மயிலாக மாறிய காக்கை
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 21, 2026
பார்வையிட்டோர்: 1,302
காக்கை ஒன்றுக்கு வண்ணப் பறவைகளைப் போல் நமக்கு அழகான தோற்றம் இல்லையே என்ற ஏக்கம் இருந்து வந்தது.
ஒரு நாள் காட்டில் மயில் தோகைகள் கிடப்பதைப் பார்த்தது. அதனை எடுத்துக் கொண்டு பசை வழியும் மரத்தில் உள்ள பசையின் உதவியால் தன்னுடைய இறகைகளுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டு வெய்யிலில் உலாவியது. சூரிய வெளிச்சத்தில் உலர்ந்து மயில் தோகை அதன் உடம்பில் நன்றாக ஒட்டிக் கொண்டது. இப்போது அந்தக் காக்கைக்கு தான் ஒரு மயில் என்ற நினைப்பு மேலோங்கி விட்டது.
எதிரே வந்த ஒரு சிட்டுக்குருவி ‘என்ன அண்ணா பின்னால் அலங்காரம்’ என்று கேட்டது. அதற்கு ‘என்னை யார் என்று நினைத்தாய் சிட்டுக்குருவி நான் தோகை உடன் கூடிய மயில் ஆக்கும்’ என்று பதில் கூறியது காகம்.
சிட்டுக்குருவி விடவில்லை. ‘அப்படியா? உங்கள் மேலே இருக்கும் அழகான கொண்டையைக் காணவில்லையே’ என்றது.
காகம் ‘அது எங்கோ விழுந்து விட்டது . அதனால் நான் மயில் இல்லையா’ என்று கேட்டு அங்கிருந்து சென்ற காகம், மயில் கூட்டத்திற்குச் சென்று அவர்களுடன் சேர்ந்து விட்டால் நானும் மயில் ஆகி விடுவேன் என்று நினைத்து மயில்கள் கூட்டமாக உள்ள பகுதிக்குச் சென்றது.
மயில்களின் தலைவனான ஆண் மயில் ஒன்று யார் நீ என்று கேட்டது. காகம் ‘நானும் உங்களைப் போல் மயில் தான்’ என்றது.
அந்த மயில் ‘வேடதாரியே இவர்கள் உன்னைத் துன்புறுத்துவதற்குள் ஓடி விடு’ என்றது . காகம் மீண்டும் நம்முடைய காக்கை கூட்டத்திற்கே செல்வோம் என்று நினைத்து காக்கைகள் கூட்டமாக உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தது.
‘இயல்பாக உள்ள அழகை நினைத்துப் பெருமைப்படாமல் மயில் தோகை அணிந்து வேடம் போட்டதால் நீ நம் இடத்திற்கு வரக் கூடாது’ என்று காக்கைகள் விரட்டி விட்டன. அந்தக் காகம் தனி ஆளாக ஆனது.
நீதி – நம் இயல்புக்கு ஏற்ப இருப்பதே நல்லது.
(ஈசாப் கதைகளிலிருந்து)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
