அந்தச் சில நிமிடங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 19, 2025
பார்வையிட்டோர்: 155 
 
 

(1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று ஒரு நாள் சூரியமூர்த்தி தனது இடது கையில் போனைப் பிடித்துக் கொண்டு வலது கையை அந்தத் தொலைபேசிப் பெட்டிக்குப் பக்கத்தில் ஊன்றியவாறு அந்தக் கையில் இருந்த ஒரு புத்தகத்தில் எதையோ படித்துக் கொண்டிருந்தான். நேரம் ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்குப் பின்னால் நின்றிருந்த நபர்களின் எண்ணிக்கை இப்போது அதிகமாகி அனுமார் வாலாய் நீண்டு கொண்டிருந்தது.

அவர்களில் சிங்கப்பூரியர்கள் கலந்து நின்றார்கள். மொத்தமாய் அங்கே இருந்த ஐந்து ஆறு தொலைபேசி பெட்டிகளிலும் ஆட்களின் ஆக்கிரமிப்பு நிறைந்திருந் தாலும் அங்கெல்லாம் ஐந்தாறு நிமிடத்தில் ஆள்கள் மாறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இங்கே இந்த சூரியமூர்த்தியின் கையும் ஓயவில்லை, வாயும் ஓயவில்லை.

எதிர்முனையில் ஒலித்த குரல் என்ன சொன்னதோ… ஏது சொன்னதோ… நம் சூரியமூர்த்தி சட்டென்று விரைந்து நின்றான். வலது கையில் இருந்த புத்தகத்தைக் கீழே வைத்து விரல்களினால் புரட்டிக் கொண்டே “ஹாய் டியர்! என்மேல நம்பிக்கை இல்லாம போச்சா டார்லிங்?”

“கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்னு’ புரட்சிக்கவி பாடியதை நீ படிச்சதில்லையா? நோ… நாளைக்கு இதே நேரத்தில் நீ கேட்டது உன்னோட கையில பாறேன்!”

சொல்லிவிட்டு வலது கையால் ரஜினி ஸ்டைலில் தன் தலைமுடியைக் கோதிக் கொள்கிறான். முகத்தில் அளவுகடந்த பூரிப்பு…

எதிர்முனையில் ஏதோ மகிழ்ச்சியான பதில் கிடைத் திருக்க வேண்டும்… உற்சாகத்துடன் போனில் முத்தமழை பொழிகிறான் சூரியன்! அவன் பின்னால் கால்கடுக்க நின்று கொண்டிருந்த அவன் வயதொத்த இந்திய இளைஞர் ஒருவருக்கு ஆத்திரம் அதிகமாகி அவன் தோளில் கைவைத்து ஓர் அழுத்து அழுத்துகிறார்.

“விட்டா போன்லேயே குடும்பம் பண்ணி முடிச் சிடுவீங்கடா… போன் வைச்சிருக்கிறது அவசர ஆபத்துக் காகவா…இல்லே உங்கமாதிரி காவாலிக் கூட்டம் காதல் கதை படிக்கிறதுக்கா… குடுடா போனை..”

சூரியன் மட்டுமில்லை… அந்த இளைஞனுக்குப் பின்னால் நின்ற மற்றவர்களும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கிறார்கள். சூரியன் கையிலிருந்த போன் அந்த இளைஞன் கையில் இருக்க சற்றுமுன்னால் சூரியன் உள்ளே செருகியிருந்த கார்டை எடுத்து சூரியனிடம் நீட்டுகிறான் அவன்.

சூரியனுக்கு ஆத்திரம் அதிகமாக வருகிறது. எதிர் முனையில் இனிக்கும் இன்பமொழி பேசிக்கொண்டிருந்த காதலியை அம்போவென்று விட்ட தவிப்பு ஒரு பக்கமும், அத்தனை பேருக்கும் முன்னால் அந்த அன்னிய நாட்டான் தன்னை அவமானப்படுத்திய வெட்கம் ஒருபுறமும் அவனைக் கொல்லாமல் கொல்ல…

இருடா உன்னைக் கவனிக்கிறேன் என்றவனாய் அங்கிருந்து நகர்கிறான். அவனைப் பற்றிக் கவலைப் படாமல் போனில் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞன் ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்துக்கொண்டு அடுத்தவருக்குப் போனைக் கொடுத்துவிட்டு நடக்கிறான். சில நிமிடங்கள் நடந்து வந்து தனக்காக ஒரு ‘ஞாயிறு முரசு’ பத்திரிகையை வாங்கியவன் அவசரமாய் அதைப் பிரித்து அங்கேயே படிக்கிறான். அவன் முகத்தில் மகிழ்ச்சி ரேகை படர்கிறது.

அக்கரையிலிருந்து இக்கரைக்கு இரை தேடிவந்த பறவைகளில் அவனும் ஒருவன்! ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு வந்திருந்தாலும், தனக்குத் தெரிந்த இனிய தமிழில் அவன் அருமையான கவிதைகளை வடிப்பவன்! அவனது கவிதைகள் அடிக்கடி ஞாயிறு பத்திரிகைகளில் வெளி வருவது உண்டு. அன்றும் அப்படித்தான். அவனது கவிதை ஒன்று வெளிவந்திருந்தது. ஆசை ஆசையாய் அக்கவிதையைத் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டே நடந்தவனின் முகத்தில் குபீரென்று குத்தினான் சூரியன்! எதிர்பாராத தாக்குதலால் தடுமாறிப் போன அந்த இளைஞன் சாலை ஓரத்தில் போய்ச் சாய்ந்தான். பத்திரிகை சிதறி ஓடியது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து விளக்கும் அளவிற்கு நிலைமை முற்றிப்போக, பத்திரிகை கடைக்காரர் இருவரையும் சமாதானப்படுத்தினார். சூரியமூர்த்தி அவரிடம் நியாயம் பேசுகிறான்.

“இவன் யாருங்க… எனக்குப் புத்தி சொல்ல… என்னோட கேர்ள் பிரண்டுகிட்டே நான் பேசறேன்… போன் என்ன இவன் அப்பன் வீட்டுப் போனா… அரசாங்கம் வைச்சு கொடுத்திருக்கு… கூடப் பேசறதும், குறைச்சுப் பேசறதும் அவங்கவங்க வசதியைப் பொறுத்தது. கடைக்காரர் ஜமால் அவனை அடக்குகிறார்.

“அப்படிப் பேசாதீங்க தம்பி… அரசாங்கம் போன் வைச்சுக்கொடுத்தது பொதுமக்களோட அவசர ஆபத்து நேரத்துக்குத்தான்… ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் போன் இருக்கு…அதுமட்டுமில்லாம வசதியுள்ளவங்க ஹேண்ட் போனும் வைச்சிருக்காங்க… ஆனா இந்தப் பொதுத் தொலைபேசி எல்லாம் பொதுமக்களோட அவசரத் தேவைக்குதான்! படிச்ச உங்களுக்கு நான்தான் இதை சொல்லணும்னு இல்லை!”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனது அடியினால் தடுமாறிப் போன அந்த இளைஞன் தனது பத்திரிகைகளைத் தேடி எடுத்து ஒழுங்காக மடித்து வைத்துக் கொண்டு அவரிடம் மன்னிப்புக் கோரினான்.

“அந்தப் பையன் முக்கால்மணி நேரமாய்ப் பேசிக் கொண்டிருந்தான் ஐயா… மருத்துவமனையில் இருக்கிற என்னோட அண்ணனைப் போய்ப் பார்க்க முடியவில்லை.. அதுக்காகச் சிநேகிதரைக் கூப்பிடத்தான் வந்தேன்…இவன் நீண்ட நேரம் பேசிக்கிட்டு இருந்ததால எனக்குக் கோபம் வந்துடுச்சு…அதனாலதான்…!”

அவர் அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். வீட்டுக்கு வந்த சூரியமூர்த்திக்கு மனம் இருப்புக் கொள்ள வில்லை. வீட்டுக்குள் நுழைந்து சோபாவில் சாய்ந்தவன், வீடு அமைதியாக இருப்பதைக் கண்டு எழுந்துபோய்ச் சுற்று முற்றும் பார்க்கிறான். அம்மாவையும், அக்காவையும் தேடிப்பார்க்கிறான். இருவரும் இல்லையென்றதும் மனம் இறக்கை கட்டிக் கொள்கிறது.

“அப்பா வீடு திரும்ப இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும். அம்மாவும் அக்காவும் கோயிலுக்குதான் போயிருப் பார்கள். நிச்சயம் இரண்டு மணி நேரம் கழித்துதான் வருவார்கள்…அதுவரை யாரைப் பற்றியும் கவலைப்படாமல் நம் காதல் கதையைத் தொடரலாம்…

ஒரு பெரிய குவளையில் மைலோவைக் கலக்கி எடுத்துக் கொண்டுவந்து தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்த வண்ணம் தொலைபேசி அருகில் அமர்கிறான். ஒருவாய் மைலோவைக் குடித்துக் கொள்கிறான். இடது கையில் போன்… வலது கை எண்களில் அமிழ்ந்து அமிழ்ந்து எழ எதிர்முனையில் தேன்மொழியின் தேன்குரல்! சூரிய மூர்த்தியின் கண்களும் தொலைக்காட்சியில் பதிந்தவாறு உற்சாகம் கரைபுரள்கிறது. கைக்கடிகாரமும் விடுவிடுவென்று நகர்கிறது. என்ன பேசினான்… எவ்வளவு நேரம் பேசினான் என்றே அவனுக்குத் தெரியாது. பேசிக் கொண்டே கையில் மைலோவை எடுத்து உதட்டில் வைத்தபோது அது ஐஸ் கட்டிபோல் குளிர்ந்தது. அதே நேரத்தில் வாசல் கதவு தடதட வென்று தட்டப்படும் ஓசை காதில் விழ, சட்டென்று போனை வைத்துவிட்டு எழுந்துபோய்த் தொலைக்காட்சிப் பெட்டியை அடைந்தவாறு கதவைத் திறக்கிறான். எதிரே புயலில் அடிபட்ட பூங்கொடிபோல் சாந்தி அக்கா நிற்கிறாள்.

“அக்கா… அக்கா… என்னக்கா ஆச்சு உனக்கு? அவள் பேச வாய் வராமல் அழுகிறாள். “அக்கா… அக்கா…நீ மட்டும் வந்திருக்கியே, அம்மா எங்கேக்கா… அம்மா எங்கே?”

மறுபடியும் கேட்டவனின் குரல் நடுங்குகிறது. ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்க வேண்டுமென்று உள்மனம் உணர்த்த ஆரம்பிக்கிறது. அக்காவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறான்.

“சொல்லுக்கா…அம்மா எங்கே… ஏன் இன்னும் அப்பா வரலே!”

அக்கா அழுகையுடனே சொன்னாள்.

“அம்மா மருத்துவமனையில் இருக்காங்க. வேலை யிடத்தில் அப்பாவிற்கு அட்டாக் வந்து அவுங்க மருத்துவ மனையில சேர்ந்திருக்கிறதா போன் வந்ததும் நானும் அம்மா வும் மருத்துவமனைக்குப் போனோம். அப்பா நிலைமை மோசமா இருந்துச்சு.. உன்ன கூப்பிடலாம்னா உன்னோட ஆபீஸுக்குப் போன் பண்ணினா நீ அங்கே இல்லே… வீட்டிற்குப் போன் பண்ணினேன்… போன் கிடைக்கல..

ஒரு மணிநேரம் முயற்சி பண்ணினேன்டா… ஆனா போன் கிடைக்கவேயில்லை… உனக்குப் போன் பண்றதுக்கா நான் அலைஞ்ச அலைச்சல்ல அப்பாகிட்ட இருக்க முடியாம போச்சு…”

சொல்லிக்கொண்டே அழும் அக்காவைப் பார்த்து அஞ்சியவனாய்

“அக்கா…நீ என்ன சொல்றே.. அப்பா…”

“ஆமாண்டா…நம்ம ரெண்டுபேர் முகத்தையும் பார்க்காமலேயே அவர் உயிரை விட்டுட்டார்டா… அப்பா செத்துட்டார்டா…”

சாந்தி தேம்பி தேம்பி அழுகிறாள். அவன் சிலையாகிப் போனான். சுமார் மூன்று மணிநேரத்திறகு முன்னால் யாரோ ஒருவன் சொன்னபோது அவனிடம் முறைத்தவன், இப்போது தன் விளையாட்டு, தன் வீட்டையே கொளுத்திவிட்ட கொடுமையால் பணியில் மாட்டிய மீன்போல் விறைத்து நின்றான்.

அவசரத் தேவைகளுக்குதான் அந்தத் தொலைபேசி சேவை என்பதை மறந்து தனது ஆடம்பர ஆர்பாட்ட ஆசாபாச விளையாட்டிற்கு என்று அதை ஆக்கிரமிப்புச் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதைத் தனக்குக் கஷ்டம் வந்தபின்தான் அவனால் உணர முடிந்தது போலும்.

அக்கா அவனைப் பிடித்து உலுக்கி சமநிலைக்குக் கொண்டுவந்தபின் அவன் நடக்கவும் சக்தியின்றி இருக்கிறபோது… தொலைபேசி அழைப்புமணி அலர்கிறது. அக்கா நம்ப முடியாத வியப்புடன் தம்பியைப் பார்க்… தம்பி தொலைபேசியைக் கையில் எடுத்துச் சிலையாய் நிற்கிறான்.

– தமிழ் முரசு 13-10-1996

– கவரிமான் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: அக்டோபர் 2007, சீதை பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *