நடை அழகு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 12, 2025
பார்வையிட்டோர்: 63 
 
 

குக்கிராமம் ஒன்றை நோக்கி பல்கலைக்கழகத்தில் கலைத்துறை பயிலும் மாணவியர் கூட்டமொன்று புறப்பட்டது. சாந்தி அவர்களிற்கு தலைமை வகித்தாள்.

திரு! எங்குமே திருவின் படைப்புகளைப் பற்றிய பேச்சுத்தான். இலக்கியத்தில் திரு புகழ்பூத்த எழுத்தாளராகிவிட்டார். அவரது ‘நியூ வேவ்’ பாணியிலான நடை இளைஞர் கூட்டத்தைக் கவர்ந்து கொண்டது. நேற்றுக்கூட வானொலியில் திருவின் ‘பழைய பானைக்குள் புதிய கள்ளு’ என்ற இசையும் கதையும் ஒலிபரப்பாகியிருந்தது.

அவரைச் சந்திப்பதற்காகத்தான் அந்தக்கூட்டம் ஆலாய்ப் பறந்து கொண்டிருந்தது. காதல் சுவை சொட்டும் கள்ளு, சாந்தியைக் கவர்ந்திருந்தது. அவள் திருவின் படைப்புகளை ஆய்வு செய்து கலைத்துறையில் பட்டம் பெற இருக்கின்றாள். அவளை ஆய்வு செய்வதற்காக மற்றைய நால்வரும்.

ஐந்து பெண்களும் சைக்கிளில் சவாரி செய்து ‘சடின் பிறேக்’ போட்டு திருவின் வீட்டிற்கு முன்னால் புழுதி கிழப்பினார்கள். புழுதி அடங்குவதற்கு முன் நாய் ஒன்றின் ஆரவாரம் தொடங்கியது. படலை திறந்து கிடந்தபடியால் உள்ளே புகுந்தார்கள். உள்ளேயிருந்து ஒரு நாய் ஓடிவந்தது. மாமரத்திற்குக் கீழே இருந்த ஒருவன் ‘றெக்ஸ் றெக்ஸ்’ என்று அதைக் கூப்பிட்டான். அவர்கள் பாவாடையை இழுத்துப் பிடித்தபடியே சைக்கிளை மாமரத்திற்குக் கிட்ட ஓரம் கட்டினார்கள். முற்றத்தில் புளுக்கொடியல், மிளகாய் வத்தல், ஊறுகாய் என்பன காய்ந்து கொண்டிருந்தன. மாமரத்திற்குக் கீழே மரக்குற்றி ஒன்றின்மீது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் அவற்றிற்கு காவலாக அமர்ந்திருந்தான். பக்கத்திலே கொஞ்சம் குறுணிக்கற்கள். அவன் அந்தப் பெண்களை நிமிர்ந்து பார்த்தான். பரட்டைத்தலை. ‘சேவ்’ செய்யப்படாத முகம். கசங்கிய ஆடை. பாக்கு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தான்.

“நாங்கள் றைற்ரர் திருவை மீற் பண்ணவேணும்.”

சத்தமில்லை. மீண்டும் கொஞ்சம் இறுக்கமான தொனியில் வந்தவர்களில் ஒருத்தி கேட்டாள்.

அவன் தனது வலது கையின் இரண்டு விரல்களையும் ‘வி’ போல விரித்து உதட்டருகே வைத்து அதற்கூடாகத் துப்பினான். ‘சளக்’ என்று மென்று கொண்டிருந்த பாக்கு வெற்றிலைக் கவளம் வெளியே வந்து விழுந்தது. காற்று அதில் கொஞ்சத்தைக் கவர்ந்து, ‘பன்னீர்’ வாடையென இவர்கள் மேல் தெளித்தது.

“என்ன விஷயம்?”

“பேட்டி ஒண்டு எடுக்க வேணும்.”

“அவர் வாசகசாலைப் பக்கம் போயிட்டார். இன்னும் ஒரு அரைமணி நேரம் கழிச்சு வாங்கோ” மீண்டும் ‘சளக்’. துப்பினான்.

“ஏய் டீசென்ரா பிஹேவ் பண்ணும். வேலைக்காரன்கூட ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறான்!”

“இதிலை நிக்கிற சாந்தி ஆரெண்டு தெரியுதா? சாந்தி, றைற்ரருக்கு வேண்டிய ஆள்.”

“அவர் வந்தா நாங்கள் வந்ததாகச் சொல்லும்.”

“எடியேய் உந்த லூசோடை என்ன கதை. நாங்கள் போயிட்டு ஹாவ் அன் அவரிலை வருவம்.”

எல்லோரும் போவதற்கு தயாரானார்கள்.

“ஒரு நிமிஷம் பொறுங்கள்” என்றான் அவன். தன்னுடைய வீட்டை நோக்கி ‘திலகா… திலகா’ என்று கூப்பிட்டான். சற்று நேரத்தில் வீட்டிற்குள்ளிருந்து ஒரு பெண் வெளியே வந்தாள்.

“திலகா நீர் ஏதாவது அலுவலா இருக்கின்றீரா?”

“ஒண்டுமில்லை. ஏன்?”

“இதிலை கொஞ்ச நேரம் இதுகளுக்குக் காவல் இருக்க முடியுமா? நான் இவையளுக்கு ஒரு பேட்டி குடுத்துவிட்டு வாறன்.”

எல்லோருடைய முகத்திலும் அதிர்ச்சி. அவர் மெல்ல மரத்தைப் பிடித்துக் கொண்டு எழும்பி நின்றார். பின் கால்களை எத்தி எத்தி தனது வீட்டை நோக்கி நடந்தார்.

“வாருங்கள். வீட்டிற்குள்ளிருந்து நாங்கள் பேசுவம்.”

சாந்தி அவரது நடையையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. அவளால் எதையுமே நம்ப முடியவில்லை. ஆனாலும் அவரது எழுத்து நடை அழகோ அழகு.

Sudhakar கே.எஸ்.சுதாகர் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதி வருகின்றார். இவரின் முதல் சிறுகதை "இனி ஒரு விதி செய்வோம்" ஈழநாடு வாரமலரில் வெளியானது. இவர் யாழ்ப்பாண மாவட்டம், தெல்லிப்பழை, வீமன்காமத்தைச் சேர்ந்தவர். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் ஆங்கில மகாவித்தியாலயத்திலும், உயர் கல்வியை தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் பயின்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றவர். நோர்வே தமிழ் சங்கம்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *