குறும்பால் வந்த வினை





அன்றும் வழக்கம் போல நானும் எங்க அம்மாவும் சத்தியமங்கலம் காட்டுல உணவு தேடி போய்க்கிட்டிருந்தோம். நான் உற்சாகமாகத் துள்ளிக் கொண்டு வேகமாக ஓடினேன். ஆனால் எங்கம்மாவால என்னைப் பிடிக்க வேகமாக ஓடி வர முடியல. எங்கம்மா, “இருடா செல்லம்… என்

கூடவே நட..’ என்று கூப்பிட்டும், நான் கேட்காமல், குறும்பு செய்து கொண்டு ஓடினேன்.
அப்ப அங்க நாலஞ்சு பேர் பேசிக்கிட்டிருந்தாங்க. அவங்க பேசுவதைக் கேட்க நான் அங்கேயே நின்னுட்டேன். எங்க அம்மா பார்த்தா என்னைக் கூப்பிடுவாங்கன்னு, ஒரு புதருல ஒளிஞ்சுகிட்டேன். அந்த ஆளுங்க பேசுவதைக் கேட்க ஆரம்பிச்சேன்.
அவர்களின் உரையாடலில் இருந்து பல விஷயங்களை நான் தெரிஞ்சுக்கிட்டேன். அதில் முக்கியமானது – அவங்க எல்லாருக்கும் ஒரு பெயர் இருக்கிறது என்பது. அவர்கள் போல நானும் எனக்கு ஒரு பெயர் வெச்சுக்கிட்டேன். சந்தோஷ்! நல்லா இருக்கா..!
அப்புறம் பெருசா ஒரு உருவம் பாம் பாம்ன்னு சத்தம் போட்டுக்கிட்டே வந்து நின்னுச்சு. அதன் பெயர் ஏதோ பஸ்ஸôமே..! அதுல எல்லாரும் ஏறிப் போய்ட்டாங்க.
அப்பறம்தான் எங்க அம்மா என்னைத் தேடி ரொம்ப தூரம் போய்ட்டாங்கன்னு கவனிச்சேன்.
சரி, பஸ்லதான் போயிருப்பாங்கன்னு நினைச்சுக்கிட்டு ரோட்டுக்கு வந்தா அங்க இருந்தவங்கல்லாம் என்னை மறுபடியும் காட்டுக்குள்ளேயே போகச் சொல்லி விரட்டினாங்க. நான் கோபத்துல அவங்கள விரட்டினேன். உடனே அவங்க ஒரு பொருளை எடுத்து, அதுல யாரோடையோ பேசினாங்க (அதுக்கு பேர் அலைபேசியாமே!).
கொஞ்ச நேரத்துல ஒரே மாதிரி டிரஸ் போட்டுக்கிட்டு நிறையப் பேர் வந்தாங்க என்னைய ஒரு வண்டியில ஏற்றி, ஒரு கட்டிடத்துக்குக் கொண்டு போனாங்க. அங்க எனக்கு சாப்பாடும் பழங்களும் கொடுத்தாங்க.
அப்புறம் எங்கம்மாவைக் கண்டுபிடிப்பது பற்றிப் பேசினாங்க. எங்கம்மா கர்நாடகா பக்கம் போயிருப்பாங்களாம். இனிமே அவங்களைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அதனால என்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பிட்டாங்க.
அங்கே எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க. அவங்க எல்லாருக்கும் என்னை மாதிரியே அம்மா இல்லையாம். நான் மட்டும் எங்க அம்மா சொல்படி நடந்திருந்தா இப்படி நடந்திருக்காதே..!
தினமும் நிறையப் பேர் வந்து எங்களைப் பார்ப்பாங்க. குழந்தைகள் எல்லோரும் சந்தோஷமா, “யானை,யானை’ன்னு கத்துவாங்க.
என் பெயர் சந்தோஷ்ன்னு அவங்களுக்குத் தெரியல.
என்னாலயும் வாயைத் திறந்து சொல்ல முடியலே..!
– ஜனவரி 2012, சிறுவர் மணி