சிறியார் சிறு பிழையும் பெரியார் பொறையும்
கதையாசிரியர்: கா.அப்பாத்துரை
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: September 16, 2025
பார்வையிட்டோர்: 318
(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

திருநெல்வேலி வட்டத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் இசையரங்குகள் நடத்திப் பொருளீட்டி வந்தான். பொருள் வருவாயை மிகுதிப்படுத்த அவன் கையாண்ட முறைகள் பல. அவற்றுள் ஒன்று அவன் வெளியிட்ட துண்டறிக்கையில் அவன், தன்னை இசைவாணராகிய மணவாள நம் பியின் மாணாக்கன் என்று குறிப்பிட்டுக் கொண்ட தாகும். இக்குறிப்பு அவனுக்குப் பலர் நட்பையும் பாராட்டையும் தந்து மிகுதியான பொருள் வருவா யையும் உண்டுபண்ணவே அவன் எங்கும் இச் சூழ்ச்சியைக் கையாளலானான்.
மணவாள நம்பியின் ஊர் திருவனந்தை என்று அறியாத அவ்விளைஞன், அங்கும் இத்தகைய விளம்பரமே செய்திருந்தான். அவ்வூரார் ஒருவர் தற்செயலாக “நீர் மணவாள நம்பியின் மாணவரா யிருக்கிறீரே, அவர் ஊரில் அரங்கு நடத்தும்போது அவரையும் அழைக்க வேண்டாமா?” என்றார்.
எதிர்பாராத இவ்வுரையைக் கேட்டதும் இளை ஞனுக்குப் பெருங்கவலை ஏற்பட்டது. எங்கே தன் ‘குட்டு’ வெளிப்பட்டுத் தன் பிழைப்புக்குக் கேடு வருமோ என்று அவன் அஞ்சினான். ஆயினும் ஒருவாறு உளந்தேர்ந்து அவன் மணவாள நம்பி யின் இல்லமுசாவி அங்கே சென்று அவரிடம் தன் ஏழ்மை நிலை, தன் முயற்சி ஆகியவற்றைக் கனி வுடன் எடுத்துரைத்து இறுதியில் பிழைப்பை எண்ணித் தான்செய்த சிறுபிழையை வெளியிட்டுத் தன் னைப் பொறுத்து ஆதரிக்குமாறு மன்றாடினான்.
முதுமையால் உடல் தளர்ச்சியுற்றிருந்த மண வாள நம்பி புன்முறுவலுடன், “சரி, அரங்கில் பாடப்போகும் பாடலைக் கொஞ்சம் பாடு பார்ப் போம்!” என்றார். அரையுயிர் வந்தவனாய் இளை ஞன் பாடினான். மணவாள நம்பி அவற்றில் ஆங் காங்குச் சீர்திருத்தம் செய்து அப்பாடல்களைப் பின் னும் நயப்படுத்தியபின் ‘உன்பொய்யை மெய்யாக் கிவிட்டேன். இனி நீ கவலையின்றி உண்மையி லேயே என்மாணவன் என்று விளம்பரம் செய்ய லாம் என்றார்.
மணவாள நம்பியிடமிருந்து இசையை மட்டு மன்றி வாழ்வின் இசையாகிய பெருந்தன்மை யையும் அவன் கற்றுக்கொண்டான்.
– கதை இன்பம் (சிறு கதைகள்), மலர்-க, முதற் பதிப்பு: 1945, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.