
(1988ல் வெளியான கட்டுரை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
சிறுகதை – 1
சமீபத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் ரசமான சம்பவம் ஒன்றைச் சொன்னார். அது நம்மவரிடைக் கதை யைப் பற்றி எவ்விதமான அபிப்பிராயம் இருக்கிறது என் பதைக் காட்டுவதுடன், கதையின் தத்துவத்தையே விளக்கு கிறது. என்னுடைய நண்பரின் நண்பர் ஒரு இலக்கிய ரசி கர். பாவம், பண்பாடு, மரபு முதலிய சொல்லடுக்குகளைக் கொண்டு அம்மானையாடுபவர். “நாங்கள் வெளியிட இருக் கும் விசேஷ மலருக்கு ஒரு அரிய கட்டுரையாவது, கதையா வது, அனுப்பித் தரவேண்டும் எனக் கோருகிறோம்’ என அவருக்கு வந்திருந்த கடுதாசியைக் காண்பித்து, ”கட்டுரை எழுதுவதென்றால் சிந்திப்பதற்கு அவகாசமே இல்லை. ஒரு கதையாவது எழுதியனுப்பி விடலாமா என்று நினைக்கிறேன்’ எனத் தமது சங்கடத்தை என்னுடைய நண்பரி டம் பகிர்ந்துகொண்டார். எனது நண்பரும் சிரித்துக் கொண்டே, “அப்படியானால் இராத்திரியே ஒன்றை எழுதி நாளைத் தபாலில் அனுப்பி விடுங்கள்” என்று யோசனை சொல்லிவிட்டுப் போனார். மறுநாள் காலையிலும் அந்த ரசிகரின் கண்ணில் படவேண்டியேற்பட்டது, என் நண்ப ருக்கு. “என்ன சார், கதை எழுதி அனுப்பிவிட்டீர்களா?? என்று மரியாதைக்காகக் கேட்டார். அந்த ரசிகர் பொதுவாக நல்ல மனுஷர்; மனசில் உள்ளதை ஒளிக்க மாட்டார். “ஒட்டிப் புளுகுவதற்கு எவனுக்கு வருகிறது சார்? நேற்று ராத்திரி ராமசாமி எழுந்து நின்று அந்தச் சன்ன லையே பார்த்துக் கொண்டிருந்தான், என்று ஆரம்பித்து, முதல் வாக்கியத்தை எழுதினேன். ராத்திரி இரண்டு மணி யடிக்கிற வரைக்கும் ராமசாமி சன்னலையேதான் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் அப்படித்தான் திண்டாடிக் கொண்டிருக்கிறான். மேலே கதை ஓடவில்லை” என்று சொன்னார்.
இந்தச் சம்பவத்தில் ஒருரசமான ஆழ்ந்த உண்மையிருக் கிறது. கதை நன்றாக, வாய்ப்பாக, கவாச்சியாக அமைந் திருந்தால், நம்மாலும் எழுத முடியாதா என்ற மயக்க உணர்ச்சி தோன்றும்படி அவ்வளவு சுளுவாகத் தென்படும். தரை தெரியும்படியாக அவ்வளவு சுத்தமாக இருந்தால் ஆழம் புலப்படாதல்லவா? அது மாதிரிதான் இந்தக் கலை விவகாரம் எல்லாம். “பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போல்வரும் வெண்ணிலாவே இந்த வேகமுனக்காகாதோ!” ”விதியே கொடியாய் விளையாடுதியோ?” என்று வரும் அடிகளில் லகுவாக அமைந்திருக்கும் இயல்பு நம்மையும் பாட்டெழுத வைத்து, கேலிக்கு இடமாக்குகிறதல்லவா? இதுதான் கலையின் இயல்பு. வலிந்து கட்டிப் பேசுவது மாதிரி இருக்காது. சொல்லப்படும் விஷயம் எதுவாக இருந் தாலும், நம்மை அதில் ஒன்ற வைப்பதுடன், நாமும் செய் திருக்கலாமே என்ற மயக்கவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. பயன் கருதாது, தன் மயமாகி, லயித்து, ஒட்டிப் புளுகுவது தான் கதை.
இந்தக் கதை விவகாரத்திலே, சமீப காலமாக சிறுகதை என்ற சொல்லாட்சி ஒன்று அடிபட்டு வருகிறது. அந்தப் பதச் சேர்க்கைலே நமக்குப் புதிது. விக்கிரமாதித்தனின் அறுபத்தி நாலு பதுமைகள் சொல்லிய சின்னக் கதைகளும், கதைகள் தான்; ராமாய ணமும் கதைதான். சிறு கதை என் நம்மைப் பொறுத்த வரை அளவைத்தான் குறிப் பிட்டுக் காட்டி வந்தது. இப்பொழுது கொடுக்கும் விசேஷ அர்த்தத்தை அல்ல. இந்தப் பதச்சேர்க்கை வெளிநாட்டுச் சரக்கு.நமக்கு இந்தப்பதம் இங்கிலீஷிலிருந்து கிடைத்தது. இங்கிலீஷில் Short Story என்ற பதத்திற்கு, வார்த்தைக்கு, வார்த்தை மொழி பெயர்ப்புத்தான் சிறுகதை என்ற வார்த் தையும், இங்கிலீஷிலும் அந்தப் பதச்சேர்க்கை சமீபகால விவகாரந்தான். அளவைப் பிரதானமாகக்கொள்ளாது, அங் கும் அதற்கு விசேஷார்த்தம் கற்பிக்கப்படுகிறது. அவர் வலிந்து அப்பதச் சேர்க்கை மீது ஏற்றியுள்ள அர்த்தத் தைத்தான் நாமும் சிறுகதை என்ற பதத்திற்குக் கொடுத்து வருகிறோம். இலக்கியத்தில் இது ஒரு துறை. இந்த முயற்சி வெளிநாட்டுச் சரக்காக இருப்பதினால்தான், சாதாரண மான ரசிகர்கள் இது புரியாது என்று சொல்லி, மரபுக்குப் பொருந்தாது என முடிவு கட்டுகிறார்கள். மரபை ஒட்டிய கதைகளை மட்டுமே படித்தவர்கள், இதென்ன இடையிலே எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிக்கிறான், எனக்குப் புரிய வில்லையே எனச் சொல்வது இயல்பு. ஆனால் அகப் பொருள் துறைகளிலும் பல்வேறு மன அவசங்களைக் காட்டி ஒரு காட்சியை, ஒரு கதையைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் அற்புதமான பாட்டுகளை நுகர்ந்தவர்கள் கூட இதுபுரியவில்லை என்று சொல்லும்போதுதான் விசித் திரமாக இருக்கிறது. சிறந்த சிறுகதைகளுக்கு இலக்கண மாக யாப்பில் எத்தனையோ உண்டு; வசனத்தில் தோன்றி யுள்ள இன்றைய சிறுகதைகளைப் புரிந்துகொள்ளா தவர் கள் பழைய காவிய நுகர்ச்சியிலும் அதே நிலையில்தான் இருக்கிறார்கள்.
தமிழில் சிறுகதை என்பது சுமார் ஐம்பது வருஷத்து விவகாரந்தான். செல்வகேசவராய முதலியார் எழுதியுள்ள அபிநவக் கதைகள் என்ற சிறு தொகுதியை ஆரம்பமாக வைத்துக்கொண்டு கவனித்தால் இன்று நம்முடைய சாதனை பெருமைப்பட்டுக்கொள்ளக் கூடியதுதான்.
சிறு கதைகள் பிறந்து வளர்ந்த காலத்தை மூன்று பகுதியாகப் பிரிக்கலாம். செல்வகேசவராய முதலியாரி லிருந்து வ.வெ-சு. ஐயர் காலம் வரை ஒரு பகுதி. இதை வெறும் தனைக் காலம் என்று சொல்லவேண்டும். குறிப்பிடத் தக்க கதைகள் எதுவும் கிடையாது என்று பொதுவாகச் சொல்லலாம். இக்காலத்தில் பிறநாட்டுக் கதைகள், வாய் மொழியாக உலவி வந்தவைகள் எழுத்தில் அமைந்தன. அவற்றில் பெரும்பான்மையாக ஒரு கதை யிருக்கும்; அவற்றில் நடமாடும் பாத்திரங்கள் உயிர் பெற்று இயங்காது.ஆசிரியர் அவற்றை இயக்குவதற்காக, சூத்திரக் கயிற்றைப் பிடித்து இழுப்பதுங்கூட நமக்குத் தெரியும்.
இதற்கடுத்தபடியாக வ.வெ.சு. ஐயர் யுகம் என்று சொல்லவேண்டும். தமிழில் சிறு கதைக்கு உருவும் உயிரும் கொடுத்தவர் அவர்தான். ஒரு விதத்தில் இவரை ‘சிறு கதை யின் பிதா’ என்று ஆங்கில மரபை யொட்டிக் குறிப்பிட லாம். இவரது கதைத்தொகுதியான ‘மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்’ என்பதிலும் அவர் நடத்திய ‘பால பாரதி’ என்ற பத்திரிகையில் எழுதிய ராஜகோபாலன் கடிதங்கள் என்பவற்றிலும் அபூர்வமான கதைகள் பல உண்டு. குளத்தங்கரை அரச மரத்தை யார்தான் மறக்க முடியும்? அவருடைய கதைகளில் பாலையின் வெக்கை நம்மைப் பொசுக்கும். முகலாய அந்தப் புரத்து நந்தவனங் களின் வைபவம் நம்மைக் களிப்யூட்டும். கிரேக்க தேசத்துக் கடவுளர் நம் முடன் உறவாடுவர். பிரஞ்சு போர்க்கள ரத்த பயங்கரம் நம்மை விரட்டும். பிறநாட்டு மரபுகளையும் பெயர்களையும் நம்மால் ரசிக்க முடியாது என இன்றைய விமர்சகர்கள் சிலர் சொல்லிக் கொண்டிருப்பதற்குத் தகுந்த பதில் அவரது கதைகள். இவர் காலத்தில், மாதவையா, சுரப்பிமணிய பாரதியார், ராமாநுஜலு நாயுடு ஆகியோர்கள் கதைகள் எழுதி வந்தார்கள். மாதவையா, உலகத்தைச் சீர்திருத்தும் நோக்கத்துடனேயே பார்த்ததனால், அவர் விரும்பும் கருத்துக்களை வற்புறுத்துவதற்கு சவுக்கியமாக அமைந்த சாதனங்களாகவே கொண்டதால், கதைகள் உயிர்த் தத்துவம் இழந்த வெறும் உபாக்கியானங்களாக அமைந்து விட்டன. அவர் பதிப்பித்த பஞ்சாமிருதம் என்ற பத்திரிகையில் சில சிறந்த சிறு கதைகள் வெளிவந்துள்ளன. ”மூன்றில் எது?” என்று வெளிவந்தது இன்றும் ஞாபக மிருக்கிறது.டாக்டர் சிகிச்சை, நாட்டு வைத்தியம், கோயில் பிரசாதம் இம்மூன்றில் எது சாகக் கிடந்த குழந்தையைப் பிழைக்க வைத்தது என்பதுதான் கதையின் ஆதாரக் கேள்வி. அதிலே ஒரு தாயின் பரிதவிப்பு வெகு அழகாக விழுந்திருக்கிறது. எழுதியவரின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. ஸ்ரீமா தவையா திடீரென்று காலமானார். கடைசி யாக அவர் பதிப்பித்த இதழில் ‘கண்ணன் பெருந்தூது’ என்ற கதை பிரசுரிக்கப்பட்டுள்ளது – உருவ வாய்ப்புக்குச் சிறந்த உதாரணமாக அதைத்தான் சொல்லவேண்டும்.கதைப் பாத்திரங்களின் குண விஸ்திரமும் கதையின் போக்கும் பிர மாதம். அதில் எழுதியவர் யார் என்று குறிப்பிடப்பட வில் லை. நடையைக் கவனித்தால் மாதவையாவே எழுதி இருக்கக் கூடும் என ஊகிக்க இடமிருக்கிறது. ஸ்ரீராமாநுஜலு நாயுடு கதை சொல்லுவதில் சமர்த்தர். பாத்திரங்கள் உயிர்த் தன்மையுடன் இயங்குபவை. பெண்களைப் பற்றி அவர் கொண்டிருந்த கருத்துக்கள் விபரீதமானவை. கலையைப் பற்றியும் பெண்மையைம் பற்றியும் டால்ஸ்டாய் விசித்திர அபிப்பிராயங்களைத்தான் கொண்டிருந்தார். அதற்காக அவர் சிறந்த கலைஞன் என்பதை நாம் மறந்து விடு கிறோமா? அம்மாதிரியே ராமாநுஜலு நாயுடுவை நாம் பாவிக்கவேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக 1930-ம் வருஷத்துக்குப் பின் உப்பு சத்தியாக்கிரகத்தின் இலக்கிய அலையாக ஒரு புது வேகம் இலக்கியத்தில் ஏற்பட்டது. அதாவது எதையும் சிரிக்கச் சிரிக்க எழுத வேண்டும் என்று ஒரு பாணியை வகுத்து அந்தத் துறையில் சிலர் இறங்கித் திறமைகளைக் காட்ட முயன்றார்கள். இவர்களுள் பிரதானஸ்தர் கல்கி. இவர்களுக்குச் சிரிப்பு மூட்டக் கூடிய தன்மையில் எழுத வேண்டும் என்பதே பிரதான லட்சியம். ஹாஸ்யச் சுவை என்பது இயல்பாக அமைய வேண்டிய விவகாரமாதலால், வலிந்து கட்டிக்கொண்டு சிரிக்கவைக்க முயலுவது போட் டோவுக்காகச் சிரித்த மாதிரியாகத்தான்அமையும். கல்கியும், பிறரும் மேல்நாட்டு ஹாஸ்ய சாம்ராட்டுகளை மொழி பெயர்த்துத் தந்தார்கள். அவற்றை அனுசரித்தும் ஒட்டியும் பெயர்த்தும் எழுதினார்கள். கல்கி பிராபல்யத்துக்கு வந்தது அவர் சிரிக்கச் சிரிக்க எழுதுவார் என்பதிலிருந்துதான். ஆனால் பிற் காலத்தில் அவர் சிறுகதைத் துறையில் இறங் கிய பொழுது அவரது எழுத்துக்களில் மருந்துக்குக் கூட சிரிப்பு இல்லாமல் போனதற்குக் காரணம், ஹாஸ்யம் இவருக்கு இயல்பான குணம் அல்ல என்பதுதான். ஆனால், ஹாஸ்யமாகக் கதை எழுதக் கூடியவர்கள் தமிழில் உண்டு. அவர்களிருவர். எஸ். வி. வியும்கொனஷ்டையும். எஸ். வி. வியை விடகொனஷ்டையில் கலையம்சம் ரொம்பவும்நயமாக இருக்கும்; கதைப் பாணி புதிதாக இருக்கும். இந்த ஹாஸ்ய யுகத்தின் வேகம் ஒடுங்கும் நிலையில் தான் இன்னும் ஒரு பேரலை எழுந்தது. அதில்தான் சிறுகதை தமிழில் பூரண வடிவம் பெற்றது. இதைச் சிறப்பாக மணிக் கொடியுகம் என்று சொல்ல வேண்டும். இக்காலத்தில்தான் சிறு கதைக்கு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது. பிச்சமூர்த்தி, கு.ப.ரா., பி.எஸ். ராமையா சிதம்பர சுப்பிரமணியன் முதலியவர்களும், நானும் கதைகள் எழுத ஆரம்பித்தோம். வாழ்வுக்குப் பொருள் கொடுப்பது தான் கலை. சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மாணித்துக் காண்பித்தது. ‘பரமசிவன் வந்து வந்து வரம் கொடுத்துப் போவார், பதிவிரதைக் கின்னல் வரும் பழையபடி தீரும்’ என்றிருந்த நிலைமை மாறி நிலாவும், காதலும், கதாநாயகனுமாக சோபித்த சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர்நின்று நோக்க ஆரம்பித்தன.
தமிழ் மரபுக்கும் போக்குக்கும் புதிதாகவும் சிறப்பாக வும்வழிவகுத்தவர் ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால், ‘மௌனி’ என்ற புனைபெயரில் எழுதி வருபவரைத்தான் குறிப்பிட வேண்டும். அவரைத் தமிழ்ச் சிறுகதையின் திரு மூலர் என்று சொல்ல வேண்டும். அவர் மொத்தத்தில் இது வரை பத்துக் கதைகள் தான் எழுதியிருப்பார். கற்பனையின் எல்லைக் கோட்டில் நின்று வார்த்தைக்குள் அடைபட மறுக்கும் கருத்துக்களையும் மடக்கிக் கொண்டு வரக்கூடியவர் அவர் ஒருவரே. தமிழிலே நட்சத்திரக் குழந்தைகள், சிவசைலம், எகிங்ருந்தோ வந்தான், கடவுளும் கந்தசாமி பிள்ளையும் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கதைகள் ஒப்புயர்வற்றவை. இன்று சிறு கதைகள் வளர்ந்து வரும் லட்சியம், அதன் வரம்புகளையும். சாதனைகளையும் நிர்ணயிப்பது கடினம். இன்று கதைக்கெனவே தமிழில் பல பத்திரிகைகள் வெளிவருகின்றன. அவை ஒவ் வொன்றும் ஒவ்வொரு பாணியைப் பின்பற்றி அற்புதமான பயன்களை அளித்து வருகின்றன. இவற்றில் சிறப்பாகக் கலைமகளைக் குறிப்பிட வேண்டும். பிரதான மானவை எனச் சொல்லத் தக்கவை பல அதில்தான் வெளி வந்துள்ளன. இவை தவிரச் சாதனையை அளவிட்டுக் காட்டுவதுபோல, கோவையாக சிறு கதைகள் ஏராளமாக வெளிவந்துள்ளன. அவை இன்றைய நிலைமையை ஓரளவு தெளிவாகப் பிரதிபலிக்கும்.
சிறுகதை – 2
கதைகேட்பதும் கதை சொல்லுவதும் தொன்று தொட்டு வந்த பழக்கம். ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா இருந்தான்’ என்று ஆரம்பிக்கும் இளமை மாறாத கிழக்கதைகள் முதல் இன்று இருக்கும் எழுத்தாசிரியர்களின் கனவுகளான சிறு கதைகள் வரை, எல்லாம் மனி த உள்ளத்தின் அடையமுடியாத ஆசைகளின் எதிரொலி. கதை என்றால் என்ன? எதுதான் சிறு கதை? சிறுகதையின் எல்லை என்ன? சிறுகதைக்கு என்று தனிப்பட்ட ரூபம் ஒன்று உண்டா? இதற்கெல்லாம் சூத்திரங்கள் ஒன்றும் கிடையாது. சிறுகதையின் எல்லை வளர்ந்து கொண்டே வருகிறது. ஒவ்வொரு கதை யாசிரியனும் எடுத்தாண்ட ரூபங்கள் எண்ணிறந்தன. இருக்கும் கதை களை வைத்துத்தான் இவைதான் சிறு கதை என்று நிர்ணயிக்க வேண்டும்.
சிறு கதையின் ஜீவநாடி ஒன்று, அதில் எடுத்தாளப் படும் சம்பவம் அல்லது நிகழ்ச்சி தனிப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும். சிறுகதை வாழ்க்கையின் சாளரம்.
கவிதையிலே ‘லிரிக்’ என்று ஒரு பகுதி உண்டு. ஒரு தனிச் சம்பவம், அல்லது உணர்ச்சி, அல்லது குணவிஸ் தாரம், அல்லது வருணணை எடுத்தாளப்படும், தனிப் பிண்டமான சிறு கவிதையை ‘லிரிக்’ என்று கூறுவார்கள். தமிழில் அதைத் தனிப்பாட்டு என்று அர்த்தப் படுத்திக் கொள்ளலாம். சிறுகதைக்கும், தனிப்பாட்டு என்ற லிரிக்கிற்கும் உள்ள வித்தியாசம் ஒன்றுதான். லிரிக்கிற்கு ரூபம் அவசியம்; சிறு கதையில் ரூபம் கதை எழுதுபவனின் மனோதர்மத்தைப் பொறுத்தது. இவ்வாறு அகன்ற எல்லைக் கோட்டிற்குள்தான் இலக்கியத்தின் சிறுகதைப் பகுதி அடங்குகிறது. சிறுகதை என்றால் அளவில் சிறிய தாக இருப்பது என்பதல்ல; எடுத்தாளப் படும் சம்பவம் தனி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.
சிறு கதைக்கும் நாவலுக்கும் உள்ள வித்தியாசத்தைக் கவனித்து விட்டு, பிறகு உதாரணமாக ஒரு சிறுகதையை எடுத்து அதன் கட்டுக் கோப்பைக் கவனிப்போம்.
சிறுகதை வாழ்க்கையின் சாளரம் என்றால், நாவல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக் கண்ணாடி.வாழ்க்கை யின் சிக்கல்களை, அதன் உயர்வை, அதன் சிறுமைகளை, உலாவும் பாத்திரங்களான மனிதக் கூட்டத்தின் சலனத்தில்
அவற்றின் குண விஸ்தாரத்துடன் சிருஷ்டிப்பதுதான் நாவல். நாவலுக்குக் கால எல்லை கிடையாது.சென்ற காலம், நிகழ்காலம். வருங்காலம் இவற்றின் நிகழ்ச்சியை மனோ தர்மத்தால் சிருஷ்டியின் மேதை குன்றாமல் கற்பனை செய்வதுதான் நாவல். சிறுகதை வாழ்க்கையின் ஒரு பகுதியை மற்றவற்றின் கலப்பை மறந்து ஏன், விட்டு விட்டுக் கவனிக்கிறது. நாவல், வாழ்க்கையை அப்படியே முழுசாக சிருஷ்டிக்க முயல்கிறது. இவைதான் ஆசிரியர் களின் இலட்சியங்கள். ஒவ்வொருவருடைய மனோ தர்மத் திற்கும் சிருஷ்டி சக்திக்கும் அநுபவத்திற்கும் தக்கவாறு நாவல்கள் பிறக்கின்றன.
சிறுகதையை வாழ்க்கையின் சாளரம் என்று சொன் னேன். உதாரணமாக ஒரு கதையை எடுத்து அதன் கட்டுக் கோப்பைப் பிரித்துப் பார்ப்போம். சிறுகதைப் பின்னலில் ஆரம்பம், மத்திய சம்பவம், அதன் வளர்ச்சி அல்லது வீழ்ச்சி என்ற மூன்று பகுதிகள் உண்டு. சாதாரணமான கதை களில் இம் மூன்றும் படிப்படியாக வளர்ந்து கொண்டே போகும். சமீபத்தில் எழுதப்பட்ட அமெரிக்கச் சிறுகதை களில் பழைய சம்பிரதாயமான ஆரம்பம் முடிவு என்ற இரண்டு பகுதிகளும் கிடையவே கிடையாது. கதை உச்சஸ் தானத்தில் திடீரென்று மத்திய சம்பவத்தின் ஆரம்பிக்கிறது. அதிலேயே முடிவடைகிறது. இன்னும் வேறு ஒரு விதமான கதைகளும் உண்டு. அவற்றில் முடிவு என்ற ஒன்று கிடையாது. அதாவது கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒருதூண்டு கோல், கதை முடியும் பொழுது அதைப் பற்றிய சிந்தனை முடிவடைந்துவிடாது; இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகிறது என்று சொன்னால் விசித்திர வாதமாகத் தோன்றும்; ஆனால் அதுதான் உண்மை. இம்மாதிரியாகக் கதை எழுதுகிறவர்கள் இந்த முறையின் சார்பாகக் கூறும் வாதம் ஒன்று. வாழ்க்கையில் ‘முற்றிற்று’ ‘திருச்சிற்றம்பலம்’ என்று கோடு கிழித்து விட்டு ‘ஹாய்’ யாக நாற்காலியில் சாய்ந்து கொள்ளும்படி ஏதாவது இருக்கிறதா? வாழ்க்கை எல்லையற்றது; மனந்தான் எல்லைக் கனவுகளைக் காண்பது. கடவுள் வாழ்க்கையின் கடைசிப்பக்கத்தை எழுதிவிடவில்லை; அவரால் எழுதவும் சாத்தியப்படாத காரியம். இதுதான் அவர்கள் கூற்று, கதை களுக்குச் சம்பவம் அவசியமா, இப்படிப்பட்ட விகற்பங்கள் இருக்கலாமா என்று பலர் கேட்கிறார்கள். கதைகள் அவரவர்களுடைய சுவையையும் ரசனையையுந்தான் பொறுத்தது. ஒரு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகப் பின்னுவது சிறுகதையில் ஒரு பகுதி. அவரவர்களுடைய அநுபவத் திற்கும் ரசனைக்கும் ஏற்றபடிதான் கதைகளைப் படிக்க முடியும். அதனால் இவை யெல்லாம் சிறுகதை அல்ல என்று கூறுவது அசட்டுத்தனம்.
உதாரணமாக ஸ்ரீ. பி. எஸ். ராமையா எழுதிய ‘பூச் சூட்டல்’ என்ற கதையை எடுத்து கதைப் பின்னலைக் கவனிப்போம. கதையில் எடுத்தாளப்படும் சம்பவம் நைந்த ஆனால் மிகவும் அபாயகரமான பொருளைப் பற்றியது; அதாவது ஒரு இளம் விதவையின் துன்பம். பழைய விஷயங்களை எடுத்து எழுதுவதுதான் மிகவும் அபாய கரமான விஷயம். வாசகன் எப்பொழுது, லேசில் பொறுமையை இழக்கக் கூடியவன் என்பதை எழுத்தாளர் கள் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும். ‘ஆமாம் அவ்வளவுதானா’ என்று பக்கத்தைத் தள்ளிக் கொண்டு போவதில் நிபுணன். அவனுக்குத் தெரிந்த விஷயத்தை, அதாவது அவன் காதுகள் புளித்துப் போகும்படியாகக் கேட்ட விஷயத்தை, மெய் மறந்து உட்கார்ந்து கேட்கும் படிச் செய்வது மிகவும் கடினமான காரியம். அதைச் சாதிப் பதற்கு எழுத்தாளர்கள் கையாளும் தந்திரங்கள் எத்த னையோ உண்டு, ‘பூச்சூட்டல்’ என்ற கதையில் ஆசிரியர் புதிய முறைகளைக் கையாளாமல், சம்பிரதாயத்திற்குட் பட்ட, ஆரம்பம் மத்திய நிகழ்ச்சி. முடிவு என்ற மூன்று அங்கங்களும் உள்ள சாதாரண முறையில் ஒரு சம்பவத்தை வருணித்திருக்கிறார். ஆனால் முறையில் புதுமை இல்லா விட்டாலும், கதை பின்னும் தந்திரத்தால், பழைய நைந்த விஷயத்திற்கு ஒரு புதிய மெருகு கொடுத்துவிடுகிறார்.
கதையில் ஒரு இளம் விதவை தன் சகோதரன் குழந்தைக்குப் பூ வைத்துப் பின்ன முயல்கிறாள். குழந்தை அவளையும் பூச்சூட்டிக் கொள்ளும்படி வற்புறுத்துகிறது. அதிலிருந்து அவள் மனது கலைந்து பின் நோக்கிப் பாய்கிறது. மனதின் பின் பாய்ச்சலில் அவள் பூர்வ கதை முழுவதும் சித்திரிக்கப் பட்டு விடுகிறது. முதல், ஆரம்பம், பிறகு சீதையின் மற்றொரு சகோதரனுடைய சாந்தி முகூர்த்தம். அந்தக் கோலாகலமான பகைப்புலத்தின்முன்பு சீதையின் துயரம், அவளது சகோதரனது தாராள மனது, தகப்பனாரின் கோபம் இவற்றின் மீது படிப்படியாக வளர்ந்து, சீதையின் கலியாணத்தில் முடிவடைகிறது. சீதையின் சகோதரன் தகப்பனாரைத் தன் வழிக்குத் திருப்ப எடுத்துக் கொள்ளும் வழிதான் வினோதமானது. ஆனால் திரும்பக் கூடாத மனிதனாக இருந்தால் அந்த வழியைத் தவிர வேறுஒன்றினாலும் மாற்றப்படமுடியாது. கதையின் முடிவில் சீதைக்கும் அவளது தந்தைக்கும் சமாதானத்தை ஏற்படுத்துவதும் அந்தச் சிறு குழந்தை தான். குழந்தை கதைப் பின்னலின் பொற்சரடு. சீதையின் புதிய வாழ்க்கைக்கும், அவள் விதவா விவாகம் செய்து கொண்டாள் என்பதைத் தவிர சாதாரண ஒரு பிராமணப் பெண்ணுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சீதையின் முதல் மணம் எப்படி மற்றவர்களால் நிச்சயிக்கப் பட்டதோ, அப்படியே அவளது இரண்டாவது மண வாழ்க் கையும் ஆரம்பமாகிறது. இதற்குப் பதிலாக சீதைக்கு ஒரு காதலனை சிருஷ்டித்திருந்தால் நடைமுறை உலகத்துக்குத் தவறுக்கும் அதற்கும் ஒரு பிரமாதமான வித்தியாசமும் இருந்துவிடாது. அதனால், விதவை மணத்தின் அவசியம் குறைந்துவிடுமேயன்றி உயர்ந்துவிடாது.
சிறுகதை, அதாவது தற்கால விமர்சனத்தின்படி கருதப்படும் சிறுகதை தமிழ் நாட்டிற்குப் புதிய சரக்கு. மேல்நாட்டு இலக்கிய கர்த்தர்கள் ஒரு நூற்றாண்டு பழகிய கையால் எழுதும் கதைகளுக்கும் தற்பொழுது தோன்றி இருக்கும் ஸ்ரீ.ந. பிச்க்மூர்த்தி, ஸ்ரீ. கு. ப. ரா. முதலான எழுத்தாளர்களின் கற்பனைகளுக்கும் ஏற்றத் தாழ்வைக் காணவே முடியாது.
சிறுகதை – 3
கதை சொல்லுவதும் கதை கேட்பதும் தலைமுறை தத்துவ மாய் வந்த பொழுதுபோக்கு. சமீப காலம்வரை, “ஒரே ஒரு ஊரில் ஒரே ஒரு ராஜா இருந்தான்….. என்று ஆரம்பிப்பதுதான் கதையின் முறை, வழக்கம், சம்பிரதாயம். பழைய கதைகளுக்கும் நாம் நடந்து மடியும் உலகிற்கும் சிறிதாவது தொடர்பு கிடையாது, இருக்க வேண்டுய அவசியமும் இல்லை, என்பது பழைய சம்பிரதாயம். தெரியாத விஷயங்களில், அல்ல, உலகத்தில் நடவாத விஷயங்களில் மனதிற்கு எப்பொழுதும் ஒரு பிரேமை. அதுதான் தற்பொழுது நடமாடும், துப்பறியும் கதைகளில் இருக்கும் மோகத்தின் அடிப்படையான காரணம்; பழைய கதாசிரியர்களின் சிருஷ்டி ரகஸியம்.
சிறுகதை என்பது தற்காலத்தில் எழுந்த மேனாட்டுச் சரக்கு. சிறுகதை என்றால் சிறியகதை, கொஞ்சப் பக்கங் களில் முடிந்து விடுவது என்பதல்ல. சிறுகதை என்ற பிரிவு இலக்கியத்தில், அதில் எடுத்தாளப்படும் பொருள் பற்றியது. ஒரு சிறு சம்பவம்; ஒரு மனோநிலை ஆகிய இவற்றை எடுத்து எழுதுவது. சிறுகதையில் முக்கிய சம்பவமோ, நிகழ்ச்சியோ அல்லது எடுத்தாளப்படும் வேறு எதுவோ, அது ஒன்றாக இருக்கவேண்டும். சில சமயங்களில் ஒரோர் சிறுகதை நூறு பக்கங்களுக்கு மேல் போகலாம். உதாரண மாக, மேனாட்டில் ஆங்கிலச் சிறுகதைகள் எப்பொழுதும் பக்கங்களில் அதிக நீளமாகவே இருக்கும். சாதாரணமாகப் பிரெஞ்சுக் கதைகளிலும் ருஷ்யக் கதைகளிலும் சுருக்கமாக விஷயத்தைப் புதிய மாதிரியில் எழுதப்படுகிறது. ஆங்கில நாட்டு கால்ஸ்வொர்த்தி, ஹார்டி, பிரெஞ்சு மொப்பஸான், அனதோலி பிரான்ஸு முதலிய சிறுகதை ஆசிரியர்கள் சிறு கதை என்ற இலக்கியப் பகுதியை மிகவும் திறமையாக எடுத்தாண்டிருக்கிறார்கள்.
சிறுகதை என்பது வாழ்க்கையின் சிறிய சாளரங்கள். இதற்கும் நாவலுக்கும் வித்தியாசம், நாவல் வாழ்க்கையை, அதன் பல்வேறு சிக்கல்களுடன், கொந்தளிப்புக்களுடன், அப்படியே சித்திரிக்க முயலுகிறது; சிறுகதை ஒரு சிறு சம்ப வத்தைத் தனித்த விஷயத்தை எடுத்து ஆளுகிறது என்பது தான். ஆங்கில நாவலாசிரியர்களான தாக்கரே, ஹார்டி, கால்ஸ்வொர்த்தி என்பவர்களின் நாவல்களை இதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். கால்ஸ்வொர்த்தி எழுதிய போர்ஸைட்ஸாகா என்ற நாவல் மூன்று தலை முறைகளை வருணித்து வருகிறது. அதாவது 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பித்து உலகயுத்தத்தின் வரை நாவல் நடந்த காலமாக எடுத்துக்கொண்டு, ஏராள மான கதாபாத்திரங்களுடன் காலத்தின் வளர்ச்சியோடு கதாபாத்திரங்களின் வளர்ச்சியையும் அதில் சித்திரித்திருக் கிறது. இதுதான் இம்மாதிரியாக ஒரு பெரிய கட்டுக் கோப்பில் அற்புதமாக எழுதப்பட்ட முதல் நாவல். ஹ்யூவால்போல் என்ற ஆங்கில நாவலாசிரியனும் இம்மாதிரி முயன்றிருக்கிறார். அது கால்ஸ்வொர்த்தி யிடனுடையது மாதிரி ஒரு வெற்றி என்று கூற முடியாது. கால்ஸ்வொர்த்தியின் ஒருநாவலையும்,ஒரு சிறுகதையையும் வாசித்தால், நாவலுக்கும் சிறு கதைக்கும் உள்ள வித்தியாசம் தெரியும்.
தமிழுக்கு, சிறுகதையும் புதிது. நாவலும் புதிது. தமிழ் இலக்கியத்தில், வசனநடையும் புதிது. இதனால் அவ்வளவு உயர்ந்த இலக்கியங்கள் இருக்காது என்று எதிர்பார்ப்பது சகஜம்; ஒரளவு உண்மை. தமிழ்நாட்டு நாவல்களை, இலக்கியத்தில் ஸ்தானம் பெறக்கூடிய நாவல்களை, வீரல் விட்டு எண்ணி விடலம். வேதநாயகம் பிள்ளைதான் தமது பிரதாப முதலியார் சரித்திரத்தில் நாவல் என்ற மேல் நாட்டுச் சரக்கைத் தமிழருக்கு அறிமுகப் படுத்துகிறார். இவரைத் தமிழ் நாவலின் தந்தை என்றே கூறிவிடலாம். அது, நாவலின் குறைகளை எல்லாம் தன்னுள் அடக்கியும், சுவைகுறையாமல் இருப்பதுதான் அதன் அழகு. அது உண்மையில் நம் நாட்டில் வழங்கி வரும் மரியாதை ராமன், தெனாலிராமன் கதைகளை ஒரே கதையில் திரட்டி வைக்கப்பட்டதுதான். அதற்குப்பிறகு, ரஜமையரின் ‘கமலாம்பாள் சரித்திரம்’. இதன் முற்பாதி நாவல், பிற்பாதி கனவு.ஹிந்து சமுதாயத்தில் எந்த அற்புத மும் சர்வசாதாரணம் என்று கருதப்படுவதினால் தான், நமக்கு அதன் சுவை கடைசிவரை குறை யாமல் இருப்பது போல் தோன்றுகிறது. உண்மையில் அந்த ஜீவப்பிரம்ம ஐக்கியம் வேதாந்தத்தில் அற்புதமாக இருக் கலாம். அது கதையின் ரஸனைச் சுவையைக் குறைக்கிறது என்பதில் தடையில்லை. மாதவையாவின் ‘பத்மாவதி சரித்திர’த்திற்குத் தமிழ்நாவலில் இரண்டாவது ஸ்தானம் தான் கிடைக்கும். மாதவையா தமது கதையில் தமிழ் நாட்டில் இருபது முப்பது வருடங்களுக்கு முன் இருந்த கிராம, பட்டின வாழ்க்கையை மிகவும் திறமையாகச் சித்திரித்திருக்கிறார். இருந்தாலும் அவருடைய யாவும் பிரச்சார மனப்பான்மையில் எழுந்தவையாதலின், அதிலும் பிரச்சாரத்தின் அமுலின்கீழ்தான் கதையின் போக்கு இருந்து வருவதாலும், கதாபாத்திரங்கள் அவ்வளவு திறமையுடன் சித்திரிக்கப்படவில்லை யாதலினாலும், அந்த நாவலை அவ்வளவு உயர்வாகச் சொல்ல முடியாது. இந்த வகுப்பில் ‘மைதிலி’, ‘திக்கற்ற இரு குழந்தைகள், ‘பொற்றொடி’ என்பவைகள் எல்லாம் இடம்பெறும். இவையாவும் தமிழ்நாவல்களின் வளர்ச்சியின் மைல்கடளாகக் கொள்ளலாமேயன்றி பூரண வளர்ச்சியைப் பெற்ற தமிழ் நாவலின் இக்ஷியமாக ஒன்றையும் கூறமுடியாது.
ஆனால் சிறு கதைகளில் நாம் அப்படிக் கூற முடியாது; சிறு கதைகள் தமிழில் அற்புதமாக அமைந்திருக்கின்றன. நான் படித்த பழைய கதைகளில் ‘கண்ணன் பெருந் தூது என்ற கதை தமிழ்ச் சிறு கதைகளின் இலக்ஷயம் என்றே கூறலாம். அதன் அமைப்பு வெகு அற்புதமாக விழுந்திருக் கிறது. குசிகர் குட்டிக் கதைகள் என்பவைகளைச் சிறுகதை என்ற ஹோதாவில் நாம் கவனித்தால் அதற்கு அவ்வளவாக ஒரு பெரிய ஸ்தானம் கொடுக்க முடியாது.
உ.வே.. அய்யரின் கதைகள் தமிழிலேயே எந்தநாட்டு நாகரிகத்தையும் உணர்ச்சியையும் சித்திரிக்கலாம். தற் காலத்து நாவலாசிரியர்கள் என்று சம்பிரதாயமாகக் கூறப் படும் மொழி பெயர்ப்பாசிரியர்களுடைய, தமிழுடையணிந்த வெள்ளைக்காரக் கதாபாத்திரங்கள் சித்திரிப்பது அனாவசியம், என்று எடுத்துக் காட்டும் ஒரு அளவு கோலாக இருக்கிறது. அவருடைய லைலா மஜ்னூன், எதிலிரொலியாள், அழேன்ழக்கே முதலிய கதைகளில் அன்னிய நாட்டுக் கதாபாத்திரங்கள் மிகவும் திறமையாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றன. அய்யரவர்களின் சிறுகதைகள் மிகவும் உயர்ந்த ரகத்தைச் சேர்ந்தவைகள். அவர் தமது சிருஷ்டிகளில் மனிதனின் மேதையை, தெய்வீகத் துயரத்தை, வீரத்தை, காண்பிப்பதில் களித்தார். இலக்ஷி யத்தை சிருஷ்டிப்பதில் லயித்தது.
ஆனால், மனிதனின் சிறுமைகளை, தப்பிதங்களை. அதில் அவன் நாடும் வெற்றியை, இலக்கியமாகச் சிருஷ்டிப் பதற்கு, நல்ல கலைத் திறமையுடன் சிருஷ்டிப்பதற்கு, வெகு காலம் சென்றது. தமிழிற்கே விமோசனம் கிடையாது என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெள்ளி முளைத்தாற் போல் சிறுகதை எழுதுகிறவர்கள் தோன்றி இருக்கிறார்கள். இவர்களுடைய எழுத்துக்கள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை. புதிய விஷயங் களில், முதலில் வெறுப்பு ஏற்படுவது மனித, அதாவது சாதாரண மனித இயற்கை. இந்த எழுத்தாளர்களின் கற்பனைகளில் யாவும் இடம் பெறுகின்றன. இவர்களுடைய எழுத்துத் திறமையின் நிரந்தர வாழ்வைப் பற்றி வருங் காலந்தான் கூற வேண்டும். ஆனால் இவர் களுக்குள் இரண்டு மூன்று பேர்களின் எழுத்துக்கள் சாகாத எழுத்துக்கள் என்று கூறலாம். ‘நட்சித்திரக் குழந்தை’யின் ஆசிரியரும், சமீபத்தில் கலைமகளில் வந்த ‘விஜயதசமி’ என்ற கதையின் ஆசிரியரும் தமிழ்நாட்டின் கற்பனைப் பொக்கிஷங்கள் என்று கூறவேண்டும். இவருடைய கலையுணர்ச்சியும், சிருஷ்டித்திறனும் இவர் களை எழுத்தாளர்களின் விதி விலக்காக்குகிறது. தமிழ்க் கதை வளர வேண்டுமானால் இவர்கள் சென்ற பாதையில் புதிய விஷயங்களை எழுதும் ஆற்றலுடையவர்கன் தோன்ற வேண்டும்.
– புதுமைப்பித்தன் படைப்புகள், முதற் பதிப்பு: டிசம்பர் 1988, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.