பங்கு !
கதையாசிரியர்: சிறுவர் கதைகள்
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 14, 2012
பார்வையிட்டோர்: 14,522
சுந்தரபுரி என்ற நாட்டை யவனன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். பெரிய படையுடன் பக்கத்து நாட்டின் மீது படையெடுத்து வெற்றி பெற்றார். விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அங்கிருந்து கைப்பற்றினார். அந்தப் பொருட்களை எல்லாம் தன் வீரர்களுக்கு ஏற்றத் தாழ்வின்றி சமமாகப் பங்கிட்டார். அதேபோலத் தனக்கும் ஒரு பங்கு எடுத்துக் கொண்டார்.
கிடைத்த விலை உயர்ந்த துணிகளில் ஒவ்வொருவருக்கும் சிறு துண்டே பங்காகக் கிடைத்தது. அந்தத் துணியில் மேலாடை தைத்துக் கொண்டார் மன்னர்
“”அரசே! நீங்கள் நேர்மையானவர் என்று நம்புகிறோம். ஆனால், நீங்களா இப்படி?” என்றான் வீரன் ஒருவன்.
“”ஏன்?” என்று கேட்டார் மன்னர்.
“”நீங்கள் நேர்மையாகப் பங்கு பிரிக்கவில்லை. எனக்குப் பங்காகக் கிடைத்த துணியைப் போலத்தான் தங்களுக்கும் பங்காகக் கிடைத்திருக்க வேண்டும். அந்தத் துணியில் கண்டிப்பாக மேலாடைத் தைக்க முடியாது. நீங்களோ அதில் மேலாடை அணிந்துள்ளீர். நீங்கள் என்னைவிட உயரமானவரும் கூட,” என்றான் அவன்.
அருகே அமர்ந்து இருந்த தன் மகனை அழைத்தார் மன்னர். “”இவரின் குற்றச்சாட்டிற்கு நீ பதில் சொல்,” என்றார்.
“”நம் அரசர் தமக்குக் கிடைத்த துணியில் மேலாடை தைக்க விரும்பினார். அந்தத் துணி போதுமானதாக இல்லை. அவருடைய மகனான நான் என் பங்குத் துணியையும் தந்தேன். அதில்தான் இந்த மேலாடையை தைத்தார்,” என்றான்.
கேள்வி கேட்ட வீரன், “”மன்னா! இப்படித்தான் நடந்திருக்கும் என்பது எனக்கும் தெரியும். தங்களது நேர்மையை மற்றவர்கள் அறிய வேண்டும் என்றுதான் இப்படிச் சொன்னேன்,” என்றான்.
அரசரின் நேர்மையான குணத்தை எண்ணி மகிழ்ந்தனர் அவையோர்
– ஆகஸ்ட் 27,2010
தொடர்புள்ள சிறுகதைகள்
A for ஆப்பிள் – O for JOY
எஸ்.பவிஷ்
June 23, 2026
நல்ல மனம் வாழ்க!
வளர்கவி
June 20, 2026
தீர்ப்பு
ஜே.எம்.சாலி
June 20, 2026