சாவில் பிறந்த சிருஷ்டி
(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு மாதம் முன்பே கௌரியை அவள் தங்கையின் கலியாணத்தை முன்னிட்டு பிறந்தகம் அனுப்பிவிட்டு தனியாக வீட்டிலிருந்த சுப்பய்யருக்கு வாழ்க்கையே கசந்துவிட்டது. மனைவியை முன் கூட்டியே அனுப்பிய தன் தவறுக்கு தன்னையே நொந்து கொண்டார். ஒவ்வொரு நாளையும், துன்புறுத்தும் ஒவ்வொரு நாளாக கணக்கிட்டுக் கொண்டிருந்த சுப்பய்யருக்கு, தன் மைத்துனியின் கலியாணம் வெகுவாக தாமதப்பட்டு வருவதாகத் தோன்றியது. கலியாணத்தன்று போவதாக எண்ணியிருந்த அவர் புது மாப்பிள்ளை வந்து இறங்குமுன் முதல் மாப்பிள்ளையாக தன் மனைவி ஊர் போய் சேர்ந்தார்.
சுப்பய்யருக்கு ஐம்பது வயது இருக்கலாம். அவர் மதிப்பிற்கு குறைவாகவே தோற்றமளிக்கும் சரீர முடையவர். குழந்தைகளின்றி, பத்து வருஷங்களுக்கு முன் அவருடைய மூத்த மனைவி நோய்வாய்ப்பட்டு கொஞ்ச நாள் இருந்து இறந்துவிட்டாள். அதற்குப் பிறகு நான்கைந்து வருஷம் கல்யாணம் செய்து கொள்ளாமலே அவர் காலம் கழித்தார். பிறகு கௌரியை மணம் புரிந்து கொண்டு நாலைந்து வருஷம் ஆகிறது. சிறு வயதில் தாய் தந்தையை இழந்து பிரமச்சாரியாக வாழ்ந்த தனிமையையும் தன் மனதில் நன்றாக உணர்ந்தவர். ஆயினும் கடந்த ஒரு மாதமாக கௌரியை ஊருக்கு அனுப்பியதிலிருந்து அவர் கண்ட தனிமை ஏதோ ஒருவிதமாக மனதில் சஞ்சலம் கொடுப்பதை உணர்ந்தார். கல்யாணத்திற்குப் பிறகு அவர் கௌரியை பிறந்தகம் அனுப்பியதே இல்லை. எப்போ தாவது, அவ்வப்போது, ஏதாவது ஒரு காரணம் காட்டி தட்டிக் கழித்து விடுவார். சரியெனக் கேட்கும் தன் மனைவியின் மனப்போக்கை அவர் அப்போது ஆராய்ந்து அறிந்து கொள்ளாததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அவளும் போவதற்கு இஷ்டப்படவில்லை என தன் மனதிற்குகந்தவாறு சமாதானம் அடைவதுண்டு. தன் சுயநலத்தை அறியாது அவளுடைய சவுகரியத்தின் பொருட்டே தான் செய்வது சரி என்ற நினைவில் மனது சமாதானம் அடைகிறது. இவ்விதம் அவர் தம் மனைவி யிடம் கொண்ட பிரியம்தான் தனிமையில் காணும் சஞ்சலத்தின் காரணம் போலும். சுப்பய்யருக்கு கிராமத்தில் நல்ல சொத்தும் மதிப்பும் இருந்தன.
ஒரு சுமாரான குடும்பத்தில் ஐந்து குழந்தைகளுக்கு மூத்தவளாகப் பிறந்தவள் கெளரி. சிறு வயதிலிருந்து அவளுடைய குறுகுறுப்பும் அமைதியான அழகும் அவள் பெற்றோர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தன. அவளுக்கு வயது ஆக ஆக அவள் கல்யாணத்திற்காக அவர்கள் மிகக் கஷ்டப்பட்டனர். கல்யாணத்திற்குப் பிறகு கௌரியைப் பார்க்காவிட்டாலும் சுப்பய்யரோடு சௌகரியமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கிறாள் என்பதில் அவர்களுக்கு ஒருவகையில் திருப்திதான். கௌரி ஒரு கெட்டிக்காரப் பெண். தோற்றத்திலும் அவள் வெகு வசீகரமுடையவள். அவள் மனது சுலபமாகக் ‘கண்டறி வதற்கு அகப்படுவதில்லை. பிறருக்கு ஒன்றையும் நிச்சயம் கொடுக்காதவகையில்தான் அவள் போக்கும் பேச்சும் இருக்கும். தன்னுடைய கல்யாணத்திற்குப் பிறகு, தன் தாயார் தகப்பனார் மன ஆறுதல் சிறிது அடைந்தார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதில் தன் தியாகத்தினாலென அவர்கள் எண்ணங்கொள்ளா வகையிலும், தானும் அவ்வகை நினைப்பின்றியும்தான். அவர்களிடமும் தன் கணவனிடமும் நடந்து கொண்டாள். தன் தியாகம் என்ற நினைப்பில் கொள்ளும் பெருமிதமும் அவள் மனது கொள்ளவில்லை. அவ்விதமாயின் அதன் விளைவாக தான் தன் கணவனிடம் கொள்ளும் பிரியம் பாதிக்கப்படும் என்பதை சூட்சமமாக அவள் மனது உணர்ந்தது போலும். கல்யாணத்திற்குப் பின் வெகு சீக்கிரமாகக் கௌரியின் மனது அவள் வயதுக்கு மீறியே பக்குவமடைந்து விட்டது.
கல்யாண இரண்டாம் நாள். வாயில் திண்ணையில் ஏனையவர்கள் மத்தியில் பேசாது உட்கார்ந்து கொண் டிருந்தவர் கூடத்திலிருந்து கலகலப்பான பேச்சு, சிரிப்பு, சப்தங்கள் வந்து கொண்டிருப்பதைக் கவனித்தார். அந்தப் பேச்சு, சிரிப்பு, சப்தங்களிலும் தன் மனைவி கெளரியின் சிரிப்பொலி மேலோங்கி மிதந்து இவர் காதில் விழுந்து கொண்டிருந்தது. வெகு காலமாகதான் வாழ்க்கையில் கண்டுணராத ஒருவித இன்ப உணர்ச்சியுடன் உள்ளே தன் மனைவியைக் காணும் ஆவலில் நுழைந்தார். ரேழியி லிருந்து தன் மனைவி வெகு குதூகலத்தில் அநேகர் மத்தியில் ஒரு ராணியெனப் பார்வை கொண்டு பேசியும் சிரித்தும் நின்றிருந்ததைப் பார்த்தார். தனக்கு வாழ்க்கைப் பட்டதிலிருந்து கௌரியைத் தான் அறிந்து கொண்ட விதம் அவள் இவ்விதமான ஒரு கலகலப்பான பெண்ணென எண்ணம் கொள்ள முடியவில்லை. ஓர் உயர்வகை இன்பம் தனக்கு உண்டாக வேண்டியதை கூடியதை அவள் மறைத்து விடுகிறாள். வேண்டுமென்றுதானே தன்னிடம் மாறு விதமாகப் பழகுகிறாள். உள்ளே தன் பிறந்தகத்துக் கூடத்திலே அவள் தோற்றம், பேச்சு, சிரிப்பு, குதூகலம்… எல்லாவற்றையும் தன்னிடம் மறைத்துக் கொண்டுதான் பழகுகிறாள்… என்பதான எண்ணங்களைக் கொண்டு வாயிற்புறம் திண்ணையில் பழையபடி வந்து உட்கார்ந்து கொண்டார். திடீரென மனதில் ஒரு ஆத்திரம் காண, மறுபடியும் உள்ளே சென்றவர், தன் மனைவியைத் தனியே கூப்பிட்டு ஏதோ அவள் மனது நோகப் பேசி, உடனே ஊருக்குக் கிளம்ப ஏற்பாடு செய்யும்படிச் சொன்னார். தனக்கு இருப்புக் கொள்ளவில்லை என்றாலும், தன் மனைவியையும் விட்டுப்போக மனமில்லை. அநேக உயர்குணமும் ஞானமும் படைத்த சுப்பய்யருக்கு, இந்த மூர்த்தன்யமும் கூட இருந்தது. சமீபகாலமாக அதிக மாகவும் தலைகாட்ட ஆரம்பித்தது. வயது ஆக ஆக, அவருடைய முன்கோபம் கட்டுக்கடங்காது அதிகமாகி தன்னுடைய மனைவியிடமும் இடம் காலம் மாறி கொள்ளும் நிலைக்கு வந்தது.
கௌரிக்கு உள்ளூரக் கொழுந்து விட்டெரியும் கோபம் ஒருபக்கம். சமய சந்தர்ப்பத்தை உத்தேசித்து விகாரமாக இல்லாத வகையில் தன் வீட்டவர்களுக்கும் ஏனைய மற்றவர்களுக்கும் ஏதோ காரணங்கள் சொல்லி ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானாள். கல்யாண வீட்டை விட்டு வண்டியேறி ரயிலடியை அடைவதற்குள், சுப்பய்யர் மனது பல விதத்தில் சலிக்க ஆரம்பித்தது. தான் செய்தது சரிதானா என்பது புரியவில்லை. ஒரு உன்னதவகை என்பதின்றி, ஒதுங்கிப் பதுங்கி ஊளையிடுவது போன்று பயத்திலும் அருவெறுப்பிலும் தெரிந்து மனது ஒருவகை வருத்தமுற்றது. ஒரு நிச்சயமான மன உணர்ச்சியைக் கொள்ள அவருக்கு தெம்பில்லை. ஒருவரை யொருவர் நேராகப் பார்த்துக் கொள்ளாமலும் பேச்சில்லாமலும் ரயிலில் ஏறி அமர்ந்து கொண்டனர். பலவகை உணர்ச்சிப் பெருக்கில் ஊறித் திளைத்த மனதானது, வெறுப்பில் தான் ஊறிக் களைத்து நின்றது போலும் பரஸ்பர வெறுப்பில் ஒற்றுமை கொண்ட தம்பதிகளாக அன்று பிரயாணத்தைத் தொடங்கினர்.ரயிலும் புறப்பட்டு விட்டது.
வண்டி நகருமளவும், எதிரே, கீழே உலாவி நின்ற ஒரு வாலிபனும் வண்டி நகர்ந்ததும் வெகு நாசுக்காக ஓடி, வந்து தாவி, கைப்பிடியைப் பிடித்துக்கொண்டு ஏறினான். சின்ன கைகாட்டியைத் தாண்டுமளவும் கதவடியிலேயே நின்று பார்த்துவிட்டு சாவதானமாக உள்ளே வந்தான். எட்டி இருந்த காலி இடங்களை விட்டு விட்டு இவர்கள் எதிரில் அமர்ந்தான்; ஜன்னலுக்கு வெளியே தன்னுடைய பார்வையைக் கொள்ள, ஏங்கித் துடித்துப் பரந்து கிடந்த இயற்கைக் காட்சிகளைத் தலையை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் உள்ளத்தில் கண்ட இன்பத்தை சீட்டி மூலமாகவும், முணுமுணுப்பு கீதமாகவும் வெளிப் படுத்திக் கொண்டிருந்தான். இந்த நவ நாகரீக வாலிபனின் சேஷ்டைகள் இவ்விதங்களினாலன்றி எதிரிலுள்ளவர்களின் மதிப்பையும் கவனிப்பையும் கொள்ள முடியாது என்பது போன்றிருந்தன. எவ்வளவு நேரம்தான் அவனால் எதிரிலுள்ளவர்களை நினைத்துக் கொண்டு வெளியே பார்க்க முடியும் ? இவர்கள் பக்கம் திரும்பும்பொழுது, இவனையே வெகுநேரமாக எதிர் பார்த்தவர் போன்று, ‘எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே சார்…’ என்று சுப்பையர் கேட்டது இவனுக்குத் தூக்கி வாரிப் போடும்படி இருந்தது. அவருடைய சப்தமே யல்லாது கேள்வியல்ல. அவனுக்குப் புரியுமுன் மனது இன்பத்தில் திடுக்கிட்டு விட்டது போலும். அவர்களுடன் பேசுவதற்கான சூழ்ச்சிகளை யோசித்துக் கையாளுவதற்கு முன்பே, எதிர்பார்த்தது இவ்வளவு சுலபமாக நேர்ந்ததில் கொஞ்சம் குழப்ப மடைந்தான். பதில் ஒன்றும் சொல்லாமல் ஓட்டிக் கொண்டு கெஞ்சுத லான பாவத்தில், முகத்தில் லேசான அசட்டுப் புன் சிரிப்புடன் உடம்பை ஒருதரம் நெளிந்துக் கொண்டான். ஏதோ யோசிக்கும் பாவனையில் தலை குனிந்து கொண்டான்.
கௌரிக்கு வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை. கொஞ்சம் வாய்விட்டே சிரித்துவிட்டாள். சுப்பய்யர் இவள் பக்கம் திரும்பி ‘என்ன’ என்றதற்கு, ‘ஏதோ யோசனைகள்’ என்றாள்.
எதிரிலுள்ள வாலிபன் தன் கைக்குட்டையால் முகத்திற்கு ‘பாலிஷ்’ கொடுத்துக் கொண்டிருந்தான். பாவம், தற்கால வாலிபர்களின் பரிதவிப்பு, வெகு விநோதமாக அவன் உருக்கொண்டு நடையுடை பாவனை களில் ஒளிந்து தவித்தது.
கௌரியின் வசீகரம் வெகு நிரடானது, வெகு தெளிவானது. பெண்ணைப் படைத்தவன் பெண்களைப் பார்க்கும்போது தோன்ற எதையுமோ படைத்தானோ என்று எண்ண முடியுமேயல்லாது, இதைத்தான் என்று நிச்சய மாகக் கொள்ளும்படி இராது. இவளைப் பார்ப்பவர்களுக்கு ஒரேமாதிரி தோற்றம் கொடுக்கும் வகையல்ல அழகிய அவள் முகம். அறிய முடியாத அவள் மனப் போக்குடன் அவள் முகத்தோற்றமடையும், சலனம். அழகிற்குத்தான் எவ்வெவ்வகைச் சாயல்கள், அவள் மனது வெகு நேர்மையானது. எந்த ஆடவனையும் நோக்கின மறுகணம் அவள் கண்கள் லேசாக மாசடைந்து பாதி மூடிக் கொள்ளும், கனவென வாழ்க்கை கொண்ட கெளரிக்கு அன்று மனது சரியாக இல்லை.
பக்கத்து ஜங்ஷனை அடையும்போது பகல் பனிரெண்டு மணி இருக்கும். வண்டி நின்றவுடன் கையில் கூஜாவுடன் கப்பையர் கீழே இறங்கினார். வண்டி புறப்பட மணி அடித்தாகிவிட்டது. சுப்பையர் கூஜாவில் ஜலம் பிடித்துக் கொண்டு வந்தபாடில்லை. அவர் வராததில் சஞ்சலமடைந்தவளே போன்று, கௌரி வெளியில் அங்கு மிங்கும் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘வண்டி புறப்பட நேரமாகிவிட்டது. அவரைக் காணோமே…’ என்று பேச்சை எடுத்த வாலிபன் திரும்பிய அவள் கண்களின் பார்வையைக் கண்டபோது ஒன்றும் புரியாமல் நிறுத்திவிட்டு அவர் வருவதைக் கவனிப்பது போல வெளியே பார்த்தான்.
வேகமாக ஓடிவந்த கிழவர் வண்டி ஏறுவதும் வண்டி நகருவதும் ஒன்றாக இருந்தன. இரைந்து சிரித்துக் கொண்டும் நடு நடுவே இருமிக் கொண்டும் வந்தவர் கௌரியைப் பார்த்தது ஒருவிதமாகத் தெரிந்தது… ‘குழாயடியில் கூட்டம்… நின்றுகொண்டே இருந்ததில் ஒன்றுமே புரியவில்லை. முந்தாநாள் உன்னையழைக்க உங்களூர் வரும் ஞாபகம்தான் வண்டி ஊதினதும் தான் ரயிலில் எதையோ மறந்து வைத்துவிட்டு வெளியே அங்கே நிற்பதான ஞாபகம் வந்தது. உன் ஞாபகம்தான்……. வேகமாக ஓடிவந்து ஏறிக் கொண்டேன். வயதாச் சோன்னோ? வண்டி போனால்தான் என்ன என்று தோன்றியது, ஓடிவரும் போது… அடுத்த வண்டி இல்லையா… துணைக்கு நீங்கள் இல்லையா ஸார்… ரயில்லே போகிறபோதுதான் ஸார் குஷியாக என்ன வெல்லாமோ தோன்றுகிறது. ஸ்நேகமும் அகப்படுகிறது. நாளைக்குப் பின்னாலே நடக்கப் போகிறதெல்லாம் நேத்திக்கு முன்னாலே நடந்தது போல காலம் எல்லாம் தலைகீழே மாறிப் போகிறது ஸார்…’ என்று என்ன வெல்லாமோ இவளிடமும் அவனிடமும் மாறி மாறிப் பேசிக் கொண்டிருந்தார்.
கௌரிக்குத் துக்கம் தாங்கமுடியவில்லை. தன் கணவனின் இவ்வகைப் பேச்சுக்கு ஆதாரமான கோளாறை அவள் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தாள் போலும்! அறியாத ஒருவகை பயமும், தன் கணவனிடம் ஒருவித அனுதாபமும் அவள் மனது கொண்டது. தன்னைப் பற்றி தவறாக, அவரவர்கள் அபிப்பிராயம் போனவாக்கில் கொள்ளாத வகைக்கு, தான் எவ்விதம் இருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றவில்லை. ஏதோ ஒரு தவறிய சூழ்நிலையில் தான் அகப்பட்டுக் கொண்டு தத்தளிப்பதான எண்ணம் கொண்டாள். ஊரில் தன் தங்கையின் கலியாண இரண்டாம் நாள். அதை நினைக்கும்போது மனது வருத்தம் கொள்கிறது. தன்னால் ஆவது ஒன்றுமில்லை… விதி தனக்குத் தெரியாது பின்னின்று உந்தித் தள்ளத்தான் இருக்கிறது… ஏதோ நடக்கப் போவதில் நடந்ததென பின் ஆறுதலை முன்கூட்டிக் கொள்ளும்படிதான் இப்பொழுது இருக்கிறது… அவளால் மேலே யோசிக்க முடியவில்லை.
வாலிபன் கிழவரைப் பார்த்துச் சொல்லிக்கொண் டிருந்தான். ‘ஆமாம் – நீங்கள் வராதது பெண்ணிற்குக் கூட ரொம்ப கவலையாக இருந்தது… நான்கூட.. அவன் முடிக்கு முன் – ‘பெண்ணில்லை ஸார் – பெண்ணில்லை. அவள் நம்ப ஸம்ஸாரம். கௌரின்னு பேரு-‘ என்று சொல்லிச் சிரித்தார். வாய் நிறைய நின்ற வரிசையான பொய்ப் பற்களைக் காட்டி அவர் சிரித்ததானது, பயங்கரம் தோன்ற இருந்தது. அவர் மூளை சமீப காலமாக, ஏறாத ஒரு விருவிருப்புக் கொண்டிருப்பதை கௌரி உணர்ந்து கொண்டாள். காலையில் யார் முகத்தில் விழித்தோமோ என்று ஈன்னைத்தானே நொந்து கொண்டாள். நல்லபடியாக ஊரையாவது போய் அடைவோமா என்ற கவலையில், வேகம் கொண்டு பேசத் தன் கணவனுக்கு ஒரு வாலிபன் எதிரில் அகப்படுகிறான்!
“ஓகோ “ஒப்பா?”… ஏதாவது குழந்தை குட்டிகள்?” ‘இல்லை ஸார். இனிமேல்தான்… ஆசீர்வாதம்’ என்றார் கிழவர்.
கௌரி எங்கேயாவது ஓடிவிடலாமா என்ற எண்ணத்தில் கணவனைப் பார்த்தாள். அவரைப் பார்க்கும் போது மனது வேதனைதான் கொள்ளுகிறது.
‘கௌரி உன்கிட்ட ஒரு சமாசாரம்… குழாயடியில் உன்னை மறந்து நின்றிருந்தேன் என்று சொல்ல வில்லையா? அப்போது கூட்டத்தில் ஒருவன் உங்க எதிராளாத்து சுப்பிணி மாதிரி இருந்தான். அவனை ஊரிலே விட்டு வந்தோமே, எங்கே இங்கே ரயிலைத் துரத்திக் கொண்டு தொத்தி ஏறிக் கொண்டா வருகிறான் என்று நினைத்துக் கொண்டு, கூப்பிடலாம் என்று வாயெடுத்தேன். அவன் நல்ல வேளையா திரும்பினான். அவன் இல்லை. அவனே போலத்தான் ரொம்ப வேடிக்கை ஸார். கூப்பிட்டுவிட்டு இல்லை என்று தெரிந்தால் ஸார்…” கௌரியைப் பார்த்துக் கொண்டே ஸார் பட்டம் அவளுக்கு வழங்கியதை நினைத்து திடுக்கிட்டு இவன் பக்கம் திரும்பி,
….வேடிக்கை ஸார்… வேடிக்கை; எதற்காக சொல்லுகிறேன் என்றால் உங்க சாயலும் உண்டு ஸார்… வாலிபமாச் சோன்னோ….
‘கப்பிணீ’ என்ற வார்த்தை, முள்ளென பலவித அருத்தத்தில் கௌரியைக் குத்த உபயோகிக்கும் ஒரு அஸ்திரம். அவள் எதிராளாத்து “சுப்பிணி என்பவனுக்கு, சிறுவயதில் தன்னைத் தன் பெற்றோர்கள் கலியாணம் செய்து முடிக்க எண்ணியதும், அது நடக்காமல் போனதும் கௌரியின் குற்றத்தினாலல்ல. இந்த விஷயமும் சுப்பய்யருக்கு ஏதோ ஒரு சமயம் அவள் சொல்லித்தான் தெரியும். பலவிதத்தில் அவள் மனது நோக அருத்தம் கொடுக்குமாறு அவர் எப்போதாவது ‘கப்பிணி’ என்ற பதத்தை அந்தந்த சமய சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு எடுப்பார். சுப்பய்யர் அப்போது ஒன்று தெரிந்து கொள்ள வில்லை. புண்பட்டுக் காய்ச்சிய மனதிற்கு நோவில்லை என்பதைத்தான். அவிழ்ந்து பறந்த புடவையின் முந்தானை தன் கணவன் முகத்தில் பட, அதைப் பிடித்து இழுத்து தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் செருகிக் கொண்டாள் கௌரி.
ஒரு சிறிய ஸ்டேஷனில் வண்டி நின்றதும் ஏராளமான ஜனக்கூட்டம் இறங்கியது. அந்த ஊரில் சந்தை கூடுகிறது போலும், மணி அடித்து வண்டியும் நகர்ந்தது.
‘கிழக்கே போகிற வண்டிக்கு மூன்று தரம் மணி அடிக்க வேண்டும் ஸார். வண்டி மேற்கே போக இரண்டு தரம். உங்களுக்கு தெரியுமா ஸார்? மாத்தி அடிச்சா வண்டி போகிற பக்கம்தான் போகும்… ஆனால் திக்கு திசை மட்டும் மாறி விடும். கிழக்கு மேற்கா, தலை கீழா… எவ்வளவு பெரிய தலை போகிற விஷயம் மணி அடிப்பவன் கையில் இருக்கிறது தெரிகிறதா ஸார்… எவ்வளவு கவனமும் சிரத்தையும் வேண்டும் மணி அடிப்பவனுக்குக் கூட… அதோ அவன் நிற்பதைக் கவனியுங்கோ ஸார்… திக்கு திசை தெரியாது மாறாமலிருக்கப் பார்த்துக் கொண்டு…’
வண்டியில் கூட்டமில்லை. வெயில் மிக உக்கிரமாக இருந்தது. மேலே படும் காற்றும் அனல்போல் காய்கிறது. ‘நாவரட்சை தாங்கவில்லை. குடங்குடமாகக் குடித்தாலும் போதாது போலத் தோன்றுகிறது. இடமிருந்தும் படுக்கை கொள்ளவில்லை…’ என்று அவனிடம், என்ன என்னவோ அவர்பேசிக் கொண்டிருந்தது ஒன்றும் கௌரியின் மனதில் படவில்லை. ஒரே விதமாக விட்டுவிட்டு, புரியாத வகையில் விடாது, புரிந்து கொள்ளும் வரையில் உளறிக் கொட்டும் கோட்சொல்லி போல ஒலித்துக் கொண்டிருந்த ரயில் சப்தத்தில் அவள் ஈடுபட்டிருந்தாள்.
அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்றவுடன், மறு ஒரு முறை கூஜாவுடன் சுப்பையர் கீழே இறங்கினார். போனவர், சீக்கிரமே, தின்பதற்குக் கொஞ்சம் பழமும் கூஜாவில் காப்பியும் வாங்கி வந்து கெளரியின் பக்கத்தில் வைத்து விட்டு நின்றவர் அவளைப் பார்த்தார். பிறகு இருவரையும் மாறி மாறிப் பார்த்தார். அந்த வாலிபன் சட்டென எழுந்து ‘நானும் கொஞ்சம் போய் ஏதாவது சாப்பிட்டு விட்டு வருகிறேன்’ என்று இவரைப் பார்த்து பேச ஆரம்பித்தவன் தன் கைக் கடிகாரத்தைப் பார்த்து விட்டு ‘வண்டி கிளம்ப இன்னும் கொஞ்ச நேரம் இருக்கிறது’ எனச் சொல்லி முடித்தான்.
‘நல்ல உயர்ந்த ரக கடியாரம்போல் தோன்றுகிறதே ஸார்… பதினைந்து ரூபாய் பெறுமா? கடிகாரங்களே இப்போது கன்னாபின்னாவென்று கண்ட பேர்வழிகள் கையில் கட்டிக் கொள்ளுவதால் ஆனைவிலை குதிரை விலையாக விற்கிறது ஸார்… என்ன ஸார் நான் சொல்லு கிறது?’ என்றவர் அவனைத் தடுத்து ‘நீங்கள் வேண்டாம்… நானே போய்விட்டு வருகிறேன்…’ என மறு ஒருமுறை வெளியே சென்றார். அவரைத் தடுக்க முடியாமல் அந்த வாலிபன் தன் இருப்பிடத்தில் உட்கார்ந்து கொண்டான்.
கௌரிக்கு தன் கணவனும் வாலிபனும் தன்னைக் கவனிக்கும் விதம், நிச்சயமெனத் தெளிவுறாது இருந்தவை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவுபடலாயிற்று. பாவம் என்னவாயினும் அவள் சிறு பெண்தானே? இருபது வயது கூட இருக்காது. கால வித்தியாசம் என்பதால் தன்னைப் பிடிக்க கிழவனும் வாலிபனும் ஒன்றெனத்தான் தென் படுகிறார்கள். காலையிலிருந்து தன்னைப் பிடித்த சனியன் பல ரூபத்தில் ஆட்டுகிறான். கிழவனாகிக் கணவனாகி றான். ஓடும் ரயிலிலும் தொத்தி ஏறி எதிரில் உட்கார வாலிபம் கொள்கிறான்; தான் பிறந்தவுடன் தன் உயிரைப் பிடித்த சனியன் தன் பெண் உருவம் என்பதை அவள் அறிந்தாள் போலும். உயிரைக் கொண்டு உடம்பைத் தொலைத்து வாழ முடிகிறதில்லை. பெண்களென்றால் ஆறுதலுக்கு அழுவதற்குமில்லை, சிரிப்பதற்குமில்லை ஆடவர்களிடையே. அவள் மார்பிலிருந்து விம்மி யெழுந்த மூச்சானது சப்தமற்றுத்தான் வெளிக்கலந்தது. மனதில் ஒரு சக்தி வேகம் கொள்ள அவள் முகம் தெளிவடைந்து காணப்பட்டது. உலகைத் தழுவும் ‘பெண்மை’யை விசுவ ரூபத்தில் கொண்டாள் போலும்.
வெளியே சென்ற கிழவர் மெதுவாகவே தின்பண்டங் களை வாங்கி வந்தார். வரும்போதே தன் வருகையை சிரிப்பிலும் இருமலிலும் முன்னதாகவே தெரிவித்துக் கொண்டு வந்தார். ஒரு சந்தேகத்தை ஒரு வகையாக நிச்சயமெனத் தீர்த்துக்கொள்ள அவர் மனது பயம் கொண்டது போலும். வாங்கி வந்ததை அவன் கையில் கொடுத்தபோது, அவன் மற்றொரு கையை சட்டை ஜேபில் கொண்டு போனான். ‘பாதகமில்லை ஸார்… கையை வெளியில் எடுங்கள்… ஒன்றும் பிரமாதமில்லை… அசல் ரயில் சிநேகிதம் போல பழகுகிறீர்களே. நான் உங்களைக் கண்டவுடனே கேட்கவில்லையா? யாரோ எங்கேயோ பார்த்த முகமாக இருக்கிறது என்று…’ என்று சொல்லிச் சிரித்தார்.
நல்ல கோடை, பிற்பகல். வரண்ட வாய்க்கால், வயல்களின் குறுக்கே ரயில் ஓடிக்கொண்டிருந்தது. எட்டிய பனந்தோப்புகள், தெரிந்து கொண்டும் ஒன்று மறைந்த பின் மற்றொன்று தெரியவும், மறையவும் வரிசையாக வந்து கொண்டிருந்தவை, ஒன்றே மறைந்து தோற்றம் கொடுத்து விளையாடுவது போன்று தோன்றியது. இங்கு மங்குமாக ரயில் பாதையருகில் தோன்றி மறையவிருக்கும் குட்டை களின் குழம்பிய சேற்று நீரில் எருமைகள் இன்பத்தில் மூழ்கிப் புரண்டு கொண்டிருந்தன. அவள் எதிரில், தனக்குத் தோன்று முன்பே மறைய இருக்கிறதே தன் மன இன்பம் என நினைத்தான் வாலிபன். ஒருகால் பிறர் ஆனந்தத்தைத் தோன்றுமுன் விழுங்க இருக்கிறதா அந்தக் கிழபூதம் என அவரைப் பார்த்தான். அவர் சிரித்துக் கொண்டிருந்தார். அவர் தொலைந்தால் தன் இன்பம் சாகவதமாகுமா? மேலே யோசிக்க முடியவில்லை. பாவம் அவனால் என்ன செய்ய முடியும்? அவனால் அவர்களுக்கு எதிரில் உட்கார்ந்து இருக்கவும் முடியவில்லை. அங்கிருந்து நழுவிப் போய் எட்டிய அந்த காலியிடத்திலும் உட்காரும் வழி புரியவில்லை. ஏதோ ஒரு சங்கடத்தில் தான் அகப்பட்டுத் தத்தளிப்பதான எண்ணம் அவன் மனதில் கொண்டான். மாலைப்பொழுது கண்டு கொண்டு இருந்தது. அடித்த பஞ்சு போன்று ஆகாயத்தில் மேகத் திட்டுகள் மிதந்து கொண்டிருந்தன. மேற்கு அடிவானத்தில் அசைவற்றுக் கிடந்த மேக முகப்புகளுக்கு பொன் வரம்பு காட்டி சூரியன் மறைய இன்னும் கொஞ்ச நேரம் இருந்தது.
கௌரியின் கண்கள் கலங்கிச் சிவந்து இருந்தன. சலிக்கும் அவள் முக அழகும் ஒரே விதத்தில் தோற்றம் கொடுத்தது. விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவது தானா ஆடவர் வாழ்க்கை! கிட்டே நெருங்க கவர்ச்சி கொடுக்காது இருக்க எப்படி முடியும் பெண்களால்?
இருள் சுடரைக்கொண்டு விளக்காக முடியுமா? தன்னைத்தானே நொந்து கொண்டாள். அவள் கண்கள் சோர்வு கொண்டு பாதி மூடிக் கொண்டன. எல்லைக் கோட்டருகில் தெரியும் ஒரு வெளி, அதனைப் பொருள் கொள்ள அவளுடைய பகற் கனவினாலும் முடியவில்லை போலும்.
தோப்பின் நடுவில் நின்ற ஒரு சிறு குடிசை மரத்திடை எட்டிப் பார்ப்பது போலத் தெரிந்தது. ரயிலோடு மெதுவாக கொஞ்ச தூரம் ஊர்ந்து வந்தது. அதுவும் பின் தங்கி பார்வையில் மறைந்து விட்டது. ஒரு பயங்கரத்தின் நடுவில் எவ்வளவு நேரம் நின்று கொண்டிருக்க முடிகிறது? நின்றவிடத்திலிருந்து பிரியும் பாதைகளென எண்ணற்றவை நேராகக் கொஞ்ச தூரம் சென்று, திருப்பத்தில் கோணலாக வளைந்து மறைந்து கொண்டன. அநேகர் தன்னை விட்டு விட்டு, எட்டி தன் தலையை மட்டும் சுமந்து கொண்டு எங்கேயோ சென்று கொண்டிருந்தனர். ஒன்று கூடி தனக்குத் தெரியாமலே தன்னப் பற்றி சதியாலோசனை செய்கிறார்கள். நெருங்கித் தெரிந்தாலும் புரியாத வழிக்குத் தான் தன்னைக் கலக்காமல் எட்டி மறைகிறார்கள். ஏதோ உருளும் சப்தங்கள் மட்டும் கேட்டுக் கொண்டிருக்கின்றன.
சாலை ஓரத்தில் ஒரு கிழவி உட்கார்ந்து கொண்டிருக் கிறாள். அவளைத் தெரியாமல் மறைத்து மூடிக் கொண் டிருக்கும் புற்கள் கூரிய கோரைப் பற்களாக இருந்தன. வெகு அப்பால் உள்ள ஒரு அழகிய நகரை அடையும் ஆவலை அவள் வெகுநாளாகப் பாடிக்கொண்டு இருக்கிறாள். உள்ளம் கவரும் ஒரு கீதம் இவளைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு கிட்டே நெருங்க பயம் கொள்கிறது. ‘என்ன கௌரி, தூக்கமா…’ என்றார் சுப்பய்யர். இல்லை எனச் சொல்லி ஏதோ பேசிக்கொண்டிருந்த அவரையும் அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு மறுபடியும் தலையைக் கீழே குனிந்து கொண்டாள்…..
அப்பாலும் இப்பாலும் ஒரு கீதம் மௌனமாக ஒலிக்கிறது… ‘ஏ குட்டி என்ன பாட்டு’ என்று பார்த்தவுடன் புற்கள் காற்றுடன் ஓடிவிட்டன. தனது பொக்கை வாயைத் திறந்து காட்டி ‘எத்தனை பேரோ பார்த்தாகி, நீ தானா பாக்கி?…’ என்று தனக்குத்தானே சிரித்துக் கொண்டாள். ஒன்றும் புரியாமல் தலைமயிரைக் கோதிக்கொண்ட போது தன் தலையைக் காணவில்லை. சதியாலோசனைக் காரர்களிடம் விட்டு வந்தது ஞாபகம் வந்தது. எதை தனக்குத் தெரியாததை எழுதி தலைக்குள் புகுத்தி விடுகிறார்களோ என்ற பயத்தில் நின்று கொண்டு சுற்றும் முற்றும் கவனித்தாள். அவர்கள் தங்களிஷ்டமான யோசனைகளுடன் தலையைத் தூக்கிக்கொண்டு வந்தனர். இவளைத் தேடி ‘ஜே – ஜே’ எனக் கோஷமிட்டுக் கொண்டு இவளைச் சுற்றிச் சுற்றி தேடி அலைந்து கொண்டிருந் தார்கள்… வாடி வதங்கிய பூக்கள் அப்பால் ஆடிக் கொண்டும் அமுது கொண்டுமிருந்தன. அவைகளின் மணம் ஒருவர் மூக்கிலும் படாது, மறைந்து, பதுங்கி, எட்டே ஓடி,சிரித்துக் கொண்டிருந்தது. பூக்களின் நடுவில் நின்று கொண்டிருந்தாள் கெளரி… தன்னைச் சுற்றிலும் ஒரு ஒளி வெறிச்சென்று காய்ந்து கொண்டிருந்தது. மறையும் சூரிய கிரணங்கள் ரயில் ஜன்னல் வழியாக இவள் முகத்தில் விழுந்து கொண்டிருந்தது. திடுக்கிட்டுக் கண்விழித்தாள்.
தன் கணவன் எதையோ வெகு சுவாரஸ்யமாக இரைந்து சொல்லிக் கொண்டிருந்தான். வெகு அலுப்பில் சிரத்தையாகக் கேட்கும் பாவனையில், அடிக்கடி தலையை ஆட்டிக் கொண்டிருந்த அந்த வாலிபனைப் பார்த்து அனுதாபங்கொண்டு ‘ஏன் இந்த துன்பமெல்லாம் உனக்கு ‘ எனக் கௌரிக்குக் கேட்கத் தோன்றியது. அவள் அவனைப் பார்த்த பார்வைகூட அலுத்துக் கொண்டான் போலும், அவள் பக்கம் பார்க்காமலே வேறுபக்கம் தலையைத் திருப்பிக் கொண்டான்.
‘ஆமாம் ஸார், நான் சிறிது முன்னால் சொன்னேனே புரிஞ்சுதோன்னோ… வெளியே பார்க்காதே அம்பி, கண்ணில் தூசி விழும். ரொம்ப தொந்திரவு கொடுக்கும், நேரே இங்கே பாருங்கோ… ஏன் எதற்கென்றால் அவ அப்பன் பாட்டன் யார், எவர் என்று கேட்காதே.
அப்பனையே தெரிந்துகொள்ள முடியாதென்றால், பாட்டன் எங்கிருந்து குதிப்பான்?…… ஆனால் அப்பன் வைத்த ஆஸ்தியாகத்தானே ஒரு வேலையை மூன்று பேரும் கண்டிஷனோடு பிரித்துக் கொண்டார்கள். ஒரு முழு வேலையை இந்த பிரகஸ்பதிகள் மூன்றாகப் பிரித்துக் கொண்டார்கள். செய்தால் மூன்று பேரும் சேர்ந்து செய்யவேண்டும் நிறுத்தினால் மூன்று பேரும் சேர்ந்து ‘ரெஸ்ட்’ எடுத்துக்க வேண்டும்.
‘இந்த திருமூர்த்திகள் கிளம்பி ஊருக்கு வந்து ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொண்டு வேலைக்கு ஆரம்பித் தார்கள். ரொம்ப நாள் செய்தார்கள் ஒற்றுமையாக… கிரேதாயுகம்… திரேதாயுகம்… துவாபர யுகம்… முழுசா மூன்று யுகங்கள் ஐயா… ஒரு யுகம் பாக்கி, இந்த கலியுகம்தான். வேலை கலைந்து சாப்பிட்டுத் தூங்க. கலி பிறந்ததே பாருங்க ஸார், நம்மைப் பிடித்து ஆட்டுகிற கலி, அதைத்தான் சொல்லுகிறேன். அதுதான் பாக்கி. அப்போது பிரும்மாவிற்கு கொஞ்சம் தூக்கம் கண்ணை அமட்டியது. காப்பி கீப்பி, பொடி கிடி என்று என்ன வெல்லாமோ குடித்தும்போட்டும் பார்த்தான் போலிருக்கிறது… இதைத் தான் ஸார் அந்த புராணத்தில் நன்றாக சொல்லி இருக்கிறது நான் படிச்சு இருக்கேன், ஒரு காலத்திலே பக்தி சிரத்தையாக, வேதாந்தம், புராணம், அது இது என்று என்னவெல்லாமோ படித்து, முடித்து கண்டது என்ன இப்போது?… உங்களைத்தான், ஐயா நீங்களும் இதைக் கேட்டது உண்டா? கண்டது என்ன என்று தான் சொல்ல முடிகிறதா? போகிற வழியும் தெரியவில்லை. வந்த வழியும் நன்றாகப் புரிந்த பாடில்லை. விட்டுத் தள்ளுங்கோ எல்லா வற்றையும் ஸார்… எனக்கென்ன வேண்டி கிடக்கிறது? எனக்கு நடக்க வேண்டியதெல்லாம் நடந்தாச்சு என்பது தானே இனிமேல்’ என்று சொல்லிக் கொண்டிருந்தவர் கௌரி பக்கம் திரும்பி ‘கௌரி மாரைக் கொஞ்சம் வலிக்கிறது. கூஜாவிலிருந்து ஜலம் கொஞ்சம் எடு… இறங்க வேண்டிய ஸ்டேஷனும் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஸ்டேஷன். ஊரிலிருந்து கூட வண்டி வந்து இருக்கலாம்…’ என்று அவளிடம் சொல்லி அவள் கொடுத்த தீர்த்தம் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு இடதுமாரை ஒரு கையால் அமுக்கிக் கொண்டும் கனைத்துக் கொண்டும் அந்த வாலிபனைப் பார்த்து மறுபடியும் பேச்சை ஆரம்பித்தார்.
‘சொல்லுகிறதெல்லாம் பாதியிலே விட்டுப் போகிறது சொல்ல வந்ததை எல்லாம் எப்பவோ சொல்லியாகிவிட்டது என்றுகூடத் தோன்றுகிறது… ஆமாம் பிரும்மாவிற்குத் தூக்கம் வந்து விட்டது. விஷ்ணுவைக் கேட்டான் “கொஞ்சம் வேலையை நிப்பாட்டு. ஒரு சின்ன தூக்கம் போட்டுவிட்டு ஓடிவந்து விடுகிறேன்” என்றான். சரிதான் நடுவிலும் கொஞ்சம் சாப்பிடலாம் என்று அந்தச் சாப்பாட்டு ராமன் சரி என்றான்… சிவனைப் போய் கேட்டாலோ, அது ஒரு பைத்தியம். ‘முடியவே முடியாது. நீ கேட்கிறதினாலே நிச்சயமாக முடியாது. இப்போதுதான் எனக்குக் குஷி கண்டிருக்கிறது என்று சொல்லிவிட்டான். என்ன கெஞ்சியும் மிஞ்சியும் அவனிடம் பலிக்கவில்லை. கோபம் வருகிறது… ஆனால் யார் யாரை என்ன செய்ய முடியும் ஸார்… இந்தக் காலத்திலே எல்லோரும் ஈசுவரர்கள் இல்லையா? எப்படியாவது துலைந்து போகிறது. அவா அவா தலை எழுத்துப்படி ஆகட்டும். நடக்கப்போவதுதான் நடந்தது. ஆகப் போகிறது தலை எழுத்தாக, என நினைத்துக் கொண்டு பிரும்மா கண் அசந்து தூங்கி விட்டான். கேளுங்க ஸார் ரொம்ப வேடிக்கை… என்ன உங்களுக்கும் என்ன தூக்கமா?’
சிவன் அழித்துக் கொண்டே விடாது வேலையை செய்து கொண்டிருந்தான். பிரும்மா படைத்ததை எல்லாம் குஷியில், ஒரு நொடியில் அழித்து முடித்துவிட்டான். மேலும் மேலும் சிவன் அழித்துக் கொண்டே இருந்தான் ஸார். பிரும்மா தூங்கிக் கொண்டு இருக்கான். படைத்தது ஆன பிறகும் பிரும்மா படைக்காததையும் சேர்த்து அழித்துக் கொண்டிருக்கிறான் இவன். சாமிகளோன்னோ எல்லாம் செய்ய முடியும் அவர்களால். தூங்கிவிட்டு பிரும்மா தன் வேலைக்கு ஆரம்பித்தார். அதுதான் ஸார் உன்னை, என்னை, இந்த பொம்பிள்ளை, நாய், நரி… எல்லாவற்றையும் படைக்கிற பிரும்மா சிருஷ்டி கொள் வதற்கு முன்னால்தான் அவைகள் சிவனால் அழிக்கப்பட்டு விட்டாச்சே. இப்படிப் படைக்கிறதிலே ஏதாவது பலன் உண்டா ஸார் சொல்லுங்கோ… என்ன பிறவிகள் நாம் எல்லாம் இந்தக் கலியில், துள்ளுகிற தரிதலைகள் தான். அந்தத் திருமூர்த்திகளின் போட்டி நம்மை எல்லாம் உயிர் இல்லாமல் தவிக்க விட்டுக் கொண்டிருக்கு. எல்லாம் தரிதலையாட்டம்தான் ஸார் இந்தக் காலத்திலே… வேறு என்ன சொல்ல இருக்கிறது ஸார்.’
ஸ்டேஷன் வந்துவிட்டது. வண்டி நிற்கப் போகிறது. ‘கௌரி என்ன தூக்கமோ?… ஊர் வந்து விட்டது; சாமான்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொள்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தவர், இடத்திலிருந்து எழுந்த இவனைப் பார்த்து ‘என்ன ஸார் நீங்களும் இங்கேதான் இறங்கணுமா?… மறந்தே போய்விட்டதே பேரைக் கேட்க… உங்கள் பேர் என்ன ஸார்’ என்றார்.
எழுந்து அவன் நின்றுகொண்டே ‘கப்பு…’ என்றான்.
‘என்ன வேடிக்கை ஸார்! என் பேரே!… நானேதான் போல!… சின்ன வயதில் உங்களைப் போலத்தான் இருந்திருப்பேன்போல ஸார்… என்ன கௌரி நான் சொல்வது சின்ன வயதில் அவரைப் போல தானோ நானும்… என்ன மறதி போங்கோ… உனக்கு எப்படித் தெரியும் அப்போ என்னை – போட்டோ பிடித்துக் கொள்ள அப்போது மறந்து விட்டேன்… என்ன ஸார் முகம் வேர்க்கிறது… மாத்தி அடித்த மணிக்கு திக்கு திசை மாறுவது போல. உங்களைப் பார்த்தால் காலமாறுதல் நன்றாகத் தோன்றுகிறது ஸார்… ஊருக்குப் போனதும் மறக்காமல் போட்டோ எடுத்து வைச்சுக்கோங்கோ…’ என்று சொல்லிக் கொண்டே ஊர் வந்துவிட்டது என்று வண்டி நிற்குமுன் எழுந்தவர் கொஞ்சம் தள்ளாடிச் சாய்ந்தார். பக்கத்தில் இருந்த கௌரியின் அணைப்பில் அகப்பட்டுக் கீழே விழாது தப்பினார்.
வாலிபன் அவ்விடத்தில் இருப்புக் கொள்ளாமல் மெதுவாக நழுவி மூலையில் காலியாக இருந்த ஒரு இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
– சிவாஜி 1954.
– மௌனியின் கதைகள். முதற் பதிப்பு: 2013. தொகுப்பு: கி.அ.சச்சிதானந்தம், சாகித்திய அகாதெமி வெளியீடு, சென்னை.
![]() |
மௌனி (ஜூலை 27, 1907 - ஜூலை 6, 1985) தமிழில் சிறுகதைகளை எழுதிய எழுத்தாளர்.மணிக்கொடி இலக்கியக் குழுவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்தப்படுபவர். மொத்தம் 24 கதைகளே எழுதியிருக்கும் மௌனி, தன் கதைகளில் மனிதர்களின் அகப் பிரச்சினையையே அதிகம் எழுதியுள்ளார். மனதின் கட்டற்றட தன்மையை பூடகமான மொழியில், தத்துவ சாயலுடன் வெளிப்படுத்திய எழுத்தாளர். எஸ். மணி ஐயர் என்கின்ற இயற் பெயருடைய மௌனி, ஜூலை 27, 1907-ல் தஞ்சாவூர் மாவட்டம்,…மேலும் படிக்க... |