காலணிகள்

வெண்நிலவு வளர தொடங்கிய இரவில் நானும் எங்கள் தெரு பையன் ராமுவும் சுப்பையா டிபன் கடையில் இட்லி, பொடி தோசை சாப்பிட சென்றோம். சுப்பையா கடை இரயிலடி ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள கடை வரிசையில் உள்ளது. எதிரே பூமாலை பூத்து குலுங்கும் மாலை கடை. எல்லா டிபன் வகைகளும் சுவையாக இருக்கும். ஏழு வகை சட்னி வைப்பார்கள். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு கடை உள்ளது. இரயிலடி என்றால் வடை கடையும் சுப்பையா டிபன் கடையும் தான் நினைவுக்கு வரும். வீட்டிற்கு செல்வது என்றால், தபால் நிலையம் எதிரே உள்ள வடை கடையில் இரண்டு வடை சாப்பிட்டு விட்டு சென்று விடலாம். இரண்டாவது ஆட்டம் சினிமாவிற்கு செல்வதால், வடை கடையை தவிர்த்து விட்டோம்.
சுப்பையா கடையில் நல்ல கூட்டம். நின்று கொண்டே இருந்தோம். கடை வைத்திருப்பவர் எத்தனை பேர் சாப்பிடணும் என்றார். இரண்டு பேர் என்றேன். ஏற்கனவே என்னுடன் வேலை பார்க்கும் சாமிக்கு தினமும் இரவு டிபன் அங்கு தான். அவனை மாலையில் அங்கு எப்போதும் பார்க்கலாம். அவன் சாப்பிட்டு முடிக்க போகிறான் போல, கை காட்டினான். நான் சிரித்து கொண்டு சாப்பிட்டு முடி என்றேன். அவன் சாப்பிட்டு முடித்து விட்டு இலையை கைகளில் எடுக்க போன போது, வாங்க ஜி என்று கத்தினான். வந்து அமரும் படி சைகை செய்தான். நான் உடனே சென்றேன். ராமுவும் என்னுடன் பின்னாடியே வந்தான். சாமி வரியா சினிமாவுக்கு என்றேன். நான் நேற்றே பார்த்து விட்டேன் நீங்க பாருங்க என்று கூட்டத்தை விளக்கிக் கொண்டு கிளம்பினான்.
ஆறமர சாப்பிட முடியாது சில சமயங்களில், சில நேரத்தில் நானும் சாமியும் பேசிக் கொண்டே ஒவ்வொரு சட்னியையும் ருசி பார்ப்போம். அதுவும் கத்திரிக்காயில் கொஞ்சம் காரமும் புளிப்பு சுவையும் இருக்கும் சட்னி பிரமாதம். சுட சுட இட்லி வந்தது. ராமு ஆச்சரியமாக பார்த்தான். விதவிதமான சட்னியை தொட்டு கொண்டு வேகமாக சாப்பிட்டு முடித்தோம். விலையும் கைக்கு அடக்கமாக இருக்கும். ராமு முகத்தில் ஒரு பரவசம். அவன் முழுதாக சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது.
அதனால் தான் அவனையும் அழைத்துக் கொண்டு வந்தேன். ஆஞ்சநேயர் கோயில் பூட்டி இருந்தது. வாசலில் நின்று கொண்டே ஒரு கும்பிடு போட்டேன். திரையரங்கில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால் திரையரங்கில் வேலை பார்க்கும் செந்தில் டிக்கட் எடுத்து வைத்திருந்தான். படம் பார்த்து முடித்தவுடன் வேகமாக வீடு நோக்கி சென்றோம்.
இருள் பல இடங்களில் மிரட்டியது. வெளிச்சம் இருள் மீது நின்று கொண்டு இருந்தது. ஏதோ ஒரு வீட்டில் வீட்டு கிரகபிரவேசம் போல எல்லா விளக்குகளும் விழித்து கொண்டு எரிந்து கொண்டு இருந்தது. மிச்ச மீதி வேளைகள் இரவோடு இரவாக நடந்து கொண்டிருந்தது. மணி ஓசை கேட்டு கொண்டே இருந்தது. பசு மாடுகள் தெருவில் கழுத்து மணி ஓசையுடன் ஆங்காங்கே படுத்துக் கொண்டு அசை போட்டபடியும் அலைந்து கொண்டும் இருந்தன. இருளில் ஆழ்ந்த மௌனத்தில் எங்கெங்கோ சில வகையான ஒலிகள் எழுப்பும் அதிர்வுகள் கொஞ்சம் நடுங்க செய்தது.
எங்க பாட்டி நாங்கள் சிறுவர்களாக இருந்த போது நாய்களின் பச்சை கண்களுக்கு மட்டும் பேய்கள் நடமாடுவது தெரியும் அதனால் தான் இரவில் வித்தியாசமான குரைப்பு ஒலிகள் எழுப்பும் என்று எங்களை பயமுறுத்துவார்கள். நல்ல வேளை ராமு கூட வந்திருந்தான். நாய்கள் ஓடுவதும் நிற்பதும் கூட்டாக எழுப்பும் சத்தமும் வீடு போய் சேர்ந்தால் பரவாயில்லை என்றானது.
வீட்டில் எல்லோரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டு இருந்தனர். ஒரு இரவு நீல விளக்கு மட்டும் எரிந்தது. மாற்று சாவி வைத்திருந்தேன். அதை வைத்து மெல்ல திறந்து கொண்டு உள்ளே சென்றேன். படுக்கையை விரித்து தூங்க ஆயத்தமானேன். இரண்டு நாட்களுக்கு முன்பு ஐந்தாவது தெருவில் அதிகாலையில் திருடு போனது. அதன் நினைவு வந்தவுடன் எச்சரிக்கை உணர்வில் தூங்குவதற்கு முன் எல்லா கதவுகளும் நன்றாக பூட்டி இருக்கிறதா என்று சரி பார்த்து கொண்டேன். தூக்கம் வராமல் பல பல எண்ணங்கள் மற்றும் கதைகள் ஓடின. நான் எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை.
இருள் மறைந்து எங்கோ சென்றது. பொழுதும் விடிந்து விட்டது. அமைதியை கலைத்துக் கொண்டு எல்லா சத்தங்களும் கேட்டது. வீட்டில்
ஒரே பரபரப்பு. என்னவென்று பார்த்தால் எங்க வீட்டின் இரண்டு வண்டியையும் காணவில்லை. எங்கள் வீடு உட்பட இன்னும் இரண்டு மூன்று வண்டிகள் எங்கள் தெருவில் திருடு போய்விட்டது.
கூடியிருந்தவர்கள் ஆளுக்கொரு யோசனைகள் சொன்னார்கள். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் பொது காரியங்களில் ஈடுபாடு உள்ளவர். அவர் தான் கூறினார் போலீஸ்காரரிடம் கேட்கலாம் என்று. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி ஓய்வு பெற்ற போலீஸ்காரர் உள்ளார். அவர் இப்போது இரவு காவலாளியாக ஒரு மோட்டார் வாகன விற்பனை கூடத்தில் வேலை பார்க்கிறார். அவரே வேலை முடிந்து எதிரே வந்து கொண்டு இருந்தார். விபரத்தை கூறியவுடன். அவர் கூறினார் உடனே கம்ப்ளைன்ட் எடுத்து கொண்டு காவல்நிலையத்தில் கேஸ் கொடுங்க. திருடு போன வேறு ஏதாவது வண்டி கிடைத்தால் உடனே கொடுப்பார்கள். அதுவும் இரண்டு வண்டிகள். ஒரு வண்டியாவது கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
எங்க மாமா உடனே காவல் நிலையம் சென்று கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு வந்தார். அந்த நேரம் பார்த்து ஒரு இளைஞனை அடுத்த தெருவில் பிடித்து விட்டார்கள்.
அவன் மின்சார துறையில் வேலை செய்பவர் வீட்டிற்கு வெளியே கிடந்த காப்பர் கம்பியை எடுத்து கொண்டு சென்றான். மீண்டும் கூட்டம் கூடி விட்டது. ஏன் எடுத்த என்று கேட்டதற்கு பழைய கம்பி வெளியே கிடந்தது. அதான் எடுத்தேன் என்றான். வண்டியை திருடு கொடுத்தவர்கள் ஏற்கனவே திருடு போன வீட்டை சேர்ந்தவர்கள். எல்லோரும் சேர்ந்து அடிக்க தொடங்கி விட்டார்கள். போலீஸ்காரர் வீட்டிலிருந்து போலீஸ்காரரை அழைத்து வந்தார்கள். அவர் உடனே அவனை அடிக்க வேண்டாம் என்று தடுத்து அனைவரையும் அமைதிப்படுத்தினார். அவனுக்கு கொஞ்சம் சோடா வாங்கி கொடுத்தார். பின்பு அமைதியாக விசாரித்தார். அவன் உடனே எனக்கும் திருட்டுக்கும் சம்பந்தம் இல்லை. அடுத்த தெருவில் சுண்ணாம்பு அடிக்க வந்தேன். என்னுடன் வந்தவர்கள் வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். நான் பழைய கம்பி என்று நினைத்து தான் எடுத்தேன். நான் திருடவில்லை. அவன் முகமும் பேசுவதும் நம்பும்படியாக இல்லை. நாங்கள் அழைத்ததன் பேரில் பக்கத்தில் உள்ள காவல் நிலையத்திலிருந்து ஒரு பிசி வந்து விட்டார். எங்களை கொஞ்சம் மிரட்டினார். எல்லோரும் வண்டி திருடு போனதற்கு உடனே வரவில்லை, இவனை அடித்தவுடன் வருகிறீர்கள் என்று வேகமாக பேச தொடங்கினார்கள். அவர் கொஞ்சம் அடக்கி வாசித்தார். அவனுக்கு ஏதாவது ஆனால் அப்பறம் எல்லோரும் ஜெயிலுக்கு போகணும் என்றார் பிசி. அவனிடம் விசாரித்தார். அவன் சுண்ணாம்பு காரத்தெரு என்றவுடன், எல்லோரும் இவன் தான் திருட்டு பய என்று அவர்களாவே உறுதி படுத்தினார்கள் தெருவை வைத்து. விரைவில் திருட்டை கண்டு பிடிப்பதாக கூறிவிட்டு அவன் கைகளை கட்டி பழைய ஸ்பிலண்டர் பைக்கில் அழைத்து சென்றார். இப்போது அவரவர் வேலை நினைவு வந்தவுடன் கலைந்து சென்றனர். நான் மீண்டும் சைக்கிள் செயினை சரி செய்து விட்டு ஓட்ட தொடங்கினேன். பக்கத்து வீட்டு ஆசிரியை நான் சைக்கிளில் செல்வதை பார்த்து விட்டு பேருந்தில் தான் செல்கிறேன், நீ வண்டியை பயன்படுத்திக்கோ என்று பேச்சுக்காக கூறாமல் சாவியை கொண்டு வந்து கொடுத்து விட்டார். அவர் கணவர் காலையிலும் மாலையிலும் பேருந்தில் ஏற்றி விட்டு பிறகு மாலையில் அழைத்து வந்து விடுவார். அவர் எப்போதாவது தான் வண்டியில் வெளியே செல்வார். நானும் தூரமாக செல்வதாக இருந்தால் பயன்படுத்துவேன். மற்றபடி அனைத்து வேலைக்கும் சைக்கிள் தான். திடீரென்று சைக்கிள் ஒட்டியதால் முதுகு கை கால் நன்றாக பிடித்து கொண்டது. இரண்டு நாட்களாக எதுவும் செய்ய முடியவில்லை. தைலம் தேய்த்து சரி செய்து கொண்டேன். பின்பு வழக்கம் போல் சைக்கிளில் சுற்றினேன். எப்போதும் டிசையர் வண்டியை ஒட்டிக்கொண்டு இருப்பதால் சைக்கிளில் செல்லும் போது யாராவது தெரிந்தவர் வந்தால் வண்டியை பற்றி விசாரிப்பார்கள். அதே கதையை மீண்டும் மீண்டும் எந்த தொய்வும் இல்லாமல் சொல்ல பழகி விட்டேன் மனப்பாடமும் ஆகிவிட்டது.
ஒரு நாள் காலையில் எங்க தெரு போலீஸ்காரர் வீட்டுக்கு வந்தார். காவல் நிலையத்திலிருந்து செய்தி கூறினார்கள். உங்கள் இரண்டு வண்டிகளும் கிடைத்துவிட்டது. ஆர்சி புக் எடுத்துட்டு வரும்படி கூறினார்கள் என்றார். என்னால் நம்ப முடியவில்லை.
நான் வண்டியை எடுக்க ராமுவை அழைத்து கொண்டு சென்றேன். காவல் நிலையத்திற்கு வெளியே கூட்டமாக இருந்தது. என்னை போல் பலர் வண்டிகளை தொலைத்தவர்கள் காத்து கொண்டு இருந்தனர்.
எங்கள் தெருவில் இருந்தும் சிலர் வந்திருந்தனர். இன்ஸ்பெக்டர் நேர்மையானவர். அதனால்தான் கண்டுபிடித்தவுடன் உடனே கொடுக்க ஏற்பாடு செய்து இருந்தார். இதுவரை இது போல் ஒரே நேரத்தில் அதிக வண்டிகள் பிடிபட்டது கிடையாது. ஆனால் பிடிபட்டது. இந்த செய்தி நாளை செய்தித்தாள்களில் வெளிவரலாம். ஒருவர் காத்து கொண்டு இருந்தார் ராமு அவரிடம் பேச்சு கொடுத்தான். எப்போ கொடுக்க ஆரம்பிப் பார்கள் என்று. ஒரு கட்சி கூட்டம் மற்றும் ஊர்வலம் இருக்கு, அது முடிந்தவுடன் இன்ஸ்பெக்டர் வந்து விடுவார். எப்படியும் மதியம் ஆகிவிடும் என்றார். பெரிய ஆச்சரியமா இருக்கு எப்படி இவ்வளவு வண்டிகளையும் பிடித்தார்கள் என்றான் ராமு. அவர் ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தார் அமைதியாக. என்னை போல் அவரும் நிறைய பேர்களிடம் கூறி இருப்பார் போல. அவர் சொன்னார். நம் வீட்டில் திருடியது போல, அம்மாபேட்டை பஸ்டாண்ட் எதிரில் ஒரு பெரிய வீடு இருக்கிறது. பஸ்சில் போகும் போது பார்த்து இருக்கலாம். அது பஞ்சாயத்து பிரசிடெண்ட்டு கண்ணனின் வீடு பிரம்மாண்டமாக இருக்கும் . அந்த வீட்டில் என்பீல்டு திருடி இருக்கிறார்கள். திருடியவன் வண்டியை மட்டும் திருடாமல், ஆசையாக இருந்திருக்கும் போல அவருடைய வெள்ளை காலணிகளையும் சேர்த்து திருடிவிட்டான். ஒருநாள் ஏதேச்சையாக கண்ணன் பஸ்டாண்ட் வந்தவர் திருடனை பார்த்திருக்கிறார் அவன் தான் திருடன் என்று அவருக்கு தெரியாது. ஆனால் ஆளுக்கும் அவன் போட்டு இருந்த வெள்ளை காலணிக்கும் சம்மந்தம் இல்லாமல் இருந்திருக்கிறான். அவர் சந்தேகப்பட்டு உடனே போலீஸ்க்கு தகவல் கொடுத்தார். போலீஸ் வந்து அமைதியாக அருகில் இருந்திருக்கிறது. அவர் அவனிடம் , நீ எந்த ஊரு என்று கேட்டு இருக்கிறார் அவன் உடனே இங்கே பக்கத்தில் பூவரசம்காடு என்று சொல்லி இருக்கிறான். சரி இந்த காலணி எங்க வாங்கினீங்க என்று கேட்டு இருக்கிறார். அவன் உடனே அம்மாபேட்டை பஸ்டாண்ட் பாலாஜி காலணிகள் கடையில் வாங்கினேன் என்றான். உடனே அவனை அடிக்கத் தொடங்கி விட்டார். இங்க எப்படி கிடைக்கும் என்றார். போலீஸ் வந்து பிடித்து கொண்டது. பெரிய திருட்டு கும்பல் சிக்கி கொண்டது. பல இடத்தில் திருடியது தெரிய வந்தது. சுற்றியுள்ள கிராமத்துக்கு வெளியே ஆள்நடமாட்டம் இல்லாத குளங்களில் வண்டிகளை உள்ளே போட்டு மறைத்து வைத்திருந்தனர். சில வண்டிகளை பஸ்டாண்ட், சைக்கிள் ஸ்டாண்ட்டில் வைத்திருந்தனர் என்று கூறி முடித்தார்.
எங்களுடைய வண்டியையும் நல்ல நேரம் குளத்தில் போட வில்லை. சைக்கிள் ஸ்டாண்ட்டில் வைத்து இருந்தனர். இன்ஸ்பெக்டர் வண்டிகளை உறியவர்களிடம் ஒப்படைத்தார். யாரிடமும் பணம் வாங்கவில்லை. நானும் ராமுவும் வண்டிகளை எடுத்து கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.