ஒரு ஏக்கம் மடிகிறது

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 9, 2025
பார்வையிட்டோர்: 471 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அம்மா! நான் போகட்டோ?” 

“ஏனடி அவசரப்படுகிறாய்? சரி. சரி தேவையானதை எடுத்துக்கொண்டு போட்டு வா கெதியா!” 

ஏழரை மணிக்கெல்லாம் நான் அங்கே நிற்கவேண்டும் என்ற அந்த வேட்கைக்கு நானே ஆயிரம் காரணங்கள் கூறிப் பார்த்துக் கொண்ட போதிலும் எனக்குத் தெரியும் அந்தக் காட்சியில் எனக்குள்ள லயிப்புத்தான் காரணம் என்று. 

பனிமழையில் நனைந்திருக்கும் புற்கூட்டங்களைப் பார்த்துச் சிரித்தபடியே அந்த வீதியில் நான் ஓடிக்கொண்டிருந்தேன். ஏதேதோ புதிய கற்பனைகளும் கனவுகளும் நினைவுகளுமாய் அலை அலையாய், நுரை நுரையாய், அடித்து ஆர்ப்பரித்துக் கரையை நோக்கி ஓடிவரும் கடல் அலைகள் கரையில் வந்து மோதிய பின்னர், ஒன்றும் இல்லாமல் வெறுமனே திரும்பிச் செல்லும் காட்சி கரையிடம் அடிவேறு வாங்கிக்கொண்டு திரும்பிச் செல்லும் காட்சி ஏனோ என்னை அலைக்கழிக்கிறது. பஸ்ஸைத் தவறவிட்டு விடுவோமோ என்ற சந்தேகம் கலந்த கேள்வி மனதில் ஒலித்துக் கொண்டிருப்பதால் ஒருவித மனப்பதைப்புடன் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறேன். அந்தச் சந்தடியும் கலகலப்பும் ஒவ்வொரு நாளும் பார்க்கப் பார்க்க அலுத்துப்போகாத காட்சிகள். அந்தப் பரவசத்தைத் தவறவிட்டு விடலாமா? 

கீரிமலையில் ஐந்து வீதிகள் சந்திக்கும் அந்தச் சந்தியில் நிமிர்ந்து நிற்கும் தபாற்பெட்டியடியில் நான் திரும்புகிறபோது எனக்கு முன்னால் பட்டாம் பூச்சிகள் போல் பல மாணவிகள் வந்து கொண்டிருக்கும் காட்சி, எப்போதும் போலவே இன்னும் பஸ் வரவில்லை என்பதை ஊர்ஜிதம் செய்கிறது. 

“அங்கை பாரடி, நோஞ்சான் குஞ்சு ஓடி வருகுது!”, “நாங்கள் தற்சமயம் பிந்தி வந்தாலும் நோஞ்சான் குஞ்சு கடைசி வரையும் பஸ்ஸைத் தவறவிடாது.” 

அவர்கள் என்னைப் பற்றியே கதைத்துச் சிரிக்கிறார்கள் என்பது எனக்குப் புரிந்தாலும் அவர்கள் பேச்சில் கலந்துகொள்வது என் வழக்கமில்லை. ஒவ்வொரு நாளும் பார்த்தும் பார்த்தும் அலுக்காமல் இன்றும் புருவங்கள் நெரிய அவர்கள் ஒவ்வொருவரையும் உன்னிப்பாகப் பார்க்கிறேன். மடிப்புக் கலையாத, நேர்த்தியான வெண்ணிற உடை, நெற்றியில் புரண்டு விழும் சுருள் சுருளான மயிரைக் கலைக்காமலே தலை வாரி றிபன் கட்டியிருக்கும் திறன், முழங்கால்வரை உயர்ந்து ஒரு தனி மிடுக்கைத் தரும் டெனிஸ் சப்பாத்து, சொக்ஸ், ஆடி அசையும் அந்த லாவகமான நடைக்கேற்ப நெஞ்சில் தாளமிடும் ‘டை’, தோளில் தொங்கும் விதவிதமான ‘ஸ்கூல் பாக்ஸ்’ எல்லாமே என்னைக் கிறங்க வைக்கின்றன. கொழு கொழுவென்ற உடலும் பூரிப்பு நிறைந்த முகங்களுமாய்க் கூடிச் சிரித்துக் கும்மாளமிட்டு வரும் அந்தக் கூட்டம். குச்சுக்குச்சாய் மெலிந்து ஒடிந்து விழுவதுபோல் இருக்கும் என்னைப் பார்த்து “நோஞ்சான் குஞ்சு” என்று அன்புப் பட்டம் வைத்திருந்ததில் ஒருவித தவறுமில்லைத்தானே! 

சன்னமாகத் தூற்றலடிக்கும் அந்த மழைத் துளிகளையும் பொருட்படுத்தாமல் அந்தக் கடை முகப்பில் போய் நின்றுகொண்டு அவர்களைப் பார்க்கிறேன். மருண்டு மருண்டு பார்க்கும் அந்த என் விழிகளை ஓர் அதிசயம் போல் பார்த்துக்கொண்டு பலவிதமாகவும் அவர்கள் கதைப்பதை நான் ஆவலுடன் ஒட்டுக்கேட்கிறேன். எனக்குப் புரியாத சில ஆங்கில வார்த்தைகளையும் சேர்த்து அவர்கள் கதைக்கும் அழகு எனக்கு மிகவும் பரிசயமான ஒரு நிகழ்வாக இருந்தபோதிலும் திரும்பத் திரும்ப அதைக் கேட்பது ஒரு சுகாநுபவந்தான்! 

“பஸ் வருதடி!” என்று ஒருத்தி சொன்ன உடனே எல்லாரும் விழுந்தடித்து ஓடிப்போய் பஸ் திரும்பும் அந்த வளைவில் நின்று கொள்கிறார்கள். நான் மட்டும் அந்தக் கடை முகப்பிலேயே நின்றுகொண்டு தூரத்தில் பஸ்வரும் வேகத்தைப் பார்க்கிறேன். மிக வேகமாக வந்து, வளைவில் திரும்புவதற்காகப் பஸ்ஸின் வேகம் குறைக்கப்படும்போது வளைவில் எதிர்பார்த்து நின்றிருக்கும் அந்தக் கூட்டம் அநாயாசமாக அதில் தொற்றி ஏறிக்கொள்வதும் ரசிக்கக்கூடிய ஒரு காட்சிதான். 

“பஸ் வந்தா நிற்குந்தானே! அதுக்குள்ளை ஏன் விழுந்தடிக்கிறியள் எல்லாரும் ” என்று நடத்துநர் சீறியதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் எல்லாம் ஏறி முண்டி அடித்துக்கொண்டு இருக்கைகளில் அமர்ந்து கொள்கிறார்கள். பஸ் சாரதியும் நடத்துநரும் தமது காலைச் சாப்பாட்டை முடித்துக்கொள்வதற்காக இறங்கிக் கடையினுள் நுழைந்த பின்னரும் இவர்களின் சரளமான உரையாடலும் கூச்சலும் கலகலப்பும் ஓயவில்லை. திடீரென்று அவர்களில் ஒருத்தி “சின்னமாமியே உன் சின்ன மகளெங்கே?” என்று ஏதோ ஒரு உற்சாகத்தில் ஒரு வரி பாட அது மற்றவர்களிடமும் ஒரு உந்துதலை ஏற்படுத்தி விடுகிறது. சில விநாடிக்குள் பஸ்ஸின் சீற்றையே தாளமாகத் தட்டித் தட்டிக் கைத்தாளமும் போட்டுக்கொண்டு அவர்கள் எல்லாம் பாடுவது அங்கே ஒரு ரஞ்சகமான சூழ்நிலையை உருவாக்குகிறது. 

“டிங்கிரி டிங்காலே” பாட்டு இவர்கள் எல்லாரையும் விட நான் என்ன ஜோராய்ப் பாடுவேன் தெரியுமா? அவர்களின் அந்தக் கம்பீரம் கலந்த உற்சாகம் வழக்கத்திற்கு மாறாய் என்னுள் ஒரு ஆவலைக் கிளற நானும் பஸ்ஸினுள் மெதுவாய் ஏறிக்கொண்டு அந்தப் பாடலில் கலந்துகொள்கிறேன். வழக்கமாய் என்னை ஓர் அர்த்தமற்ற வெறுப்புடனும் அருவருப்புடனும் பார்த்து உதாசீனம் செய்யும் அந்தக் கும்பல் இன்று, 

“அட, நோஞ்சான் குஞ்சு நல்லாய்ப் படிக்குதே! இன்னும்படி” என்னை உற்சாகப்படுத்துவது எனக்கு ஒரு வியப்பாய்த் தோன்றுகிறது. அந்த மகிழ்வில் நான் அமிழுமுன்பே மற்றொருத்தி, 

“என்னடி நோஞ்சான் குஞ்சு இண்டைக்கு ஸ்கூல் பஸ்ஸிலை ஏறிட்டுது? படிக்க வருதோ?” என்று கேட்பது என் உள்ளுக்குள்ளே மறுகி மறுகி வெளிப்பட முடியாதிருந்த சோகத்தைக் கல்லெறிந்து கலக்கிவிடுகிறது. அதேநேரம் சாப்பிடப் போயிருந்த சாரதியும் நடத்துநரும் திரும்பி வரவே அவர்களைக் கண்ட பயத்தில் உள்ளார்ந்த குமுறலுடன் பஸ்ஸிலிருந்து திடுமெனக் குதித்து விடுகிறேன். அவசரமான அந்தக் குதிப்பினால், கணுக்காலில் ஏற்பட்டுவிட்ட சுளுக்கு வலிப்பதையும் பொருட்படுத்தாமல் ஒருவாறு என்னைச் சுதாரித்துக்கொண்டு நிமிர்ந்தபோது, அந்த ‘ஸ்கூல் பஸ் போய்க்கொண்டிருக்கிறது. 

“நோஞ்சான் குஞ்சு, டாட்டா!” என்று பஸ் யன்னலினூடாக அவர்கள் தலையை நீட்டிக் கையை அசைத்துக் கூறிச் சிரிக்கும்போது, ஒருநாள் அவர்களில் ஒருத்தியின் ‘டை’யைப் பிடித்துக்கொண்டு “இது எந்தக் கடையிலை வாங்கின நீங்கள்?” என்று கேட்ட என் அசட்டுத் தனத்தையே அவர்கள் இன்னும் நினைத்து நினைத்துச் சிரிப்பதுபோல் என்னுள் ஒரு கற்பனை விரிகிறது. பஸ்ஸின் தோற்றம் சிறிதாகிச் சிறிதாகிக் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை சென்று மறையும் அழகைப் பார்த்து எனக்குள்ளே ஒரு பெரிய பெருமூச்சு வெடிக்கிறது. 

இரண்டு வருடங்களுக்கு முன் வீட்டிலே நான் கடைக்குட்டித் தம்பிக்குப் பால் பருக்கிக் கொண்டிருந்தபோது வேலையில் இருந்து வந்த அம்மா கேட்டாள், 

“மெய்யேடி! காங்கேசன்துறையிலை ஒரு பணக்கார வீட்டுக்கு உன்னைப்போலை ஒரு பெட்டை தேவையாம், போறியே?” 

“நான் போகேல்லை. அக்காவை வேணுமெண்டால் அனுப்பன்” என்று முறித்துவிட்டு எழுந்திருந்த என்னை அம்மா விடவில்லை. 

“அங்கை உனக்கொரு வேலையுமில்லை. வீட்டுப் பிள்ளையள் இரண்டைப் பாக்கிறதுதான். அவைட்டைக் கார் இருக்கு. அதிலை போகலாம். புதுச் சட்டை, நல்ல சாப்பாடு எல்லாம் தருவினம்” ஏதோ நிறையச் சொல்லப் புறப்பட்ட அம்மாவை நான் இடைமறித்தேன். 

“எனக்கு அதொண்டும் வேண்டாம். என்னைப் பள்ளிக்கூடம் போக விடுவினமோ, அதைச் சொல்லு.” 

பாடசாலைக்குச் சென்று படிப்பதை எங்கள் வீட்டின் வாழ்க்கைப் பின்னணி அனுமதிக்காத போதிலும் இங்கே போனால் படிக்கலாம் என்ற ஓர் ஆவேசத்தில்தான் அன்று நான் “சரி” என்றேன். இங்கே வேலைக்கு வந்தால் பாடசாலைக்குப் போகலாம் என்ற உடனேயே என் மனதின் எண்ணங்கள் மாறிவிட்டன. விளையாட்டையும், தம்பி தங்கைமாரைப் பார்ப்பதையும் நிறுத்திவிட்டுத் தலையைப் பலவிதமாக இழுத்து இழுத்து அலங்காரம் செய்து பார்த்தேன். பாடசாலைக்குப் போகும்போது எப்படித் தலைவாரிக்கொள்வது என்று முடிவு செய்யாத நிலையில்தான் இங்கே வந்து சேர்ந்தேன். 

காங்கேசன்துறையின் கடற்கரை ஓரமாய் அமைந்திருந்த அந்தப் பங்களாவின் அழகு, இயற்கை வனப்பு, அவர்களின் அந்தப் பெரிய கார், மூன்று அல்சேஷன் நாய்கள் எல்லாவற்றையும் நான் வாழ்நாளில் கண்டிராத அதிசயங்களாய்ப் பல நாள் பார்த்திருந்தேன். 

நாட்கள் ஒவ்வொன்றாய் நகரும்போது அந்த வீட்டில் பால் வாங்கப் போவது முதல் சமைப்பதுவரை சகல வேலைகளையும் நானே செய்யவேண்டி இருந்தபோதும், இவர்கள் என்னைப் பாடசாலைக்கு அனுப்ப மாட்டார்களா என்று உள்ளூர அந்த ஏக்கம் இருக்கத்தான் செய்தது. மனதில் துணிவை வரவழைத்துக் கொண்டு ஒருநாள் எஜமானி அம்மாவிடம் கேட்டுவிட்டேன். 

“அம்மா, என்னை ஸ்கூலுக்கு அனுப்பமாட்டீங்களா?” என்று, 

“படிக்காதது ஒண்டுதான் குறை உனக்கு… போடி கழுதை… போய் அந்தப் பானையைக் கழுவு… என்று எரிந்து விழுந்த குரல் என்னை ஒருபோதும் பாடசாலைக்கு அனுப்பப் போவதில்லை என்பது மெதுவாகப் புரிந்தபோதுதான் என்னை இங்கே அனுப்புவதற்காகவே என்னிடம் பொய் சொல்லி ஏமாற்றிய தாயின் மீது அளவில்லாத சினம் மூண்டது. அந்த ஏக்கம் நனவாகப் போவதில்லை என்பது நிச்சயமான பின்னர் அந்த ஏக்கத்தின் ஒரு புதிய வார்ப்பாக – அதன் சுவடுபோல காலையில் பாடசாலை செல்லும் இந்தக் கும்பலைப் பார்த்து மகிழ்வதை வழக்கமாக்கிக் கொண்டேன். 

பஸ் தூரச் சென்று மறைந்த பின்னர், நான் கொண்டு வந்திருந்த போத்தலைக் கடையில் கொடுத்துப் பால் வாங்கிக் கொண்டு வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறேன். எண்ணங்கள் மீண்டும் மீண்டும் அந்தக் கும்பலையே வட்டமிடுகின்றன. கிட்டத்தட்ட என்னளவே வயதுள்ள அவர்களுக்கும் எனக்கும் ஸ்புடமாகத் தெரிகின்ற பல முரண்பாடுகள் நினைவில் வந்து மனதை உறுத்துகின்றன. அந்த உறுத்தலினால் மனதில் ஏற்படும் வலியும், சுளுக்கினால் காலில் ஏற்பட்டுவிட்ட வலியும் தெரியாதிருக்கும் பொருட்டு இன்னும் வேகமாக ஓடுகிறேன். 

வீட்டை அடைந்தபோது தோட்டத்து முனுசாமிதான் பூந்தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்தான். பாலைச் சட்டியில் வார்த்து அடுப்பில் வைத்துவிட்டு நிமிர்ந்தபோது, சவுக்குத் தடியும் சிவந்த கண்களுமாய் நின்றிருந்த எஜமானியைக் கண்டு நான் ஒரு கணம் விக்கித்துப் போனேன். 

“எடியே! நீ இவ்வளவு நாளும் பால் வாங்கப் போறன். போறன் எண்டு விடிய முந்தி ஓடுற சங்கதி இப்பதான் விளங்கிச்சுது! பஸ்சுக்குள்ளை ஏறிப் பாட்டுப் படிக்கிறியாம் – பாட்டு? முனுசாமி வந்து சொல்லாட்டி எனக்கு உன்ரை ஆட்டம் ஒண்டும் தெரிந்திருக்காது… உன்ரை லட்சணத்திலை கூத்து வேறை ஆடுறியா கூத்து…!” 

பாடசாலைக்குப் போகின்ற வயதில் பாடசாலைக்குப் போகின்றவர்களின் மகிழ்வில் ஒருசில நிமிடங்கள் கலந்துகொண்ட குற்றத்திற்காக எஜமானி தந்த அந்தக் கொடூரமான சவுக்கடிகளை வாங்கிக் கட்டிக்கொண்டேன். நிணமும் சதையுமாய்க் காயங்கள் எல்லாம் ரத்தம் கசியும்போதும் அந்த உடல் வலியைவிட இதயப் புண்ணின் வலியே அதிகமாக இருக்கிறது. மனதில் மூண்டெழுந்த வேதனைச் சுமையை வெடுக்கென விழுங்கிச் சமாளித்துக்கொண்டு ஏக்கங்களை மடிய விட்டுவிட்டுச் சமையல் வேலைகளைத் தொடங்குகிறேன். 

– 04-02-1979 ஈழநாடு வாரமலரில் பிரசுரமானது.

– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *