கரிப்பு மணிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 1,611 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சமூக நாவல்)

அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24

அத்தியாயம்-19

உப்பளத்து வேலை முடித்து நெடுந்தொலை நடந்து வருவது பொன்னாச்சிக்கு இப்போதெல்லாம் சோர்வாகவே இல்லை. பாஞ்சாலியும் பச்சையும் துணையாக வருவதனால் மட்டும் தானா இந்த மாறுதல்? இல்லை. அச்சமும் எதிர்ப்பு மாக இருந்த உலகமே இப்போது நம்பிக்கை மிகுந்ததாகத் தோன்றுகிறது; இங்கிதமாகக் கவிந்து கொண்டிருக்கிறது முட்செடிகள் முன்போல் தலைவிரிச்சிப் பிசாசுகளாகத் தோன்றவில்லை. ‘என்னம்மா?” என்று கண்சிமிட்டி இரகசியம் பேசுகின்றன. யார் வந்தாலும் எதிர்த்துவிட முடியும் என்று தோன்றுகிறது. இந்தத் தெம்புக்கு என்ன காரணம்? 

புரட்டாசியில் நவசாத்திரி விழா-எங்கு பார்த்தாலும் அம்மன் கொலுவிருக்கையும், பூசையும் பொங்கலும் அமர்க களப்படும். அதற்கு முன்னர் மாளய அமாவாகையில் மழை மணி விழும் என்பார்கள், ஆனாலும் முக்காலும் விழாது. வேளை நீடிக்கும். மாமன் வந்து போயிருக்கிறார். பனஞ் சோலை அளத்தில் ஒரு ஆண்டு முழுதும் மழைக்காலம் வரையில் வேலை செய்தால் ஒரு சேலை எடுத்துக் கொடுப்பார்கள். கல்யாணமென்றாலும் பணம் இருநூற்றைம்பது கொடுப்பார்கள். மாமனுக்குக் கஷ்டம் அதிகமிருக்காது…பிறகு… 

சாயாக்கடைப்பக்கம் ராமசாமி நின்று ஒரு சிரிப்பைத் சிந்துகிறான். அவனருகில் இன்னும் பல இளைஞர்கள் சூழ்ந்திருக்கின்றனர். 

“எதும் விசேசமா?” என்று அவன் கேட்கும்போது அவர்கள் எல்லோரும் சிரிக்கிறார்கள். அவளுக்கு ஏதோ மணமேடையில் மற்றவர் கேலி செய்வது போல நாணம் கவிகிறது. 

பாஞ்சாலி வெடுக்கென்று, “இன்னிக்கு இனிஸ்பெட்டர் வந்தாவ, எங்கள எல்லாம் கொட்டடிலிலேந்து அந்தால பம்ப்கொட்டடி தாண்டி கோயில் செவர் மறப்புல ஒக்காத்தி வச்சிட்டா…” என்று சேதி தெரிவிக்கிறாள். 

“யாரு இனிஸ்பெட்டரு? போலீசா வந்திச்சி?” என்று அங்கு எட்டிப் பார்க்கும் ஒருவன் விசாரிக்கிறான். 

“அட, இல்லப்பா, ‘லேபர் இனிஸ்பெட்டா வந்திருப்பா. பிள்ளங்களை ஒளிச்சி வைப்பா!” என்று ராமசாமி விளக்கம் கூறுகிறான். 

“என்னக் கங்காணி அடிச்சிட்டார்; தொழியத் தொறந்து வுடுன்னு அவியதா சொன்னா. பொறவு ஏண்டா தொறந்தேன்னு அடிச்சா. வேற தொழியல்ல தொறக்கச் சொன்னேங்கா மூக்குலேந்து ரத்தம் வந்திச்சி” என்று பச்சை செய்தி தெரிவிக்கிறாள். 

“இருக்கட்டும். எல்லாத்துக்கும் விடிவு காலம் வரும். நாமல்லாம் கோரிக்கை குடுப்பம் ஞாயிற்றுக்கிழமை வாரம்…” 

பொன்னாச்சிக்குப் பூமியில் கால்பாவி நடப்பதாகவே தெரியவில்லை. வீட்டுக்குள் அவர்கள் நுழைகையில் அவர்கள் வீட்டு முற்றத்தில் இருள் பரவும் அந்த நேரத்தில் யாரோ கையில் பையுடன் நிற்கிறான். அரையில் பூப்போட்ட கைலியும், மேனியில் ஒட்டாத பாம்புத்தோல் போல் படம் போட்ட சட்டையும் அணிந்து கையில் கடியாரம் கட்டிக் கொண்டிருக்கிறான். மோதிரம் விரலில் பளபளக் கிறது. முடியில் வாசனை எண்ணெய் தொட்டு சீவியிருக்கிறான், அருகில் வரும் போதுதான் திடுக்கிட்டாற்போல் நிற்கிறாள். சிரித்துக்கொண்டு அவளிடம் பையை அவன் நீட்டுகிறான். 

தங்கபாண்டி…தங்கபாண்டி எதற்கு வந்திருக்கிறான்? அவள் பையை வாங்கிக் கொள்ளாமல் தயங்கி நிற்கிறாள். அப்போது சரசி ஓடிவந்து, “அக்கா, மாம ஊரிலேந்து இவ ஒன்னப்பாக்க வந்திருக்கா…” என்று செய்தி அவிழ்க்கிறாள். 

“சின்னம்மா வரல சோலிமுடிஞ்சி?” 

“நல்ல தண்ணிக்குப் போயிருக்கா… 

“வாங்கிக்க பொன்னாச்சி! மாமா தா என்ன அனுப்பினா.” 

“மாமா சொகந்தானா? மாமி புள்ளிய எல்லாமும் எப்படி யிருக்கா? போன வாரந்தா மாமா வந்திட்டுப் போனா…” 

“சொகந்தா. ஆனா… மாமாவுக்கு வாயுக்குத்து மூச்சுக் குத்து வந்து படுத்திருக்காவ, அதா என்ன அனுப்பிச்சாவ. கூட்டிட்டுவான்னு சொன்னாவ…” 

“ஒம்ம அனுப்பிச்சாவளா?” 

அவள் கேட்டுக் கொண்டு அவனைச்சட்டை செய்யாமல் உள்ளே சென்று தாழிட்ட கதவைத் திறக்கிறாள். 

பச்சையிடம் அவன் பையைக் கொடுக்கிறான். 

“என்ன அது?” 

“ஒண்ணில்ல பொன்னாச்சி… கொஞ்சம் சேவும் மிட்டாயும் வாங்கியாந்த. பொறவு கட்டிக்கப் போற பொண்ண வெறுங்கையோட பாக்க வருவனா?” அவன் சிரிப்பு – வெண்மையான பற்கள் இருட்டில் கள்ளமில்லாததாகப் பளிச்சிடுகிறது. ஒரு கணம் அவள் குலுங்குகிறாள். 

“மாமன் இந்த அப்பியிலியே கலியாணத்த முடிச்சிட லாண்ணு சொன்னாவ. அத அங்க பாத்திக் காட்டு அனுப்பி யிருக்கிறாவ. திரிச்சிக் கூட்டியாந்துடணும், ஒடம்பு முடியாம போச்சின்னாவ தீர்வ கட்டல. முன்சீஃபு ஆளுவள வுட்டு உப்ப வாரிட்டுப் போயிட்டா. பொறவு நாந்தா அஞ்சு நூறு கடங்குடுத்து. தூத்தூடி போயி அத்தக் கூட்டிட்டு வந்திருன்னாவ..” 

இவனும் குடித்திருப்பானோ என்ற ஐயம் கொண்டு அவள் பார்க்கிறாள். நிச்சயமாக மாமா இப்படிச் சொல்லி இவனுடன் புறப்பட்டு வர அனுப்பி இருக்க மாட்டார்! வேலுவை அனுப்பினாலும் அனுப்பியிருப்பார்! வேலு கால் பரீட்சை முடிந்து ஊர் திரும்பியிருப்பானோ? 

“எப்படின்னாலும் நானிப்ப, உம்மகூடப் புறப்பட்டு வரதுக்கில்ல. மாமாவுக்கு ஒடம்பு முடியலின்னா சங்கட்ட மாத்தானிருக்கு. இன்னிக்கி விசாளன். வெள்ளி . போவ நாயித்துக்கிளம நா வார, இல்லாட்டி பச்சைய அனுப்புற மின்னு சொல்லும்…” 

அவன் மேல் பேச்சுப் பேசுவதற்கே இடமில்லாமல் அவள் உள்ளே சென்று விடுகிறாள். 

தங்கபாண்டி பையைத் திரும்பப் பெற்றுக் கொண்டு ஏமாற்றத்துடன் அங்கிருந்து அகலுகிறான். 

மாளய அமாவாசையன்று மழை மணி விழும் என்ற எதிர்பார்ப்புடன் உப்பளத்தில் கெடுபிடியாக வேலைகள் நடக்கும். மழை மணி விழுந்துவிட்டால் உப்புக்காலம் தூத்துக்குடியில் ஓய்ந்துவிடும் என்று தீர்த்து விடுவதற்கில்லை. பருவ மழை நாகப்பட்டணம், பாண்டிச்சேரி கேரளத்துக்கரை என்று எங்கு அடித்துக் கொட்டினாலும், புயல் சுழன்று அடித்தாலும் தூத்துக்குடி உப்புக்குப் பெருஞ் சேதம் விளைவிக்க உடனே வந்து விடாது. உப்புக்காலம் தீபாவளியையும் தாண்டி நீடிப்பதுண்டு. ஆனால், மழை மணி விழுந்தால் உப்பு விலை ஏறும். தொழிலாளருக்கு வேலை கடுமையாகும். மழை அவர்களுக்குச் செழிப்புக்கும் வண்மைக்கும் பயன்படாததாகத் தொழிலை முடக்கி, முதலாளிகளுக்கு லாபத்தைக் கொண்டு வரும். அந்த லாபம் தொழிலாளருக்கு உபரியாக வண்மை கூட்டாது. எனவே அந்தக் காலங்களில் மிகத் தீவிரமாக உப்பை வாரித் தட்டு மேடுகளில் சேர்ப்பதும், மழையில் கரையாமல் ஓலைத் தடுப்புப் போடுவதும், அல்லது விரைவாக விற்று மூட்டை களாக்கி விலை ஏற்ற காலத்தில் அம்பாரங்களைக் கரைப்பது மாகப் பணிகள் நெருக்கும். 

இந்தக் காலத்தில் தொழிலாளர் அனைவரும் திரண்டு மேலிடத்துக்குத் தங்கள் கோரிக்கைகளை வைத்தால்? முக்கியமாகப் பனஞ் சோலை அளத்திலும் தொழிலாளர் ஒன்றுபட வேண்டும்! 

‘ஞாயிற்றுக்கிழமை வாரன்’ என்ற சொல் பொன்னாச்சியின் செவிகளில் ஒலித்துக் கொண்டுதானிருக்கிறது. சின்னம்மா, அதிகாலையில் நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரையிலும் உப்பு அறைவை ஆலையில் அதிகப்படி வேலை என்று மூன்று மணிக்கே எழுந்து போகிறாள். சரசிக்கு செங்கமலத்தாச்சியின் வீட்டில் படுக்கை, அதிகாலையிலேயே பொன்னாச்சி எழுந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து வந்து நிரப்பி, வீடு பெருக்கி, பாண்டம் கழுவித் துப்புரவு வேலைகளில் ஈடுபடுகிறாள். அப்பன் எழுந்து பின்புறம் செல்கிறார். 

செங்கமலத்தாச்சி வழக்கம்போல் வாயிற்படியில் அமர்ந்து சாம்பற் கட்டியை வைத்துப் பல் துலக்குகையில், ராமசாமி, பழனிவேலு, மரியானந்தம், மாசாணம் எல்லோரும் வருகின்றனர். 

“ஒங்களப் பாத்துப் போகத்தா வந்திருக்கம் ஆச்சி…” என்று ராமசாமி புன்னகை செய்கிறான். 

“எல, பொய் சொல்லாத!பொய் சொன்னா அரக் கஞ்சி யும் கெடக்காது!” 

அவன் கலகலவென்று சிரிக்கிறான். கண்கள் சிவந்த இருக்கின்றன. முடிசீவி, புதுமையாக அவன் தோற்றமளித் தாலும் தூங்கியிராத அயர்வு அவன் முகத்தில் தெரிகிறது. 

“சத்தியமா ஆச்சி, ஒங்களத்தா பார்க்க வந்தது. இங்க, தொழிலாளர் பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்னு ஒங்களத்தா கேக்க வந்தே…” 

“பொண்டுவள ஒண்ணு கேக்கறதா? ஆதிநாள்ளேந்து அது முடியாத காரியமின்னு தீந்து போயிருக்கே. ஒனக்குத் தெரியாதால?” என்று கேட்டுவிட்டு ஆச்சியே பதிலையும் கூறிக் கொள்கிறாள். 

“ஆனா ஒனக்கெப்படித் தெரியும்? ஒங்கப்பச்சிக்கு ஆத்தா முதல்லியே செத்திட்டா. அவியளோட பொறந்த வெல்லாம் ஸ்லோன்ல கெடக்கா மாமி நாத்தி மயினி சண்டை, சக்களத்தி சண்ட ஒண்ணும் பாத்திருக்க மாட்ட. பொண்டுவள ஒண்ணு சேக்கணுமின்ற; அது ஆவாத காரியமல்ல!” 

“ஏட்டி சரசி! ரூம்ப பெருக்கிப் போடுறீ?” ஆச்சி மகிழ்ச்சியான நிலையில் தானிருக்கிறாள் என்று ராமசாமி புரிந்து கொள்கிறான். 

சரசி பரபரவென்று முன்னறையைப் பெருக்கித் தள்ளு. கிறாள். பாதி முடைந்த ஓலைப் பெட்டியை நகர்த்தி வைத்துப் பெஞ்சியைத் துப்புரவாக்குகிறாள். 

“வாங்க, உள்ள வந்து இரிங்க…” 

செம்பு நீரெடுத்துப் பின்புறம் சென்று வாய் கொப்புளித்து விட்டு சேலைத் தலைப்பால் முகத்தைத் துடைத்துக் கொண்டு வருகிறாள். 

நெற்றியில் நீண்ட பச்சக்கோடு. இடது புறங்கையில் ஒரு யாகசாலைக் கோலம். கைத்தண்டின் உட்புறம் மூன்றெழுத்துக்கள் தெரிவதை ராமசாமி, கவனிக்கத் தவற வில்லை. அது முத்திருளாண்டியின் பெயரல்ல. அவர்கள் பெஞ்சியில் அமர்ந்து கொள்கின்றனர். 

“ஏட்டி, ஒரு ஏனத்தை எடுத்திட்டுப்போயி இட்டிலி வாங்கிட்டு வா. சாம்பாருக்கு தூக்குக் கொண்டுபோ!” மீண்டும் உள்ளே சென்று மெதுவான குரலில் சரசிக்குக் கட்டளை இடுவது அவர்கள் செவிகளில் விழுகிறது. 

சரசி சொக்குவின் வீட்டுப்படியில் பெரிய போகணியை வைத்துக் கொண்டு நிற்கும்போதுதான் திண்ணை மெழுகும் பொன்னாச்சி பார்க்கிறாள். போகணியைக் கொண்டு வந்திருக்கிறாள் இட்டிலிக்கு? 

“ஆரு வந்திருக்கிறது டீ? ஆரு?” 

”அவியதா, ஆரெல்லாமோ வந்திருக்கிறாவ…!” 

பொன்னாச்சி முற்றத்துக்குப் பத்து வயசுச் சிறுமியாக ஓடிவந்து, சன்னல் வழியாகப் பார்க்கிறாள். அவன் குரல் கேட்கிறது. 

“ஆச்சி, ஏனிப்படி செரமப்படுறிய? நாங்க டீ குடிச்சிட்டுத்தா வாரம்!” 

“அது தெரியும்ல!…” என்று இலைக்கிழிசல்களில் இட்லி யும் சட்னியும் எடுத்து வைக்கிறாள். 

