கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: July 4, 2021
பார்வையிட்டோர்: 14,720 
 

மாணிக்கம் ஒரு ஏழை விவசாயி.

தினமும் காலையில் எழுந்து தனக்குச் சொந்தமான வயற்காட்டுக்குச் சென்று கீரை வகைகளைப் பறித்து, அதைச் சந்தைக்கு கொண்டு சென்று விற்று, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு தன் குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்தான்.

அவன் தினமும் கீரைகளைப் பறிக்க, வயற்காட்டுக்குப் போகும் வழியில், ஒரு குடிலில் முனிவர் ஒருவர் ஒரு சிறிய பெருமாள் விக்கிரகத்தை வைத்து, அதைத் துளசி இலைகளால் பூஜைகள் செய்வதை பார்த்துக்கொண்டே போவான். அப்போதெல்லாம் முனிவரின் மீது ஒரு பக்தி கலந்த மரியாதை ஏற்படும்.

ஒருநாள் மாணிக்கம் கீரைகளைப் பறிக்கும் போது, அதன் அருகே சில துளசிச் செடிகள் வளர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது அவனுக்கு அந்த முனிவர் ஞாபகம்தான் வந்தது. உடனே ‘நாமும் அந்த முனிவரைப் போன்று ஒரு மனிதப் பிறவிதானே! இது வரை என்றாவது பெருமாளுக்கு ஒரு சிறிய பூஜை செய்திருக்கிறோமா? சரி, நம்மால்தான் பெருமாள் விக்கிரகத்துக்கு பூஜை செய்ய முடியவில்லை. இன்று முதல் இந்தத் துளசியையாவது பறித்துச் சென்று அந்த முனிவர் செய்யும் பூஜைக்கு அர்ச்சனை செய்யக் கொடுப்போமே…’ என்று எண்ணினான்.

அங்கு வளர்ந்து இருந்த துளசி இலைகளை ஏராளமாகப் பறித்தான். துளசி வாசனை கும்மென்று அவனது நாசியைத் துளைத்தது. பறித்த துளசிகளை தனியாகப் பிரித்து கீரைக் கட்டோடு ஒன்றாகக் கூடையில் ஏற்றினான்.

கூடையைத் தலை மீது எடுத்து வைத்துக்கொண்டு முனிவரின் குடிலை நோக்கி விரைந்து நடந்தான். அனால் அவன் பறித்துப்போட்ட கீரைக் கட்டில் ஒரு சிறிய கருநாகமும் இருந்ததை அவன் கவனிக்கத் தவறி விட்டான். முனிவரின் குடில் முன் வந்து பவ்யமாக நின்றான் மாணிக்கம்.

ஏழை விவசாயி மாணிக்கம் அன்று அதிசயமாக தலையில் கூடையுடன் தன் குடிலின் முன்னே வந்து நின்றதைப் பார்த்த முனிவர், அதே சமயம் அவன் பின்னே அரூபமாய் யாரோ ஒருவர் நிற்பதைக் கண்டார். உடனே முனிவர் தன் கண்களை மூடி, ஞான திருஷ்டியில் அவர் யார் என்று அறிய முயன்றார். சில நொடிகளில் முனிவருக்கு புரிந்து போயிற்று.

மாணிக்கத்தின் பின்னே நிழல் போல் நிற்பது நாகத்தின் அம்சத்தில் கிரகங்களில் ஒருவரான ராகு பகவான் என்பதைப் புரிந்து கொண்டார். உடனே முனிவர் அவசரமாக மாணிக்கத்தை நோக்கி, “அப்பா, உன் தலையில் உள்ள கூடையை அப்படியே வைத்திரு, அதைக் கீழே இறக்கிவிடாதே. இங்கேயே அசையாது நில். இதோ சற்று நேரத்தில் வந்து விடுகிறேன்…” என்று பதட்டத்துடன் கூறி விட்டு, குடிலின் பின் பக்கம் சென்று, ஒரு மந்திரத்தை மட்டும் விடாது உச்சரித்து மாணிக்கத்தின் பின்னே நின்றிருந்த ராகு பகவானை அழைத்தார்.

ராகு பகவானும் மிகுந்த ஆச்சர்யத்துடன் முனிவர் முன்னே வந்து நின்று வணங்கி, “சுவாமி, என்னைத் தாங்கள் அழைத்ததன் காரணம் என்னவோ?” என்று கேட்டார். முனிவர் பதிலுக்கு ராகுவை வணங்கி, “ராகு பகவானே எதற்காக தாங்கள் இந்த ஏழை விவசாயியைப் பின் தொடர்ந்து வருகிறீர்கள்? என்ன காரணம் என்று நான் அறிந்து கொள்ளலாமா?” என்று கேட்டார்.

அதற்கு ராகு பகவான் பதில் சொன்னார்: “சுவாமி, இந்த ஏழையை இன்று நான் ஒரு சிறு கருநாகமாக உருவெடுத்து தீண்ட வேண்டும் என்பது, இவனுக்கு எழுதப்பட்ட கிரக விதி… ஆனால் இவன் என்றும் இல்லாத அதிசயமாக இன்று பெருமாளுக்குப் பிரியமான துளசி இலைகளைப் பறித்து எடுத்துக்கொண்டு தலையில் சுமந்துகொண்டு வருவதால், இவனை என்னால் தீண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். தலையில் இப்போது சுமந்து கொண்டிருக்கும் துளசியை உங்களிடம் கொடுத்த அடுத்த வினாடி, அவனைத் தீண்டிவிட்டு விஷத்தைக் கக்கியதும் என் கடமையை முடித்துக்கொண்டு நான் கிளம்பிச் சென்று விடுவேன்…” என்றார்.

இதைக் கேட்டதும் முனிவருக்கு ஏழை விவசாயி மாணிக்கத்தின் மேல் மிகுந்த பரிதாபம் ஏற்பட்டது. ‘எவ்வளவு ஆசை ஆசையாக என்னுடைய பெருமாள் விக்கிரக பூஜைக்காக துளசியைப் பறித்துக்கொண்டு வந்துள்ளான்! அவனை நான் கண்டிப்பாக காப்பாற்றியே ஆக வேண்டும்’ என்று உறுதி பூண்டார்.

“ராகு பகவானே, அவன் ரொம்ப நல்லவன். அவனைத் தாங்கள் தீண்டாமல் இருக்க ஏதேனும் பரிகாரம் உள்ளதா?” என்றார்.

அதற்கு ராகு பகவான், “சுவாமி, தாங்கள் இத்தனைக் காலம் தேவரீர் பகவத் ஆராதனம் செய்த புண்ணியத்தின் பலனை அந்த ஏழை விவசாயிக்குத் தாரை வார்த்துக் கொடுத்தால், அவனது சர்ப்ப தோஷம் முற்றிலும் நீங்கப் பெறுவான். அதனால் அவனை நான் தீண்டாமல் திரும்பிச் சென்று விடுவேன்…” என்றார்.

முனிவரும் உடனே அகமகிழ்ந்து, “அவ்வளவுதானே… இதோ இப்போதே நான் பெருமாளுக்கு ஆராதனை செய்ததற்காகப் பலன் என்று ஏதேனும் இருந்தால், அந்தப் பலன் முழுவதையும் அந்த ஏழை விவசாயி மாணிக்கத்திற்குத் தாரை வார்த்துத் தருகிறேன்…” என்று கூறியதோடு மட்டும் நில்லாமல், உடனே அதைச் செயலிலும் காட்ட முற்பட்டார்.

உடனே ஒரு மந்திரத்தை உச்சரித்து மாணிக்கத்திற்குத் தன் ஆராதனை பலனை சந்தோஷமாகத் தாரை வார்த்துக் கொடுத்தார்.

ராகு பகவானும் முனிவரின் தாராள தர்ம குணத்தை எண்ணி வியந்து மகிழ்ந்தார். உடனே அங்கிருந்து மறைந்து போனார். அதே நேரம் கீரைக் கட்டில் இருந்த கருநாகமும் மறைந்து போனது.

முனிவர் வாசலில் காத்திருந்த மாணிக்கத்திடம் விரைந்து வந்தார். தலையில் கூடையுடன் நின்றிருந்த அவனைப் பார்த்து, “அப்பா மாணிக்கம் இனிமேல் நீதான் தினமும் என்னுடைய பூஜைக்கு துளசி பறித்து எடுத்து வர வேண்டும்… தவறாமல் செய்வாயா?” என்றார்.

இதைக் கேட்ட ஏழை விவசாயி மாணிக்கத்திற்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி…

“சரி ஸ்வாமி… கண்டிப்பாக தினமும் தவறாது செய்வேன்…”

‘நம்மால் பெருமாளுக்கு பூஜை செய்ய முடியாவிட்டாலும், முனிவர் மூலம் இப்படி ஒரு கொடுப்பினை எனக்குக் கிடைக்கிறதே’ என்று நினைத்து மகிழ்ந்து கொண்டே தன் குடிசையை நோக்கிச் சென்றான்.

வைகுண்ட வாசன் நம்மிடம் எதிர் பார்ப்பதெல்லாம் நம்முடைய ஆழ்ந்த பக்தியையே… பக்தியோடு சிறு துளசி இலையைக் கொடுத்தாலும் அதைப் பரவசமாய் அவன் ஏற்றுக் கொள்வான்.

எனவே பகவத் ஆராதனம் தினமும் செய்யுங்கள்; மிகுந்த நன்மை அடையுங்கள்.

ஸ்ரீமன் நாராயண நமஹ!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *