டல்களுக்கும் பஞ்சமே கிடையாது” என்றார் கோபால் ராவ். 

“ஸ்தபதிகளையும், சாரிகளையும் பாலெஸ் காம்ப வுண்டுக்குள்ளேயேதான் இறக்கணும். தேர், திருவள்ளு வர் சிலை இரண்டும் அரண்மனைக்குள்ளேயேதான் செய்ய வேண்டும்” என்றான் பஞ்சு. 

“நம்ம ஆட்கள் போடுகிற கூச்சல், கொட்டாப்புளி, கல்லுளி போடுகிற சத்தம், சமையல்காரர்கள் அண்டாக்களை உருட்டுகிற சத்தம் இதெல்லாம் சேர்ந்து காது செவிடாயிடுமே! சக்கரவர்த்திக்கு இடைஞ்சலா யிருக்குமே” என்றார் கோபால் ராவ். 

“கவலைப்படாதீங்க. அரண்மனைக்குள் வேண்டிய இடம் இருக்கிறது. மொத்தம் 250 ஏக்கர் நிலம். எங்கா வது ஒரு மூலையில் அவர்களை இறக்கி விடலாம். தேர் வேலை நடக்கிறபோது வெளியிலே சத்தம் கேட்காதபடி நாளைக்கே ‘ஸவுண்ட் ப்ரூப் ஹால்’ ஒன்று கட்டிவிடலாம்” என்றான் பஞ்சு. 

“இம்பீரியல் பாஸெஸ் காம்பவுண்டுக்குள் இல்லாததே எதுவும் இல்லை. ஆஸ்பத்திரி, பாங்க், கடைத்தெரு, தியேட்டர், ரெஸ்டாரண்ட், நீச்சல் குளம், ஷிண்ட்டோ கோயில்கள் ஸலூன், லாண்ட்ரி, இடுகாடு எல்லம் இருக்கு. ரோம்லே வாடிகன் ஸிடி மாதிரி” என்றார் கோபால் ராவ். 

“ஆமாம்; வள்ளுவர் சிலை செய்வதற்கு ஏற்ற கல் வேண்டுமே, அதற்கென்ன செய்வது?” என்று கேட்டான் பஞ்சு.. 

“ஜப்பான்லே கல்லுக்குத்தானா பஞ்சம்? எங்கே பார்த் தாலும் மலைகள் மயம். கணபதி ஸ்தபதி வந்ததும் அவரையே நேரில் அழைத்துக்கொண்டு போய் அவர் தேர்ந்தெடுக்கிற கல்லைக் கொண்டு வந்து விடவேண்டியது தானே!” என்றான் பஞ்சு. 

“விமானக் கம்பெனிகளெல்லாம் இப்பவே விளம்பரம் செய்ய ஆரம்பிச்சுட்டாங்களே! பேப்பர்லே பார்த்தீங்களா?” என்று யோஷினாரி அன்றையப் பேப்பர் ஒன்றை எடுத்து வந்து பஞ்சுவிடம் காட்டினார். 

“பேஷ் பேஷ்!” என்றான் பஞ்சு. 

“தெப்போ 76-க்கு ஸ்பெஷல் ஸ்டாம்ப் கூட ரிலீஸ் செய்யச் சொல்லியிருக்கிறார் பிரைம் மினிஸ்டர்” என்றார். மிஸ்டர் யோஷினாரி. 


“ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து” என்று ஜப்பான் சாஸ்திரிகள் தமது வலது கை கட்டை விரலில் தொடங்கி சுண்டு விரல் வரை விரல் விட்டு எண்ணிக் கொண்டிருந்தார். 

“ஓய்! என்ன இது? சுண்டு விரலிலிருந்து எண்ணுவதற்குப் பதில் கட்டை விரலிலிருந்து தலைகீழாக எண்ணுகிறீரே?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“இப்படி இந்தப் பக்கத்திலிருந்து எண்ணுவதுதான் ஜப்பானியர்கள் வழக்கம். ‘பி எ ரோமன் வென் யூ. ஆர் இன் ரோம்’னு கேள்விப்பட்டதில்லையா?” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“சரி; ஐந்து வரை என்ன கணக்குப் போட்டீர்?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“மெட்ராஸிலிருந்து ப்ளேன் வருவதற்கு இன்னும் ஐந்து மணி நேரம் இருக்காம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“நாம் ஏர்போர்ட்டுக்குப் போக வேண்டாமா!யார் யார் வருகிறார்களாம்?” என்று கேட்டார் சாம்பசிவ சாஸ்திரி. 

“வி.எஸ்.டி. தேர் வேலை முடிஞ்சதும் வருகிறாராம். இன்றைக்கு ஸ்தபதிகள், ஆசாரிகள், சமையல் பார்ட்டி வரைக்கும் வருகிறார்களாம்” என்றார் அம்மாஞ்சி. 

“சமையலுக்கு வைத்தா பார்ட்டிதானே வருகிறார்கள்? வைத்தா கையாலே வத்தக் குழம்பு வெச்சாலும் தேனாயிருக்கும்” என்று நாக்கைச் சப்புக் கொட்டினார் சாம்பசிவ சாஸ்திரி. 

“நாளையிலிருந்து சாப்பாட்டுப் பஞ்சம் தீர்ந்தது!”. என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“உமக்கு அதேதானே கவலை!” என்றார் சாம்ப சிவம். 

“நான் சாப்பாட்டைப் பற்றி வாயால் பேசுவதோடு. சரி. நீர் காரியத்தில் கவனித்துக் கொள்வீர். அதுதான் வித்தியாசம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“என்னை சாப்பாட்டுராமன் என்கிறீரா?” என்று கேட்டார் சாம்பசிவம். 

“உம்ம தொந்தியே சொல்லும் அதை” என்று சாம்பசிவத்தின் தொப்பையைத் தம் கையால் தட்டினார் ஜப்பான் சாஸ்திரி, 

”ஓய்! வெறும் தொப்பை இல்லை அது. தொப்பே -76″ என்று கேலி செய்தார் அம்மாஞ்சி. 

“நாளைக்கு ஈவினிங் டிபன் ஜாங்கிரியும் ரவா உப்பு மாவும் போடச் சொல்லணும். வைத்தா ரவா உப்புமா கிண்டினால் வாசனை ஜப்பானையே தூக்கிக் கொண்டு போகும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“ஜாங்கிரி சுத்தறதிலே நாம் எக்ஸ்பர்ட். ஜப்பான் காரன் நம்ம ஜாங்கிரியைப் பார்த்து அசந்து போவான்” என்றார் சாம்பசிவம். 

“எப்படி?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“ஜாங்கிரிக்கு ஆரம்பம் எது, முடிவு எது என்று அவனாலே கண்டு பிடிக்க முடியாமல் திண்டாடுவான்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“பகவானுக்கு ஆதி அந்தம் கிடையாது. அதே மாதிரி நம்ம ஜாங்கிரியிலும ஆரம்பம் எது முடிவு எது என்று கண்டுபிடிக்க முடியாது. நம்ம ஜாங்கிரியிலே ஒரு பெரிய தத்துவமே அடங்கியிருக்கு” என்றார் சாம்பசிவம். 

“இதைச் சொல்லிக் கொண்டே தான் நாம் காலத்தை ஓட்டணும்” என்றார் அம்மாஞ்சி. 

“முதலில் இப்போ தேரை ஓட்டுவோம்” என்றார் சாம்பசிவம். 

அத்தியாயம்-9

“சின்னம் ரொம்பப் பொருத்தமாகவும் அழகாகவும் அமைந்துவிட்டது. வெள்ளை நிறப் பட்டுத் துணியில், சிவப்பு நிற வட்டச் சூரியனும் திருவாரூர் தேரும் பொறித்த கொடியைத் தேரின் உச்சியில் சுட்டிவிட வேண்டும். கின்ஸா வீதியிலே தேர் போகிற போது அந்தக் கொடி பட்டொளி வீசிப் பறக்கும். தேரைச் சுற்றியுள்ள ‘தொம் பைட்கள் யானைத் துதிக்கை மாதிரி இப்படியும் அப்படியும் அசைந்தாடும்.வள்ளுவர் நாலு வீதியிலும் ஜம்மென்று பவனி வருகிற அந்தக் காட்சியைக் காண வெளி நாடுகளி லிருந்தெல்லாம் லட்சக்கணக்கான மக்கள் வந்து கூடியிருப் பார்கள். அதை நினைத்தாலே எனக்கு ஒரே ‘த்ரில்’லா இருக்கு” என்றார் கோபால் ராவ். 

“எனக்கு ஒரு ஐடியா…” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“என்ன அது?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“வள்ளுவர் வலம் வரப்போகிற அந்த நாலு வீதிகளுக் கும் வள்ளுவர் வீதி, கம்பர் வீதி, இளங்கோ வீதி, தொல்காப்பியர் வீதி என்று பெயர் சூட்டி விட்டால் என்ன என்பது தான் அந்த ஐடியா!” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“ஒரு வீதிக்கு நான் ஏற்கனவே பெயர் வைத்து விட்டேன்…” என்றார் சாம்பசிவம். 

“அது எப்போ? என்ன பெயர்?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“அன்றைக்குக் கின்ஸாவிலே நான் காணாமல்போயிட் டேன் இல்லையா? அப்போ ஒரு தெரு முனையிலே உள்ள சுவர்லே என் பெயரை பால்பாயிண்ட் பென்சிலால் அழுத் தமா எழுதி வைத்து விட்டேன். கின்ஸாவிலே எல்லாத் தெருவும் ஒரே ஜாடையா இருக்கு. ஒரு முறை போன தெருவிலேயே திரும்பத் திரும்ப அலையக் கூடாது என்பதற்காக என் பெயரை எழுதி வைத்து விட்டேன்” என்றார் சாம்பசிவம். 

“உமக்கு ஏன் இப்படி ஒரு அற்ப ஆசை? சின்னப் பிள்ளைத்தனமா இருக்கே!” என்றார் அம்மாஞ்சி. 

“எனக்கு அந்த வீதி முனையிலே ஒரு சிலையே வைக்க லாம். அவ்வளவு அலை அலைந்திருக்கிறேன்” என்றார் சாம்பசிவம். 

“நீரா அலைந்தீர்? உம்மைத் தேடி நாங்கள் அல்லவா அலைந்தோம்?” என்றார் அம்மாஞ்சி. 

“சரி, வீதிகளுக்குப் பேர் வெச்சுட்டா மட்டும் போதுமா? தேரின் நாலு பக்கத்திலும் நாலு குறள்களை எழுதி வைக்க வேண்டாமா?” என்று கேட்டார் கோபால் ராவ். 

“நாலு குறள் என்றால் என்னென்ன குறள்? அவற்றை யார் தேர்ந்தெடுப்பது?” என்று கேட்டார் கோபால் ராவ்.

“தேரில் குறள் எழுதி வைக்கிற ஐடியா ஒண்ணும் புதுசில்லே. நம் ஊர் பஸ்களில் எழுதி வைத்திருக்கிற மாதிரி தானே?” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“எனக்கு ஒரே ஒரு குறள் தெரியும்.’அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்கிற குறள்” என்றார் அம்மாஞ்சி. 

”உமக்கென்ன? ரொம்பப் பேருக்கு அது ஒண்ணு தான் தெரியும். ஆனால் அவங்க எல்லாக் குறளும் தெரிஞ்ச மாதிரி நடிப்பாங்க…” என்றார் சாம்பசிவம். 

“அது பரவாயில்லையே! சில பேர் தமிழ்நாட்டில் பிறக் காமலே தமிழன் மாதிரி நடிக்கிறாங்களே!” என்றார் கோபால் ராவ். 

“பஞ்சு ஸார்! பாப்ஜிக்கு ஃபோன் செய்யறப்போ அருமையான குறளாக நாலு செலக்ட் பண்ணி அனுப்பச் சொல்லுங்க” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“பாப்ஜிக்கு என்ன தெரியும் குறளைப் பற்றி?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“அவனுக்குத் தெரியாவிட்டாலும் தெரிஞ்சவங்க கிட்டே பொருத்தமான குறளோவியமாக் கேட்டு வாங்கி அனுப்புவான்” என்றார் சாம்பசிவம். 

“புரியறது!” என்று அம்மாஞ்சி கண் சிமிட்டினார்.

“தேருக்கு வேண்டிய தொம்பையை மறந்துடப் போறாங்க!’ என்றார் சாம்பசிவ சாஸ்திரிகள். 

”ஆமாம்; கும்பகோணம் சக்ரபாணிப் பிள்ளை ஸன் சாமிநாதன் கிட்டே சொல்லிட்டாப் போதும். கோயில் குடை, தேர்ச்சீலை, முகப்பு வாசல் மாலை, தொம்பை சகல மும் கொண்டு வந்து விடுவார். பாப்ஜியிடம் சொல்லி அவரை அடுத்த பிளேன்லேயே ஏற்றி அனுப்பிடச் சொல்ல ணும். அவருக்கு ஏக வேலை இருக்கு இங்கே” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“ஆமாம்; தெப்போ 76 ஆபீஸ் வாசலில் கூட ஒரு பந்தல் போட்டு அதைச் சுற்றி தொம்பைகளைக் கட்டி வைத்தால் ஒரு ஃபெஸ்ட்டிவல்’ களை கட்டும்” என்றான் பஞ்சு. 

“அத்தோடு வாழை மரங்களையும் கட்டி வையுங்க. அப்பத்தான் நம் தமிழ்நாட்டுக் களை கட்டும்” என்றார் அம்மாஞ்சி. 

“ஜப்பானியர் வீட்டில் ஏதாவது விசேஷம்னா வீட் டுக்கு முன்னாலே பைன் மரங்களைக் கட்டி வைப்பாளாம்” என்றார் ஜப்பான் சரஸ்திரி. 

“நம் ஊர் விழா என்பதால் வாழைமரம்தான் பொருத்தமாயிருக்கும்” என்றார் கோபால் ராவ். 

“முதல்லே ஒரு வாழைத் தோட்டத்தை அப்படியே வெட்டி பந்தல் சாமான்களோடு ஏற்றி அனுப்பச் சொல்லுங்க” என்றார் அம்மாஞ்சி. 

“தேருக்கு வேண்டிய மரச் சாமான்களெல்லாம் எப்போது வருகிறதாம்?” என்று கேட்டார் சாம்பசிவம். 

“இன்றைக்கே காரைக்குடி ஆசாரிகளோடு வருகிறதாம்” என்றான் பஞ்சு. 

“பாப்ஜிக்கு போன் பண்றப்போ நாளை ஃப்ளைட்லே சாந்தா நாராயணனை அனுப்பி வைக்கச் சொல்லுங்கோ. அந்த அம்மாள் தேர் ஓடப்போகிற நாலு வீதிகளிலும் ரங்கோலி கோலம் போட்டால் ஜப்பானே அசந்துபோகும். அவர்களுடைய ‘இகபானா’ நம்ம ரங்கோலியிடம் என்ன செய்யும்?” என்றார் அம்மாஞ்சி வாத்தியார். 

“இகபானா வேறே.ரங்கோலி வேறே. இதையும் அதையும் ஏன் பிணைக்கிறீங்க?” என்று கேட்டார் கோபால் ராவ். 

“இரண்டுமே வீட்டை அழகுபடுத்தும் கலைதானே!”

“கோலத்தைக் கூட்டம் மிதிச்சிப் பாழ் பண்ணி டாதோ…?” என்று கேட்டான் பஞ்சு. 

“கோலம்னா நாலு பேர் கால் பட்டு அழியத்தான் செய்யும். அதெல்லாம் ஒரு சுபம்தான். அந்த அம்மாள் தண்ணீர் மீது கூடக் கோலம் போடுவாங்க. தெப்பத்தன்று ஹகோனே ஏரித் தண்ணீர் மீது போடச் சொல்லுவோம். ரொம்ப அழகாயிருக்கும்” என்றார் அம்மாஞ்சி. 

“ஜப்பானில் தீபங்களைக் கூடத் தண்ணீர் மீது மிதக்க விடுவார்கள். அதுகூட ரொம்ப அழகாயிருக்கும்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“தேரோட்டம் வரைக்கும் தெப்போ ஆபீஸ் வாசலில் தினம் ஒரு கோலமாகப் போட்டு வைக்கட்டுமே. ஆபீஸுக்கு வர்ற வெளிநாட்டுக்காரர்களெல்லாம் அதைப் பார்த்து ஆச்சரியப்படுவாங்க……” என்றார் கோபால் ராவ். 

“எனக்கு ஒரு சந்தேகம்…” என்றார் அம்மாஞ்சி.

“என்ன அது?” என்று கேட்டார் சாம்பசிவம். 

“தேரோட்டம் தொடங்கறதுக்கு முன்னாலே முக்கிய மானவர்களெல்லாம் தேர்ச் சக்கரத்தின் மீது சூறைக்காய் அடிக்கிற வழக்கமாச்சே! இங்கேயும் உண்டா அது?” என்று கேட்டார் அம்மாஞ்சி. 

“இதிலே என்ன சந்தேகம் உமக்கு? நிச்சயமா உண்டு” என்று தேங்காய் அடித்த மாதிரி சொன்னான் பஞ்சு. 

“இல்லே, சூறைக்காய் உடைத்தால் அந்தக் காய்க ளெல்லாம் சிதறி விதியெல்லாம் இரைந்து குப்பையாகி விடுமே என்று பார்க்கிறேன்” என்றார் அம்மாஞ்சி. 

“சிதறட்டுமே! அதெல்லாம் தானே முக்கியம்!” என்றான் பஞ்சு. 

“வடம் பிடிக்கிறவங்க காலில் அந்தச் சில்லுகள் பொத்துக்கொண்டு ரத்தம் வரும்” என்றார் அம்மாஞ்சி. 

“அப்ப என்ன செய்யலாம் அதுக்கு?” என்று கேட்டார் சாம்பசிவம். 

“நம் ஊரில் சூறைக்காய் அடித்தால் அதைப் பொறுக்குவதற்கென்று சில பசங்கள் பாய்ந்தோடி வரு வாங்க. அந்த மாதிரிப் பசங்களாப் பார்த்து ஒரு நூறு பசங்களை இங்கே அனுப்பி வைத்தால் நல்லது” என்றார் அம்மாஞ்சி. 

“ஏன் சாஸ்திரிகளே, அந்த ஏழைப் பசங்க தேங்காய் பொறுக்கிச் சாப்பிடுவதைப் பார்த்தால் ஜப்பான்காரன் நம்ம கண்ட்ரியைப் பற்றி என்ன நினைப்பான்? அது நமக்குக் கேவலமில்லையா?” என்று கேட்டார் கோபால் 
ராவ். 

“அவங்ககிட்டே நாம் முன்னாடி சொல்லி வெச்சுட் டாப் போச்சு. ‘தெருவிலே குப்பை விழுவது அவர்களுக் குப் பிடிக்காது. உடனே பாய்ந்து பொறுக்கி எடுத்து விடுவார்கள். அப்படி ஒரு பழக்கம் அவர்களுக்கு. இதற் காகவே அவர்களை வரவழைத்திருக்கிறோம்’ என்று கூறிச் சமாளிக்க வேண்டியதுதான்” என்றான் பஞ்சு. 

“”எக்ஸலெண்ட் ஐடியா! அவங்களுக்கெல்லாம் முன் கூட்டியே ஒரு யூனிபார்ம் கொடுத்து போட்டோ எடுத்து அந்த போட்டோவுக்குக் கீழே, 

“ஹண்ட்ரட்ஸ் ஆப் வாலண்டீர்ஸ் ப்ரம் டமில் நாட் அரைவிங் டோக்யோ டு கிளியர் தி ப்ரோக்கன் பீஸஸ் ஆப் கோகனட்ஸ் ப்ரம் தி கின்ஸா ஸ்ட்ரீட் பிஃபோர் தி ஃபெஸ்ட்டிவல் ஸ்டார்ட்ஸ்’ என்று எழுதி பேப்பரில் நியூஸ் கொடுத்து விடுவோம்!” என்றார் கோபால் ராவ். 

“நரிக்குறவாளை வாஷிங்டனுக்கு அழைச்சிண்டு போன பஞ்சு ஸாருக்கா இதெல்லாம் சொல்லித் தரணும்?” என்றார் அம்மாஞ்சி. 


“ப்ளேன் வர நேரமாச்சு. புறப்படுங்க. எல்லாரும் ஏர்போர்ட்டுக்குப் போவோம்'” என்று அவசரப்படுத்தி னான் பஞ்சு. 

ரமேஷும் இடாவும் ஒரு காரில் ஏறிக்கொண்டார் கள். பஞ்சு, கோபால்ராவ், யோஷினாரி மூவருக்கும் இன்னொரு கார். சாஸ்திரிகள் மூவருக்கும் வேறொரு கார்! 

ஸ்தபதிகளையும் ஆசாரிகளையும் சிற்பிகளையும் காண விமானகூடத்தில் கூட்டம் ஜேஜே என்று அலை மோதிக் கொண்டிருந்தது. 

முதலில் கணபதி ஸ்தபதிதான் இறங்கி வந்தார். அப்புறம் பளபளவென்ற விநாயகர் விக்கிரகத்தையும், நடராஜர் விக்கிரகத்தையும் நாலைந்து பேராகத் தூக்கிக் கொண்டு இறங்கி வந்தனர். சுற்றி நின்ற காமிராக்காரர் களும், டெலிவிஷன்காரர்களும் வந்தவர்களையும் விக்கிர கங்களையும் படமெடுத்துக்கொண்டே இருந்தார்கள். பிரஸ் ரிப்போர்ட்டர்களின் கேள்விகளுக்கு பஞ்சுவும், கோபால் ராவும் மாறி மாறிப் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். 

“நடராஜர் விக்கிரகம் ஏன் ஒரு காலைத் தூக்கிக் கொண்டு நிற்கிறது?” என்று கேட்டார் ஒரு நிருபர். 

“இரண்டு காலையும் தூக்கினால் எப்படி நிற்க முடியும்?” என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டான் பஞ்சு. 

“வெரிகுட் ஜோக்!” என்று சிரித்தனர் நிருபர்கள். “ஓல்ட் ஜோக்!” என்று கோபால் ராவ் பஞ்சுவின் காதில் கிசுகிசுத்தார். 

“ஜப்பானியருக்குப் புதிசுதானே?” என்றான் பஞ்சு.

“விநாயகரின் காலடியில் இருக்கிறதே, அது என்ன?” என்று கேட்டார் ஒரு நிருபர். 

“மூஷிகவாகனம்.மூஷிக்!” என்றார் கோபால் ராவ்.

“அ! முஷிகு? இட் ஸௌண்ட்ஸ் லைக் ஜாப்னீஸ் நேம்!” என்று கூறி மகிழ்ந்தனர் நிருபர்கள். 

கணபதி ஸ்தபதி, ஆசாரி ஸ்தபதி இருவரையும் தங்கள் காரில் அழைத்துக்கொண்டு புறப்பட்டனர் பஞ்சு வும் கோபால் ராவும். 

மரச் சாமான்களை டிரக்குகளில் ஏற்றி அனுப்பிவிட்டு, விக்கிரகங்களை ஒரு தனிக் காரில் எடுத்துக்கொண்டு புறப் பட்டார் யோஷினாரி. 

சமையல் வைத்தாவை ஜப்பான் சாஸ்திரி கவனித்துக் கொண்டார். 

“ஏன் வைத்தா? நீங்க மொத்தம் ஐந்நூறு பேர் வரம் போவதாகச் சொன்னாளே. கொஞ்சம் பேர்தானே வந் திருக்கீங்க?” என்று கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. 

“கலியாண சீஸன் இல்லையா? அதனால் கிராக்கி அதிகம். பாதிப் பேர்தான் வந்திருக்காங்க. மற்றவங்க அடுத்த வாரம் வராங்க” என்றார் சமையல் வைத்தா. 

“இப்பத்தான் தமிழ்நாட்டிலே கஸ்ட் கண்ட்ரோ லாச்சே! சமையல்காரர்களுக்கு கிராக்கி இருக்காதே!” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“என்ன கண்ட்ரோலானாலும் டின்னர் பார்ட்டிகளுக்குக் குறைச்சல் இல்லை” என்றார் சமையல் வைத்தா. 

ஆசாரிகளையும் சமையல்காரர்களையும் ஒகூரா ஓட்டலில் கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பை ரமேஷ், இகிடா இருவரிடமும் ஒப்படைத்துவிட்டுப் போய் விட்டான் பஞ்சு. 

அவர்கள் அவ்வளவு பேரையும் மானோ ரயிலில் ஏற்றி ஒகூரா ஓட்டலில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்குள் ரமேஷும் இகிடாவும் பெரும் பாடுபட்டுப் போனார்கள். 

முதலில் பாலெஸ் கெஸ்ட் ஹவுஸில் கொண்டு வைக் கப்பட்ட இரண்டு விக்கிரகங்களுக்கும் தேங்காய் உடைத்து கற்பூர ஹாரத்தி எடுத்தனர் சாஸ்திரிகள். 

“சரி, விக்கிரகங்கள் வந்து சேர்ந்துவிட்டன. வள்ளு வர் சிலைக்கு என்ன செய்யப் போறீங்க?” என்று கணபதி ஸ்தபதியைக் கேட்டார் ஜப்பான் சாஸ்திரி. 

“மலைகள் உள்ள பக்கமாகப் போய்த் தேடிப் பார்த்து சிலைக்குப் பொருத்தமான கல்லைக் கொண்டு வரவேண்டி யதுதான்” என்றனர் ஸ்தபதிகள். 

“அங்கெல்லாம் போய்த் தேடுவதற்கு நேரமில்லை. நான் ஒரு ‘ஐடியா செய்து வைத்திருக்கிறேன். இங்கே டோக்கியோவிலேயே க்யோஸுமி கார்டனில் வேண்டிய பாறைகள் உள்ளனவாம். ஜப்பான் நாட்டிலுள்ள பாறை வகைகள் எத்தனை உண்டோ அத்தனையும் அங்கே கொண்டு வந்து வைத்திருக்கிறார்களாம். நாம் இப்போதே ஒரு காரில் போய்ப் பார்த்து விட்டு வந்து விடலாமா?’ என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“பேஷாப் போச்சு! அப்படி ஒரு கார்டன் இருக்கா? அது எங்கே?” என்று கேட்டான் பஞ்சு. 

“கியோஸு பிரிட்ஜ் அருகில் இருக்கு. அது ரொம்ப அழகான கார்டனாம்” என்றார் ஜப்பான் சாஸ்திரி. 

“இதெல்லாம் உமக்கு எப்படித் தெரிகிறது?” என்று கேட்டான் பஞ்சு. 

“மருமான் சொல்லியிருப்பான்” என்றார் சாம்பசிவம்.

“அதுதான் இல்லே. நானே டூரிஸ்ட் கய்ட் புக் ஒன்றில் பார்த்தேன். இதோ பாருங்க” என்று கூறி அந்த கய்ட் புக்கை எடுத்துக் காட்டினார் ஜப்பான் சாஸ்திரி. 

பஞ்சு, கோபால் ராவ், சாஸ்திரிகள், ஸ்தபதிகள் எல்லோரும் உடனே கியோஸுமி கார்டனுக்குப் புறப்பட்டுப் போய் அங்குள்ள பாறைகளில் ஒன்றைத் தேர்ந் தெடுத்தார்கள்.

– தொடரும்…

– 1975-76இல் தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.

– தெப்போ- 76,  முதற் பதிப்பு: அக்டோபர் 1976, பூம்புகார் பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *