பப்பு வீட்டில் ஹெட் மாஸ்டர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 29, 2019
பார்வையிட்டோர்: 131,303 
 

அழைப்பு மணி ஓசை கேட்கிறது. அடுப்படியில் இருந்து பிரேமி, என்னங்க காலிங் பெல் சத்தம் கேட்கலியா… கதவைத் திறந்தா என்ன…

ம்… பெல் சத்தம் உனக்கும்தானே கேட்குது… நீ போய் கதவை திறயேன்… அறைக்குள் இருந்து பதில் கொடுத்தான் பிரகாஷ்.

அழைப்பு மணி மீண்டும் ஒலிக்கிறது.

அப்பப்பா… போட்டி போட்டி.. எதுக்கெடுத்தாலும் போட்டி… சொல்லிக்கொண்டே கையில் கரண்டியோடு அறைக்குச்சென்றாள் பிரேமி…

இப்போ நீங்க போய் கதவைத் திறக்கலே…

திறக்கலே….

திறக்கலே….

ம்… திறக்கலே… சொல்லு சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடி…. என்றான் பிரகாஷ்.

ம்.. நானே பொய்த்த திறந்துடுவேன்…. சொல்லிவிட்டு வாசற்கதவு நோக்கி நடந்தாள் பிரேமி.

கையில் கரண்டியுடன் கதவைத்திருந்தாள்… வாசலில் நிர்ப்பவரைப் பார்த்தவுடன் சற்றே பதட்டமானாள்… அவர் வேறு யாரும் அல்ல பப்பு படிக்கும் ஒரு பிரைவேட் ஸ்கூல் ஹெட்மாஸ்டர்.

வணக்கம் சார் என்று கைகளைக் குவித்தாள் பிரேமி… கையில் இருந்த கரண்டி தவறி வாசலில் நின்றிருந்த ஹெட்மாஸ்டர் சட்டை மீது உரசிக்கொண்டு கீழே ‘நங்’ என்று விழுந்தது.

கரண்டி உபாயத்தால் சட்டையில் ஒட்டித் தவழ்ந்த குழம்பை தொட்டு நாவில் வைத்த அவர்…

ம்… வத்தக் குழம்பு… உப்பு இன்னும் ஒரு பின்ச் சேத்திங்கன்னா டேஸ்ட் இன்னும் தூக்கலா இருக்கும்… என்றவர் சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்….

நான் பப்புவோட ஸ்கூல் ஹெட் மாஸ்டர்…

எஸ் சார்… ஆமா சார்… எனக்குத் தெரியுமே… பதட்டம் குறையவில்லை பிரேமிக்கு….

யார்டி வெளில… உங்க சொந்தக் காரங்க யாராவது வந்துட்டாங்களா தெரிஞ்சிருந்தா நேத்தே வீட்டைப் பூட்டிட்டு வெளியில கிளம்பியிருக்கலாமே… என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தான் பிரகாஷ்..

அச்சச்சோ.. என்னங்க… நீங்க நினைக்கிற மாதிரி இல்ல… கொஞ்சம் பேசாம இருங்களேன்… என்று கணவரை அமைதிப்படுத்திவிட்டு…
சார் நீங்க இங்க உட்காருங்க… ஹெட் மாஸ்டருக்கு இருக்கை காட்டி இருக்கச்சொன்னாள் பிரேமி.

ம்… நான் நினைக்கிற மாதிரி இல்லையா… அப்படின்னா எங்க அண்ணன் தம்பி யாராவது வந்துட்டாங்களா… யாரை இவ வீட்டுக்குள்ள கூப்புட்டு உட்காரச்சொல்லுறா… என்று வினவிக்கொண்டே கைலியை இருகக்கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான் பிரகாஷ்.

ஓஹ்… சாரி சார்.. வணக்கம்… நான்கூட யாரோன்னு நினைச்சு…. என்று இழுத்தான் பிரகாஷ்

பரவால்ல… அதனால் என்ன … என்ற ஹெட் மாஸ்டர் தொடர்ந்தார்… அதிருக்கட்டும் … நான்… வந்த விஷயத்தை மறந்துட்டேன் பாருங்க… என்று தான் வந்ததற்கான காரணத்தைச் சொல்ல வந்தார் ஹெட் மாஸ்டர்…

சார்… முதல்ல என்ன சாப்பிடறீங்க காபி… டீ … என்றாள் பிரேமி

அதெல்லாம் வேண்டாம்… என்றான் பிரகாஷ்

கணவனின் இந்த பதிலைக் கண்டு பதட்டம் அடைந்த பிரேமி… என்னங்க… என்றாள் பிரகாஷைப் பார்த்து

இல்ல அப்படி சொல்லுவார் சார்… ஆனா நாம விடமாட்டோம்னு.. சொல்லவந்தேன்… என்று சமாளித்தான் பிரகாஷ்

ஆமா.. அதெல்லாம் வேண்டாம்..என்றார் நகைத்துக்கொண்டே ஹெட் மாஸ்டர்

பார்த்தீங்களா.. ஆனா நாங்க விட மாட்டோம்…சரி தண்ணி… என்றான் பிரகாஷ்

நோ நோ.. நான் வேண்டாம்னு சொன்னா… வேண்டாம்னு அர்த்தம் இல்ல… இட்லி, தோசை, சப்பாத்தி… இப்படி ஏதாவது சாப்பிடறீங்களான்னு கூட… நீங்க.. கேட்கலாம்… என்றார் ஹெட் மாஸ்டர்

சற்றே குழம்பிய பிரகாஷ்… ம்… புரியுது… புரிஞ்சுதா பிரேமி… சார் என்ன சொல்றாருன்னா… என்றான் மனைவியைப் பார்த்து

ஆ… ம்… புரிஞ்சுது… அதாவது இட்லி சாப்பிடறீங்களான்னு கேட்கலாம்… என்று இழுத்தாள் பிரேமி

ஆமா கேளுங்க… பதிலுக்கு இழுத்தார் ஹெட் மாஸ்டர்

ஆனா மாவு அறைக்கலையே… என்றாள் பிரேமி

எஸ்… ஆமோத்தித்தான் பிரகாஷ்

தோசை சாப்பிடறீங்களானு கேட்கலாம்.. என்று இழுத்தாள் பிரேமி…

ஆமா கேளுங்க… பதிலுக்கு இழுத்தார் ஹெட் மாஸ்டர்

ஆனா அதுக்கும் மாவு வேணும்… ஆனா நாங்கதான் மாவு அறைக்கலையே… என்று பட்டென பதிலளித்தாள் பிரேமி

எஸ்… ஆமோதித்தான் பிரகாஷ்

சப்பாத்தியாவது வேணுமான்னு கேட்கலாம் தான்… யோசித்து இழுத்தாள் பிரேமி

என்ன.. அதுக்கும் மாவு அறைக்கலியா.. பதிலாகக் கேட்டார் ஹெட் மாஸ்டர்

சேச் சே… அத மாவாவே கடையில இருந்து வாங்கிடுவோம்… என்றான் பிரகாஷ்

அப்பறம் என்ன… கேட்டார் ஹெட் மாஸ்டர்

ஆனா நான் கோதுமை மாவுன்னு எழுதிக் கொடுத்தேன் இவர் முழு கோதுமை வாங்கிட்டு வந்துட்டார்… என்றாள் பிரேமி

அதனாலென்ன… கோதுமையைக் கொண்டுவந்து கொடு … சார் வீட்டுக்குப் போய் மாவை அறைச்சு… சப்பாத்தி பண்ணிக்குவார்… இல்ல சார்… என்றான் வெகுளியாக பிரகாஷ்

ஷட் அப்… என்ன இது… நான் எதுக்கு வந்தேன்.. நீங்க என்ன பேசுறீங்க… சற்றே கோபத்துடன் எழுந்தார் ஹெட் மாஸ்டர்

அத நீங்க இன்னும் சொல்லவே இல்லையே சார்… என்றான் பிரகாஷ்

ஓஹ் மை காட்… லிசென்… உங்க பையன் பப்பு இன்னைக்கு ஸ்கூலுக்கு வந்தானா… என்றார் ஹெட் மாஸ்டர்

ஆமா காலைல இவர்தான் கூட்டிட்டு வந்தார்… பதிலளித்தாள் பிரேமி

ரைட்… கூட்டிட்டு வரும்போது பையன் கிட்ட பென்சில் ரப்பர் எல்லாம் மறக்காம எடுத்து பேக்ல வச்சியான்னு ஒரு அம்மாவா நீங்க கேட்டீங்களா… பிரேமியைப் பார்த்து கேட்டார் ஹெட் மாஸ்டர்

முழித்தாள் பிரேமி

அருகில் இருந்த பிரகாஷிடம் சென்று.. ஒரு அப்பாவா நீங்க கேட்டீங்களா… என்றார் ஹெட் மாஸ்டர்

இப்போ என்ன சார் அதுக்கு… என்றான் பிரகாஷ்

ஒரு நால்லாப் படிக்கற பையன் பென்சிலை மறந்துட்டு ஸ்கூலுக்கு போனா அவன் எப்படி பாடத்தை எழுதுவான்… என்று கோபப் படாமல் கடிந்துகொண்டார் ஹெட் மாஸ்டர்

பிரேமியும் பிரகாஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு குழப்பத்தில் விழிக்க தொடர்ந்தார் ஹெட் மாஸ்டர்.. அதான்.. பப்புக்கு பென்சில் கொடுத்து எழுதச்சொல்லிட்டு… உங்க கிட்ட கேட்கலாமுன்னு வந்தேன்… என்று முடித்தார் ஹெட் மாஸ்டர்

அவன் கிட்ட பென்சில் கொடுத்தா அவனைத்தான் கேட்கணும்… எங்களைக் கேட்டா நாங்க எப்படிக் கொடுப்போம்.. என்று பரிதாபமாகக் கேட்டான் பிரகாஷ்

ஓஹ்… நான் கேட்கறேன்னு சொன்னது… உங்க கவனக் கொறைச்சலை கேட்க வந்தேன்னு சொன்னேன்… என்றார் ஹெட் மாஸ்டர் கண்டிப்பாக

அப்படி புரியும்படி சொல்லுங்க சார்… என்றாள் பிரேமி

சரி… ஒரு பென்சிலுக்காக இப்படி வீடு வரைக்கும் வரணுமா… ஆச்சர்யமாகக் கேட்டான் பிரகாஷ்

நோ நோ … டிஸிப்ளின்… டிஸிப்ளின் எனக்கு முக்கியம்… எங்க அது இல்லையோ.. உடனே அத எடுத்துச் சொல்லிக் கேட்கலைன்னா எனக்கு அடுத்த வேலை ஓடாது… டிசிப்ளின்… டிசிப்ளின்… என்று கண்டிப்பாகச் சொன்னார் ஹெட் மாஸ்டர்

இவர்களின் உரையாடலுக்கு நடுவே பள்ளிக்கூடம் முடித்து வீட்டுக்கு வந்தான் பப்பு.

வீட்டுக்குள் நுழைந்த பப்புவிற்கு ஹெட் மாஸ்டரைக் கண்டதும் ஆச்சர்யம்… இருந்தாலும்… குட் ஈவினிங் சார்.. என்றான் பப்பு ஹெட் மஸ்டெரைப் பார்த்து

குட் ஈவினிங்… பதிலளித்தார் ஹெட் மாஸ்டர்

என்ன சார் எங்க வீட்டுக்கு விசிட் பண்ணியிருக்கீங்க… சந்தேகமாகக் கேட்டான் பப்பு

நீதான் பென்சிலை மறந்துட்டியே.. அதான் உங்க பாரென்ஸ் கிட்ட அட்வைஸ் பண்ண வந்தேன்… என்றார் ஹெட் மாஸ்டர்

நானா… பென்சிலை.. மறந்தேனா… என்ன சார் சொல்லுறீங்க… சந்தேகமாக வினவினான் பப்பு

மை பாய்… நான் ரௌண்ட்ஸ் வரும்போது… நீ பென்சிலை மறந்துட்டு… சைன்ஸ் டீச்சர் கிளாஸ்ல… போர்டில் எழுதிப் போட்டதை எழுத வழியில்லாம… வெளில… பராக்… பார்த்துட்டு… இருந்தியே… நான்தான் உனக்கு பென்சில் கொடுத்து… எழுதச் சொன்னேனே… என்ன… ஞாபகம் இல்லாயா… பப்புவிடம் உரையாடினார் ஹெட் மாஸ்டர்

சார் மறந்தது நான் இல்லை சார்… பென்சிலை மறந்தது எனக்குப் பக்கத்தில இருந்த சுப்பு… நீங்க பென்சில் கொடுத்தது சுப்புவுக்கு… என்று விளக்கமளித்தான் பப்பு…

ஓஹ்… சாரி… தென் இட்ஸ் மை மிஸ்டேக்… அசடு வழிந்த ஹெட் மாஸ்டர்… சாரி நான் தப்பா உங்கள தொந்தரவு பண்ணிட்டேன்… என்று ப்ரேமி மற்றும் பிரகாஷைப் பார்த்து மேலும் அசடு வழிந்தார்..

ஓகே… பப்பு… நான் சுப்பு வீட்டுக்கு போறேன்… என்று சொல்லி வெளியில் கிளம்பிய ஹெட் மாஸ்டர் சற்றே தலை சொரிந்து யோசனையுடன்… பப்புவைப் பார்த்து… கிளாஸ்ல சுப்பு பப்புவோட பக்கத்துல உட்கார்ந்திருப்பான்… ஓகே… இது பப்புவோட வீடு அப்படின்னா இதுக்குப் பக்கத்து வீடு சுப்புவோட வீடு… ஆம் ஐ ரைட் பப்பு… என்று சிரித்துக்கொண்டே பப்புவைப் பார்த்து கேட்டார் ஹெட் மாஸ்டர்

கிளாசில எனக்குப் பக்கத்துல உட்கார்ந்தா அவன் வீடும் என் வீட்டுக்குப் பக்கத்தில இருக்கணுமா… என்ன சார் உங்க லாஜிக்… நொந்து கொண்டான் பப்பு…

அப்போ பக்கத்து வீடு இல்லையா… சந்தேகமாகக் கேட்டார் ஹெட் மாஸ்டர்…

இல்ல சார்.. பதிலளித்தான் பப்பு

அப்போ அவன் வீடு எங்க…கேட்டார் ஹெட் மாஸ்டர்

பப்பு சற்றே கோபத்துடன்… உங்க வீட்டுக்குப் போகணும் சார்… என்றான்

என் வீட்டுக்கா… ஏன்… விழி பிதுங்கினார் ஹெட் மாஸ்டர்

சுப்பு உங்க பையன் சார்… என்று பப்பு கத்தியத்தைக் கேட்டு தெருவே ஒரு கணம் அமைதியில் லயித்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *