எனக்கு மட்டும்
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: December 30, 2015
பார்வையிட்டோர்: 53,415
வெள்ளவத்தை கார்கில்ஸ் Food city அருகாமையில் ஒரு நாள்…
ராம்: மச்சான் செம பிகருடா
தினேஷ்: எங்கடா….????
சிவா: அது சரி நீ எப்பல இருந்துடா சைட் அடிக்க தொடங்கின……..??
தினேஷ்: அதானே உனக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது சும்மா கிட
தனு: உன் ரேஞ்சுக்கு அங்க போகுதே அதான்டா சரி
எல்லோரும்: ஹா ஹா ஹா
சிவா: டேய்…… சரி ராம் நீ பீல் பண்ணாத … அவன் கிடக்குறான்….
—
கடற்கரை அருகில் ஒருநாள் …
ராம்: மச்சான் அந்த பொண்ணு எங்களையே பாக்கிற மாதிரி இல்ல……???
கார்த்தி: எங்களையே னு உன்ன சேர்த்துக்காத மச்சான், அவ நம்மள தான் பாக்கிற எல்லோரும்: ஹா ஹா ஹா
ராம்: ஏன்டா என்ன எல்லாம் எவளும் பாக்க மாட்டாளா? என்னில என்னடா அப்பிடி குறை? ஏன்டா என்ன இதுல மட்டும் ஒதுக்குறிங்க??
சிவா: விடுடா விடுடா இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு.
—
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் இவர்கள்.பல்கலைக்கழகத்தின் BATCH TOP ராம். படிப்பே கதி என்று இருந்தவன், பல்கலைக்கழகம் வேலைநிறுத்ததால் மூட மூன்று மாதம் வீட்டிலேயே இருக்க முடியாமல் நண்பர்களுடன் ஊர் சுற்ற ஆரம்பித்திருக்கிறான். அவனை படிப்பாளியாக மட்டுமே பார்த்து வந்த நண்பர்களுக்கு அவன் பெண்களை சகஜமாக பார்ப்பது ஏனோ ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவனை இந்த விடயத்தில் ஒதுக்கியே வந்தனர். இப்படி சில மாதங்கள் கழிந்தன….
—
பின்னேரம் ஆறு மணியளவில் நண்பர்களுடன் அரட்டையை முடித்துக்கொண்டு அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். சிவா, ராம் வசிக்கும் வீட்டு பாதைக்கு அருகில் இருக்கும் தொலை பேசி கடைக்கு செல்ல ராமுடன் சென்றான்.
ராம் தான் வசிக்கும் பாதையில் போகாது, அதற்கு முன் பாதையில் போவதைக்கண்டு
“ஏன் ராம் இதால போறாய்? உன் வீடு அடுத்த லேன் தானே?”
“இல்லடா இதாலையும் போகலாம்”
“ஏன் நேர போறதுக்கு சுத்தி வளைச்சு போறாய்,..? டேய் உண்மைய சொல்லு”
“ஒண்ணுமில்லடா சும்மா தான்”
“டேய் என்கிட்ட எல்லாம் இது ஆகாது உண்மைய சொல்லு.”
“மச்சான் யார்கிட்டயும் சொல்லிட மாட்டியே…..”
“சா சா சொல்லு, யாராச்சும் பொண்ண பாக்கிறியா..?”
“ஆமா மச்சான். எப்பிடி கண்டுபிடிச்சா ?”
“ஆமாவா? சரி நீ பாக்கிற இருக்கட்டும் பதிலுக்கு அவ பாக்கணுமே.”
“அவளும் தான் டா என்ன பாக்கிறவள்.”
“நம்புற மாதிரி இல்லையே.”
“இதுக்கு தான் நான் உனக்கு முதல் சொல்லல்ல.”
எதுக்கும் செக் பண்ணிக்க, அவ உன்ன மட்டும் தான் பாக்கிறாளா இல்ல…….”
“உன்கிட்ட போய் சொன்னன் பாரு….. ”
“சரி சரி நான் நம்புறன் மேல சொல்லு”
“சரியா ஆறு மணிக்கு எனக்காக அவ மொட்டமாடில காத்திருப்பாள் டா. ஒரு ரெண்டு மாசமா நானும் அவளும் பாத்துட்டு இருக்கோம்டா. அவ என்ன பார்த்து தலைய ஒரு பக்கம் சாய்த்து சிரிப்பா பாரு. தேவதை மாரி டா அவ. நானும் பதிலுக்கு தலையாட்டிகிட்டே போய்டுவன்”
“அப்போ ஒரு சுப்ரமணியபுரம் படத்தையே ஓட்டிகிட்டு இருக்கான்னு சொல்லு. ”
“ஆமா மச்சான்”
“ஆமாவா?, டேய் பாத்துட்டே இருந்தா எப்பிடி….? போய் கதை டா, இன்னொருத்தன் தட்டிகிட்டு போய்ட முன்னம்”
“ஆமாண்டா கதைக்கணும்னு பாக்கிறன் முடியாம இருக்கு, நிச்சயம் இந்த வாரத்துக்குள்ள கதைச்சுடுவன்.”
“ஓகே மச்சான், கதைச்சு செட் ஆக்கிட்டு சொல்லு, அடுத்த வாரம் ஆள் யாருன்னு எனக்கு காட்டு. இப்ப அவசரமா போகணும்.”
“சரிடா இத யாருகிட்டயும் சொல்லிடாதடா ”
” ஓகே டா ”
—
ஒரு வாரம் கழித்து ………
“டேய் ராம் சொல்லிட்டியா அவகிட்ட..?”
“ஆமாடா. சொல்லிட்டன்….” (இழுத்தான்)
“சரி மச்சான் கவலப்படாத, இந்த பொண்ணுங்களே இப்பிடி தான், சும்மா டைம் பாஸ் கு சிரிச்சே கவுத்துடுவாங்க… ”
“டேய், முடிவே பண்ணிட்டியா? அவ ஓகேண்டுடாடா…. அவளும் சொல்லனும்னே பாத்துட்டு இருந்திருக்கிறாள். அண்டைக்கு நான் சொல்லி முடிக்க முன்னமே நானும் தான் என்டாள்”
“மச்சான் கை கொடு. உன்ன என்னமோ ஏதோன்னு நினைச்சம், கலக்கிட்டடா… நம்ம சீன் தினேஷ் ஏ இன்னும் யாரையும் செட்பண்ணல.”
“தாங்க்ஸ் டா, எல்லாம் நீ கொடுத்த தைரியம் தான்…”
“சரி இன்னைக்கு நானும் உன்கூட வாறன் ஆள் யாருன்னு காட்டு சரியா?”
“சரிடா…”
“ஆமா ஆள் எப்பிடி பாக்க? நம்ம வித்யா மாதிரி இருப்பாளா?”
“சா அவ கூட ஒப்பிடாதடா. இவள பாத்தா கையெடுத்து கும்பிடனும் போல இருக்கும், அப்பிடி ஒரு தெய்வீகமான முகம் டா.”
“ஒரு வேளை ஏதும் அம்மன் சிலைய பாத்திருப்பானோ.”
“டேய்”
“சரி சரி அவ யாரு அப்பா அம்மா என்ன பண்றாங்க எல்லாம் விசாரிச்சியா?”
“எங்க அதெல்லாம் கேக்க கிடைக்கிற பத்து நிமிஷத்துல நம்மல பற்றி கதைக்கவே நேரம் போதாது”
“எங்க போய் கதைப்பா?”
“அவ இந்த நேரம் கீழ gate கு பக்கத்தில வந்து நிப்பா, இந்த நேரம் அவங்க அப்பா அம்மா வீட்ட நிக்கமாட்டாங்க … நானும் ஒரு பத்து நிமிஷம் கதைச்சுட்டு போய்டுவன்…”
“ஓ … ஓகே ஓகே … எனக்கு ஆள் யாருன்னு மட்டும் காட்டு நான் பாத்துட்டு போயிடுறன். உங்க பொன்னான பத்து நிமிஷத்த நான் குழப்பல்ல.”
” தாங்க்ஸ் டா …..”
“தாங்க்ஸ் ஆ,…. ஒரு முடிவோட தாண்டா இருக்கா. சரி போன் நம்பர் ஏதும் வாங்கினியா….?”
“இல்லடா அவ போன் பாவிக்கிற இல்லையாம். நைட் பூரா அவ ஞாபகமாவே இருக்குடா படிக்க கூட முடியல்ல…”
” பெஸ்டு ல்வ்வு தான மச்சி, அப்பிடி தான் இருக்கும். அடுத்தடுத்த லவுசுல சரியா போய்டும் கண்டுக்காத …”
“டேய் சீரியஸ் லவ் டா ….”
“சரி சரி பாக்கலாம். அது இருக்கட்டும் ஏதும் கிஸ்ஸு அடிச்சதில்ல?”
“அடேய் நான் நல்ல குடும்பத்து பையன்டா ….”
“சே இதுக்கு நீ என்ன செருப்பால அடிச்சிருக்கலாம்”
“சாரி மச்சான் நான் அப்பிடி சொல்லல. அதோ அது தாண்ட அவ வீடு”
“என்னடா அவங்கப்பன் ரொம்ப கஞ்சனா இருப்பானோ. இவளோ பெரிய வீட்ட கட்டிட்டு ஒரு பெயின்ட் அடிக்காம இவளோ கேவலமா வச்சிருக்கான்..”
“தெரில்ல மச்சான்…”
“சரிடா எங்க அவள காணம்??”
“உன்கூட வந்தனால வெளிய வாரமா இருக்காளோ தெரில்ல… பொறுட பக்கத்துல போய் பாத்துட்டு வாறன்…”
“சரி நீ போய் பாரு, நான் வர்ற அங்கிள் ட அவளோட குடும்பத்த பற்றி விசாரிக்கிறன்…”
“பாத்துடா ஏதும் பிரச்சனையாகிட போது… ”
“நீ போடா நான் பாத்துக்கிறன் …”
வழிப்போக்கர் ஒருவரிடம் சிவா
“அங்கிள் நீங்க இந்த லேன் லயா இருக்கிறிங்க?”
“ஆமா ஏன் கேக்கிறா?”
“இல்ல அங்கிள் இந்த வீட்டில இருக்கிறவங்க பற்றி கொஞ்சம் சொல்லுறிங்களா? என் பிரண்ட் ஒருத்தன் இந்த வீட்டு பொண்ண பாக்கிறான்…..”
“இந்த வீடா … போங்க தம்பி சும்மா இருட்டுற நேரத்துல வந்து …..”
“ஏன் அங்கிள்…? ”
“பின்ன என்ன தம்பி அந்த வீடு அஞ்சு ஆறு வருஷமா பூட்டியே கிடக்கு… என்னமோ பிரச்சினை நடந்து…. அந்த வீட்டுல இருக்கிற பொண்ணு எங்கிறிங்க… இந்த நேரத்துல இங்க நிக்காம கெதியா வீடு பொய் சேருங்க …” என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.
குழம்பிய சிவா வானத்தை பார்த்து யோசித்துக்கொண்டிருந்தான்.
அப்போது ராமின் குரலில்…
“அவன் உன்ன பாத்தே ஆகணும் எண்டான், அதான் கூட்டி வந்தன். மன்னிச்சுடு தேவி. உன்ன பாத்துட்டு போய்டுவான்….”
“ஓம் என்கூட தான் படிக்கிறான்…”
அதை பார்த்த சிவா மனசில் அந்த அங்கிளுக்கு விசர் என்று நினைத்துகொண்டு திரும்பி ராமை பார்த்தான்.
அங்கு அவ்வீட்டின் கால்வாசி மட்டும் திறந்திருந்த மரப் படலையுடன் பேசிக்கொண்டிருந்தான் ராம்…