சிசுபால வதம் (மஹாபாரதம்)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: June 27, 2022
பார்வையிட்டோர்: 22,829 
 

பாகம் ஒன்று | பாகம் இரண்டு

வசுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்

பகவான் ஸ்ரீவிஷ்ணு உலகத்தைக் காத்து ரக்ஷிப்பதற்காக கிருஷ்ணாவதாரம் எடுத்து அருள் பாலித்தார். வசுதேவர், தேவகிக்கு புத்திரராக அவதரித்தார். பெருமை மிகு துவாரகாபுரியை ஆட்சி புரிந்து அருள் பாலித்தார். அப்போது ஒருசமயம் ஸ்ரீ கிருஷ்ணரைத் தரிசிப்பதற்காக மூவுலக சஞ்சாரி நாரத மகரிஷி துவாரகாபுரிக்கு வந்து அருள் செய்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் சிறப்புமிகு நாரத மகரிஷியை எதிர் கொண்டு அழைத்தார். நாரதமுனிவரை மனமகிழ்வுடன் வரவேற்று, நமஸ்கரித்து, அமரச் செய்தார். திரிலோக சஞ்சாரியாகிய முனிவரிடம் உலகம் முழுவதுமான யோக ஷேமங்களைப் பற்றி விசாரித்தார். அதற்கு நாரதமுனிவர் இவ்வாறு கூறலானார்.

“ஸ்ரீகிருஷ்ணரே! நீங்கள் ஸர்வ வல்லமை படைத்தவர் ஆவீர்கள்.மூவுலகமும், முக்காலமும் பற்றி ஸர்வமும் அறிந்தவர். இருந்தாலும் இந்திர லோகத் தலைவனாகிய தேவேந்திரனுடைய எண்ணங்களையும் விண்ணப்பங்களையும் உங்களிடம் தெரியப்படுத்தவே இப்போது நான் இங்கு வந்திருக்கிறேன். தயவு செய்து கேட்பீர்களாக.” என்று தொடர்ந்து கூறலானார்.

முன் ஒரு காலத்தில், ஹிரண்யகசிபு என்கிற அரக்கன் இப்பூவுலகைத் துன்புறுத்தி வந்தான். உலகம் முழுவதும் உள்ள மக்கள் அவன் மீது மிகுந்த பயம் உடையவர்களாக இருந்தார்கள். அதனால் அந்த காலத்தில் இப்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணராகிய நீங்கள் நரசிம்ம அவதாரத்தை எடுத்தீர்கள். தூணைப் பிளந்து வெளிவந்து, நடையில் அமர்ந்து அவனை உங்கள் மடிமீது கிடத்தி, கூர் நகங்களை யே ஆயுதங்களாக்கி வயிற்றினைக் கிழித்து, குடலை உருவி கொன்றீர்கள்.

அப்போது மரணித்த ஹிரண்யகசிபு அவனது அடுத்தப் பிறவியில் இலங்கை அரசன் பத்து தலை ராவணனாகப் பிறப்பு எடுத்தான்.அந்தப் பிறவியிலிலும் அரக்கனாகிய ராவணன் ஜனங்களையும், தவமுனிவர் ரிஷிபுங்கவர்களையும் மிகவும் துன்புறுத்தலானான். ஆகையினால் பகவானாகிய தாங்கள் தசரத சக்கரவர்த்தியின் திருமகன் ஸ்ரீராமனாக மீண்டும் அவதரித்தீர்கள்.

ஸ்ரீராமபிரானின் மனைவியாகிய சீதாபிராட்டியை அரக்கன் ராவணன் அபஹரித்துச் சென்றான். கோதண்ட ராமனாகிய நீங்கள் இலங்காதிபதி ராவணனை யுத்தம் செய்து வதம் புரிந்து அருள் செய்தீர்கள்.

ராவணனாய் உங்களால் வதம் செய்யப்பட்ட அரக்கன் இப்போது இப்பூவுலகில் சிசுபாலன் என்ற பெயரில் ஜனனம் எடுத்திருக்கிறான். அவன் இவ்வுலகுக்கு செய்யும் துன்பங்கள் யாராலும் பொறுக்க இயலாததாக இருக்கின்றது. மக்கள் அனைவரும் அவன் இழைக்கும் தீமைகளால் மிகுந்த துக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்.

எப்போதெல்லாம் துன்மார்க்க ராக்ஷசர்கள் தோன்றி உலகத்தினருக்கு அதிக துன்பம் விளைவிக்கிறார்களோ அப்போதெல்லாம் பெருந்தெய்வமாகிய நீங்கள் இப்பூவுலகில் அவதரித்து ராக்ஷசர்களை சம் ஹாரம் செய்து பூவுலக மக்களை காத்து ரக்ஷிக்கிறீர்கள்.

அதுபோல இப்போது கிருஷ்ணாவதாரத்தில் துர்மதியுடைய சிசுபாலனை அழித்து உலக மக்களைக் காத்தருள வேண்டும். “இதுவே தேவேந்திரன் உங்களிடம் வேண்டிச் சொல்லச் சொன்ன விஷயம் ஆகும். என்று நாரத மகரிஷி ஸ்ரீகிருஷ்ணரிடம் விவரித்தார். ஸ்ரீ கிருஷ்ண பகவானும் நாரத முனிவரின் உரையைக் கேட்டு அப்படியே ஆகட்டும் என அங்கீகரித்து அருள் பாலித்தார்.

ஸ்ரீகிருஷ்ணரின் அனுகிரகம் கிடைத்த ஆனந்தத்துடன் அவரிடமிருந்து விடை பெற்று நாரதர் துவாரகாபுரியில் இருந்து செல்லலானார்.

இப்போது சிசுபாலனைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.

சிசுபாலன் ஸ்ரீகிருஷ்ணரின் அத்தை மகன். வசுதேவரின் சகோதரி சுஸ்ரவதா என்கிற சாத்துவதிக்கும் தமகோஷனுக்கும் மகனாகப் பிறந்தவன். வசுதேவரின் இளைய சகோதரர் தேவபாலனின் புதல்வர் உத்தவர் ஆவார் ஆதலால் ஸ்ரீகிருஷ்ணர், உத்தவர் இருவரும் சிசுபாலனுக்கு தாய் மாமா ஆவர். சிசுபாலன் பிறக்கும் போது நான்கு கரங்களுடனும் முன்று கண்களுடனும் பிறக்கிறான் அதனால் அவன் தாய் துயருருகிறாள். அப்போது அசரீரி கேட்கிறது. யார் இந்தக் குழந்தையை தூக்கும் பொழுது

குழந்தையின் தேவைக்கு அதிகமாக இருக்கும் இரண்டு கரங்களும், மூன்றாவது கண்ணும் மறைகின்றதோ அவர்களாலேயே சிசுபாலனின் மரணம் நிகழும். மற்றபடி குழந்தை பலவானாக விளங்குவான் என்று அசரீரி கூறுகின்றது. அதனால் சிசுபாலனின் தாய் குழந்தையை ஒவ்வொருவரிடமாக கொடுக்கிறாள். கிருஷ்ணரிடம் குழந்தையைக் கொடுக்கும் போது இரண்டு கரங்களும் மூன்றாவது கண்ணும் மறைகின்றன. “உன்னால் தான் என் மகனின் மரணமா எனறு கலங்கியவள் ஸ்ரீ கிருஷ்ணனிடம் தயவு செய்து அவன் செய்யும் தவறுகளைப் பொறுத்துக் கொள் என்று இரைஞ்சுகிறாள். அதற்கு கிருஷ்ணர் சிசுபாலன் செய்யும் நூறு தவறுகள் வரை பொறுத்துக் கொள்வேன். அதன் பிறகு தான் தண்டிப்பேன் என்று சத்தியம் செய்கிறார்.

சிசுபாலன் ஸ்ரீ கிருஷ்ணருடைய பிறவிப் பகைவனாக இருக்கிறான்.

சேதி நாட்டு அரசனாக சிசுபாலன் இருக்கிறான்.சேதிநாட்டை ஆண்டவர்களில் குறிப்பிடத் தக்கவன். மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்து புந்தேல் கண்ட் பகுதியே சேதி நாடு ஆகும். சேதி நாட்டு தலைநகரம் சுக்திமதி ஆகும். பதினாறு மகாஜனபத நாடுகளில் சேதி நாடும் ஒன்று. கம்ஸனுக்கு மருமகன் ஆவான். ஜராஸந்தனுக்கு, துரியோதனனுக்கு எல்லம் நண்பன். நல்ல கூட்டாளியும் ஆவான்.ஸ்ரீ கிருஷ்ணருக்கு இயற்கை பகைவனாகவே எப்போதும் திகழ்கிறான்.மிகுந்த பலவானாதலால் இவனை எதிர்க்க தயக்கம் மற்றவர்களுக்கு.கிருஷ்ணராலேயே சிசுபாலன் வதம் நடைபெற வேண்டும்.

இத்துடன் சிசுபால வதம் முதல் பகுதி நிறைவடைகிறது.

இரண்டாம் பகுதி விரைவில் தொடரும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *