கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 15, 2025
பார்வையிட்டோர்: 33,681 
 
 

முடிவு ஆரம்பித்தது. ஆரம்பித்தது என்று சொன்னால் அப்போதுதான் ஆரம்பித்தது. அந்த ஒரு நொடிக்குள்ளாக அவனுடைய‌ இரண்டு பிறவிகளின் கதை முடிந்தது. மூன்றாம் பிற‌வியின் முடிவு காலமும் நெருங்கிற்று.

ஆதரவற்ற குரங்கு ஒரு கோயிலின் முன்னாலுள்ள ஆலமரத்தின் கிளையில் அமர்ந்து ஆலோசித்தது.

யோசித்த விஷயம் இப்பிறவியில் அடைய முடியாமல் போனவைகளைக் குறித்து மட்டுமல்ல. கடந்துபோன பிறவிகளில் அடைந்தவைகளையும் குறித்ததாயிருந்தது.

ஆலமரத்தின் கிளையைப் பல‌மாகப் பிடித்து, நரைத்த புருவக்கோடுகளை உயர்த்தி, வெள்ளெழுத்து பாதிக்கத் தொடங்கிவிட்ட கண்களால் முன்னால் பார்த்தது.

ஒரு விண்வெளிக் கப்பல் போல ஆகாயத்தைத் துளைத்து உய‌ர்ந்த பிரும்மாண்டமான கோபுரத்தையும் அதனுடைய மார்பில் ஒற்றை முலைபோல‌ வாசம் செய்யும் கடிகாரத்தையும் அது கண்டது. அப்போது பூர்வ ஜன்ம நினைவுகள் கர்ப்பப்பைக்குள் சிசுவைப் போலப் புரண்டன. புரண்டபோது கண்ணில் நீர் நிறைந்தது. நீர் நிறைந்தபோது காட்சிகள் மங்கின. கோபுரம் மங்கியது. கடிகாரம் மங்கியது. கோவில் மங்கியது.

மங்கி மங்கி ஸ‌ர்வமும் இருள். இருட்டியபோது அகக் கண்கள் மின்னின. மின்னியபோது பூர்வ ஜன்மங்களைக் கண்டது.

முதற் பிறவி, மண‌வாரண்யத்தில் மனித புத்திரனாகப் பேரும் புகழும் ] உடைய ஒரு வம்சத்தில், வம்சத்தலைவனின் நான்காம் மனைவியின் ப‌திமூன்றாம் மக‌னாக அவன் பிறந்தான்.

அவன் வாலிபனான்.

ஒட்டகத்தை மேய்ப்பதும், ஈந்தப்பழம் தின்பதும், விபசாரம் செய்வதுமாக இருந்தான். இதற்கிடையில் திருமணம் செய்து கொண்டான். ஏழு சந்தானங்களின் பிதாவாக‌வும் ஆனான். அப்போதுதான், அந்தக்காலத்தில்தான் தீர்க்கதரிசியின் போதனை கேட்கிறது.

மணவாரண்யத்தில் புரட்சி நடக்கும் காலம். தீக்கதரிசியின் ஆதரவாளர்களுக்கும் எதிரிகளுக்குமிடையில் யுத்தம். படுகோரமான சந்திப்புகள்.வைடூர்ய மலையின் மடியிலமர்ந்து தீர்க்கதரிசி தெய்வத்துடன் சம்பாஷனை நடத்திக்கொண்டிருந்தார். தூய கிரந்தத்தின் அத்யாயங்கள் பூமிக்கு இறங்கி வந்துகொண்டிருந்தன. இருபத்தேழாம் நாள் தெய்வம் தீர்க்கதரிசியைத் தனது சந்நிதிக்குள், பேரவைக்குள் அழைத்தார். ஆச்சயர்த்தால் வியர்த்துப்போன தீர்க்கதரிசி கேட்டார்:

“நான் அங்கே வருவதாவது? ஆகாயம் ஒன்றல்ல, இரண்டல்ல, ஏழு. இந்த ஏழு ஆகாயங்களையும் அவைகளுக்கிடையிலுள்ள வெற்று வெளி யையும் தாண்டி யுகங்கள் செலவழித்து நான் உன் சந்நிதிக்கு வர வேண்டுமா? அது எனக்கு முடியுமா? கடவுளே நீ என்னை சோதிக்கிறாயோ?”

தெய்வத்தின் குரல்: “தீர்க்கதரிசியே, நீ ஒரு விஷயத்தை நினைவில் வை. எனது உதவியுண்டானால் இப்பிரம்மாண்டத்தில் முடியாததெதுவுமில்லை. மனத்தையும் தவிர, பஞ்சேந்திரியங்களல்ல உனக்கு – ஆறு இந்திரியங்கள் என்ற உண்மையை நீ மறந்தாயோ?”

தீர்க்கதரிசி வின‌யத்துடன் தலைகுனிந்து நின்றான்.

இரவில் இறுதிப் பிரார்த்தனையும் முடிந்து தீர்க்கதரிசி பெண்ணின் தலையும் இறக்கைகளும் கொண்ட குதிரையின் முதுகில் ஏறினான். குதிரை குதித்து மேலே உய‌ர்ந்தது. ஆகாயமும் விண்வெளியும் பல தட‌வைகள் கடந்து தீர்க்கதரிசி தெய்வத்தினுடைய சிம்மாசனத்தின் முன்னால் வந்து சேர்ந்தான்.

மறக்க முடியாத சந்திப்பு.

பேச்சு வார்த்தையும் இரகசியப் பேச்சுக்களும் நடந்தன.

தீர்க்கதரிசி பூமியிலிறங்கியபோது மறுநாள் காலை வணக்கத்திற்கான பாங்க் அழைப்பு முழங்குகிறது. தீர்க்கதரிசிக்கு மயிர்கூச்செறிந்தது. ஒரு இரவில். ஒரே ஒரு இரவில். கடவுளே உன் லீலை, உன் மாயை.. தனக்காக எத்தனை காலம் காத்திருந்தீர்களென்று சிஷ்யர்களிடம் தீர்க்கதரிசி கேட்கவில்லை.

இநதக் கதையைக் கேட்டு அவன் விழுந்து சிரித்தான். நகரத்தின் நடுவிலிருந்து அவன் இக் கதையின் ஓட்டையைத் திறந்து காட்டினான். ஜனங்கள் அவனோடு சேர்ந்து தீர்க்கதரிசியைப் பரிகாசம் பண்ணிச் சிரித்தனர். அவனும் சிரித்தான்.

சிரித்துச் சிரித்து அவன் வீட்டையடைந்தான். அவனுடைய மனைவி அடுக்களையில் தோசை வார்த்துக்கொண்டிருந்தாள். குழந்தைகள் முற்றத்திலமர்ந்து ஈநதப்பழக் கொட்டைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். சிரிப்பைப் பார்த்து மனைவிக்குக் கோபம் வந்தது. சிரித்துகொண்டு நிற்காமல் குளித்துவிட்டு வரச்சொல்லி அவள் கட்டளையிட்டாள்.

எண்ணெயும் சோப்பும் எடுத்துக்கொண்டு அவன் வீட்டின் முன்னாலிருந்த குளத்தில் குளிக்கப்போனான்.

தண்ணீரிலிறங்கி நன்றாக ஒரு முறை மூழ்கினான். மூழ்கியெழுந்தபோது அவன் ஆச்சரியத்த்தால் விறைத்துப் போனான். தான் ஒரு பெரிய நதியின் கரையில் நிற்கிறோம். ஏராளமான ஸ்திரீகள் சுற்றிலும் நின்று குளிக்கிறார்கள். என்ன கதை இது? தான், அரை நிர்வாணப்பெண்கள் இத்தனை பேர்களின் நடுவிலா. அப்போதுதான் தோளில் விழுந்து கிடக்கும் நீண்ட மயிரையும் மதர்த்த மார்பையும் கண்டான்.

இன்னொரு முறை வியர்த்துப் போனான்.

அவன் ஒரு அழ‌கான பெண்ணாக மாறியிருக்கிறான்.

துணியுடுத்தினாள்; நதியின் படிகளில் ஏறினாள்; அவள் நடந்தாள்….

பிறகு என்னவெல்லாம் நடந்தது! அவளை ஒருவன் கல்யாணம் செய்து கொண்டான். கனவனோடு சேர்ந்த வாழ்க்கை. ஐந்து குழந்தைகளைப் பெற்றாள். முதுமை வந்தடைந்தது.

விசேஷமாக எதுவும் நடக்காமல் காலம் நகர்ந்தபோது அவள் வழக்கம்போல‌ ஒருநாள் நதியில் குளிக்கப்போனாள்.

மூழ்கி நிமிர்ந்தபோது ஆச்சரியமடைந்தாள். தான் பழைய ஊரை அடைந்திருக்கிறோம். முன்பு ஆணாகவிருந்த காலத்தில் கடைசியாகக் குளிக்க வந்த குளம்….

தான் இப்போது ஸ்திரீயல்ல.

முன்பு படிக்கட்டில் அவிழ்த்து வைத்த ஆடைகள் அப்படியே கிடக்கின்றன.

அவன் ஆடையுடுத்தான். அதே வழிகளிலேயே வீட்டிற்கு ஓடினான். கவலையுடன் வீட்டையடைந்து உள்ளே நுழைகையில் மனைவி தோசை வார்த்துத் தீர்ந்திருக்கவில்லை. குழந்தைகள் அப்போதும் ஈந்தப் பழக் கொட்டைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அவன் பயந்து நடுங்கிப்போனான். ஆச்சரியத்தால் மூச்சு முட்டியது.

மனைவி கேட்டாள். “இவ்வளவு சீக்கிரம் குளிச்சாச்சா, காக்காய்க் குளி போலிருக்கே?”

காலத்தின் மாயாஜாலத்தை அவன் நேரிடையாக அனுபவித்தான். அங்கே வருடங்கள் கழிந்தபோது இங்கே நிமிடங்களே ஆகியிருக்கின்றன. அப்படியானால், தீர்க்கதரிசி ஆகாயத்தில் செலவிட்ட அரை நாள், பூமியில் வருடங்களாகத்தான் இருந்திருக்கவேண்டும்.

அவன் ஞானியானான்.

பிறகு அவனுடைய நம்பிக்கையின் அளவைகள் மாறின.

அவன் யோசித்தான்.

காலம் என்றால் என்ன?

ஆகாயத்தின் எல்லை எங்கே?

காலத்தைக் குறித்துச் சிந்தித்துச் சிந்தித்து புதிய முடிவுளை அடைந்தான். முடிவுகள் குறிக்கப்பட்டன.

காலம் இருந்தது.

காலம் இருக்கும்.

காலம் இருக்கிறது என்ற ஒரு நிலைமை கிடையாது. நிமிடங்கள் பின்னடைவதும் முன்னேறுவதும் மட்டுமே நடக்கின்றன.

சூர்யன் உதித்தது. அஸ்தமித்தது. அவற்றிற்கு நாள் என்று பெயரிட்டான்.

காலத்தைக் கணக்குக் கூட்டத் தொடங்கினான். ஏழு ஈந்தப்பழக் கொட்டைகள் வாரத்தைக் குறித்தன. நான்கு மஞ்சாடி விதைகள் மாதத்தைக் காட்டின. பன்னிரண்டு குன்றி விதைகள் வருடமாயின. பத்துத் தங்க நாணயங்கள் பத்தாண்டைக் குறித்தன.

நேரத்தை திட்டம் செய்தான். நிழல்களை அளந்தான். கீழ்ப்பாகம் குவிந்த சீசாக்களில் மண்ணை நிறைத்தான். குவிந்த பாகத்துத் துளை வழியாக மண் துகள்கள் நிமிடங்களாக உதிர்ந்து விழுந்தன. சீசாத்களில் ரஸம் நிறைத்தான்.

நட்சத்திரத்தைப் பார்த்து ஜாமத்தை அளந்தான்.

எண்களுண்டாக்கினான்.

காலண்டர் கண்டுபிடித்தான்.

கடிகாரம்தான் அவன் கடைசியாக உருவாக்கிய அற்புதப்பொருள்.

வானத்தைக் குறித்துச் சிந்திக்கத் தொடங்கிய நேரத்தில் அவன் இறந்தான்.

பாரதம் என்ற நாட்டில் மனிதனின் உருவில் அவன் இரண்டாம் பிறவி எடுத்தான்.

பிறக்கும்போது காலம் என்ற நினைவு மட்டுமே இருந்தது மனதில். கர்ப்பப்பையில் இருக்கும்போதும் அந்த ஒரு நினைவு மட்டுமே அவனை ஆட்கொண்டிருந்தது.

பரமாணுவில், ஈரணுவில், சொடக்குப்போடும் நேரத்தினூடே, விருப்பங்களினூடே, கண்சிமிட்டும் நேரத்தினூடே, கழிவுகளில் கலத்தில், நாழிகையில், நொடியில், இரவுபகலில், மாதந்தோறும், பருவந்தோறும், வருடந்தோறும் அவனுடைய வளர்ச்சி ஆரம்பித்தது.

புண்ணிய நதியில் குளித்து, தீர்த்த ஜலம் குடித்து, விக்கிரகத்தைத் தொழுது, பட்சி மிருகங்களை நேசித்து, காய்கனிகள் மட்டும் உண்டு அவன் வளர்ந்தான்.

வளர்ந்து பெரியவனானபோது அறிவு விரிவடைந்தது. அவன் தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

காலம் என்ப‌து என்ன?

காலத்தைப் பற்றித்தெரிந்துகொள்வதற்காக இரவு பகல் ஆராய்ச்சி நடத்தினான். ஒரு பலனும் கிட்டவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. இப்பிரமாண்டத்தில் அவனை ஞானியாக்க பிரம்மாவிற்கு மட்டுமே முடியும்.

இரவு பகல் பாராமல் தவமிருந்தான்.

ஒளி, ஒரு நினைவாக மாத்திரமே மிஞ்சியது.சடைப்பிடித்து, தாடி மயிர்கள் வள‌ர்ந்து தரை வரையிலும் எட்டியது. விஷ்ணுவின் நாபிக் கம‌லத்திலிருந்து உதித்த பிரம்மாவைப்பற்றிய நினைவு மட்டும் அவனுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் தங்கி நின்றது.

வருடங்கள் மட்டுமல்ல, யுகங்களும் ஆயின.

ஒரு நாள் அடிவானத்தில் ஒரு கருப்பு விதை போல் அன்னம் பிரத்யட்ச மாயிற்று. சில நிமிடங்களில் பிரம்மா அவன் முன்னால்.

பிரம்மாவின் குரலை அவன் கேட்டான்.

அவன் கண்க‌ளைத் திறந்தான்.

பிரம்மா கண் திறக்கவில்லை.

“குழந்தாய், ஏனிந்த வீண் வேலை? காலத்தைப் பற்றிய கணக்கு என்னிடமே இருக்கிறது.”

‘அப்படியே அருளிச் செய்யவேண்டும்.”

:எதற்காக வீணாகக் கேட்கிறாய்?”

“என் வாழ்வின் விருப்பமே அது பிரபோ.”

“அப்ப‌டியானால் கேட்டுக்கொள். பிர‌ம்மா தொட‌ர்ந்தார். “இர‌வு ப‌க‌லில், மாத‌த்தில், ப‌ருவ‌த்தில், அரைசூர்ய‌ வ‌ருட‌த்தில், ம‌னித‌ வ‌ருட‌த்தில், தேவ‌ வ‌ருட‌த்தில், மஹா யுக‌த்தில், உல‌க‌ முடிவில் என்னு டைய‌ ஒரு இர‌வும் ப‌க‌லும் முடிகின்ற‌து. அந்த‌ ஒரு தின‌ம் உன‌து 864,00,00,000 வ‌ருட‌ங்க‌ளுக்குச் ச‌ம‌மாகும்.”

“பிரபு, என்னை ம‌ன்னித்த‌ருள‌ வேண்டும்.”

பிர‌ம்மாவும் அன்ன‌மும் ம‌றைந்த‌ன‌ர்.

அவ‌ன் த‌வ‌த்திலிருந்து எழுந்தான்.

அக் கால‌க‌ட்ட‌த்திற்குள் அவ‌னுடைய‌ த‌லைமுறையின‌ர் நிறுவியிருந்த‌ ந‌தி தீர‌ நாக‌ரிக‌ங்க‌ள் ம‌ண்ணாகிப் போயிருந்த‌ன‌. அந் நாக‌ரிக‌த்தின் நினைவுகள் பிற்பாடு யாரையும் கிளர்ச்சியுற வைக்கவில்லை. அறிவு குறைந்த சரித்திர மாணவர்கள் மட்டும் நொண்டி இங்கிலீஷில் அதனைத் தம் விடைத்தாளில் விவரித்துக்கொண்டிருந்தனர்.

இதற்கிடையில் ஹிமவான் பகவானின் பாதுகாப்பை ஒரு தீராச் சாபம் போல அழித்துக்கொண்டிருந்த இரு நுழைவாயில்கள் வழியாகப் பருவக்காற்றோடு சேர்ந்து பல விஷ ஜந்துக்களும் இப் புண்ய பூமியில் நுழைந்தன.

அவர்கள் இங்கே கலப்பு வர்க்கங்களை உண்டாக்கினர். அவனுடைய நாகரிகத்தில் கலப்படம் செய்ய முயற்சித்தனர்.

இதய வேதனையுடன் ஒரு உண்மையை அவன் புரிந்துகொண்டான். அவனது அன்பிற்குரிய பிரம்மாவின் விருப்பங்கள் நஷ்டமாகிக் கொண்டிருக்கின்றன. அவனது தலைமுறை அழிந்துகொண்டிருக்கிறது.

பிறகு மிலேச்சனின் மொழியைக் கற்க அவன் நிர்ப்பந்திக்கப் பட்டான்.

அம் மொழியில்கூடக் காலத்தைக் குறித்தும் விண்வெளியைக் குறித்துமே அவன் சிந்தித்தான்.

Right or Left?

Time shares the fate of space.

Are all points of view equivalent?

The relative appears absolute.

The absolute turns out to be relative.

Velocity has its limits.

இத்தனை மகத்தான வார்த்தைகளையும் கிரகித்துக்கொண்டபோது யாரோ அவனிடம் சொன்னார்கள்: “நேரம் இப்போது மாலை ஐந்து மணி ஆகியிருக்கிறது.”

அவன் கேட்டான். “எங்கே, இந்தியாவிலா அல்லது அமெரிக்காவிலா?”

அப்படி ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டைப் பாதி படிப் பதற்குள் அவனுடைய இரண்டாம் பிறவியின் கதை முடிந்தது.

புனர் ஜன்மத்திற்காக அவனது ஆத்மா அலைந்து திரிந்தது.

[3]

துர்ப்பாக்கியவானான அவன் மூன்றாம் ஜன்மம் பூண்டது ஒரு குரங்கின் வடிவத்தில்.

குரங்குக்கு உற்றார் உறவினர் யாருமில்லை. பெண்கள் பொதுச் சொத்தான ஒரு வர்க்கத்தில் பிறந்ததினால் அப்பனைப்பற்றி அவன் அறியாதவனாயிருந்தான். தாயின் பின்னால் சுற்றியதும், அவளுடைய முலை குடித்ததும், அவ‌ளுடைய‌ த‌லையிலிருந்து பேன் எடுத்துக் க‌டித்துப் பொடித்த‌தும் நினைவிருக்கிற‌து. இர‌ண்டாவ‌து குர‌ங்குக் குட்டியை க‌ர்ப்ப‌ம் த‌ரித்த‌போது தாயிட‌மிருந்து அவ‌ன் வில‌க்க‌ப்ப‌ட்ட‌வனான்.

ந‌ண்ப‌ர்க‌ளுட‌ன் கூட‌வே பிற‌கு சக‌வாச‌ம். அவ‌ர்க‌ளுக்கு இணையாக ம‌ர‌ம் தாண்டுவ‌தும். பெரிய‌ சுவ‌ரில் ஏறுவ‌தும், கோவிலின் உத்திரக் க‌ட்டை‌யில் ஆட்ட‌ம் ஆடுவ‌துமாக‌ இருந்தான். அப்ப‌டியிருக்கும்போது, எதிர்பாராம‌ல் ஒரு நாள் கொய்யாத்தோட்ட‌த்திலிருந்து கொய்யாப் ப‌ழ‌ம் திருடித் தின்னுகையில் தோட்ட‌க்கார‌ன் க‌வ‌ண் எறிந்த‌ ஒரு க‌ல் அவ‌னுடைய‌ உட‌லில் ப‌ட்ட‌து. முதுகெலும்பில் பட்டுவிட்டது. அவன் கூக்குரலிட்டுவிட்டான். இர‌ண்டு மூன்று நாட்க‌ள் ப‌ல‌மான‌ வ‌லி இருந்த‌து. பிற‌கு அந்த‌ இட‌த்தில் சிவ‌ந்து வீங்கிய‌து. ஒரு வார‌மான‌ போது புண்ணாயிற்று. புண்ணைச் சுற்றி ம‌யிர் உதிர்ந்த‌து.

புண்ணிலிருந்து சீழும் இர‌த்த‌மும் வ‌டிய‌த் தொட‌ங்கின‌. சீழ் ம‌யிரில் ஒட்டி உல‌ர்ந்த‌து. ஈக்க‌ள் புண்ணில் இடைவிடாம‌ல் மொய்த்த‌ன‌. புழுக்க‌ள் நுழைந்த‌ன‌. துர்நாற்ற‌ம் வீசிய‌து.

அவ‌ன் த‌னிய‌னான்.

இன்று குர‌ங்கு ஆத‌ர‌வ‌ற்ற‌து. த‌னி.

த‌ந்தையில்லை. தாயில்லை. கூட்டுக் குடும்ப‌மில்லை. ந‌ண்ப‌ர்க‌ளில்லை. ந‌ரைதிரை தோன்றி முதுகில் உல‌ராத‌ புண்ணுட‌ன் எருமையின் வ‌ர‌வை எதிர்நோக்கி அத‌னுடைய‌ கால‌ம் நிற்கிற‌து.

கோவிலின் முன்னாலிருந்த‌ ஆல‌ம‌ர‌ம்தான் அத‌னுடைய‌ புக‌லிட‌ம். அந்த‌ ஆல‌ம‌ர‌ம் கோவிலையும், ந‌க‌ர‌த்தையும், போலிஸ் ஸ்டேஷ‌னையும், ஆற்றையும் வீதிக‌ளால் இணைத்த‌ ஒரு ச‌ந்திப்பில் இருக்கிற‌து.

கிளைக‌ளும் விழு‌துக‌ளுமாக‌ப் பிரிந்து ப‌ட‌ர்ந்து ப‌ந்த‌லிட்ட‌து. கீழே யிருந்தும் உட‌ம்பிலிருந்தும் வேர்க‌ளை இற‌க்கி, ந‌ரைதிரைக‌ள் பாதித்து, த‌லைமுறைக‌ளின் ஆத‌ர‌வின்மையைத் த‌ரிசித்து, ப‌ற்ற‌ற்ற‌‌தாகி ஆல‌ம‌ர‌ம் நிலைநின்ற‌து. அத‌னுடைய‌ பொந்துக‌ளில் பாம்புக‌ள் இட‌ம் தேடின‌. ப‌ற‌வைக‌ள் கிளைக‌ளில் கூடு க‌ட்டின‌. உச்சியில் காற்று ஊளையிட்டு ஓடிய‌து. எறும்புக‌ளின் ச‌ங்கிலிக‌ள் கிளைக‌ளில் ந‌க‌ர்ந்த‌ன‌. உட‌ம்பு முழுவ‌துமிருந்த‌ சின்ன‌ஞ்சிறு இலைக‌ள் காற்றில் ந‌டுங்கின‌.

குர‌ங்கு க‌ட‌ந்த‌ எத்த‌னையோ வ‌ருட‌ங்க‌ளாக‌ இந்த‌ப் பெரிய‌ ஆல‌ ம‌ர‌த்தின் அற்ப‌மான‌ ஒரு கிளையில‌ம‌ர்ந்து கிழே வ‌டிந்துபோகும் வாழ்க்கையைத் த‌ரிசித்துக்கொண்டிருந்த‌து.

வ‌ழியோடு போகும் ம‌னித‌ர்க‌ளிட‌மும், மிருக‌ங்க‌ளிட‌மும், ப‌ற‌ந்து போகும் ப‌றைவ‌க‌ளிட‌மும், வாக‌ன‌ங்க‌ளிட‌மும் த‌ன்னுடைய‌ க‌தையைச் சொல்ல‌ அது துடித்த‌து. ஆனால் நா எழ‌வில்லை. த‌ன் நிழ‌லை அள‌ந்து நேர‌ம் க‌ணித்தோம் என்ப‌தையும், ம‌ண‌ற்க‌ண்ணாடிக் கூம்புக‌ள் உபயோகித்து நேரம் அளந்தோம் என்பதையும், எண்கள் கண்டு பிடித்தோம் என்பதையும், காலண்டர் தனது சொந்த சிருஷ்டி என்பதையும், தவம் செய்து பிரம்மாவை வரவழைத்தோம் என்பதும் மற்றுமுள்ள உண்மைகள் சித்திரங்களாக அதனுடைய மனதில் கிடந்தன.

வழிப்போக்கரில் யாரும் அதைக் கவனிக்கவில்லை. குழந்தைகள்கூட அதைப் பார்த்துப் பழிப்புக் காட்டவில்லை. சாப்பாடு கிடைக்கவில்லை. பிரசாதம் நிறைந்த தட்டுகளை ஏந்திய பக்தர்கள் கோவிலிலிருந்து நடந்து போவதைக் காண்கையில் அதனுடைய வாயில் நீர் ஊறும். வயிறு குமுறும். கதவடைத்துப் பூசாரி பால் பாயஸம் குடிக்கும்போது அது கண்ணை மூடாமல் அதைப் பார்த்துப் பசியாறும்.

இரவில் எல்லோரும் தூங்கியபின் அது ஆலமரத்திலிருந்து இறங்கி கோவில் முற்றத்தின் வழியாக நடக்கும். நடுவில் பக்தர்கள் உடைத்த தேங்காய்த் துண்டுகளோ, கெட்டுப்போன பழங்களோ, மண்ணில் புரண்ட மிட்டாய் துண்டுகளோ, மாங்காய்க் கொட்டையோ கிடைக்க நேரிடும். ஒன்றும் கிடைக்கவில்லையானால் கோவில் குளத்திலிறங்கி நீர் குடித்து, பூசாரி இடத்தில் இல்லையானால் கோவிலின் உத்திரக் கட்டையி லேறி மணியடித்து ஒலியுண்டாக்கி, ஓடிப்போய் ஆலமரத்திலேயே ஏறி உட்காரும்.

தூங்குவது சிரமம். கடந்துபோன பிறவிகளைக் குறித்து, காலத்தைக் குறித்து, ஆகாயத்தைக் குறித்து, உலராமல் வலிக்கும் முதுகுப் புண்ணைப்பற்றி, நரைதிரையைப் பற்றி, ஆதரவற்ற தன்மையைக் குறித்து, நினைத்து நினைத்து இதயம் வேதனையுறும். பொழுது புலரும் சமயம் கொஞ்சம் கண்ணை மூடும்.

ஸைரன் கேட்டுத்தான் தினமும் எழுவது, முனிஸிபாலிட்டியிலிருந்து பூதாகாரமான கோபுரத்திற்குப் பக்கத்திலிருந்து ஸைரன் கிளம்புகிறது. அப்போது கடிகாரத்தில் மணி ஆறு.

கோபுரத்தை. கோபுரத்தின் மார்பில் ஒற்றை முலையான கடிகாரத் தைப் பார்த்துக்கொண்டிருக்க ஆரம்பித்த காலத்திலிருந்து ஒரே ஒரு ஆசை அதை ஆட்டிக்கொண்டிருந்தது.

அக் கோபுரத்தின் உச்சியில் ஒரு நாள் ஏறவேண்டும். பிறகு கடிகாரத்தைக் கையிலெடுக்க வேண்டும். சௌகர்யப்பட்டால் அங்கே நின்றுகொண்டு சந்திரனைத்தொடவேண்டும். காலத்தைக் குறித்துச் சிந்தித்து நேரம் அளந்து கணக்கிட்ட, நாழிகை மணியைக் கண்டுபிடித்த, சார்பியல் கோட்பாட்டைப் படிக்கத் தொடங்கிய முற்பிறவிகளில் நற்செயல்கள் புரிந்த அதனுடைய இதயத்தில் இந்த ஆசை உமியிலிட்ட தீ போல் எரிந்து கொண்டிருந்தது.

பல இரவுகளிலும் அது கோபுரத்தின் போயிருக்கிறது. ஆனால், காவல்காரனான நாசமாய்ப்போகிற கூர்க்கா எப்போதும் கோபுர வாசலின் கதவைப் பூட்டிவிட்டு உறங்கிக்கொண்டிருப்பான்.

மகத்தான தினம் வந்தது. நல்ல நிலாவுள்ள இரவு. கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சூலம் சந்திரனைக் குத்தி நிறுத்தியிருக்கிறது. கோபுர வாசலின் கதவையடைக்க மறந்துபோய் கூர்க்கா குறட்டைவிட்டுத் தூங்குகிறான்.

முதுமையைச் சட்டை செய்யாமல், புண்ணின் வலியைப் பொறுத்துக் கொண்டு, பசியை மறந்து அது கோபுரத்தின் படிகளில் ஏறத் தொடங்கியது.

எவ்வளவு நேரம் ஏறிச்சென்றது என்று நினைவில்லை நூறு நூறு படிகள், ஆயிரமாயிரம் படிகள். உடல் வியர்த்தது தலை சுற்றியது. கால்கள் தளர்ந்தன. இதயம் பறை முழக்கியது. மூச்சிறைப்பு புயல் காற்றுப்போல வீசியது.

கடைசியில் அது புகலிடத்தை எட்டியது. கடிகாரத்தை அது ஆவேசத் துடன் உணர்ச்சி வசப்பட்டு வருடியது. அதனுடைய முட்களில் முத்த மிட்டது. பிறகு முழு பலத்தையும் உபயோகித்து அதைக் கோபுரச் சுவரிலிருந்து பறித்தெடுத்தது.

கோபுரம் தன் முலையை இழந்தது. சூர்ப்பணகையின் வலி.

அதனுடைய அபிலாஷை நிறைவேறியது. கடிகாரத்தைக் கண்டு பிடித்த அதனுடைய கைகளில் கடிகாரம் வந்து சேர்ந்தது.

கடிகாரத்தைப் புண்ணுள்ள முதுகில் வைத்துக்கொண்டு அது கோபுரத்தின் உச்சியில் ஏறி நின்றது. ஒளியில் குளித்த பிரம்மாண்டம். சந்திரன் சூலத்திலிருந்து தொலைவில்-வேண்டுமானால் தொட முடியும். சந்திரனை ஒரு தடவை தொட்டுவிட்டு வந்த வழியாகத் திரும்பலாம்.

அது சந்திரனைத் தொடுவதற்காகக் கால் கட்டைவிரலில் ஊன்றி நின்று கொண்டு ஒரு கையால் கடிகாரத்தை தாங்கிக்கொண்டு மறு கையை உயர்த்தியது. கால் வழுக்கியது மட்டும் தான் தெரியும்…

மறுநாள் இரத்தத்தில் குளித்த ஒரு குரங்கின் பிணமும், பொடிந்து தூளான கடிகாரத்தின் மிச்சங்களும் கோபுரத்தினடியில் கிடப்பதைக் கோவிலுக்குப் போகும் பக்தர்கள் பார்த்தார்கள். அவ்வளவுதான்.

உலக முடிவு இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.

– பூனத்தில் குஞ்ஞப்துல்லா

– சமீபத்திய மலையாளச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1980, தொகுப்பு: எம்.முகுந்தன், மொழிபெயர்ப்பு: ம.இராஜாராம், நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: https://www.projectmadurai.org

பூனத்தில் குஞ்ஞப்துல்லா

1942-ல் தென் மலபாரில் பிறந்தார். பி.எஸ்ஸி., பாஸான பிறகு அலிகார் முஸ்லீம் யூனிவர்ஸிடியில் மருத்துவதற்குச் சேர்ந்தார். இப்போது ஊரில் ஒரு கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில் ஸர்ஜன், அலிகாரில் படித்துக்கொண்டிருக்கையிலேயே கிறிஸ்துவரான மரியம்மையை மணம் புரிந்தார். குடும்பத்தினுடையவும் சமுதாயத்தினுடையவும் எதிர்ப்புக்களைச் சட்டை செய்யாமல், 1971-ல் அலிகாரில் மனைவி இறந்தார். என்.பி. முகமதுவின் கதைகளைப்போல முஸ்லீம் சமுதாயத்தின் இருளடைந்த பக்கங்களை குஞ்ஞப்துல்லாவின் கதைகளிலும் காணலாம்.

நூல்கள் – தவறு, அலிகாரில், கைதி (நாவல்கள்), கத்தி, காலாட்படையின் வரவு (கதைத் தொகுப்புக்கள்)

முகவரி- டாக்டர் பூனத்தில் குஞ்ஞப்துல்லா, போஸ்ட் மடப்பள்ளி காலேஜ், வடகரை, கேரளா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *