அவன் ஏன் வாழ்கிறான்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2025
பார்வையிட்டோர்: 408 
 
 

(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இளமைப் பருவம் தவறுகள் நிறைந்தது. முழு வளர்ச்சிப் பருவம் போராட்டங்கள் நிறைந்தது. முதுமைப் பருவம் கவலைகள் நிறைந்தது.” என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் இளமைப் பருவமும் முழுவளர்ச்சிப் பருவமும் கவலைகள் நிறைந்ததாக அமைந்துவிட்டதே! முதுமைப் பருவம் எப்படி இருக்குமோ? 

வழமைபோலச் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்த யாழ்ப்பாணம் பஸ் ஸ்டான்டின் நடுவே மண்டியிட்டு உட்கார்ந்து வாயிலே விளையாடுகிற புல்லாங்குழலில் ‘காகித ஓடம்’ பாட்டை லாவகமாக வாசித்துக் கொண்டிருக்கிற இளங்கோவின் இதயம் மட்டும் எதை எதையோ சிந்தித்து ஓய்கிறது. ‘அழுவதைக் கேட்க ஆட்களுமில்லை. ஆறுதல் வழங்க யாருமே இல்லை. ஏழைகள் வாழ இடமே இல்லை. ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை” என்ற வரிகள் அவனது இசைக்கருவியில் ஒலிக்கிறபோது அவனுடைய இதயத்தின் நாளாந்த ஓலமே வெளியே பீறிட்டுப் பாய்வது போலத் தோன்றுகிறது. 

வெளியே இடி இடிக்கிறது. மின்னல் மின்னுகிறது. மழை சோனாவாரியாகப் பெய்யத் தொடங்கிவிட்ட இரைச்சலும் கேட்கிறது. தகரக் கொட்டகையில் இருந்த நீக்கல் வழியாக ஒழுகிய மழைத் தண்ணீர் அவன் முதுகில் விழுந்து உருப்படியற்ற நிலையில் இருக்கும் அந்த ஒரே ஒரு ‘சேர்ட்’டையும் நனைத்து வேடிக்கை பார்க்கிறது. மெதுவாக எழுந்து வேறிடத்தில் உட்கார முயற்சி செய்த இளங்கோவின் கவனத்தை அருகில் கேட்ட வசைமாரி ஈர்க்கிறது. 

“இந்தப் பிச்சைக்காரக் குருட்டுக் கழுதையள் ஒரு பக்கம். இவையின்ரை பிள்ளையள் எல்லாம் மாடிவீடு கட்டிக்கொண்டு எங்கையேனும் பெரிய பணக்காரராய் இருப்பினம். இதுகளை இஞ்சை அனுப்பி விடுறது போதாக் குறைக்குக் காசு சேர்க்க! அடிச்சுக் கலைக்க வேணும் இதுகளை எல்லாம்…” 

ஏதோ இளங்கோவின் சரிதம் முழுவதையுமே அறிந்தவன் போலச் சொற்களைச் செலவழித்துச் செல்கிறான் ஒரு நடுத்தர வயதுப் பேர்வழி. இப்படி எத்தனையோ வசை மாரிகளைப் பத்து வருடங்களாகக் கேட்டுப் பழகிவிட்ட இளங்கோவிற்கு இது ஒன்றும் மனதில் கவலையை உண்டாக்கவில்லை. ஆனால், 

“எனது ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள் எல்லாம் செத்துப் போய்விட்டபிறகு நான் மட்டும் இன்னும் ஏன் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன்?” 

என்று அவன் மனம் ஓயாமல் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்வியின் ஓலத்தை இம் மாதிரியான நிகழ்ச்சிகள் அதிகமாக்கு வதுண்டு. நீ மற்றவர்களிடம் அநுதாபத்தையும் உதவியையும் எதிர் பார்ப்பது கோழைத்தனம். மற்றவர்களிடம் அநுதாபம் காட்டுவதற்கும் உதவி செய்வதற்கும் துணிந்து நில். அதுவே வீரம்.” 

என்று எண்ணி எண்ணி வளர்க்கப்பட்ட அவனது இளமையின் இலட்சியங்கள் இப்படிப் பொடிப் பொடியாய்த் தூளாகும் என்று கனவில்கூட அவன் நினைத்திருக்கவில்லையே! இன்று…! மற்றவர்களின் கண்ணிலே அவன் ஒரு பிச்சைக்காரக் குருடன். ஆனால் அவனை உன்னிப்பாக அவதானித்தால் ஒன்று புரியும். இந்தப் பத்து வருட காலத்தில் அவன் ஒருநாளாவது கையை நீட்டி, 

“ஐயா, தருமவான்களே! பிரபுக்களே! ராஜாக்களே! தாய்மார்களே! இந்தக் குருடனைப் பார்த்து ஒரு சதம் தருங்கள்” என்று கேட்டதில்லை. வேறு ஒரு தொழிலும் செய்ய முடியாத நிலைக்கு உலகத்தின் அழகையும் அலங்கோலங்களையும். விசித்திரமான, புரிந்துகொள்ள முடியாத, ஆயிரமாயிரம் மனிதர்களையும் பார்க்கக் கொடுத்து வைக்காத நிலைக்கு இறைவன் அவனை ஆளாக்கிவிட்ட பின்னர், நிம்மதியின்றி வெடித்தப் போகின்ற நிலையில் இருக்கும் அவன் மனதிற்கு இந்தப் புல்லாங்குழல் மட்டுமே ஆறுதல் வழங்கும் நண்பன். 

“அந்த ஆராதனா பாட்டைக்கூட என்ன மாதிரி அப்படியே வாசிக்கிறான். ஹீ… ஹாஸ் தி அச்சுவல் ராலன்ற்ஸ்” என்று ‘ரிமாக்ஸ்’ சொல்லும் ஹிந்திப் பாட்டு ரசிக வாலிபன் தானாக ஓர் இருபத்தைந்து சதக் குற்றியை இளங்கோவின் மடியில் போட்டுவிட்டுப் போவான். ‘இவர் வாசிக்கிற காம்போதியிலை தெரிகிற அழகான சுருதி வளைவுகளை டி.ஆர்.மகாலிங்கத்தினுடைய புல்லாங்குழலில்கூட நான் கேட்டதில்லை’ என்று விமர்சனம் செய்யும் கர்நாடக ரசிகத் தமிழ்ப் பண்டிதர் ஒரு ஐம்பது சதத்தை அவன் மடியில் வைத்து “எடுத்துக் கொள்ளப்பா” என்று சொல்லிப் போவார். இப்படிச் சேருகிற ஒன்றரை ரூபாவையும் இரண்டு ரூபாவையும் வைத்துத்தான் அவன் தன் உயிரை இன்னும் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறான். நிறுத்தித்தான் வைத்திருக்கிறான்! யாருக்காக? அதுதான் தெரியவில்லை. 

ஐந்து வயதுப் பச்சைப் பாலகனாகப் பள்ளிக்கூடத்திற்குக் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே இரண்டாம் வகுப்பு ஆசிரியர் பக்கத்து வகுப்பில் கற்பிக்கும்போது பின்னால் நின்று அவதானித்ததும், வீட்டிற்கு வந்து அவர் கேட்ட கணக்குகளை அம்மாவிடம் கேட்டுத் தொல்லைப் படுத்தியதும், மேலே போகப்போக எல்லா வகுப்புகளிலுமே அவனது அபாரமான திறமையைக் கண்டு பாடசாலையே வியந்ததும், க.பொ.த. சாதாரண பிரிவில் படித்துக்கொண்டிருக்கும்போது, அவனது ஒரே உறவாக இருந்த அம்மா இறந்துவிட்டதும், சரியான மருத்துவ அவதானிப்பு இல்லாமல்தான் அம்மா இறந்தார் என்ற உண்மையால், எப்படியும் ஒரு டாக்டராக வரவேண்டும் என்ற லட்சியம் மனதில் ஆழமாகப் பதியக் காரணமானதும், லட்சியத்தின் ஆழம் படிப்பில் ஊக்கமாகப் பரிணமிக்க அதன் எதிரொலியாக க.பொ.த. பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் விசேட சித்தி அடைந்து கல்லூரிக்குச் சென்றதும், அங்கே காந்திஜியின் சத்தியசோதனை, டாக்டர் மு.வ.வின் இலட்சிய நாவல்கள் இவை வாசிக்க நேர்ந்ததன் பலனாக லட்சியத்தின் ஆழம் விரிந்து பரந்து பெரிய விருட்சமாக வளர்ந்திருந்த இறுதி வேளையில்… ஒருநாள் எல்லா லட்சியங்களும் பொடிப்பொடியாய்ச் சரிந்துவிழ இரசாயனப் பரிசோதனைக் கூடத்தில் செறிந்த அமிலம் கண்ணினுள் தெறித்துக் கண்களை இழந்துவிட்டதும்… எல்லாமே நேற்று நடந்தவை போல இன்னும் மனத்திரையில் பசுமையாக ஆடுகின்றன. 

“நான் நிரந்தரக் குருடனாகிவிட்டேன். வேறு யாருக்கும் பயனில்லாத வாழ்வு வாழவேண்டிய கட்டாயத்திற்குள்ளாக்கப்பட்டு விட்டேன்.’ என்ற நிதர்சனமான உண்மையை அவனால் பலகாலம் ஜீரணிக்கவே முடியவில்லை. 

கால தேவனின் விரைவான ஓட்டத்திலே மனதிலே பதிந்த பலமான காயத்தின் வலி மறைந்துவிட்டாலும், “வாழ்க்கை எதற்காக? அதில் தாங்க முடியாத நிரந்தரத் துன்பங்கள் ஏன்? இறைவன் கருணாமூர்த்தி என்பது உண்மையானால் நல்ல இதயத்துடன் விரைவாக முன்னேறிய என் பாதையில் ஏன் இந்த நிரந்தரத் தடை?” போன்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க இன்னுந்தான் அவனால் முடியவில்லை. 

திடீரென அவன் கையில் திணிக்கப்பட்ட ஒரு நாணயக் குற்றி இளங்கோவின் சிந்தனையைக் குலைக்கிறது. அதைத் தடவிப் பார்த்து அது ஒரு ரூபாய்க் குற்றி என்பதை உணர்ந்துகொண்டு, அதைத்தன் கிழிந்த பொக்கட்டினுள் போட்டுக் கொள்ளு முன்பே, மிக அருகில் கேட்ட ஆங்கில உரையாடல் ஒன்று அவன் கவனத்தைக் கவருகிறது. ஓ! குருட்டுப் பிச்சைக்காரனுக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கும். தாங்கள் உரையாடுவதை அவனும் புரிந்துகொள்வான் என்று எதிர்பார்த்திருக்க முடியாதுதானே! 

“இதோ பார் குமார்! இந்தக் குருடனுக்கு நான் ஏன் இப்போது ஒரு ரூபா கொடுத்தேன் என்று நினைக்கிறாய்?” ஒரு குரல் இது. 

“இதில் என்ன புதுமை? அவனது பரிதாபகரமான நிலையைக் கண்டு அநுதாபம் கொண்டு கொடுத்திருப்பீர்கள். அல்லது கேட் பவனுக்குக் கொடுப்பது புண்ணியம் என்ற நம்பிக்கையில் கொடுத்திருப்பீர்கள்” இது வேதனையும் விரக்தியும் கலந்து ஒலித்த இளவயதுக் குரல். 

“அதுதான் இல்லை. இவன் என்னிடம் எதுவும் தரும்படி கேட்கவில்லை என்பதை நீ கவனிக்கவில்லையா? இதே இடத்தில் தொடர்ந்து ஆறு ஏழு வருடங்களாக இவனை நான் பார்த்திருக்கிறேன். நீ இன்று மட்டும் இவனை ஒரு முறை அவதானித்துப் பார். அத்துடன் உன்னுடைய நிலையை இவனுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள். சோதனையில் சித்தியெய்தவில்லை என்பதனால் நீ. 

“நான் ஏன் இன்னும் இவ்வுலகில் வாழவேண்டும்?” என்று வேதாந்தம் பேசுகிறாயே! உனக்கு இவனைக் காட்டுவதற்காகவே உன்னை இங்கே கூட்டி வந்தேன். உனக்குச் சோதனையில் சித்தி என்ற பெயர் மட்டும் தான் இல்லை. இவனுக்கோ… உறவினர் இல்லை. நண்பர் இல்லை. வீடும் இல்லை. வாசலும் இல்லை. அனைத்திற்கும் மேலாக இந்த உலகத்தைப் பார்ப்பதற்குக் கண்களே இல்லை. இருந்தாலும் இன்னும் அவன் வாழ்க்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறான். பஸ்ஸிற்கு மணிக்கணக்காகத் தூங்கி அலுத்துப்போய் நிற்கும் ஆயிரமாயிரம் இதயங்களுக்குத் தன் இசையினாலே நிறைவு தருகிறான். தனக்காக மட்டும் வாழ்வதனால் அவனுக்கு வாழ்வில் ஒன்றுமே இல்லை. ஆனால் அவன் மற்றவர்களுக்காக வாழ்கிறான். இந்த நிலையில் இருக்கும் இவனைப் பார்க்கிறபோது இவனைப் பற்றிச் சிந்திக்கிறபோது உன் மனதில் ஒருவித அமைதி ஏற்படவில்லையா? உன்னை இறைவன் இவ்வளவு உயர்ந்த நிலையில் வைத்திருப்பதற்காக அவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தெரியவில்லையா? இப்போது சொல் குமார்! அவன் மீது அநுதாபப்பட்டா நான் பணம் கொடுத்தேன்? இல்லை. நிச்சயமாக இல்லை. அவனைப் பார்க்கிறபோது எங்கள் மனதில் ஏற்படுகிற அமைதிக்காக இந்த நிலையில்கூட நாங்கள் வாழ்வுடன் போராடிக்கொண்டிருக்கிறோமே! இதனுடன் பார்க்கும்போது உங்கள் துன்பம் எவ்வளவு சிறியது? என்று எமக்கு ஆறுதல் கூறுவதுபோல் அவன் அமர்ந்திருப்பதற்குக் கூலியாக – இவற்றிற்காகத்தான் கொடுத்தேன். இது பிச்சையல்ல குமார்! இவ்வளவு கஷ்டத்திற் – கிடையிலும் தன்னைப் பற்றி மட்டும் நினைத்து, வெறுமையாகிவிட்ட தன் வாழ்வை அழித்துக்கொள்ளாமல், மன வலிமையுடன் வாழத் துடிப்பதற்காக மற்றவர்களுக்காக வாழ்ந்து கொண்டிருப்பதற்காக – அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய சன்மானம் அது. 

அவர்கள் பேசிக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களது உரையாடலின் ஒலி மெதுவாகத் தேய்ந்து இப்போது கேட்காத தொலைவிற்குப் போய்விட்டது. அதே நேரத்தில் – இளங்கோவின் மனதில் அது ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. அதுதான் இத்தனை வருடங்களாக அவன் இதயம் கேட்டுக்கொண்டிருந்த கேள்விக்கான பதில் – மிக அருமையான பதில் கிடைத்துவிட்டதே! எப்போதும் மேலே தனக்கு மேலே இன்னும் மேலே உள்ளவர்களைப் பார்த்து ஆசைகளை வளர்த்துக் கொள்ளும் அவா நிறைந்த மனிதன், துன்பங்களும் தோல்விகளும் ஏற்படுகிறபோது கீழே பார்த்து ஆறுதலும் அமைதியும் அடையச் சில மனிதர்கள் தேவையல்லவா! அந்த அமைதியை அனைவருக்கும் கொடுப்பதுதான் அவனது இலட்சியம்! புதுமையான ஆனால் விதியினால் ஏன் இறைவனால்கூட வெல்லப்பட முடியாத அந்த இலட்சியத்தின் பேரொலி இதயத்தில் எழுந்து ஒலிக்க நிமிர்ந்து உட்காருகிறான் இளங்கோ. 

அதோ! “உலகின் முதலிசை தமிழிசையே” என்று அந்தகர் இளங்கோவின் புல்லாங்குழலில் கம்பீரமாய் ஒலிக்கிறது தெய்வீக கானம். 

– 1975 மாசியில் சங்கமம் சிறு சஞ்சிகையில் வெளியானது.

– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *