கதையாசிரியர்:
தின/வார இதழ்: ஈழகேசரி
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 2,663 
 

(1952ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வயல் வெளியின் கிழக்குக் கரையோர மாக ஓடும் வாய்க்கால் மேட்டில் அவள் குத்திக்கொண்டிருந்தாள். அவளின் தீட்சண்யமும் திடமும் கொண்ட பார்வை அந்த வயலிடையே வயித்திருந்தது. வாய்க்காலின் கரை யிலே உயர்ந்து கவிந்திருந்த மருத மரத்தின் பழுத்த இலைகள் தண்ணீரில் பொட்டுப் பொட்டென்று விழுந்து எங்கு போகிறோம் என்ற பிரக்ஞையே இன்றி நீரில் மித ந்து போயின. தன் மடியில் விழுந்து கிடந்த இலைகளில் ஒன்றை எடுத்து அதன் காம்பை அர்த்தமற்றுக் கொறி த்துக்கொண்டாள் அந்தப் பெண். அவள் வண்ணான் மடிப்புக்குலையாத மில் சேலை ஒன்று கட்டியிருந்தாள். கிராமப் பெண் ஒருத்தி சாதாரணமாகச் செய்து கொண் டிருக்காதவகையில் அவள் தன்னை அலங்கரித்துக் கொண் டிருந்தாள். அவளது உருண்ட முகத்திற் சிந்தனையின் வக்கிர மான சோகச் சாயை படிந்திருப்பது நன்றாகத் தெரிந்தது.

எதிரே அங்குமிங்கும் தரையோடு ஒட்டிக் கிடந்த கஞ்சாங்கோரைப் பூண்டுகளை மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள், அடிக்கொரு தடவை நிமிர்ந்து பார்க்கையில்,அவைகளின் வட்டமான பஞ்சடைந்த கண்களிற் சோகம் புரண்டு நின்றது. மதியம் திரும்பி அகோரம் தணிந்தி ருந்தாலும், ஆகாயத்தின் இலை அசையாப் பொருமல், அந்தச் சுற்றுப் புறத்தை வெது வெதுப்புள்ளதாகச் செய்தது. மாரி மழையின், வெள்ளம் வற்றிய ஈரத்தில் நேராக விழுந்த சூரிய கிரணங்களின் தாக்குதலால் அந்த வயல்வெளி பல இடங்களில் வெடித்து, கோடை ப்போக விதைப்புக்காக வரப்போகும் மகாவலிகங் கைத் தண்ணீரை வரவேற்க வாயைப் பிளந்து கொண்டு கிடந்தது. அந்த வயலுக்கு அப்பால் இலையுதிர் காலத் தை வரவேற்கத் தங்கள் இலைகட்கு வர்ணங் கொடுத் துக்கொண்டிருந்த உயர்ந்த மரங்கள் சூரிய ஒளியில் மினு மினுத்தன. அன்று அமைதியும், வெதுவெதுப்பும், ஒளி யும் கொண்ட மாசிமாதத்து நாளொன்று.

அவளுக்குப்பின்னால் உதிர்ந்து கிடந்த இலைகள் சர சரத்தன . மறுகணம் மல்வேட்டி சலசலத்தது ; அவளை யே பார்த்துக்கொண்டு வந்த இளைஞனின் குதிக்காலின் கீழ் நத்தைக் கூடு ஒன்று நொறுங்கியது. அவ்விளைஞன் பேசாமல் வந்து அவள் பக்கத்தில் உட்கார்ந்தான். அவன் துல்லிய வெள்ளை வேட்டியும், மணிக்கட்டு மறையும் வரை கை நீண்டிருந்த வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்தான். தலை ஒழுங்காக வாரி விடப்பட்டு இய ற்கையாகச் சுருண்டிருந்தது. கையிலே கால் மாக்ஸின் ‘மூலதனம்’ என்ற புத்தகத்தின் கையடக்க ஆங்கிலப் பதிப்பு ஒன்று வைத்திருந்தான்.

அந்தப் பெண் அவனைப் பார்க்க விரும்பாதவள் போல அந்த வயல் வெளியையே வெறித்துப் பார்த்து க்கொண்டிருந்தாள்.

அவ்விளைஞன், அவளது அசாதாரணமான அலங்கார த்தை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டே “இன்றைக்கு நீ ரதி மாதிரி இருக்கிறாயே!” என்றான்.

அவள் மெதுவாகத் திரும்பி, “எவ்வளவு நேரம் காத் துக்கொண்டிருக்கிறேன்” என்றாள்.

நொந்த உள்ளத்திலிருந்து வந்த அந்த ஈனக் குர லில், அவள் முகத்தில், அவள் அழகிய நீண்ட விழிக ளில் ஓடிப் போயிருந்த சோகபாவத்தில், அவன் திக்பிர மை பிடித்துப் போனான். பதட்டத்தோடே கேட்டான்,

“நீ அண்ணனிடம் சொல்லிவிட்டாயா?”

“ஓம்” என்றாள் அவள்.

“அவருக்கு அதிக கோபம் வந்திருக்கும்”

“கோபத்தில் என்னை அடித்தார்.”

“முட்டாள், அப்படியா; பிறகு… என்ன?” என்று கேட்டான் அவன்.

“நீ அவனிலே ஆசை வைக்காதே என்றார்”.

“அப்ப நீ அண்ணா சொல்றபடிதான் கேட்பாயாக்கும்” என்றான் அவன். தலை தாழ்ந்திருந்தது போலவே குரலும் தாழ்ந்திருந்தது.

அந்தப்பக்கமாக ஒரு மாடு அசை போட்டுக்கொண்டு வந்தது. அது தலையைத் தூக்கி அவர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டது போலத் தோன்றியது. வாய்க் காலிற் கெண்டை மீன் ஒன்று துள்ளிப் பாய்ந்தது. அந்தப் பாய்ச்சலில் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த நீர்ப் பரப்பில் மெல்லிய அலைகள் எழும்பித் தணிந்தன. தூரத்திலே விதைப்புக்காக வயலைச் சேறாக்க மாட்டை வளைத்துக்கொண்டிருந்தவர்களின் “ஓகோ! கோ!…” என்ற சப்தம் தணிந்து மெலிந்து அவர்கள் காதில் விழுந்தது…

அவன் அவளைப் பார்த்துக் கொண்டு மீண்டும் சொன்னான். “ஆம், உன் அண்ணா சம்மதிக்க மாட்டார் தான். ஆனால் நாம் இருவரும் சம்மதித்தால் எல்லாம் ஆகும். இல்லையா கனகம்?”

அவன் அவள் தோளைத் தொட்டுக்கொண்டே அவள் முகத்தை பதிலுக்காகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அண்ணன் என்ன சொன்னார் தெரியுமா? அவனுக்கு அவன் அப்பா எத்தனையோ இடத்திலே கலியாணம் பேசியிருக்காம். எத்தனையோ பேர் அவனுக்குப் பெண் கொடுக்கக் காத்திருக்காங்களாம். நீ அவனை நம்பி ஏமாந்துதான் போவாய், என்றார் அண்ணா”.

“அதற்கு நீ என்ன சொன்னாய்?”

“அவர் அப்படிச் செய்யமாட்டார். நான் நிச்சயமாய் வேறு யாரையும் கட்டிக்கொள்ளப் போறதில்லை என்றேன்”.

“அதற்கு அண்ணா என்ன சொன்னார்?”

“அதுக்குத்தான் அவர் என்னிலே பாய்ஞ்சு விழுந்து தலையைப் பிடிச்சு மடக்கி முதுகிலே மூசி மூசிக் குத்தினார். இனி அவன் பேரைச் சொன்னால் உன்னைக் கொலை பண்ணி விடுவேன் என்றார்”.

*ம்…” அவன் நீண்ட ஒரு பெருமூச்சுவிட்டான்.

பிறகு “அம்மா சொன்னா, எட்டாத பழத்தில் ஆசை வைக்காதே. இந்த ஊருக்குள் நமக்கு ஏத்தாப் போல ஒரு மாப்பிள்ளை இல்லையா?” என்று. அவள் பேசிய மாதிரியைப் பார்த்தால் அண்ணன் சொன்னதையும் அம்மா சொல்லியதையும் அவள் ஒப்புக் கொண்டது போல இருந்தது. அவ்வாலிபன் அவள் சொன்ன எல்லாவற்றையும் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவன் கால் விரல்கள் புற்றரையை நிமிண்டிக் கொண்டிருத்தன. ஆகாயத்திலே உயர்ந்து மிதந்த நீலமேகங்கட்குக்கீழே, ஒரு வெள்ளை மேகக் கூட்டம்போல, நாரைக் கூட்டம் ஒன்று நீந்திச் சென்றது. தூரத்திலே உடைந்து தூர்ந்து கிடந்த படித்துறையில் இறங்கிய எருத்து மாடு ஒன்று வாய்க்காற் தண்ணீரை உறிஞ்சிக் குடித்தது.

“நாம் அதிர்ஷ்டசாலிகள் தான் கனகம்” என்றான்.

“சரி, இனி என்ன செய்வது?” என்று தணிந்து போன குரலிற் கேட்டாள் கனகம்.

“முதலில் நான் இந்த ஊரைவிட்டுப் போகவேண்டும். போய்”

அவன் முடிக்காமுன்னமே அவள் அவன் மார்பிற்சாய்ந்து கொண்டு தன் அகன்ற கண்களால் அவன் முகத்தை உற்றுப்பார்த்தாள், நீர் முட்டிப் போயிருந்த அவள் கண்களில் அவைகளின் நடுவிலிருந்த கருவிழிகளில், அவன் உருவம் தெரிந்தது. அவன் அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்துக் கொண்டான்.

“நீங்கள் ஏன் ஊரைவிட்டுப் போகவேணும்? இருக்கிற கொஞ்ச ஆறுதலும் இல்லாமற் போகவா…….?” என்றாள் கனகம். அவளுடைய பேச்சை அவ்வாலிபன் அநுதாபத்தோடு கேட்டான். கேட்டுவிட்டுச் சொன்னான்: “கனகம் இப்போ இருக்கிற நிலையில் எவர் ஆதரவும் இல்லாமல் நாம் தனித்துத்தான் வாழவேண்டியிருக்கிறது. அதற்கு முதலில் எனக்கு ஒரு வேலை வேண்டும். அதற்கு நான் ஊரை விட்டுப் போகத்தான் வேண்டும். இருவரும் பிரிந்து கொஞ்சநாட்களுக்குப் பேசாமல் இருப்பதும் நல்லது தான். எதற்கும் இன்னும் ஒரு மாதம் பொறுத்திருக்க மாட்டாயா?”

கனகம் ஒன்றுமே பேசவில்லை. அவள் இதற்குமுன் எத்தனையோ முறை என்னென்ன மாதிரி எல்லாமோ கற்பனை பண்ணிப் பார்த்திருக்கிறாள். இருவரும் பட்டினத்தில் வாழ்கிற மாதிரி, அவன் கந்தோருக்குப் போகிறதுபோல, அவள் வழியனுப்புகிறது போல; அவன் கந்தோரிலிருந்து வருகிறதுபோல; அவள் புன் சிரிப்போடு வரவேற்கிறது போல; அண்ணனின் அதிகாரமும் அம்மாவின் கரைச்சலும் இல்லாத தனிவீட்டில் அவன் மார்பிற் தலையைச் சாய்த்துக்கொண்டு நிற்கிறது போல……. இப்போது உண்மையாகவே அவன் அணைப்பில் இருக்கையிற்கூட, கனகம் மீண்டும் அப்படி அப்படித்தான் கற்பனை செய்து கொண்டிருந்தாள்.

ஆனால் அதற்குள் என்ன நினைத்துக்கொண்டாளோ, “நீங்கள் நாளைக்குப் போயிடுவீங்கள், நாள் போகப் போக எல்லாத்தையுமே மறந்திடுவீங்கள், கல்லிலே மோதி நுரைக்கிற இந்த ஆற்று நுரையைப்போல என் ஆசையும் உங்கள் மனசிலே அத்துப்போயிடும்” என்று சொல்லிக்கொண்டே அவன் தழுவலில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள் கனகம்.

“மாட்டேன்; ஒரு போதும் மறக்க மாட்டேன், உன்னை விட்டு என்னால் வாழவே முடியாது!” என்றான்.

“ஆமாம்; அப்படித்தான் சொல்லுவீங்கள். முதலில் உங்கள் அப்பா எங்கள் வீட்டுப்பக்கமே வரக்கூடாது என்று உங்களைக் கோபிச்சார். நீங்கள் அப்படியே வராமல் இருந்தீங்கள். இனி நீங்கள் என்னைக் கல்யாணம் செய்யக் கூடாது என்று சொல்வார். நீங்க அதையும் கேட்பீங்கள். அதன் பிறகு நான்…”

கனகம் அழத் தொடங்கினாள். தன்னுடைய தாயோ அல்லது தந்தையோ இறந்து விட்டால் ஒப்பாரி சொல்லத் தெரியாத இளம் பெண் எப்படி அழுவாளோ அப்படி, விம்மி விம்மி அழுதாள்.

‘பெண்களே இப்படித்தான். எதையோ நினைத்துக் கொண்டு அழுது தொலைக்கிறார்கள்’ என்று அவன் மனம் சொல்லியது. ஆனால் அவள் முகத்தை அவனுடைய மடியிற் படியவைத்துக்கொண்டபோது அவனுக்கு அவள் மீது இரக்கம் உண்டாயிற்று. “அழாதே; அழுது அழுது என்ன பலனைக் காணப்போகிறாய்?” என்றான் – அவளுடைய கூந்தலை வருடிக்கொண்டே.

“எனக்கென்னமோ எல்லாத்தையும் யோசிக்க யோசிக்கச் சாகத்தான் சொல்லுகிறது. வாழ்றதுக்கு முடியாது போலத்தான் இருக்கு” என்றாள் அவள்.

“நீ ஏன் சாகவேண்டும். இருதயத்தில் ஈரமற்ற எத்தனையோ பேர் இந்த உலகில் வாழ்கிறார்கள். நயவஞ்சகர்களும், கயவர்களும் வாழ்கிறார்கள். நீ வாழத்தான் வேண்டும். எனக்காகவாவது வாழத்தான் வேண்டும். இனிமேல் இப்படியெல்லாம் பேசாதே” என்றான்.

வாய்க்காற் கரையிலே காகங்கள் குளித்துக்கொண்டிருந்தன. வயலில் அங்குமிங்கும் சிதறி மேய்ந்து கொண்டிருந்த வெள்ளாடுகள் ஒன்று சேர்ந்து, அவர்களைத் தாண்டிச் சென்றன. இலைகளை அசைக்க முடியாத மெல்லிய இளங்காற்று அவர்கள் சரீரத்தைத் தொட்டு அப்பாற் சென்றது.

கனகம் மறுபடியும் தலையை நிமிர்த்திக்கொண்டே “நீங்கள் போய் எப்ப வருவீங்கள்” என்றாள்.

“ஒரு மாதத்துக்குள் வந்துவிடுவேன்.”

“அது மட்டும் நான் அடியும் உதையும் பட்டுக்கொண்டு. கிடப்பேன்” என்றாள் அவள்.

“எனக்காக அவற்றைப்படமாட்டாயா?” என்றான் அவன்.

“நன்றாகப் படுவேன்” என்றாள் கனகம். அவள் குரலில் இனிமை இருந்தது; முகத்திலே தெளிவும் இதழ்களில் குறுநகையும் இருந்தன.

“அப்ப நான் விடியற்காலை போய்விடுவேன். சரிவர எட்டுமா?” என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

கனகம் ஏதோ சொல்ல வாயெடுத்தாள். ஆனாற் போகிறவரைப் பின்னாற் கூப்பிடக்கூடாது என்ற எண் ஓணம் வரவே, வார்த்தைகளைத் தடுத்து நிறுத்திக் கொண்டாள்.

அவனுக்கு அவள் கூப்பிட்டதைப் போல ஒரு பிரமை ஏற்பட்டது. திரும்பிப் பார்த்தான். அவளும் பார்ததாள். இருவரும் சிரித்தனர்.

தன் பார்வையிலிருந்து மறையும் வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் கனகம்.

அவன் மறைந்துவிட்டான். மேற்கே இருந்த சூரியன் கூட, இருந்த இடம் காண முடியாதவாறு எங்கோ மறைந்துவிட்டான். ஒரே இருள்.

இருள் இருந்தாற்தானே ஒளி. அது வராமலா போய் விடும்?

இந்த நம்பிக்கையோடு கனகம் குடத்தை நிறைத்துக்கொண்டு வீட்டுக்குப்போனாள்.

– ஈழகேசரி-6-7-52

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *