கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 13, 2025
பார்வையிட்டோர்: 5,460 
 
 

அத்தியாயம் 2.1-2.3 | அத்தியாயம் 2.4-2.6 | அத்தியாயம் 3.1-3.3

2.4 மலர்

மறுநாள் சனிக்கிழமையாதலால் லீலா வீட்டிலேதான் இருந்தாள். எனக்கு வெளியில் எட்டிப் பார்க்கக் கூட அவகாசம் இல்லாதபடி சமையலறை அலுவல்கள் அத்தனையும் வெகு சுவாதீனமாக அதற்குள் என்னைப் பற்றிக் கொண்டு விட்டன. முன்னாள், அவர் வீட்டிலேயே தங்கவில்லை. சிகிச்சை இல்லமும், குழந்தையும் அவரைப் பிடித்துப் பசை போட்டு ஒட்டிக்கொண்டு விட்டன. கர்ப்பிணியாக இருந்த பட்டுவை டாக்டர், ‘இரவு கண் விழிப்பது கூடாது’ என்று கூறி விட்டதனால் அவள் முழுப் பொறுப்பையும் அவர் தலையிலேயே கட்டிவிட்டு வீடு வந்து விட்டாள். “ஏற்கனவே உன் உடம்பு பூஞ்சை. இராக் கண் பகல் கண் முழித்தால் உனக்கு ஆகாது. ராமுதான் இருக்கிறான். குழந்தைக்கு உடம்பு சரியாகும் வரை பார்த்துக் கொள்கிறான். குழந்தையும் அவனிடமே தானே ஒட்டிக் கொண்டு இருக்கிறாள்?” என்று என் மாமியார் வேறு செல்ல மருமகளுக்கு இதமாகப் பரிவு காட்டினாள்.

‘குழந்தையின் அருகில் இருக்கத் தாய்க்குப் பதில் வீட்டிலே வேறு பெண் மக்களே அஸ்தமித்து விட்டார்களா? அவர் நர்ஸ் வேலை செய்ய வேண்டுமா? ஏதோ வீட்டில் அன்பு காட்டுபவரிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகள் உண்டுதான். அதற்காக அவரே அதைத் தொட்டிலிட்டுத் தாலாட்டும் நிலைமையில் முழுக்க முழுக்க ஐக்கியமாகி விட வேண்டுமா?’ முதல் நாள் அமுங்கிக் கிடந்த என் குரோத உணர்ச்சி கொதிக்கலாயிற்று.

முழுசாக மூன்று நாட்கள் ஆவதற்குள், பாம்புக்கு விஷம் இல்லாமல் போகாது என்றபடி தன் குணத்தை இப்போது காண்பித்து விட்டாள். எங்கோ வெளியே அழைத்துப் போனாளாக்கும் என்றில்லாமல் லீலாவை என்னைச் சொல்லாதவள் போலத் தேள் கொட்டுவது போல் சுள்ளென்று கடிந்து கொண்டாளே! கொட்டினது அவளைத் தான் என்றாலும் நெறி எனக்குத் தான் ஏறியது. ஏண்டி அழைத்துப் போனாய் லீலா என்றாலும் நீ ஏண்டி போனாய் சுசீலா என்று தான் அர்த்தம்.

என்னைப் பார்ப்பதற்கு என்று மயிலாப்பூரில் தனியாக இருக்கும் என் டாக்டர் மைத்துனரும், அவர் மனைவி விஜயமும் வந்திருந்தார்களாம். எனக்காகக் காத்துப் பார்த்து விட்டு இன்னொரு நாள் வருவதாகக் கூறிப் போய் விட்டார்களாம். இடித்துக் காட்டுவதைப் போல இதை என் காதுகள் கேட்கவே மும்முறை சொன்னாள். நான் லீலாவுடன் வெளியே சென்றிருக்கும் செய்தியை அவர் வீடு வந்தவுடனேயே அறிவித்திருக்க மாட்டாளா?

இரவு சமையலறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தேன் நான். சிகிச்சை இல்லம் செல்லுமுன் ‘பிளாஸ்க்’ அலம்ப வந்த என் கணவர், “லீலாவுடன் எங்கெல்லாம் போயிருந்தாய்?” என்று கேட்டார்.

“எங்கும் இல்லை, ஒரு சினிமாவுக்குப் போயிருந்தோம்” என்று மெதுவான குரலில் பதில் அளித்தேன்.

“தேவலையே! எந்தப் படத்திற்குப் போனீர்கள்? அதற்குள் நீயும் லீலாவும் இத்தனை சிநேகம் பூண்டு விட்டீர்களே!” என்று மனத்தில் ஏதும் மாசின்றிச் சந்தோஷமாக எங்கள் நட்பை உற்சாகப்படுத்தும் பாவனையில் கூறினார் அவர்.

தாம் இன்றி, தமக்குத் தெரிவிக்காமல் வெளியே சென்றதற்காக அவர் என்னைக் கண்டிக்கட்டும் என்று பட்டு எண்ணியிருந்தாளோ என்னவோ? கோபத்தின் ரேகை கூட அவரிடம் காணவில்லை. மதனியிடம் அவர் அளவு கடந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கலாம். ஆனால் லீலா கூறியது போல மரியாதை கொடுத்திருந்தான். மரியாதை வாங்க வேண்டும் என்று என் அவளுக்குத் தெரியவில்லை. அவருடைய அத்தனை மதிப்பையும் குலைத்துக் கொள்ளும் வகையில் அவள் நடந்து கொண்டு அவருக்குக் கோபமூட்டி விட்டுப் பிறகு என் மீதே குற்றம் சாட்டுவாளோ என்னவோ? ஊர்வலத்தின் போது நான் அவளைப் பற்றி அவ்வளவு உயர்வாக எண்ணிப் பெருமைப்பட்டேன்! அந்த அறியாமையை நினைத்துக் கொண்டால் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. மனத்தில் எது நல்லது என்று படுகிறதோ அதற்குத் தோற்றப் பொலிவும் இருந்தால் அதற்கு அதிக மதிப்பு உண்டாகிவிடும். சர்க்கரைப் பண்டத்துக்கு வலம் ஊட்டுவது போல ஆகிவிடும். அப்படி அவள் அகன்ற குங்குமப் பொட்டும், கம்பீரமான முகமும், நகை தவழும் இதழ்களும் நான் அவள் அன்பின் அவதாரம் என்று எண்ணியதற்கு இன்னும் அநுசரணையாக இருந்தனவே! ஒரு தரம் சிறு வயசில் எனக்கு மலேரியாக் காய்ச்சல் வந்திருந்தது. அப்போது வைத்தியரிடமிருந்து அப்பா இரண்டு மாத்திரைகள் வாங்கி வந்து எனக்குக் கொடுத்தார். வெண்மையாக, உருண்டையாக, பார்ப்பதற்குச் சர்க்கரை மிட்டாயைப் போல் இருந்த அம்மாத்திரையை நான் முரணேதும் செய்யாமல் வாயில் போட்டுக் கொண்டேன். நாவில் பட்டதும் அசல் மிட்டாயைப் போலத் தித்தித்தது. அந்த உற்சாகத்தில் நான் அதைக் கடைவாய்ப் பற்களால் கடித்ததுதான் தாமதம், விஷமாகக் கசந்தது! தொண்டை மூக்கெல்லாங் கூட நெடியேறியது!

பட்டு என்னைக் கண்டு செய்யும் புன்னகையும் இப்படித்தான் போலும்! உண்மை அன்பு செயல்களினாலன்றோ வெளிப்பட வேண்டும்? உள்ளத்தில் கசப்பை வைத்துக் கொண்டு மேலுக்குக் காட்டும் இனிப்பு உண்மையானதல்ல என்று வெளிப்பட எத்தனை நேரமாகும்?

ஒரு கொடியில் காய்த்திருக்கும் லீலாவுக்கும் பட்டுவுக்கும் எத்தனை வித்தியாசம்! ஒருத்தி இரண்டு நாட்களுக்குள் எனக்குக் கசப்பை உண்டாக்கும்படி நடந்து கொள்வானேன்? இன்னொருத்தி இரண்டு நாட்களுக்குள் என் இருதயத்தையே கவர்ந்து விடுவானேன்?

வைரமும் கரியும் ஒரே மூலப் பொருளிலிருந்து உண்டாகவில்லையா? சேற்றில் செந்தாமரையும் முளைக்கிறது! பாசியுந்தான் படருகிறது!

‘மூர்த்தி வேறு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். அவன் இன்னும் என்ன பூகம்பத்தைக் கிளப்பி விடுவானோ? ஒரு விஷயம், ஒரு விஷயம் என்று புடவைச் சங்கதியை அப்படி மழுப்பினானே! இங்கே தனியாகக் கண்டு என்ன சொல்லப் போகிறானோ?’ என்ற கவலை வேறு என் மனச் சஞ்சலத்திற்குச் சூடேற்றியது.

பகலில் கல்லூரியில் அரிசி அரைத்துக் கொண்டிருந்தேன். லீலா வந்து, “மூர்த்தி வந்திருக்கிறார், சுசீ” என்று எனக்கு செய்தி தெரிவித்தாள்.

கலவரத்துடன் நான், “எங்கே? கீழேயா மாடியிலா?” என்று கேட்டேன்.

“கீழேதான் நிற்கிறார். அவர் வருவதைப் பார்த்துவிட்டு உன்னிடம் கூறத்தான் வந்தேன். நீ போ. நான் அரைக்கிறேன்” என்று லீலா என்னை எழுப்பினாள்.

அவள் என் ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டாள். கையை அலம்பித் துடைத்துக் கொண்டு புடவையைச் சரி செய்து கொண்டு உமிழ்நீரை விழுங்கி மனத்தைத் திடம் செய்து கொண்டவளாக நான் சமையலறையைத் தாண்டி வந்த போது, அவன் பக்கத்தில் உள்ள சாப்பிடும் அறையிலேயே வந்து நின்று புன்முறுவல் பூத்தான். அவன் கையிலிருந்த அந்தப் புடவைப் பொட்டலத்தைக் கண்டதும் எனக்குத் ‘திக்’கென்றது. அத்தை திருப்பி அனுப்பி விட்டாளா என்ன? நன்றாகத்தான் இருக்கிறது. அந்தப் புடவைகள் அவனுடன் போவதும் வருவதும்!

“மாமி இவைகளை உனக்காகவே வாங்கினாளாம். நீயே அவளிடம் திருப்பிக் கொண்டு கொடுத்து விடு என்று சொல்லி விட்டாள்” என்றான் அவன்.

என் அசட்டுத்தனத்தையும் அத்தை யகத்து அவமரியாதையையும் அவன் அறிந்து கொண்டிருப்பானா, அல்லது அவனுக்கு அறிவிக்காமலே அத்தை உள்ளூற விஷயத்தைக் கிரகித்துக் கொண்டு நாசுக்காகத் திருப்பியிருப்பாளோ என்ற நடுக்கத்துடன் நான் புடவைகளைப் பெற்றுக் கொண்டேன்.

பின்னாலேயே வந்து நின்ற என் மாமியார், “என்ன அது? யார் இந்தப் பிள்ளை?” என்றாள். அவள் படபடத்த கேள்வியிலே இரும்பின் கடினமும் வேம்பின் கைப்பும் எனக்குப் புலனாயின.

“அத்தை இரண்டு புடவைகள் வாங்கி அனுப்பியிருக்கிறார். அத்திம்பேருக்குத் தமக்கை பிள்ளை இவர்” என்றேன் நான் சுருக்கமாக.

உடனேயே அவள் அவனிடம் மலர் முகத்துடன் குலம், கோத்திரம் முதற்கொண்டு விசாரிக்க ஆரம்பித்து விட்டாள். தன்னைப் பற்றிய விஷயங்களை மூர்த்தி கூறும் போது, தன்னுடைய கண்கள் நாலு புறமும் சுற்றி அலைந்ததை நான் கவனிக்காமல் இல்லை. அவனை அங்கேயே நிற்க வைத்துப் பேசியது எனக்கு ஏதோ போல் இருந்தது என்றாலும் பெரியவளான மாமியார் பேசாமல் இருக்கும் போது நான் உட்காருங்கள் என்று உபசரிக்கலாமா? ஒரு தம்ளர் காபி கொண்டு கொடுக்கலாமா?

சங்கடத்துடன் கையைப் பிசைந்த வண்ணம் சிறிது நேரம் நின்றேன். அந்த வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்த சமயம் எனக்கு எத்தனையோ சுதந்திரம் இருக்கும் என்று மனப்பால் குடித்திருந்தேன். இப்போது என்னுடைய சுதந்திரத்தைப் பரிசோதிக்கக் கூடிய சந்தர்ப்பம் வந்திருப்பதாகத்தான் எனக்குப்பட்டது. நிஜமாக எனக்கு அவ்வளவு சலுகை இருப்பதாக நான் நினைக்கும்படியான சூழ்நிலை இருக்கவில்லை.

எனினும் தைரியத்துடன் உள்ளே வந்து அவனுக்குக் காபி தயாரித்தேன். அரைக்கும் வேலையை முடித்து விட்டு லீலா கையை அலம்பிக் கொண்டிருந்தாள்.

“அவருடைய கண்கள் உங்களைத் தேடுகின்றன” என்று அவள் காதோடு கூறிவிட்டு நான் செல்லுவதற்குள், உட்காராமலேயே பேசிவிட்டு மூர்த்தி, “நான் வரட்டுமா சுசீலா?” என்று அங்கு இருந்தபடியே கூவினான்.

“இல்லை இருங்கள். இதோ காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம்” என்று நான் தம்ளரும் கையுமாக விரைந்தேன். அவன் கவனம் என் மாமியாரின் கையிலே லயித்திருந்தது. நான் அப்படியே கீழே வைத்துப் போயிருந்த புடவைப் பொட்டலம் அவள் கையில் இருந்தது. மேலே இருந்த காகிதத்தை நீக்கி அவள் புடவைகளை எடுத்தாள். நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதிலிருந்து ஒரு கடித உறை கீழே விழுந்தது.

“கடிதாசு ஏதோ எழுதி வைத்திருக்கிறாள் போலிருக்கிறதே? அதை எடு, சுசீலா” என்று என் மாமியார் கூறு முன் நான் குனிந்து அதை எடுத்தேன்.

கொட்டை கொட்டையாக ‘லீலா’ என்று விலாசமிடப்பட்டிருந்தது அதில்! விஷமச் சிரிப்புடன் நான் அதைத் திருப்பி வைத்துக் கொண்டு மூர்த்தியைப் பார்த்தேன். நீரில் முழுகி எழுந்தவனைப் போல அவன் முகபாவம். ‘நல்லவேளை! தப்பினேனே!’ என்று சொல்வது போல் தென்பட்டது. கவனித்திருந்தால் கூட என் மாமியாருக்கு ஆங்கிலம் புரிந்திருக்காதுதான். என்றாலும் ஆபத்து ஆபத்துதானே?

“நான் வரட்டுமா மாமி” என்று விடைபெற்றுக் கொண்ட அவனைப் பின் தொடர்ந்து நானும் சென்றேன். அறையின் வாயிற்படியிலே ‘பிளாஸ்’கும் கையுமாகப் பட்டு, ‘சிகிச்சை இல்லத்’திலிருந்து வருபவள் எதிர்ப்பட்டாள். மூர்த்தியைக் கண்டு “யார் இவன்?” என்ற கேள்வி அவள் முகத்தைச் சிணுக்கியது. நானாக அவன் யாரென்பதையும், வந்த காரியத்தையும் அவளுக்கு அறிவித்தேன்.

வாசல் வரை அவனைத் தொடர்ந்து சென்ற என்னிடம் அவன் மெதுவான குரலில், “லீலாவிடம் அதைக் கொடுத்து விடுகிறாயா?” என்றான் கெஞ்சும் பாவனையில்.

“இல்லை கொடுக்க மாட்டேன்” என்று சிரித்த வண்ணம் மொழிந்துவிட்டு, குதூகலம் பொங்கக் குதித்துக் கொண்டே இரண்டு படியை ஒரு படியாகத் தாண்டி மச்சுப் படியில் ஏறினேன். ஒன்றுபட்ட இரண்டு உள்ளங்களின் தவிப்பு எனக்கு அவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்தது. பின்கட்டு வழியாகவே அவள் மாடிக்குச் சென்றுவிட்டாள் என்று எனக்குத் தெரியும். அறையின் வாசற்புறம் முதுகைக் காட்டிக் கொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அவள்.

கடிதத்தைப் பின்னால் மறைத்துக் கொண்டு நான், “அவர் உங்களைத் தேடு தேடு என்று தேடினார். நீங்கள் இங்கு வந்து கோபித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறீர்களே! பாவம்! அவரை வரச்சொல்லிவிட்டு இப்படி ஒரு வார்த்தைக் கூட அவரிடம் பேசாமல் இங்கு வந்து உர்ரென்று நீங்கள் உட்கார்ந்திருப்பது எனக்கு நியாயமாகவே படவில்லை. நண்பர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்களாக்கும்! அதுவும் சாமானியமான நண்பர்கள் கூட இல்லை…!” என்று இழுத்தேன்.

“என்ன உளறுகிறாய், சுசீலா? சாமானிய நண்பர்கள் இல்லாமல் பின் என்னவாம்! சங்கக் கூடங்களில் சந்திக்க நேரிட்டிருக்கிறதே ஒழிய சேர்ந்தாற் போல் அவருடன் பத்து வார்த்தைகள் பேசியதே நேற்றுத்தான்” என்று மூடி மறைத்து லீலா என்னிடம் மெழுகினாள்.

“ஓகோ! ஆனால் வாய்ப் பேச்சை விடக் கண்களின் உறவுக்கு அதிகச் சக்தி உண்டு என்று தெரியாதா எனக்கு? சொந்த விஷயம் என்று அவர் பேச வந்திருக்கிறாரே. இங்காவது வரச் சொல்லி இருக்கக் கூடாதா? அவர் ஏமாற்றத்தை எனக்குப் பார்க்கவே சகிக்கவில்லை!”

“நீ மிகவும் அதிகப்பிரசங்கி, சுசீலா! கண்கள் பேசுவது, காதுகள் உறவாடுவது எல்லாம் உனக்குத்தான் தெரியும். சொந்த விஷயம் ஒன்றும் இருக்காது. அடுத்த கூட்டத்தில் யார் எதைப் பற்றித் தலை வேதனைப் பிரசங்கம் செய்யப் போகிறார்கள் என்று சொல்வார். மூடி மூடிப் பேசுவதே அவர் வழக்கம். உன் அத்தை கொடுத்து அனுப்பி இருக்கும் புடவைகளையும், ஊரில் எல்லோரும் சௌக்கியம் என்று நெல்லுக்குள் அரிசி சமாசாரத்தையும் வைத்துக் கொண்டு உன்னிடம் அப்படி கூறினாரே” என்று முகத்தை நான் பார்க்க முடியாதபடி லீலா திருப்பிக் கொண்டாள்.

“அது போன்ற சங்கதிகளுக்குக் கடிதங்கூட எழுதுவாராக்கும்?” என்றேன். சூடுண்ட உடம்பில் உஷ்ணமானியை வைத்த உடனே பாதரசம் விறுவிறு என்று ஏறுவதில்லையா? என் கேள்வி அவள் அமுக்கி வைத்திருந்த ஆவலையும் துடிப்பையும், அவளுடைய பாசாங்கை மீறிக் கொண்டு எழுப்பி விட்டது. “ஏன் சுசீலா, ஏதாவது கடிதம் கொடுத்தாரா?” என்று பரபரப்போடு கேட்ட அவள் என் கையில் இருந்த கடிதத்தைப் பார்த்து விட்டாள்.

“அப்படி வாருங்கள் வழிக்கு!” என்று நகைத்த நான், “நல்ல வேளையாகத் தப்பினீர்கள்! அத்தை அனுப்பிய புடவைப் பொட்டலத்தில் அதைப் பத்திரப்படுத்தி இருக்கிறார் என்று நான் கண்டேனா? அலட்சியமாகக் கீழே வைத்து விட்டு வந்தேன். அம்மா எடுத்துப் பார்த்து விட்டார். நல்லவேளை! விலாசம் புரியவில்லை. அத்தை எனக்குக் கடிதம் வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். மூர்த்தியின் முகத்தை நீங்கள் பார்க்கவில்லையே அப்போது!” என்று அவளிடம் கடிதத்தைக் கொடுத்தேன்.

“சுசீலா!” என்று கீழிருந்து வந்த குரல் என்னை உலுக்கியது. கீழே ஓடி வந்த என்னை மாமியார், “ஓடி ஓடிப் பச்சைக் குழந்தையைப் போல நாலும் கிடக்க நடுவில் போய் விடுகிறாயே? இந்தா! புடவையை வாங்கிக் கொண்டு வைத்துவிட்டு, அடுப்பில் தோசைக் கல்லைப் போடு” என்று கடிந்து கொண்டாள்.

இரவு, வேலைக்காரி கவனியாமல் போய்விட்டிருந்த எங்கள் அறையைப் பெருக்கிக் கொண்டிருந்தேன் நான். ‘சிகிச்சை இல்ல’த்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த என் கணவர் உள்ளே வந்தார். அன்று மாலை காரியாலயத்திலிருந்து வந்த பின் அவருக்கு என்னுடன் எதுவுமே பேசச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. “உன் அத்தை உனக்குப் புடவைகளை வாங்கி அனுப்பி இருக்கிறாளாமே, சுசீ? என்னிடம் நீ காட்டவே இல்லையே?” என்று கேட்டார்.

நான் தலையைத் தூக்காமலேயே சுருதி கலைந்த வீணையைப் போல் “ஆமாம்” என்றேன். அவர் மட்டும் சக்தியுடையவராக இருந்தால் அந்த ஓர் ஆமாமிலேயே என் ஆற்றாமை அவ்வளவையும் தெரிந்து கொண்டிருக்கலாம்.

“அப்புறம், மூர்த்தி உனக்கு உறவினனாமே? நீ என்னிடம் இதுவரை சொல்லவே இல்லையே! அவன் இன்று வந்திருந்ததாக மன்னி சொல்லுகிறாளே?” என்று கேள்விகளை என்னை உற்சாகப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவர் அடுக்கினார்.

மன்னிதான் எல்லாவற்றையும் சொல்லுகிறாளே; நான் வேறு சொல்ல வேண்டுமா? பெட்டியைத் திறந்து, மௌனமாகவே புடவைகளை எடுத்துக் கொடுத்தேன். தடவிப் பார்த்துவிட்டு அவர், “நன்றாக இருக்கிறது. நிறங்கூட உனக்குப் பொருத்தமாக இருக்கும். அத்தைக்கு உன்னிடத்தில் பிரியம் அதிகமோ? நாளை ஞாயிற்றுக்கிழமைதானே. மூர்த்தியை வரச் சொல்லுவது தானே? மன்னி யாரோ என்றாள். அப்புறந்தான் லீலா, மூர்த்திதான் வந்தவர் என்று சொன்னாள்” என்று கூறி என் மனத்தைக் குலைத்த மாயப் புன்னகை ஒன்று புரிந்தார்.

“உங்களுக்கு அவனைத் தெரியுமா?” என்று நான் கேட்டேன்.

“லீலா தான் எனக்கு ஒருதரம் அவனை அறிமுகம் செய்வித்தாள். அதிலிருந்து எப்போதாவது சந்தித்தால் புன்னகை செய்வான். நானும் நின்று இரண்டொரு வார்த்தைகள் பேசுவேன். இனிமேல் நெருங்கிப் பழக்கம் செய்து கொண்டால் போகிறது” என்றார் அவர்.

நான் பதில் ஏதும் கூறவில்லை.

இந்த ஆண்களுக்கே பெண்களின் பேதை உள்ளத்தின் பலவீனம் நன்கு தெரிந்திருக்கிறது. கெஞ்சலிலும் கொஞ்சலிலும் முகஸ்துதியிலும் பெண்கள் மயங்கி விடுவார்கள் என்பதை நன்கு அறிந்திருப்பதால் தான் சமயத்திற்கு அவர்களை ஆட்டி வைக்கும் ஆயுதங்களாக அவைகளைப் பயன்படுத்திக் கொள்வதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.

சுவரோரமாகச் சாய்ந்து நின்ற என் தோள் மீது கையை வைத்து அவர் என் காதில், “குழந்தைக்கு இன்னும் நாலைந்து நாட்களில் உடம்பு சரியாகி விடும். மன்னிக்கு உடல்நிலை சரியாக இல்லை. பார்! இந்தச் சமயத்தில் விட்டுக் கொடுக்கலாமா? கோபமா சுசி, உனக்கு? எனக்கும் எவ்வளவு சங்கடமாக இருக்கிறது தெரியுமா? நாளை ஞாயிற்றுக்கிழமை. உன்னிடம் சாவகாசமாக நாலு வார்த்தைகளாவது பேச முடியும் என்று எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்” என்றார்.

அழும் பிள்ளைக்கு மிட்டாய் கொடுப்பதைப் போல இது என்ன, எனக்குக் கண் துடைப்பா? பேசாமலே அவர் போயிருந்தால் தேவலையே! இந்தக் குழைவும் கொஞ்சலும் என் மனத்தை இன்னமுமல்லவோ நெளிய வைக்கின்றன?

நான் வாயைத் திறந்து சொல்ல என்ன இருக்கிறது?

“பார்த்தாயா? உனக்குக் கோபந்தான் போல் இருக்கிறது!”

“கோபமும் இல்லை, ஒன்றும் இல்லை. கோபப்படுவானேன்?” என்று நான் முணுமுணுத்தேன்.

“நீ இப்படிச் சொல்லும் போதே கோபம் தொனிக்கிறதே! கோபம் இல்லை என்றால் என் மனத்தை இழுக்கும் உன் புன்னகை எங்கே போயிற்று, சுசி?”

இந்த நாடக மேடைப் பேச்சு, ‘பக்’கென்று என்னைச் சிரிக்க வைத்தது.

“கொஞ்ச நாளைக்குப் புன்னகை புரிந்து உங்கள் உள்ளத்தைக் கவர்ந்து சங்கடத்திற்கு உள்ளாக்க வேண்டாம் என்று தான் இருந்தேன்.”

“பொல்லாதவள் சுசி, நீ!” என்று சிரித்துக் கொண்டே போய்விட்டார். அவர் சென்ற திக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நான் நின்றேன்.

வந்து இரண்டு தினங்களிலேயே அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என்றெல்லாம் ஆனந்த வானத்திலே சஞ்சரித்த நான் கனவுகள் கலைந்து உண்மையை நிதரிசனமாகக் கண்டுவிட்டேன். அன்பில்லாத மாமியார், அதிகாரம் செலுத்தும் ஓரகத்தி, கடமையில் உழலும் கணவன், இவர்களுக்கு மத்தியில் நான் தறியிலே ஓடும் குழல் போல ஓடி ஓடி உழைக்க வேண்டும்!

ஏமாற்றமும் வெறுப்பும் மேலிட்டவளாக நான் சாளரத்தண்டை திரும்பி நின்றேன்.

அடுத்த வீட்டில் காதல் நாடகம் நடந்து கொண்டிருந்தது. அன்று எனக்குப் பார்க்கப் பிடித்த காட்சி இன்று காணத் தகாத காட்சியைப் போல அருவருப்பைத் தந்தது. விளக்கை அணைத்து விட்டுப் படுக்கையில் வந்து உட்கார்ந்தேன். குழந்தைகள் உறங்கிச் சந்தடி ஓய்ந்து விட்டதே ஒழிய மைத்துனரும் பட்டுவும் கூடத்திலேதான் இருந்தார்கள். ரேடியோ ஏதோ புரியாத ஹிந்துஸ்தானி இசையைப் பரப்பிக் கொண்டிருந்தது.

சங்கீதம், கூத்து, கொம்மாளம், கேளிக்கை எல்லாம் அவர்களுக்குத் தான். எனக்கு அவற்றை எல்லாம் அனுபவிக்க ஓர் உரிமையும் கிடையாது. அத்தை வீட்டில் அன்று பாட்டி என்னை நேரிலேயே சுட்டு விடும்படி சொன்னாள். அதாவது ஒரு விதத்தில் தேவலை போலிருந்தது. இங்கே என்னை எல்லோரும் சொல்லாமலேயே நான் ஒன்றுக்கும் தகுதியற்றவள் என்று எப்படியோ அறியச் செய்தார்கள். இந்த வீட்டில்… இதே சூழ்நிலையில் இப்படியே என்றால் வாழ்நாள் முழுவதும்… அம்மாடி! நினைத்தாலே எனக்கு ஏதோ என் தலையில் மலையை ஏற்றுவது போலப் பளுவாக இருந்தது.

இருட்டிலே ஏதோ உருவம் நிழலாடியது. குலுங்கிய வளையல் ஒலி லீலா என்று கட்டியம் கூறியது. வாயிற்படியில் காலை வைத்த அவள், “விளக்கை அணைத்து விட்டு இருட்டிலே உட்கார்ந்திருக்கிறாயே, நீ தூங்கி விட்டாயாக்கும் என்றல்லவா எண்ணினேன்?” என்றாள்.

“ஆமாம், கொஞ்சம் நேரம் உட்கார்ந்திருப்பேன். தூக்கம் வந்தவுடன் அப்படியே படுத்து விடலாம். அப்புறம் எழுந்து விளக்கை அணைக்கச் சோம்பலாக இருக்காதா?” என்று மெல்ல நகைத்த நான் விளக்கை ஏற்றி விட்டு அவளை வரவேற்றேன். அப்போதைய என் நிலையில் அவள் வருகை சூடுபட்டுக் கன்றிப்போன தோலின் எரிச்சலில் தேங்காயெண்ணெய் பட்டது போன்ற இதத்தைக் கொடுத்தது. மேஜையடியில் கிடந்த நாற்காலியில் அமர்ந்த அவளை நான் மூர்த்தியின் கடிதத்தைக் கொடுத்த பிறகு அப்போதுதான் கவனித்தேன். மனத்திலே கரைபுரளும் அவள் மகிழ்ச்சி அவள் முகவழகை மிகைப்படுத்திக் காண்பித்தது. நிதானம் இல்லாமல் துள்ளித் திரியும் அவளுடைய படபடப்புச் சுபாவம் அடங்கி நிறைகுடத்தின் பொலிவை நினைப்பூட்டியது. நான் அவளை ஆராய்ந்து கொண்டிருக்க, அவள் என்னை ஆராய்ந்திருக்கிறாள்.

“ராமு இத்தனை முட்டாளாக இருப்பான் என்று நான் எண்ணவில்லை சுசி” என்றாள் மெதுவாக.

நான் பேச்சை மாற்றி, “மூர்த்தி உங்கள் இளைஞர் மன்றத்து விஷயமாகத்தான் எழுதியிருந்தாராக்கும்” என்றேன்.

அவள் நான் கேட்டதை விடுத்து, “நீ மிக நன்றாகப் பாடுவாயாமே சுசீ? ராமு சொல்லியிருக்கிறானே!” என்றாள்.

“அப்படிப் பெருமையடித்துக் கொண்டாராக்கும். நான் கேட்டதை விட்டுவிட்டீர்களே! மூர்த்தி இத்தனை சாமர்த்தியக்காரராக இருப்பார் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. உல்லாசமான வானம்பாடி போல் பறந்து திரிந்து கொண்டு இருப்பதாக நான் நினைத்த லீலாவைத் தந்திரமாக மனச்சிறைக்குள் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறாரே!”

பொய்க் கோபம் கொண்டவளாக என் கையைப் பிடித்து அழுத்திய லீலாவின் சூடேறிய முகம் பார்க்க இன்னும் அழகாகத்தான் இருந்தது.

“ஆமாம்… இல்லை. நான் தப்பாகச் சொல்லி விட்டேன். கோபப்படாதீர்கள். அவர் தந்திரம் ஏதும் செய்யவில்லை. தானாகவே பறவை கூண்டுக்குள்…”

நான் முடிப்பதற்குள் அவள் குறுக்கிட்டாள். “சுசி, நீ இந்த மாதிரி எல்லாம் பேசக் கூடாது. பழக்க தோஷத்தால் அப்புறம் நீ பாட்டில் அம்மா, அத்தை, அக்கா எல்லோரும் இருக்கும் சமயத்தில் ஏதாவது உளறி வைத்து விடப் போகிறாய்!” என்று என்னை எச்சரித்தாள்.

“தெரிந்தால் என்னவாம்? ஒரு நாளைக்குத் தெரிய வேண்டியதுதானே. தலைவியின் களவொழுக்கத்தைக் குறிப்பாகப் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டியது தோழியின் கடமை இல்லையாக்கும்?”

“வெகு அழகுதான்! அப்புறம் சங்ககாலத்துப் பெற்றோர்களைப் போல உடனே அழைத்து மணம் நடத்தி விடுவார்கள் என்று எதிர்பார்க்கிறாயாக்கும்! எனக்காகக் காத்துக் கொண்டிருக்கும் வரதன் என்ன ஆவது? அவர் மூன்று வருஷங்களாகப் பார்த்துப் பார்த்து எனக்காக ஊட்டியில் கட்டும் பங்களா என்ன ஆவது? இந்தச் சமாசாரம் ஏதும் என் பெரியோர்களுக்குத் தெரிந்தால், மூர்த்தியை அப்புறம் இந்த வீட்டுக்குள்ளேயே ஏற்ற மாட்டார்கள்!” என்ற அவள் குரலிலே பேச்சுக்கு உரிய பாணி தொனிக்கவில்லை. நகை இருக்க வேண்டிய இடத்தில் சோகம் ஒளிந்திருந்தது. பாகவதர் சுகமாக ஆலாபனம் செய்யும் போதும் அபஸ்வரம் விழுந்து விட்டது போல் நான் உணர்ந்தேன்.

“அது யார் அந்த வரதன்? அவர் கட்டும் பங்களாவிற்காக மூர்த்தியைப் பற்றி பிரஸ்தாபிக்கக் கூடாது என்று வாய்ப்பூட்டும் போடுகிறீர்களே!”

“நீ விளையாடுகிறாய் சுசி. ராமுவிடங்கூடப் பேச்சு வாக்கில் பிரஸ்தாபித்து விடாதே. ஏனெனில் அவன் சும்மா இருக்க மாட்டான். விஷயத்தை ஆலோசியாமல் அக்காவிடமும் அத்திம்பேரிடமும் பரப்பி விடுவான். தவிரவும், அவராக முனைந்து வரவேண்டுமே ஒழிய, ஊருக்கு முன் எல்லோருக்கும் தெரிய வைப்பது, நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். முதல் முதலாக அக்கா காலேஜுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவாள். எனக்கு அதுதான் பயமாக இருக்கிறது. வரதன் அம்மாவுக்குச் சிறிய தகப்பனார் பிள்ளை. தலைமுறை தலைமுறைக்கு உட்கார்ந்து சுகம் அனுபவிக்கக் கூடிய அளவுக்குச் சொத்து இருக்கின்றது. சின்ன வயசிலே தூர உறவிலே ஒரு குழந்தையைப் பிடித்துப் பொம்மைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். அது கொடுத்து வைக்கவில்லை. திரண்ட ஐசுவரியங்கள் இப்போது ஓர் எஜமானிக்கு ஏங்கி நிற்கின்றன. வரதனுடைய தகப்பனார் ஒரு காலத்தில் என் தந்தைக்கு உதவி செய்தார். ஏற்கனவே தாம் செய்த பொம்மை விவாகத்தால் மனம் விட்டுப் போயிருந்த அவர் இறக்கும் தறுவாயில் வரதனுக்கு என்னை மனைவியாக்கும்படி என் தந்தையிடம் வாக்கு வாங்கிக் கொண்டார். இப்போது அவரும் போய் விட்டார் என்றாலும் வரதனுக்குத்தான் நான் என்று எல்லோரும் உறுதியாக முடிந்து வைத்திருக்கிறார்கள். படிக்க ஆசைப்படுகிறாள் என்று விவாகத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். அவ்வளவுதான். அத்திம்பேர் முதல் முதலாக வியாபாரம் ஆரம்பித்த போது கூடப் பண உதவி அந்தக் குடும்பத்திலிருந்து தான் கிடைத்தது. எனவே அவர்களுக்கும் அங்கே மிகுந்த மதிப்பு இருக்கிறது. நான் எல்லாம் தெரிந்தும் இப்போது மூர்த்தியைப் பற்றிப் பிரஸ்தாபித்தால் எத்தகைய பூகம்பம் எழும் என்று நீயே யோசித்துப் பார்!” என்றாள் லீலா.

மெதுவாக நான், “மூர்த்திக்கு இதெல்லாம் தெரியுமா?” என்று வினவினேன்.

“ஊஹூம்! நீ நினைக்கும் மாதிரியில் நாங்கள் மனதில் உள்ளதை இதுவரை பேசியதில்லை. நீ கொடுத்தது அவர் உள்ளத்தை அறிவிக்கும் முதல் கடிதம், சுசி.”

நான் அசைவற்று அவளையே வைத்த கண் இமைக்காமல் நோக்கினேன்.

“எனக்கு என்ன பண்ணுவதென்றே புரியவில்லை. நீ என்ன சொல்லுகிறாய்?” என்று என் தோளிலே கைகளை வைத்துக் கொண்டு என்னை உற்றுப் பார்த்தாள்.

என்னை விட வயசிலும் கல்வி கேள்வியிலும் வெளி உலக அனுபவத்திலும் மூத்தவள். என் கண்களுக்கு நான் சரிசமமாக நினைக்க முடியாதபடி மரியாதைக்கு உகந்த பாத்திரம் அன்பு ஒன்றினால் தான் அவளிடம் நெருங்கிப் பழக முடிகிறது என்று என்னை விட ஒருபடி மேலாக நான் கருதியிருக்கும் அவள், கிராமத்து மக்களிடம் குருட்டு நம்பிக்கைகளிடையே பக்குவம் அடைந்திருந்த என்னிடம் யோசனை கேட்டதை என்னால் நம்பவே முடியவில்லை. வெகு சுலபமாக, “அதனால் என்ன? வரதனை என்னால் மணம் புரிந்து கொள்ள முடியாது என்று பயப்படாமல் சொல்லி விடுங்களேன். என்னைப் பயங்கொள்ளி என்று கூறிவிட்டு நீங்களே பயங்கொள்ளியாக இருக்கிறீர்களே?” என்றேன் நான்.

“போ சுசீலா. உனக்கு விளையாட்டாக இருக்கிறது. நாகரிகம், நாகரிகம் என்பதெல்லாம் நடை உடை பாவனையில் தான் இருக்கிறது. மனத்திலே வரவில்லை. ராமுவுடன் நான் வித்தியாசமின்றி விளையாட்டாகப் பேசுவதையே அக்கா நொடிக்கு நூறு தரம் கண்டிப்பாள். வரதனை நான் மறுத்தால் நிச்சயமாக எல்லோருடைய விரோதத்தையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் வகுத்த வழியிலே வாழ் நாள் முழுதும் துயரக் கடலில் உழல வேண்டும்” என்று தன் மனத்தைத் திறந்து அவள் கொட்டினாள். கதைகளில் மட்டுமே அதுவரையில் காதலைப் பற்றிப் படித்திருந்த எனக்குக் கண் முன் அதில் சிக்குண்டு வாடும் லீலாவைக் காண மனத்திலே மகிழ்ச்சி கிளம்பியது.

காதல் காதல் என்று கதாசிரியர்களும், காவிய கர்த்தாக்களும் புகழும் அந்த அனுபவம் நமக்குக் கிட்டவில்லையே என்று தோன்றியதோ இல்லையோ, உடனே உள்ளிருந்து இன்னொரு குரல், ‘ஏன் கிட்டவில்லை? அவருடைய பேச்சும் பார்வையும் ஏன் இப்படிச் சிந்திக்கச் சிந்திக்க இனிக்கின்றனவாம் பின்? காதல் என்று தேவலோகத்திலிருந்து தனியாக வந்து குதிக்குமோ? பெரியவர்கள் சுட்டிக்காட்டிய திசையில் அன்பு எனக்கு உதித்திருக்கிறது. வாழ்வில் தடுமாறாமல் ஒரே நிலையில் இன்பமாகப் பிரயாணம் செய்ய அவள் அப்படி இல்லை. தன் மனம் போலச் செல்லும் திசையில் அன்பு கண்டு விட்டது. அதுதானே வித்தியாசம்? என்றது. இந்த எண்ணம் வந்ததும், என் உள்ளத்திலே அலாதியான ஒளி பிறந்தது. லீலாவை மறந்து என் வாழ்வின் விமரிசனத்தில் ஈடுபடும்படி சிந்தனைக் குதிரை வேறு திசையில் திரும்பி விட்டது. என் வீட்டிலும் சாதாரணமாக ஜகது, தங்கம் இருவரும் விவாகமாகிக் கணவன் வீடு சென்றிருந்தனர். தங்கத்தைப் பற்றி என்னால் அவ்வளவாக அறிய முடியவில்லை. ஆனால் ஜகது என்னைப் போலில்லை என்பது நிச்சயம். “இந்த மாப்பிள்ளைக்காகத் தந்தியடித்து, தபாலனுப்பி ஆயிரம் பாடுபட்டீர்களே, எதற்கெடுத்தாலும் அம்மாவிடம் உம் கொண்டிருக்க!” என்று எத்தனையோ முறைகள் அவள் அம்மாவிடம் புகார் கூறியிருக்கிறாள் என்றால் அந்த மாதிரி சொல்ல முடியாதே! அவள் ஆயிரமாயிரம் குற்றங்கள் செய்தால் கூட அவரை நான் மணந்திருப்பது மகத்தான பேறு என்றல்லவா களிப்புறுகிறேன்? என் வாயாலேயே அவரை இழிவு செய்வேனா? இத்தகைய அழுத்தமான பிடிப்பு இந்தக் கொஞ்ச நாட்களிலேயே என்னை அறியாமல் என் உள்ளத்தில் வளர்ந்திருப்பதன் காரணம் என்ன? லீலா அவள் அறைக்குச் சென்ற பின் புதிதாகத் தோற்றமிட்டிருந்த மன ஒளியிலே என்னை மறந்து நான் சொக்கி விட்டேன். என்னுடைய அந்தப் புதிய உலகிலே கற்பனை விமானமேறி மனம் போனபடி சஞ்சரித்தவளை எப்படி நித்திரை அரசி ஆட்கொண்டாள் என்பதே தெரியவில்லை.

2.5 மலர்

மனித வாழ்வுக்குச் சுவை கூட்டும் அதிமுக்கியமான வியஞ்சனங்களாகிய நம்பிக்கையும் ஏமாற்றமும், புடவை ஒன்றில் பின்னிப் போகும் சரிகையும் நூலையும் போல் வாழ்க்கையிலே பின்னிக் கொண்டிருக்கின்றன. சரிகையின் ஒளிக்கு நூல் ஆதாரம். நூலின் மேன்மையைக் காட்டவும் சரிகை உதவுகிறது. ஒரு பொருளையோ, எதிர்காலத்தையோ குறித்துத் துடிக்கும் ஆவலுடன் தொங்கும் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கை வைத்திருப்பதுதான் எத்தனை இன்பமூட்டுகிறது! அடுத்து வரும் ஏமாற்றம் வாழ்க்கையின் ஏடுகளிலே இல்லாமலே அழிந்து விட்டால் துடிப்பு ஏது? ஆவல் ஏது? எனவே ஏமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டேதான் இன்பம் எழுகிறது. அன்று எனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இன்று எத்தகைய இன்பத்தில் கொண்டு வந்து விட்டது.

“குழந்தைக்கு உடம்பு குணமாகிவிட்டது. இன்று வீட்டுக்கு அழைத்து வரலாம்” என்று மைத்துனர் சொல்லிக் கொண்டிருந்தது என் செவிகளில் தேன்மாரியைப் பொழிந்தது. ‘சங்கடமூட்டும் முகத்துடனே கொஞ்சும் விழிகளுடன் அவர் என்னைப் பார்த்து விடை பெற்றுக் கொள்ளும் பாவனையில் அன்றிரவு போய்விட மாட்டார். தயங்கித் தயங்கி நாலு வார்த்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் மனம் விட்டு நான் கேட்க வேண்டிய சமாசாரங்களை எல்லாம் கேட்க முடியும்’ என்றெல்லாம் களிப்பிலே மிதந்தேன்.

அடுப்படியில் ஒரு காலும், குழாயடியில் ஒரு காலுமாகப் பல வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில் சுகுமார், “சித்தி, இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுங்களேன்?” என்று அடுப்பங்கரையில் நோட்டைப் பிரித்து வைத்துக் கொண்டான். ‘எனக்கு வெள்ளைப் பாவாடை வேணும் சித்தி. டீச்சர் வெள்ளை டிரஸ் போட்டுக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறாள்” என்று மழலை மாறாத குரலில் மைதிலி தன் கோரிக்கையைச் சமர்ப்பித்தாள்.

“அம்மா, சுசீலா, அடுப்பில் இந்தச் சுக்குக் கஷாயத்தைப் பொங்க வைத்துக் கொடேன். காலையிலிருந்து வயிற்றைப் புரட்டுகிறது” என்று கெஞ்சும் முறையில் வேண்டுகோள் விடுத்தாள் லீலாவின் தாய்.

“வெந்நீரடுப்புப் புகைகிறது. கொஞ்சம் விசிறி கொடு. சுசீலா” என்று மைத்துனர் சமையலறை வாசற்படியில் வந்து நின்றார்.

“ராமு குளித்து விட்டு வேஷ்டியை எறிந்து விட்டுப் போயிருக்கிறான். மைதிலியின் சிவப்புப் பாவாடைச் சாயம் முழுவதும் அதில் ஏறிக் கிடக்கிறது. இதை எல்லாம் கவனிக்க வேண்டாமா, சுசீலா?” என்று கண்டிக்கும் தோரணையில் என் காதில் போட்டு வைத்தாள் மாமியார்.

‘இன்னும் யார் பாக்கி, சுசீலாவைக் கூப்பிட?’ என்று நான் எண்ணி முடிப்பதற்குள் பின்புறத்தின் வழியாக மாடியிலிருந்து வந்த என் கணவர், “மன்னி ஒரு கிளாஸ் ஹார்லிக்ஸ் கரைத்துக் கொண்டு வரச் சொன்னாள் சுசீ!” என்று சமாசாரம் கொண்டு வந்தார்.

லீலாதான் பாக்கி என்று நான் நினைத்து விடும் படி அவள் தன் பங்குக்குச் சோடையாகி விடவில்லை. “சுசீலா எங்கே? மயிலாப்பூரிலிருந்து ஜயம் மாமி வந்திருக்கிறாள். இங்கு யாரோ சிநேகிதி வீட்டு ஆண்டு நினைவுக்கு வந்தாளாம். ‘குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அன்றைக்கே பார்க்கவில்லை. சுசீலாவை வரச் சொல். பார்த்துவிட்டுப் போகிறேன்’ என்று மாடிக்குப் போகிறாள் இப்போதுதான்” என்று தகவல் கொடுத்தாள்.

நான் மூச்சு விடக் கூடச் சாவகாசம் இல்லாமல் பறப்பதைப் பார்த்து என் கணவருக்குப் பெருமை பிடிபடவில்லை. “ஏதேது? இவ்வளவு குறுகிய காலத்துக்குள் இந்த வீட்டில் சுசீலாவுக்கு இத்தனை கிராக்கி வந்து விட்டதே!” என்று என்னை நோக்கி இளநகை செய்தார்.

லீலாவின் சமாசாரத்துக்குத்தான் நான் முதலில் பணிந்தேன். மாடிக்கு ஓடினேன். விறகின் ஈரப்புகை என்னை அசல் செந்தாமரைக் கண்ணாளாக்கியிருந்தது. கசங்கிய புடவை கீழே புரளாதபடி தூக்கிச் செருகியிருந்தேன். தலைவாரிக் கொள்ள நேரம் இல்லாமையால் கையால் கோதிவிட்டுக் கொண்டிருந்தேன். இப்படி மாடியில் அலமாரியில் இருந்து பெரிய கண்ணாடி என் தோற்றத்தை எனக்கு விளக்கியது.

சோபா ஒன்றில் பட்டு சாய்ந்து கொண்டிருந்தாள். மஞ்சள் பட்டுப் புடைவைக்கு மேலே கழுத்தில் நட்சத்திரமாலை டாலடிக்க, மல்லிகைப் பூவும் சந்தப் பூச்சும் அவள் விசேஷ வீட்டிலிருந்து வந்திருக்கிறாள் என்பதை எடுத்துக்காட்ட பருமனான தன் தேகத்தை நாற்காலி ஒன்றில் அடக்கிக் கொண்டு என்னைப் புன்னகை வதனத்துடன் வரவேற்கிறாள் சின்ன மதனி ஜயம்.

“உன்னைப் பார்க்க அன்று வந்திருந்தேன். ம்! அடுப்பில் ரொம்ப வேலை போல இருக்கிறது!” என்றாள்.

நான் பேசாமலே சிரித்து வைத்தேன். ஆனாலும் உள்ளுக்குள்ளே, அவர்கள் இருவரும் சரிக்குச் சமானமானவர்கள். நானோ? என் காதுகளில் வைரம் பளபளக்கவில்லை. இடுப்பிலே பட்டு மின்னவில்லை. என் கணவர் காரிலே காரியாலயம் போய்விட்டு வந்தாலும், அவர்களுக்கு வண்டி ஓட்டியின் ஸ்தானத்தில் தான் இருக்கிறார் என்ற உண்மை அழுத்தியது.

“மன்னி வந்திருக்கிறாள் என்று தெரிந்து தானே வந்தாய்? காப்பி கொண்டு வரக்கூடாது? இது தெரிய வேண்டாமா?” என்று பட்டுவின் சொற்கள் வேறு என்னுடைய தாழ்வை எனக்கு உணர்த்தின.

“வேண்டாம் மன்னி இப்போதுதான் அவர்கள் வீட்டில் வலுக்கட்டாயமாகச் சாப்பிட்டேன். நான் வெறுமே பார்க்கலாம் என்று வந்தேன்” என்று ஜயம் சம்பிரதாயமாக மறுத்தாள். என்றாலும் அவள் ‘ஹார்லிக்ஸ்’ கேட்டாளே!

நான் பின்புறம் படிக்கட்டுகள் வழியாகக் கீழே விரைந்தேன். அவர் அறையில் – நிஜாருக்குப் பொத்தான் போயிருக்கிறது போலிருக்கிறது – தாமாகத் தைத்துக் கொண்டிருந்தார். யார் யாருக்கெல்லாமோ ஏவலாளாக இருக்கிறோமே, நீ தைத்து வை என்று கூடச் சொல்லாமல் தாமே செய்து கொள்கிறாரே! என்று அவரது பணிவான சுபாவத்தை வியந்தேன்.

இரு தம்ளர்களைக் கையில் ஏந்திய வண்ணம் முன்புறப் படிகளின் வழியாக நான் ஏறிய போது பட்டுவின் குரல் என் காதில் பட்டது. என்னையும் அறியாமல் நான் அசைவற்றுப் படியிலேயே நின்று விட்டேன். “என்னவோ பிச்சைக்காரப் பிராமணனைப் போலப் படுக்கையைத் தைத்துப் பெண்ணைக் கொண்டு விட்டுப் போய்விட்டான்! ஒரு பாத்திரம் நகை என்று ஒன்றைக் காணோம்! கையிலே புல்லுப்போல் ஒத்தை வளையைப் போட்டு எப்படித்தான் அனுப்பினாளோ? அதையாவது அழித்து நல்லதாக இரண்டு பண்ணிப் போடட்டும் என்று தானே ஜாடையாக நான் அநாவசியமாகப் பாத்திரம், வேஷ்டி என்று வாங்க வேண்டாம் என்று சொன்னேன்?”

அடுத்தாற் போல் ஜயம், “அத்தை அவ்வளவு பணக்காரியாக இருக்கிறாளே, ஆசையாக இருக்கிறாள், பெண்ணுக்குச் செய்வாள் என்று அம்மா சொல்லிக் கொண்டு இருந்தாரே?” என்று கேட்டாள்.

“என்ன ஆசையோ! மைசூர்ப் பட்டுப் பேர் போனது. நறுக்கென்று நல்லதாக ஒரு புடவை வாங்கி அனுப்பக் காணோம். இல்லாவிட்டால் பேசாமலாவது இருக்க வேண்டும். மெனக்கெட்டு வெள்ளைக் கோடு போட்ட நூல் புடவை. நம்ம வீட்டு முனியம்மா உடுத்துவது போல வாங்கி அனுப்பியிருக்கிறாள்” என்றாள் பட்டு ஏளனமாக.

மின்சார அதிர்ச்சி ஏற்பட்டது போல் நெஞ்சம் சுருங்கியது. உடல் நடுங்கியதைத் தம்ளர்களைத் தாங்கியிருந்த கைகள் உணர்த்தின.

‘பிச்சைக்காரப் பிராமணன்! அப்பா! நீங்கள் என்னை வளர்த்து அறிவூட்டி இந்த வீட்டில் கொண்டு விட்டதற்கு இது பட்டப் பெயரா?’

அன்பில்லாத உள்ளம் என்பதை நான் ஒருவாறு எதிர்பார்த்திருந்தாலும் நேராகப் பேச்சில் உண்மை தெளிந்து விட்ட பின்னர் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்னால் பொறுக்க முடியாததாகவே இருந்தது. பழுதையோ பாம்போ என்று சந்தேகப்படும் போது உண்டாகும் அச்சத்திற்கும், உண்மையாகவே அது நெளியும் போது ஏற்படும் உடல் நடுங்கும் அச்சத்திற்கும் வித்தியாசம் இல்லையா?

சற்று ‘நக்’கென்று வைப்பது போலவே தம்ளர்களை மேஜையில் வைத்தேன். அவர்கள் பேசியதை நான் கேட்டு விட்டதாக என் முகபாவம் உணர்த்தியதோ என்னவோ? கபட நெஞ்சைப் போர்வையிட்ட புன்னகை நெளிய பட்டு, “அதற்குள் கொண்டு வந்து விட்டாயா?” என்று அன்புடன் கேட்பது போல் வினவினாள்.

“எனக்கு எதற்கு இப்போது காப்பி? நான் தான் வேண்டாமென்று சொன்னேனே! ராமு எங்கே?” என்று ஜயம் கேடுக் கொண்டிருந்த போதே அவர், “என்ன மன்னி, காலங் கார்த்தாலே திடீர் விஜயமாக இருக்கிறதே. அண்ணா வந்திருக்கிறானா?” என்று விசாரித்த வண்ணம் அங்கு வந்தார்.

“இல்லை, நான் மட்டுந்தான் வந்தேன். உங்களை எங்கே கண்ணிலேயே காணாம்? அண்ணா கம்பெனியில் சேர்ந்தாலும் சேர்ந்தீர்கள், ஆளைக் காண்பதே அபூர்வமாக இருக்கிறதே? அன்று வந்தேன். சுசீலாவை லீலா அழைத்துப் போய்விட்டாள். ஒரு ஞாயிற்றுக்கிழமைதான் அவளை அங்கு அழைத்து வரக்கூடாதோ? ‘ஏன் அம்மா, சிற்றப்பாவைக் காணவே காணோம்? வரவே இல்லையா?’ என்று நேற்று சரோஜ் கூடக் கேட்டாள். ‘சித்தி வந்துட்டாளோ இல்லையோ, இனிமேல் எங்கே வரப்போகிறார்?’ என்றேன் நான்” என்று மடமடவென்று கூறி நகைத்தாள் அவள்.

அவர் எங்கே உத்தியோகம் செய்கிறாரோ? அண்ணாவின் காரியாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கிறதாக்கும் என்றெல்லாம் ஏதேதோ குருட்டு யோசனைகள் செய்தேனே. எனக்குத் தெரியாத சமாசாரம் யாருக்கெல்லாம் தெரிந்திருக்கிறது! பட்டு என்னை ஏன் தாழ்மையாக நடத்த மாட்டாள்? அவர்கள் கீழ் வேலை செய்யும் கையாள்தாமே அவர்? ஏற்கனவே என் அந்தஸ்த்தைத் தூக்கவே முடியாதபடி நகை நட்டும் துணிமணிகளும் இல்லாத பிறந்தகத்து வறுமை வேறு இருக்கிறது. அன்பு, ஆசை, சீர்திருத்த மனப்பான்மை, நாகரிகம் என்றெல்லாம் என்ன என்னவோ பைத்தியம் போல் எண்ணினேனே! அந்த வீட்டை விட்டாவது உடனே வர முடிந்தது. இந்தச் சுதந்திரமற்ற சூழ்நிலையில் எனக்குத் துளியும் ரத்தப்பந்தம் இல்லாத ஒருத்தியின் அலட்சியத்தையும் அகம்பாவத்தையும், ஏளன சொற்களையும் சகித்துக் கொண்டா நாட்களைத் தள்ள வேண்டும்? அத்தை வீட்டிலே அத்தை கூட என்னை நேருக்கு நேர் எதுவும் கூறவில்லை. பாட்டி, என் தந்தையைப் பெற்றவள். என்னை அடிக்கவும் அணைக்கவும் உரிமை கொண்டவள் சொன்ன சொற்களுக்கே அத்தனை ரோசம் கொண்டேனே! இங்கோ?

இந்த வீடுதான் எனக்குப் புகலிடம். இதை விட்டு எங்கும் போகவும் முடியாது. வாழ்நாள் முழுவதும்… சுழன்று சுழன்று இருதயத்தைத் தாக்கிய கிலேசத்தால், ஜயம் விடைபெற்றுப் போகும் வரை நான் எப்படித்தான் சமாளித்துக் கொண்டு நின்றேனோ? பின்புறமாக நடந்தவள் எங்கள் அறைக்கு வந்தேன். அடுத்த வீட்டில் காரியாலயத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்த அவனிடம் அவள் குழைந்து கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தது என் கண்ணில் பட்டது. இனம் தெரியாத துயரம் உந்திக் கொண்டு வர, சுற்றி வைத்திருந்த படுக்கையில் சாய்ந்தேன். இருதயத்தில் இருந்த பளுவை அழுது அழுது கரைத்தால் தான் இதமாக இருக்கும் போல இருந்தது. அடுப்படி அலுவல்கள், மாமியார் எல்லாவற்றையும் மறந்தவளாக விம்மல்களுடன் கண்ணீர் பெருக்கினேன்.

“சுசீலா? சுசீ! சுசீ!” என்று பதறும் குரலுடன் அவருடைய அன்புக் கரங்கள் என் மேல் பட்டன.

உணர்ச்சியை அடக்கிக் கொள்ள முடியாத என் பலவீனம் எனக்கு அப்போதுதான் புலனாயிற்று. அசட்டுத்தனமாக அழுதுவிட்டேனே? அவர் இப்போது கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வேன்? என்னுடைய செய்கை அடுத்த நிமிஷத்தில் எப்பேர்ப்பட்ட பலனைக் கொடுக்கும் என்று சற்றும் சிந்தியாமல் அல்லவோ பலவீனத்திற்கு ஆளாகிவிட்டேன்.

தலையைத் தூக்கி என் அமுத முகத்தை அவருக்குக் காட்டவே எனக்கு லஜ்ஜையாக இருந்தது.

“சரி, என்னம்மா இது? என்ன சமாசாரம்?” என்று துடிதுடிக்கும் கண்களுடன் அவர் என் முகத்தைத் திருப்பினார். “என்ன வருத்தம் உனக்கு சுசீலா? சொல்லி விட்டு அழேன். என்ன நேர்ந்தது?” என்றெல்லாம் அடுக்கியவாறு அவர் என் கண்களைத் துடைத்த போது எனக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

“ஒன்றுமில்லை…”

“ஒன்றுமில்லையா? குலுங்கக் குலுங்க விம்மினாயே, சுசீ! என்னிடம் சொல்லக் கூடாதா? இன்னுமும் உன் விம்மல் ஒலி என் நெஞ்சைத் தாக்குகிறது. நீ ஒன்றுமில்லை என்கிறாயே?”

ஆனாலும் நான் எத்தனை அசடு? அவரிடம் என்ன சொல்லுவது? உங்கள் மதனி என் தந்தையைப் பிச்சைக்கார பிராமணன், நகை செய்து போடவில்லை என்று சொன்னாள் என்று சொல்வதா? சீ, சின்னக் குழந்தைகள் சண்டையா இது? அவள் என்ன சொன்னால் எனக்கு என்ன? விலைமதிப்பற்ற அன்புச் சுரங்கமாகிய அவர் எனக்குச் சொந்தமாக இருக்கும் போது, வேறு என்ன குறை எனக்கு, இந்த அற்பச் சங்கதிகளை எல்லாம் அவர் காதில் போடுவது தப்பு.

என் கிலேசப் புகையினூடே அப்பாவின் உபதேசம் பளிச்சிட்டது.

‘ஒவ்வொருவர் குணம் ஒவ்வொரு விதமாக இருக்கும். அவரவர்கள் இயல்புக்கு ஒத்தபடி இணைந்து போக வேண்டும்’ என்றாரே!

கொடுக்கக் கூடாத பொருளை விரும்பிக் குழந்தை அழுதால் தாய் எத்திப் பேச்சு வாக்கில் ஒளித்து விடுவாள். ஆனால் சற்றே சமாதானம் அடைந்தது போல் தூங்கும் குழந்தை, நித்திரையில் அந்த நினைவு வந்தால் கூடக் கேட்டு அலற ஆரம்பிக்கும். அப்படித்தான் அப்பாவின் நினைவு மறுபடியும் என் நெஞ்சில் வேதனையைக் கிளர்த்தியது. பட்டுவின் இழிவுச் சொல், அவரது பரிதாபமான எலும்பெடுத்த உருவம் – எல்லாம் என்னைத் திரும்பவும் உணர்ச்சிக்கு அடிமையாக்கின. மீண்டும் விசும்பல் எழும்பியது.

அவர் என் நெஞ்சை அமுக்கிக் கொண்டார். “ஒன்றும் இல்லை என்று திரும்பவும் தேம்புகிறாயே, சுசீ? உனக்கு மனக் கஷ்டம் என்ன என்று சொல்ல மாட்டாயா?” என்று கெஞ்சினார்.

இந்த அயனான கட்டத்தில், “ஏண்டி சுசீலா?” என்று கூப்பிட்டுக் கொண்டே மாமியார் வந்து விட்டாள்.

எக்கச்சக்கமாக எங்காவது நரம்பு பிசகிக் கொண்டிருந்தால் மளுக், மளுக் என்று வலிக்கும். சில சமயங்களில் அது எவ்வித மருந்தும் இன்றிச் சட்டென்று திரும்பும் போதோ சோம்பல் முறிக்கும் போதோ பிசகிய விதம் போல விட்டுவிடுவது உண்டு. மாமியாரின் குரல் சாட்டையடி போல என் துயரத்தைக் களைந்து மேலே வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்ற என் பழைய நிலைக்குக் கொணர்ந்தது என்றாலும், கையும் களவுமாகப் பிடிக்கப்பட்ட திருடனைப் போல் அல்லவா அழுத கண்களுடனும், ஆதரவு காட்டும் அவருடனும் தென்பட்டு விட்டேன்? ஏதோ சொல்ல வந்தவள் திக்பிரமை அடைந்து விட்டவள் போல் எங்களை வெறித்துப் பார்த்த வண்ணம் அவள் நின்றாள்.

நிமிர்ந்து பார்க்காமலேயே புடவைத் தலைப்பால் கண்களை அழுத்தித் துடைத்துக் கொண்டு “எனக்கு ரொம்பத் தலை வலிக்கிறது” என்று சமயோசிதமாகப் புளுகினேன்.

“நன்றாக இருக்கிறது! தலைவலிக்கா இப்படி முகம் சிவக்க அழுதிருக்கிறாய்? என்னவோ ஏதோ என்று பயந்து விட்டேனே! ஆயிரம் மருந்துகள் இருக்குமே இங்கு? எதையாவது கொஞ்சம் கேட்டு வாங்கிப் போட்டுக் கொள்வதற்கென்ன? என்னவோ அம்மா! எங்கள் நாட்களில் இந்த வயசில் மங்கு மங்கென்று காரியம் செய்வோம். இங்கு என்ன இடுப்பில் ஒரு குடமும் கையில் ஒரு குடமும் தூக்க வேண்டுமா? வீடு மெழுக வேண்டுமா? மாடு கறக்க வேண்டுமா, என்ன இருக்கிறது? இந்த அடுப்பில் ஏற்றி இறக்குவது ஆகாமல் பூஞ்சையாக இருக்கிறதுகள்” என்று பொழிந்து தள்ளிக் கொண்டு போனாள் அவள்.

என் கணவர் அப்போது ஒன்றும் கேட்கவில்லை. மாமியார் சென்ற பின், “நிஜமாக உனக்கு என்ன வருத்தம் சுசீலா? தலைவலி என்று பொய் தானே சொன்னாய்?” என்று கேட்டார். அவர் கூரிய பார்வை என் மனதைப் பிளந்து கொண்டு போகும் போல் இருந்தது.

“ஒன்றும் இல்லை. நிஜமாகவே தலைவலிதான். ஏதோ நினைத்துக் கொண்டேன். ஊரின் ஞாபகம் வந்துவிட்டது” என்று என் பொய்க்குக் குஞ்சலம் பொருத்தி விட்டேன் நான். கஷ்டப்பட்டுச் சிரிப்பை வரவழைத்துக் கொள்ளக் கூட முயன்றேன். மேகங்களிலிருந்து வெளிப்படும் சந்திரனைப் போல் அவர் நகைத்தார். “அட அசடு! அம்மா அப்பாவை நினைத்துக் கொண்டா குழந்தை அப்படி அழுது விட்டது. இந்தச் சில நிமிஷங்களில் நான் எப்படித் துடித்து விட்டேன். தெரியுமா சுசீ? நான் இருக்கும் போது நீ இப்படி அழலாமா? இனிமேல் இம்மாதிரி உன் முகம் கன்றக் கூடாது. தெரியுமா சுசீ?” என்றார். சிறு குழந்தையைச் சமாதானப்படுத்துவது போல. இந்நிலையில் மாமியார் அமிர்தாஞ்சன் டப்பி ஒன்றை எடுத்துக் கொண்டு உள்ளே வந்தாள். “இந்தா! இதைத் தடவிக் கொண்டு சற்று படுத்திரு. தானாகப் போய்விடும். நன்றாக அழுதாய்? பச்சைக் குழந்தையைப் போல், தலையை வலிக்கிறதென்று!” என்று கூறி, அதைக் கொடுத்துச் சென்றாள்.

படுக்கையை விரித்து அவர், “நீ படுத்துக் கொள். நான் மருந்து தடவி விடுகிறேன்” என்று உபசாரம் செய்தார். “எல்லோரும் சாப்பிடக் காத்திருப்பார்களே, நான் போகிறேன்” என்று நழுவ முயன்ற என்னைப் பலவந்தமாகப் படுக்கையில் தள்ளி, அமிர்தாஞ்சனத்தைத் தடவி விட்டு அவர் சாப்பிடப் போய்விட்டார்.

என் அசட்டுத்தனத்துக்காக என்னையே நொந்து கொண்டேன். அருங்குணக் குன்றாக அவர் இருக்கும் போது அவசரக் கிளர்ச்சிக்கு இடம் கொடுத்தேனே என்று குன்றிப் போனேன். சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வந்து அவர் கூறிய வார்த்தைகள் அன்று முழுவதும் அவர் அன்பையே எண்ணி வியக்க வைத்தன!

“சுசீலா, உன்னால் எனக்கு எத்தனை பெருமையாக இருக்கிறது தெரியுமா? இந்த வீட்டில் குழந்தைகள் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் அதற்குள் நீ எப்படி கவர்ந்து விட்டாய்! வந்த மறுகணமே புக்ககத்து மனிதர்களிடம் வெறுப்புக் காட்டும் பெண்களே மலிந்து இருக்கும் போது, நீ எனக்கு மனைவியாகக் கிடைத்திருப்பது நான் செய்த பாக்கியம் என்றெண்ணி மகிழ்ந்திருக்கிறேன். உன் கண் கலங்க நான் எப்படிச் சகிக்க முடியும்?” என்று புகழ் வார்த்தைகளால் போர்வை இட்டு விட்டார். ‘கணவன் வீட்டாரிடம் நான் காட்டும் பணிவுக்கு எனக்கு இவ்வளவு தூரம் நன்றி காட்டும் அவரன்றோ உண்மையில் ஆதர்ச புருஷர்? அவருடைய மனம் கோணாமல், அவர் என்னிடம் வைத்திருக்கும் பெருமையையும் மதிப்பையும் நான் நிலைநாட்டிக் கொள்ள வேண்டாமா? அது ஒன்று தான் என் வாழ்வின் குறிக்கோள். வைரத்திலும் புள்ளியுண்டு. முத்திலும் சொத்தையுண்டு எனக் கேட்டதில்லையா நான்? அவர் எனக்கு இங்கு இருக்கும் போது, இந்த அற்பமான தோஷங்களைப் பொருட்படுத்தக் கூடாது’ என்று சங்கற்பம் செய்து கொண்டேன்.

அன்றிரவு பட்டு சாப்பிடுவதற்காகக் கீழே வரவில்லை. அதற்குப் பதில் தன் பர்வத உடம்பைத் தூக்கிக் கொண்டு அவள் தாய் மேலும் கீழும் போய் வந்தாள். என் கணவர் காரியாலயத்திலிருந்து வந்ததிலிருந்து டாக்டர் வீட்டுக்கும், மருந்துக் கடைக்கும் அலைந்த வண்ணமாக இருந்தார். இரவு பத்து மணிக்குப் பிறகே சந்தடி குறைந்திருந்தது. ‘பிரசவத்திற்கு இன்னும் போதிருக்கிறது’ என்று சொல்லி டாக்டர் போய்விட்டதாக மாமியார் சொல்லிக் கொண்டாள்.

வேலைகளை முடித்துக் கொண்டு நான்மாடிக்கு வந்த போது தான் எனக்கு எத்தகைய அதிர்ச்சி காத்திருக்கிறது என்று புரிந்தது. எங்களுடைய அறை தான் பிரசவத்திற்கு ‘ஆகி’ வந்ததாம்! அங்குள்ள சில சாமான்கள் கூடத்துக்கு வந்திருந்தன. குழந்தைகள் கூடத்தில் உறங்கிக் கொண்டிருக்க என் கணவர் முன்புற வராந்தாவில் படுக்கை மீது சாய்ந்தவாறு ஏதோ புத்தகத்தில் ஆழ்ந்திருந்தார். வழக்கம் போல் மைத்துனர் தம் அறைக்குள் பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். லீலா மேஜை விளக்கு எரிய ஏதோ எழுதிய வண்ணம் இருந்தாள். அவள் அறைக்குள் வைத்திருந்த என் பொருள்கள், நான் அன்றிரவும் அதற்கு மேலும் எத்தனை நாட்களோ அவளுடன் கழிக்க வேண்டும் என்று யாரும் சொல்லாமல் விளக்கின. அர்த்தமற்ற, யாரிடமென்று சொல்ல முடியாததொரு கோபம், படபடப்பு, கவலை, ஏமாற்றம், துயரம் முதலிய எல்லா உணர்ச்சிகளும் என்னை வென்று அடிமையாக்கி விடும் போல் இருந்தன. போர்வையால் முகத்தை மூடிக் கொண்டு வெளிக்குத் தெரியாமல் மௌனமாகக் கண்ணீர் பெருக்கினேன்.

2.6 மலர்

அன்று வீடு திமிலோகப்பட்டது. கார்களின் சப்தமும் டாக்டர், நர்ஸ்களின் பாதரட்சை ஓசையும், காபி, வென்னீர் என்று சமையலறையில் எனக்கு வந்து குவிந்த உத்தரவுகளும், என் மாமியார் அடிக்கொரு தடவை மாடிக்கு ஏறிச் சென்றதும் அவசரத் தேவைக்கு வெளியே செல்வதற்காக என் கணவர் அன்று காரியாலயத்துக்குச் செல்லாமல் இருந்ததும், அந்த வீட்டுக்கே பட்டு முடிசூடா மன்னிதான் என்று விளக்கின. என்னதான் நல்லெண்ணங்கள் மூலம் நான் நிச்சலனமாக இருக்க முயன்றாலும், பலத்த மழைக்கும் புயலுக்கும் அறிகுறியாக அகலாமல் வந்து குவியும் கார் மேகங்களைப் போல் என் இருதயத்தே வந்து எல்லா உணர்ச்சிகளும் சூழ்ந்து கொண்டன. இளம் தம்பதிகள், துடிக்கும் ஆவலுடன் தனிமைக்கு ஏங்கி நிற்பார்கள் என்று ஏன் இந்த வீட்டில் யாருமே தங்கள் கவனத்தைச் செலுத்தவில்லை? என் மாமியார் தான் ஆகட்டும், வாழ்ந்து சுக துக்கங்கள் அனுபவித்தவள் அல்லவா? என் மைத்துனருக்குத்தான் எங்கள் விஷயத்தில் கண் குருடாகி விட வேண்டுமா?

நான் ஏழையாக இருக்கலாம். ஆபரணங்களும், பட்டாடைகளும் என்னை அலங்கரிக்காமல் இருக்கலாம். காரிலே உல்லாசச் சவாரி போகவும், இசை விருந்துகளை அனுபவிக்கவும், மின்சார விசிறியின் அடியில் உட்கார்ந்து அதிகாரம் செலுத்தவும் உரிமை அற்றவளாக இருக்கலாம். ஆனால் அன்பே உருக்கொண்ட கணவனைக் கைப்பிடித்திருக்கும் பெண் அல்லவா நான்? என்னிடம் உயிரையே வைத்திருப்பதாகத் தோன்றும் அவருடன் தோழமை பெற உரிமை உள்ளவன் அல்லவா நான்.

விதை இல்லாவிட்டால் பூ ஏது, கனி ஏது? முதல் முதலாக இந்த வீட்டில் சகலமான பேர்களும் என்னை அளவற்ற சுவாதீனத்துடன் சுசீலா, சுசீலா என்று அழைத்துச் சர்வ சுவாதீனமாகக் கட்டளை இடுவது எதனால் வந்தது? அவரை நான் மணந்திருப்பதால் தானே? கணவனுடைய வீட்டிலே போய் அமைதியாக உழைப்பதுடன் திருப்தி அடைந்து விட வேண்டும் என்று பரம ஏழையாக இருக்கும் பெண்ணாக இருந்தால் கூட, ஏன் அங்கஹினம் அவலட்சணம் என்ற குறைபாடுகள் உள்ள பெண்ணாக இருந்தால் கூட எண்ண மாட்டாளோ! வெளியே செல்லக் கூடாது, எவருடனும் அளவளாவக் கூடாது, பிறந்த வீட்டுடன் தொடர்பு கொள்ளக் கூடாது என்பன போன்ற சுதந்தரங்களில் வேண்டுமானாலும் தடை விதித்து உரிமைகளைப் பறித்துக் கொள்ளட்டும். மணவாழ்வின் ஜீவநாடியான உரிமைக்குக் கூட இடம் இல்லாத வீட்டிலே நான் என்றென்றும் சலனம் இல்லாமல் எப்படி வாழ முடியும்?

என் பேதமை எனக்கு நன்றாக விளங்குகிறது. எனக்கு இங்கே சகல சுதந்திரங்களும் இருக்கும், ஜகதுவைப் போல எவ்வித இன்னலுக்கும் ஆளாக வேண்டாம் என்று எண்ணினேனே, அது எத்தனை அறியாமை!

உள்ளே வலுக்கும் புயலோடு நான் போராடிக் கொண்டிருந்தேன்.

அவரோ, எப்போதும் போன்ற சாந்த முகத்துடன், இதழ்களிலே வழக்கம் போன்ற நகையுடன் குழந்தைகளுடன் சரளமாகப் பேசிக் கொண்டு நிச்சலனமாக வளைய வந்தார். இதைக் கண்ணுற்ற போது என்னுள்ளே புயலுக்கான எதிர்ப்புக் குறைந்து விடும் போல இருந்தது.

அவரும் இது போன்ற மனநிலையில் இருக்க வேண்டியவர் தாமே? இப்போது என்னைப் பாதித்திருக்கும் சங்கடங்கள் அவரையும் பாதித்திருக்க வேண்டுமல்லவா? பின் அவற்றின் ரேகைகள் கூட அவரிடம் தென்படவில்லையே! என்னைப் பார்க்கும் போது கூடச் சஞ்சலமற்றுப் புன்னகை செய்கிறாரே!

பொன்னொளியைப் பூசிக் கொண்டு விரிந்து பரந்திருக்கும் வானத்தில் இருள் தேவன் ஆட்சி புரிய வந்து விட்டானானால் சற்று முன்னால் ஜகஜ் ஜோதியாக மனத்தை மயக்கும்படி ரம்மியமாகத் தோன்றிய வானந்தானா என்று சம்சயிக்கும்படி பொன்னால் பூசப்பெற்ற ரேகை கூட இல்லாமல் அந்தகாரம் கப்பிக் கொண்டு விடும். அவர் அன்பின் அவதாரம். காவியங்கள் போற்றும் காதல் தெய்வம். அருங்குணக் குன்று என்றெல்லாம் போற்றியிருந்தேனே; கிடைத்தற்கரிய ஆதர்ச புருஷர் என்று உள்ளே பூரித்திருந்தேனே. அவை யாவும் உண்மைதானா, அல்லது புக்ககத்து வாழ்வைப்பற்றி நான் மனப்பால் குடித்திருந்ததைப் போல பேதமைக் கண்ணாடி பூண்டிருக்கும் என் கண்களின் தோற்றந்தானா? இந்தச் சந்தேகம் அவரிடம் நான் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கை என்ற கற்கோட்டையிலே சிறு நெகிழ்ச்சிக்கு இடமளித்து விட்டது போலப்பட்டது. எனக்கு ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதைப் போல. பிரமையோ என்னவோ, நான் எத்தனை முயன்றும் அவருடைய முதல் நாளைய அரவணைப்பு, நெஞ்சைத் தொட்ட கனிவுச் சொற்கள், எல்லாம் என் மனத்திரையில் தெளிவாக விழாமல் திறக்கப்பட்ட கதவுக்கு முன் காணும் ‘மாட்டினி’க் காட்சியைப் போல ஒளியிழந்து வெளிறித்தான் தோன்றின.

உண்மையைச் சொல்லப் போனால் பெண் நாணத் திரைக்குள் இருப்பவள். ஊர்வலத்தின் போது என் கையை அழுத்தித் துணிச்சலுடன் என்னைப் பேச்சுக்கு இழுத்தவருக்கு இப்போது தாமாக முயன்றால் என்னுடன் தனிமையை ஏற்படுத்திக் கொள்ள முடியாதா? பெரியவர்கள் மனதிற்கு ஏற்ப இணைந்து தான் போக வேண்டும் என்றாலும் அதற்கு ஒரு வரையறை வேண்டாமா? இவ்வளவு தூரம் அடிபணிந்து போகும் பயங்கொள்ளியா அவர்? மரியாதை என்றே வைத்துக் கொண்டாலும் விட்டுக் கொடுப்பதற்கு ஓர் எல்லையே இல்லையா? அப்படி என்றால் என்னிடம் அவருக்குக் கரை காணாத அன்பு இருக்கிறதென்பதற்கு அத்தாட்சியே காணவில்லையே? அவர் மனம் முழுவதும் அவர் சொல்லுவது போல என் மீதுள்ள பிரேமை வியாபித்திருக்குமானால் இத்தகைய அர்த்தமற்ற மரியாதைக்கு இடம் விட்டிருக்குமா?

கணவன் வீடு இந்திரலோகமாக இருக்கும் என்ற என் மனக்கோட்டை மண்ணோடு மண்ணாகப் போனதில் எனக்கு ஏற்பட்ட சங்கடம் என்றால் பொறுத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. வற்றாத ஜீவநதி போல என்னிடம் பெருக்கெடுத்து வரக்கூடியது அவர் பிரேமை என்று நான் எண்ணியிருப்பது கானல் நீராக… இருந்துவிட்டால்… இருந்துவிட்டால்…?

அம்மம்மா? என் மனம் தாளாது. ஆமாம், அதன் ஜீவநாடி அறுந்து விட்டது போல விண்டு விரிந்தாடும். மண்டை உடைந்தாலும் பொறுக்கலாம், மனம் உடைந்தால் பொறுக்க முடியாது.

அன்று பகல் பட்டுவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. மழை ஓய்ந்த பூமியைப் போல வீட்டின் அமளி எல்லாம் மாலை அடங்கியிருந்தது. கல்லூரியிலிருந்து வந்து விட்ட லீலா, என்னிடம் அந்தரங்கமாகப் பேசும் சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருந்ததைப் போலச் சமையலறை மேடை மீது வந்து உட்கார்ந்தாள். யாருமே அப்போது அங்கு இருக்கவில்லை. நான் என் கை வேலையிலிருந்து கவனத்தை அவள் மீது திருப்பினேன். எத்தனை தான் எனக்குச் சங்கடம் இருக்கட்டும். வேதனை இருக்கட்டும். அவள் முகத்தைக் கண்டவுடன் அவ்வளவும் பஞ்சாய்ப் பறந்துவிடும். உள்ளங்கள் இணைந்து தோழமை பூண்டிருப்பதன் இன்பம் இதுதான் போலும்.

“என்ன, மூர்த்தியை அப்புறம் பார்த்தீர்களா? என்ன பதில் கொடுத்தீர்கள்? எனக்கு ஒன்றுமே தெரிவிக்கவில்லையே! இன்னொரு தரம் அவர் இம்மாதிரி கடிதம் எழுதி அசட்டுத்தனம் செய்து வைக்கப் போகிறார்! அன்றே தப்பியது தம்பிரான் புண்ணியம். மன்னியாக இருந்திருந்தால், எனக்கு அப்பா எழுதும் கடிதத்தையே படித்து விட்டுக் கொடுப்பவர். உங்களுக்கு வரும் கடிதத்தை அவ்வளவு லகுவில் பார்க்காமல் கொடுத்திருக்க மாட்டார்?” என்று நான் மெதுவாக, பட்டுவின் தகாத செய்கையை அவளுக்குத் தெரிய வைத்தேன்.

“சிலர் தெரிந்து வேண்டுமென்றே தகாத காரியம் செய்கிறார்கள். இதிலெல்லாம் நீ பொறுத்துப் போவது சரியல்ல, சுசீ! இன்னொரு முறை அப்படிச் செய்தால் முகத்தில் அடித்தாற் போல், ‘என்ன விசேசம், மன்னீ? நீங்களே சொல்லி விடுங்கள்’ என்று கேள். அக்காவின் சர்வாதிகார மனப்பான்மை எனக்கு ஒவ்வொரு சமயத்தில் எரிச்சலை மூட்டுகிறது. பயப்பட வேண்டும் என்றால் அதற்கு வரம்பு இல்லையா? இதிலெல்லாம் உனக்குத் துணிச்சலே போதவில்லை” என்று என்னைக் கோபித்து விட்டு அவள், “போன வாரம் ராமு, மூர்த்தியைப் பார்த்தானாமே, சொன்னானா?” என்று கேட்டாள்.

“ஊஹூம்!” என்று நான் தலையை ஆட்டினேன்.

“ஹோட்டல் ஒன்றில் பார்த்தானாம். ‘சுசீலாவுக்கு நீ உறவு என்றே தெரியாதே! அடிக்கடி வீட்டிற்கு வந்து போய்க் கொண்டிரு’ என்று அழைத்தானாம்” என்றாள்.

“நீங்கள் அழைக்கத் தேவையில்லை. என்னை அங்கே இழுக்கக் கூடிய காந்தம் இருக்கிறது என்றாராக்கும்!”

“ஏய்! சுசீ?” என்று கோபக் குரலில் அடக்குவது போல் விளித்து அவள், “அவர் இங்கு வருகிறார் என்றாலே ஏனோ எனக்குப் பயமாக இருக்கிறது. நாலைந்து நாட்களுக்கு முன்பு நான் காலேஜ் முடிந்து வருகையில் கடற்கரையில் என்னைச் சந்தித்தார். இன்று கூட அங்கே பார்ப்பதாகக் கூறியிருந்தார். ஆனால் நான் காத்துப் பார்த்தேன். அவரைக் காணவில்லை. என்ன அசௌகரியமோ என்பது ஒரு புறம் இருக்க, இங்கு எல்லோருக்கும் தெரிந்து விட்டால் என்ன நேருமோ என்று வேறு திக்திக்கென்று அடித்துக் கொள்கிறது” என்றாள்.

“ஓகோ! அதுதான் இப்போதெல்லாம் நீங்கள் வீடு வர இருட்டும் சமயம் ஆகி விடுகிறதாக்கும்! அன்று, ‘இப்போதுதான் காலேஜிலிருந்து வருகிறாயா, லீலா!’ என்று மைத்துனர் கேட்டதற்கு, ‘ஆமாம், காலேஜிலே ஏதோ மீட்டிங்’ என்று புளுகினீர்களே, நிஜமாகவே அலுத்துக் கொள்வது போல் அப்படி நடித்தீர்களே!” என்று நான் வியப்பும் குறும்பும் கலந்த பார்வையில் அவளை நோக்கினேன்.

“உஷ்! வாயை மூடிக் கொள், சுசீ! ராமு வருகிறான்” என்று என்னை அவள் எச்சரித்தாள்.

“என்ன, இங்கே அந்தரங்க மந்திராலோசனை. பூவுடன் சேர்ந்து நாரும் மணம் பெற்ற கதையாக! லீலாவை முன்பெல்லாம் இந்தச் சமையலறைக்குள் பார்க்கவே முடியாது. இப்போது என்னடா என்றால் அடுப்பங்கறையிலேயே ஐக்கியமாகிக் கிடக்கிறாளே? பேசு பேசு என்று பேச உங்களுக்கு அப்படி என்னதான் சமாசாரம் இருக்கிறதோ, தெரியவில்லையே!” என்று அவர் நகைத்தார்.

“பார்த்துக் கொள், சுசீ! நீ பூவாம், நான் நாராம், நீதான் புது மனைவியாயிற்றே என்று சற்றைக்கொருதரம் வந்து கவனிக்காமல் இருக்கிறாயே நானாவது வந்து பார்த்து உற்சாகப்படுத்தலாம் என்று வந்தேன். நல்லதுக்குக் காலமில்லை!” என்று பதிலுக்கு நகைத்தாள் லீலா.

“சுசீலா, சொல்ல மறந்துவிட்டேனே. இப்போதுதான் ஸென்ட்ரல் அருகில் மூர்த்தியைப் பார்த்தேன். அவன் தங்கை இறந்து விட்டாளாம். ஊருக்குப் போகிறான். பாவம்! பெண் பிள்ளை மாதிரி அழுகிறான். ஒரே தங்கையாம்!” என்று பரபரப்புடன் சமாசாரத்தை அவிழ்த்தார் அவர் எனக்குத் துணுக்குற்றது.

அவளைத்தானே அப்போது பிரசவத்துக்கு அழைத்துச் சென்றான்? “அடபாவமே! பிரசவித்தா இறந்து போனாள்?”

“அப்படித்தான் போல் இருக்கிறது. ஐந்து மணிக்குத்தான் தந்தி கிடைத்ததாம். உடனேயே மெயிலில் கிளம்புகிறான். அவனைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமாக இருந்தது. அவன் தகப்பனார் வேறு நாலைந்து மாதங்களாகப் பாரிச வாயுவால் படுக்கையில் இருக்கிறாராமே; அதையும் சொல்லிக் கவலைப்பட்டுக் கொண்டான்.”

லீலா கல்லாகச் சமைந்து போயிருந்தாள்.

எனக்கோ செய்தி கேட்டதிலிருந்து எதுவுமே ஓடவில்லை. அந்தப் பெண்ணை நான் பார்த்தது கூட இல்லை. எந்த விதத்திலும் எனக்கு ஒட்டு உறவு என்று பந்தமும் இல்லை. ஆனால் மூர்த்தி அவளைக் காணாமல் இருக்கும் போதே நொடிக்கு நூறு முறை, ‘மஞ்சு, மஞ்சு’ என்று அன்று சினிமாப் பார்க்கும் போது பேசியபோது அண்ணன் தங்கை என்ற பாசத்தின் மென்மை வெளிப்பட்டது. அவளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது எனக்கு. என்ன இருந்தாலும் சகோதர பாசம் அலாதியான மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடியதுதான். ‘ஓர் அண்ணா எனக்கும் இப்படி இருந்தால்?’ என்று கூட நான் எண்ணிக் கொண்டேன். அந்த மஞ்சு இறந்து விட்டாள் என்ற செய்தி அவனுக்கு அதிர்ச்சியூட்டியதில் வியப்பு ஏதுமில்லையே? அதனால் தான் அவன் லீலாவிடம் கூறியிருந்தபடி அவளைச் சந்திக்கவில்லை.

அன்றிரவு லீலாவின் செய்கை என் வாழ்க்கையின் போக்கையே மாற்றியமைக்கக் கூடிய விதமாக இருந்து விட்டது. முன்னாள் போல அவள் எழுதிக் கொண்டிருக்கையில் வேலை முடிந்து வந்த நான் அலுப்புத் தாங்காமல் படுத்து விட்டேன். சற்றுத்தான் அசந்திருப்பேன். நான் விழித்துக் கொண்ட போது விளக்கு அணைந்திருந்தது. அறையிலே லீலா படுத்திருக்கவில்லை. அவள் கீழே படுக்கையைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறாள் என்பது எனக்கு முன்னே தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஏதோ அருவருக்கத்தக்க செய்கை செய்து விட்டவள் போல மனத்தில் வெறுப்பு, கசப்பைப் பரப்பியது. மணி என்ன ஆயிற்று என்று பார்த்தேன். பத்தரைதான் ஆகியிருந்தது. விளக்கை அணைத்து விட்டு அவள் சற்று முன் தான் போயிருக்க வேண்டும். சே! என்ன வெட்கக் கேடு? இத்தனையும் அவருடைய அர்த்தமற்ற மரியாதையால் வந்ததுதானே? அவரே அப்படிச் சலனமற்று இருக்கையில் என் மாமியார் என் ஏற்பாடு என்று என்னைக் கேவலமாக நினைக்கமாட்டாளா? கோபமும் வெறுப்பும் அளவுக்கு மேலிட்டன. அந்தப் பழைய நிகழ்ச்சிகள், வருங்காலத்தில் நிகழக் கூடியவைகளை முன்கூட்டியே எனக்கு உணர்த்திய துர்ச்சகுனங்கள், என் மனத்தின் மேல் பரப்பில் மிதந்தன. கசப்பை விழுங்குவது போல எல்லாவற்றையும் விழுங்கியவாறு நான் தூங்க முயன்றேன்.

வசந்தத்தின் தென்றல் எங்கும் வாசம் வீசியது. சுற்று முற்றும் என் கண்களுக்குத் தென்பட்ட இடமெல்லாம் வண்ண வண்ண மலர்களைத் தாங்கி நின்ர செடிகளும் கொடிகளும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. பச்சை இலைகளுடன் மிளிர்ந்த மரங்கள் ஆயிரமாயிரம் உயிர்த் துளிகள் பச்சை உருவத்தில் பூமிதேவியின் மடியிலிருந்து எழுந்து விட்டன போல் தோன்றின. புறாக்கள் தகதகவென்று வெளுப்பும் கறுப்புமாகப் பிரகாசிக்கும்படி இப்படியும் அப்படியும் வெண் சிறகுகளை வீசிக் கொண்டு வான வீதியிலே பறந்து சென்றன. பசும்புல் தரை – என்னைப் போதை வெறி கொள்ளும்படி செய்த புல்தரை – நான் என்றுமே பார்த்திராத காட்சியாகத் தோன்றியது. இயற்கை அன்னையின் எழிலிலே ஒன்றிப் போன நான் இன்னும் அதற்கு உறு துணையாகி இன்பம் பெற மனம் போனபடி பாட ஆரம்பித்தேன். ஆனால், ஏனோ மனத்தின் களிப்பிலிருந்து எழும்பிய கீதம் எனக்குச் சோக ரஸமாக ஒலிக்கிறது? என் தீங்குரலிலிருந்து மகிழ்ச்சி பொங்கும் நாதமே எழும்பவில்லையே!

பாடிவிட்டு நான் குலுங்க குலுங்க அழுதேன். எனக்கு அழ வேண்டும் போல் இருந்தது.

“சுசீலா…!” கண்ணீரிடையே நான் நிமிர்ந்து பார்த்தேன்.

ஆகா! குரலில் தான் எத்தனை அன்பு, எத்தனை இதம்!

“இங்கே வா அம்மா சுசீலா!” என்று அன்பே உருவெடுத்த இரு கரங்கள் என்னை அழைத்தன.

குழைந்து போல நான், நீட்டிய கரங்கள் முன்பு என்னை மறந்து ஓடி விடப் போனேன்.

‘சே! என்ன பிரமை? யாரையும் காணவில்லைஎயெ? அந்தக் கைகள் எங்கே?’ நான் கண்களைத் துடைத்துக் கொண்டு நெஞ்சம் துடிக்கப் பார்த்தேன்.

ஆ! இது என்ன? மின்னல் ஒன்று கண்களை வெட்டியது. கார் மேகங்கள் காது செவிபடும்படி கர்ஜித்தன. பார்க்க அதிபயங்கரமாக நெருப்புக் கண்களும் கோரப்பற்களுமாக ஓர் உருவம் எங்களூர்க் குளத்தங்கரைப் பிடாரி கோயிலுக்கருகில் நிற்கும் கறுப்பண்ணனின் சிலையைப் போன்ற நிஜ உருவம் ‘ஹஹ்ஹஹஹா!’ என்று இடி முழக்கக் குரலில் நகைத்தது. கண்களை இறுக மூடிக் கொண்டு நான், “நீ யார்? என்னை அன்புடன் அழைத்தவர் எங்கே? அந்தக் கைகள் எங்கே?” என்று கத்தினேன்.

“நான் தான்… நான் தான்…” என்ரு மீண்டும் பேய்ச் சிரிப்பு என் செவிகளில் பாய்ந்தது. நான் கிரீச்சிட்டேன்.

உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரையில் வேர்த்துக் கொட்டியது. என் இதழ்களில் ஏதோ சில்லென்று பட்டது. உடல் கிடுகிடென்று நடுங்கியது.

திடுக்கிட்டவளாக நான் விழித்துக் கொண்டேன்.

“பயந்து போனாயா சுசீலா?” என்று என் கன்னத்தை ஆதரவுடன் வருடினார் என் கணவர்.

‘இது இரவு. நான் சற்று முன் கண்டது கனவு. கதவைத் திறந்து கொண்டு அவர் வந்திருக்கிறார்’ என்று நான் அறியச் சில விநாடிகள் சென்றன.

அந்தக் கனவுதான்… அம்மம்மா! எத்தனை பயங்கரம்! அந்த அன்புக் கரங்கள் உண்மையில் அன்புக் கரங்கள் அல்ல.

என்னுடைய பலம் அவ்வளவையும் பிரயோகிப்பது போல அவர் கையை என் கன்னத்திலிருந்து அகற்றித் தூரத் தள்ளினேன்.

“சுசீ! நான் தான் சுசீ… இதோ பார்” என்று அவர் தம் முகத்தை எனக்குச் சமீபமாகக் கொணர்ந்தார்.

என் வெறுப்பு, கோபமாக உருவெடுத்தது. நாகப் பாம்பு போல் சீறியவளாக அவர் தோளைப் பிடித்துத் தள்ளினேன்.

“என்னம்மா சுசீலா? தூக்கக் கலக்கமா?” என்று மேலே தொங்கிய மங்கலான விளக்கொளியில் புன்னகை செய்த அவர் என்னை மீண்டும் தொட வந்தார். “சீ! என்னைத் தொடாதீர்கள்! ஆமாம். இவ்வளவு கீழ்த்தரமான மனசு படைத்த நீங்கள் என்னைத் தொட அருகதை அற்றவர்! உங்கள் ஆசைக்குப் பலியாக மாட்டேன்! இப்போதே வெளியே போகிறார்களா… இல்லை நான்…” என்ற ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் படபடத்தேன்.

“சுசீலா…!” என்ற அவர் குரல் விழிகள் எல்லாம் அசைவற்றுக் கெஞ்சின போல் இருந்தன.

என்னுடைய அப்போதைய மனநிலைக்கு அவை பின்னும் ஆத்திரமூட்டின.

“போகிறீர்களா, இல்லையா?” என்று எழுந்து நான் வெறி கொண்டவளைப் போன்று அவர் கைகளைப் பிடித்து வெளியேற்றப் போனேன். அவராகவே தலையைக் குனிந்து கொண்டு வெளியே போய்விட்டார். நான் மடாரென்று கதவைச் சாத்திக் கொண்டேன். ‘ஒரு பெண்ணுக்குள்ள தைரியங்கூட இல்லாத பயங்கொள்ளி அவர்! காதலுக்கு மதிப்புக் கொடுப்பவர். பெண்மையைப் போற்றுபவர் என்று நான் மனப்பால் குடித்தது அத்தனையும் கனவுதான். பிறர் தயவில் அடிமையாக உலவும் கோழை அவர்!’ என் நெஞ்சம் துடித்தது. உதடுகள் படபடத்தன. கண்கள் பொங்கு மாங் கடலைப் போலக் கண்ணீரைப் பெருக்கின.

– தொடரும்…

– நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது – 1953.

– பெண் குரல், முதல் பதிப்பு: நவம்பர் 1954, கலைமகள் காரியாலயம் சென்னை.

– பெண் குரல், முதல் பதிப்பு: 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

ராஜம் கிருஷ்ணன் ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *