சிதிலம் தாங்காத சிற்பிகள்…





(2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6
அத்தியாயம்-3
சிவா அமெரிக்காவிலிருந்து தொலைபேசி செய்தான்.

பரத் தன் கைபேசியை எடுத்து, “ஹலோ!” என்றான்.
“வணக்கம். எடிட்டிங் முடிஞ்சுடுச்சா?”
“முடிஞ்சு டப்பிங் வேலைக்குத் தயாராய் இருக்கு சார். நீங்க வந்ததும் அடுத்த வேலையைத் தொடங்கலாம்.”
“இப்போ நீங்க எங்கே இருந்து பேசுறீங்க?”
“கோவாவுல இருக்கேன். அடுத்த படத்துக்கான லொக்கேசன் பார்த்துக்கிட்டு இருக்கேன்.”
“அடுத்த படம் ஆரம்பிச்சுட்டீங்களா?எந்த கம்பெனி ?!” சிவாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.
“என் படத்தை அரைகுறையாய் விட்டுட்டு எப்படி அடுத்தப்படம் தாவுனீங்க..?” குரலில் கொஞ்சம் கோபம் இருந்தது.
“புதுக் கம்பெனி. மாலிக் புரடெக்சன் சார். உங்க படம் நான் தொட்ட வேலை சீக்கிரம் முடிஞ்சுடுச்சு. பாக்கி வேலைக்கு நீங்க இருக்கனும். வர லேட்டாகும்ன்னு டயத்தை வீணாக்காம இறங்கிட்டேன்.”
“என்ன படம்?”
“பேர் இன்னும் வைக்கலை.”
“அடுத்த கட்ட வேலை டப்பிங், இசைச் சேர்ப்புக்கெல்லாம் நீங்க இருக்க வேணாமா?“
“கண்டிப்பா இருக்கனும்.”
“வேற கம்பெனிக்காக அடுத்தப் அடுத்தப் படத்துக்கான வேலையை ஆரம்பிச்சுட்டீங்களே. எப்படி இருப்பீங்க?”
“அதை நான் சமாளிச்சுக்கிறேன். நீங்க படத்தை வந்து பார்த்துட்டு நல்லா இருக்குன்னு ஒப்புதல் சொன்னீங்கன்னா நான் கண்டிப்பா வந்து கலந்து பாக்கி வேலையெல்லாம் முடிச்சுடுவேன்.”
“எப்படி இருந்தால் என்ன. நமக்குப் பிரச்சனை இல்லாமல் இருந்தால் சரி.” என்ற முடிவிற்கு வந்த சிவா “படம் நல்லா வந்திருக்கா?” கேட்டான்.
“வந்திருக்கு சார். இருந்தாலும் நீங்க பார்த்து சொல்லனும். திருப்திப்படனும்.”
“நான் வந்து பார்க்கிறேன்.”
“எப்போ வர்றீங்க?”
“நாளன்னைக்கு வருவேன்.”
“லேப்ல படம் இருக்கு சார். நீங்க வந்ததும் போட்டுப் பார்த்துட்டு எனக்குப் போன் பண்ணுனீங்கன்னா நான் வந்து அடுத்த கட்ட வேலையைத் தொடங்கலாம்!”
“நல்லது. வைச்சுடுறேன்.” வைத்தான்.
அருகிலிருந்த கணேசுக்கு நண்பன் யாரிடம் பேசினான் என்பது புரிந்தது,
“சிவா வந்து காட்டுக்கத்தலாய்க் கத்தப்போறான்!” எச்சரித்தான்.
“கத்தட்டும்.!”
“கண்டிப்பா தகராறு நடக்கும்!”
“நடக்கட்டும்!“
“எப்படி சமாளிக்கப் போறே?”
“சமாளிச்சு தானே ஆகனும் தம்பி ! பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம்?”
சென்னைக்கு வந்து குடும்பத்தையெல்லாம் பத்திரமாக வீட்டில் சேர்த்துவிட்டு ஸ்டுடியோவிற்கு வந்து லேபில் இருந்த படத்தை வாங்கி தனியே போட்டுப் பார்த்த சிவாவிற்கு படம் அதிர்ச்சியாய் இருந்தது.
ஒவ்வொரு காட்சி ஷாட்களையும் நான்கு, எட்டு கேமராக்கள் வைத்து சுட்டது.
“எதற்கு சார் அநாவசியமாய் இத்தனைக் கேமாராக்கள்?” என்று சிவா கேட்க….
“நீங்க பெரிய நடிகர் சார். இப்போ இருக்கிற உங்களுடைய இமேஜை இருக்கிறதைவிட இன்னும் நல்லா உயர்த்தனும். அதுக்கு உங்க நடிப்புத் திறமையை இன்னும் தெளிவா காட்டனும். கோணங்கள் புதுசா இருக்கனும். அதுக்குத் தேவை!” என்று சொல்லி செய்தது.
தினம் ரஷ் போட்டுப் பார்த்த போதுகூட பரத்திடம்… “உங்க ஐடியா சூப்பர். இந்த கோணம் நல்லா இருக்கு எடுப்பாய் இருக்கு. எடிட்டிங்ல இதை சேர்த்துக்கலாம்” என்று சொன்னவைகள் எதுவும் இடம் பெற வில்லை. மாறாய் இந்த சொதப்பலை விட்டுடுடலாம் என்று சொல்லி ஒதுக்கப்பட்ட விலக்கப்பட்டவைகள் சேர்க்கப்பட்டிருக்கிறது. மொத்த படமும் நன்றாக இல்லை. சரியாக இருக்கக்கூடாது என்று வேண்டுமென்றே செய்தது போல் இருக்கிறது! – நினைக்க அவனுக்குள் இருந்த ரத்தம் சூடாகியது.
நிதானித்தான்.
‘பெரிய பட்ஜெட் நட்சத்திர இயக்குநர். விபரம் தெரியாத ஆளில்லை. தொட்டதெல்லாம் பொன்னாக்கும் கை, மூளை. இப்படி செய்ய வேண்டிய காரணம் ? ஆள் இல்லாததால் பரத் தண்ணியைப் போட்டுக் கொண்டு மப்பில் நன்றாக இல்லாததையெல்லாம் சேர்த்துவிட்டானா? இல்லை… இவன் இல்லாமல் வேலை தெரியாத ஆளை வைத்து சீக்கிரம் வேலையை முடிக்க…. அவன் குட்டிச்சுவராக்கி விட்டானா? பரத்திற்கு விசயம் தெரியுமா தெரியாதா? பொறுப்பில்லாமல் கோடிக்கணக்கில் யார் வீட்டுக் காசை யார் விரயம் பண்ண?’ நினைக்க… கைபேசி எடுத்து எண்களை நசுக்கினான்.
“பரத்!”
“சொல்லுங்க சார்?”
“எடிட்டிங்க யார் செய்தா?” கொஞ்சம் கோபத்தை அடக்கிக் கேட்டான்.
“நான்தான்!”
“உண்மையைச் சொல்லுங்க. நீங்க செய்யலை!”
“ஏன் சார்?“
“படம் சரியா வரலை. நல்லா இல்லே.!”
“சரியா பார்த்தீங்களா… நல்லா இருக்கு சார்!”
“இப்போ எங்கே இருக்கீங்க?”
“கோவாவுலதான் சார்!“
“எப்போ வருவீங்க?”
“இன்னும் ஒரு வாரம் ஆகும் சார்!”
“உடனே வாங்க.”
“சா…சாரி. ஒரு வாரம் பொறுத்துக்கோங்க. அடுத்த வாரம் நான் கண்டிப்பா ஆஜர்!”
“என் படத்தை முடிக்காம அடுத்தப் படத்தைத் தொட்டு பேஜார் பண்றீயா?!” சிவாவிற்குள் சடக்கென்று கோபம் கொப்பளிக்க வெடித்தான்.
‘படம் பாழ். ஆள் சூடாகி விட்டான்!’ பரத்திற்குப் புரிந்தது. எதிர்பார்த்தது நடந்து விட்டது. இனி பிடித்துக் கொள்ள வேண்டியதுதான்.
“சார்! மரியாதையாய்ப் பேசுங்க.” குரலில் சூடு ஏற்றினான்.
“படத்தைக் கெடுத்தவனுக்கு மரியாதை கெடையாது!”
“அப்போ வர முடியாது!”
“வரமுடியாதுன்னா..நடக்கிறதே வேற.”
“மிரட்டல் வேணாம். படம் நல்லா இருக்கு. விபரம் தெரிந்தவர்கள்கிட்ட போட்டுக் காட்டுங்க. தெரியும்.”
“எனக்கும் புரியும். விளையாடாதீங்க.”
“உங்களுக்கு நடிக்க மட்டும்தான் தெரியும். அதுவும் சரி இல்லாத நடிப்புன்னு நாட்டுல இருக்கிற எல்லாருக்கும் தெரியும். நீங்க கோபப்படாம அடுத்தவங்க கிட்ட இந்தப் படத்தைப் போட்டுக் காட்டிட்டு அடுத்து எனக்குப் போன் செய்யுங்க. பார்க்கலாம்!” சிவாவை எவ்வளவு சீண்ட முடியுமோ சீண்டி பரத் கைபேசியை அணைத்தான்.
‘தன் நடிப்பைப் பற்றி தனக்கேத் தெரியுமென்றாலும் அதைக் குறை சொல்லி, குத்திக் காட்டி, தொழில் நுட்பம் தெரியாதென்றும் அவமானப்படுத்தி…’ சிவாவிற்கு முகத்தில் நேரடியாய் குத்துப்பட்ட ஆத்திரம். என்ன செய்வதென்று தெரியவில்லை.
இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிவு வந்தது. ஓருவேளை நாம் ஆத்திரத்தில் கொட்டி விட்டோமா?! விளைவு பரத் தன்னைத் திருப்பி பேசி விட்டானா?! ஒருவேளை நமக்குத் தெரியாத தொழில் நுட்பங்கள் இயக்குநர்களுக்குத் தெரியுமா? அவர்கள் சொல்வார்களா? மவனே! அவுங்ககிட்ட போட்டுக் காட்டிட்டு அப்புறம் வைச்சுக்கிறேன் உன்னை! பல்லைக் கடித்து அணைத்து அடுத்து எண்களை அழுத்தினான்.
காதில் வைத்து….”இயக்குநர் பாசு சாரா?“ கேட்டான்.
“ஆமாம்.”
“நான் சிவா பேசுறேன் சார். இப்போ நீங்க எங்கே இருக்கீங்க?”
“என் அலுவலகத்துலதான். அடுத்த படத்துக்கு என் உதவியாளர்களோடு கதை விவாதத்துல இருக்கேன்!”
“உடனே வரமுடியுமா?”
“ஏன், என்ன விசயம்?”
“என் படத்தைப் பார்த்து நீங்க அபிப்பிராயம் சொல்லனும்….”
“ஏன் நல்லா வரலையா? பரத் ஒழுங்கா செய்ஞ்சிருப்பாரே!?”
“திருப்திப்படலை. நீங்க பார்க்கனும்.”
“தொழில் முறையில ஒருத்தர் செய்ஞ்சதை இன்னொருத்தர் பார்த்து அபிப்ராயம் சொல்றது தப்பு. எங்களுக்குள்ளே ஒருத்தருக்கொருத்தர் வலி வரும்.”
“அதெல்லாம் வராது சார். நாம ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். என்னை வைச்சி நீங்க படம் எடுத்திருக்கீங்க.. என் முன்னேற்றத்துல உங்களுக்கு அக்கரை உண்டு. அடுத்து நான் பரத்கிட்ட அனுமதி வாங்கித்தான் உங்களை அழைக்கிறேன். படம் எனக்குத் திருப்தியாய் இல்லே சார். விசயத்தை… பரத்கிட்ட சொன்னேன். தொழில் நுட்ப முறையில நான் நல்லா பண்ணி இருக்கேன் அது உங்களுக்களுக்குப் புரியலை. மத்தவங்ககிட்ட போட்டுக் காட்டி தெளிவு படுத்திக்கோங்க சொன்னார் சார்.” சிவா பரிதாபமாக சொன்னான்.
“அவர் எங்கே?”
“நான் ஊர்ல இல்லாததுனால எடிட்டிங் முடிச்சு வைச்சுட்டு அவர் அடுத்த பட வேளையை ஆரம்பிச்சு கோவாவுல லொக்கேசன் பார்க்குறார்.”
‘எந்த இயக்குநரும் ஒரு படத்தைச் சுத்தமாக முடித்துவிட்டுத்தான் அடுத்தது தாவுவார்கள், தொடுவார்கள். இது முரண்டுபாடு. எங்கோ தப்பு. இவர்களுக்குள் தகராறு.’
பாசுவிற்குப் புரிந்தது.
‘யார் தகராறு. குளறுபடி.! தெரிய ஆசை.’
“ஓ.கே. நான் வர்றேன் ஆனா இன்னைக்கு முடியாது.” சொன்னார்.
‘மற்றவர்களும் இப்படி சொன்னால் என்ன செய்ய?’ என்ற யோசனை வந்தது. உடனே அவர்களைக் கூட்டுவதும் கஷ்டம் புரிந்தது.
“ஓ.கே. நாளைக்குப் பத்து மணிக்கு ஏ.வி.எம் வந்துடுங்க.” கைபேசியை அணைத்தான்.
அதே சமயம் பல வெற்றிப் படங்களைத் தந்த பழம்பெரும் இயக்குநர் பண்டரிநாதன் நினைவில் வந்தார். தன் அழைப்பிற்கு அவரிடம் எப்போதும் மறுப்புக் கிடையாது. கண்டிப்பாய் வருவார். மறுக்க மாட்டார். நினைத்தான். உடன் எண்களை அழுத்தி விசயத்தைச் சொல்லி அழைத்தான்.
“உடம்பு சரி இல்லே நான் வரமுடியாதேப்பா.” அவர் தயவாய் சொன்னார்.
“கார் அனுப்பறேன் சார்.”
‘பழக்க வழக்கம். விடமாட்டான். விட்டாலும் வருத்தம் வரும்.’ – அவருக்குப் புரிந்தது.
“சரி” வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார்.
அடுத்து இவனை அறிமுகப்படுத்திய ‘இயக்குநர் இலக்கண’த்திற்குப் போன் செய்தான்.
“படப்பிடிப்புல இருக்கேன்ப்பா!”
”சார். எனக்காக ப்ளீஸ்…” கெஞ்சாத குறையாய் அழைத்தான்.
“அப்படின்னா நேரத்தை மாத்து காலை 6.00 மணிக்கு ஆரம்பி. எட்டரைக்கெல்லாம் படத்தைப் பார்த்து முடிச்சி அபிப்பிராயம் சொல்லிட்டு நான் படப்பிடிப்புக்குப் போறேன்.” என்றார்.
“சரி” அணைத்தான். மீண்டும் அடுத்தவர்களுக்கெல்லாம் தொலைபேசி செய்து ஆறு மணிக்கு வரமுடியுமா கேட்டான். அவரவர்களுக்கும் அடுத்த வேலை பார்க்க அது சரியான நேரமாக இருக்குமென்பதால் ஒத்துக் கொண்டார்கள்.
அத்தியாயம்-4
மறு நாள் காலை 8.30.
தியேட்டரை விட்டு வெளியே வந்த எந்த இயக்குநர்கள் முகங்களும் சரி இல்லை. பரத் சுத்தமாக பழிவாங்கி இருக்கிறான். தெளிவாகத் தெரிந்தது. இருவருக்கும் படப்பிடிப்பில் மனவலி, கருத்து வேறுபாடாக இருந்தாலும் ஒருத்தனை அழிக்க தன் தொழிலில் குறை செய்து தன்னையுமா அழித்துக் கொள்வான்? என்பதுதான் எல்லோருக்குள்ளும், யோசனை… குழப்பம்.! இவர்கள் மௌனம் சிவாவை உறுத்தியது.
“என்ன சார் யோசனை?” கேட்டான்.
“வந்து அபிப்பிராயம் சொல்லாமல் போவதும் தவறு. குறை சொல்வதும் குற்றம். பரத் பெரிய இயக்குநர். குறை சொன்னால் நாளை நேரடியாகவோ பத்திரிக்கை மூலமாகவோ குதறவும் வாய்ப்புண்டு.” விழித்தார்கள்.
”என் முன்னேற்றத்துல பங்கெடுத்தவங்க நீங்க. அதே சமயம் மனசுல பட்டது எதையும் துணிச்சலாய்ச் சொல்வீங்க. சொல்லுங்க சார்?” சிவா இயக்குநர் இலக்கணத்தைப் பார்த்துக் கெஞ்சாத குறையாய்க் கெஞ்சினான்.
அவருக்குள் கொஞ்சம் துணிவு வந்தது. மெல்ல தைரியத்தை வரவழைத்துக் கொண்டு..
“சிவா! படம் சொதப்பலாய்த்தான் இருக்கு. ஆனா..பரத் எந்த நெனப்புல செய்தார்ன்னு எனக்குத் தெரியலை…அவர் செய்ததுல ஏதோ காரணம் இருக்கு. அவர்கிட்ட சண்டை போடாமல் அந்த விசயத்தைத் தெரிஞ்சுக்கிறதாய் இருந்தால் நான் உண்மையைச் சொல்றேன்.” என்றார்.
“சொல்லுங்க சார்?” இவன் கலக்கமாக அவரை ஏறிட்டான்.
“இந்த படத்துல அவர் தொழில் நுட்பம் எனக்குத் தெரியலை. தொழில் நுட்பமுமில்லே. படம் திரைக்கதை கோர்வை இல்லாம, காட்சி அமைப்புகள் சரி இல்லே. இதை படம்ங்குற பேர்ல வெளியே விடுறது தப்பு. உனக்குக் கஷ்டம், நஷ்டம். பெட்டிக்குள்ளே இருக்கிறது நல்லது”. சொன்னார்.
“சார்ர்…!” சிவா மெலிதாக அலறி பெரிதாகத் தன் தாக்கத்தை வெளிப்படுத்தினான்.
‘உங்களுக்குள்ளே பகை இருக்கு. அது… இந்தப் படத்துல தெளிவாய் தெரியுது. காரணம்…. தொழில் தெரியாத ஆள் இந்தப் படத்தை இயக்கலை. ஒரு திறமைசாலி இயக்கி இருக்கார். அவர் இந்தப் படத்தைக் கெடுக்கனும் ஓடக்கூடாதுன்னு நெனைச்சு இப்படி செய்திருக்கார்.” பாசு இன்னும் விளக்கினார்.
‘மலையோடு மோதி இருக்கிறான்!’ சிவாவிற்குள் ஆத்திரம் மூண்டது.
“என்ன சார் செய்ய?“ மெல்ல கேட்டான்.
“எந்த மோசமான படமும் ஓடினது இல்லே. ஆனா உனக்கிருக்கிற புகழ் ரசிகர்கள் கூட்டத்திற்கு இது நட்டப்படாமல் ஓடினாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லே. அதே சமயம் வெறும் ரசிகர்களால மட்டும் ஒரு படத்தைத் துாக்கி நிறுத்தி வசூலைக் கொடுக்க முடியாது. மத்தவங்களும் பார்க்கனும். எதுக்கும் விநியோகஸ்தர்கிட்ட போட்டுக் காட்டி அடுத்த வேலையை ஆரம்பி. அவுங்கதான் மக்கள் ரசனைகளை நாடிப் பிடிச்சுப் பார்க்கிறவங்க. படம் ஓடாதுன்னா அடுத்து எதுவும் செய்யாம பொட்டியில போட்டுடு,” தெளிவாக பண்டரிநாதன் சொன்னார்.
“சார் சொல்றதுதான் சரி. அப்படியே செய்.” இயக்குநர் இலக்கணம் சிவாவிற்கு உத்தரவிட்டுவிட்டுச் சென்றார்.
மற்றவர்களும் புறப்பட்டார்கள்.
‘படத்தைப் பெட்டியில் போடுவதென்றால் 100 கோடி நஷ்டம்!’ நினைக்க நெஞ்சு நடுங்கியது சிவாவிற்கு.
‘நஷ்டம் கூட பெரிய இழப்பில்லை. அடுத்தடுத்து சம்பாதித்துக் கொள்ளலாம், ஆனால் பரத் இப்படி தன்னை நஷ்டப்படுத்த வேண்டிய காரணம்? அவமானப்படுத்த வேண்டிய அவசியம்? யார் தனக்கு எதிரி. எவர் இவனுக்கு இப்படி செய்ய துண்டுகோள்? முதலாவது வருமா?’ நிறைய யோசித்து.. விநியோகஸ்தர்கள் எண்களை அழுத்தினான்
‘பேபி பிரிவியூ தியேட்டருக்கு’ வருமாறு அவர்களுக்குச் சேதி சொன்னான்.
அவர்கள் சிவா படத்தினால் எந்த காலத்திலும் நஷ்டப்படாதவர்கள். ஆள் வலிய அழைத்தது…ஏதோ அதிர்ஷ்டம் அடித்தது போல் ஓடி வந்தார்கள்.
ஆனால் படம் பார்த்தவர்கள் முகங்களில் திருப்தி இல்லை. பேய் அடித்திருந்தது.
“என்ன சார்?” சிவா விநியோகஸ்தர்கள் சங்க தலைவரைப் பார்த்தான். அவர் தலைகுனிந்து கொண்டு மெல்ல….”எங்க முன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க தலைவா.” என்றார்.
சிவா படமென்றால் பூசை அன்றைக்கே எல்லா ஏரியாக்களும் விற்றுவிடும். நான் முந்தி நீ முந்தி போட்டிப் போட்டுக் கொண்டு கொட்டுவார்கள். அப்படித்தான் இந்தப்படமும் விற்று இருந்தது. முன் பணம் கொடுத்திருந்தார்கள். கணிசமாக வந்து படப்பிடிக்கு உதவியது.
“என்ன சார் சொல்றீங்க?” அதிர்ச்சியாகப் பார்த்தான்.
“ஒரு காட்சிகூட ஒழுங்கா ஓடாது. உங்க ரசிகர்கள் ஆத்திரத்துல தியேட்டரை உடைச்சுடுவாங்க. நஷ்டம் நாங்க கொடுக்க வேண்டி வரும்.. வருத்தப்படாதீங்க. பணத்தை திருப்பிடுங்க.” அவர்கள் பேச்சு தெளிவாக இருந்தது.
சிவா கொஞ்ச நேரம் யோசித்து ஒரு முடிவிற்கு வந்தான்.
“ஓ.கே நான் ஏற்பாடு பண்றேன்.” என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, “செல்லதுரை! படத்தைத் துாக்கிப் போட்டு நஷ்டக்கணக்கு எழுது” என்றான்.
“எழுதறது சுலபம். ஆனா…. ரசிகர்கள் ஏமாறுவாங்க.”
“வெளியிட்டோம்ன்னா இதே ரசிகர்கள் சாணி அடிப்பாங்க.”
“நஷ்டம்?”
“வெளிப்படத்துல நடிச்சு கொடுத்துடலாம். அடுத்து பரத்தை உதைக்கனும்!”
“சிவா!!” செல்லதுரை அதிர்ந்தான்.
“இந்த அளவுக்கு நஷ்டப்படுத்தியவனைக் கையைக் காலை உடைச்சு தொழில் செய்ய முடியாத படிக்கு அடிக்கனும்.” சிவா முகம் பயங்கரமானது.
“அவனை அடிச்சு உதைக்கிறது அவ்வளவு சுலபமில்லே.” செல்லதுரை சொன்னான்.
“ஏன்?”
“நம்மகிட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது போல அவன்கிட்ட ரவுடிங்க கூட்டமிருக்கு. பரத் கிட்ட இருக்கிற அத்தனை உதவி இயக்குநர்களும் ரவுடிங்க. பேட்டையிலிருந்து வந்தவங்க.”
நிசம். பரத்திடம் உள்ள உதவியாளர்களெல்லாம். சுத்த ரவுடிகள். ஒரு கிராமத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பு. அங்குள்ள பெரிய கை கிராமத்து மைனருக்கு நடிகை மீது ஆசை. ஒரு நாள் ராத்திரி பரத்தைச் சந்தித்து கொஞ்சம் காசை நீட்டி தன் ஆசையைச் சொன்னான்.
பரத் நடிகர் நடிகைகளுக்காக வக்காலத்து வாங்குபவன் இல்லை என்றாலும் தன் படப்பிடிப்பென்று வரும் போது எல்லாருக்கும் தலையாய் இருந்து பாதுகாப்பு தருபவன் அவன்தான்.
அதனால் “எல்லா நடிகைகளும் அப்படி இல்லை சார்.. அதிலும் என் யூனிட்ல உள்ள பெண்கள் சுத்தம். இது சுத்தப்படாது. சரி படாது!” – சொல்லி திருப்பி அனுப்ப முயற்சித்தான்.
வந்தவன் ரொம்ப விபரமான ஆள் “தம்பி! நாட்டு நடப்பெல்லாம் எனக்கும் தெரியும். உன் நடிகை போன மாசம் விபச்சார வழக்குல பிடிபட்டிருக்கா. மரியாதையாய் அனுப்பலைன்னா…அடுத்த நாள் இங்கே இருக்க முடியாது. படப்பிடிப்பை நடத்த முடியாது.” என்று அவன் காரமாக சொன்னான்.
வந்த இடத்தில் வம்பு வேண்டாமென்று பரத்திற்கு அப்போதும் அவனிடம் சுமூகமாக போக ஆசை.
“அதெல்லாம் வேணாம். நாங்களும் காதுல பூ வைச்சிக்கிட்டு வரலை. இங்கே படப்பிடிப்பு நடத்த அரசாங்கத்துக்கிட்டே இருந்து அனுமதி போலீஸ்வரை பாதுகாப்பு கேட்டுக்கிட்டுத்தான் வந்தோம். அதெல்லாம் ஒன்னும் நடக்காது. போங்க.” அமைதியாய்ச் சொன்னான்.
மைனருக்கு ஏழரை நாட்டு சனி போல. ராத்திரி பத்து மணிக்கு மேல் தன் ஆட்களுடன் வந்து நடிகை மீது கை வைக்க….பரத் போலீஸ் உதவியெல்லாம் எதிர்பார்க்கவில்லை
“யார்டா அவன்?…” சத்தம் போட்டு நேரடியாகவே தன் ஆட்களுடன் களத்தில் இறங்கி விட்டான்.
அன்று ராத்திரியே மைனர் பலத்த காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதி. களத்தில் இறங்கிய இவனுக்கும் உதவி இயக்குநர்களுக்கும் சிறுசிறு காயங்கள். இது போல நிறைய சம்பங்கள்.
“என்ன யோசனை ?” சிவா தோள் மீது கை போட்ட செல்லதுரை அவனைத் தன் பக்கம் திருப்பி, “பரத் எப்படி தோல்மேல கை போட்டு நம்ம கழுத்தை அறுத்தானோ அப்படியே நாமும் அறுக்கனும். இரும்பை இரும்பால வெட்றாப்போல. வைரத்தை வைரத்தால அறுக்கிறதைப் போல. நாமும் செய்யனும்..” என்றான்.
“விளையாடுறீயா ?! அவன் என்னைக்குமே ஜாக்கிரையான ஆள். இப்போ சண்டை வேற. எப்படி தோள்ல கை போட முடியும்?” செல்லதுரை அதைப் பற்றி யோசிக்கவில்லை. எப்படி, என்ன பதில் சொல்வதென்றும் புரியவில்லை.
“என் படத்தை இப்படி பாழ்படுத்திட்டான்னு ஒரு வழக்குப் பதிவு செய்து நஷ்ட ஈடு வாங்கலாம்!” என்ற சிவா “வழக்கு எப்படி வேணுமின்னாலும் தீர்ப்பாகலாம்.” தொடர்ந்து சொல்லி நிறுத்தினான்.
“அப்படின்னா அவனை ஒன்னும் பண்ண முடியாது. மறந்து மன்னிச்சு விட்டுடலாம்ன்றீயா?” செல்லதுரைக்கு பரத்தை விட மனசில்லை.
”ச்சேச்சே! என் அகராதியில மறப்பு, மன்னிப்பு என்கிற வேலையே கெடையாது.” சிவா முகம் இறுகியது.
“என்ன செய்யப் போறே?”
“அவனுக்கு எந்த அளவுக்குத் தொந்தரவு கொடுக்கனுமோ கொடுத்து இந்த தொழிலுக்குள்ளே தலை தூக்காத அளவுக்கு அடிக்கனும்.” வெளியே வெறித்து சொன்னான்.
கோவாவை விட்டு திரும்பிய பரத்திற்கு சிவாவிடமிருந்து எந்தவித தகவலும் வராதது குறித்து ஆச்சரியம்.
“என்னப்பா. எதிரிகிட்டே இருந்து எந்த தகவலும் இல்லே.” கணேசைக் கேட்டான்.
“அதான் எனக்கும் தெரியலை. ஒருவேளை நம்ப சதி தெரிஞ்சு போச்சா?”
“அப்படித்தானிருக்கும்.!” சொல்லி தினசரியை விரித்தான்.
‘சிவா படம் வெளி வருவதில் தாமதம். மொத்தப்படமும் சரி இல்லை என்று பெட்டிக்குள் அடைப்பு!’ – செய்தி கொட்டை எழுத்தில் இருந்தது. படித்த கணேசுக்கு மகிழ்ச்சியாக இருந்தது
“இங்க பார்டா!” அருகிலிருந்த தன் நண்பனிடம் காட்டினான்.
பார்த்த பரத்திற்கும் மகிழ்ச்சி.
கணேசுக்குத் தலைகால் தெரியவில்லை. இதைக் கொண்டாட இரவு எட்டு மணிக்கு மேல் ‘ஆனந்தன் பாரில்’ புகுந்தான். வசதியாய் உட்கார்ந்து தண்ணி அடிக்க இடம் தேடினான்.
“ஹேய்!“ மூலை நாற்காலி ஒன்றில் இருந்த ராமு இவனைப் பார்த்து உற்சாகமாய்க் கையசைத்தான்.
அவனும் சினிமாத் துறையில் உள்ளவன். கணேசுக்கு ரொம்ப பழக்கம். ஜோடி சேர்ந்து விட்ட சந்தோசம் அவனை நோக்கி சென்றான். எதிரில் அமர்ந்தான். சிறிது நேரத்தில் அவர்கள் மேசை பாட்டில் சைடிஸ்களால் நிறைந்தது. போதையும் ஏறியது. அது ஏறியதுமே கணேசுக்குள் இருப்பது வெளியே வந்தது.
“என் ஆளு சிவாவுக்கு அடிச்சான் பாரு ஆப்பு!” என்றான்.
“என்ன?”
“தன்னை மிஞ்சினவன் எவனுமில்லேன்னு பய ஆட்டம் போட்டான். இவன் நான் இருக்கேன்னு வைச்சான்.” ஆரம்பித்து …எல்லா விபரத்தையும் கொட்டினான்.
மறுநாள் காலையிலேயே ராமு.. கணேசிடம் வாங்கிய செய்தியை சிவாவிடம் சொன்னான்.
சிவாவும் செல்லதுரையும் ஒருவரையொருவர் கோரமாகப் பார்த்தார்கள்.
– தொடரும்…