இருள் நீத்த உதய சூரியன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 30, 2025
பார்வையிட்டோர்: 1,851 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பையை மூடி வைத்து விட்டுத் திரும்பிப் பார்த்தார் நாசர். ஓரளவு வீட்டிலிருந்த எல்லாப் பொருட்களையும் ஒதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.

மேல் நோக்கி, அல்லாவை ஒரு முறை தொழுது விட்டு எல்லாப் பைகளோடும் லிப்டில் கீழே இறங்கி வந்தார்.

லிஃப்ட் கதவு திறந்ததும், இஸ்மாயில் எதிர் கொண்டு வந்து ஆரத் தழுவி, “மாமா எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டீர்களா” என்று கேட்டான்.

‘ஆம்’ என்று தலையாட்டிய நாசர், “ஒரு நிமிடம் இஸ்மாயில், ஏறக்குறைய ஷார்ஜாவிலுள்ள இந்த அறையில் முப்பத்திரண்டு வருடங்கள் தங்கியிருந்து விட்டேன். எல்லாவற்றையும் விட்டு விட்டு ஊருக்கு போகிறேன். இனி மாமி குழந்தைகளோடு சந்தோசமாக வாழ வேண்டும். இத்தனை வருடம் ஒத்தக் கட்டையாகவே வாழ்ந்தாகி விட்டது. ஒரு முறை அந்த அறையைப் பார்த்து விட்டு வருகிறேன்” என்று திரும்பவும் அறைக்கு வந்தார்.

கண்களில் கண்ணீர் முட்டியது “எத்தனை மாற்றங்களை இந்த துபாய் மண்ணில் பார்த்தாகி விட்டது ? வாழ்க்கையை எப்படி எல்லாமோ ஓட்டியாகி விட்டது. இருந்த அறை நண்பர்கள் எல்லோரும் ஊரிலே செட்டில் ஆகி விட்டார்கள்.

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் ஆயிஷா சொல்லிக் கொண்டேயிருப்பாள். “ஊருக்கு வந்து விடுங்கள்” என்று.

இனி இந்த ஊருக்குத் திரும்பப் போவதில்லை. ஜன்னல் வழியாக எதிர் திசையில் பார்த்தார். அந்த ஜமால் பேக்கரி மட்டும் முப்பது வருடங்களாக அப்படியே இருக்கிறது. அங்கே ரொட்டி சுடும் பெரியவர் அஸ்ரஃப் கூட அப்படியே இருப்பதாகத் தோன்றியது நாசருக்கு. எதிர் ரோட்டில் காஸிபா மளிகைக் கடையில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தார்.

நான் ஊருக்குப் போகிறேன் என்று சொன்னதும், கடைசியாக வாங்கிய சாக்லேட், சோப் மற்றும் எந்தப் பொருளுக்கும் பணம் வாங்க மறுத்து விட்டதை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

“பத்து வருடமாக என் கடையில் சாமான்கள் வாங்குகிறீர்கள். இவை என் பரிசுகளாக இருக்கட்டும்” என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டார். ‘இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் அல்லா மழையை பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்’ என்று நினைத்தவர் அறையைச் சாத்தி விட்டு கீழே வந்தார்.

காரில் ஏறியதும் “மாமா, எந்த ஏர்போர்ட் ஷார்ஜாவா? துபாயா?” என்று கேட்டான்.

“துபாய் டெர்பினல் நம்பர் 2” என்றார்

“எத்தனை மணிக்கு பிளைட்”

“இரவு பன்னிரெண்டரைக்கு” என்று சொல்லி விட்டு அல்லாவை நோக்கி தொழ ஆரம்பித்தார்.

ஆயிஷா மங்களூர் ஏர்போர்ட்டில் அதிகாலையில் நாசரின் வரவிற்காக காத்துக் கொண்டிருந்தாள்.

எத்தனையோ முறை சொல்லியும் இப்போது தான் தன்னோடு வந்து மிச்ச வாழ் நாளை செலவழிக்க கணவர் வருகிறார் என்றதும் மனதிற்குள் சந்தோஷமாக இருந்தது.

வெளியே எல்லோரும் வரப் போகும் விமான அறிவிப்பை கடந்து கவனித்துக் கொண்டிருந்தாள். விமானத்திலிருந்து இறங்கிய நாசரின் முகத்தைப் பார்த்து இருன் நீத்த உதய சூரியனை கண்டது போல பரவசமானாள் ஆயிஷா!

– ஜூலை 2011, முங்காரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *