கரூர் திருச்சிப் புலவர்கள்





இருவரும் மாமன் மைத்துன உறவினர். கரூர்ப் புலவர், மாமன்; திருச்சிப் புலவர், மைத்துனர். கரூர்ப் புலவர் தன் மைத்துனரிடம் ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னார். திருச்சிப் புலவரோ பிடிவாதமாகச் செய்ய மறுத்துவிட்டார். அவருக்குக் கோபம்.
‘மைத்துனரே, எம் கால்வழியே வருகிற நீரைக் குடிக்கிற உமக்கு இவ்வளவு இருந்தால், எமக்கு எவ்வளவு இருக்கும்’ – என்று நிமிர்ந்து பேசினார்.
இதற்கு மூன்று பொருள் –
கால்வழி நீர்: 1. எம் கால் மிதிபட்டு வருகிற நீர்
2. தாம் குடித்த எச்சில் நீர்
3. கால்வழியே விரும் சிறுநீர்.
சொன்னவரோ பெரியவர்! கேட்டவரோ சிறியவர்! வெட்கப்பட்டார்; வருந்தினார். பெரியவர் ஆயிற்றே என்று அஞ்சினார்.
‘தமிழ் இருக்கும்போது நமக்கு எதற்கு அச்சம்’ என்று பேசத் துணிந்தார்.
‘மாமா, நீரே வந்து எம் காலில் விழுந்தால் – ஏற்றுக் கொள்ளாமல் என்ன செய்வது?’ – என்றார். (நான் தேடிப் போகவில்லை).
ஏதோ, தவறாகப் பேசிவிட்டோம் என்று தாங்கள் வருத்தப்பட்டு, எம் காலில் விழலாமா – அப்படி விழுந்தால், நான் என்ன செய்வது? (நீரே – தண்ணிரே; காலில் வாய்க்காவில்.)
எப்படி மாமன் மைத்துனர்! எப்படி தமிழ்!
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |