கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 24, 2019
பார்வையிட்டோர்: 84,144 
 

குமரனுக்கு அந்த கனவு ஆறாவது படிக்கும்போது வந்திருக்கலாம். பத்தாவது படிக்கும் அண்ணன்கள் வெள்ளிக்கிழமை மாலை குசுகுசுவென்று பேசிக்கொள்வதும் சனிக்கிழமை காலை எட்டரை மணிக்கெல்லாம் சைக்கிள் எடுத்துக் கொண்டு ஓடுவதும் அந்த வயதில் ஒரு குறுகுறுப்பை ஏற்படுத்தியிருக்கலாம். என்ன ஏதுவென்று விசாரித்தபோது தான் தெரிந்தது ஆதம்பாக்கம் ஜெயலஷ்மியில் காலை 9 மணி காட்சி ஸ்பெஷல் காட்சியாம். நானும் பத்தாவது போகும்போது அண்ணன்கள் மாதிரி ‘அந்த’ மாதிரி படத்துக்கெல்லாம் போகணும் என்று கனவுகளை வளர்த்துக் கொள்ள தொடங்கினான் குமரன்.

ஆறாவதில் வகுப்பில் முதல் மாணவனாக, முதல் பெஞ்சு மாணவனாக இருந்த குமரன் ஏழாவது, எட்டாவது போகும்போது தனது ஸ்பெஷல் திறமைகள் சிலவற்றை வளர்த்துக் கொண்டதால் கடைசி பெஞ்சுக்கு அடித்து துரத்தப்பட்டான். ரேங்க் கார்டில் ரேங்கே இருக்காது. அப்பா மாதிரி அவனே கையெழுத்து போட்டுக் கொள்வான். இந்த காலக்கட்டத்தில் தான் அவனுக்கு அருமையான நண்பர்கள் கிடைத்தார்கள். அருள், சாமி, மீனாட்சி, சேகர், சுதாகர், செந்திலு, சுரேஷு, சரவணன், மோகன், வாழைக்கா விஜி என்று ஏகப்பட்ட பேர். இதில் அருளுக்கு ‘அந்த’ மேட்டரில் அனுபவமே உண்டு என்று வகுப்பு நம்பியது. அவன் சொன்ன அனுபவ கிளு கிளு கதைகளை பின்னர் மருதம், விருந்து புத்தகங்களில் வாசித்தபோது தான் பயல் அந்த கதைகளோடு தன்னையும் கதாபாத்திரமாக்கி கற்பனையை கலந்து கட்டி தந்திருக்கிறான் என்பது புரிந்தது. இருந்தாலும் அவன் கதை சொன்ன பாணி சுவாரஸ்யமாகவே இருந்தது என்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது படிக்கும்போது சரவணனுக்கு கொஞ்சம் கத்தையாக மீசை இருந்தது. மோகனுக்கு அரும்புமீசை இருந்தது. ஆனால் குமரனுக்கோ மீசை வருவதற்கான அறிகுறியே இல்லை. சரவணனும், மோகனும் ஒருநாள் ஆர்.கே. போவலாம்டா என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்கள். ஆர்.கே. என்பது தியேட்டர் ராமகிருஷ்ணா என்பதாக அறிக. ஆலந்தூரில் இந்த தியேட்டர் நீண்ட நாட்களாக கலைச்சேவை புரிந்து வருகிறது. இப்போது எஸ்.கே. என்ற பெயரில் அந்த கலாச்சாரப் பெருவெளியில் இயங்கிக் கொண்டிருக்கிறது. “டேய் எனக்கும் ஆசையா இருக்குடா. நானும் வர்றேண்டா” என்று சொன்ன குமரன் ஏளனமாக புறக்கணிக்கப்பட்டான். புறக்கணித்ததற்கு சரவணனும், மோகனும் சொன்ன காரணம் ‘மீசை’. தியேட்டருக்குள் மீசை இல்லாதவர்களை உள்ளே விடமாட்டார்களாம்.

“பெரிய ஆளுங்க நெறைய பேரு மீசையை ஷேவிங் பண்ணிடுறாங்களே? அவங்களை மட்டும் எப்படி தியேட்டருக்குள்ளே அனுப்புறான்!”

“மச்சான் மீசையை ஷேவிங் பண்ணிக்கிட்டவங்களுக்கெல்லாம் வேற இடத்துலே வேற விஷயம் சரியா இருக்கான்னு செக் பண்ணிட்டு தான் அனுப்புவாங்க. உன்னையும் அதுமாதிரி செக் பண்ணுவாங்க பரவாயில்லையா?” – சரவணன் சொன்ன ‘வேற விஷயம்’ கொஞ்சம் அந்தரங்கமானது. அந்த வேற விஷயத்துக்கும் கூட அப்போது குமரன் தகுதியோடு இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக்குக்கு போகும் இந்திய அணிக்கு கூட அப்படி ஒரு வழியனுப்பு விழா நடந்திருக்காது. ஆர்.கே.வுக்கு சென்ற சரவணன், மோகன் தலைமையிலான குழுவுக்கு விசில் மற்றும் பலத்த கைத்தட்டலோடு வகுப்பு வழியனுப்பு விழா நடத்தியது. குமரனை போலவே அந்த குழுவில் இடம்பெற விரும்பி நிராகரிக்கப் பட்டவர்களில் சுவாமிநாதனும் ஒருவன்.

ஆனால் ஆர்.கே.வுக்கு சென்று திரும்பிய குழு அவ்வளவு உற்சாகமாக இல்லை. போஸ்டரில் இருந்ததை விட ஸ்க்ரீனில் ரிசல்ட் கம்மி தான் என்று அருள் சொன்னான். சரவணனும், மோகனும் மட்டும் ஆஹா ஓஹோவென்று புகழ்ந்து தள்ளினார்கள். ”ஹேய் மவுனராகம் மோகன் கூட இருக்காருடா.. ராஜாதி ராஜாலே வருமே ஒரு ஆண்ட்டி ஒய்.விஜயா, செக்கச்சேவேன்னு இருக்குமே அந்த ஆண்ட்டி தான் ஹீரோயின்” என்று மோகன் சொன்னான். மோகனும், சரவணனும் சொன்ன அந்தப் படத்தின் மேட்டர், அருள் சொன்ன மேட்டரை விட மொக்கையாக இருந்தது. எனவே கொஞ்ச நாட்களுக்கு ‘அந்த’ விஷயம் மீதான ஆர்வம் அப்போதைக்கு குமரனுக்கு குறைந்தது.

பாட்டிலுக்குள் அடைத்து வைத்திருந்த பூதத்தை வெளியே விட்டது மாதிரி மறுபடியும் சுவாமிநாதனால் அந்த ஆர்வம் குமரனுக்கு கிளர்த்தெழுந்தது. அப்போதெல்லாம் அதுமாதிரி படங்களை டிடியே இரவு பதினொரு மணிக்கு சனிக்கிழமைகளில் ஒளிபரப்பத் தொடங்கியிருந்தது. வீட்டில் எல்லோரும் தூங்கியபிறகு சுவாமிநாதன் ‘அந்த’ படங்களை பார்த்துவிட்டு வந்து சதை சொல்லத் தொடங்கினான். ஈவில் டெட் மாதிரி எப்போதாவது விசிஆரில் பார்த்த இங்கிலீஷ் படங்களில் ஓரிரண்டு காட்சிகளை மட்டுமே பார்த்து புல்லரித்துப் போயிருந்தவர்களுக்கு சுவாமிநாதனின் இந்த சனிக்கிழமை புரட்சியால் திடீர் மறுமலர்ச்சி ஏற்பட்டது. எப்படியாவது ஒரே ஒரு முறை ஆர்.கே.வுக்கு போய்விட வேண்டும் என்ற தீராத தாகம் ஏற்படத் தொடங்கியது. பத்தாவது வந்த பின்னர் இதைப்பற்றியெல்லாம் யோசிக்கக் கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

வாழைக்கா விஜி மட்டும் பழைய தமிழ்ப்படங்களில் வரும் சில காட்சிகளை கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிக் கொண்டிருப்பான். அவன் சொல்லுவது பெரும்பாலும் ஸ்ரீகாந்த் படக்காட்சிகளாக இருக்கும். அந்த காட்சிகளை காட்ட இயக்குனர்கள் பயன்படுத்தும் சில உத்திகள் குறித்து, அது எப்படி ஒரிஜினலுக்கு பதிலாக சிம்பாலிக்காக காட்டப்படுகிறது என்பது குறித்த பேச்சு வரும். பதினாறு வயதினிலே படத்தில் தேங்காய் உரிப்பது, வேறொரு படத்தில் பருந்து கோழிக்குஞ்சை குறிவைத்து பறப்பது போன்றவை பற்றி எப்போதாவது பேசுவதுண்டு.

இருந்தாலும் கற்பூரம் ஜெகஜோதியாய் எரிந்து அணைந்துவிடுவதை போல அந்த கனவு குமரனுக்கு கிட்டத்தட்ட அணைந்து விட்டிருந்தது. அது முற்றிலும் அணைந்துவிடவில்லை நீறுபூத்த நெருப்பாக உள்ளுக்குள்ளேயே கனலாக இருந்திருக்கிறது என்பதை முரளியோடு பழகிய பின்னர் தான் அவன் உணர்ந்தான். இப்போது குமரன் +1க்கு வந்துவிட்டிருந்தான். மீசை என்று சொல்லிக்கொள்ளும்படி பெரியதாக எதுவும் வளர்ந்துவிடவில்லை என்றாலும் குரல் கொஞ்சம் உடைந்து ஆண்குரல் போலிருந்தது. அப்பாவின் கோத்ரேஜ் ஹேர்டை ஸ்டிக்கை எடுத்து அவ்வப்போது மீசைபோல வரைந்து கொண்டான்.

முரளியும், குமரனும் பரங்கிமலை ஜோதிக்கு போக திட்டமிட்டார்கள். காலை பத்து மணி காட்சி என்று ஒரு அஜால் குஜால் போஸ்டர் நங்கநல்லூர் வட்டாரங்களில் ஒட்டப்பட்டிருந்தது. ஒரு சனிக்கிழமை அந்த படத்துக்கு போயே தீருவது என்று முடிவெடுத்தார்கள். முரளிக்கு கட்டை மீசை, பிரச்சினையில்லை. குமரனுக்கு மீசை சொல்லிக் கொள்ளும்படி இல்லாததால் கொஞ்சம் தொளதொளவென்று ஒரு சட்டையை போட்டுக் கொண்டு கிளம்பினான். கொஞ்சம் பெரிய பையனாக தெரிய ஒரு தொப்பியை மாட்டிக் கொண்டான்.

ஜோதியில் காலை சனி, ஞாயிறு காலை காட்சி மட்டும் ‘அந்த’ படம். மீதி நாலு காட்சிகள் “அம்மன்”. என்ன கொடுமை பாருங்கள்?. ”மச்சான் காலையிலே அந்த மாதிரி படத்தை போட்டுட்டு, மத்தியானம் ‘அம்மன்’ போடுறாங்களே? எப்படிடா?” முரளியிடம் சந்தேகம் கேட்டான். ”அந்தப் படம் முடிஞ்சதும் தியேட்டரை கழுவித் தள்ளிட்டு ‘அம்மன்’ போடுவாங்கடா” என்று முரளி சொன்னான். ஏதோ தீட்டு கழிப்பது போல சொன்னாலும், உண்மையில் முரளிக்கும் எப்படி ரெண்டு நேரெதிர் படங்களை போடுகிறார்கள் என்ற லாஜிக் புரியவில்லை.

அது புரட்டாசி சனிக்கிழமை. கவுண்டரில் நின்றவர்கள் நிறைய பேர் நாமம் போட்டிருந்தார்கள். நாமம் + காமம் = ? தலையில் அடித்துக் கொள்ள வேண்டியதுதான். குமரன் கர்ச்சிப்பால் முகத்தை மூடியிருந்தான். அப்பாவுக்கு தெரிந்தவர்கள் யாராவது பார்த்துவிடும் வாய்ப்பு இருந்தது. டிக்கெட் கவுண்டரில் இரண்டு டிக்கெட் வாங்கியாயிற்று. டிக்கெட் கிழிக்கும் இடத்துக்கு செல்லும்போது தான் குமரனுக்கு உதற ஆரம்பித்தது. எப்படியும் முரளி உள்ளே போய்விடுவான், சின்னப்பையனாக தெரிந்த தனக்கு மட்டும் தான் பிரச்சினை என்று உள்ளுக்குள் புலம்பினான். மீசை கத்தையாக இல்லாவிட்டால் ‘வேறு’ சோதனை நடத்துவார்கள் என்ற சரவணனின் கூற்று வேறு நினைவுக்கு வந்து தொலைத்தது. முரளி ஒரு டிக்கெட்டை உஷாராக கையில் வாங்கி வைத்துக் கொண்டான். பிரச்சினை வந்தால் அவன் மட்டும் போய் பார்த்துவிடும் கள்ளத் திட்டம் அவனிடம் இருந்தது.

டிக்கெட் கிழித்தவர் “தொப்பியை எடு, கர்ச்சிப்பை கயட்டு” என்றதுமே புரிந்துவிட்டது, குமரனால் உள்ளே போகமுடியாது என்று. “என்னடா சின்னப்பயலா இருக்கே? இந்தப் படத்துக்கு வந்திருக்கே?” என்று டிக்கெட் கிழித்தவர் மிரட்ட, திருதிருவென விழித்தான் குமரன். சட்டென்று, “அண்ணே ‘அம்மன்’ படம்தானே?” என்று பிளேட்டை திருப்பிப் போட, டிக்கெட் கிழித்தவர் சிரித்துக் கொண்டே, “ஆமாமா.. அம்மன் படம் தான். ஆனா நீ பார்க்க வந்த அம்மன் படமில்லே. ஒரு ஒன் ஹவர் வெளியே வெயிட் பண்ணு. இந்த டிக்கெட்டை கவுண்டர்லே யாருக்காவது வித்துடு. அடுத்த ஷோ உள்ளே வா!” என்று திருப்பி அனுப்பினார். ஏற்கனவே துரோகி முரளி உள்ளே போய்விட்டான்.

இவ்வாறாக குமரனின் அந்த கனவு நீண்டநாட்களாக மெய்ப்படாமல் இழுத்துக்கொண்டே சென்று கொண்டிருந்தது. ஒரு வழியாக கண்ணன் காலனி வெங்கடேசனால் அந்த கனவு மவுண்ட்ரோடு கெய்ட்டி தியேட்டரில் ஒரு சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் நிறைவேறியது. ஆனாலும் ‘எதிர்பார்த்த’ லெவலுக்கு இல்லாததால் மீண்டும் மீண்டும் ஜோதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினான். ஜோதி அலுத்துவிட ஜெயலட்சுமி, பானு, விக்னேஸ்வரா, காஞ்சிபுரம் பாலசுப்பிரமணியர், கொட்டிவாக்கம் திருமலை, ஆவடி ராமரத்னா என்று அவனது கனவு பிற்பாடு விரிந்துகொண்டே சென்றது. இப்போதும் கூட எப்போதாவது சனிக்கிழமை மாலைவேளைகளில் குமரனை நீங்கள் போரூர் பானுவில் காணலாம்.

– ஆகஸ்ட் 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *