சிதிலம் தாங்காத சிற்பிகள்…

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 2,892 
 
 

 (2019ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4

அத்தியாயம்-1

காலை மணி ஆறு. விருகம்பாக்கத்திலுள்ள ஒரு பங்களா கேட் முன் தின, வார, மாத சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கை நிருபர்கள் அனைவரும் கையில் பேனா, பென்சில், குறிப்பு எழுத நோட்பேட், பேட்டி எடுக்க டேப்ரிக்கார்டர், புகைப்படம் பிடிக்க காமிரா சகிதம் கூடி இருந்தார்கள்.

காக்கி யூ னிபார்மில் கூர்க்கா காம்பௌன்ட் பெரிய கேட்டை அடைத்து பூ ட்டி இருந்தான். அருகிலுள்ள சின்ன கேட்டருகில் உள்ள பூ தன் இருப்பிடத்தின் பக்கம் நின்றிருந்தான்.

வெளியே நிற்பவர்கள் இவன் எப்போது கேட்டைத் திறப்பான் என்று காத்திருந்தார்கள். அவன் சீக்கிரம் எப்போது கதவைத் திறப்பான் என்பதைப் போல் பாவமாய்ப் பார்த்தார்கள். காவலாளி என்ன செய்வான் பாவம். இவர்களை உள்ளே அனுப்ப பங்களாவிலிருந்து இவனுக்கு உத்தரவு வரவில்லை. ஒரு மணி நேரத்திற்கும் மேல் நின்று அலுத்துப்போன சினிமா எக்ஸ்பிரஸ் நிருபர் கோதண்டம், “சார் எழுந்திருச்சிட்டாங்களா?” கூர்க்காவைக் கேட்டான்.

“தெரியலை!” அவன் ரத்தினச் சுருக்கமாகப் பதில் சொல்லி விட்டு தன் கடமையில் தவறாமல் விரைப்பாக நின்றான்.

“வழக்கம் போல எப்போ எழுந்திரிப்பார்?” கேள்வி கேட்டவனே மறுபடியும் கேட்டான்.

அவன் வேலைக்குப் புதிது. இப்போதுதான் சினிமா நட்சத்திரத்தை அதுவும் உச்சபட்ச நட்சத்திரத்தைப் பேட்டி எடுக்க வந்திருக்கிறான். அவனுக்குப் பேட்டி எடுக்கும் ஆவலை ஆவலை விட ஆளை நேரில் அருகில் சென்று பார்க்கும் ஆர்வம்.

“ஐயாவுக்குப் படப்பிடிப்பு இருந்தா தினம் காலையில அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்திரிச்சுடுவாங்க. இல்லேன்னா ஆறுமணிக்கு எழுந்திரிப்பாங்க”. கூர்க்கா கேட்டிற்கு அந்தண்டை நின்றே பதில் சொன்னான்.

கோதண்டம் மணிக்கட்டைத் திருப்பி கடிகாரத்தைப் பார்த்தான். “மணி ஏழரை. எழுந்திரிச்சிருப்பாரே!” என்றான்.

“ஐயா ராத்திரி படப்பிடிப்பு முடிஞ்சு ரொம்ப லேட்டா வந்தாங்க” என்றான் கூர்க்கா.

கோதண்டத்திற்கு அதற்கு மேல் அவனிடம் கேள்வி கேட்க துணிவில்லை.

“போய்யா அப்பால” என்று மரியாதை இல்லாமல் பேசி துரத்தி விட்டுவிட்டால் என்ன செய்வது என்கிற பயம். காரணம் அங்கு அந்த அளவிற்குக் கெடுபிடி.

சிவா வயது 35. சினிமா உலகில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நின்று குப்பைக் கொட்டும் உச்சபட்ச நட்சத்திரம். உள்ளே நுழைவதற்குத்தான் அவன் கம்பெனி கம்பெனியாக ஏறி, காலில் விழாத குறையாய் இயக்குநர் தயாரிப்பாளர்களைச் சந்தித்தான். கஷ்டம்.! நுழைந்த பின் தொட்டதெல்லாம் பொன். இவன் அறிமுகமாகிய முதல் படமே நுாறு நாட்கள். நாட்கள். படம் நூறு நாட்களைத் தாண்டி ஓடினாலும் அடுத்து இவனுக்குப் படங்கள் வந்து குவியவில்லை. கஷ்டப்பட்டு இரண்டாவது படத்தில் புகுந்தான். அது 125 நாட்களைத் தாண்டி ஓட… எல்லார் பார்வையும் இவன் மேல் தாவியது, ஆங்காங்கே ரசிகர் மன்றங்கள் துவங்கப்பட்டு இவன் படங்கள் என்றாலே தியேட்டர் வாசலில் வானளாவிய கட்டவுட். அதற்கு பாலாலும் தேனாலும் அபிஷேகம், மாலை என்கிற அளவிற்கு உயர்ந்து விட்டான். இவனின் ரசிகர் மன்றத் தலைவர் இவனுடன் எப்போதும் நிழலாக இருக்கும் ஆத்ம நண்பன் செல்லதுரைதான்.

சிவா முதல் ஐந்து படங்களிலேயே தன் திறமையைக் கண்டு கொண்டு விட்டான். தன் உழைப்பில் பிறர் ஏன் லாபம் அடைய வேண்டும் என்று….. அப்புறம் எல்லாம் சொந்த தயாரிப்பில் இறங்கி விட்டான். எல்லாமே நுாறு நாட்களைத் தொட்ட, தாண்டிய படங்கள். தோல்வி படங்கள் என்று இவன் சரித்திரத்தில் இல்லை. அதனால் சினிமா உலகில் இவனுக்குத் தனி மரியாதை, செல்வாக்கு அதிகம். இவன் சொன்னால் யாரும் கேட்பார்கள். இவனுக்குப் போட்டி இவன் தானேத் தவிர வேறு எவரும் இல்லை.

கூர்க்கா இருப்பிடத்தில் உள்ள இன்டர்காம் அடித்தது. உள்ளே புகுந்து அவசரமாக அவன் எடுத்து “ஹலோ !“ என்றான்.

“நான் செல்லதுரை பேசுறேன்ப்பா !“ குரல் அலட்சியமாக வெளிவந்தது.

“சொல்லுங்க சார்.”

“எல்லா பத்தரிக்கைக்காரங்களும் வந்துட்டாங்களா ?“

“ரெண்டு மணி நேரமா நிக்கிறாங்க சார்.”

“சார் முழிச்சு குளிச்சுக்கிட்டிருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல அவுங்களைச் சந்திக்க தயாராகிடுவார். நீ பத்திரிக்கை அடையாள அட்டையைப் பரிசோதிச்சு நிருபர்களை மட்டும் ஒவ்வொரு ஆளாய் உள்ளே விடு. மொத்தமா விட்டா அவுங்களோட சேர்ந்து அனாமத்து ஆட்கள் ரசிகர்களும் நுழைஞ்சிடுவாங்க. அடுத்து அவுங்களை நல்லா பரிசோதிச்சு ஆயுதங்கள் இல்லாமலும் உள்ளே விடனும். ஐயா பாதுகாப்பு முக்கியம். புரிஞ்சுதா?” என்றான்.

“புரியுது சார்.” வைத்தான்.

வெளியில் காத்திருந்த நிருபர்களுக்கு உள்ளே அனுப்ப அழைப்பு வந்தது குறித்து மகிழ்ச்சி. ஆகையால் கூர்க்கா எப்போது கேட் திறப்பான் என்று சுறுசுறுப்பானார்கள்.

கூர்க்கா கேட் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான். ஆனால் திறக்கவில்லை.

“எல்லாரும் பத்திரிக்கை அடையாள அட்டையை எடுத்துக்கிட்டு வரிசையாய் நில்லுங்க.” உத்தரவிட்டான்.

“கொடுமைடா!” கோதண்டம் தலையிலடித்துக் கொண்டான். ஆனாலும் அனைவரும் கூர்க்கா சொல்லுக்குக் கட்டுப்பட்டு அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு வரிசை கட்டினார்கள். கூர்க்கா கேட்டைத் திறந்து நின்று அவர்கள் நீட்டிய அடையாள அட்டையைப் பார்த்து பின் அவர்கள் வைத்திருந்த பை, மேல் சட்டை, பேண்ட் பாக்கெட் தடவி பரிசோதித்து அனுப்பினான்.

ஒரு நிருபர் மேல் சட்டை பாக்கெட்டில் மட்டும் பிளேடு இருந்தது. அதை எடுத்தான்.

“சார்! அது பென்சில் சீவ…” உடையவன் சொல்லியும் கொடுக்கவில்லை.

“இதால ஒரு கொலை என்ன ஒன்பது கொலை செய்யலாம் ! திரும்பி வரும்போது வாங்கிப் போ சார்!” சொல்லி தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டான்.

“நிலைமை!“ அந்த நிருபருக்கு வேதனை. உள்ளே சென்றார்.

போர்டிகோ வாயிலில் நான்கு வெளிநாட்டுக் கார்களுக்கு நடுவில் செல்லதுரை நின்றான்.

உள்ளே வரும் நிருபர்களை, “இப்படியே மாடிக்குப் போங்க” வழி காட்டினான்.

மேலே திருமண கூடம் போல ஹால் பெரிதாக இருந்தது. நடுவில் மேசை நாற்காலி இருந்தது, எதிரே நிருபர்கள் அமர பாலிமர் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது, வந்தவர்கள் அமர்ந்தார்கள். அவர்களுக்கு வீட்டு சிப்பந்திகள் கேக்கும் டீயும் கொடுத்து உபசரித்தார்கள்.

சிறிது நேரத்தில் வெள்ளை நிற குர்தாவில் சிவா பளிச்சென்று உள்ளே வந்தான். அவன் சினிமாவில் பார்ப்பதை விட அழகாக இருந்தான். பின்னால் வாலாய் செல்லதுரை வந்தான். நிருபர்கள் எல்லாரும் எழுந்தார்கள்.

“வணக்கம்.! வணக்கம்.!” இவர்கள் கைகூப்பலுக்கு சிவா ஒட்டுமொத்தமாய்க் கைகூப்பி பதில் மரியாதை செய்துவிட்டு மேசைக்கு முன் உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.

செல்லதுரை அமரவில்லை. நின்றான்.

நிருபர்கள் அமர்ந்தார்கள்.

நாற்காலியில் நன்றாக நிமிர்ந்து அமர்ந்த சிவா, “நான் உங்களை அழைச்சதுக்குக் காரணம் என் புதுப்பட சேதி சொல்றதுக்கு மட்டுமில்லே. நான் நாளைக்கு அமெரிக்கா போறேன்.“ நிறுத்தி எல்லாரையும் பார்த்தான்.

“ஓய்வெடுக்கவா சார்?” தயாராய் இருந்த ஒரு நிருபர் முதல் ஆளாகக் கேள்வி கேட்டான்.

“அப்படியும் வைச்சுக்கலாம்…” என்று இழுத்து தலையசைத்த சிவா, ஆனா அதுமட்டுமில்ல. அமெரிக்கா ஹாலிவுட்ல சினிமா கலைஞர்கள் கூட்டம் நடக்குது உலகத்துல உள்ள முக்கிய நாடுகளிலேர்ந்து பல பெரிய முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள் வர்றாங்க. இந்தியாவுல எனக்கு மட்டும் அழைப்பு வந்திருக்கு. கலந்துக்கப் போறேன்.” என்றான்.

“ஏதாவது விருது வழங்கலா சார்?”

“இல்லே. சினிமா பத்தி பேச. மேல் மட்டம் கீழ் மட்டம், படிச்சவன், பாமரன்னு இப்படி எல்லாரையும் எல்லாரையும் சென்றடையும் இந்த சினிமாவை இன்னும் எப்படி முன்னேத்தலாம்ன்னு ஆலோசனை செய்ய கூட்டம்”.

“வாழ்த்துக்கள் சார். உங்க புதுப்படம் படப்பிடிப்பு முடிஞ்சுடுச்சா சார்?”

“நேத்திக்கே முடிஞ்சு பூசணிக்காய் உடைச்சாச்சு.”

“நீங்க அமெரிக்கா போறதுனால சீக்கிரம் படப்பிடிப்பை முடிச்சுட்டீங்களா?”

“ஆமாம். கொஞ்சம் துரிதமா முடிச்சேன்.”

“படம் நல்லா வந்திருக்கா சார்?”

“பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் பரத்… நடிகர் நடிகைகளை நல்லா வேலை வாங்கி இருக்கார். படம் திருப்தியாய் வந்திருக்கு”

“படம் எப்போ சார் ரிலீஸ்?”

“இன்னும் ஒரு மாசத்துல.”

புரியாமல் பார்த்தார்கள்.

“எனக்கு ஒரு வாரம் கூட்டம், ஒரு வாரம் ஓய்வு. அந்த நேரத்துல இயக்குநர் எடிட்டிங் முடிப்பார். நான் வந்து டப்பிங், இசைச் சேர்ப்பு, தணிக்கை மத்த வேலைகள் முடிச்சு உடனே ரிலீஸ்.”

“படத்தோட கதை சார் ?”

“வழக்கம் போல ரகசியம். நான் சொல்ல மாட்டேன். படத்துல பாருங்க. பத்திரிக்கையில எழுதாதீங்க”

“படத்துல கிராபிக்ஸ் இருக்கா சார்?”

“தேவையான அளவு இருக்கு.”

“படத்தோட செலவு?”

“பதினைஞ்சு கோடி.!”

“எதுக்கு சார் இத்தனை செலவு?”

“சராசரியைப் பார்த்துக்கிட்டு இருக்கிற மக்களுக்குப் படத்துல பிரமாண்டம் கொடுக்கனும். அப்போதான் ரசிப்பாங்க. அடுத்து நான் எவ்வளவு கொட்டினாலும் எடுப்பேன்.”

“பத்திரிக்கையில பிரசுரிக்க ஸ்டில்ஸ் கொடுங்க சார்.”

தான் கையில் தயாராக கொண்டு வந்த நாலைந்து புகைப்படங்களை அவர்களிடம் கொடுத்தான். கதாநாயகனும் கதாநாயகியும் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் காதல் காட்சி, ஒரு ஆக்ரோச சண்டை, அடுத்து கதாநாயகன் கதாநாயகி தனித்தனி புகைப்படங்கள்.

“அடுத்த படம் எப்போ சார்?”

“அதைப் பத்தி அடுத்த வருசம் பேசுவோம்.”

“எதுக்கு சார் உங்க எல்லா படங்களுக்குமே ஒரு வருட இடைவெளி?“

‘மக்களைக் காக்க வைச்சு கொடுத்தால்தான் விரும்பிப் பார்ப்பாங்க.’ என்று சிவா வாய் வரை வந்த உண்மையைச் சொல்ல வில்லை.

மாறாய்… “மக்கள் ரசிக்கிறாப் போல நிறுத்தி நிதானமாய்ப் படம் செய்யத்தான் எனக்கு அவ்வளவு இடைவெளி.” என்றான்.

“குடும்பத்தோட ஓய்வெடுக்கப் போறீங்களா சார்?“

“ஆமாம். என் ஒரே மகன், ஒரே மகள், மனைவி கூட போறேன்”.

அடுத்து அவர்கள் யோசித்து ஏடாகூடாக கேள்வி கேட்பதற்குள்…”ஓ.கே. பேட்டி முடிஞ்சுது. நான் பயண ஏற்பாடுகளைக் கவனிக்கனும். இந்த சேதிகளை உங்க பத்திரிக்கை பத்திரிக்கை வாயிலாய் என் ரசிகர்களுக்குத் தெரியப்படுத்திடுங்க. நன்றி!” எழுந்து கை கூப்பி வணக்கம் தெரிவித்து விட்டு புயல் போல் வெளியேறினான். பின்னாலேயே செல்லதுரையும் சென்றான். நிருபர்கள் கலைந்தார்கள்.

மறுநாள் காலை எல்லா பத்திரிக்கைகளிலும் செய்தி வெளியாக…நிம்மதியாக குடும்பத்தோடு விமானம் ஏறினான் சிவா.

அதே சமயம் இயக்குநர் பரத் ஏ.வி.எம் ஸ்டுடியோவில் உள்ள எடிட்டிங் அறைக்குள் கெட்ட எண்ணத்தோடு தன் உதவியாளன் நண்பன் கணேசுடன் உள்ளே நுழைந்தான்..!

அத்தியாயம்-2

பரத் பெரிய நட்சத்திர இயக்குநர். வயசு 37. திரைப்படத்துறைக்குப் பல இயக்குநர்களிடம் உதவியாளனாக இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு வந்து சேர்ந்தான். ஆனால் இயக்குநர் ஆனதிலிருந்து இவனுக்குப் பொற்காலம். இயக்கிய முதல் படமே 175 நாட்கள். சிவாவிடம் ரொம்ப கஷ்டப்பட்டு கால்ஷீட் வாங்கி வெளியிட்டப் படம். திரைத்துறையே மூக்கின் மேல் விரலை வைத்தது. எல்லோராலும் பேசப்பட்ட படம்.

முதல் படத்தை அவ்வளவு பெரிய வெற்றியாக கொடுத்திருந்தாலும் அடுத்தப் படத்திற்கு இவனைச் சீந்துவாரில்லை.

‘எல்லா புதுமுக இயக்குநர்களும் கையில சரக்கு வைச்சிருப்பானுங்க. ஜெயிக்கனும்ங்குற வெறியில முதல் படத்துலேயே எல்லாத்தையும் கொட்டிடுவானுங்க. அடுத்து சரக்கு இருக்காது, எத்தினியோ பேர்கள் இப்படி சொதப்பி தானும் காணாம போய் தயாரிப்பாளர்களையும் நஷ்டப்படுத்தி இருக்கானுங்க. அந்த மாதிரிதான் இவனும்!’ என்று ஒதுக்கி விட்டார்கள்.

இவன் படம் நுறு நாட்களைத் தாண்டி ஓட…. சென்னை அண்ணாசாலையில் கையில் காசு இல்லாமல் நடந்தான், அலைந்தான். திரும்பவும் வாழ்க்கையில் வாழ்வா, சாவா போராட்டம். என்னவோ புது இயக்குநர் போல திரும்பவும் ஒவ்வொரு படக்கம்பெனியாக ஏறி ஏறி இறங்கினான்.

‘சார் ! நான் ‘காற்றும் கட்டுப்படும்!’ வெற்றிப்படம் கொடுத்தவன்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டும் அவனை ஏற்க தயாரில்லாத தயாரிப்பாளர்கள், “அடடா! நான் இன்னொருத்தரை வைச்சிப் படம் பண்றேனே. அடுத்து சொல்லி அனுப்புறேன்!” அனுப்பினார்கள்.

இவனைச் சுற்றி இருந்த உதவி இயக்குநர்கள் எல்லாரும் இவன் கையில் படம் இல்லாததைக் கண்டு படம் இருக்கும் கண்டு இடங்களை நோக்கிப் பறக்க…ஒட்டி இருந்தவன் ஆத்மார்த்த நண்பன் கணேசு மட்டும்தான்.

‘நீ ஜெயிப்பேடா. நாம நல்லா வருவோம்.’ ஆறுதல் வார்த்தைகளைக் கூறி, நம்பிக்கையை ஊட்டி எடிட்டிங் வேலையிலிருந்து எடுபிடி வேலைகள் வரை செய்து இவனைக் காப்பாற்றினான்.

அடுத்து திருப்பூர் பனியன்காரர் ஒருத்தர் இவனுக்கு வாழ்வு தந்தார்.

வலிய தேடிவந்து “தம்பி! நான் பனியன்காரன். அந்த தொழிலைப்பத்திதான் எனக்குத் தெரியும், அத்துப்படி. சினிமா தெரியாது. உங்க படத்தைப் பார்த்தேன். கொஞ்சம் பணம் வைச்சிருக்கேன். உங்களை நம்பி வந்திருக்கேன். என்னை வாழ வையுங்க”. கொடுத்தார்.

பரத் அவரை ஏமாற்றவில்லை. புனர்ஜென்மம் எடுத்தவன் போல் அவருக்கு அக்கரையாய்ப் படம் செய்து கொடுத்து நூறு நாட்களைத் தாண்ட வைத்து அவரை வாழ வைத்தான்.

அடுத்துதான் மற்ற தயாரிப்பாளர்கள் ‘சரக்கு உள்ளவன்’ என்று இவன் மேல் நம்பிக்கை வைத்தார்கள். ஒவ்வொருவராய் வந்து பணத்தை நீட்டி.. “தம்பி! எனக்கொரு படம்.” சொல்லி கேட்டார்கள். எல்லா படங்களுமே நுாறு நாட்களைத் தொட…. பரத் விரும்பாமலேயே நட்சத்திர அந்தஸ்த்து இவனைத் தேடி வந்து விட்டது.

“கணேசு!” எடிட்டிங் மேசையில் அடுத்து அமர்ந்திருந்த நண்பனை அழைத்தான். அந்த அறையில் இவர்களைத் தவிர யாருமில்லை.

“என்ன?“ வேலையைத் தொட்ட அவன் திரும்பி இவனைப் பார்த்தான்.

“இந்தப் படம் ஓடக்கூடாது. எந்த காட்சி அமைப்பும் சரியா வைக்கக்கூடாது.“ பரத் குசுகுசுத்தான்.

“ஏன்ன்…?” கேட்ட கணேசுக்குள் பெரிய அதிர்ச்சி.

“இந்தப் படம் ஒரு திருப்பு முனை. சிவா வாழ்க்கையில தோல்விப் படமாக்க வேண்டும் என்பது என் வேண்டுதல், பிராத்தனை!”

“என்ன உளர்றே?! புத்தி பேதலிச்சுப் போச்சா? இது உன் குழந்தையை நீயே கொல்றதுக்குச் சமம்.”

“இல்லே. நான் தெளிவா இருக்கேன்.”

“பரத்!”

“சிவா கொடுத்த அடி வலி.”

நொடியில் முகம் கனமாகிப் போன நண்பனைக் கணேசு குழப்பமாகப் பார்த்தான்

“உன்கிட்ட இதுவரை சொல்லாத… நீயும் நானும் சேராத காலத்து ஒரு சில உண்மைகளை இப்போ சொல்றேன். கேள்.” பரத் ஆரம்பித்தான்.

கணேசு காதுகளைத் தீட்டி கேட்கத் தயாரானான்.

“…ஆரம்பக்காலத்துல நான் எந்த தயாரிப்பாளர்கிட்டே போனாலும் சிவா கால்ஷீட் இருந்தா கதை சொல்லுன்னாங்க. எல்லாருக்கும் ஓடுற குதிரை மேல் பணம் கட்டி காசு சம்பாதிக்க ஆசை. எனக்கும் இந்த ஆள் சம்மதிச்சு கை துாக்கி விட்டால் நல்லா இருக்கும்ங்குற நப்பாசை. இவன் அப்போ பெசண்ட் நகர்ல இருந்தான். இந்தாளுக்காக தினம் தண்டையார் பேட்டையிலிருந்து நடையாய் நடந்து போய் வாசல்ல நிப்பேன். கூர்க்கா உள்ளே விடமாட்டான். உடனே பார்த்துட்டுத் திரும்பிடுறேன்’ னு கெஞ்சினாலும் கேட்கமாட்டான். இவனும் வாசல்ல ஒருத்தன் பலநாளாய் நிக்கிறானே… என்ன சேதி, யாரவன்னு தெரிஞ்சுக்காம, தெரிய விருப்பமில்லாதவனாய்க் கார்ல படப்பிடிப்புக்குப் போவான். வருவான்.”

“சரி..ஆளைப் பிடிக்க முடியலை. இவனை எப்படியாவது மடக்கியே ஆகனும்ன்னு தீர்மானிச்சு எப்படி மடக்குறதுன்னு யோசிச்சு அதன் படி ஒரு நாள் கார் காம்பௌன்ட் கேட்டைவிட்டுத் தாண்டிரோட்டுல இறங்கினதும் என் திட்டப்படி… உயிர் போனாலும் பரவாயில்லேன்னு நெனைச்சு அவன் கார் முன்னால பாய்ஞ்சேன்.

நல்ல வேளை டிரைவர் சடார்ன்னு பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.

சிவா பதட்டத்தோட கீழே இறங்கி ஓடி வந்து, “படிச்சவன் போல இருக்கே. அறிவில்லே ? நீ தற்கொலை செய்து கொள்ள என் கார்தானா கெடைச்சுது?” ன்னு திட்டி கார்ல ஏறினான்.

நான் சடக்குன்னு ஆள் கையைப் புடிச்சு “சார் ! நான் உங்க கிட்ட ஒரு கதை சொல்லனும். திருப்திப் பட்டா நடிங்க. இல்லேன்னா வேணாம். ஆனா இப்போ நீங்க கதை கேட்க மட்டும் ஒப்புத்துங்க சார். நீங்க படப்பிடிப்புக்கு போறதுக்குள்ள கதையைச் சொல்றேன். கொஞ்சம் சம்மதிங்கன்னு” கெஞ்சினேன்.

அவனும் சம்மதிச்சான் கார்ல ஏறினேன். படப்பிடிப்புத் தளம் போறதுக்குள்ளே கதை சொன்னேன். ஆளுக்குப் பிடிச்சுப் போச்சு திருப்தி. கால்ஷீட் பத்தி பேசலை.

‘இரு’ன்னு சொல்லி.. சாயந்தரம் வரை காக்க வைச்சி தன் வேலையை முடிச்சி.. இந்தப் படத்துக்கு யாரைக் கதாநாயகியாய்ப் போடலாம்ன்னு கேட்டான்.

நானும்.. அவன் மனசறிய, ‘உங்க விருப்பம். நீங்க எந்த நடிகையை சொன்னாலும் போடலாம்!’ சொன்னேன்.

சிவாவும் சரின்னு உடனே ஒரு புது நடிகை பேரைச் சொல்லி, “சோழா அறை எண் 215ல கதை விவாதம், கால்ஷீட் பத்தி பேசனும் சொல்லி… அழைச்சு வா நான் அங்கே இருக்கேன்”னு சொல்லி போனான்.

எனக்கு சினிமா அரிச்சுவடி தெரிஞ்சாலும் பெரிய நடிகன் அழைச்சா வருவாள்ன்னு எதார்த்தமா நெனைச்சி அவ வீட்டுக்குப் போனேன். ஆளை அழைச்சு விசயத்தைச் சொன்னேன். நான் சொல்லி முடிச்ச அடுத்த வினாடி என் காதுக்கும் கன்னத்துக்கும் சேர்த்து அவள் அறை அறை விட்டாள். கண்ணுல பட்டாம்பூச்சு பறந்துது. காது ஙொய்ங்ன்னுச்சு.

அவள் அதோட விடலை.

“கதை விவாதம்ன்னு சொல்லி நடிகைகளை அனுபவிக்க எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க? எந்த டைரக்டர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதி இருக்கான், இயக்கி இருக்கான்! எத்தனைக் கதை பெண்களைச் சுத்தி வந்திருக்கு. எல்லாம் கதாநாயகனைச் சுத்தியே இயக்கம். உங்க ஆசைக்கெல்லாம் அடி பணியற ஆள் நான் கெடையாது. நான் அப்படிப்பட்ட ஆளும் இல்லே. இங்கே நடந்ததை…அங்கே போய் சொல்லு அந்த நடிகன்கிட்டே ஓடு!” விரட்டாத குறையாய் துரத்தினாள்.

எனக்கு நாக்கைப் புடுங்கிக்கிட்டு சாவுற அளவுக்கு அவமானம். இவன் ஆசைப்பட… ஒரு பொம்பளைக் கிட்ட அடி வாங்க வைச்சுட்டானேன்னு ஆத்திரம். எனக்கு எங்கேயும் போக பிடிக்கலை. கடற்கரையில உட்கார்ந்து, படுத்து, அழுதேன்.” நிறுத்தினான் பரத்.

கணேசுக்கு நண்பனைப் பார்க்கப் பாவமாக இருந்தது.

“பொம்பளைங்க சமாச்சாரம் சினிமா உலகத்துல சர்வ சாதாரணம். அறை வாங்கினது அதிகப்படி.!” நினைத்தான்.

“பொம்பளை அப்படின்னு தெரிஞ்சு என்னை ஏன் அனுப்பனும் ? உனக்கு அவள் வேணும், விருப்பம்ன்னா நேரடியாய் போய் அழை, கேளு. அது இல்லாம இடையில என்ன வேறொருத்தன் ?அவமானப்பட விருப்பம் இல்லேன்னா அவள் மேல உள்ள ஆசையை அழி. வாய்ப்புக் கேட்டு வந்தால் இதெல்லாம் செய்யனும்ன்னு என்ன சட்டம் ? பொதுவாவே நடிகைகள் மேல எனக்குத் தனி கழிவிரக்கம். ஒருத்தி நடிக்க வந்தால் அவள் கற்பு கடைச்சரக்கு! என்பது சினிமா பொது மொழி. அதிலும் அவள் நாலு படத்துல நடிச்சு கொஞ்சம் பேர் புகழ் வாங்கிட்டால் அரசியல்வாதி, பணக்காரர்களுக்குக் கொத்துக்கறி. சம்மதிக்கலைன்னா ஆசிட் ஊத்திடுவேன், உயிரோடு இருக்க முடியாதுன்னு மிரட்டல். இதனால பெரும்பாலான நடிகைகளுக்குப் பகல்ல படப்பிடிப்பு ராத்திரியில தொந்தரவுன்னு பகல் இரவு துாக்கம் கிடையாது. நடிகைகள் பார்க்கத்தான் அழகா, பகட்டா இருக்காங்களேத் தவிர உடம்பு மனசெல்லாம் சக்கை.

இதை விடு நானும் சிவாவும் ஒரு தயாரிப்பாளர் மூலமா எப்படியோ இணைஞ்சோம். முதல் படத்துல அவன் இன்னும் தொந்தரவு கொடுத்தான்.

இந்த பெரிய ஆள் தயவால் நான் திரைத்துறைக்கு வரும் அறிமுக இயக்குநர் என்பதால் இவன் அயோக்கியத்தனம் ரகசியமாய்ப் பாதுகாக்கப்படனும்ங்குறதுக்காக அவன் நடிகையோட அறையில இருக்க என்னை வெளியில காவல் வைச்சான். அடுத்து அவளுக்கு சானிட்டரி நாப்கின், அவர்களுக்குக் காண்டம் வாங்கி வர்ற வேலை வைச்சான். தயாரிப்பாளருக்காக நான் பொறுத்துப் போக வேண்டிய நிலைமை.

ஒரு புது ஆள் மாட்டிக்கிட்டான்னா இப்படித்தான் படுத்தனுமா? மத்தவங்க உணர்வுகளை மதிக்காம பொண்ணுன்னா ஏன் பேயாய் அலையனும்? அப்பவே இவனுக்கு ஆப்பு வைக்கனும்ன்னு தீர்மானிச்சேன். பெரிய ஆளாய் ஆனா பண்ணியே காட்டனும்ன்னு முடிவுக்கு வந்தேன். நான் நெனைச்சது நடந்துடுச்சு. பெரிய ஆளாய் வந்துட்டேன். அவனும் தானாய் தனக்கொரு படம் பண்ணிக் கொடுன்னு கேட்டதால வாய்ப்பு புடிச்சிக்கிட்டேன்.

“இவன் பழைய காலம் நாத்தம் எனக்குத் தெரியும். நடிக்கனும்ங்குற ஆசையில 25 வயசுக்கெல்லாம் வீட்டைவிட்டு ஓடி வந்தான். கம்பெனி கம்பெனியாய் ஏறி இறங்கினான். தயாரிப்பாளர், இயக்குநர் வீடு, அலுவலகங்கள்ல பழியாய்க் கெடந்தான். இவனை எவனும் சீந்தலை. பசி. பர்ஸ், பிக்பாக்கெட் அடிக்க ஆரம்பிச்சு கொஞ்ச நாள் வயித்தைக் கழுவினான். அதுல ஒரு தடவை பொது மக்களிடம் மாட்டிக்கிட்டு உதை வாங்கினான். தர்மஅடி தர்மஅடி பின்னிட்டாங்க. அதோட அந்த தொழிலுக்கு முழுக்குப் போட்டவன் ஒரு ஓட்டல்ல போய் சர்வர் வேலை பார்த்து பெஞ்சு தொடைச்சான். அப்படியே வயித்தைக் கழுவி ஒரு சினிமா சம்பந்தப்பட்ட ஆள் மூலமா ஒரு இயக்குநர் கால்ல விழுந்தான். அந்த ஆள் பரிதாப்பபட்டு வாய்ப்புக் கொடுக்க… நல்ல நேரம்.”

‘சிவா என்கிற நட்சத்திரத்திற்குள் இவ்வளவு விசயம் இருக்கா?!‘ கணேசுக்கு ஆச்சரியமாக இருந்தது,

“சிவா இன்னைக்கும் சினிமாவுக்கு வர்ற புது ஆட்கள், உதவி இயக்குநர்களை மதிக்கிறதே இல்லே. படப்பிடிப்புல குடிக்கத் தண்ணிக் கேட்டு கொஞ்சம் தாமதமா கொண்டு வந்து கொடுத்த உதவி இயக்குநர் ஒருத்தனுக்கு அறை விட்டான். விக் சரியா ஒட்டலைன்னு ஒரு சிகை அலங்காரனுக்கு நீங்களெல்லாம் தொழிலைச் சரியாய்ச் செய்யாம எதுக்கு வர்றீங்கன்னு திட்டு. அதே போல மீசை சரியாய் ஒட்டலைன்னு இவனை விட வயசுல ரொம்ப மூத்த ஒப்பனைக்காரருக்குத் திட்டினான். பணம் பதவி வரும்போது பணிவு வரனும். அது இல்லாம இது என்ன தோன்றித்தனம். தன்னை விட்டால் ஆளில்லைங்குற திமிர்? இவனுக்குச் சறுக்கினாத்தான் புத்தி வரும். அதனாலதான் இந்த ஆப்பு.” பரத் முடித்தான்.

“அவன் தன் வினை தானறுப்பான். நாம அறுக்கத் தேவை இல்லே. இந்தப் படத்துக்காக அவன்கிட்ட கை நீட்டி காசு வாங்கினதுக்கு நமக்குத் தொழில் துரோகம் வேணாம்.” கணேசுக்கு ஒப்புதலில்லை. சொன்னான்.

“இல்லை கணேசு அவன் செருக்கு உடையனும்ன்னா சறுக்கனும்!”

“நீ இயக்குற இந்தப் படம் தோல்வின்னா அந்த தோல்வியை நீயும் சந்திக்கிறே புரிஞ்சுக்கோ.”

“தெரியும். தோல்வியைச் சந்தோசமாய் ஏத்துக்கிறேன்.”

“நீ அவனை சறுக்க நெனைச்சா அவன் உன்னை அழிக்க ஆயத்தமாவான்!”

“ஆகட்டும். யார் ஜெயிக்கிறான்னு பார்க்கலாம்.”

“இது முரட்டுத்தனம்!”

“நான் போருக்குத் தயார். எப்பவோ வாளெடுத்துட்டேன்!“

நண்பனின் பிடிவாதம் தெரிந்த கணேசுக்குள் கலவரம் பற்றி கலக்கியது.

– தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *