சித் புருஷர்கள்…!





ஒன்றும் புரியவில்லை! ஒருநாள் ரெண்டுநாளல்ல! அநேக நாட்களாய் அப்படித்தான் ஆயிரம் இடமிருந்தும் எங்கள் வீட்டு வாசல் கேட்டுக்கு முன்பாகவே கிடையாய்க் கிடக்கின்றன மூன்று நாய்கள்!. எதுக்கு?

அதான் ஒண்ணும் புரியலைனு சொன்னேனே?!
நான் வளர்த்தலை…! எங்க வீட்டு வாசலில் படுத்திருப்பதாலேயே இருக்கட்டும்னு சோறும் போடலை!. இருந்தும் இருக்கின்றன இலவச இணைப்பாய்!
ராத்திரி சரியா ராத்திரி வந்து படுத்துவிடுகின்றன. ஏன்? இவை யாராய் இருக்கும்?!
எங்கோ எப்போதோ எதிலோ கேட்டதோ, படித்தததோ!. ‘சித்புருஷர்கள்’ நாய் வடிவில்தான் வருவார்களாம்!. ஓகோ! அப்படியானால்….
அவர்கள்தானோ இவை?
இருக்கலாம். ஏனென்றால் எப்போதும் அமைதியாய். போகும் வரும் யாரையும் எதுவும் செய்யாமல் தங்களுக்குள்ளும் சண்டையிடாமல்!
பின் வீட்டுக்காரர் ஆசை ஆசையாய் ஞாயிறன்று வாங்கி வைத்த கோழிக்கறியைக் கவ்வீட்டுப் போன கடுவன் பூனையைக் கூட கண்டு கொள்ளாத ஆன்மிக அமைதியில் எதையோ எதிர்பார்த்துக் கொண்டு!
பூனையும், அவைகளோடு சண்டை போடாது! நாய்களும் அப்படியே!
‘சித்’ புருஷர்களான இவை எந்த ஞான தீட்சை தருகின்றன?!
“சீ…! நாயே…! தொட்டதுக்கெல்லாம் சண்டை போடறயே எதோ மாதிரி…?! நாங்க பாரு…! பூனையைக் கூட ஒன்றும் செய்யாமல் எங்களுக்குள்ளும் சண்டை போடாமல் அமைதிகாக்கிறோம்… நீ…?!”
நல்ல தண்ணிக்கும்.. கேன் தண்ணிக்கும் அடித்துக் கொள்ளும் விஷயத்தை விகடம் செய்து விளக்குகின்றனோ?!