“போபி ஆறுமுவத்தின் கடையில், நல்ல டீயா, நாலு டீ ரொம்பச் சக்கரை போட்டுக் கொண்டாரச் சொல்லிட்டு வா!” என்று விரட்டுகிறாள்.. 

அவர்கள் சாப்பிடுவதைப் பார்த்துக்கொண்டு அவள் நார்க்கட்டிலில் அமர்ந்திருக்கிறாள். எல்லோரும் வீச்சும் விறைப்புமாக வளர்ந்திருக்கும் வாலிபப் பிள்ளைகள், ஊட்டமும் செழுமையுமில்லாமல் இல்லாமையும் சிறுமையும் நெருக்கினாலும் வாலிபம் கிளர்ந்தெழும் பிள்ளைகள். அவர்கள் அங்கே சாப்பிடுவதைப் படத்திலிருந்து அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் அவனுக்கு நான்கு இட்டிலியும் சொக்கு கொண்டு வந்து வைத்துவிடுவாள். அதைக் கண்ட பிறகுதான் அவன் எழுந்து முகம் கழுவிக் கொள்வான். அந்தப் பெஞ்சியில்தான் அவன் படுத்திருப்பான்; உட்கார்ந்து பேசுவான், படிப்பான். அவன் போன பிறகு அவள் இட்லி தின்பதையே விட்டுவிட்டாள். பையன் தேநீர் கொண்டு வருகிறான். அதை அவளே அவர் களுக்கு எடுத்துக் கொடுக்கிறாள். 

‘நீங்க ஒண்ணும் எடுத்துக்கலியே ஆச்சி?” 

“நா சாயா குடிக்கமாட்டே. இதா கருப்பட்டி போட்டு நீரு கொதிக்கவச்சி ரெண்டு காப்பித்தூளப் போட்டு எறக்கி வச்சிடுவ. அதுதா. வெத்தில பொவயில. நா இட்டிலி டீத்தண்ணி ரெண்டும்…” தொண்டை கம்மிப் போகிறது. எழுந்து வெளியே செல்கிறாள். 

“ஏட்டி? பொன்னாச்சி? இங்ஙன வாட்டீ மாப்பிள வந்திட்டான்னு ஒளிஞ்சிக்கிற?… சின்னாச்சி என் சேறா?” 

“அப்பச்சியக் கூப்பிடுடீ!” 

“சின்னம்மா வெள்ளெனவே அறவ மில்லுக்குப் போயி ருக்காவ, இத வந்திருவா. அப்பச்சி பல்லு வெளிக்கிட்டிருக் காவ…” 

“அவியல்லாம் தொழில் சம்பந்தமா பேச வந்திருக்கா ஒரு விடிவுகாலம் வராண்டாமா? பொண்டுவதா கூடிச் சேரணுமின்னு வந்திருக்கா. பாஞ்சாலியவுட்டு இந்த வளவில இருக்கிற அளத்துப் பொண்டுவ, வித்து மூடக்காரவுக எல்லாரையும் கூட்டிட்டு வாரச் சொல்லு? செவந்தகனி மாதா கோவிலுக்குப் போறவுல இசக்கிமுத்து, ஜீனத்து வாராளே, அவ அண்ண, எல்லாரிட்டயும் ஆச்சி கூட்டியாரச் சொன்னான்னு சொல்லு….” 

சற்றைக்கெல்லாம் அங்கே திமுதிமுவென்று கூட்டம் கூடி. விடுகிறது. முற்றத்தில் வந்து ஆங்காங்கு குந்துகின்றனர். 

“மூடை அம்பது கிலோன்னு போட்டுக் கூலியைக் குறைச் சிட்டாங்க. ஒம்பது பைசான்னு, அதைச்சொல்லணும்?” என்று இசக்கிமுத்து நினைவுபடுத்துகிறான். 

“இப்ப நாம முக்கியமா இதுவரய்க்கும் சேராத ஆளு. களைச் சேரிக்கிறதா பார்க்கணும். பனஞ்சோல அளத்துத் தொழிலாளியனை இதுவரைக்கும் ஒரு வேல நிறுத்தத்திலும் ஆரும் ஈடுபடுத்தல; நாம வேற பக்கம் அடிபிடின்னு நின்னு போராடி பத்துப் பத்துப் பைசாவா கூலி கூட்டிட்டு வத்திருக்கும் அங்கேயும் அது போல இருக்கிற அளங்கள்ளதா தொழிலாளிய ஏமாத்தப்படுறாங்க. பச்சப் புள்ளியள ரண்டு ரூவாக் கூலி மூணு ரூவாக் கூலின்னு ஆச காட்டி அதுங்களுக்கு எதிர்காலம் இல்லாம அடிக்கியா. அவியளுக்குப் படிப்பு, அறிவு விருத்திக்குத் தொழில் பயிற்சி எதுக்கும் வாய்ப்பு இல்ல. இந்தத் தடவை நம்ம உப்புத் தொழிலாளிய ஆலைத் தொழில் சட்டத்துக்குக் கொண்டு வாரணும். நம் ஒவ்வொருத்தரும் பதிவு பெற்ற தொழிலாளின்னு மாறணும் முப்பது வருசம் வேலை செஞ்சாலும் நம்ம பேரு அவங்க பேரேட்டில் இல்ல. முதலாளிக்கும் தொழிலாளிக்கும் ஒரு சம்பந்தமுமில்ல. முக்கியமா இதுக்கெல்லாம் போராடணும்…”. 

ராமசாமி சொல்லிக்கொண்டே போகிறான். 

“பொண்டுவல்லாம் எதெது சொல்லணுமோ சொல் லுங்கட்டீ!” என்ற செங்கமலத்தாச்சி, உள்ளே சென்று அந்த செல்ஃபில் வரிசை குலையாமல் வைத்திருக்கும் நோட்டுப் புத்தகங்களிலிருந்து ஒன்றை உருவிப் புரட்டிப் பார்க்கிறாள். அதில் அவன் பெயர் மட்டும்தான் எழுதி இருக்கிறான். உள்ளே தாளெல்லாம். எங்களைப் பயன்படுத்திக் கொள் ளுங்கள் என்றுரைக்கின்றன. அவனுடைய பேனா… பேனா பேனா மாதிரி பென்சில்… 

தூசி தட்டி வைக்கும் பொருள்கள், அதை எடுத்துக் கீறிப் பார்க்கிறாள். பிறகு அவற்றைக்கொண்டு வருகிறாள். 

“எல்லாம் கேட்டு ஒளுங்கா வரிசையா எழுதிக்கிங்க!” 

“மரியானந்தம் அண்ணாச்சி காயிதமும் பேனாவும் கொண்டு வந்திருக்கானே? அதுக்குத்தானே அவெ வந்தது?”

இருந்தாலும் ஆச்சி கொடுத்த நோட்டை வாங்கிக் கொள்கிறான் ராமசாமி.  அதில் ஒவ்வொரு கோரிக்கையையும் கேட்டு அவன் எழுதிக் கொள்கிறான். 

நண்பகல் கடந்து வெயில் இறங்கும் வரையிலும் அவர்கள் பொழுது போவது தெரியாமல் பேசுகின்றனர். பிறகு ஒவ்வொருவராகக் கலைந்து போகின்றனர். 

பொன்னாச்சி உள்ளே சோறு வடிப்பதும், வெளியே வந்து பேச்சைக் கேட்பதுமாக அலைபாய்கிறாள். எல்லோரும் கலைந்த பின்னரே நினைவுக்கு வருகிறது. பாஞ்சாலிதான் கவலையுடன் கேட்கிறது, “அக்கா, அம்மா ஏ இன்னும் வரல? அறவை மில்லுக்குப் போயிட்டுக் காலம வந்திடுமே? வரல…” 

அடிமண் ஈரமாகக் கை வைத்ததும் பொல பொல வென்று சரிந்தாற்போல் ஓர் உணர்வு குழிபறிக்கிறது. 

“சின்னம்மா பொழுது சுவருக்கு மேல் ஏறியும் ஏன் வரவில்லை?” 

“அப்பச்சி? சின்னம்மா வரயில்லை…? பச்சயப் போயிப் பாக்கச் சொல்லலாமா? செவந்தகனி மாமனக் கூப்பிடுடீ….” 

அவள் வாசலுக்கு வருகிறாள். செங்கமலத்தாச்சி வாயிற் படியில் நிற்கிறாள். சைக்கிளை வைத்துக்கொண்டு ஒரு ஆள் அங்கு ராமசாமியிடம் ஏதோ கூறிக்கொண்டிருக்கிறான். 

அவன் முகம் கறுக்க அவர்களை நாடி வருகிறான். 

“பேச்சியம்மன் அளத்துல காலம் ஆரோ லாரி அறபட்டுப் பொம்பிள கெடந்தாளாம். ஆசுபத்திரில போட்டிருக்காம். இவ விசாரிச்சிட்டு வந்திருக்கா…சின்னாச்சி கருவேலக் காட்டு அளமில்ல?” 

“ஐயோ…!” என்று ஒலி பீரிட்டு வருகிறது. 

“சின்னம்மா… சின்னம்மா அங்கதா அதியப்படி வேலன்னு போனாவ…. சின்னம்மா..” 

பாஞ்சாலியும் சரசியும் அக்காவின் அழுகையொலி கேட்டு விம்மி அழத் தொடங்குகின்றனர். கண்ணுசாமியோ இடி விழுந்தாற் போல் உட்கார்ந்து விட்டான். 

சோறு வடித்து, தட்டுப் போட்டிருக்கிறாள். சாப்பிட உட்காரவில்லை. எல்லோரையும் பெரியாசுபத்திரிக்கு அழைத்துச் செல்கிறான் ராமசாமி. 

அத்தியாயம்-20

அவர்கள் செல்லுமுன் போலீசு விசாரணை போன்ற சடங்குகளெல்லாம் முடிந்துவிட்டது. சடலத்தைக் கிடங்கி லிருந்துதான் எடுத்து வருகின்றனர். மருதாம்பாளின் முகம் என்று அடையாளமே தெரியவில்லை. முடியெல்லாம் பிய்ந்து குதறப்பட்டிருக்கிறது. மாமிக்கு முடி வெண்மையும் கருமை யுமாக இருக்கும். சின்னம்மாவுக்குக் கருமை மாறாத முடி அது சிதைந்து கூழாகி உருப்புரியாமல்… லாரியில் முகம் நசுங்கி  விட்டதா? 

பொன்னாச்சி லாரியில் அடிபட்ட உடம்பை அதுவரையிலும் பார்த்ததில்லை. 

“ஐயோ. சின்னம்மா!” அவள் துயரம் பொங்கி வரக்கதறி அழுவதைக் கண்டு குழந்தைகள் எல்லோரும் கதறுகின்றனர்.

“இது லாரி மோதலல்ல.  அறவை மில்லுல அடிபட்டு விழுந்திருக்கா. வெளிலே பாதையில அடிபட்டு விழுந்தான்னு சொல்றாவ. பொய்யி. அறவை மில்லுல மிசின் பில்ட்டில மாட்டியிருக்கும். அதா விசாரணை எல்லா அதுக்குள்ள ஆயிரிச்சி. ஞாயிற்றுக்கிழமையாதலால் அதிக ஆட்கள் நடமாட்டமுமில்லை. கொண்டு வந்து வெளியே போட்டு லாரியில் அடிபட்டிருக்கிறாள் என்று சொல்லியிருப்பார்கள்” என்று ராமசாமியும் தனபாண்டியனும் பேசிக் கொள்கின்றனர். 

வாயைத் திறந்து பேசமாட்டாள். பேசினால் அது சாட்டையடிபோல் இருக்கும். அந்தச் சின்னம்மா உப்பளத்துக்கே இரையாகி விட்டாள். 

“சின்னம்மா! வெடிஞ்சதும் வந்துடுவேன்னு ரெண்டு ரூவாக் காசுக்காவ ஒழக்கப் போயி இப்படிக் கிடக்கிறி யளே?…” என்று உள்ளம் புலம்பியழுகிறது. அவள் தாய் இறந்து போனபோது கூட அவள் இத்துணைத் துயரம் அனுபவிக்கவில்லை. தன்மீது வானமே இடிந்து கவிந்தாற் போன்று ஓர் சோகத்துள் அவள் அழுந்திப் போகிறாள். 

அவள் தன்னையும் தம்பியையும் அழைக்க வந்ததும் திரும்ப நம்பிக்கைகளைச் சுமந்து கொண்டு தூத்துக்குடி பஸ்ஸில் ஏறியதுமான காட்சிகள் படலங்களாகச் சுருள வீழ்கின்றன. அப்பனுக்கு உடம்பு சரியில்லை என்று அவளைக் கூட்டி வந்தவள் போய் விட்டாள்.”அய்ந்நூறு ரூபா கடன்…. கடனிருக்கு…” என்று சோற்றுப் பருக்கைளை அளைந்து கொண்டு பிரமை பிடித்து உட்கார்ந்து விடும் சின்னம்மா… அவள் போய் விட்டாள். அவள் யாரோ? தான் யாரோ?” சின்னம்மா எங்கோ பிறந்து எங்கோ எப்படியோ வளர்ந்து, யாருக்கோ மாலையிட்டு யாருடனோ, எப்படியோ வாழ்ந்து மக்களைப் பெற்று, ந்த உப்புக் காட்டில் உடலைத் தேய்த்து… 

“சின்னம்மா!…” என்று கதறிக் கொண்டு உடலின் மீது விழுந்து அழுகிறாள் பொன்னாச்சி. 

ராமசாமி அவளைக் கனிவுடன் தொட்டுத் தூக்குகிறான், “அழுவாத புள்ள. நீயே அளுதா மத்த புள்ளயெல்லாம் என்ன செய்யும்? அப்பச்சிக்கு ஆரு தேறுதல் சொல்லுவா…?” 

அப்போது கங்காணியும் இன்னொரு ஆளும் அங்கு வந்து தனபாண்டியனை அழைத்துச் செல்கின்றனர். அவர்களிடம் பேசிவிட்டு அவர் ராமசாமியிடம் வந்து விவரம் தெரிவிக் கிறார். 

“நூறுரூபாய் செலவுக்குத் தந்திருக்கா ‘வட்டுக்கடன் ஓடிப்போச்சு, வேல அதிகப்படி நாஞ் செய்யிறேன் கங்காணி’ன்னு கெஞ்சிக் கேட்டா. எரக்கப்பட்டுக் குடுக்கப் போயி அறவை மில்லில மிசின் பெல்ட்டில மாட்டிக் கிட்டிச்சி. மொதலாளிக்கு மனசுக்கு ரொம்பச் சங்கட்டமாப் போச்சி. கூட இன்னுமொரு பொம்பிளயும் ஆம்பிள பாளும் இருந்திருக்காவ. ஓடிவந்து எடுக்குமுன்ன தலமாட்டிக்கிச்சு. வேணும்னு ஆரும் செய்யறதில்ல. எல்லாருக்கும் இது கஷ்டந்தா. மொதலாளி வீட்டில இன்னிக்குக் கலியாணப் பேச்சுப் பேச வராக. சொன்ன ஒட்ன ஸ்கூட்டர் எடுத்திட்டு ஓடியாந்தா. பொறவு போலீசெல்லாம் வந்து எழுதிட்டுப் போயிட்டு ஆசுபத்திரிக்குக் கொண்டாந்தா. ஆரயும் குத்தம் சொல்றதுக்கில்ல. அந்தப் பொம்பிள தூக்கக் கலக்கத்தில தெரியாம… விழுந்திட்டா…ன்னு சொல்றானுவ. என்ன பண்ணலாம்?” 

முப்பது ஆண்டுகள் ஒரே இடத்தில் வேலை செய்த தொழிலாளிக்கே எந்த ஈட்டுத் தொகையும் கிடைப்பதில்லையே? 

சின்னம்மாளை மண்னில் புதைத்துவிட்டு அவர்கள் வீடு திரும்புகையில் இரவு மணி ஒன்பதடித்து விடுகிறது. ராமசாமி அன்று வீட்டுப் பக்கமே செல்லவில்லை. அப்பனின் வாயிலி ருந்து ஒரு சொல்லும் வரவில்லை. அழக்கூட தெரியாத சிலையாகிவிட்டார். சிவந்தகனிதான் அவரை முழுகச் செய்து கொண்டுவந்து உட்கார்த்தினான் திண்ணையில். 

சிவந்தகனியின் மனைவி சோறாக்கி வந்து அவர்களுக்கெல்லாம் போட்டாள். 

ராமசாமியும் படுக்கவில்லை. 

செங்கமலத்தாச்சியும் உட்கார்ந்திருக்கிறாள். 

“என்ன விட்டுப்போட்டுப் போயிட்டா…..நா என்ன பண்ணுவே…” என்று கண் தெரியாமல் விம்மும் அப்பனைப் பார்த்தாலே பொன்னாச்சிக்கு அழுகை வெடிக்கிறது. 

“ஏட்டி அழுவுற? அழுதா என்ன ஆவும்? அவ போயிட்டா மவராசி. அந்தப்பய காட்டில மடிஞ்சிகெடந் தப்ப ராப்பவலா எம்பக்கத்துல ஒக்காந்து கெடந்தா. வேலய்க்கிப் போவல. நா ஒருமாசம் இப்படியே ஒக்காந்து கெடப்பே. படுக்க மனமிராது ….அளத்துலேந்து வந்து ஒக்காந்து தேத்துவா. ஓங்கக்கு ஆறுதல் சொல்ற துக்க மில்லதா ஆனா, இப்பிடியே இருந்திட்டா எப்பிடி? இந்த ஒலகத்தில நினச்சிப்பாத்தா நமக்கெல்லாம் சொகமேது துக்கமேது? ஒரு ஆம்பிளக்கின்னு அடிமப்பட்டுப் புள்ள குட்டியப் பெற்றது சொகமின்னா அதுல இன்னொரு பக்கம் எம்புட்டு நோவும் நொம்பரமும் இருக்கி! பொம்பிளக்கி சுகமும் துக்கந்தாம்பா. அதெல்லாம் இன்னிக்கு நினைச்சிப் பாக்கே. சுகம் எது துக்கம் எது? சுகப்பட்டவ நீண்டு நிக்கிறதுமில்ல, துக்கப்பட்டவன் மாஞ்சு போயிடறதுமில்ல. சினிமா பாக்கப் போறான், இப்பல்லா. அதுல சுகம் துக்கம் பாட்டு ஆட்டம் அழுகை எல்லாம் வருது. கடோசில் ஒரு முடிப்ப போட்டு மணியடிச்சிடறாங்க. எந்திரிச்சி வரோம். அப்பிடித்தா…” 

பொன்னாச்சி கண்ணீர் காய்ந்து கோடாக, அசையாமல் உட்கார்ந்து இருக்கிறாள். அவள் கூந்தல் தோள்களில் வழிந்து தொங்குகிறது. மங்கலான நிலவொளி தவிர வேறு விளக்கு அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை. 

“நேத்து இந்நேரம் கூட உசிரோட இருந்தா. இப்பிடிப் போயிடுவான்னு கொஞ்சங்கூட நினப்பு இல்ல…” என்று நினைவு கொள்ளும்போது சோகம் தாளாமல் குழி பறிக்கிறது. 

“அவளுக்கு ஆட்டம் முடிஞ்சி மணி அடிச்சிட்டா ஆண்டவ இல்லாட்ட எதுக்கு இந்தக் கூலிக்கிப் போறா?…. பொம்பிளயாப் பெறக்கறதே பாவந்தா, கல்லுல நீதா போயி இடிச்சிக்கிற, முள்ளுல நீதா கால வச்சிக் குத்திக்கிற. ஆனா கல்லு இடிச்சிச்சி, முள்ளு குத்திச்சின்னுதா ஒலவம் பேசும். ஏன்னா, கல்லும் முள்ளும் எதித்திட்டு வராது, பாத்திக்காட்டுல இளவயிசா ஒரு புள்ள வந்திட்டா அந்த காலத்துல யாரும் என்னேனும் செய்ய லான்னு இருந்தது. பொறவு என்ன? மருதாம்பா கெட்டவ; புருசன் இருக்கையில விட்டு ஓடிட்டா. அவெ மானின்னெல் லாந்தா பேசுவா. அந்த காலத்துல நாத் தெருவுல போனா காறி உமிஞ்சவங்க உண்டு, சண்டையிலே போராடி கெலிச்சி வந்தாலும் அவெம்மேல எதிராளி அம்புப்பட்ட வடு இல்லாம போவாது. அப்பிடி எத்தினியோ வடு; இன்னிக்கு எல்லா வடுவையும் செமந்திட்டு நானிருக்கே. ஆச்சின்னு வாராக. சோத்துக்குத் தட்டில்லாத புழக்கம். சல்லிப் புழக்கம் தொழி லில்லாத காலத்துல அத்தயும் இத்தயும் வச்சு பத்து இருவதுன்னு வாங்கிட்டுப் போறாவ.கூலிக் காசுல அப்பப்ப கடன் கொண்டு வந்து தாராவ. அவ போராடி செயிக்காமயே போயிட்டா…” 

ஆச்சி தகரப் பெட்டியைத் திறந்து துணியில் சுற்றிய வெற்றிவையை எடுத்து நீவிவிட்டுக் கிழித்து கண்ணாம்பு தடவி அரைப்பாக்கையும் அதையும் போட்டுக் கொள்கிறாள். 

ராமசாமி அசையவில்லை. பொன்னாச்சிக்கு சோலை தன்னைத் துரத்தி வந்தது நினைவில் நெருடுகிறது. 

ராமசாமிக்கு அதை அவள் சாடையாகக் கூறினாள். அன்று சோலை என்று பெயரும் கூறவில்லை. அவன் அவளிடம் வெறுப்புக் காட்டாமல் இருப்பானோ? 

ஆச்சி புகையிலைச் சாற்றை வெளியில் போய் துப்பிவிட்டு வருகிறாள். 

“பொழுது ரெண்டு மணி இருக்கும். வேல வெட்டிக்குப் போவாணாமா? ஒன் ஆத்தாக்குச் சொல்லி அனுப்பினிய ராமசாமி?” 

“இல்ல, ஆனா சொல்லியிருப்பா . மாசாணம் கங்காணிட்டியும் சமாளிச்சிக்கும்னு சொன்னே. செத்தப் படுத்து ஒறங்கணும். மூணு நாளா ராவுலதா வேல. ஆனா இப்ப படுத்தாலும் ஒறக்கம் புடிக்குமான்னு தெரியல. ஒரு உப்பளத் தொழிலாளியின் குடும்பம் எப்படி இருக்குங்கறதுக்கு இந்தக் குடும்பமே போதும். முப்பது வருசம் வேல செஞ்சும் ஒரு பிசுக்கும் ஒட்டல. பெரிய போராட்டத்துக்கு நாம் கொடி எடுத்துத்தானாகணும். கட்சி கிட்சின்னு ஒண்ணும் ஒதுங்கக் கூடாது…ஆச்சி நீங்கதா இதுக்கு சப்போட்டா இருக்கணும். ரெண்டு நா வேலயில்லேன்னாக்கூடக் கஞ்சி குடிக்க ஏலாமப் போயிரும். முன்ன. இருபத்துமூணு நா ஸ்டைக் பண்ணினாங்க. பனஞ்சோல அளம் இல்ல அப்ப தாக்குப் புடிக்காம ஆளுவ போயிட்டா. கூலி கொறஞ்சி போச்சி. அப்படி அத்திவாரம் இல்லாத வீடு கட்டக் கூடாது…” 

ஆச்சி ஏதும் மறுமொழி கூறவில்லை. 

புகையிலைக் காரத்தில் அமிழ்ந்தவளாக மெளனமாக இருக்கிறாள். பிறகு பொன்னாச்சியைக் கிளப்புகிறாள். 

“போட்டி, போயி செத்தப் படுத்து ஒறங்கு. மாமனுக்குச் சொல்லி அனுப்பியிருக்கு. வெடிஞ்சி அவிய துட்டிக்கு வருவா. அப்பச்சி என்னேயான்னு பாரு! வெடிஞ்சி மத்தது பேசிக்கலாம்.” 

பொன்னாச்சி பெருஞ்சோரத்திலிருந்து எழுந்திருக்கிறாள். 

“நீ இந்நேரம் வீட்டுக்குப் போவாட்டி இப்படியே கெடந்து ஒறங்கு. தலையாணி போர்வை தார…” என்று ராமசாமியிடம் கூறுகிறாள். 

“அதெல்லாந் தேவையில்ல ஆச்சி. ஒறக்கம் வந்தா நின்னிட்டேகூட ஒறங்கிடுவ. இப்ப நீரு பாயி தலையாணி தந்தாலும் உறக்கம் வராது போல இருக்கி…” 

“போட்டி…போ, ஏ நிக்கிற.” 

பொன்னாச்சி அங்கிருந்து அகலுகிறாள்.

ராமசாமிக்கு ஒரு தலையணை கொண்டு வந்து ஆச்சி கொடுக்கிறாள். 

“ஆத்தாட்ட இந்தப் புள்ளயப் பத்திச் சொல்லியிருக்கியா?” 

அவன் திடுக்கிட்டாற்போல் ‘நிமிர்ந்து பார்க்கிறான். உடனே மறுமொழி வரவில்லை. அம்மாவின் நினைப்பு மாறானது. அவள் உப்பளத்தில் வேலை செய்யும் பெண்கள் யாரையும் மருமகளாக்கிக் கொள்ள ஒப்ப மாட்டாள். சண்முகக் கங்காணியின் தங்கச்சி மகள் வாகைக்குளம் ஊரில் இருக்கிறதாம். எட்டுப் பிள்ளைகளுக்கு நடுவே பூத்திருக்கும் அல்லி மலராம்… அவன் செவி கொடுத்துக் கேட்கவில்லை. இதற்காக அவனால் தாயிடம் போராட முடியாது. ஏனெனில் அவனுடைய அன்னையின் உலகம் குறுகிய எல்லை களுடையது. நிமிர்ந்து பார்க்கும் இயல்பு இல்லாதவள் அவள். அளத்தில் இருநூறு ரூபாய் சம்பளத்தை உதறிவிட்டு வந்திருப்பதையே அவன் அவளுக்குத் தெரிவிக்கவில்லை. தன்னை வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள் என்று தான் கூறியிருக்கிறான். அவள் நாள் முழுவதும் தன்னுடைய உலகத்திலேயே கனவு காண்கிறாள். 

அவன் மௌனம் சாதிப்பதைக் கண்டு ஆச்சி மீண்டும் வினவுகிறாள். 

“ஏன்ல…ஆத்தாட்ட சொல்லலியா?” 

‘இல்ல. பொறவு சொல்லிக்கலான்னுதா சொல்லல…” அவனுடைய குரல் அமுங்கும்படி பொன்னாச்சி ஓடி வருகிறாள். 

“ஆச்சி…? அப்பச்சி… அப்பச்சிய வந்து பாருங்க…! முளிச்சாப்பல கட்டயா இருக்காவ… எப்படியோ…” 

சாவு வீடென்று கொளுத்தி வைத்திருக்கும் சிறு விளக்குச் சுடர் பெரிதாக்கப் பட்டிருக்கிறது. அவன் விழித்தபடியே கட்டையாகக் கிடக்கிறான்; அசைவேயில்லை, 

அந்தப் பெண்பிள்ளை போன பிறகு… அவனுக்கு… எல்லாமே ஓய்ந்து விட்டது. 

பொன்னாச்சியின் ஒல ஒலி வளைவில் எல்லோரையும் திடுக்கிட்டெழச் செய்கிறது. 

அத்தியாயம்-21

அப்பன் இறந்தாலும் அம்மை இறந்தாலும் வெகு நாட் களுக்குத் துயரம் கொண்டாடுவதற்கில்லை. ஏனெனில் வயிற்றுக் கூவலின் முன் எந்த உணர்ச்சியும், மான அபிமானங்களும் கூடச் செயலற்றுப் போய்விடும். உயிர் வாழ்வதே உழைப்புக்கும் அரைக் கஞ்சியின் தேவைக்கும் தான் என்றான பிறகு மென்மையான உணர்ச்சிகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன. பளிங்குச்சில்லும் மணலும் களியும். கொண்டு மண்ணின் உயிர்க் கண்களைத் துப்புரவாகத் துடைத்து பின்னர், அதில் பசுமையை எதிர்பார்க்க முடியுமா? அந்தப் பாத்தி கரிப்பு மணிகளுக்கே சொந்தமாகி விட்டதால் பசுமை துளிர்க்கும் மென்மையான உணர்ச்சிகளைப் பாராட்டு. வதற்கில்லை. பொன்னாச்சியும் பச்சையும் வேலைக்கு வருகின்றனர். ஒரு வாரம் சென்றதும். 

“பாவம், சின்னாத்தா, அப்பன் ரெண்டு பேரும் ஒன்னிச்சிப் போயிட்டா…” என்று பேரியாச்சி இரங்குகிறாள். 

“இந்த வுள்ளியளுக்கு ஆத்தான்னு கொடுப்பினயில்லாம லேயே போயிடிச்சி… அந்தப் பய்யனப் போலீசில புடிச்சிட்டுப் போனப்ப, சின்னாத்தா தா ஆனவாடும்பட்டான்னு சொல்லிச்சி பாவம்…” என்று இறந்தவளின் மேன்மையைக் கூறுகிறாள் அன்னக்கிளி. 

“இப்பிடிக்கும் நல்லவிய இருக்காவ. சக்களத்தி வுள்ளியளக் கொல்லுறவியளும் இருக்கிறாவ.ஏதோ ஒலவம்” என்றெல்லாம் தங்கள் உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்கையில் கண்ட்ராக்ட் வந்து விட்டார். வாயை மூடிக் கொள்கின்றனர். 

வழக்கம் போல் அவனது அதிகாரம் தூள் பறக்கிறது. அறைவை ஆலையில் எட்டும் பத்துமான குஞ்சுகள் மூன்று ரூபாய்க் கூலிக்குக் கண்ணிதழ்களிலும் செவியோரங்களிலும் மூக்கு நுனிகளிலும் மாவாகப் பொடி அலங்கரிக்கத் தலைக் கொட்டை கட்டிக் கொண்டு பொடி சுமக்கிறார்கள். தட்டு மேட்டில் அம்பாரங்கள் குவிந்து, நண்பகலின் உக்கிரமான ஒளியில் பாலைவன மலைகளைப் போன்றும் கறுப்பும் வெளுப்புமாக ஓடும் குன்றுகளைப் போன்றும் பிரமைகளைத் தோற்றுவிக்கின்றன. 

மாளய அமாவாசை நெருங்கி வருகிறது. ராமசாமிக்கு நிற்க நேரமில்லை. கோரிக்கைகளைத் தயாராக்கி விட்டார்கள். அவனுடைய மனக்கண்ணில் எல்லா அரசியல் கட்சி களைச் சார்ந்த தொழிற்சங்கக்காரர்களும் சேர்ந்து அவற்றை எல்லா முதலாளிகளுக்கும் கொடுப்பதும், அமாவாசையன்று மழை மணி விழுவதும், பின்னர் தட்டு மேடுகளில் அம்பாரங் கள் வாருவாறின்றிக் கிடப்பதும், நிர்வாகங்கள் இறங்கி வருவதுமான சாத்தியக் கூறுகள் தோன்றிக் கொண்டிருக் ஒன்றன. 

பதிவு கூலி- ஓய்வு நாளயச் சம்பளம், மழைக் காலங்களில் மறுவேலை அல்லது அரைச் சம்பளம் – முதுமைக்கால ஊதியம் – மருத்துவ உதவி, பெண்களுக்குச் சமவேலை, சம கூலி நிர்ணயம் – பேறு கால உதவி, ஓய்வு, பிள்ளை காக்கும் பால் வாடிகள், உப்பளப் பாதிப்பினால் வரும் நோய்களுக்குத் தக்க மருத்துவப் பாதுகாப்பு, எல்லாம் கேட்கிறார்கள். கூடுமான வரையிலும் எல் லோரையும் இந்தப் போராட் டத்தில் ஈடுபடுத்த அவனும் மற்றவர்களும் ஓயாது அலை கிறார்கள். அவனுக்குத் திருமணத்தைப் பற்றிய நினைப்பு இப்போது இல்லை. 

அருணாசலத்துக்குக் கால்கை பிடிப்பு மாதிரி வந்து ஒரு வாரம் காய்ச்சலும் நோவுமாகப் படுக்கையில் தள்ளிவிட்டது. மரணச் செய்தி கேள்விப்பட்டு வந்து குழந்தைகளை ஊரில் கொண்டு போய் ஒரு வாரம் வைத்திருக்கவும் கூட இயலாமல் படுத்து விட்டார். மாமிதான் வேலுவைக் கூட்டிக் கொண்டு வந்து இரண்டு நாட்கள் இருந்து சென்றாள். அவருக்கு இப்போது உடல்நிலை குணமாகியிருக்கிறது. தூத்துக்குடி ஆஸ்பத்திரிக்கு வந்து உடலைக் காட்டிச் செல்கிறார். ஆஸ்பத்திரிக்கு வந்து திரும்புகையில் ஆச்சியைப் பார்க்கப் படி ஏறுகிறார். 

ஊமை வெயிலின் துளிகளை மேல் துண்டால் ஒத்திக் கொள்கிறார். 

சரசி பன ஓலை கிழிக்கிறாள். செங்கமலத்தாச்சி ஓலைப் பெட்டி முடைந்து கொண்டிருக்கிறாள். மூக்குக் கண்ணாடி மூக்கில் தொத்தி இருக்கிறது. 

“வாரும், வாரும் – இரியும்? ஆசுபத்திரிக்கு வந்தியளா?”

“ஆமா, எல்லா வேலைக்குப் போயிருக்காவளா?” 

“போயிருக்கா நோட்டீசு குடுத்தா, பொறவு வேலை இருக்காது. மொதலாளிய அம்புட்டெல்லால எறங்கி வருவாகளா? கருக்கல் விடியிதுன்னா லேசா?” என்று கூறிக் கொண்டு பெட்டியை வைத்து விட்டு மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கொள்கிறாள். 

”ஓலை கெடக்கிதா? முன்னல்லாம் ஆடிமாசம் வாங்கி வச்சிப்ப. இப்ப ஒண்ணும் சேயாம இருந்திட்ட, நேத்துப் போயி திரிஞ்சி வாங்கியாந் தே. மழக்காலம் வந்திட்டா கடனுக்கு வருவாக. வேலய விட்டு நின்னாலும் கையில காசுக்கு என்னேயுவா?” 

“இப்பத்தான் வாரியளா? சாப்பாடு எதும் வக்கச் சொல்லட்டா?” 

“எல்லாம் ஆச்சு.. காலமேயே வந்திட்ட வட்டுக் கடன் வாங்கி சுசய்ட்டிக்குத் தீர்வை கட்டிட்டு இப்ப பிரிக்கற இந்தத் தரகன் பயலுக்குக் காசா இல்ல? பத்து ரூவாக்கி இப்ப வா, அப்ப வான்னுறா. அட, லீசைக் கான்சல் பண்ணிட்டுப் போறா. நீரன் இத்தக் கட்டிட்டு அழுவுறி யன்றா. ஒரு மனுசன் பேசற பேச்சா இது? நாமெல்லாம் மனுசங்களா இல்லியான்னு இப்ப எனக்கே சந்தேகமாப் போயிட்டு. உங்ககிட்ட உளுமையைச் சொல்லுற…” 

ஆச்சி பேசவில்லை. அவருக்கு ஆற்றாமை தாளாமல் வருகிறது. 

“அந்தக் காலத்தில் என்னென்ன லட்சியம் வச்சிட்டி ருந்தம்! காந்தி கனவு கண்ட ராமராச்சியம் வரப்போற துன்னு நினச்சம். ஒரு மனுசன் குடிக்கற கஞ்சிக்குத் தேவை யான உப்பு. அதுதான் சத்தியம்னு ஒரு உத்தமமான போராட்டத்தையே அதுல வச்சி ஆரம்பிச்சாரு. இன்னிக்கு அஞ்சும் குஞ்சுமா உப்புப் பெட்டியில எட்டு மணி கருகிட்டு வருதுவ, இதுவளுக்குக் காந்தின்னா தெரியுமா,தேசம்னா தெரியுமா? பசி  தெரியும். இன்னொன்னு சினிமா. இதுக்காவ எதையும் செய்யத் துணியிதுங்க. நாங்கல்லாம் படிக்க வசதியில்லாத காலத்துல பனயேறிப் பிழைக்கிற குடும்பத்துல தாம் பெறந்தும். இன்னிக்கு நினைச்சுப் பாக்கறப்ப அப்ப எங்க லட்சியம் எம்புட்டுக்கு உன்னதமா யிருந்திருக்குன்னு தெரியுது. திருச்செந்தூர் தாலுகா காங்கிரசில் இருந்த இளயவங்க எப்படி இருந்தோம்! அம்புட்டுப் பேரும் ஒரு வாப்புல கள்குடிக்கக் கூடாது. கதர் உடுத்தணும்னு பிரசாரம் செய்யிவம். இப்ப என்னடான்னா, காலேஜில படிக்கற பய, பொண்டுவ பின்னாடி திரியிறா, சீண்டுறா, வெக்கக் கேடு. பாரதியார் அன்னிக்குப் பாடி வச்சாரே, பாஞ்சாலி சபதம், அதப்பத்திச் சொல்லுவாக, அவர் நம்ம தேசத்தையே பாஞ்சாலியா நெனச்சிப் பாடினாருன்னுவாக. பாவி துச்சாதனன் செந்நீர், அந்தப் பாழ்த் துரியோதனன் ஆக்கை இரத்தம் மேவி இரண்டும் கலந்து குழல மீதினிற் பூசி நறு நெய் குளித்தே சீவிக்குழல் முடிப்பேன்…’னு பாஞ்சாலியையா பாடினாரு? இந்தத் தேசம் நெஞ்சுல ஒரமில்லாம அடிபட்டுக் கிடக்கிறது. பொறுக்காம பொங்கி வந்துருக்கு. இன்னிக்கு எனக்கு இந்த உப்புத் தொழிலாளிய எல்லாரும் பாஞ்சாலியளா நிக்கிறாம் போல தோணுது…” தொண்டை கம்மிப் போகிறது. 

“சரசி! லோட்டாவில குடிக்கத் தண்ணி கொண் டாம்மா!” 

அவர் தண்ணீரருந்துகையில் ஆச்சி மௌனமாக இருக்கிறாள். 

“எனக்குத் தெரிஞ்சு அளக்கூலி நாலணாவிலேந்து நாலு ரூவா வரையிலும் உசந்தும் அரக்கஞ்சியே பிரச்சினையாகத் தாளிருக்கு…” 

ஆச்சி உடனே கேட்கிறாள். 

“அதுக்காவ எதுவும் நின்னு போயிடுதா? மனுசன் வயசாகாம நிக்கிறானா? புள்ளய பெறக்காம நிக்கிதா? நீங்க காலத்துல ஏதானும் ஏற்பாடு செஞ்சு பொன்னாச்சிக்கும் ஒரு கலியாணங் கெட்டி வச்சிரணும். நம்ம இல்லாமயும் இருப்பும் அடிபிடியும் எப்பவுமிருக்கு. அந்தக் குடும்பத்துக்கு இப்ப ஒம்மத் தவிர ஆருமில்லாம போயிட்டா. கடல்ல அல ஓயுமா? அலயிலதா குளிச்சி எந்திரிக்கணும். அவெ ஆத்தா கிட்டச் சொல்லுலேன்ன, வாணங்கா? 

“நானும் அன்னிக்குப் போனே. எங்கிட்டயும் அதாஞ் சொன்னா நா ஒரு இருபத்திரண்டு நா, மாசம் கழியிட்டும்னு தானிருக்கே. அவ அம்மா தாலி இருக்கு. தாலிப் பொன் வாங்கறாப்பல கூடல்ல…இன்னிக்கு நிலைமை இல்ல! ஒரு சில வேட்டி வாங்கி முடிச்சிடலாம்… பச்சைப் பயல் எப்படி இருக்கா?” 

“வேலக்கிப் போறா; சம்பளத்தக் கொண்டு பொன் னாச்சியிட்ட தா கொடுக்கா. இங்ஙனதா எல்லாம் கெடக்கும். சின்னது ரெண்டு மூணுநா ராவெல்லாம் சொல்லத் தெரியாம அளுத்திச்சி, வூட்டுக்குப் போகவே பயமாயிருக்கும்பா பாஞ்சாலி; நாங்கூட ராமசாமியக் கலியாணங் கட்டிட்டா இந்த வளவிலியே வந்திருக்கட்டு முங்கே. அவெ ஆத்தா ஒப்புவாளோ என்னமோ?… 

ஆச்சி முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள். 

தூத்துக்குடி ஊர் திருமந்திர நகராம், பனமரங்கள் கூடச் சலசலக்காதாம். ஆனால் உப்பளத்துத் தொழிலாளர் சலசலக்கப் போகிறார்கள். வானிலே மேகமூட்டம் தெரிகிறது. கரிப்பு மணிகளைப் பிரசவிக்கும் அன்னை சோர்ந்து துவண்டாற்போல் கிடக்கிறாள். காலையில் தொழிதிறந்தால் பன்னிரண்டு மணிக்குக் குருணைச் சோறு இறங்கவில்லை. காற்றில் இருக்கும் வறட்சி ஓர் ஈரமணத்தைச் சுமந்து கொண்டு வந்து மெல்ல மேனியை வருடுகிறது. மாளய அமாவாசையன்று மணிகள் விழுமென்று பார்த் திருக்கிறார்கள்; விழவில்லை. 

“அடுத்த சம்பளம் இருக்குமோ, இருக்காதோ?” என்ற கேள்வியுடன் பெண்டிர் சாமான் பத்து வரவுக் கடையில் கூடுகின்றனர். 

“இந்த இருவது ரூவாய கணக்கில வச்சிட்டு இருவது கிலோ அரிசி போடும்…” என்று நார்ப்பெட்டியை நீட்டுகிறாள் ஒருத்தி. 

“ஏத்தா? எப்பிடி இருக்கி? இன்னும் நிலுவை அறுவது ரூவாயும் சில்வானமும் இருக்கி. அம்பது ரூவான்னாலும் தீத்துட்டா அம்பதுரூவா சாமானம் எடுத்துட்டுப்போ!” என்று கடைக்காரன் மாட்டுகிறான். 

“எத்தினி நாளக்கி மொடங்குவாகளோ?” 

“அது எப்பிடித் தெரியும்? ரொம்ப உஜாராத்தா இருக்கா. கங்காணிமாரெல்லாமும் சேர்ந்திருக்காவ, பனஞ் சோலை அளம், தொர அளம் மொத்தமும் சேந்திருக்காவ…” 

“ம், இதுபோல எத்தினி பாத்திருப்போம்? பிள்ள குட்டி தவிச்சிப் போயிரும்; வெளியாளக் கொண்டு வருவா, இல்லாட்டி பத்துபைசா ஏத்துவா?” என்பன போன்ற பேச்சுக்கள் எங்கு திரும்பினாலும் செவிகளில் விழுகின்றன, 

ராமசாமியின் அன்னை வாயிலிலேயே நிற்கிறாள். அவன் வீட்டில் வந்து தங்கி மூன்று நாட்களாகிவிட்டன. அவளால் கட்டிக்காக்க இயலாத எல்லைக்கு அவன் போய்விட்டான். 

செவந்தியாபுரத்தில் இருந்த வரையிலும் அவளுக்கு வெளிமனித உறவுகளென்ற உயிர்ச்சூடு இருந்தது. பேரி யாச்சி, அன்னக்கிளி, எல்லோரும் பேசுவார்கள். அன்னக்கிளி குழந்தையைக் கொண்டு விடுவாள். அவள் ஆடு வளர்த்திருக் கிறாள். கோழி வளர்த்திருக்கிறாள். அவரையோ சுரையோ கொடிவீசிக் கூரையில் பசுமை பாயப் படரப் பாடுபடுவாள். இப்போது மாசச்சம்பளமில்லை. முன்போல் அவன் அவள் கையில் பணம் தருவதில்லை. அரிசி வாங்கிப் போட்டான். நல்ல தண்ணீர் கொண்டு வந்து கொடுக்க எதிர் வீட்டி லிருக்கும் மங்காவை மாசம் இரண்டு ரூபாய்க்கு ஏற்பாடு செய்திருக்கிறான். அவள்தான் இவளிடம் பல செய்திகளை வந்து சொல்கிறாள். 

“ஓம் பய்ய, அந்தப் பொன்னாச்சியத் தொடுப்பு வச் சிருக்கா. அதா, இப்ப மாலக்காரர் அளத்துல அறவைக் கொட்டடில அடிபட்டுச் செத்தாள ஒரு பொம்பிள…?” 

முதியவளுக்குக் காது கேட்காதென்று சத்தம் போட்டுப் பேசுகிறாள் மங்கா. 

“பனஞ்சோல அளத்துப் பெரிய முதலாளிக்கு வைப்பா இருந்தாளே ஒரு பொம்பிள? அவ வளவுலதா இந்தப் பொண்ணும் இருக்கு. இந்த மீட்டங்கியெல்லா அங்கதா கூடிப் பேசறாவளாம். அவக்கு ரொம்ப பவுரு…’ 

இதெல்லாம் அவள் செவிகளில் விழுகிறதோ இல்லையோ என்ற மாதிரியில் மங்கா அவளை உறுத்துப் பார்க்கிறாள். ஆனால் அவளுள் ஒரு கடலே கொந்தளிக்கிறது. நினை வலைகள் மோதுகின்றன. 

பையன் எந்த வலையில் சென்று விழுந்துவிடக் கூடாது. று அஞ்சினாளோ அங்கேயே போய் விழுந்து விட்டான் இதற்குமுன் இதுபோன்று வேலை நிறுத்தம் என்ற ஒலி காற்றுவாக்கில் வந்ததுண்டு. ஆனால் பனஞ்சோலை அளத்தை அது தட்டிப்பார்த்ததில்லை. மேலும் ராமசாமி மாசச்சம்பளக்காரன். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்ததில்லை. சோலிக்குச் செல்வான்; வருவான். கால் வருவான். புண் வந்தாலும் கூடப் பாக்கை உரசி விழுதெடுத்து அப்பிக் கொண்டு உட்கார்ந்திருப்பான். அவன் இப்போது வீட்டுக்கே பாதி நாட்கள் வருவதில்லை. 

“அந்தப் பொம்பிள செத்தால்ல? அதுதா இப்ப நிலம் நட்ட ஈடுன்னு அஞ்சாயிரம் கேக்கச்சொல்லி இந்தப் பொம்பிள தூண்டிக் கொடுக்களாம். அவக்கு ஒருபய இருந்து செத்திட்டானில்ல. என்ன எளவோ சாராயங் குடிச்சி? அந்த ஆத்திரம். மொதலாளிமார எதுக்கச் சொல்லி இந்த எளசுகளத் தூண்டிக்கொடுக்கா!” 

“அந்தச் சக்காளத்தி வீடு எங்கிட்டிருக்குன்னு தெரியு மாட்டீ?” என்று கேட்கிறாள் முதியவள். 

மங்கா இடி இடி என்று சிரிக்கிறாள். 

“ஐயோ? நீ போகப் போறியா?… வாணாம். ரொம்பத் தூரம் போவணுமா. உம்பய்ய ராவுக்கு இன்னிக்கு வருவா. சோறாக்கி வையி!” 

மங்கா போகிறாள். 

அந்தத் தாய் பித்துப் பிடித்தாற்போல நிற்கிறாள்.

– தொடரும்…

– கரிப்பு மணிகள் (சமூக நாவல்), முதற்பதிப்பு: ஏப்ரல் 1979, தாகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *