சிதிலம் தாங்காத சிற்பிகள்…





(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12
அத்தியாயம்-9
இரண்டே நாளில் தயாரிப்பாளர்கள் சங்க பொதுக் குழு கூட்டம் தியாகராய நகரிலுள்ள பெரிய திருமண மண்டபத்தில் கூடியது, கிட்டத் தட்ட எல்லா தயாரிப்பாளர்களும் வந்திருந்தார்கள். நிறைய வாக்குவாதங்கள்.

“நாம நடிகர், நடிகைகளுக்குச் சம்பளம் நிர்ணயிப்பது எப்படி சரிபடும். அந்தந்த நடிகர் நடிகைகளுக்குன்னு தனிப்பட்ட மதிப்பு. மரியாதை, செல்வாக்கு இல்லையா?” கூட்டத்தில் யாரோ ஒருத்தர் சொன்னார்.
“அதுக்குத்தான் அவர்களுக்கு இன்னின்ன சம்பளம், ஏத்தம் இறக்கம்!” எவரோ அவருக்குப் பதில் சொன்னார்.
“அடுத்து உள்ளவர்களும் இவர்கள் அளவுக்கு வந்தா பதவி உயர்வு போல இவர்களுக்கும் அவர்கள் சம்பளம்..” இவருக்கு ஆதரவாய் இன்னொருவர் களம் இறங்கினார்.
“நடிகர்கள் ஒன்னு ரெண்டு இடத்தையெல்லாம் யார் நிர்ணயிக்கிறது?”
“மக்கள்தான்! ரசிகர்தான் இவர் நடிப்பு நல்லா இருக்கு. அவர் நடிப்பு நல்லா இருக்கு. ஒன்னு ரெண்டு மூணு நாலுன்னு முத்திரை குத்தி வைச்சிருக்காங்களே!”
“சரி. இன்னைய நிலைமையில யார் முன்னனி. ஒன்னு ரெண்டு மூணு நாலு?”
ஒருத்தர் எழுந்து அவர்கள் பெயர்களைச் சொன்னார்.
“ரொம்ப சரியாய்ச் சொல்லிட்டீங்க. இவர்கள் சம்பளத்தையெல்லாம் நிர்ணயம் செய்ய நாம யார்?” ஒருத்தர் அடுத்த கேள்வி கேட்டு அவரை மடக்கினார்.
“நாம முதலாளி!” அவர் இரண்டே வார்த்தைகளில் அவர் வாயை அடைத்தார்.
“இதை ஒப்புத்துக்க மாட்டோம்ன்னு அவர்கள் முரண்டு பிடிச்சா?”
“பிடிக்கட்டும்! புது முகங்களை அறிமுகப்படுத்துவோம்!“
“கூடாதுன்னு பழைய ஆளுங்க தகராறு செய்தால்?”
இன்னொருத்தருக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது.
“என்னய்யா கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு நேத்து நிலை இன்னைக்கு மாறிப்போச்சு. நம்மிடம் கைநீட்டி சம்பளம் வாங்கும் தொழிலாளி முதலாளி போல நடக்கிறான்! பார்த்துக்கிட்டு எப்படி சும்மா இருக்கிறது. மாத்த வேணாமா?” இருக்கையை விட்டு எழுந்து நின்று ஒருவர் கூவினார்.
“அமைதி! அமைதி!” சங்கத் தலைவர் எழுந்து இரு கைகளையும் உயர்த்தி கூட்டத்தில் சலசலப்பு வராமல் அமைதிப்படுத்தினார்.
“ஆமாங்க. நம்மகிட்ட சம்பளம் வாங்கும் தொழிலாளியான கதாநாயக நடிகன் முதலாளி போல எனக்கு இவ்வளவு வேணும்ன்னு நம்மகிட்ட அடிச்சுப் புடுங்கிறாப்போல அள்ளிக்கிட்டுப் போறான். அதோட விடாம தன்னை வளர்த்துக்க படத்துல கதையை அப்படி மாத்து இப்படி மாத்துன்னு ஓசிப் பணத்துலேயே உடம்பு, புகழ், செல்வம், செல்வாக்கு…எல்லாத்தையும் வளர்த்துக்கிறான். என்னமோ அவன்தான் இந்த படத்துக்கு எஜமான் போல கதையை மாத்தி கடைசியில அவன் வளர்ந்து நம்ம தலையில துண்டைப் போட வைக்கிறான். இதெல்லாம் சரியா?” ஒருத்தர் ஆவேசம் வந்தவர் போல் ஆடினார்.
“அன்னைய காலத்து சூப்பர் ஸ்டார் பாகவதர்லேர்ந்து அடுத்து எம்.ஜி.ஆர், சிவாஜி, நடிகை நடிகர்களெல்லாம் மக்கள் மத்தியில நிறைய செல்வாக்கு இருந்தும் முதலாளிகிட்ட கை நீட்டி பவ்வியமாய் சம்பளம் வாங்கினாங்க. இன்னைக்கு மொளைச்சு மூணு இலை விட்ட பசங்களெல்லாம் நாற்காலியில கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து நம்ம நிலமை தெரியாம பணம் வாங்குறாங்க.”
“இதுக்கெல்லாம் யார் காரணம்? நேத்துக்கு வந்த ஆளாய் இருந்தாலும் சரி. இன்னைக்கு வந்த பசங்களாய் இருந்தாலும் அவன் படம் வெற்றின்னா…. வெற்றிக்கு கதை இயக்குநர் காரணம்ன்னு தெரியாம நடிச்சவன் புண்ணியத்துலதான் படம் வெற்றியடைஞ்சுடுச்சுன்னு நெனைச்சு தயாரிப்பாளர்களெல்லாம் அவன் வீட்டுக்கு முன் வரிசை கட்டி நின்னு எனக்கொரு படம் பண்ணிக் கொடுங்கன்னு கெஞ்சறீங்க. அவனுக்கு உடனே புதுசா கிரீடம் மொளைச்ச தெம்பு. நம்பளால இவன் வாழ்றான், பணம் லாபம் சம்பாதிக்கிறான். சம்பளத்தை ஏத்தினா என்னன்னு ஏத்தறான். என்ன தப்பு ?“ ஒருத்தர் தயாரிப்பாளர்களையே சாடினார்.
அடுத்து …. நிறுத்தாமல் அவரே தொடர்ந்தார்.
“நாம அப்படி ஓடாம பணப்பெட்டியை வைச்சுக்கிட்டு உட்கார்ந்திருந்தோம்ன்னா…. ஐயா உங்க படத்துல நான் நடிக்கிறேன்னு தேடி வருவான். அப்படி இருந்தால் கதைக்குத் தகுந்த நடிகனைத் தேர்ந்தெடுத்து சம்பளம் கொடுக்கிறதிலேயும் நமக்குப் பிரச்சனை இருக்காது.”
“அந்த ஐயா சொல்ற கருத்து நல்ல கருத்து. தயாரிப்பாளர்கள் யாரும் பணப்பெட்டியைத் துாக்கிக்கிட்டு நடிகன் நடிகைகள் பின்னால போகாம் இருந்தோம்ன்னா…அவர்கள் நம்ம நிர்ணயத்தொகையை வாங்கிப்பாங்க. கம்பெனி போல நாம இருந்த இடத்திலிருந்தே சம்பளம் கொடுத்து வேலை வாங்கிக்கலாம். அப்படித்தான் நடக்கனும். அப்போதான் அவர்கள் நமக்கு அடங்கி நடப்பாங்க. எந்த பிரச்சனையும் இருக்காது. நாமும் நாம நினைச்சபடி படம் எடுத்து தயாரிப்பு செலவு அதிகம் போகாமல் படத்தை விடலாம்.” என்றார்.
“வளவள் பேச்சு வேணாம். நாம படத்துக்கு மொதலாளி. சினிமாத் தொழிலைக் கம்பெனியாய் நடத்துவோம். இயக்குநர் மேனேஜர் அடுத்து நடிகர் நடிகைகளேர்ந்து மத்த தொழில்நுட்பக் கலைஞர்கள் எடுபிடிகள் வரை எல்லாரும் படிப்படியாய் நமக்குத் தொழிலாளி. இப்படி சம்பளத்தை முடிவு செய்வோம். யாருக்கும் எந்த வித கெடுதலும் வராது.” ஒருத்தர் விசயத்திற்கு வந்தார்.
“சார்! ஒலிப்பதிவாளர் இசையமைப்பாளரெல்லாம் உதவி துணை மேனேஜர் பதவி சம்பளம் இருக்கட்டும். நடிகர் நடிகைகளைத் தலைமை குமாஸ்தா அளவுல வைச்சு அதிலேர்ந்து படிப்படியாய் குறைக்கலாம்.” கனகலிங்கம் யோசனை சொன்னார்.
“அவர் சொல்றது நல்ல ஐடியாங்கோ!” அவருக்கு ஆதரவாய் நாலு பேர்கள் குரல் கொடுத்தார்கள்.
“அப்படியே செய்யலாம். இந்த சம்பளத்துக்கு நடிகர்கிட்டே இருந்துதான் ஆட்சேபணை கிளம்பும். நடிக்க வரமாட்டாங்க.”
“வரலைன்னா போகட்டும்!”
“படம் எப்படி எடுக்க முடியும்?”
“களி மண்ணையும் சிற்பமாக்குறது இயக்குநர்கள் கையில். புது ஆட்களை வைச்சு எடுக்கலாம்.”
“நமக்கு உள்ள உரிமைகள் மத்தவங்களுக்கும் இருக்கு நடிகர் சங்கம் இப்படி ஒரு பொதுக்குழு கூட்டி இன்னாருக்கு இவ்வளவு சம்பளம் வேணும்ன்னு முரண்டு பிடிச்சா என்ன செய்ய?“
“ஆலோசனை செய்யலாம். சரி வரலைன்னா ஒதுக்கிடுவோம்.”
“அவர்கள் தடுத்தால் மறுத்தால்?”
“தேவை இல்லே. தயாரிப்பாளர்கள் சங்கத்தை இனிமே முதலாளிகள் சங்கம்ன்னு பெயர் மாற்றம் செய்துடலாம். அப்போதான் நம்ம ஆளுமை முக்கியம் தெரியும்!” ஒருவர் அடித்துச் சொன்னார்.
“எல்லாம் சரிங்க. நடிகர் நடிகைங்கள்ல முதல் அடுத்து இருக்கிறாப்போல இயக்குநர் ஒளி ஒலிப்பதிவாளர்ன்னு மத்த துறையிலேயும் திறமைசாளிகள் இருக்காங்களே!”
“அவர்களையும் தரம் பிரிச்சு சம்பளத்தை நிர்ணயம் செய்துடலாம்.”
“ஆக எல்லாத்தையும் முறைப்படுத்தி சினிமாவையே ஒரு நல்ல தொழிலாய் மாத்தப் போறீங்க. செய்யுங்க. செய்யுங்க.”
“கடைசியாய் ஒரு கேள்வி. நம்ப தீர்மானம் சம்பளத்துக்கு நடிகர் நடிகைகங்க ஒத்துவர மாட்டாங்க. அப்போ எடுத்துக்கிட்டு வர்ற படமெல்லாம் பாதியில நிக்கும். தயாரிப்பாளர்கள் நஷ்டமடைவாங்க. இந்த நஷ்டத்தை எப்படி சரி செய்ய?”
“சரியான கேள்வி!” கூட்டம் ஒரு நிமிடம் நிமிர்ந்து அமர்ந்தது. எல்லாரும் மௌனமாய் இருந்தார்கள்.
“நாம பொறுமையாய் இருந்து அவர்களை வழிக்குக் கொண்டு வந்தோம்ன்னா நஷ்டமடைய மாட்டோம். எத்தனையோ படங்கள் முடிஞ்சு விலையாகாமல் காலங்காலமாய் பொட்டியில கிடக்கு. அந்த நஷ்டத்தை ஒப்பிட்டுப் பார்த்து பொறுமையாய் இருந்தோம்ன்னா இந்த நஷ்டம் காலதாமதம் துாசு.” தலைவர் நிதானமாய் பதில் சொன்னார்.
“தலைவர் பேச்சுக்குக் கட்டுப்படுறேன். இவர்கள் வழிக்கு வந்து படம் வெளி வர்றதுக்குள்ளே மக்கள் ரசனை மாறிடும்.” இன்னொருவர் புதுக் கருத்தைக் கொண்டு வந்தார்.
“மக்கள் ரசனை மாறி இருக்கு மாறி இருக்குன்னு நாமதான் கண்ட படங்களை அவர்களுக்குக் கொடுக்கிறோம். ஆனா மக்கள் ரசனை என்னைக்கும் மாறலை. சதைப் படங்களைத் தவிர்த்து மக்கள் கதைப் படங்களுக்குத்தான் என்னைக்கும் ஆதரவு கொடுக்கிறாங்க.”
கேட்டவர் வாயை மூடிக் கொண்டார்.
“அப்போ தீர்மானம் போட்டு எல்லாத்தையும் சரி செய்துடலாமா?“ கேட்டு தலைவர் எல்லோரையும் பார்த்தார்.
“செய்யலாம்..!” அரங்கத்தில் பெரும்பாலான குரல்கள் மகிழ்ச்சி திருப்தியாய் ஒலித்தது.
தலைவர் செயலாளர்கள் ரொம்ப திறமைசாலிகள். படத்தின் ஒவ்வொரு பிரிவிற்கும் பொதுக்குழு மக்களிடையே கருத்துக்கணிப்பு செய்து தரம் பிரித்து அவர்கள் ஒப்புதல் பெயர்களிலேயே சம்பளமும் நிர்ணயம் செய்தார்கள்.
மறு நாள் தினசரிகளில்…
பரத் சிவா மோதல் எதிரொலி. தயாரிப்பாளர்கள் சங்கம் வாபஸ். நடிகர்களுக்கு எதிராக போர்க் கொடி. ‘முதலாளிகள் சங்கம்’ என்று பெயர் மாற்றத்துடன் அனைத்து நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக்க கலைஞர்கள் அனைவருக்கும் சம்பளப் பட்டியல் அறிவிப்பு…! என்று செய்தி வெளியிட்டு அந்த சங்கம் கொடுத்த சம்பளப்பட்டியலை வெளியிட்டது.
படித்த விநியோகஸ்தர்கள் சங்கத்திற்குச் சொரணை வந்தது. அடுத்து அவர்கள் அவசர அவசரமாக கூடினார்கள்.
நாங்கள் இந்தந்த நடிகர்கள் நடித்த படங்களை இன்னின்ன விலைக்குத்தான் வாங்குவோம் என்று படங்களுக்கு விலை நிர்ணயித்ததோடு இந்தந்த ஏரியாக்களுக்கும் படம் இன்னின்ன விலை என்று தீர்மானம் நிறைவேற்றி…அதை பத்திரிக்கைகளிலும் வெளியிட்டார்கள்.
பரத் உட்பட படித்த அனைவருக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது, திரைத்துறையின் கடைமடை தொழிலாளர்கள் கூட குதுாகலப்பட்டார்கள்.
சிவா, செல்லதுரை, நடிகர், நடிகைகள்தான் அதிர்ச்சியின் உச்சிக்குப் போய் இடிந்தார்கள்.
“என்னப்பா புயல் நம்ம பக்கம் வீசுது?” சிவா நண்பனைப் பார்த்துக் கேட்டான்.
“அதான் எனக்கும் யோசனை.முழிச்சிக்கிட்டாங்க.” செல்லதுரை தலையைச் சொறிந்தான்.
போன் மணி அடித்தது.
“ஹலோ!” சிவா எடுத்தான்.
“நான் நடிகர் சங்கத் தலைவர் பேசறேன்.”
“சொல்லுங்க?“
“பேசாம நீங்க சமாதானம் ஆகி இருக்கலாம்!” அவர் வருத்தமான குரலில் பேசினார்.
“என்ன சொல்றீங்க? பாதிக்கப்பட்டவனே நான்தானே! நான் எப்படி சமாதானம் ஆக முடியும்?”
“காலம் காலமா குட்டுபட்டவங்க இப்போ நிமிர்ந்துட்டாங்க. தயாரிப்பாளர்கள் சங்கம் முழிச்சுச்கிடுச்சு? மத்த நடிகர் நடிகைங்களெல்லாம் உங்களால பாதிக்கப்பட்டுட்டோம்ன்னு கொதிப்புல இருக்காங்க. இந்த நிலைமையை எப்படி மாத்த?”
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”
“நீங்க பரத்தோட சமாதானம் ஆகி நிலைமையைப் பழையபடி கொண்டு வரனும்.. இல்லே.. முதலமைச்சர் அளவுல சொல்லி எல்லாத்தையும் முறியடிக்கனும். இல்லே நீங்க ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து நடிகனால படம் ஓடுது என்பதை நிரூபிச்சுக் காட்டனும். அப்படி நிரூபிச்சா அவர்கள் நிர்ணயிச்ச சம்பளம் நம்மைக் கட்டுப்படுத்தாது.”
“எப்படி… எப்படி… நிரூபிக்க ? கதை இல்லாம கஷ்டப்பட்டு நடிச்சதெல்லாம் ஓடாம கிடக்கே?!” போனை வைத்தான்.
அத்தியாயம்-10
செய்திகளைப் படித்த பரத் கணேசுக்கு ரொம்ப உற்சாகம். “சிவாவுக்கு ஆப்பு அடிக்கப் போய் மத்தவங்களுக்கும் வெடி வைச்சாச்சு…” கணேசு சத்தமாக சொன்னான்.
“வா போய் தயாரிப்பாளர் சங்கத் தலைவருக்கு நன்றி சொல்லி வருவோம்!“ பரத் கிளம்பினான்.
“அதுக்கு முன்னாடி இன்னொரு சேதி.” எழுந்த கணேசு பரத்தை நிறுத்தினான்.
“என்ன?“
“நன்றி சொல்றதோட நிறுத்திடாம. நின்ன பட வேலையைத் தொடரனும். அதுக்கு ஏற்பாடு செய்யனும்.”
“அது முடியாது.”
“ஏன்?“
“நல்லா யோசனைப் பண்ணிப் பாரு. சிவா தடுத்த படத்துல நடிகர் நடிகைகள் நடிக்கிறாங்க. இப்போ பட உலகத்துக்கு நடிகர் சங்கம் எதிரி. இல்லாத சட்ட திட்டம் சம்பளம் வேற. எப்படி நடிக்க வருவாங்க..?”
“வேறு புதுப்படம் எடுப்போம்!“
“தயாரிப்பாளர்?”
“இப்போ தயாரிப்பாளர்களெல்லாம்தான் சிவாவுக்கு எதிர்கட்சி நமக்கு ஆதரவு. நடிப்புக்குப் புது ஆட்களை உபயோகப்படுத்தலாம். நாம கொடுக்கிற சம்பளத்தை வாங்கிப்பாங்க.”
“முயற்சி செய்யலாம்!” என்று பரத் பொதுப்படையாக சொல்லி போர்டிகோவிற்கு வந்து காரை எடுத்தான்.
கணேசு ஏறி அருகில் அமர்ந்தான்.
கார் கோடம்பாக்கம் மேம்பாலத்தைத் தாண்டி வள்ளுவர் கோட்டம் பக்கம் திரும்பி லேக் ஏரியாவுக்குள் நுழைந்து ஒரு பெரிய பங்களா முன் நின்றது.
காம்பௌண்ட் சுவர் கதவு முன் கார் ஹாரன் ஒலித்தது.
காவலாளி எட்டிப் பார்த்து கதவைத் திறந்துவிட்டான்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் சிங்காரவேலு கவுண்டர் தோட்டத்துப் பக்கம் பார்த்தவாறு போர்டிகோவில் அமர்ந்து தினசரி படித்துக் கொண்டிருந்தார். கார் நின்ற சப்தம் கேட்டு நிமிர்ந்தார். அதற்குள் பரத் கணேசு அதிலிருந்து இறங்கி “வணக்கம் ஐயா!” அந்த பெரும்பணக்காரருக்கு கைகூப்பினார்கள்.
“வணக்கம் வாங்க….உட்காருங்க.” எதிர் நாற்காலிகளைக் காட்டினார்.
பரத் அவர் காட்டிய நாற்காலியில் உட்காருமுன்…”வாழ்த்துக்கள்!” அவர் வலக் கையைப் பிடித்து குலுக்கினான்.
அவனைத் தொடர்ந்து கணேசும் அப்படி குலுக்கினான்.
“எதுக்கு?”அமர்ந்தவர்களைப் புரியாமல் கவுண்டர் பார்த்தார்.
உங்க முயற்சி, துணிச்சல். சங்க நடிவடிக்கை மொத்தத்துக்கும்.” பரத் மலர்ச்சியாய்ச் சொன்னான்.
கவுண்டருக்குப் புரிந்தது. அவருக்கு எப்போதும் தன்னை உயர்த்திக் கொள்வது பிடிக்காது. “எல்லாம் என் நடவடிக்கை முயற்சி இல்லே. சங்க உறுப்பினர்கள் விருப்பம்.” அடக்கமாக சொன்னார்.
“நடிகர்களேர்ந்து படத்துல வேலை செய்யுற அத்தனை பேருக்கும் சங்கம் சம்பளம் வரையறுத்தது ரொம்ப சரி சார். அதிலும் கதாநாயக நடிகர் நடிகைகளுக்கு இவ்வளவுதான் கொடுப்போம்ன்னு வரையறுத்தது ரொம்ப சரி சார். உங்க முறையையே பின்பற்றி விநியோகஸ்தர்களும் படங்களுக்கு விலை வைச்சிருக்காங்க. இந்த சட்ட திட்டம் வரைமுறையெல்லாம் யாரும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காம தளர்த்தாம இப்படியே அமுலுக்கு வந்தால் சினிமா உலகம் நல்லா வரும் சார்.” பரத் தன் மனதிலுள்ளதை அப்படியே சொன்னான்.
கவுண்டர் மௌனமாக இருந்தார்.
“இந்த சம்பளம் சட்டதிட்டத்தையெல்லாம் நிலை நிறுத்தனும்ன்னா உடனே ஒரு படம் எடுத்து வெளியிடுறது நல்லது. நீங்க மனசு வைச்ச நான் தயார்.” என்று தான் வந்த விசயத்தையும் சொன்னான்.
கணேசுக்கு நண்பன் தயாரிப்பாளருக்குக் கொக்கிப் போட்டுவிட்டான் புரிந்தது,
“அதுக்கு வாய்ப்பு இல்லே!” என்றார் கவுண்டர்.
‘ஏன் சார்?” பரத்தோடு சேர்ந்து கணேசும் திடுக்கிட்டான்.
“நான் உங்களை வைச்சு படம் எடுத்தேன்னா சிவாவுக்கு என் மேல வருத்தம் வரும்.”
“நாம சிவாவுக்கு எதிர்க் கட்சி சார்!”
“இல்லே. நாங்க தனிக்கட்சி!”
“சார்ர்…!” பரத், கணேசு மெல்ல அலறினார்கள்.
“ஆமாம் நாங்க தனிக்கட்சி. எங்க சட்டதிட்டத்துக்கு சம்மதிச்சு யார் வந்தாலும் தயாரிப்பு வேலையில இறங்குவோம். அதுவும் இப்போ இல்லே சிவாவோட உங்க மோதல் முடிந்த பிறகு. சினிமா உலகத்துக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும்.” என்றார் அவர்.
பரத்திற்கு மனம் விழுந்தது. அடுத்து என்ன பேசுவதென்று புரியவில்லை.
“ஓ.கே. நன்றி சார்!” அவரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினார்கள்.
கார் லேக் ஏரியாவைத் தாண்டி ஆற்காடு ரோடு வரும் வரை இருவரும் பேசவில்லை.
“இப்போ என்ன செய்யலாம் பரத்?” அதன் பிறகே கணேசு மெல்ல கேட்டான்.
“எதுக்கு?” பரத்தும் காரை கவனமாய் ஓட்டிக் கொண்டே கேட்டான்.
“புதுப்படம். எடுக்க.”
“இவரே இப்படி சொல்லும்போது இன்னைய நிலைமை சிவா சொல்லை மீறி எவனும் நமக்கு படம் கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி இருக்கும்போது நாமே தயாரிப்பு வேலையில இறங்கினா என்னன்னு யோசனை வருது.” தான் நினைத்து வந்ததைச் சொன்னான்.
“முடியுமா?”
“முடியனும்!”
“பணம்?“ கணேசு நண்பனைத் திகிலாய்ப் பார்த்தான்.
“நம்ம தலையை அடகு வைக்கனும்“
“பரத்!!“
“சம்பாதிச்ச காசு பணம், நம்மகிட்ட இருக்கிற சொத்து பத்து…”
“போதுமா ?“
“போறாது. கடனும் வாங்கனும். பழைய நிலைமைன்னா நம்ம கையில பணமே தேவை இல்லை. நாம அன்னைக்கே முன் பணம் கொடுக்க விநியோகஸ்தர்கள் நிப்பாங்க. வெளிநாட்டு படம் பூ சை போடுற பெட்டியோட வந்து உரிமம். சேட்டிலேட், தொலைக்காட்சி உரிமம்….எல்லாம் சேர்ந்து படத்துக்கு நாம முதல் வேண்டியதில்லே. இப்போ விநியோகஸ்தர்கள் படம் முடிஞ்சாத்தான் படப்பெட்டியை வாங்குறதுன்னு முடிவுக்கு முடிவுக்கு வந்ததுனால வெளிநாட்டு வெளியீடு, சேட்டிலேட், தொலைக்காட்சி வெளியீடு சம்பந்தமா கொஞ்சம் பணம் கிடைக்கும். அதையும் சிவா புகுந்து கெடுக்க வாய்ப்பு உண்டு. கெடுத்துடுவான். ஆக மொத்தப்பணமும் நாமதான் போட வேண்டி இருக்கும்.”
‘எப்படியோ சமாளித்து படம் எடுத்தாலும் வெற்றிப்படமாக அமையாமல் தோல்வி படமாக அமைந்து விட்டால் எல்லாம் போய் நடுத்தெருவிற்கு வரும் நிலைமை!’ கணேசுக்கு நினைத்துப் பார்க்க நடுங்கியது.
“இந்த ஆபத்தான முயற்சி தேவையா?” நடுக்கம் மாறாமல் கேட்டான்.
“தேவை இல்லேதான். ஆனா…போர்ன்னு இறங்கின பிறகு புற முதுகு காட்டுறது கோழைத்தனம். வாழ்வோ சாவோ முடிவு தெரிஞ்சுக்கனும்.”
கணேசுக்கு நண்பன் பிடிவாதக்காரன் புரிந்தது.
“நடிகர் நடிகைகள்?”
“பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்து புது நடிகை நடிகர்களை தேர்வு செய்யலாம்…!”
“அதுக்கு நடிகர்கள் சங்கத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பாதா?”
“கிளம்ப வாய்ப்பில்லே. கிளம்பினாலும் நானும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர். அந்த சங்கத்து சட்ட திட்டப்படி இன்ன சம்பளத்துக்கு நடிக்க சம்மதமான்னு தயாரிப்பாளர்கள் தயாரித்த சம்பளப்பட்டியலை எடுத்து விட்டால் அவர்கள் சங்கத்தை மீறி நடிக்க வரமாட்டாங்க. பிரச்சனை கிடையாது”.
“எல்லாம் சரி என்றாலும் படம் படுத்து நடுத்தெருவிற்கு வந்து விட்டால்…?” கணேசுக்குள் பயம் விடவில்லை.
“நல்லா யோசனை செய்து இறங்கு பரத். அடிபட்டால் நிமிர்றதுக்கோ சமாளிச்சு நிக்கிறதுக்கோ நாம டாடா, பிர்லா, பெரிய பணக்காரர்களில்லே. தடுக்கி விழுந்தால் அதல பாதாளம். நாம… நடு ரோடு நாற்சந்தி ஒரு பய திரும்பி பார்க்க மாட்டான். இதுல சிவா இடையூறு. எதிர்ப்பு வேற. நிலமை நிலமை ரொம்ப மோசமாய்ப் போகும். அடுத்துப் பார்க்கிறவனெல்லாம் திமிர்னல அழிஞ்சானுங்கடான்னு காறித் துப்புவானுங்க.” பயத்தைச் சொன்னான்.
“எதை எடுத்து வந்தாய் இழப்பதற்கு ? எல்லாம் இங்கிருந்தே பெறப்பட்டது !என்கிற கீதா உபதேசம் ஞாபகம் வருது கணேசு. இந்த வாய்ப்பு வசதியெல்லாம் நாம இந்த சினிமாவால பெறப்பட்டது. தோற்றால் அதை அங்கேயே தொலைத்துப் போவதில் என்ன தப்பு?” நிதானமாக சொன்னான்.
கணேசுக்கு கேட்க நன்றாக இருந்தது. நண்பன் பிடிவாதம் தெரிந்திருந்ததால் அடுத்து என்ன பேசுவதென்று தெரியவில்லை.
பரத் காரை மயிலாப்பூ ரில் ஒரு பிரதான பெரிய பங்களா முன் நிறுத்தினான். அடைத்த காம்பௌன்ட் கேட் திறக்க ஹாரன் அடித்தான்.
கூர்க்கா திறக்கவில்லை. அவன் கதவிற்கு அப்பால் நின்று முகம் தெரியும் ஓட்டை வழியே எட்டிப் பார்த்தான்.
“சார் இருக்காரா?“ பரத்தான் கேட்டான்.
“இருக்கார்!“
“நான் வந்திருக்கேன்னு சொல்லு?”
கூர்க்காவிற்குப் பரத்தைத் தெரியும். அவன் தன் அறையிலிருந்து இன்டர்காம் எடுத்து அனுமதி கேட்டு அப்புறம் வண்டி உள்ளே நுழையும் அளவிற்கு இரண்டு கதவுகளையும் அகல திறந்து விட்டான். கார் உள்ளே நுழைந்த பிறகு அடைத்து அவன் வேலையை அவன் சரியாய்ச் செய்தான். காரை விட்டிறங்கி பங்களாவிற்கு நுழைந்ததுமே வரவேற்பறையில் ராம் சேட்ஜி திண்டில் அமர்ந்திருந்தார். பரத் தலையைக் கண்டதும் “வாங்கோ வாங்கோ…” வரவேற்றார்.
“எப்படி இருக்கீங்க சேட்ஜி?”பரத் விசாரித்து அவர் அருகில் அமர்ந்தான். கூடவே கணேசும் அமர்ந்தான்.
“நல்லா இருக்கேன். நீங்க?”
“நல்லா இருக்கேன்!”
“சிவாவோட சண்டை?”
“எப்படித் தெரியும்?!”
“பேப்பர்ல படிச்சேன்!”
“ஒ… ஒரு சின்ன உதவி ?”
“சொல்லுங்கோ…”
”நான் ஒரு படம் எடுக்கலாம்ன்னு இருக்கேன். பணம் வேணும்..”
“உங்க சொத்து பேர்லதான் கொடுக்கலாம்.”
“அது போதாது அதுக்கும் மேல….”
“படம் எடுக்கிற அளவுக்கா ?!”
“ஆமாம்.”
“வெத்ததுத் தாள்ல கையெழுத்துப் போடுறீயா ? மொத்த சொத்துக்கும் பணம் தர்றேன்?”
“போடறேன்!”
– தொடரும்…