சொட்டு ரத்தம்





(1966ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
7.பாதி கதவைத் திறந்து வைத்த பாவை
சிறிது நேரம் தொடர்ச்சியாக மின்சாரப் பொத்தானை அமுக்கிய பிறகு ராஜாத்தியின் வீட்டினுள் பளிச்சென்று வெளிச்சம் பரவியது. அதைத் தொடர்ந்து யாரோ நடந்து வரும் காலடியோசை கேட்டது. ஆனால் அந்தக் காலடியோசை கதவின் பக்கமாக வந்ததும் நின்று விட்டது.

ராஜாத்தி மற்றவர்களின் துணையின்றி தன்னந்தனியாக வாழ்க்கை நடத்தக் கூடியவள் என்று ராஜாவுக்குத் தெரியும். எனவே வரக்கூடியவள் ராஜாத்தியாகத் தான் இருக்கக்கூடும் என்று உறுதியாக நம்பினான்.
கொலையுண்ட சேதுபதியின் ஆசைக் காதலி என்று ராஜாத்தி கருதப்படுகிறவள் அல்லவா? ஆடம்பரமான முறையில் பணத்தைச் செலவு செய்யக் கூடியவள் என்றும் அவள் மீது குற்றச்சாட்டு இருக்கிறது.
“யாரது?” என்று கேட்டது இனிமையான ஒரு பெண்மணியின் குரல். அந்தக் குரலில் தேன் சுவை கலந்திருக்க வேண்டும்.
தன்னுடைய பெயரைச் சொன்னால் கதவைத் திறக்காமல் போய் விடுவாளோ என்று எண்ணிய ராஜா, “போலீஸ்” என்று ஒரு பொய்யைச் சொன்னான்.
உடனே கதவு ‘படார்’ என்று திறந்து கொண்டது. அதைத் தொடர்ந்து வெளிப் புறத்திலுள்ள ‘டோம்ப்’ விளக்கும் எரிந்தது.
சிவப்பு நிற பார்டர் போட்ட வெண்மையான புடவை உடுத்தியிருந்த ராஜாத்தி, தன் வாசல் கதவை திறந்தபடியே காட்சியளித்தாள். கூந்தல் கலைந்து தோள்ப்பட்டையின் இரு புறத்திலும் அழகாகப் பரவிக் கிடந்தது.
வெண்மையான புடவையையும், மெல்லிய தங்கச் சங்கிலி காது வளையங்கள் ஆகியவற்றையும் தவிர வேறு எதுவுமே அவள் உடம்பில் இல்லை. ஜாக்கட் கூட காற்றோட்டத்துக்காக அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது.
அவளுடைய தோற்றத்தைக் கண்களால் அளந்த ராஜா, ஒரு வளையத்தில் தொங்கிக் கொண்டு இருந்த பூட்டையும் தற்செயலாகப் பார்த்தான். அந்தப் பூட்டின் நடுவே ஐந்து என்ற எண் பொறிக்கப்பட்டு இருந்தது.
சேதுபதியின் சட்டைப்பையில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட சாவியிலும் ஐந்து எண்! பூட்டிலும் ஐந்து எண்!
அந்தச் சாவி இந்தப் பூட்டுக்குரியது தான் என்று எண்ணிய ராஜா, “நான் உள்ளே வருவதைப்பற்றி உனக்கொன்றும் ஆட்சேபனை இல்லையே?” என்று கண்களால் சிரித்துக் கொண்டே கேட்டான்.
வீட்டினுள் ஆண் தடியன் எவனாவது இருப்பானா? கட்டழகி ஒற்றைப் புடவையிலேயே காட்சி அளிக்கிறாளே! அவளுக்கும் ரகசியமான முறையில் திருமணமாகி விட்டதோ, என்னவோ?
“நீங்கள் போலீஸ் என்று சொன்னீர்களே!”
ராஜாத்தி, அவனை உள்ளே அனுமதிக்க விரும்பாததைப் போல ரோஜாப்பூ நிற முகத்தைச் சுழித்துக் கொண்டே சொன்னாள்.
“போலீஸ் இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வரப் போகிறார்கள். அதற்கு முன்னால் உன்னிடம் கலந்து பேசி எச்சரிக்கை செய்ய வேண்டி இருக்கிறது!” என்றான் ராஜு.
உடனே ராஜாத்தி சுவரின் மீது வைத்திருந்த கையை எடுத்தாள்.
காலை முன்னால் தூக்கி வைத்த ராஜு, சற்று சந்தேகத்துடன் ‘வீட்டினுள் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லையே!” என்று கேட்டான்.
“இல்லை” என்று சொல்லுவதைப்போல் தலையை அசைத்த ராஜாத்தி, அவன் உள்ளே வந்ததும் கதவைச் சாத்தி உட்புறமாகத் தாளிட்டுக் கொண்டாள்.
அப்பொழுது இரண்டு பேர்களுடைய தேகமும் உராய்ந்ததா?
உராய்ந்ததைப் போல் தான் ராஜாவுக்கு நினைவு! இப்படி தானும் ராஜாத்தியும் ஒரே வீட்டினுள் அடைபட்டு இருக்கும் காட்சியைத் தன் காதலி பானு பார்த்தால் வேறு ஆபத்தே வேண்டியதில்லை.
“நாம் படுக்கையறையில் உட்கார்ந்தே பேசலாம். அங்கே தான் இயற்கையான குளுமை இருக்கும்” என்று சொன்ன ராஜாத்தி அவனை அழைத்துச் சென்று படுக்கையறை கட்டிலின் மீது உட்கார வைத்து அருகிலேயே கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் அமர்ந்து கொண்டாள்.
“பேன் போடட்டுமா?”
“வேண்டாம்! ஜன்னல் திறந்து கிடப்பதால் காற்று தாராளமாக வந்து கொண்டு இருக்கிறது” என்று சொன்ன ராஜா, அந்த வீட்டினுள் முதன்முறையாக விஜயம் செய்திருப்பதால் எல்லாவற்றையும் கூர்மையாக ஆராய்ந்தான்.
இரண்டுபேர் வசதியாகப் படுத்து உறங்குவதற்குத் தேவையான பெரிய கட்டில் அது! ஸ்பிரிங் மெத்தை பரப்பி வெண்மையான உறை போடப்பட்டு இருந்தது. நாலைந்து இலவம் பஞ்சு தலையணைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கிடந்தன.
எல்லா தலையணைகளும் கசக்கிப் பிழிந்து எடுக்கப்பட்டதைப் போல் வளைந்தும் நெளிந்தும் கிடந்தன. கட்டில் மெத்தைக்கும் அதே கதிதான்!
பாவம் ராஜாத்தி! தூக்கம் வாரமல் படாதபாடு பட்டிருக்கிறாளோ? அல்லது…?
அவளுக்காக அனுதாபப்படுவதைப்போல் பார்த்த ராஜா, பச்சை வர்ணம் பூசப்பட்ட சுவர்களையும் அவற்றின் நடுவே இருந்த மின் விளக்குகளையும் கவனித்தான்.
எல்லாமே நாகரீக வேலைப்பாட்டுடன் கூடிய விலை உயர்ந்த பொருட்கள்.
படுக்கை அறையை மிகவும் கவர்ச்சிகரமாக வைத்திருக்கும் ராஜாத்தியின் சோர்ந்து போன முகத்தை ராஜா, “படுக்கையறை பிரமாதமாக இருக்கிறது. தனிமை உன்னை மிகவும் துன்புறுத்தி இருக்கும்!” என்று சிரித்தான்.
ராஜாத்தி அவன் சொன்னதைக் கேட்டு எதுவும் பேசவில்லை. ஆனால் நெஞ்சு விம்மி வெடித்து விடுவதைப்போல் ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.
அந்த ஏக்கப் பெருமூச்சின் வேகம் எத்தகையது என்பது அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்!
“அதிருக்கட்டும். போலீஸ் இங்கே இன்னும் சிறிது நேரத்தில் வரப்போவதாகச் சொன்னீர்களே, அது என்ன?” என்று எதையோ நினைத்துக் கலங்கியவளாய்க் கேட்டாள் ராஜாத்தி.
“உன்னிடம் சிறிது நேரம் நான் மனம் விட்டுப் பேச வேண்டும்” என்றான் .
“பேசுவதற்கு இந்த நேரம் தான் கிடைத்ததா? பகலில் நேரமே உங்களுக்கு இல்லையா? என்று ராஜாத்தி வெடுக்கெனச் சொல்லிவிட்டு விசித்திரமான ஒரு பிராணியைப் பார்ப்பது போல் மேலும் கீழுமாக ஆராய்ந்தபடி. “நள்ளிரவில் வந்து கலாட்டா செய்யும் நீங்கள் யார்? எதற்காக என்னை தூங்கவிடாமல் தொந்தரவு செய்கிறீர்கள்?” என்று அதிகாரத் தோரணையில் ஆனால் கொஞ்சுவதைப்போல் கேட்டாள்.
“நான் வந்திருப்பது உனக்குத் தொந்தரவாக இப்பொழுது தெரியலாம். ஆனால் பிறகு இனிக்கும்!” என்று பீடிகை போட்டுச் சொன்ன ராஜா, ‘நான் சேதுபதியின் நண்பன்!” என்று கூறினான்.
“நீங்கள் போலீஸ் என்று சொன்னதற்கும் சேதுபதிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா?”
“சம்பந்தம் இல்லாமல் இருக்குமா என்ன? சேதுபதி எப்படிப்பட்ட லீலா வினோதங்களை எல்லாம் செய்வான் என்பது உனக்குத் தெரிந்திருக்குமே?”
“அவர் லீலா வினோதம் புரிய நேர்ந்தால் அதற்கு ஒரு போதுமே அவர் குற்றவாளியாக இருக்க முடியாது. மனைவி என்று சொல்லிக் கொண்டு ஒரு பிரமாண்ட ராட்சசி வந்திருக்கிறாளே; அவள் தான் எல்லாவற்றிற்கும் காரணம்! நித்திய கலா என்ற அழகான பெயரை வைத்திருக்கும் அவள் எல்லோரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கிறாள். அவளால் சேதுபதி செல்லாக் காசாகி விட்டார்!”
“பெண்கள் ஒருவரையொருவர் குறை சொல்லுவது இயல்பு தான்.”
“மற்ற பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும் சார். அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அப்படியல்ல. நான் எந்தப் பெண் மீதும் அபாண்டமான பழிசுமத்த மாட்டேன்!” என்று சொன்ன ராஜாத்தி, “நீங்கள் சேதுபதியைப் பற்றிப் பேசப்போகும் விஷயம் எனக்கு அதிர்ச்சியைத் தராதே? ஏற்கனவே நான் இரவு முழுவதும் தூங்காமலேயே தத்தளித்துக் கொண்டு இருக்கிறேன்!” என்று விம்மினாள்.
சேதுபதி கொலையுண்டு செத்து விட்டான் என்ற துயரச் செய்தியை எப்படிச் சொல்லுவது? அந்தச் செய்தியை ராஜாத்தியால் தாங்கிக் கொள்ள முடியுமோ, முடியாதோ!
சில ஆண்களின் மீது சொந்த மனைவிகளை விடவும், ஆசை நாயகிகள் எல்லை மீறிய அன்பு வைத்து இருப்பார்கள். அத்த ரகத்தைச் சார்ந்தவள் தானா ராஜாத்தி…?
“இன்றிரவு சேதுபதி வெளியே போகும்போது கலவரம் எதுவும் இல்லாமல் இருந்தானா? அல்லது தொந்தரவில் சிக்கி இருப்பவனைப் போல் நிலை தடுமாறி தத்தளித்துக் கொண்டு இருந்தானா?” என்று ராஜா கேட்டான்.
ராஜாத்தி தன்னுடைய நாடியை இரண்டு கைகளுக்குள் வந்தபடி முழங்கைகளைத் துடைகளில் ஊன்றியபடி சிறிது நேரம் சிந்தித்து விட்டு, “அவர் என்னிடம் நன்றாகவே பேசவில்லை. எதையோ இழந்து விட்டவரைப்போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தார். நான் அவருக்கு எவ்வளவோ புத்தி மதிகள் சொன்னேன். பணத்துக்காக ஆசைப்பட்டு செய்யக்கூடாத காரியத்தைச் செய்யவே கூடாது என்று அவருடைய இரண்டு கால்களையும் பிடித்துக் கொண்டு கெஞ்சினேன். அழுதேன்-புலம்பினேன். ஆனால் பிடிவாதக்காரரான அவர் எதையுமே காதுகளில் போட்டுக் கொள்ளவில்லை. நினைத்ததைச் செய்து விட வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடனேயே இருந்தார்!” என்று விம்மினாள்.
“நீ சொன்னால் அவன் கேட்பான் அல்லவா?”
“இந்தப் படுக்கையில் இருப்பது வரையில் அவர் என்னுடைய அடிமை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் வெளியே போய்விட்டாலோ………முற்றிலும் மாறி விடுவார்!” என்று சொன்ன ராஜாத்தி. “நீங்கள் சேதுபதியின் நண்பன் என்று தான் சொன்னீர்களே தவிர பெயரைச் சொல்லவில்லையே! ஆனால் உங்கள் பெயர் ராஜா இல்லையா? பிரபல துப்பறியும் கதை எழுத்தாளர்! இன்று மாலையில் உங்களை அவர் சந்தித்துப் பேசி இருப்பாரே! உங்களிடம் மனம் விட்டுப்பேசி உதவி நாடப் போவதாகச் சொன்னார்” என்று கூறினாள்.
“உண்மை தான்! என்னிடம் சேதுபதி வந்து போனான்” என்றான் ராஜா.
உடனே ராஜாத்தியின் சிவந்த அதரங்கள் சற்றுக் கோபத்தின் காரணமாக நெளிந்தன.
“நீங்கள் மற்றவர்களுக்கு எல்லாம் வழிகாட்டும் சிறந்த ஆசான்! அப்படி இருக்கும்போது அவருடைய உதவாக்கரைத் திட்டத்துக்கு ஏன் ஊக்கம் கொடுத்தீர்கள்? இந்தக் காரியத்தைச் செய்யக் கூடாது என்று கண்டித்து இருக்கலாமே! உங்களை மீறி அவர் ‘பிளாக்மெயில்’ வேலை (மிரட்டிப் பணம் பறிக்கிற வேலை) பண்ணப் போவதாகச் சொன்னால் போலீஸில் பிடித்துக் கொடுத்து விடப்போவதாக நீங்கள் சொல்லித் தடுத்து இருக்கலாமே? அவருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டிவரும்!”
ராஜாத்தி கோபத்துடன் சீறவே ராஜா குறுக்கிட்டு, “என்னை ஏன் குற்றம் சாட்டுகிறாய்? சேதுபதி என்னிடம் தான் வந்தான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?” என்று கேட்டான்.
“ஆதாரம் இருந்தாலும், இருக்காவிட்டாலும் நான் சொல்லுவதை உங்களால் மறுக்க முடியாது. அவர் உங்களைப் பார்ப்பதற்காகத் தான் வந்தார். நீங்கள் உங்கள் எதிரிகளைக் கூடக் காட்டிக் கொடுக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கை இருந்ததால் மற்ற எல்லோரையும் விட உங்களைத்தான் மலைபோல நம்பி இருந்தார்.”
“அதிருக்கட்டும்! சேதுபதி என்னை வந்து சந்திக்கப் போவதாக உன்னிடம் சொன்னானா?”
“சொன்னார்! அது மட்டுமல்ல; என் வீட்டிலிருந்தே அவர் ஒருவருக்கு டெலிபோன் செய்ததையும் கவனித்தேன். உங்களைத்தான் பார்க்க வந்தார் என்பதற்கு டெலிபோன் செய்த ஆதாரம் ஒன்றே எனக்குப் போதும்.”
புறப்படுவதற்கு முன்னால் யாருக்கு சேதுபதி டெலிபோன் செய்தான் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ராஜாவுக்கு எழுந்தது.
“அவன் யாருக்கு டெலிபோன் செய்தான்?”
“அந்த ஆசாமி யார் என்பது எனக்குத் தெரியாது. நான் பெயரைக் கேட்ட போதிலும் அவர் சொல்லவில்லை. டெலிபோனில் பேசும்போது ஒருமுறை கூட பெயரைச் சொல்லாமல் இருந்தது மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஆனால் டெலிபோனில் பேசிய விஷயம் மட்டும் உங்களிடம் எதைப் பேச முடிவு செய்திருந்தாரோ; அதே தான்.”
“ஒருவேளை அவன் தன் மனைவி நித்திய கலாவுடன் பேசியிருப்பானா?”
“நிச்சயமாக அது பெண்ணுடன் அல்ல என்று மட்டும் என்னால் உறுதிகூற முடியும்.”
யாருடன் சேதுபதி டெலிபோனில் பேசியிருப்பான் என்ற ஆராய்ச்சியில் மூழ்கிய ராஜா, “ராஜாத்தி! நீ தைரியமாக இருக்க வேண்டிய நெருக்கடி நிலைமை ஏற்பட்டு இருக்கிறது” என்று ஆரம்பித்தான்.
“என்ன….என்ன…? அவர் ‘பிளாக் மெயில்’ பண்ணி பணம் பறிக்க முயற்சி செய்தார் என்ற குற்றத்திற்காக போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் தள்ளி விட்டார்களா?” என்று ராஜாத்தி பதறினாள்.
தன் ஆசைக் கணவன் சேதுபதிக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டதும், ராஜாத்தியின் கண்கள் கண்ணீரை வாரி இறைத்தன விம்மினாள்.
“சிறையில் தள்ளி இருந்தாலும் பரவாயில்லை… ஆனால்…?”
சேதுபதி கொலை செய்யப்பட்டான் என்ற துயரச் செய்தியைச் சொல்ல ராஜாவால் இயலவில்லை, இளமை முறுக்குடன் விளங்கும் ராஜாத்தி அவனை நினைத்து என்னென்ன பருவக் கனவுகள் கண்டு கொண்டு இருக்கிறாளோ…!
“ஆனால் என்ன…..சொல்லுங்கள் சார். உங்கள் முகத்தைப் பார்ப்பதற்கே எனக்குப் பயமாக இருக்கிறது. உங்கள் வாயிலிருந்து வரப்போகும் செய்தி நல்லதாக இருக்கட்டும். நீங்கள் பார்ப்பதைக் கவனித்தால் என் நெஞ்சு வெடித்து விடும் போல் இருக்கிறது”
அழுகைக்குரல் வீரிட்டுக் கொண்டு வந்து விடக் கூடாது என்பதற்காக ராஜாத்தி கைக்குட்டையினால் வாயைப் பொத்திக் கொண்டாள். ஆனால் கண்ணீர் மட்டும் கண்களில் இருந்து தாரை தாரையாகப் பாய்ந்து கொண்டே இருந்தது.
சேதுபதி-செத்துவிட்டான் என்ற செய்தியைச் சொல்லுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதை உணர்ந்த ராஜா, “நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறேன், ராஜாத்தி. ஆனால் முடியவில்லை! அவன்…” என்று நிறுத்தினான்.
“அவருக்கென்ன…?”
“கடவுள் அவனை எடுத்துக் கொண்டார்.”
ராஜா மெல்லிய குரலில் இப்படிச் சொன்னதும், ராஜாத்தி சட்டெனத் துள்ளி எழுந்து, “அய்யோ துரையே! என்னை விட்டுப் போய் விட்டாயா? என்னைத் தனியாக விடுவதற்கு உனக்கு எப்படி மனம் வந்தது?” என்று தலை மயிரை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு கூவிவிட்டு ‘தடாலென்று’ தரையில் விழப்போனாள். அப்போது அவளை இடுப்போடு சேர்த்து ராஜா தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவளுடைய முழு உடம்பின் பாரத்தையும் ராஜாவின் விரிந்த நெஞ்சு தாங்கியது.
இந்தக் காட்சியைத் தன் காதலி பானு பார்த்திருக்க வேண்டும்! உடனே மற்றொரு மகாபாரத யுத்தம் ஆரம்பமாகி விடும்.
ராஜாத்தியை ராஜா அலாக்காகத் தாங்கி வந்து கட்டிலின் மீது படுக்க வைத்து மின்சார விசிறியைச் சுழலவிட்டான்.
காற்றினால் நெற்கதிர் அசைவதைப்போல் ராஜாத்தி குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டே இருந்தாள். நன்றாக அழுது தீர்க்கட்டும் என்று நினைத்து ராஜாவும் சிறிது நேரம் வரையில் சலனமடையும் அவளுடைய முதுகுப்புறத்தையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவள் ஒற்றை முந்தானையுடன் மட்டும் இருந்தது, அவனுக்கு என்னவோ போலிருந்தது. குலுங்கிக் குலுங்கி அழுது கொண்டு இருக்கும்போது முந்தானையை அவளால் கட்டுப்படுத்த முடியுமா என்ன? இம்மாதிரியான சூழ்நிலைகளில் அழுவதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும்!
“ராஜாத்தி! அழாதே! மனத்தைத் தேற்றிக் கொண்டு அடுத்து நடக்க வேண்டியவற்றைப் பற்றிச் சிந்திப்போம். நாம் உடனடியாகச் செய்து முடிக்க வேண்டிய வேலை எவ்வளவோ இருக்கின்றன!”
ராஜா இப்படிச் சொன்ன பிறகும் ராஜாத்தி முகத்தை தலையணைக்குள் புதைத்தவாறு சிறிது நேரம் வரையில் குலுங்கிக் குலுங்கி அழுதாள். பிறகு திடீரென்று இரண்டு கைகளையும் எடுத்து கண்களைக் கசக்கித் துடைத்துக் கொண்டே உட்கார்ந்தாள். அவள் நடந்து கொண்ட விதத்தில் ஒருவித உறுதிப்பாடு தொனித்தது.
“நான் எதற்காக அழுது கொண்டே இருக்க வேண்டும்? சேதுபதி நியாயத்துக்குப் புறம்பான வழிகளில் நடந்தார். அதற்கேற்ற தண்டனையை அடைந்தார்!” என்று சொல்லிவிட்டு விம்மலையும் விசும்பலையும் அடக்கிக் கொண்ட ராஜாத்தி, தன்னுடைய மெல்லிய முந்தானையைக் கவனித்து விட்டு குற்றம் செய்தவளைப் போல் விழித்தாள்.
இளம் பெண் ஒருத்தி வெறும் புடவையுடன்- அதுவும் மெல்லிய ரகத்தைச் சார்ந்த முந்தானையுடன் ஓர் ஆண் பிள்ளையின் எதிரில் காட்சியளிக்க விரும்ப மாட்டாளே! வெட்கமும் கூச்சமும் வந்து அவளை பிடுங்கித் தின்று விடுமே!
“நான் பக்கத்து அறைக்குப் போய் உடைமாற்றிக் கொண்டு வருகிறேன். இந்த உடையுடன் இருப்பது என்னவோ போல் இருக்கிறது.” என்று ராஜாத்தி சொல்லி விட்டுப் புடவையின் மேல் நுனியை இழுத்து எடுத்து கழுத்தோடு சேர்த்துச் சுற்றிக் கொண்டு குலுங்கிக் குலுங்கி நடந்து சென்றாள்.
சதைப் பிடிப்பான அவள் நடந்து சென்ற காட்சி ராஜாவின் கண்களை உறுத்தியது. பானு-ராஜாத்தி ஆகிய இருவர்களில் யாருக்குச் சிறப்பான உடற்கட்டு…?
அந்த ஆராய்ச்சியில் ராஜா மூழ்கிக் கொண்டே ராஜாத்தி நுழைந்த அறையைப் பார்த்தான். மனக்குதிரை நாற்கால் பாய்ச்சலில் துள்ளி நின்று எழுந்து போ என்று உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் ராஜு முதன் முறையாக அந்த முரட்டுத்தனமான உத்தரவுக்குக் கீழ்ப்படியவில்லை.
உடைமாற்றப்போன ராஜாத்தி அந்த உடுப்பு அறையின் கதவை பாதி திறந்தபடியே வைத்து விட்டு தன்னை ஒரு குழந்தையாக நினைத்துக் கொண்டு உடை மாற்றிக் கொண்டு இருந்தாள். கதவைத் திறந்து வைத்து இருக்கிறோமே! பக்கத்து அறையினுள்- அதுவும் படுக்கை அறையினுள் ஒரு ஆண் பிள்ளை இருக்கிறானே என்ற அச்சமோ கூச்சமோ கொஞ்சம் கூட அவளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.
ராஜாத்தி நிலைக் கண்ணாடியின் முன்னால் நின்று கொண்டு வாசனைப் பவுடரை எடுத்து முகத்திலும் தோள்பட்டையிலும் மெதுவாகத் தடவினாள். பின்பு கைகளைத் தூக்கி தூவினாள். தேகமெங்கும் பவுடர் படர்ந்தது.
இந்தக் காட்சியைப் பார்க்கிறோமே என்று தன்னைத் தானே நொந்து கொண்ட ராஜா, முகத்தை வேறு பக்கமாகத் திருப்பிக் கொண்டான். ஒரு இளம் பெண் தவறு செய்தாள் என்றால் அதேத் தவறை தானும் செய்ய வேண்டுமா என்ன?
ராஜாத்தி சிறிது நேரம் கழித்து முக்கோணமாக பின்புறத்தில் வெட்டப்பட்ட ஜாக்கட்டும், ‘ரோஸ்’ நிற ‘நைலக்ஸ்’ புடவையும் உடுத்திக் கொண்டு குதிரைவால் கொண்டை சகிதமாக வந்து அவன் பக்கத்திலேயே உட்கார்ந்தாள்.
ஸ்பிரிங் கட்டில் கிரீச்சிட்டது.
ராஜாத்தி தன் பக்கத்தில் வந்து உட்கார்ந்த பிறகும், எதனால் அவள் உடைமாற்றும் அறையில் அலங்கோலமாக நடந்து கொண்டாள் என்ற சிந்தனையிலேயே ராஜா ஈடுபட்டு இருந்தான்.
வேண்டுமென்றே அவள் அப்படி நடித்தாளா? ஆசை நாயகன் சேதுபதி செத்துவிட்டதால் அடுத்தபடியாக இன்னொருவனைப் பிடித்துக் கொள்ள அந்தக் கவர்ச்சி வித்தையைக் காட்டினாளா? அல்லது தன் மனோ வலிமை எத்தகையது என்பதைத் தெரிந்து கொள்ள நினைத்தாளா?
ராஜாத்தி ஒரு புதிராக விளங்கினாளே தவிர, அவளைப் பற்றி எதையுமே ராஜாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நடத்தை கெட்டவளாக இருப்பாள் என்பதை மட்டும் திட்டவட்டமாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
“ஏன் என் முகத்தை அப்படிப் பார்க்கிறீர்கள்? வெறும் ‘ரோஸ்’ பவுடரைத்தான் பூசியிருக்கிறேன்” என்று சொல்லிவிட்டு எந்தவிதக் கவலையும் இல்லாதவளைப் போல் முறுவலித்த ராஜாத்தி, “சூடாக காப்பி சாப்பிடுகிறீர்களா? பிளாஸ்க்கில் ஊற்றி வைத்து இருக்கிறேன்” என்று கேட்டாள்.
அந்தக் குளிர்ந்த நேரத்தில் காப்பியின் சூடு தேவைப்படவே ராஜா தலையை அசைத்தான்.
சில வினாடிகளில் ராஜாத்தி பிளாஸ்கை எடுத்து வந்து அதன் மூடியிலேயே ஆவி பறக்கும் காப்பியை ஊற்றிக் கொடுத்தாள்.
காப்பி கொஞ்சம் கொஞ்சமாக ராஜாவின் வயிற்றினுள் சென்றது.
பின்னர் மூடியைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளாமலேயே காப்பியை ஊற்றி ராஜாத்தியும் குடித்தாள்.
அதைக் கவனித்த ராஜா, தன் எச்சிலை அவள் ஏன் பொருட்படுத்தவில்லை என்று எண்ணினான். அவள் வேண்டும் என்றே இப்படிச் செய்தாளா அல்லது மனத்தில் எந்தவித அழுக்கும் இல்லாமல் செய்தாளா என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை, அந்த வித்தாரக் கள்ளியின் நெஞ்சத்தில் என்னென்ன எண்ணங்கள் தூங்கிக் கொண்டு இருக்கின்றனவோ?
எதையோ நினைத்துக் கொண்டதைப்போல் மென்மையான உடம்பை ஒரு குலுக்குக் குலுக்கிக் கொண்டே ராஜாத்தி “ம்…ம்…சேதுபதியை அவருடைய அடங்காப்பிடாரி மனைவியான நித்தியகலா தான் கொன்றுவிட்டாளா?” என்று கேட்டாள், அவளுடைய முகத்தில் எத்தனையோ விதமான சலனங்கள் மின்னி மறைந்தன.
“எதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அப்படி நினைத்தாய்? நித்தியகலா தன் கணவனையே கொலை செய்யும் அளவுக்கு துணிச்சல் நிறைந்தவளா?”
“ஒரு பெண் நினைத்தால் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் கொலை செய்ய முடியும்: ஆக்குவதும், அழிப்பதும் பெண் தான் என்பது உங்களுக்குத் தெரியாதா ராஜா?”
“எல்லாப் பெண்களையும் இந்த ரகத்தில் சேர்த்துவிட வேண்டாம் ராஜாத்தி! உன்னையும் நித்தியகலாவையும் பற்றி மட்டும் பேசுவோம். நித்தியகலா தன் கணவனைக் கொலை செய்திருப்பாள் என்று நினைக்கிறாயா?”
“நினைத்தால் அதில் தவறு இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அவளுக்கு சேதுபதியின் முகத்தைக் கண்டாலேயே பிடிக்காது. அவர் வாட்ட சாட்டமாக இல்லை என்று ஒரு குறையாகவும் இருக்கலாம். பசுமையாக இருக்கும் நுனிப்புல்லை மட்டும் மேயும் கொழுத்த பசுவைப் போன்றவள் தான் அந்த நித்தியகலா!”
“நீ நித்தியகலாவின் மீது கோபித்துக் கொள்வது ஒருபுறம் திருக்கட்டும், அவள் தன் கணவனைக் கொலை செய்திருப்பாள் என்று சொன்னாயே; அது எப்படி?”
“கணவனைக் கண்டாலேயே அவளுக்குப் பிடிக்காது என்பது உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் அவர் மீது எப்பொழுதுமே அவள் எரிந்து விழுவாள். ஒருவேளைச் சோறு கூட வாய்க்கு ருசியாகப் போடமாட்டாள். ஆனால் அவளுடைய கள்ளக் காதலனுக்கு மட்டும் என்னவெல்லாமோ கொடுப்பாள்! உபசரிப்பாள்! சேதுபதிக்கும் அவளுக்கும் உள்ள முதல் இரவு கூட அந்த கள்ளக் காதலனுக்குத்தான் சொந்தமாக இருந்ததாம்.”
கள்ளக்காதலன் யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ராஜாவுக்கு அதிகரித்தது.
“அவனுடைய பெயர் என்ன?”
“பெயர் எனக்குத் தெரியாது! கள்ளக்காதலன் ஒருவனோடு நித்தியகலா ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறாள் என்பது மட்டும் தான் தெரியும்.”
“கள்ளக்காதலனோடு இன்பகரமாக வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதற்காக சதாவும் இடைஞ்சலாக இருந்த கணவனை அவளே கொலை செய்திருப்பாள் என்று நினைக்கிறாயா?”
“அவள் கொலை செய்திருக்கலாம் அல்லது அவர் கொலை செய்யப்படுததற்கு அவள் முக்கிய காரணமாக இருக்கலாம் நித்திய கலாவின் தூண்டுதல் பேரில் தான் சேதுபதி படுகொலை செய்யப்பட்டு இருக்கக்கூடும்!”
“தன் மனைவியால் தான் சேதுபதி செத்தான் என்று சொல்.”
“ஆமாம்! அவரை நித்தியகலா வாழ விடவில்லை. அவர் உயிருடன் இருக்கும்போது சதாவும் பணம் பணம் என்று பிடுங்கிக் கொண்டே இருந்தாள் மனைவியை விவாகரத்து செய்து கொண்டு ஒதுங்கிக் கொள்ளக்கூட சேதுபதி நினைத்தார். ஆனால் அவள் அதற்கு அனுமதிக்கவில்லை. விவாகரத்து செய்து கொள்வதாக இருந்தால் அதற்கு நஷ்ட ஈடாக பெருந்தொகை கேட்டாள். பொல்லாத எமகாதகி அவள்!- பணப் பிசாசு! கடைசியில் அவரையே உறுஞ்சி விட்டாள். அவளுடைய சந்தோஷம் தான் கடைசியில் நிலைத்து விட்டது!” என்று ராஜாத்தி குமுறினாள்.
அவளுடைய உணர்ச்சி மிகுந்த வார்த்தைகளை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டு இருந்த ராஜா. “சேதுபதியின் கொலைக்கு யார் காரணமாக இருந்தாலும் விடப்போவது இல்லை. நானே போலீஸில் பிடித்துக் கொடுத்து விடுவேன்” என்று சொன்னவன், “அவன் கடைசியாக எப்பொழுது இங்கே வந்ததாகச் சொன்னாய்?” என்று கேட்டான்.
“இன்று முன்னிரவில் அவர் நன்றாகக் குடித்து விட்டு வந்தார்! குடிபோதையால் நடக்கும் போதே அவருடைய உடல் தள்ளாடியது. மனைவி செய்த கொடுமையை மறக்க வேண்டும் என்றால் குடிப்பதைத் தவிர வேறு என்ன வழி தான் இருக்கிறது அவருக்கு?”
“அதிருக்கட்டும்! இன்று முன்னிரவில் சேதுபதி வந்ததும் உன்னிடம் என்ன சொன்னான்?”
“மாலையில் உங்களை வந்து சந்தித்ததாகவும், நீங்கள் அவருக்கு உதவி செய்ய வாக்களித்ததாகவும் கூறினார். அவர் செய்யவிருக்கும் காரியத்தின் மூலம் ஏராளமாகப் பணம் கிடைக்குமாம். அந்தப் பணத்தை நித்தியகலாவின் முகத்தில் வீசி எறிந்து சட்டப்படி விவகாகரத்து செய்து விடுவாராம்! ஆனால் விவாகரத்து செய்து மனைவியை ஒதுக்கித் தள்ளுவது என்பது ஓரளவு திருப்தியளித்த போதிலும், பணம் சம்பாதிப்பதற்கென்று அவர் தேர்ந்தெடுத்த பயங்கர முறை எனக்கு அதிகக் கவலை தந்தது. அதனால் நான் அவருடைய கால்களைப் பிடித்துக் கொண்டு அந்தப் பணம் வேண்டவே வேண்டாம் என்று கெஞ்சினேன். பிறரை மிரட்டிப் பணம் பறிக்க நினைப்பது ஆபத்து என்பதோடு பெருங்குற்றமும் ஆகும் என்று வாதாடினேன். ஆனால் அவர் பணத்தை எப்படியாவது சம்பாதித்து பேய் போல் வந்திருக்கும் மனைவியை ஒழித்துக்கட்டுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டார். மனைவி என்ற சனியனுடன் எவ்வளவு காலத்திற்குத்தான் அழுந்திச் செய்துக் கொண்டே இருக்க முடியும்?”
“இங்கேயிருந்து சேதுபதி டெலிபோன் செய்தான் அல்லவா? அப்பொழுது மணி என்ன இருக்கும்?”
“இரவு பத்து மணி அடித்ததாக எனக்கு ஞாபகம் இருக்கிறது.”
“யாருக்கு டெலிபோன் செய்தான்?”
“பெயரைச் சொல்லாமலேயே அவர் பேசினார் என்று சொன்னேன் அல்லவா? ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் கிரகித்துத் தெரிந்து கொண்டேன். அவர் யாருடன் பேச நினைத்தாரோ அந்த ஆசாமியுடன் பேசவில்லை. ஒருவேளை அந்த ஆசாமி வீட்டில் இல்லாமல் இருந்து இருக்கலாம். ஆனால் யாருடனோ பேசினார்!”
ராஜாவுக்கு எதுவுமே புரியவில்லை.
“என்ன நடந்தது?” என்று ராஜா கேட்டான்.
“டெலிபோனில் அந்த மர்ம மனிதனோடு சேதுபதி பேசினார். நீங்கள் அவருக்கு உதவி செய்ய வாக்களித்து இருப்பதாகச் சொன்னார். அது மட்டுமல்ல, இன்னும் அரைமணி நேரத்தில் அவர் எதிர்பார்க்கும் ஆசாமியிடம் இருந்து பெருந்தொகை ஒன்று கைக்கு வந்து சேராவிட்டால், சேகரித்து வைத்து இருக்கும் பயங்கரச் செய்தியை பத்திரிகைக்குக் கொடுத்து விடப் போவதாகவும் சொன்னார், அவர் எதிர்பார்க்கும் பத்திரிகை அந்தச் செய்தியைப் பிரசுரிக்க மறுத்தால் நாதமுனி வேலை செய்யும் ‘தமிழ்நேசன்’ பத்திரிகைக்கு உங்கள் மூலமாகவே கொடுக்கப் போவதாகவும் கூறினார். அந்தப் பெரிய மனிதனின் பயங்கர இரகசியம் பற்றிய ஆதாரக் காகிதங்களை எல்லாம் அவர் உங்களிடம் கொடுத்து வைத்து இருப்பதாகவும், ஆகவே தன் உயிருக்கு ஆபத்து நேர்ந்தால், அந்தச் செய்தி உங்களிடம் இருந்து நேரே தமிழ்நேசன் பத்திரிகைக்குப் போய் நாளைக் காலையிலே பிரசுரமாகி விடும் என்றும், அதனால் தன்னைக் கொல்லவோ, பணம் கொடுக்காமல் ஏமாற்றவோ, முடியாது என்றும் எச்சரித்தார். தனக்குப் பதில் சொல்ல அரைமணி நேரம் அவகாசம் கொடுத்து தன்னுடைய வீட்டு டெலிபோன் நம்பரையும் கொடுத்து அரைமணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கும்படி கூறினார். தவறினால் விபரீதமான விளைவுகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார்.” என்றாள் ராஜாத்தி.
“தன் வீட்டு டெலிபோன் நம்பரைக் கொடுத்து இருக்கிறானா? சேதுபதி இவ்விதம் செய்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறதே!”
“ஆச்சரியப்படுவதற்கு என்ன சார் இருக்கிறது? நித்தியகலா இருக்கும் வீடும் அவருடையது தானே!”
“அந்த நம்பர் பத்திரமாக இருக்கட்டும். தேவைப்படும் பொழுது வாங்கிக் கொள்கிறேன்” என்று சொன்ன ராஜா, கொலை சம்பந்தமான துப்பு துலங்குவதைப் போன்ற உற்சாகத்துடன், “சேதுபதி உன்னிடம் பேசிய பிறகு அவனுடைய வீட்டுக்குத்தான் போயிருப்பான் என்று நினைக்கிறாயா?” என்று கேட்டான்.
“வீட்டுக்குப் போகப் போவதாகத் தான் அவர் என்னிடம் சொன்னார். அரைமணி நேரத்தில் வீட்டில் இல்லாமல் இருந்தால் டெலிபோனில் வரப்போகும் செய்தியை அவரால் கேட்க முடியுமா? அரை மணி நேரம் தானே அவர் அவகாசம் கொடுத்து இருக்கிறார்.”
ராஜா அவள் சொன்ன அரைமணி நேர ‘கெடுவை’ப் பற்றிச் சிந்திக்கலானான். ஏதோ ஒரு பயங்கரமான திட்டம் திரைமறைவில் நடைபெற்று இருக்கிறது என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
சேதுபதி அரைமணி நேரத்திற்குள் தன்னுடைய வீட்டுக்குப் போய் டெலிபோன் செய்திக்காகக் காத்துக் கொண்டு இருக்கப் போவதாக ராஜாத்தியிடம் சொல்லி இருக்கிறான். பத்து மணிக்கு மேல் ராஜாத்தியின் வீட்டிலும் அவன் இல்லை. பத்து மணிக்குப் பிறகு ராஜாத்தியின் வீட்டை விட்டு வெளியே போய்விட்டான் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ராஜா ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து புகையை உறுஞ்சி வெளியே ஊதி விட்டு மறுபடியும் சேதுபதியைப் பற்றிச் சிந்திக்கலானான்.
இரவில் சேதுபதியின் வீட்டுக்கு நாதமுனி போய் வந்ததாகக் கூறினான். அங்கே தன் கணவன் வீட்டுக்கே வரவில்லை என்று நித்தியகலா தெரியப் படுத்தியதாகவும் சொன்னான்.
அப்படியானால் ராஜாத்தியின் வீட்டிலிருந்து சேதுபதி வெளியே கிளம்பியதும் நேரே தன்னுடைய வீட்டிற்குப் போகாமல் தன் மனத்தை மாற்றிக் கொண்டானா? பத்திரிகைக்குக் கொடுக்கப் போவதாகப் பயமுறுத்திய செய்தியை வெளியிட வேண்டாம் என்று நினைத்துவிட்டானா?
ஒரு வேளை சேதுபதி தன் வீட்டுக்குப் போகாமல் வேறு எங்கேயாவது தங்கியிருந்து அந்த மர்ம மனிதனுக்கு டெலிபோன் செய்து பணத்தை அங்கேயே உடனடியாகக் கொண்டு வரும்படிச் சொன்னானா?
ராஜாவுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. ஆயினும் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு காண வேண்டும் என்ற உத்வேகத்துடன், ராஜாத்தி! உன் வீட்டிலிருந்து யாரோ ஒரு மர்ம மனிதனுக்கு சேதுபதி டெலிபோன் செய்யும் போது அரைமணி நேரத்திற்குள் பதில் சொல்லும் நித்தியகலா இருக்கும் தன் வீட்டின் டெலிபோன் நம்பரை ஏன் குறிப்பிட்டுச் சொன்னான்? தன் வீட்டின் டெலிபோன் நம்பரைக் கொடுக்க வேண்டிய காரணம் என்ன? அந்த அரைமணி நேரத்தையும் இதே உன்னுடைய வீட்டிலேயே அவன் கழித்து இருக்கலாமே! உன்னுடைய டெலிபோன் நம்பரையே கொடுத்து பணத்தை இங்கேயே கொண்டு வரச் செய்து இருக்கலாமே?” என்று கேட்டான்.
“நீங்கள் சொல்லுவது ஒரு விதத்தில் சரியாகத் தோன்றிய போதிலும் அவர் எதனால் அப்படிச் செய்தார் என்பதை இன்னும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை இப்படியும் இருக்கலாம், இரவு பத்து மணிக்கு மேல் வீட்டில் தான் அவர் இருப்பது வழக்கம். அதனால் வீட்டு டெலிபோன் நம்பரை அந்த மனிதனுக்குக் கொடுத்து இருக்கலாம்.”
“பத்து மணிக்கு மேல் உன்னுடன் தங்குவது இல்லையா?”
“நான் கட்டாயப்படுத்தினால் எப்பொழுதாவது தங்குவார். ஆனால் பெரும்பான்மையான இரவுகளை அவருடைய சொந்த வீட்டில் தன் மனைவி நித்திய கலாவுடன் தான் கழிப்பார். வேண்டாத மனைவியாக இருந்தாலும் மனைவி-மனைவி தானே!”
“எப்பொழுதாவது உன்னுடன் தங்கக்கூடிய சேதுபதி இந்தக் குழப்பமான நேரத்திலும் உன்னுடனேயே இருந்து இருக்கலாமே! இரவை சற்று நிம்மதியுடனாவது அவன் கழித்திருப்பான்.”
எதையெல்லாமோ ராஜா கிளறி விடுகிறானே என்று ராஜாத்தி எண்ணிய போதிலும், தங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கும் குடும்ப நண்பன் என்ற முறையில் அமைதியடைந்து, “அவர் எங்கும் போகாமல் இங்கேயே தங்கி விடலாம் என்று நினைத்ததுண்டு. ஆனால் நான் அவர் நடந்து கொள்ளும் விதத்தைக் கண்டித்தேன். பெரிய மனிதர்களின் அந்தரங்க ரகசியங்களை பத்திரிகைகளில் வெளியிடப் போவதாக மிரட்டிப் பணம் பறிக்க எண்ணுவது பஞ்சமா பாதகம் என்றும் சொன்னேன். அந்த மாதிரியாக காரியங்களை என்னால் அனுமதிக்க முடியாது என்றும் திட்டினேன். இதனால் எனக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர் எதனால் தன்னுடைய வீட்டுக்கு அந்த மனிதனை டெலிபோன் செய்யச் சொல்லிவிட்டு இங்கிருந்து போனார் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்! நான் கடுமையாக எதிர்த்ததால் தான் அவருடைய வீட்டு டெலிபோன் நம்பரைக் கூறினார்” என்று சொன்னாள்.
“இதிலிருந்து நீ சேதுபதியுடன் ஒத்துழைக்க மறுத்துவிட்டாய் என்று தெரிகிறது. அவன் இங்கிருந்து போகும் போது மகிழ்ச்சியுடன் தானே போனான்? காதலனாகிய அவனைச் சரிக்கட்டித் திருப்தி உண்டு பண்ணி அனுப்பி இருப்பாயே!”
“அவர் தப்பு செய்கிறார் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு என்னையே என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நான் தான் அவரை வெளியே போய் விடும்படி சொல்லிவிட்டேனே!” என்று சொன்ன ராஜாத்தி பொங்கி வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு மறுபடியும் பேச்சை வளர்த்தாள்.
“நான் மட்டும் கோபித்து அவரை வெளியே அனுப்பாமல் இருந்து இருந்தால் மரணம் அவர் பக்கத்திலேயே நெருங்கி இருக்காது. என் ராஜாவைக் கண் குளிரப் பார்த்துக் கொண்டே இருந்து இருப்பேன் என் துரை சாவதற்குக் காரணமாக இருந்தவள் நான் தான் நான் தான் என் சேதுபதியைக் கொன்று விட்டேனே!” என்று ராஜாத்தி வாய்விட்டுக் கதறி அழுதாள்.
சேதுபதி உண்மையிலேயே பெரிய ஆளாக இருந்து இருக்கிறான் என்பது உன் பேச்சில் இருந்தே தெரிகிறது.”
“அவர் பார்ப்பதற்கு பெரிய ஆளாகத் தோன்றலாம். ஆனால் குழந்தை சுபாவம் கொண்டவர். நெருப்புச் சுடும் என்று கூட அவருக்குத் தெரியும். அப்படிப்பட்ட ஒன்றும் தெரியாத அப்பாவி மனிதர் இந்த உலகத்தை விட்டுப் போய் விட்டாரே என்று நினைத்துத்தான் அழுகிறேன்!”
அழுது கொண்டு இருந்தால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு அழகு குன்றிவிடும் என்று ராஜாத்தி நினைத்தாளோ, என்னவோ; கைக்குட்டையால் கண்களையும், முகத்தையும் அழுத்தமாகத் துடைத்துக் கொண்டாள்.
“சேதுபதி இறந்துவிடுவான் என்று தெரிந்து இருந்தால் வீட்டை விட்டு வெளியே அனுப்பி இருக்கவே மாட்டாய் இல்லையா”
“ஏன் சார் அப்படிக் கேட்டு விட்டீர்கள்? என் துரை மீது சிறிய துரும்பு விழும் என்று தெரிந்தால் கூட வெளியே விட்டிருக்க மாட்டேன்” என்று நெஞ்சு விம்மும்படிச் சொன்ன மோகன சுந்தரியான ராஜாத்தி, “அரைமணி நேரத்திற்குள் பணத்துடன் வருவதாகச் சொன்ன அந்த மனிதன்” தான் என்னுடைய தெய்வத்தைக் கொலை செய்து இருப்பானா?” என்று தேம்பிக் கொண்டே கேட்டாள்.
“நீ எந்த மனிதனைப் பற்றிச் சொல்லுகிறாய்?”
“என் காதலருடன் பேசினானே டெலிபோனில், அவனைத் தான் சொல்லுகிறேன்! நித்தியகலாவின் கூட்டாளியாகவும் அவன் இருக்கலாம்!” என்று சொன்ன ராஜாத்தி, “அவர் எப்படி இறந்தார் என்று இன்னும் சொல்லவில்லையே!” என்று விம்மினாள்.
“இன்றிரவு அவன் துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டான். அதிகாலை மூன்று மணி அளவில் அவனுடைய பிணம் நுங்கம்பாக்கம் ஏரிக்கரையில் கிடந்ததை போலீஸார் கண்டுபிடித்து இருக்கிறார்கள். மண்டையின் பின்புறத்தில் குண்டு பாய்ந்து இருக்கிறது,”
சேதுபதி கொலை செய்யப்பட்ட விபரத்தை ராஜா கூறியதும், துக்கம் தாளாமல் ராஜாத்தி மீண்டும் கைகளால் முகத்தை மூடிக் கொண்டு ‘கேவிக் கேவி’ அழுதாள்.
கொஞ்சம் விழிப்புடன் நடந்து கொண்டு இருந்தால் அவள் சேதுபதியைக் காப்பாற்றி இருப்பாள் என்றே தோன்றியது.
பிறகு சிறிது நேரம் கழித்து ராஜாத்தி கோபத்துடன் சீறினாள்.
“என் துரையைக் கொலை செய்தவன் யாராக இருக்கக்கூடும் என்று நீங்கள் ஒரு முடிவுக்கு வந்து இருப்பீர்கள். தயவு செய்து அவன் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மதிமயங்கி விடாதீர்கள். உடனே அவனைப் பிடித்து போலீஸில் ஒப்படையுங்கள்.”
“அவன் யார் என்பது இன்னும் எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு போலீஸ் அதிகாரியாக இல்லாமல் இருந்தாலும் கொலைகாரனைக் கண்டு பிடிக்க தீவிரமான முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.”
“சேதுபதி அவனைப் பற்றி தங்களிடம் ஏதாவது சொல்லி இருக்கலாமே!”
“அவன் கடைசியாக டெலிபோனில் பேசியது யாருடன் என்பதைத் தெரிந்து கொண்டால் கொலை காரன் பிடிபட்டது மாதிரிதான்! அந்தக் கொலைகாரன் ஒரு வேளை ரகசியச் செய்தி விஷயமாகப் பேரம் பேச என்னிடமே வருவான்.”
”அவன் உங்களிடம் வந்து உதவி கேட்டால் பணத்துக்காக ஆசைப்பட்டு தலையை மட்டும் அசைத்து விடாதீர்கள். அவனைப் போன்ற சமுதாயத் துரோகிகளை விட்டு வைக்கவே கூடாது.” என்றாள் ராஜாத்தி.
ராஜா அவள் சொன்ன படபடப்பு நிறைந்த வார்த்தைகளைக் கேட்டுச் சிரித்துக் கொண்டான்.
“ஏன் ஸார் சிரிக்கிறீர்கள்?”
“பணத்துக்காக எதையும் செய்யும் மனிதர்கள் இருக்கிறார்களே என்று நினைத்துத் தான் சிரித்தேன்” என்று சொன்ன ராஜா முக்கியமான ஒரு விஷயத்தை நினைத்துக் கொண்டவனாக. “போலீஸார் இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்து விசாரிக்கலாம். நான் இங்கே வந்து போன விஷயத்தையும் சேதுபதியின் பிளாக்மெயில் திட்டத்தையும் மட்டும் சொல்லிவிடாதே. மீதி எல்லாவற்றிற்கும் ஒழுங்கான பதில்களைச் சொல்!” என்று கூறினான்.
ராஜாத்தி ‘ஆகட்டும்’ என்று சொல்லும் தோரணையில் தலையை மட்டும் அசைத்தாள்.
“நான் அடிக்கடி உன்னிடம் தொடர்பு கொள்வேன். கொலைகாரன் இன்னார் என்பதைத் தெரிந்து கொள்ளும் வரையில் எனக்கு அமைதியே இருக்காது” என்று சொன்ன ராஜா “சேதுபதியின் வீட்டு விலாசம் உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.
“எனக்கு அவருடைய டெலிபோன் நம்பர் மட்டும் தான் தெரியுமே தவிர வீடு எங்கே இருக்கிறது என்பது தெரியாது” என்று சொன்ன ராஜாத்தி டெலிபோன் நம்பரைச் சொன்னாள்.
அந்த நம்பரைக் கேட்டதும், ராஜா ஆச்சரியம் அடைந்தான். முன்பு சேதுபதி வீட்டில் இருக்கிறானா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக நாதமுனி டயல் செய்த நம்பருக்கும் அதிக வித்தியாசம் இருந்தது.
இரண்டும் வெவ்வேறு டெலிபோன்களைக் குறிக்கும் எண்கள் இந்த இரண்டு பேர்களில் யார் சொல்லுவது பொய்?
“ராஜாத்தி. நீ பொய் பேசுகிறாய் போல் தோன்றுகிறது நீ டெலிபோன் நம்பர் சேதுபதியின் வீட்டுக்குரியதல்ல.”
“நல்ல பொய் சொல்லுகிறேனா? இல்லவே இல்லை. அதே டெலிபோன் நம்பரைத்தான் சொன்னேன், டெலிபோன் இலாகா நேற்றைக்கு அந்த நம்பரை மாற்றியிருந்தால் மட்டுமே நான் சொல்லுவது பொய்யாக இருக்க முடியும்!” என்று ‘மட மட’வென்று பேசிய ராஜாத்தி, “என் பேச்சின் மீது உங்களுக்கு நம்பிக்கை ஏற்படாவிட்டால் டெலிபோன் டைரக்டரியை எடுத்துப் புரட்டிப் பாருங்கள்.” என்று சொன்னாள்.
இதை விட வேறென்ன ஆதாரம் வேண்டும். உடனே ராஜா டெலிபோன் டைரக்டரியை எடுத்து அதன் ஏடுகளை வேகமாகப் புரட்டிப் பார்த்தான்.
சேதுபதியின் விலாசத்திலுள்ள டெலிபோன் எண்ணும், ராஜாத்தி சொன்ன-டெலிபோன் எண்ணும் ஒன்றாகவே இருந்தன. அப்படியானால் நாதமுனி யாருக்கு டெலிபோன் செய்தான்…?
சட்டென்று ராஜாவுக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வந்தது, அதாவது அன்று மாலையில் அவன் சேதுபதியின் வற்புறுத்தலின் பேரில் நாதமுனியுடன் பேசுவதற்காகச் சேதுபதி சொன்ன எண்களை டயல் செய்தான். உடனே ஒரு பெண்மணி பேசும் குரல் கேட்டது. நாதமுனியுடன் நேரடியாகப் பேச வேண்டும் என்றால் வேறொரு டெலிபோனைச் சொல்லி அங்கே விசாரிக்கும்படி அந்தப் பெண்மணி கூறினாள். அந்த இரகசிய நம்பருக்கு டயல் செய்த பிறகு தான் நாதமுனியுடன் பேச முடிந்தது.
அந்த இரகசிய நம்பருக்குத்தான் பிறகு நாதமுனியும் பப்ளிக் டெலிபோன் பூத்தினுள் டயல் செய்தான் என்பதை ராஜா நினைவுபடுத்திக் கொண்டான்.
இரகசிய நம்பரைக் கொடுத்தப் பெண்மணியின் குரல் நித்தியகலாவின் உடையது தான் என்பதை ராஜா உணர்ந்தான். அப்படியானால் நாதமுனியும் நித்தியகலாவும் இரகசியக் கூட்டாளிகளா…?
இரண்டு பேர்களுக்கும் இடையே உள்ளத் தொடர்பு எத்தகையதோ?
நாதமுனியின் அந்தரங்க டெலிபோன் நம்பர் நித்திய கலாவுக்குத் தெரிந்து இருக்கிறது. இதன் பொருள் என்ன? இரண்டு பேர்களும் கள்ளக்காதலர்கள் தான் என்பதற்கு இதைத் தவிர வேறென்ன ஆதாரம் வேண்டும்!
அடுத்தவன் மனைவி மீது ஏன் தான் இப்படி நாதமுனி மோகம் கொள்கிறானோ? அதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும்?
8. ராஜாத்தியின் அவசரம்!
தன்னுடைய நண்பனாகிய நாதமுனியைப் பற்றி பலர் பல விதமாகச் சொன்ன போதிலும் இன்னொருவன் மனைவி மீது ஆசைப்படமாட்டான் என்றே ராஜா நினைத்து இருந்தான். ஆனால் அவ்விதம் நினைத்து இருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இப்பொழுது தான் புரிந்தது.
நாதமுனியை உடனடியாக விசாரித்துத் திட்ட வட்டமான முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்று எண்ணிய ராஜா புறப்படுவதற்குத் தயாரானான்.
“நான் சொன்ன நம்பர் சரியாக இருக்கிறது அல்லவா?” என்று கேட்டாள் ராஜாத்தி.
ஓ எஸ்! நீ பொய் சொல்லவில்லை” என்று சொன்ன ராஜா, நாதமுனியையும் கொலையுண்ட சேதுபதியையும் பற்றிச் சிந்திக்கலானான்.
நாதமுனி பப்ளிக் டெலிபோன் கூண்டில் டயல் செய்த போது, சேதுபதியின் வீட்டு எண்களைச் சுழற்றவில்லை. சம்பந்தமில்லாத வேறொரு எண்ணுக்குத்தான் டயல் செய்தான். அதற்கு முன்னால் சேதுபதியின் மனைவி நித்தியகலா தூக்க மாத்திரைகளை விழுங்கி அயர்ந்து தூங்கிக் கொண்டு இருப்பதாகவும் சொன்னான்.
இப்படி எல்லாம் நாதமுனி நடந்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? நித்தியகலாவின் வீட்டுக்கு ஏன் உண்மையிலேயே டெலிபோன் செய்யவில்லை? சேதுபதி கொலை செய்யப்பட்டான் என்பது அப்பொழுதே அவனுக்குத் தெரிந்து இருந்ததா? அவனைப் பற்றி விபரத்தைத் தெரிந்து கொள்வதாக இருந்தால் நேராக சேதுபதியின் வீட்டுக்கல்லவா டயல் செய்திருக்க வேண்டும்!
ஆம்! நாதமுனிக்கு எல்லா விபரங்களும் முன் கூட்டியே தெரிந்து இருக்கின்றன என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. அப்படியானால் சேதுபதியின் கொலைக்கும் அவனுக்கும் நேரடியான சம்பந்தம் இருக்கிறதா? அவன் ஓட்டிச் சென்ற காரின் பின் சீட்டில் சொட்டு இரத்தம் உறைந்து இருந்ததே…? அதன் மர்மம் என்ன…?
அழகு சுந்தரியான நித்தியகலா, நாதமுனியின் ஆசை நாயகியாகத்தான் இருப்பாள் என்பது நம்பகமாகத் தெரிந்தது. இரண்டு பேர்களுமாகச் சேர்ந்து சேதுபதியை பரலோகத்துக்கு அனுப்பி விட்டார்களோ என்றும் ராஜா சந்தேகித்தான்
அழிந்து போகும் உடலின் மீதுள்ள மாயக் கவர்ச்சியினால் எப்படிப்பட்ட தீயச் செயல்களை எல்லாம் செய்து விடுகிறார்கள் மனிதர்கள்!
எதையோ நினைத்துக் கொண்ட ராஜா எழுந்து சென்று ஒரு மூலையில் வைக்கப்பட்டு இருந்த டெலிபோன் ரிசீவரை எடுத்து நாதமுனியின் வீட்டு எண்களைச் சுழற்றினான்.
பின்னால் வந்து தோள்ப்பட்டையோடு இடித்து விடுவதைப் போல் நின்ற ராஜாத்தி “இந்த நேரத்தில் யாருக்கு டெலிபோன் செய்கிறீர்கள்?” என்று கேட்டாள்.
பூனையை மடியில் கட்டிக்கொண்டு சகுனம் பார்த்ததைப் போன்ற கதையாகி விட்டது என்பதைப் புரிந்து கொண்ட ராஜா, ரிசீவரை டக்கென்று வைத்து விட்டு. “யாருக்குமல்ல” என்று கூறி, “போலீஸார் வரக்கூடிய நேரமாகிவிட்டது. எதுவும் நடக்காததைப் போல் அமைதியாகத் தூங்குவது போல் பாசாங்கு செய்து கொண்டு படுத்துக் கொள். நான் வந்துபோன விஷயம் யாருக்குமே தெரிய வேண்டாம்.” என்று சொன்னான்.
அவன் பின்னால் அழகு நடை பயின்ற ராஜாத்தி, “யாரிடமும் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் என் சேதுபதியைக் கொன்றவனுக்கு மட்டும் தண்டனை வாங்கிக் கொடுத்து விடுங்கள். அவன் இந்த உலகத்தில் இருக்கவே கூடாது!” என்று குமுறினாள், உணர்ச்சி பொங்க.
“கொலைகாரன் எப்படியும் தூக்கில் இடப்படுவான்” என்று உறுதியளித்த ராஜ. ‘ஜாக்கிரதையாகப் படுத்துக் கொள்” என்று கூறி விட்டுக் கிளம்பியதும் ராஜாத்தி அவன் முன்னால் வந்து நின்று, இப்பொழுதே நீங்கள் வெளியே போக வேண்டுமா?” என்று கொஞ்சுவதைப் போல் கேட்டாள்.
அவள் எதை நினைத்துக் கொண்டு கொஞ்சுகிறாளோ, “உன் காதலனைக் கொன்றது யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் நான் இரவு பகல் என்று பார்க்காமல் அலைந்தே தான் ஆக வேண்டும்”
அப்படியானால் சரி, உங்களை நான் தடுக்கவில்லை ராஜா! “ஆனால் நீங்கள் அடிக்கடி வந்து போக வேண்டும். பரோபகாரியான நீங்கள் இந்தப் பேதையின் வீட்டுக்கு வரத்தவறினால் உங்களையே நினைத்து நினைத்து ஏங்கி உருக்குலைந்து போய் விடுவேன். உங்களுடன் பழகியது சிறிது நேரமாக இருந்தாலும் என்னைக் கவர்ந்து விட்டீர்கள்.”
ராஜா சிரித்துக் கொண்டே வெளியே வந்து, அவள் கதவைச் சாத்திக் கொண்டதும், ஓசைப்படாமல் நடந்து சென்று படுக்கையறை ஜன்னல் பக்கமாக திரைச் சீலையில் முகத்தை மறைத்துக் கொண்டு நின்றான்.
எப்படியும் ராஜாத்தி தூங்குவதற்கு அந்தப் படுக்கை அறைக்குள் வந்து தான் ஆகவேண்டும். கள்ளக் காதலன் சேதுபதி இறந்து விட்டான் என்பதால் அவள் கவலையின் காரணமாகப் படுக்கையில் புரண்டு அழலாம். தனிமையில் இருக்கும்போது தான் பெரும்பான்மையானவர்கள் வேதனையைக் கொட்டுவார்கள்!
ராஜா எதிர்பார்த்ததைப் போல் ராஜாத்தி சோகப் பதுமை போல் வந்து கட்டிலின் மேல் விளிம்பின் மீது உட்கார்ந்து டெலிபோன் ரிசீவரை எடுத்து சில எண்களைச் சுழற்றினாள்.
அவளிடம் சுறுசுறுப்பு மட்டும் இருந்ததே தவிர, தெம்பைக் காணவில்லை. நம்பிக்கைக்கு உகந்த ஒரு ஆளுக்கு அவள் இந்த நேரத்தில் டெலிபோன் செய்கிறாளோ என்று தோன்றியது.
அவள் யாருக்கு டெலிபோன் செய்கிறாள்? தான் இங்கே வந்து போன விஷயத்தைத் தெரியப்படுத்த நினைக்கிறாளா? அல்லது யாரிடமாவது ஆலோசனை பெறப்போகிறாளா?
சிறிது நேரம் கழித்ததும் ரிசீவரைக் காதோடு இணைத்துப் பிடித்திருந்த ராஜாத்தியின் முகத்தில் ஒருவித மலர்ச்சி ஏற்பட்டது.
“ஹலோ…..நான் ராஜாத்தி பேசுகிறேன். குட் நைட்… நீங்கள்…..வீரமணி சாரா…? அயர்த்து தூங்கிக் கொண்டு இருந்தீர்கள் போலிருக்கிறது. உங்கள் தூக்கத்தைக் குலைத்து விட்டேன்” என்று சொன்ன ராஜாத்தி, ஜன்னல் திரைச்சீலையின் இடைவெளியில் தெரிந்த ராஜாவின் முகத்தைப் பார்த்துப் பயந்துபோய் வீரிட்டுக் கத்தி ரிசீவரையும் வைத்து விட்டாள்.
“பயப்படாதே, நான் தான்…” என்று சொன்ன ராஜா, தன்னுடைய முழுத் தலையையும் காண்பித்து, “கொஞ்சம் கதவைத் திறக்கிறாயா? இன்னும் உன்னிடம் சிறிது நேரம் பேச வேண்டும்” என்று அலட்சியமாக- ஆனால் வற்புறுத்துவதைப் போல் சொன்னான்.
ராஜாத்தி ஒரு கணம் தலையைத் தாழ்த்திவிட்டு பிறகு தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தவளைப்போல் நிமிர்ந்து நடந்து சென்று கதவைத் திறந்தாள்.
வகையாக அவள் சிக்கிக் கொண்டாள் என்று எண்ணிய ராஜா வீட்டினுள் வந்து, “என்னைக் கண்டதும் ஏன் பயந்து போய் டெலிபோன் ரிசீவரை வைத்து விட்டாய்? உன்னுடைய சொந்த வாழ்க்கையில் குறுக்கிட்டுத் தொல்லைகளை உண்டு பண்ணி விடுவேனோ என்று பயந்து விட்டாயா?” என்று சோபாவில் உட்கார்ந்து கொண்டே கேட்டான்.
இன்னொரு சோபாவில் அவன் பக்கமாக உட்கார்ந்து கொண்ட ராஜாத்தி, “கொலைகாரன் தான் தலையை நீட்டிப் பார்க்கிறானோ என்று நினைத்து விட்டேன். நீங்கள் அந்நிய ஆள் இல்லையா?” என்று வார்த்தைகளில் தட்டுத் தடங்கல் இன்றி லாவகமாகவே பேசினான்.
அவள் கைதேர்ந்தவள் என்று சொல்லுவதற்கு இந்தப் பேச்சு ஒன்றே போதும்!
“அது இருக்கட்டும்! இந்த நேரத்தில் எதற்காக நீ வீரமணிக்கு டெலிபோன் செய்தாய்?”
“ஏன்?…..அவருக்கு டெலிபோன் செய்தது தப்பு என்று சொல்லுகிறீர்களா?”
“அதற்குள் வித்தியாசமாக நினைத்துவிட்டாய் பார்த்தாயா? எதற்காக டெலிபோன் செய்தாய் என்று தான் கேட்கிறேன். எதாக இருந்தாலும் காலையிலேயே பேசி இருக்கலாம்.
“என் உயிருக்கு உயிரானவர் இறந்துவிட்டார் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு என்னால் அமைதியாக தூங்கிக் கொண்டு இருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா? வீரமணி எங்கள் குடும்ப நண்பர். சேதுபதியின் நெருங்கிய சிநேகிதர். கொலைகாரனைக் கண்டுபிடிப்பதில் அவரும் உதவி செய்யலாம்.”
யாராக இருந்தலும் இம்மாதிரியான ஒரு நிலைமை ஏற்பட்டால் இப்படித்தான் செய்வார்கள் என்று எண்ணிய ராஜா, “வீரமணியை உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.
“சேதுபதியுடன் அவர் இங்கே அடிக்கடி வந்து போய் இருக்கிறார். இரண்டு பேர்களுக்கும் ஒன்றாக பலமுறை விருந்து வைத்து இருக்கிறேன். கோழி பிரியாணி என்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும்.”
“அது இருக்கட்டும், நீ இப்பொழுது என்ன பேச நினைத்தாய்?”
“சேதுபதி இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தியை வீரமணிக்குத் தெரிவிக்கவே எண்ணினேன். வேறு ஒன்றுமே என் “மனதில் இல்லை. விடிந்த பின்பு சாவகாசமாகத் தெரியப்படுத்தினால் கோபித்துக் கொள்வார்.”
அவளிடம் பேசிக் கொண்டு இருப்பது பயனற்றது என்பதைப் புரிந்து கொண்ட ராஜா சோபாவை விட்டு எழுந்து, “நீ போய் டெலிபோன் செய். நான் வருகிறேன்’ என்று கூறிவிட்டுக் கிளம்பினான்.
ராஜாத்தியின் உள்ளம் எப்படிப்பட்டது என்பதை இன்னும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை புரிந்து கொள்ளவே முடியாத புதிரைப் போலவே தோன்றியது!
9. நள்ளிரவில் கூவி அழைக்கும் டெலிபோன்!
தீர ஆலோசித்த ராஜா திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது தன் நண்பன் நாதமுனியின் விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினான்.
நாதமுனியின் மோட்டார் காரில் பின் சீட்டில் பார்த்த ஒரு சொட்டு ரத்தத்தின் கறை-டெலிபோன் நம்பர் மாற்றம் ஆகியவை அவன் மீதுள்ள சந்தேகத்தை வலுப்படுத்தின.
போலீஸாருக்குப் பயந்து போய் நாதமுனி தன் வீட்டில் இருக்க மாட்டான் என்று தான் ராஜா நினைத்துக் கொண்டு இருந்தான். ஆனால் அவன் அதிர்ஷ்டம்: நாதமுனியின் மோட்டார் கார் வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது.
தான் ஏறி வந்த டாக்சிக் காருக்குரிய பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டு வந்த ராஜா, போலீஸைக் காட்டி மிரட்டியாவது நாதமுனியை வழிக்குக் கொண்டு வரலாம் என்ற எண்ணத்துடன் அரவம் ஏற்படாமல் நடந்து சென்று சாவித் துவாரம் வழியாக உள்ளே பார்த்தான்.
வீட்டினுள் விளக்கு வெளிச்சம் இருந்தது. நாதமுனி இன்னும் தூங்கவில்லை போல் தோன்றியது. சாவித் துவாரம் வழியாக நாலாப் பக்கமும் பார்த்த ராஜா டெலிபோன் எதிரில் போடப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து ‘டயல்’ செய்யும் நாதமுனியைப் பார்த்தான்.
அவன் பலமுறை ‘டயல்’ செய்தானே தவிர, ஒரு முறை கூட ‘ஹலோ’ என்று சொல்லவில்லை. மறு முனையில் யாருமே டெலிபோனை எடுத்துப் பேசவில்லை போலும்!
இனியும் வெளியே திருடனைப்போல் நின்று கொண்டு இருக்க விரும்பாத ராஜா, கதவைத்தட்டி, “நாதமுனி! கதவைத் திறடா…” என்று கத்தினான்.
நாதமுனி எழுந்து வந்து கதவைத் திறந்ததும், “ராஜா நீயா? எனக்குப் பயமாக இருக்கிறதடா! நான் எத்தனையோ முறை டயல் செய்த பிறகும் நித்தியகலா ஒரு முறைகூட டெலிபோனை எடுத்துப் பேசவில்லை இன்னும் அவள் தூங்கிக் கொண்டே இருக்கிறாள் போல் இருக்கிறது இரண்டு தூக்க மாத்திரைகளுக்குப் பதில் ஏராளமான மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டால் உயிருக்கே ஆபத்து வந்து விடும்” என்று விம்மினான்.
இன்னொருவன் மனைவி மீது எவ்வளவு அக்கறை…? தூங்காமல் கூட அவளுடைய நலனைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டு இருக்க வேண்டும் என்றால்….?
“உன்னுடைய முழுக்கவனமும் இன்னொருவன் மனைவி மீது இருக்கிறது என்று இப்பொழுது தான் எனக்கு விளங்குகிறது! நாதமுனி! நீ ரோட்டில் போகும் கல்லூரி மாணவிகளைப் பார்த்துக் கேலி செய்வாயே: அது விளையாட்டு என்று அப்பொழுது நினைத்து இருந்தேன் இப்பொழுது தான் உன்னுடைய உண்மையான உருவம் தெரிகிறது:”
ராஜா நேரடியாகக் குற்றம் சாட்டியதும் “இப்பொழுது என்ன நடந்து விட்டது என்று நினைத்துச் சாடுகிறாய்?” என்று நாதமுனி கேட்டான்.
“உனக்கும் நித்தியகலாவுக்கும் இடையே உள்ள தொடர்பு எத்தகையது என்பதை இப்பொழுதே நான் தெரிந்து கொள்ள வேண்டும்.”
“அதை முன்பே உன்னிடம் சொல்லிவிட்டேன். கூடப் பிறக்காத அண்ணனும் தங்கையும் நாங்கள்”
அவன் இப்படிச் சொன்னதும் ராஜா ஆத்திரத்தினால் துள்ளினான்.
“எதற்காகடா அண்ணன் தங்கை என்ற உறவுமுறைக்கு களங்கம் தேடுகிறாய்? கள்ளக் காதலர்கள்-திருட்டுத்தனமாகச் சந்திப்பவர்கள் என்று பகிரங்கமாகச் சொல்வேன். என்னால் உன்னை என்ன செய்துவிட முடியும்?”
நாதமுனி தலையைத் தொங்கவிட்ட போதிலும் சுதாரித்துக் கொண்டு “நாங்கள் இரண்டு பேர்களும் அண்ணன்….. தங்கை தான்” என்று சொன்னான்.
“எப்படியோ தொலைந்து விட்டுப் போகட்டும். நேற்றைக்கு சேதுபதி என்னிடம் வந்திருந்த போது நான் உனக்கு டெலிபோன் செய்தேன் அல்லவா? அப்போது நீ நித்தியகலாவோடு தானே இருந்தாய்? அவள் தானே டெலிபோனை எடுத்து முதலில் பேசினாள்?”
“ஆமாம்! அந்த உண்மையை ஒப்புக்கொள்கிறேன். எனக்காக ஒரு டெலிபோன் வசதி செய்து கொடுத்து இருந்தாள்” என்றான் நாதமுனி.
“இனியாவது உண்மையைச் சொல்லிவிடு. நீ என்னுடைய நண்பன்! உன்னை எப்படியாவது போலீஸ் பிடியிலிருந்து காப்பாற்றிவிட வேண்டுமே என்ற துடிப்பினால் தான் இரவில் கூடத் தூங்காமல் அலைந்து கொண்டு இருக்கிறேன். இனியும் என்னை ஏமாற்ற நினைத்தால், எக்கேடாவது கெட்டுப்போ என்ற எண்ணத்துடன் ஒதுங்கிக் கொள்வேன். அதன் பிறகு போலீஸார் உன்னைக் கொத்திக் கொண்டு போய் விடுவார்கள். உனக்குத் தூக்குத் தண்டனை கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.”
ராஜா முகத்தைச் சுழித்துக் கொண்டு கடுமையான தொண்டையில் பேசியதும் நாதமுனி பயந்து விட்டான். எந்தக் கொலைகாரனும் தூக்குமேடையில் ஏறத் தானாகவே முன் வரமாட்டான்.
“எதனால் இப்படி எல்லாம் பேசுகிறாய் ராஜா? நான் என்ன தப்பு செய்து விட்டேன்?”
“என்னையா திருப்பிக் கேட்கிறாய்? நீயும் நித்தியகலாவும் ஒரேயடியாகக் கும்மாளம் போட்டுக் கொண்டு இருக்கிறீர்களே அதன் அர்த்தம் என்ன?”
“நான் சொல்லுவதை நம்புடா! நானும் அவளும் அண்ணனும்…”
“அண்ணனாக இருந்தாலும் சரி; அத்தானாக இருந்தாலும் சரி, எப்படி வேண்டுமானாலும் தொலைந்து விட்டுப் போ. ஆனால் உன்னுடைய இந்தப் பழக்கம் உனக்கே எமனாக வந்திருக்கிறது என்பதை மட்டும் மறந்து விடாதே.”
ராஜா கடுமையாகச் சொன்னதைக் கேட்டு நாதமுனி நடுங்கினான். அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் இப்பொழுது தான் நெஞ்சில் உறைக்கின்றன போலும்!
ராஜா தொடர்ந்து பேசினான்.
“நீயும் நித்தியகலாவும் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் கள்ளக் காதலர்கள் என்று தான் நினைத்துக் கொள்வார்கள். நித்தியகலாவின் கணவனை சேதுபதி கொலை செய்யப்பட்டு இருக்கிறான். நித்தியகலா சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டு நீயும் சேதுபதியும் சண்டை போட்டுக் கொண்டீர்கள் என்று நினைப்பதற்கும் இடம் இருக்கிறது. உன்னுடைய காரின் பின் சீட்டில் ஒரு சொட்டு ரத்தம் படிந்திருந்தது என்பதையும் இந்த நேரத்தில் நினைவுபடுத்திக் கொள். அந்த இரத்தக்கறை சேதுபதியின் உடம்பில் இருந்து வழிந்த இரத்தமாகவும் இருக்கலாம். மேலும் சேதுபதி, 22 ரகத்தைச் சார்ந்த கைத்துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறான். உன் துப்பாக்கியும் அதே 22 ரகத்தைச் சார்ந்தது தான். ஆமாம்…..உன்னுடைய துப்பாக்கி எங்கே?”
நாதமுனி ‘திருதிரு’வென்று விழித்து விட்டு, “நீ எதனால் இப்படி எல்லாம் விசாரிக்கிறாய் என்று தெரிய வில்லையே? துப்பாக்கிக்கு இப்பொழுது என்ன அவசரம் வந்தது?” என்று அழாக்குறையாகக் கேட்டான்.
“போலீஸார் உன்னைச் சந்தித்தால் என்னைப் போல் அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்கள் கொடுக்கும் குண்டாந்தடி உதையில் எல்லாவற்றையுமே ‘படபட’வென்று சொல்லி விடுவாய்!” என்று கூறிய ராஜா, “எல்லாவற்றையும் ஒளிக்காமல் என்னிடம் சொன்னால் நண்பன் என்ற முறையில் என்னால் உனக்கு ஏதாவது உதவி செய்ய முடியும்” என்று சொன்னான்.
“என் கைத்துப்பாக்கியைக் காணவில்லை: சில தினங்களுக்கு முன்னால் அதை யாரோ களவாடிக் கொண்டு போய் விட்டார்கள்!”
அவன் இப்படிச் சொன்னதும் ராஜா கடுமையாக முறைத்துப் பார்த்துவிட்டு, லைசன்ஸ் வாங்கி உபயோகித்து வரும் துப்பாக்கி காணாமல் போய்விட்டால் உடனே போலீஸில் அல்லவா புகார் செய்ய வேண்டும்! நீ அப்படிச் செய்தாயா?” என்று கேட்டான்.
“புகார் செய்ய நினைத்ததுண்டு. ஆனால் நேரம் கிடைக்கவில்லை.”
“உனக்கு எங்கே இருந்தடா நேரம் கிடைக்கும்? நித்தியகலாவின் பின்னால் சுற்றிக் கொண்டு இருப்பதற்குத் தான் உனக்கு இருபத்தி நான்கு மணி நேரமும் சரியாக இருந்து இருக்குமே.”
நாதமுனி குற்றவாளிபோல் தலையைத் தாழ்த்திக் கொண்டு நின்றான்.
“இனியாவது உண்மையைச் சொல். சேதுபதியைக் கொன்றது யார்?”
“எனக்கு எதுவுமே தெரியாது.”
உன் மோட்டார்காரின் பின் சீட்டில் சொட்டு ரத்தம் எப்படி வந்தது?”
“அதுவும் எனக்குத் தெரியாது!”
“அப்படியானால் உன் மோட்டார் காரை யாருக்காவது இரவல் கொடுத்து இருந்தாயா?”
“இல்லை”
“நித்தியகலாவாவது உன் மீதுள்ள ஆசையால் கணவனைக் கொலை செய்திருப்பாளா?”
“அவள் அத்தகைய கீழ்த்தரமான எண்ணம் கொண்டவன் அல்ல” என்றான் .
அவன் சொன்னதைக் கேட்டு வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது ராஜாவுக்கு! கணவனுக்குத் துரோகம் செய்யும் பெண்ணைப் பற்றி எவ்வளவு உயர்வாகப் பேசுகிறான்!
“அவள் உயர்ந்த ரக எண்ணம் கொண்டவளாகவும், தர்ம பத்தினியாகவும் இருந்து விட்டுப் போகட்டும்” என்று சொன்ன ராஜா, “தூக்க மாத்திரைகளைச் சாப்பிடும் படி நித்தியகலாவுக்குச் சிபாரிசு செய்தது யார்?” என்று கேட்டான்.
“டாக்டர் சாமுவேல்.”
“எதற்காகத் தூக்க மாத்திரைகளைச் சாப்பிடும்படி அந்த டாக்டர் சொன்னார்?”
“கவலைகளின் காரணமாக நித்தியகலாவுக்குத் தூக்கமே வருவதில்லை. எனவே தான் நித்தியகலாவின் வற்புறுத்தலின் பேரில் படுக்கைக்குப் போவதற்கு முன்னால் இரண்டு மாத்திரைகள் வீதம் சாப்பிடுவதற்கு அனுமதித்தார்.”
“நாதமுனி! இப்போது சேதுபதியின் படுகொலை சம்பந்தமாகப் போலீஸார் அவனுடைய மனைவியான நித்தியகலாவிடம் தான் நேரே போய் விசாரிப்பார்கள். அவளோ அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு மோசமான நிலையில் மயங்கிக் கிடக்கிறாள்! அந்த மயக்கத்தில் அவள் எல்லாவற்றையும் உளறிவிடக் கூடும்! அதாவது உனக்கும் அவளுக்கும் இடையே உள்ள தொடர்பை எல்லாம் அவள் சொல்லிவிடக் கூடும்! அப்போது உன் கழுத்துக்குத்தான் தூக்குக் கயிறு வரும்! ஆகவே அவள் போலீஸாரிடம் இப்போது எதுவும் பேசாதபடி தடுக்க வேண்டும்!” என்று ராஜா கூறிவிட்டு, டாக்டர் சாமுவேலின் டெலிபோன் நம்பரை நாதமுனியிடம் இருந்து தெரிந்து கொண்டு அந்த நம்பருக்கு டயல் செய்தான்.
ஐந்து நிமிட நேரம் தொடர்ச்சியாக மணியடித்த பின்பு “டாக்டர் சாமுவேல் பேசுகிறேன்!” என்ற பதில் வந்தது.
“குட் நைட் சார்! உங்கள் ‘பேஷண்ட்’ நித்தியகலா விஷயமாகப் பேசுகிறேன். எஸ்! சேதுபதி என்பவரின் மனைவி! தினசரியும் படுக்கைக்குப் போவதற்கு முன்னால் இரண்டு தூக்க மாத்திரைகள் வீதம் சாப்பிடுவதற்கு சிபாரிசு செய்து இருந்தீர்களாமே? அவள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறாள். உங்கள் உதவி உடனடியாக அவளுக்குத் தேவைப்படுகிறது.”
ஏராளமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டாளா” என்று அலறினார் டாக்டர் சாமுவேல்.
“அப்படியும் இருக்கலாம்! ஆனால் இன்னும் அவள் தூங்கிக் கொண்டே இருக்கிறாள். அதே நேரத்தில் இன்னொரு அதிர்ச்சியான செய்தியையும் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. அதாவது சில மணி நேரத்திற்கு முன்னால் அவளுடைய கணவன் சேதுபதி கொலை செய்யப்பட்டு இருக்கிறான்!”
“ஓ மை காட்! அப்புறம்…?”
“நித்தியகலா தூங்கிக் கொண்டே இருப்பதால் கணவன் கொலையுண்ட விஷயம் இன்னும் அவளுக்குத் தெரியாது. போலீஸார் அவளை விசாரிப்பதற்காக இந்நேரம் அங்கே வந்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நான் நித்தியகலாவின் குடும்ப நண்பன்! அவள் அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு விட்டு மோசமான நிலையில் கிடந்தால், இந்தச் சமயத்தில் அவளுடைய கணவன் செத்துவிட்ட செய்தியை அவளிடம் போலீஸார் சொன்னால் அந்த அதிர்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். ஒரு வேளை அவள் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். இந்த நெருக்கடியான நேரத்தில் போலீஸார் அவளை விசாரிக்க அனுமதிப்பீர்களா?”
“அனுமதிக்க மாட்டேன்! அவளுடைய கணவன் இறந்து விட்ட செய்தியை அவளது உடல் நிலையை அனுசரித்து பிறகு சொல்ல ஏற்பாடு செய்யலாம்.”
“நீங்கள் என்ன செய்தாலும் சரி டாக்டர் சார். போலீஸார் சில மணி நேரம் வரையிலாவது விசாரணை என்று அவளைத் தொந்தரவு செய்யக்கூடாது. இதை நீங்கள் செய்வதாக ஒப்புக் கொண்டால் நான் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன். ஆனால் நான் டெலிபோன் செய்த விஷயத்தை மட்டும் தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.'”
“நான் இப்பொழுதே நித்தியகலாவின் வீட்டுக்குப் போகிறேன். அவள் தூக்கம் கலைந்து எழுந்தாலும் போலீஸார் அவளைத் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்கிறேன்.”
“வந்தனம், டாக்டர்” என்று உற்சாகத்துடன் சொன்ன ராஜா! டெலிபோன் ரிசீவரை வைத்ததும், நாதமுனி வெடிச் சிரிப்பு சிரித்தான்.
“நித்தியகலாவை ஏமாளி என்று நினைத்து விட்டாய் போலிருக்கிறது. உயிர் போவதாக இருந்தாலும் என்னைக் காட்டிக் கொடுக்கமாட்டாள். போலீஸால் அவளை ஒன்றும் செய்துவிட முடியாது” என்றான் நாதமுனி.
“நீ போலிஸாரைப் பற்றி நினைத்திருப்பது தப்பு. எப்படி எப்படி கேட்க வேண்டும்? என்னென்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் எல்லாம் அவர்களுக்குத் தெரியும். அவளை அறியாமலேயே அவளிடம் இருந்து விஷயத்தைக் கிரகித்துத் தெரிந்து கொள்வார்கள்” என்று சொன்ன ராஜா, “உன் கைத்துப்பாக்கி காணாமல் போய்விட்டது என்று நொண்டிச் சமாதானம் சொன்னால், போலீஸார் உன் கழுத்தில் மாலை போட்டுப் பாராட்டுவார்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாயா? உன் கழுத்துக்கு தூக்குக் கயிறு தான் வரும்!” என்று எச்சரித்தான்.
நாதமுனி என்ன செய்வது என்று தோன்றாத நிலையில் மனமுடைந்து விட்டான்.
“போலீஸார் உன்னை வலைவீசித் தேடிக் கொண்டு இருப்பார்கள். உன்னிடம் விசாரிக்காமல் விடவே மாட்டார்கள், நீ போலீஸார் கண்களில் சிக்கினால் என்ன நடக்கும் என்று தெரியாது.”
“நான் நித்தியகலாவிடம் பழக்கம் வைத்து இருக்கிறேன் என்பதாகவும், என் காரின் பின் சீட்டில் இரத்தக்கறை படிந்திருந்த விபரத்தையும் ஏற்கனவே நீ போலீஸாரிடம் சொல்லி விட்டாயா?”
இப்பொழுது பார்க்க வேண்டுமே நாதமுனியின் முகத்தை! விளக்கெண்ணெய் வழிவதைப் போலிருந்தது.
“தீர ஆலோசித்து நானாக ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னால் அபாயகரமான எந்தக் காரியத்திலும் என்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டேன்.”
ராஜா இப்படிச் சொல்லிக் கொண்டு இருந்த போது அருகிலிருந்த டெலிபோன் மணி அலறியது.
நெஞ்சு இரண்டு பேர்களுக்குமே ‘திக்’கென்று அடித்திருக்க வேண்டும். இருவரும் திடுக்கிட்டதைப் போல் விழித்தார்கள்,
“நித்தியகலா தான் டெலிபோன் செய்கிறாள் போலிருக்கிறது. தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்டதும் என்னுடைய நினைவு வந்திருக்கும்.” என்று சொன்ன நாதமுனி ரிசீவரை எடுத்து, “ஹலோ…..நான்….. நான்…..” என்று நிறுத்தினான்.
போலீஸார் மறுமுனையில் இருந்து பேசினால் என்ன செய்வது என்ற அச்சம் அதற்கு மேல் அவனைப் பேச விடாமல் தடுத்தது.
“நாதமுனி தானே பேசுவது? நான் தான் வீரமணி பேசுகிறேன். தூங்கிக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் உன்னை எழுப்பிப் பேசுவதற்காக மிகவும் வருந்துகிறேன்.” என்று மறுமுனையில் இருந்து சொன்ன வீரமணி, “நீ தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தாயா? மணியடித்ததும் டெலிபோனை கையில் எடுத்து விட்டாயே!” என்றான்.
நான் இன்னும் தூங்கவில்லை வீரமணி. என்ன விஷயம்? ஏதாவது அதிர்ச்சியான செய்தியைச் சொல்லப் போகிறாயா?”
ஒரு வினாடி நேர அமைதிக்குப் பின் வீரமணி சன்னமான குரலில் பேசினான்.
“இரண்டு போலீஸ் அதிகாரிகள் என்னிடம் வந்து கேள்விகள் கேட்டுத் திணற அடித்து விட்டார்கள். அவர்களைச் சமாளித்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. இப்பொழுது அவர்கள் உன்னைத் தேடிக் கொண்டு தான் வருவார்கள் என்று நினைக்கிறேன்.”
போலீஸை நினைத்துக் கொண்டதும் குளிர் ஜுரம் கண்டதைப் போலிருந்தது நாதமுனிக்கு! அமைதியாக இருக்க விட மாட்டார்களே போலீஸ்காரர்கள்!
“அப்புறம் என்ன வீரமணி?” என்று நாதமுனி கேட்டான்.
“போலீஸார் வந்து போனதில் இருந்து எனக்கு ஒன்றுமே புரியவில்லை.”
“அவர்கள் உன்னிடம் என்ன கேட்டார்கள்?”
“சேதுபதியையும் அவன் மனைவி நித்திய கலாவையும் பற்றித் துளைத்துத் துளைத்துக் கேட்டார்கள். அவர்களுடைய நெருங்கிய நண்பர்களைப் பற்றி எல்லாம் விசாரித்தார்கள்.”
”நீ என்ன சொன்னாய்”
“உண்மையைச் சொன்னேன். அதனால் தான் போலீஸார் உன்னை விசாரிக்க எப்படியும் வருவார்கள் என்று நினைக்கிறேன்.
“சேதுபதி இறந்து விட்டான் என்பது உனக்கும் தெரியும் அல்லவா?”
நாதமுனி மென்று விழுங்கிவிட்டு, “தெரியும்! சிறிது நேரத்திற்கு முன்னால் தான் அந்த பயங்கரமான செய்தியைக் கேள்விப்பட்டேன்.” என்று சொன்னான்.
“போலீஸார் வந்தால் நிதானித்துப் பதில் சொல். எதையாவது உளறி அபாயத்தில் மாட்டிக் கொள்ளாதே!”
“எனக்குப் பயமாக இருக்கிறதடா…..என்ன செய்வது என்றோ; எப்படி தப்பித்துக் கொள்வது என்றோ, எனக்குப் புரியவில்லை. நான் சீக்கிரம் இறந்துவிடுவேன் போலிருக்கிறது!”
“பயப்படாதே!”
“நீ ஆறுதல் சொல்லுவதால் மட்டும் நான் பயப்படாமல் இருக்க முடியுமா என்ன?’ என்று சொன்ன நாதமுனி திடீரென்று ஒரு யோசனை வந்து, “வீரமணி! உன் மனைவி வீட்டில் தான் இருக்கிறாளா?” என்று கேட்டான்.
“இல்லை, தலைப் பிரசவத்திற்காக அம்மா வீட்டுக்குப் போய் இருக்கிறாள். ஏன்……?”
நாதமுனிக்கு ஒரு யோசனை தோன்றியது. போலீஸாரின் கையில் சிக்கி வதைப்படாமல் இருக்க அந்த வீட்டிலேயே போய் தலைமறைவாகத் தங்கலாம் என்று எண்ணினான். இதையே வீரமணியிடம் அவன் தெரியப்படுத்தினான்.
”நீ இங்கே வருவதைப்பற்றி எனக்கு எந்தவிதமான ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால் தனியாகத்தான் இருக்க வேண்டும். பொழுது போகவில்லை என்று சொல்லி எந்தப் பெண்ணையாவது கூட்டிக்கொண்டு வந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன்!” என்றான் டெலிபோனில் வீரமணி.
“நான் இப்பொழுது இறக்கை ஒடிந்த பறவை போல் ஆகிவிட்டேன் வீரமணி. ஆனால் எனக்கு மட்டுமே இடம் கொடுத்தால் போதும்.”
“ஓ எஸ்! நீ எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம்.”
“தேங்க்யூ, வீரமணி.’
அவன் ரிசீவரை வைத்ததும், நாதமுனியும் வைத்தான். பயங்கரமான அபாயத்தில் இருந்து மீண்டு விட்டதைப் போன்ற மலர்ச்சி நாதமுனியின் முகத்தில் மலர்ந்தது.
“என்னைக் கலந்து யோசனை செய்யாமலேயே முடிவு செய்து விட்டாயே, நாதமுனி! நீ யாருடன் பேசினாய்?” என்று கேட்டான் ராஜா.
“வீரமணி என்ற என் நண்பனுடன்! அவன் ‘கலைத்தூதன்’ பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக இருக்கிறான். இறந்து போன சேதுபதிக்கும் மிகவும் வேண்டியவன். போலீஸ் கெடுபிடியாக இருப்பதால் சில தினங்களுக்கு அவன் வீட்டிலேயே தலைமறைவாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன்.”
“அவன் எப்படிப்பட்டவன்? உனக்கு நம்பகமான நண்பன் தானா?”
“என்னுடைய பல நண்பர்களில் அவனும் ஒருவன். போலீஸார் அவனை விசாரித்த போது எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லி விட்டானாம். என்னைப் பற்றியும் நித்தியகலாவைப் பற்றியும் உளறித் தொலைத்து விட்டானாம். சேதுபதி என்னைத் தேடிக் கொண்டு இருந்த விபரத்தையும் கூறிவிட்டானாம். ஆனால் போலீஸாருக்கு என் மீது கடுமையான சந்தேகம் வந்து விட்டதாம். அவர்கள் இந்நேரம் என்னைத் தேடி வந்து கொண்டு இருப்பார்களாம். அதனால் நான் தீர ஆலோசித்து அவனுடைய வீட்டிலேயே போய் பதுங்கி இருக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.”
“நல்ல முடிவு தான் அது. என்று சொன்ன ராஜா, வீரமணியின் விலாசத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, “நீ அவனுடைய வீட்டில் மறைந்து இருப்பதையும் யாரிடமாவது உளறித் தொலைத்து விடமாட்டானே!’ என்று கேட்டான்.
“வீரமணி அப்படிப்பட்ட மோசமான நண்பன் அல்ல. எத்தனையோ முறை சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றி இருக்கிறான். அவன் மீது எப்பொழுதுமே எனக்கு நம்பிக்கையுண்டு.” என்று உறுதி கூறினான் நாதமுனி.
“அப்படியானால் சரி, நீ பத்திரமான இடத்தில் இருந்தால் சரி தான்” என்று சொன்ன ராஜா, அவனையும் கூட்டிக் கொண்டு வேகமாக வெளியேறினான்.
அதே நேரத்தில் சில போலீஸ்காரர்கள் ஜீப் காரில் வந்திறங்கி நாதமுனியின் வீட்டை முற்றுகை இட்டார்கள்!
– தொடரும்…
– சொட்டு ரத்தம் (மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1966, பிரேமா பிரசுரம், சென்னை.