கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 19, 2025
பார்வையிட்டோர்: 6,584 
 
 

அத்தியாயம் 3.4-3.6 | அத்தியாயம் 4.1-.4.3 | அத்தியாயம் 4.4-4.6

4.1 கனி

சித்திரை மாதம். பகல் பன்னிரெண்டு மணி வேளை. சென்னையிலே வெயில் அனல் போல் எரிக்கக் கேட்பானேன்? தீவட்டி போல் கண்களை வெப்பம் கொளுத்தியது. மயிலாப்பூரின் தெருவொன்றில் இருந்த எங்கள் தனி வீட்டின் வாசற்புற அறையின் ஜன்னலிலே அமர்ந்து நான் தெருவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தெருவிலே வழக்கமாக நடமாடும் கறிகாய்க் கூடைக்காரிகளையும், பழைய துணிகள் வாங்கிக் கொண்டு பாத்திரம் கொடுக்கும் தெரு விற்பனையாளர்களையுங் கூட அன்றைய வெயில் பயமுறுத்தி இருக்கிறது போல் இருக்கிறது. அவர்களைக் கூடக் காணோம்.

வாயில் ஈ புகுந்தது தெரியாமல் வீட்டு வேலைகளும் குழந்தைகளின் கலகலப்பும் கிடைக்கும் இரண்டொரு நிமிஷ ஓய்வு நேரத்தையும் பறித்துக் கொள்ள, லீலாவும் இல்லாத இந்தத் தனிக் குடித்தனம் எனக்கு ஏதோ மனிதரே இல்லாத சூனியப் பிரதேசத்தில் வாழ்க்கை நடத்துவது போல் இருந்தது. அதிக வேலை செய்யும் கஷ்டம் இல்லை. அதிகாரம் செலுத்த மாமியார் இல்லை. அடிக்கு ஒரு தரம் அஞ்சி அஞ்சி மாடி ஏறும்படி செய்ய ஓரகத்தி இல்லை. ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து இரண்டு அறைகள். சிறிய கூடம் சாமான் வைக்க. சமையல் செய்ய, பின்கட்டு. மின்சார வசதிகள் கொண்ட அழகிய சிற்றடக்கமான வீடு. கணவன் மனைவி இரண்டே பேர் கொண்ட குடும்பம். என் இஷ்டம் போல எதுவும் செய்யச் சுதந்திரம் எல்லாம் எனக்கு இப்போது இருந்தன.

‘அவளுக்கு என்ன? நச்சுப் பிச்சென்று குழந்தை குட்டிகள் இல்லை. கை நிறையக் காசு வாங்கும் கண் நிறைந்த கனவன்’ என்று என்னைப் பார்ப்பவர்கள் காது கேட்கப் புகழ்ந்தார்கள்.

ஆனால் வாழ்வைப் பூரணமாக்க எது தேவையோ, குடும்பத்தின் இன்ப வாழ்வுக்கு எது அஸ்திவாரமோ அது இல்லை என்று என் மனத்தைத் தவிர யார் அறிவார்கள்? இந்தத் தனிக் குடித்தனமா நான் விழைந்து விரும்பினது? இரவின் நிசப்தத்திலே குமுறும் அலைகடலைப் போல இந்தத் தனிமை செறிந்த வாழ்க்கை என் மனப் புண்ணைக் குடைந்து குடைந்து வேதனையன்றோ செய்கிறது? ‘குடும்பத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் வேர்ப்புழுவாக நீ இருக்கக் கூடாது அம்மா’ என்று அம்மாவும் அப்பாவும் எனக்கு எத்தனையோ எடுத்துக் கூறினார்கள். நினைத்துப் பார்க்கப் பார்க்க இந்தப் பெண் பிறவி நான் எதற்காக எடுத்தேன் என்று புரியவில்லை. பிறருக்குத் துன்பம் கொடுப்பதும், என்னை நானே வருத்திக் கொள்வதுமா என் வாழ்வின் லட்சியங்கள்? பெண் ஒருத்தியின் வாழ்வு எதனாலே ஒளி பெறக் கூடியது? கணவனைக் களிப்பூட்டுவதனால் தானே. அந்த வகையிலே நான் முழுத் தோல்வி அடைந்திருக்கிறேன். கணவனின் சுற்றத்தாருக்காவது நான் உகப்பாக இருக்கிறேனோ? அவர்களுக்காக ஓடி ஓடித்தான் உழைத்தேன். அவர் அவர்களிடம் கொண்ட நன்மதிப்பைக் காப்பாற்றுவதற்காக அவர் என் இதயத்தைக் கசக்கிப் பிழிவதைப் பொறுத்தேன். ‘உன் வாழ்வின் சௌகரியங்களை நீ குறைத்துக் கொள்ள வேண்டும் அம்மா!’ என்று அப்பா சொன்ன வார்த்தைகள் கணீர் கணீர் என்று இன்னமும் என் செவிகளைத் தாக்குகின்றன. எந்த வேளையில் எதை நினைத்துக் கூறினாரோ? வேளைக்கு நான் உணவருந்தினேனா என்று கூட யாரும் கவனியாத வீட்டிலே என் சௌகரியங்கள் என்றால் என்ன என்பதையே அறியாமல் என் வாழ்வைத் தியாகம் செய்தேன். கடைசியிலே நான் கண்டது என்ன? என் சோதனைக் காலத்தின் இறுதியிலே கிரீடம் கிடைக்கப் போகிறது என்ற தைரியத்திலே நான் கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவதாகத் தீர்மானம் கொண்டேனே, அந்த வகையிலாவது என் லட்சியம் சித்தி பெற்றதா? விழலுக்கு இறைத்த நீர் போல, மணிக்கணக்காக உட்கார்ந்து சிரமப்பட்டு இட்ட கோலத்தை அரை நொடியில் மழை வந்து அழித்து விடுவது போல, என் உழைப்பும் தியாகமும் இருந்த சுவடே தெரியாமல் அவருடைய ஒருநாளைப் பொருமலில் பஸ்மீகரம் ஆகிவிட்டன.

இத்தனைக்கும், ‘இந்த வீட்டிலே என்னால் ஒரு கணம் இருக்க முடியாது!’ என்று காய்ந்து விழுந்தேனா? ‘என்னைத் தனிக் குடித்தனம் கொண்டு வைக்காவிட்டால் நான் இங்கே வர மாட்டேன். உங்களுக்கு நான் வேண்டுமானால் வீட்டை இரண்டு பண்ணுங்கள். அண்ணா மதனி முக்கியமானால் என்னை ரெயிலேற்றி விடுங்கள்’ என்று ராட்சசத்தனம் செய்தேனா?

அவ்வாறெல்லாம் நான் அடம் பிடித்து இந்த அழகான தனிக் குடித்தனத்திற்கு வந்திருந்தேனானால் இவ்வளவு தூரம் என் கொதிப்பு எழும்பியிருக்காது. என் பற்றுதலைக் கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அதிகாரத்துக்கும் அடக்குதலுக்கும் உணர்ச்சியற்றுப் போய்வரும் நாளிலே அவரை இந்தக் காரியம் செய்யச் சொல்லி யார் வருந்தினார்கள்? ‘எந்த விதத்திலும் இவள் மனம் சமாதானம் பெறக் கூடாது’ என்று அவர் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாரா என்பதையும் அறிகிலேனே!

அவருக்கு என் மீது உள்ளன்பு நிரம்பி இருக்கவில்லை என்ற உண்மையை வரதனுடைய வீட்டில் அன்று அவர் வாய் மூலமாகவே அறிந்து கொண்ட போது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் போல இடி விழுந்தால் கூட ஏற்பட்டிராது. சாந்தியளிக்கும் திசையில் மனத்தைத் திருப்ப முயன்றேன். என் சங்கீத வளர்ச்சிக்கு என் நாட்களிலே கொஞ்ச நேரம் ஒதுக்கி வைக்கலானேன். அதிகாலையிலே இன்னும் ஒரு மணி முன்னதாக எழுந்தேன். விடிவெள்ளி ஊட்டிய புத்துணர்ச்சியிலே சாதகம் செய்யலானேன்.

‘உனக்கு அவசியமானவற்றைக் கூடப் பிறர் கவனிப்பார்கள் என்று எதிர்பார்த்து எடுத்ததற்கெல்லாம் பயந்தால், பயந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்’ என்று லீலா எனக்குச் சொல்லிக் கொடுத்த வகையில் நான் பயப்படாமல் நானாகவே ஏற்படுத்திக் கொண்ட சௌகரியம் யார் என்ன சொன்னாலும் சொல்லட்டும் என்று தைரியமாகச் சங்கீத சபைகளுக்கும், இன்னும் நகரத்திலே நடக்கும் பெரிய வித்துவான்களின் இசைக் கச்சேரிக்கும் செல்ல ஆரம்பித்ததுதான். ‘இன்று மாலை இந்த இடத்திலே… இன்னார் கச்சேரி… சீக்கிரமா வந்து அழைத்துப் போகிறீர்களா?’ என்று நான் கேட்க வேண்டியதுதான் தாமதம், மனைவி சொல் தட்டாத கணவராக அவர் என்னை உள்ளே கொண்டு உட்கார வைத்து விட்டு முடியும் தறுவாயில் வந்து அழைத்துப் போவார். இந்த ஒரு விஷயத்திலே அவர் காட்டிய சலுகையைப் பட்டுவாலும் மாமியாராலும் பொறுக்கத்தான் முடியவில்லை. நான் இல்லாத சமயங்களிலே நிச்சயமாக அவர்கள் அவரிடம் என்னைப் பற்றிக் குற்றம் கூறி அவருடைய பொறுமையைக் குலைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு நாள் நடந்த சிறு சம்பவம் மட்டும் அவருடைய அத்தனை நாளைய அசைக்க முடியாத பிணைப்பில் இருந்து அவரை அறுத்துக் கொள்ளச் சொல்லுமா?

அதிகாலையில் நான் சாதகம் செய்வது பக்கத்து அறையிலே அவர்கள் தூக்கத்துக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்று எத்தனையோ முறை பட்டு ஜாடைமாடையாகத் தெரிவித்தும் நான் செவி சாய்க்கவில்லை. ஆனால் நான் இதற்கென்று எங்கே போவேன்? இந்தச் சுதந்திரத்தை நான் இழக்கத் தயாராக இல்லை. தனியானதொரு சந்தோஷத்தையும், என்னை மறக்கும் ஒரு சாந்தியையும் கண்ட இந்த வழியை நான் விட்டுக் கொடுப்பேனா?

அன்று காலை நான் பாடிக் கொண்டிருக்கும் போது பட்டு எழுந்து வந்தாள். “இந்தாடி சுசீலா, ஒரு நாளைப் பார்த்தாற் போல் நானும் சொல்கிறேன்; நீ காதிலே போட்டுக் கொள்வதாகவோ லட்சியம் பண்ணுவதாகவோ காணோம். விடிகாலமேதான் சற்றுக் குழந்தை தூங்குகிறான். அவரும் அசந்து தூங்குகிறார். இப்படிக் காதிலே வந்து பாயும்படி கத்தினால் கோபித்துக் கொள்கிறார்” என்றாள் கடுமையான அதட்டும் குரலில்.

நான் தைரியமாகப் பதில் அளித்தேன்.

“அதற்காக, என்னைப் பாடக்கூடாது என்கிறீர்களா மன்னி? எது வேண்டுமானாலும் நீங்கள் சொல்லுங்கள், நான் கேட்கிறேன். தயவுசெய்து என்னுடைய இந்த ஒரே ஒரு சுதந்திரத்தில் மட்டும் குறுக்கிடாதீர்கள். நாளையிலிருந்து வேணுமானாலும் நான் கீழே போய் விடுகிறேன்” என்று நான் கெஞ்சும் முறையில் வேண்டிக் கொண்டது, அவள் கோபத்தை கிளப்பி விட்டு விட்டது.

“பேச்சைப் பாரேன்! உன் சுதந்திரம் இங்கே என்ன பறி போய்விட்டது! ஒரே ஒரு சுதந்திரம் என்று காய்ந்து விழுவானேன்? பெரியவர்கள், மட்டு மரியாதை என்று இருந்தால் இப்படி நீ பேசுவாயா?” என்றாள் அவள்.

என் கணவரும் தூங்கவில்லை. கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

எரிச்சல் மூண்ட தொனியில், “என்ன மன்னி இது, காலை நேரத்திலே?” என்றார்.

“பின் என்ன ராமு இது? தினமும் அண்ணா அசந்து தூங்கும் சமயத்தில் தொந்தரவாக இருக்கிறது என்றார். விடிந்து பாடேன் என்றால் சுதந்தரம், கிதந்தரம் என்று என்னவெல்லாமோ பேச்சு வருகிறது. நீங்கள் சுதந்தரமாக இருப்பதை நானா வேண்டாம் என்று கையைப் பிடிக்கிறேன்? இதோ பார் ராமு, நான் சொல்லி விட்டேன். வீணாக அவள் அவலை நினைத்து உரலை இடிப்பது போலப் பொரும வேண்டாம். நாளையே நீ தனிக்குடித்தனம் வைத்துக் கொள். அவளுக்குந்தான் ஏன் மனக் கஷ்டம்? மனசிலே ஒற்றுமை இல்லாமல் கசப்புடனே எத்தனை நாளைக்குத் தள்ளிக் கொண்டு போக முடியும்?” என்று பொழிந்து கொண்டே போனாள்.

உண்மையைக் கூறிக் கெஞ்சியதற்கு எனக்குக் கைமேல் பலனா இத்தனை குற்றச்சாட்டுகள்? அவர்களே சதமென்று அவருக்கும் மேலாக மதிப்பு வைத்து உதாசீனங்களைப் பொருட்படுத்தாமல் வஞ்சகமின்றி நான் பாடுபட்டதற்குப் பரிசா இத்தனை பேச்சுக்கள்?

என் உடைந்த மனத்திலிருந்து துயரம் கிளம்பியது. முகத்தை மூடிக் கொண்டு சிறு குழந்தைப் போல விம்மினேன்.

“இப்போது யார் என்ன சொன்னார்கள்? எது சொன்னாலும் அவ்வளவு சட்டென்று அழுகை எப்படித்தான் வருமோ? பார்க்கிற பேர்கள் என்ன எண்ணிக் கொள்ள மாட்டார்கள்?” என்று முடிவு கட்டிவிட்டு அவள் சென்று விட்டாள்.

முதல் முதலாக என் கனவர் மதனியின் செய்கை தமக்குப் பிடிக்கவில்லை என்று என்னிடம் காண்பித்துக் கொள்ளும் மாதிரியில், “அழாதே, சுசீலா! விடு, விட்டுத் தள்ளு?” என்றார்.

அவருடைய அந்த ஆதரவான வார்த்தைகளிலே தான் என் உள்ளம் எத்தனை ஆசையுடன் தலை தூக்கியது! ஆனால் அந்த ஆதரவு வார்த்தையுடன் அவர் நின்றிருக்கக் கூடாதா?

நிச்சயமாக நான் அவர் அப்படிச் சற்றும் எதிர்பாராத விதமாகத் திடுக்கிடும் காரியம் செய்வார் என்று எண்ணியிருக்கவே இல்லை. ஒரு வாரம் சென்றபின் ஒருநாள் நான் இரவு சாப்பாடெல்லாம் முடிந்து அறையைத் தண்ணீர் விட்டுக் கழுவிக் கொண்டிருந்தேன்.

பரபரப்பும் படபடப்புமாக மாமியார் என்னிடம் வந்தாள். “என்னடி சுசீலா, பரம சாது போல் இருந்து கொண்டு உள்ளூற அவனுக்கு வத்தி வைத்து விட்டாயே. பெரியவர்கள், பெருந்தலை என்று என்னிடம் மரியாதைக்காவது கேட்டானா?” என்றாள் ரௌத்திராகாரமாக.

எனக்கு அடியும் புரியவில்லை, நுனியும் புரியவில்லை.

“என்ன சொல்கிறீர்கள், அம்மா?” என்றேன் தலை நிமிர்ந்து.

“என்ன சொல்கிறீர்களா? ஒன்றும் தெரியாதவள் போல நடிப்பானேன்? அப்படி உசிருக்கு உசிரா, ‘அண்ணா, மன்னி’ என்று ஒட்டிக் கொண்டு இருந்தவனையும் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்திருக்கிறாயே அம்மா! ‘மயிலாப்பூரிலே வீடு பார்த்து விட்டேன். நாளைக்கே போய் விடலாம் என்று உத்தேசம் பண்ணிவிட்டேன் அண்ணா’ என்று அவனும் சொல்லும்படி ஆயிற்றே? கேசவன் அப்படியே கல்லாய்ச் சமைந்து விட்டான். இல்லை, நான் ஒருத்தி குத்துக்கல் போல இன்னும் உயிருடன் இருக்கிறேன். எனக்கு ஒரு மதிப்பு வைத்து ஒரு வார்த்தை கேட்டானா? கூடப் பிறந்த பிறப்பினும் மேலாக, “ராமு ராமு, என்று அவள் அத்தனை ஒட்டுதலாக இருந்தாள். அதற்கு நல்ல மரியாதை கிடைத்தது!” என்று அவர் செய்யும் காரியத்துக்கு நான் தான் பொறுப்பாளி என்று என் மீது பாய்ந்தாள் அவள்.

“அப்படியா? எனக்குத் தெரியாதே அம்மா. என்னிடம் அவர் அப்படி ஏதும் சொல்லவில்லையே!” என்றேன் பரிதாபமாக.

“தெரியும் என்று நீ ஒப்புக் கொள்வாயா? உம் யாரைச் சொல்லி என்ன இப்போது? கேசவன் மனசே முறிந்து போய்விட்டது. பணங் காசு வரும் போகும். இப்படி முகத்தை முறித்துக் கொண்டு போகிறீர்களே, நாளைக்கு ஓர் ஆபத்து, சம்பத்து என்றால் மனுஷர்கள் கிடைக்க மாட்டார்கள்” என்று அவள் என் அழிந்த உள்ளத்திலே சொல்லம்புகளைப் பாய்ச்சிக் கொண்டு போனாள். நான் ஒன்றும் அறியாதவள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பனைமரத்தின் கீழிருந்து பாலைக் குடித்தாலும் உலகம் நம்பாது. உலக நியதியை விட்டே என் வாழ்க்கை நழுவி அப்பால் இருக்கிறது என்று சொன்னால் கூட அவர்கள் நகைப்பார்கள். இப்போது பிரிந்து போய் என் தலை மீது பழியைச் சுமத்துவதற்கு அவர் காத்திருந்தாரா? இந்தப் புத்தி முதலிலேயே எங்கே போயிற்று? என்னிடம் ஒன்றுமே தெரிவிக்காமல் அவர் செய்யும் காரியத்துக்கு அர்த்தந்தான் என்ன? ‘நான் உன்னைக் கைப் பிடித்த போது அப்படி எண்ணியிருந்தேன். இப்போதுதான் செய்தது தவறு என்று தெரிகிறது’ என்று என் மீது அன்று குற்றத்தைச் சுமத்தினாரே, என்னுடைய கண்ணீரிலும் கம்பலையிலும் இளகாதவர், இப்போது எதனாலே உருகிப் பிடிப்பு விட்டுப் போகும் ஈயத்தைப் போல் அண்ணன் மதனியிடமிருந்து தம்மைக் கத்தரித்துக் கொள்கிறார்?

மாமியாரின் குத்தும் வார்த்தைகள், பட்டுவின் முதலைக் கண்ணீர் மைத்துனரின் பட்டுக் கொள்ளாத மௌன நிலை, குழந்தைகளின் உண்மையான பிரிவுத் துயரம், மனங் கவர்ந்த தோழி லீலாவைப் பிரியும் ஏக்கம், அவருடைய சலனமற்ற தனை, இவற்றின் நடுவே எங்கிருந்தோ வரும் சுதந்தரத்தை அநுபவிப்பவள் போன்று, என் தாய் எனக்கு என் விவாகத்தின் போது வழங்கியிருந்த சிறு வெண்கலப் பாத்திரத்தில் அரிசியையும் பருப்பையும் எடுத்துக் கொண்டு என் புதுமனையிலே புகுந்தேன்.

கவலையும் ஏக்கமும் சூழ்ந்திருக்கும் இரவுகளிலே மனம் உறங்காமற் போனாலும் உழைத்துச் சலித்த உடல் தன்னை மறந்து உறங்கிவிடும். ஆனால் அடி மனத்திலே, ‘பொழுது விடிந்து விட்டதோ, விடிந்து விட்டதோ?’ என்ற துடிப்பு உடல் உறக்கத்தைக் கலைத்துக் கொண்டே இருக்கும். சிறிய அரவமும் கண்களை விழித்துப் பார்க்கச் செய்யும். நிலவின் கதிர்கள் என் கண்களுக்கு, விடிந்து விட்டது போன்ற பிரமையை ஊட்டிவிடும். ‘நேரம் அதிகமாகி விட்டதே. தூங்கி விட்டோமே!’ என்று அலறிப் புடைத்துக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்து வருவேன். குழாயில் நீர் வந்திருக்காது. பின்னரே என் மயக்க நிலை தெளியும். ‘பொழுது இன்னும் புலரவில்லை. விடிந்தும் தூங்கி விடுவோமோ? என்று உள்ளே குடி கொண்டிருக்கும் அச்சத்தினால் ஏற்பட்ட பிரமைதான்’ என்று எனக்குள்ளேயே அச்சத்திற்கும் அறியாமைக்கும் வெட்கிப் போவேன்.

தங்க வளையலுக்கு ஆசைப்படும் ஏழை ஒருத்திக்குப் புதிதாக மெருகிட்டுக் கடையிலே விற்கும் பித்தளை வளையல் கையிலே கிடக்கும் கண்ணாடி வளையல்களை விடக் கவர்ச்சியாகத் தோன்றும். ஆசையின் உந்தலிலே அவற்றை வாங்கி அணிந்து விடுவாள். நாலு நாட்கள் சென்ற பிறகு தான் பித்தளையின் சுயரூபம் தெரியும். மங்கிப் பாசி பிடித்து அவலட்சணத்தின் சின்னமாக விளங்கும் அவற்றைக் காணுந்தோறும் அலட்சியத்துடன் தான் உடைத்தெறிந்த கண்ணாடி வளையல்கள் மேலானவையாக அவளுக்குத் தோன்றும். தனிமைக்கு அதிகம் இடமில்லாமல், குரங்கு மனத்துக்கு அலையவிடச் சந்தர்ப்பம் அதிகமில்லாமல் அலுவல்கள் நிறைந்த அவ்வீடே எனக்குத் தேவலை என்று தோன்றியது.

என்ன காரணம் கொண்டு தனிக் குடித்தனம் வைத்தார். மனைவியிடம் அன்பைப் பெருக்கிக் கொள்ள அவர் கொஞ்சமும் விழைந்து விரும்பாத போது? என் மீது கனிவு காட்டுபவராகவா? அல்லது என்னைச் சற்றும் நிம்மதி இல்லாதவளாகச் செய்யவா?

காலையிலே ஒன்பது மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், இரவு ஒன்பது மணிக்குத்தான் அவரைக் காணலாம். பகல் நேரச் சாப்பாட்டை ஆள் வசம் அனுப்பி விட்டு வாயில் புறத்து அறை ஜன்னலிலேயே உட்கார்ந்து, நான் தெருவிலே உல்லாசமாக மாலை வேளையைக் கழிக்கச் செல்லும் ஜோடிகளைக் கண்டு பெருமூச்செறிவதுடன் திருப்தி அடைந்து விட வேண்டும்.

‘மனம் விட்டுப் பாட அவகாசம் இல்லையே, சூழ்நிலை சுவையாக இல்லையே!’ என்று நான் குறைப்பட்டது போக, பொழுது எனக்கு வளர்ந்தது. நான் பாடினாலும் சிரித்தாலும் அழுதாலும் அதற்கு எதிரொலி எழும்பாது. மனத்திலே தளர்ச்சி அதிகரிக்க முளைவிட்டிருந்த என் சங்கீதத்தைப் பெருக்கிக் கொள்ளும் லட்சியமும் பாதிக்கப்படாமல் இல்லை.

சுடர் கருகி மங்கும் விளக்கைப் போலக் குன்றி வந்த என் உற்சாகத்தைத் தூண்டி விடுபவள் போன்று சரளா என் வாழ்விலே வந்து புகுந்தாள். எப்போதும் போலத் தெருவைப் பார்த்துக் கொண்டு நான் ஒரு நாள் நிற்கையில் சரளா செருப்புச் சத்தம் ஒலிக்க, பின்னால் தலைப்புப் பறக்க அந்த மூன்று மணி வேளையிலே அவசரமாகச் செல்லுவதை என் கண்கள் கவனித்து விட்டன. மனத்திலே எழும்பிய ஆவலிலே அங்கிருந்தே, “சரளா” என்று கத்தி விட்டு வாசலுக்கே ஓடி வந்தேன். அவளோ, எந்த வீட்டில் யார் நம்மைக் கவனிக்கிறார்கள் என்ற எண்ணம் சிறிதும் இன்றி நேரான நோக்குடன் தன் நடையின் வேகத்தைத் தளர்த்தாமலே சென்றால். வாசற்படியில் நின்று எட்டிப் பார்த்த நான் அளவில்லாத துடிப்புடன் அவள் தெருவிலே செல்கிறாள் என்பதையும் மறந்து, “சரளா, சரளா!” என்று கூவினேன். அவள் ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள். பிறகு அங்கிருந்தே முகத்தை அசைத்து விட்டுத் திரும்பிப் போய் விட்டாள். அவள் செய்கை எனக்குப் புரியவில்லை. அவளாக இருந்தால் அப்படியா என்னைக் கண்டுவிட்டுப் பேசாமல் போவாள்? தெருவில் போகும் பெண்ணொருத்தியை அப்படிக் கூப்பிட்டு விட்டேனே என்று வெட்கமாக இருந்தது.

திரும்பி வந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி மூன்றேகால் ஆகியிருந்தது. தனக்கென எதுவும் பிரத்தியேகமாகச் செய்து கொள்வது என்றாலே பிடிக்காத பான்மை என் மனத்திடையே ஊறியிருந்தது. ‘அவருக்குச் சாப்பாடு அனுப்ப வேண்டும். இரவு உணவருந்த வருவார்’ என்று இந்த இரண்டு வேளைகள் மட்டும் சிரத்தையுடனும் கவனிப்புடனும் உணவு தயாரித்தேனே ஒழிய, என்னைப் பொறுத்த மட்டில், ஒருநாள் பன்னிரண்டு மணி, ஒரு நாள் இரண்டு மணி என்று நினைத்த போது உணவு கொள்வேன். எனக்குத் தோன்றினால் காபி போடுவேன். இல்லாவிட்டால் சிந்தனையிலேயே காலம் போக்கி விடுவேன். என்ன வேண்டுமானாலும் செய்ய இடந்தரும் இந்தச் சுதந்திரத்தை மனம் போன வழியிலேயே செலவழித்தேன். அன்று ஏதோ ஞானோதயம் போலத் திடீரென்று அப்படிச் செய்யக் கூடாது என்று தோன்றியது. ‘வாழ்வை ஏன் சோம்பிச் சோம்பிச் சுவையற்றதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்? நல்ல உடைகள் அணிந்து சிங்காரித்துக் கொள்ளக் கூடாதா? வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பானேன்? அண்டை அயலிலே சிநேகம் பிடித்துக் கொண்டு வெளியில் வாசலில் போய் வரக் கூடாதா? ஏற்கனவே மூளியாயுள்ள வாழ்க்கையை இன்னும் நானாகவே ஏன் கல்லும் முள்ளுமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற புது எண்ணங்கள் எழும்பின. வாசலில் “யார் என்னைக் கூப்பிட்டது?” என்ற குரல் – சரளாவின் குரலே தான் – என்னை அழைத்தது. நான் அப்படியே ஓடினேன்.

“சுசீலாவா, அடையாளமே தெரியவில்லையே? நான் யாரோ கூப்பிடுகிறார்களே, யாராக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே வந்தேன். தபால் ஒன்று அவசரமாக அனுப்ப வேண்டி இருந்தது. சற்று நின்றால் கூடக் கட்டு எடுத்து விடுவானே என்று அப்படி ஓடினேன். நான் போனது சரியாக இருந்தது. பெட்டியைக் காலி செய்து கொண்டிருந்தான். கையில் கொடுத்து விட்டு வந்தேன். நீ இங்கே தான் இருக்கிறாய்?” என்று ஆவலுடன் கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.

எத்தனையோ தினங்களுக்குப் பிறகு அன்று நான் என்னை மீறி மகிழ்வுற்றேன். “ஆமாம், உங்கள் மாதிரி இருந்தது. கூப்பிட்டு விட்டேன். அப்புறம் பேசாமல் போகவே, ‘யாரோ தெரியாமல் அழைத்தோமே’ என்று வெட்கப்பட்டுக் கொண்டேன். புங்கனூரை விட்டு எப்போது வந்தீர்கள்? நீங்கள் இந்த ஊரில் இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! எங்கே இருக்கிறீர்கள்?” என்று பதிலுக்கு விசாரித்தேன். பழைய நட்பு என்றாலே தனி இன்பம் அதில் இருக்கிறது. என்னுடன் அவள் அன்று இரண்டு மணி நேரம் இருந்தாள். பக்கத்துத் தெருவிலே இருந்த கலாமந்திரம் ஒன்றில் அவள் சங்கீதத்துக்குத் தலைமை ஆசிரியராக இருக்கிறாள் என்றும், புங்கனூரை விட்டு வந்து ஒரு வருஷத்திற்கு மேல் ஆகிவிட்டது என்றும் அறிந்து கொண்டேன். என்னைப் பாடச் சொல்லிக் கேட்ட அவள் ஆச்சரியத்துடன், “சுசீ! உன் சாதனையால் குரல் இன்னும் இனிமை பெற்றிருக்கிறது. நீ மேடை ஏறிக் கச்சேரி செய்தால் புகழும் பொருளும் உன்னை எப்படித் தேடி வரும், தெரியுமா?” என்று என் முதுகிலே தட்டினாள். எனக்கு சாயுஜ்ய பதவி கிட்டி விட்டது போல் இருந்தது.

சரளாவின் நட்பு அன்றிலிருந்து என் கசப்பைப் போக்கும் மருந்தாக வளர்ந்தது. என் வாழ்விலே புது ஏடுகள் பிரிந்தன. சிறகிழந்த பறவை போல் வீட்டுக்குள்ளே அடைந்து கிடப்பதை விட்டு அவளுடைய கலா மந்திரத்திலே கலைஞர்களுக்கிடையே காலம் கழிக்கலானேன். அவளுடைய தோழமையினால் பல வித்துவான்களும் ரஸிகர்களும் எனக்குப் பழக்கமாயினர்.

ஒருநாள் அவள் ஒரு விண்ணப்பக் காகிதத்தைக் கொண்டு வந்து கொடுத்து, “பூர்த்தி செய், சுசீலா!” என்று சிரித்துக் கொண்டே உத்தரவிட்டாள். என் உள்ளத்தில் மகிழ்ச்சி அலை பாய்ந்தாலும், சந்திரனின் மையத்தைப் போல உள்ளே நிழல் கட்டியது. “இவரிடம் இதற்கெல்லாம் உத்தரவு கேட்க வேண்டாமா?” என்றேன்.

ஒரு விநாடி அவள் தயங்கிவிட்டு, “உனக்கு இத்தனை சுதந்தரம் கொடுத்திருக்கும் அவரைப் பதினெட்டாம் நூற்றாண்டுக் கணவராக நினைத்துப் பயப்படுகிறாயே? அவர் தடை சொல்லுவார் என்று எனக்குத் தோன்றவில்லை. கேட்க வேண்டுமானால் கேளேன்? நாளை வருகிறேன்” என்று கூறித் தாளைக் கொடுத்துப் போனாள்.

அன்று இரவு அவரிடம் அதைக் காண்பித்தேன். எவ்விதச் சலனமுமின்றி அவர் அதைக் கையில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் பார்த்தார்.

“நான் என்ன தடை சொல்லப் போகிறேன், சுசீலா? உன் வழியிலே எனக்கு இயற்கையாக ஆர்வம் இல்லாவிடினும் உன் ஆசையை நான் மறிப்பேன் என்று எண்ணினாயா?” என்றார்.

என் வித்தையை வெளி உலகிலே அறிமுகப்படுத்த ஏதும் தடை கூறாத அவரது பெருந்தன்மை என் மனச்சாட்சியைக் குத்தியது. ஆனால் அதே சமயத்தில் அவர் தம் அந்தரங்கத்திலே எனக்கு இடம் கொடாமல், மணந்து கொண்டு விட்ட கடனுக்காக என்னை மனைவியாக நடத்தும் கொடுமை என்னை வேதனைக்கு உள்ளாக்கியது.

நானும் என் பெண்மையின் உறுதி லகானைத் தளர்த்தாமலே, புது உலகிலே புகழுடன் பிரகாசிக்கப் போகும் புது மகிழ்ச்சியைக் கொண்டு அக நெகிழ்ச்சியை மறைத்துக் கொண்டேன்.

என் விண்ணப்பம் வெற்றியாக வேலை செய்தது. வானொலியிலே சுசீலா ராமநாதனின் குரல் அடிக்கடி கேட்கலாயிற்று.

இரண்டு ஆண்டுகள் உருண்டு ஓடி விட்டன. ஆனால் பெண்ணொருத்தியை மலர வைக்கும் ஜீவ ஒளி என் அக நிறைவை இன்னமும் கிரகணமாகவே வைத்திருக்கிறதே?

வாயிலில் பேச்சுக் குரல் என் கவனத்தைத் தூண்டில் போட்டு இழுத்தது. லீலாவும் குழந்தைகளும் கம்பிக் கதவின் பின்புறம் நின்று பூட்டைப் பிடித்துக் குலுக்கினார்கள். நான் எழுந்து வந்தேன்.

4.2 கனி

“வெயில் வேளை, படுத்து உறங்குகிறாயோ என்று நினைத்தேன்” என்று கூறிக் கொண்டே லீலா உள்ளே வந்தாள். பஸ் நிற்கும் இடத்திலிருந்து வருவதற்குள் முகம் கன்றிப் போயிருந்த குழந்தைகளைக் கண்டதும் அவர்களின் தூய அன்புக்கு முன் நான் ஏதோ குற்றவாளியாக நிற்பது போல் இருந்தது.

“அப்பாடா! என்ன வெயில்! இவர்கள் இருவரும் என்னை இன்று சித்தியிடம் அழைத்துப் போனால் தான் ஆச்சு என்று தொந்தரவு செய்து சாப்பிட்டதும் சாப்பிடாததுமாக இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். வெயில் கொஞ்சம் தாழட்டும் என்றால் கேட்டால்தானே? சரி என்று கிளம்பினேன்” என்று கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவள் உட்கார்ந்தாள்.

“குழந்தைகளைப் பார்க்க வேண்டும், அங்கே அடிக்கடி வரவேண்டும் என்று ஆசை துடிக்கிறது. அவர் தாம் வீடு வரும் போதே மணி ஒன்பது அடித்து விடுகிறதே. அம்மாவும் மன்னியுந்தான் திரும்பிப் பார்ப்பதில்லை என்கிறார்கள். ஏதோ குழந்தைகளையாவது வர அனுமதித்திருக்கிறார்களே. நேற்று முதல் நாள் தான் அவர் வீடு வந்தவுடன், ‘இனிமேல் பள்ளிக்கூடம் லீவாயிற்றே? சுகுமார், மைதிலியையாவது அழைத்து வரக்கூடாதா? எல்லோரும் சௌக்கியந்தானே?’ என்று கேட்டேன். ‘நான் அண்ணாவைப் பார்த்தே பதினைந்து நாட்கள் ஆகிவிட்டன’ என்றார் அதற்கு. மைத்துனர் எங்காவது வெளியூர் போயிருக்கிறாரா, லீவா? காரியாலயம் வரவில்லையா?” என்று நான் வினவினேன்.

“இல்லையே! தினமும் போகிறாரே ஆபீஸுக்கு? ஆனால் ராமு எப்படிப் பார்க்க முடியும்? டவுனுக்கு அண்ணாவைப் பார்க்க என்று போக ஓய்வு கிடைத்திருக்காது” என்றாள் லீலா.

எனக்குப் புதிர் போடுவது போல் இருந்தது.

“காரியாலயத்தை இரண்டு பண்ணிக் கிளை ஏதாவது திறந்திருக்கிறார்களா என்ன?” என்று அறியாமல் நான் கேட்டேன்.

லீலா என்னை வியப்புறும் விழிகளால் ஏறிட்டுப் பார்த்தாள்.

“இல்லையே. நிஜந்தானா சுசீ? உனக்கு ஒன்னும் தெரியாதா?” என்று என்னைத் திருப்பிக் கேட்டாள்.

“எது?” என்றேன்.

அவளுடைய ஆச்சரியம் பின்னும் அதிகமாயிற்று.

“குடும்பத்திலிருந்து பிரிந்தது மன்றி இப்போது மூன்று மாதங்களாக அவன் உத்தியோகத்திலிருந்து கூட அவர்களிடமிருந்து விலகிக் கொண்டு விட்டானே! ‘அமார் அண்டு பிரதர்ஸி’ல் மானேஜராக இருப்பதாக அல்லவோ சொல்லிக் கொள்கிறார்கள்? அதற்குப் பிறகே அவன் வீட்டிற்குக் கூட இரண்டொரு தடவை தானே வந்தான்?”

நான் கற்சிலையாக நின்றேன்.

என்ன கணவர் இவர்? உத்தியோகம் செய்யும் இடத்தைக் கூட மனைவியிடம் கூறிக் கொள்ளாத இவரை எந்த விதத்தில் சேர்க்கலாம்?

அன்று கணவன் வீடு வந்த புதிதில் அவராகத் தெரிவியாத அந்த உத்தியோக விஷயத்தை லீலாவிடம் கேட்டு அறிந்து கொள்ள வெட்கினேன். இன்று, எங்கள் மூன்று வருஷ மணவாழ்வுக்குப் பிறகு ‘அவர் எங்கே போகிறார், என்ன வேலை செய்கிறார், எத்தனை சம்பளம் வாங்குகிறார் என்பன போன்ற விஷயங்களை அறியாமல் நிற்கும் என்னை அவள் காணும் நிலை வந்துவிட்டதே! சே! ‘அண்ணாவைப் பதினைந்து நாட்களாகப் பார்க்கவில்லை’ என்று அவர் கூறிய போது, இப்போது லீலாவிடம் கேட்ட அதே கேள்வியை அவரிடம் கேட்டிருக்கக் கூடாதோ?

கேட்காவிட்டால் தான் என்ன? இது போன்ற விஷயங்களை அவராகத் தெரிவிக்க வேண்டாமா? உலகத்துப் பெண்களைப் போலக் கணவனின் தொழிலிலும் வருவாயிலும் முன்னேற்றத்திலும் ஆசையும் அக்கறையும் கொண்டு நான் விசாரிக்கவில்லை என்றும், எனக்கு சுவாரசியம் இல்லாத சமாசாரங்களை எதற்காகக் கூறவேண்டும் என்றும் இருக்கிறாரா? அப்படியே இருக்கட்டும். என்னை இந்த வெறுக்கும் நிலைக்கு ஆளாக்கியது யார்? அவர் தாமே? மாதம் பிறந்தால் ஏதோ ஜீவனாம்சம் கொடுப்பது போல முதல் தேதி என் கைச் செலவுக்குத் தேவையான பணத்தை மேஜை மீது வைத்து விடுவார். வீட்டுக்குத் தேவையான பொருள்கள் அவ்வப்போது வந்து விழுந்துவிடும். தவிர, என் வானொலி நிகழ்ச்சிகள் மூலம் எனக்கு வரும் பொருள் வேறு செலவுக்குத் தலைக்கு மேல் வெள்ளமாகி விடும். நகையும் நாணயமும் வாங்கிக் குவித்துக் கொள்ளவோ மனத்துக்கு உற்சாகம் இல்லை. ‘அவருக்கு என்ன வருவாய், எப்படிப் போதும்?’ என்றெல்லாம் விசாரிக்க எனக்கு எப்படிச் சிரத்தை ஏற்படும்?

“என்ன சுசி, கல்லாகச் சமைந்து விட்டாய்? உண்மையில் ராமு உன்னிடம் இதெல்லாம் தெரிவிப்பதில்லையா? அக்காவும் அத்தையுமானால் பொழுது விடிந்தால் பொழுது போகும் வரை, ‘நீ உருவேற்றியதனால்தான் அவன் இப்படி ஒரேயடியாகக் கத்திரித்துக் கொண்டு விட்டான்’ என்று உன் மண்டையை உருட்டுகிறார்கள்? விசித்திரமாக அல்லவோ இருக்கிறது?” என்று லீலா மடமடவென்று வினவினாள்.

“நான் சிரத்தையுடன் கேட்கவில்லை. அவரும் நான் கேட்காததனால் சொல்லவில்லை போல் இருக்கிறது” என்று நான் சிரித்து மழுப்பினேன்.

“என்ன விந்தைப் பெண்ணடி நீ? இந்த நவயுகத்திலே கணவனின் உத்தியோகம் அறியாமல் இப்படியும் ஒரு பெண் இருப்பாளா? அன்றன்றைய விஷயங்களைக் குடைந்து தள்ளுவார்களே. நினைத்து நினைத்துப் பார்த்தால் கூட உன் பொறுமை எனக்கு அளவில்லாத வியப்பை ஊட்டுகிறது. தனிக்குடித்தனம் வந்ததற்கும் உன் மீது பழி சுமத்தினார்கள். நீயோ ஒன்றும் அறியாமல் சிரித்து மழுப்புகிறாய். ராமுவுந்தான் ஆகட்டும், மூன்று மாத காலமாக உன்னிடம் வீட்டில் நடமாடும் ஒரே ஜீவனிடம் எப்படி இந்தச் சங்கதியைக் கூறாமல் இருந்திருக்கிறான்? புது விஷயம் ஏதும் இருந்து அன்புக்குரியவரிடம் தெரிவிக்காமற் போனால் தலை வெடித்துவிடும் போல் இருக்காதோ?” என்றாள் லீலா.

“ஆம், அவரே விந்தைக் கணவர் தாம். எங்கள் வாழ்க்கையும் விந்தை வாழ்க்கைதான்” என்று கூறிய நான் இன்னும் பலமாக நகைத்தேன். கடையிலே அழகாகக் காணப்படும் பொம்மையை, வெளியிலிருந்து வாயைப் பிளந்து கொண்டு பார்க்கும் ஏழைச் சிறுமியைப் போல அவள் பேசாமலேயே என்னைப் பார்த்தாள்.

இந்த நிலைமை என்னைத் தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விடுமோ என்று நான் தவிக்கையிலேயே வாசற் கதவு தட்டும் ஓசையும், தொடர்ந்து ‘போஸ்ட்!’ என்ற குரலும் என்னை விடுவித்தன. நான் போவதற்குள் இரண்டு கடிதங்களை உள்ளே போட்டுவிட்டுத் தபால்காரன் போய்விட்டான்.

நான் அவற்றை எடுத்துக் கையெழுத்தைக் கவனித்துக் கொண்டே உள்ளே வந்தேன். ‘சுசீலா ராமநாதன்’ என்ற விலாசம் எனக்கு இப்போது எத்தனை பழக்கமாகவும் அசுவாரசியமாகவும் ஆகிவிட்டது? ஒவ்வொரு முறையும் நான் வானொலியில் பாடிவிட்டு வந்த பிறகு தொடர்ந்து ஒரு வாரத்துக்கு யாரேனும் கடிதம் எழுதுவார்கள். என் பாட்டுக்கு விமரிசனம் என்ற பெயரில் அவை பெரும்பாலும் புகழுரைகளாகவே இருக்கும். அந்த அசுவாரசியமும் திகைப்பாக மாறும்படி ஒரு கடிதத்தில் மைசூர் முத்திரை இருந்தது. கீழே ‘ஹேமா’விடமிருந்து என்றும் காணப்பட்டது. நான் உறையைக் கிழித்தேன். உள்ளே இரண்டு கடிதங்கள் இருந்தன. ஒன்று அத்திம்பேர் என் கணவருக்கு எழுதியிருந்தார்.

மூர்த்தி பயிற்சி முடிந்து வரும் வாரம் வரப்போகிறானாம். அவர் அவனை வரவேற்பதை வியாஜமாகக் கொண்டோ என்னவோ, சென்னை வர இருக்கிறாராம். கூடவே அத்தையும் ஹேமாவும் வருவதற்கு ஆசையாக இருக்கிறார்களாம். மூர்த்தி வந்தவுடன் வேலை ஒப்புக் கொள்ள வேண்டி இருப்பதால் ஹேமாவின் கல்யாணத்தை அடுத்த மாதத்திலேயே நடத்தி விட முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அதை மடித்து விட்டு ஹேமா எனக்கு எழுதியிருந்த கடிதத்தைப் பிரித்தேன்.

“இப்போதெல்லாம் நீ சாமானியமானவளா, சுசீலா! இசையுலகிலே வானொலி மூலம் வட்டமிடும் கந்தர்வ மங்கையாகி விட்டாய்! உன் புது விலாசங் கூட ஊரிலிருந்து மாமா எழுதியே எங்களுக்குத் தெரிந்தது. ஒரு கடிதம் எழுதவும் உனக்கு ஓய்வு கிடைக்கவில்லையா? பத்திரிகைகள் உன் சங்கீதத்தை மிகவும் சிலாகித்து எழுதியிருப்பதைக் கண்ணுற்ற பின் போன வாரந்தான் உன் நிகழ்ச்சியை நான் சிரத்தையுடன் உட்கார்ந்து கேட்டேன். உண்மையிலேயே உன் குரலில் அலாதி இனிமையும் கவர்ச்சியும் இருக்கின்றன சுசீ. வருங்கால இசையரசியான நீ என்னுடைய சகி என்று நினைக்கவே எனக்குப் பெருமையாக இருக்கிறது. அப்பா அங்கு வரப் போவதாகச் சொன்னவுடன் எனக்கும் உன்னைப் பார்க்க ஆசையாக இருப்பதால் நானும் வரத் தீர்மானித்து விட்டேன். உன்னுடன் ஒரு வாரம் சந்தோஷமாகக் காலம் கழிக்கக் கூடாதா?…” என்றெல்லாம் இரண்டு வருஷம் முன்பு என்னிடம் முகம் கொடுத்துப் பேசவும் கூசிய ஹேமா என்னையும் மதித்து இப்போது வரிந்து தள்ளியிருந்தாள்.

அன்று என்னை வேலைக்காரியிலும் கேவலமாக மதித்த அதே மனிதர்கள் இன்று என்னைத் தேடி என் வீட்டிலே என் தோழமையை மதித்து வர விரும்புவானேன்? நான் என்ன மாறிவிட்டேன்? ஆம், உண்மைத் தோற்றம் அவர்களுக்குப் புலப்படாது. செல்வமும், இறுமாப்பும் கொண்ட கும்பலுக்கே வெளித் தோற்றந்தான் குறி. அன்றை விட நான் வெளியார் கண்களுக்கு மேலானவள் ஆகிவிடவில்லையா? அஞ்சி அஞ்சி வீட்டின் அதிகாரிக்குப் பணிவிடை புரியும் பரிதாபகரமான ஏழைச் சுசீலாவா நான் இப்போது? எனக்கும் ஒரு வீடு, வாசல் என்று சொந்தமாக இருக்கின்றன. புகழ் ஏணியிலே வேறு காலை வைத்திருக்கிறேன்.

ஒரு கடிதத்திலேயே ஆழ்ந்து விட்ட என்னை லீலா, “என்ன சுசீ. ஒரே கடுதாசியில் அப்படி ஆழ்ந்து விட்டாயோ? யாராவது ‘கிரிட்டிக்’ உன் சங்கீதத்தைப் பற்றி எழுதியிருக்கிறாரா?” என்று என் கவனத்தைத் திருப்பினாள்.

“இல்லை, மூர்த்தி அடுத்த வாரம் இங்கே வரப் போகிறாராம். அத்திம்பேரும் ஹேமாவும் இங்கே வரப் போவதாக எழுதியிருக்கிறார்கள்” என்று நான் கூறிய போது அவள் முகம் சடாரென்று கறுத்து விட்டது.

அப்பா குதிருக்குள் இல்லை என்பதைப் போல, என்னைப் பார்க்கும் போதெல்லாம், ‘மூர்த்தியை நான் மறந்து விட்டேன்’ என்று முடிவு கூறியவளாயிற்றே?

“ஏன் லீலா? ஒரேயடியாக இருண்டு விட்டீர்களே. ‘மூர்த்தியை நான் நினைவிலிருந்து அகற்றிவிட்டேன்’ என்று பெருமையடித்துக் கொள்வீர்களே!” என்று நான் பரிகாசமாக மொழிந்தேன்.

என் கணவர் என் மீது எல்லையிலாப் பிரேமை வைத்திருக்கிறார் என்று நான் நம்பி, பிரேமை யுலகத்திலே மிதந்து கொண்டிருந்த நாட்களில் லீலா – மூர்த்தியின் காதலை எவ்வளவோ உயர்வாக எண்ணிக் கொண்டிருந்தேன். அப்புறமும் – என் வாழ்வில் இருள் புகுந்த பின் – காதலின் பேரில் எனக்கு மதிப்புக் குன்றிவிட்டது என்று கூறவில்லை. அவர்கள் இருவரையும் காணும் போதே எனக்கு அலாதி மகிழ்ச்சி உண்டாவது வழக்கம். மூர்த்தியைக் குணக்குன்று என்று நான் பழகிய மாதிரியிலிருந்து போற்றி வந்தேன். ஆனால் லீலாவிடம் நான் அறியக் காதல் மொழிகள் கூறி அவள் உள்ளத்தில் பிரேமையை வளர்த்துவிட்டு, ஹேமாவை மணந்து கொள்ள வாக்குறுதி கொடுத்திருப்பதாகத் தெரிந்த பிறகு நான் அவன் மேல் கொண்டிருந்த உயரிய மதிப்பிலே சற்று விரிசல் விழ ஏதுவாகி விட்டன. என்னுடைய அனுபவமும் கண் முன் அவன் லீலாவைப் புறக்கணித்திருப்பதும், ‘ஆண்களே நம்பத் தகாதவர்கள்’ என்ற அழுத்தமானதோர் எண்ணத்தை என் மனத்தில் ஊன்றி விட்டன. எனவே, லீலாவின் மன ஏக்கத்தைக் கண்டு, எனக்கு அத்தனை இரக்கம் ஏற்படவில்லை. ஒரு விதத்திற்குத் தப்பினாள் என்று கூட அபிப்பிராயப்பட்டேன். என்னைப் போல் இல்லையே அவள்?

திடீரென்று கவனம் வரவே இன்னொரு கடிதத்தைப் பார்த்தேன். கையெழுத்துப் பரிசயம் இல்லாததாக இருந்தது. முத்திரை தெளிவாகத் தெரியவில்லை. வேறு ஏதாவது அசுவாரசியக் கடிதமாக இருக்கும் என்று பிரிக்காமலே மேஜை மேல் போட்டுவிட்டு, “அடுத்த மாதம் கல்யாணம் நடப்பதாக இருக்கிறதாம்” என்றேன் மெதுவாக.

“என்னை இனிமேல் என்ன செய்யச் சொல்கிறாய் நீ, சுசி? அதைக் கேட்கவா நான் இந்த வேகாத வெயிலில் வந்தேன்” என்று எடுத்த எடுப்பிலேயே லீலா என்னிடம் கேட்டாள்.

நான் இப்போதும் சிரித்தேன். அவளுக்குக் கோபம் வந்தது.

“உனக்கு நகைப்பாக இருக்கிறது இல்லையா சுசீ? நீ கூட இப்படி என்னைக் கை விட்டுவிடுவாய் என்று நான் நினைக்கவில்லை” என்று சிணுங்கியபடியே அவள் எழுந்தாள்.

“வெகு அழகுதான்? கை விடாமல் வேண்டுமானால் பிடித்துக் கொள்கிறேன். நான் ஒரே யோசனை தான் சொல்வேன். கேட்பீர்களா?” என்று சற்று உரக்க நகைத்தேன்.

“உம் சொல்லு.”

“பேசாமல் நடந்ததையெல்லாம் கனவு போல் மறந்து விட்டு வரதனை மணந்து கொள்ளுங்கள். அவருடைய ஆசையைக் கருக்கி விடாமல் அவருடைய வீட்டிற்கு எஜமானியாக ஆகுங்கள். காதல் கீதம் எல்லாம் கதையுடனும் காவியத்துடனும் சினிமாவுடனும் வைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைக்கு அது ஒத்து வராது. மனக்கோட்டை எதுவும் கட்டிக் கனவு உலகத்திலே பறக்காமல் சாதாரணமாக மணம் செய்து கொண்டீர்களானால் வாழ்க்கையில் அமைதி நிலவும்” என்று எனக்குப் பட்டதைக் கூறினேன்.

“என்ன சுசீ? நிஜமாகவே இது உன் அந்தரங்க யோசனையா? தெரிந்தும் குட்டிச் சுவரில் முட்டிக் கொள்ளச் சொல்லுகிறாயா?”

“இந்திரலோகம் போன்ற பங்களாவில் காலெடுத்து வையுங்கள் என்றேனா, குட்டிச் சுவர் என்றேனா? மூர்த்தி இல்லாவிட்டால் நீங்கள் வாழ்வையே துறந்து விடலாம் என்று எண்ணினீர்களா? அது சாத்தியமாகுமா?” என்றேன்.

“சற்றும் பிடித்தம் இல்லாத ஒருவருடன் வாழ்க்கையில் பங்கு கொள்ள மனம் துணியாது போல் இருக்கிறதே சுசீ? வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் காணும் பொருட்டுத்தானே மணப் பந்தலில் இருவர் பிணைப்புறுவது? அது பூஜ்யம் எனத் தெரிந்ததும் ஒருவரோடு ஒருவர் மணவினையினால் பிணைப்புற்று என்ன பயன்? வேறு ஒருவரிடம் மனத்தைக் கொடுத்து விட்டு என்னால் தான் அவருடன் இன்பமாக வாழ முடியுமா? அல்லது நான் முழு மனத்துடன் அன்பு செலுத்தவில்லை என்று தெரிந்தால் அவருக்குத்தான் சந்தோஷம் உண்டாகுமா?” என்று பரிதாபமாக என்னை நோக்கி விழித்தாள் லீலா.

எனக்கு இந்த விஷயம் அலுத்து விட்டது. பாவம்! புதிதுதானே? அவளுக்கு அதிர்ச்சி இன்னும் பழகவில்லை.

“இருக்கட்டும், இருக்கட்டும். மூர்த்தி இங்கே வராமலா போகிறார்? மலரும் நகையுடன் எப்போதும் பிரகாசித்த லீலாவின் இருதயத்தை இருளச் செய்த அவரை நான் கண்டு சும்மா விடப் போவதில்லை. கவலையெல்லாம் மூட்டை கட்டித் தூர வையுங்கள். மனத்தை வீணே தளர விடுவதில் பலக் குறைவுதான் காணும் பலன். குழந்தைகள் எங்கே? நாலு மணிக்கு ‘டான்ஸ்’ நிகழ்ச்சி ஒன்று இருக்கிறது. கலாமந்திரத்திலே போகலாமா? என்ன டிபன் பண்ணலாம். சொல்லுங்கள்” என்று நான் பேச்சை மாற்றி அவள் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தேன்.

உள்ளே, தம்புராவின் தந்திகளை மீட்டிக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். என் குரல் கேட்டதும், “நான் இல்லை சித்தி, அவள் தான்!” என்று குழந்தைகள் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு ஓடி வந்தனர். அன்று மாலை நேரத்தை அவர்களுடன் இன்பமாகக் கழித்த பின்னும், ‘போகிறார்களே’ என்று இருந்தது எனக்கு. குழந்தைகளை அணைத்து முத்தமிட்ட நான் பஸ் ஏறச் சென்ற லீலாவிடம், “குழந்தைகளையாவது விட்டுப் போகக் கூடாதா? இல்லாவிட்டால் நீங்களும் இரண்டு நாள் இங்கே இருக்கக் கூடாதா?” என்று கெஞ்சினேன்.

“சொல்லாமல் கொள்ளாமல் நான் தங்குவது சரியில்லை சுசி. இப்போதே மணி ஆறரை ஆகிவிட்டது” என்று அவள் சொன்னாள். ‘ஈசுவரா!’ என்று மன அலுப்பும், உற்சாகமும் குன்றிய உடலுமாக உள்ளே வந்த என் கண்களில் பிரிக்கப் படாமல் இருந்த மற்றொரு கடிதம் பட்டது.

அலட்சியமாகப் பிரித்தேன். உள்ளே கடிதத் தாளின் மேலே அச்சடிச்சிருந்த வரதன், எம்.ஏ., என்ற எழுத்துக்கள் என்னை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டன! சட்டென ஐயம் உந்த, கடித உறையைத் திருப்பிப் பார்த்தேன். சுசீலா ராமநாதனுக்குத்தான். என்னவாக இருக்கும் என்று படிக்கலானேன்.

“இந்தக் கடிதம் உனக்கு ஆச்சரியம் அளிக்கலாம், சுசீலா. ஆனால் இதை எழுத வேண்டியது என் கடமை. ரஸிகன் என்ற முறையிலும், அதே கலையில் ஓரளவு தேர்ச்சி பெற்றவன் என்ற முறையிலுந்தான் சொல்கிறேன். உன் வித்தையிலே நான் கொண்டிருந்த நம்பிக்கை நான் எதிர்பார்த்ததற்கு மேலாகச் சுடர்விட்டிருக்கிறது. வெறும் புகழ் வார்த்தைகள் என்று நினைக்காதே. இசைக்கென்றே பிரமன் உன் குரலைப் படைத்திருக்க வேண்டும். ஞானமும் இனிய குரலும் ஒன்று சேரும் இடத்தில் சங்கீதக் கலை தேனும் பாலும் சேர்ந்தது போல் பரிணமிக்கக் கேட்பானேன்? முக்கால் மணி நேரம் கந்தர்வ உலகத்தில் இருப்பது போல் இருந்தது எனக்கு. தோடி ராகத்தை விஸ்தாரம் செய்தாயே? அது இன்னும் என் செவிகளை விட்டு அகலவில்லை. ராகத்தின் ரஞ்சகத்தை மிகைப்படுத்திக் காண்பிக்கும்படி நீ கையாண்ட பிடிகைகளும், இழைந்து இழைந்து மனத்தைப் பரவசப்படுத்திய கமகங்களும், அநாயாசமாகப் பறவை போல் மூன்று ஸ்தாயிகளிலும் நீ வட்டமிட்டதும் உன்னைப் பெரிய வித்வாம்ஸினிகளின் வர்க்கத்தில் சேர்த்து விட வேண்டியதுதான் என்று உறுதிப்படுத்தி விட்டன. விருத்தம் என்று பாடினாயே? அது பிரமாதம். கல்யாணி ஜம்மென்று புதுவெள்ளத்தின் சுழிப்பைப் போல முழங்கினாள். பைரவி உன்னிடம் கெஞ்சிக் கொஞ்சினாள். காவேரி பாகாய் உருகினாள். மோகனமோ கேட்போர் மனங்களிலே மோகனக் கவர்ச்சியை நிரப்பினாள். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டது நீ கடைசியாய்ப் பாடிய பதம். ‘யாரிடம் சொல்வேனடி’ என்ற அந்தப் பாடல் உண்மையான உள்ளத்திலிருந்து உருகிக் கரைந்து காற்றிலே வந்தது என்றால் மிகையாகாது. அந்த வேலவன் ஆறுமுகம் மட்டும் உன் கீதத்துக்குச் சற்றுச் செவி சாய்த்திருப்பானானால் உன் உருக்கத்துக்கு வசப்பட்டுக் கட்டாயம் பிரத்தியட்சமாகி இருப்பான்” என்று அக்கு வேறு ஆணிவேறாக அலசி அலசி ஆராய்ந்து எழுதியிருந்தான்.

வரதனிடமிருந்து இத்தகைய கடிதம் ஒன்று வரும் என்று நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் என் கானத்தைக் கேட்பான் என்ற எண்ணங்கூடத் தற்செயலாக வேணும் எனக்கு எழுந்ததில்லை. இப்போது அவன் அனுபவித்துவிட்டுத் தெரிவித்திருக்கும் பாராட்டுதல் என் உள்ளத்திலே அதுகாறும் நான் கண்டிராத போதையை நிரப்பிவிட்டது. உண்மையை நான் மறைக்காமல் சொல்லி விட வேண்டியதுதானே?

நானோ மணமானவள். அவனோ அயல் ஆடவன். தெரிந்தும் அவன் இத்தனை நிர்ப்பயமாக, சுவாதீனமாக எழுதியிருப்பதைத் தவறுதலாக எடுத்துக் கொள்ளலாம் என்றே எண்ணம் உதிக்கவில்லை. வேறு ரஸிகர்கள் எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார்கள். நேரிலும் அபிப்பிராயம் கூறியிருக்கிறார்கள். அவைகளில் நிச்சயமாக இவ்வளவு சரளம் தொனித்ததில்லை. ‘பிரமன் உன் குரலை இசைக்கென்றே படைத்திருக்க வேண்டும்’ என்று யாருமே கையாண்டதில்லைதான். என்றாலும் வரதன் என்னுடன் பழகியவன் அல்லவா? எதையும் கொஞ்சம் மிகைப்படுத்தியே கூறுவது அவன் சுபாவம். இதில் என்ன தப்பு இருக்கிறது?

அம்மாவுக்குத் தெரியாமல் தின்பண்டத்தை எடுத்துத் தின்னும் குழந்தைக்கு ருசியின் சுவாரசியத்தில், ‘பின்னால் தாய் கோபிப்பாள்’ என்றே தோன்றாது. உண்மை ரஸிகன் ஒருவனுடைய புகழ் மொழிகளைக் கண்டுவிட்ட எனக்கு எத்தகைய குறுக்கு எண்ணமும் தோன்றவில்லை. எப்பேர்ப்பட்ட அறிவாளிகளையும் புகழ்மொழிகள் மயக்கிவிடும் அல்லவா? இன்னும் உலகிலே முற்றிய அநுபவம் வாய்ந்திராத நான், அலுப்புச் சலிப்பு இயற்கையாகவே வந்து அடையும் அளவுக்குப் பழுத்திராத நான், புகழுக்கு வசப்பட்டு ஆசைப்பட்டது இயல்புதானே?

4.3 கனி

அத்தை, ஹேமா முதலியோர் வரப்போகிறார்கள் என்று அறிந்ததும் நான் அவர்கள் மேல் கொண்டிருந்த வெறுப்பெல்லாம், அவர்களைக் குத்திக் காட்டுவது போல நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆத்திரமாக மாறியது. அன்று என்னை அவர்கள் மட்டந்தட்டிய சம்பவங்கள் என் மனத்தின் அடித்தளத்திலிருந்து எழும்பி, என் வீடு தேடி வரப்போகும் அவர்களுக்கு முன் அவர்கள் மதிப்பை நான் பொருட்படுத்தாமல் அலட்சியமாக இருக்க வேண்டும் என்று எண்ணும்படி செய்தன. நான் தனிக்குடித்தனம் ஏதோ ‘கடனே’ என்ற மாதிரியில் ஆரம்பித்ததனால் வீட்டுக்குத் தேவையாக நல்ல நல்ல பாத்திரம் பண்டங்கள் கூட வாங்கிச் சேகரித்திருக்கவில்லை. என்னிடம் ஆடை அணிகளும் அவ்வளவு உயர்தரமானவையாக இல்லை. எனவே சமயத்தைப் பயன்படுத்திக் கொள்வது போல என்ன என்னவோ பொருள்கள் எல்லாம் வாங்கி நிரப்பினேன். புது மாதிரியான பட்டுப் புடவைகள் கூட இரண்டு எனக்கு என்று வாங்கிக் கொண்டேன். ஒரு நாளும் இல்லாத திருநாளாக நான் அலங்கார வேலைகளில் சிரத்தைக் கொள்வதைக் கண்ட என் கணவர் கூட “ஏது சுசீலா? அத்தை வருவதற்காக இத்தனை தடபுடலா, அல்லது மேல்நாட்டு நாகரிகத்தில் முழுகிவிட்டு வரப் போகும் மூர்த்தியின் கண்களுக்கு முன் பெருமையாகத் தென்படவா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

இந்தக் கேள்விகளை எப்படி எடுத்துக் கொள்வது என்று எனக்குப் புரியவில்லை. இத்தனை நாட்கள் நான் எதிலும் சிரத்தையில்லாமல் இருந்ததைக் குத்திக் காட்டுகிறாரா, அல்லது அத்தை வருவதை முன்னிட்டாவது நான் சிரத்தை கொண்டிருக்கிறேன் என்று திருப்தி கொண்டு மொழிகிறாரா என்று அவரை ஊன்றிக் கவனித்தேன். குமுறும் நீலக்கடலின் ஆழத்தில் என்ன இருக்கிறது என்று கண்டுபிடித்து விடலாம். அவர் என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறார் என்பது எனக்குப் புரியவில்லையே! என்றாலும், “எப்படியும் இவை தேவையானவை. இந்தச் சமயத்தை உத்தேசித்து வாங்கி வைத்தேன்” என்றேன்.

மௌனமாகவே அவர் ஸ்டேஷனுக்குச் சென்று விட்டார்.

இரண்டு வருஷங்களுக்கு முன் இருந்ததை விட ஹேமா, ‘லிப்ஸ்டிக்’ பூசிக் கொள்வதிலிருந்து இடியோசை போல் சிரிப்பது வரை எல்லா அம்சங்களிலும் வளர்ச்சி அடைந்திருந்தால். என்னைக் கண்டதும் ஓடி வந்து தோளில் கையைப் போட்டுக் கொண்டாள். வாட்ட சாட்டமாக ‘ஆண் பிள்ளை’ போல் வளர்ந்திருந்த அவள் பேச்சு, செய்கை எதிலும் பெண்மைக்குரிய மென்மை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.

“என்னடி சுசீலா?” என்று என்னை நோக்கிப் புன்னகை செய்து கொண்டே வெள்ளிக் கூஜாவை மறக்காமல் கையில் எடுத்துக் கொண்டே காரை விட்டு இறங்கினாள் அத்தை. நான் பதிலுக்கு அசட்டு சிரிப்பு ஒன்று சிரித்து வைத்தேன். என்னுடன் பேசியே இராத அத்திம்பேர் கூட “சுசீலா இன்னும் குழந்தை போல அப்படியேதான் இருக்கிறாள்” என்று சிரித்தவாறு அபிப்பிராயம் கொடுத்தார்.

வந்ததும் வராததுமாக அத்தை தன் பெருமையைக் காட்டிக் கொள்ளும் வகையில், “குழந்தை, உனக்குச் சிரமம் கொடுக்கக் கூடாது என்று சமையல் வேலைகளுக்கெல்லாம் ஆளை அழைத்து வந்திருக்கிறோம். எங்களுடன் நீ எல்லா இடங்களுக்கும் வந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். சற்றுப் போனால் வீட்டு வேலையைப் பார்த்துக் கொள்ள அவள் சாமான்களுடன் வண்டியில் வந்து விடுவாள்” என்றாள்.

பிறகு உள்ளே எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்தாள். “சிற்றடக்கமாக அழகாக இருக்கிறது வீடு. இந்த ‘டீ ஸெட்’ எப்போது வாங்கினாய் சுசீ? புது மெருகே அழியவில்லையே! வீட்டை எவ்வளவு நன்றாகவும் துப்புறவாகவும் வைத்துக் கொண்டிருக்கிறாய்! அண்ணாவுடைய பெண்களிலே நீதான் சுசீலா, சமர்த்தாகவும் கெட்டிக்காரத்தனமாகவும் குடும்பம் பண்ணுகிறாய். வீட்டுக்கு என்ன வாடகை? முழு நேரமும் வேலைக்காரி இருக்கிறாளா என்ன?” என்றெல்லாம் பெருமை பொங்கக் கேள்வி கேட்டாள் அத்தை.

“அப்பா, நான் எத்தனை நாட்களாக அந்தப் பழைய ‘ஸெட்டை’க் கொடுத்துவிட்டு வேறு வாங்கச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? சுசீலாவைப் பார்! ‘ஸெவன் வால்வ்ஸ், லேடெஷ்ட் மாடல்!’ இது எவ்வளவு அழகாக இருக்கிறது? இது போன்ற ரேடியோ ஒன்று நீ இந்தத் தடவை கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும். இந்த டேபிள் கிளாத் நீயா போட்டாய் சுசீ? அப்படியே கடையில் வாங்கியது போல் இருக்கிறதே!” என்று கண்ணில் கண்ட பொருள்களையெல்லாம் புகழ்ந்து தள்ளினாள் ஹேமா.

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே நான் இட்டிலியும் காபியும் கொண்டு வைத்தேன்.

“அட, என்ன சுசீலா இது? மாஜிக் மாதிரி இருக்கிறதே! பேசிக் கொண்டே அங்கும் இங்கும் பறந்தாய்? அதற்குள் இதெல்லாம் எப்படிக் கொண்டு வந்தாய்?” என்று அத்திம்பேர் அதிசயத்துடன் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டார். என் கணவருக்கு கூடப் பெருமை பொங்கி விட்டது போலும். “சுசீ எல்லாவிதத்திலும் கெட்டிக்காரி” என்றார்.

“பார்த்துக் கொள் ஹேமா, புருஷன் களைத்து வீடு வரும் போது நீ டென்னிஸ் மட்டையைச் சுழற்றிக் கொண்டு கிளம்பினால் அவனுக்கு ரஸிக்குமா, அல்லது இப்படி உபசாரம் செய்தால் ரஸிக்குமா என்று நீ தெரிந்து கொள்ள வேண்டும்” என்று அத்திம்பேர் நகைத்தார்.

“இல்லை, அண்ணா வந்து ஒரு நடை கூடப் பார்க்கவில்லையாம். வர வேண்டாமோ! எனக்கு என்னவோ மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அம்மாவைக் கூட அழைத்து வராமல் போனோமே என்று இப்போது தோன்றுகிறது. அவள் பார்த்தால் கொள்ளைச் சந்தோஷப்பட்டுக் கொள்வாள். சுசீலாவும் இத்தனை சமர்த்தாக, இத்தனை நன்றாகக் குடித்தனம் செய்வாள் என்று நான் எண்ணவில்லை!” என்று அத்தை பன்னிப் பன்னிப் பேசியது என் பழைய வெறுப்பைத் துடைத்துக் கர்வத்தை ஏற்றியது.

அன்று பகல் அத்தை என் மைத்துனர் வீட்டுக்குப் போக விரும்பினாள். நான் தனியாக வந்த பிறகு அந்த வீட்டிலே காலடி எடுத்து வைப்பது போல எனக்குத் தோன்றும்படி, நான் எப்போதாவது அங்கே சென்ற சமயங்களில் கூடப் பட்டு எனக்கு முகம் கொடுத்தே பேசவில்லை. என் மாமியாரோ, பேசும் இரண்டொரு வார்த்தைகளில் குற்றத்தைத் திணித்து வைத்துப் பேசுவாள். அவர் மாடியில் பத்து நிமிஷங்கள் இருந்தால் கூட எனக்கு முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கும். எப்படியோ சமாளித்துக் கொண்டு வீடு திரும்புவது வழக்கம். அத்தை முன்னிலையில் இப்போது பழைய சிநேக பாவத்துடன் பட்டு அளவளாவுவாளா? அல்லது விரோதம் காட்டுவாளா?

அத்திம்பேர் தம் காரியமாக வெளியே போய்விட்டார். என் கணவர் காரியாலயம் செல்லும் போது, நான் பகலில் என் மைத்துனர் வீட்டுக்கு அத்தையை அழைத்துக் கொண்டு செல்வதாகவும், அங்கே வருவதை அறிவிக்கும்படியும் கேட்டுக் கொண்டிருந்தேன்.

நான் முன்கூட்டிச் சொல்லி அனுப்பி இருந்ததாலோ என்னவோ, பட்டு அந்தச் சமயம் பார்த்துக் குழந்தைகள் சகிதம் வெளியே போயிருந்தாள். நான், அத்தை, ஹேமா மூவரும் சென்ற போது என் மாமியாரும் லீலாவின் தாயாரும் சமையற்கட்டில் இடைவேளைச் சிற்றுண்டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அத்தை கூடத்து ஊஞ்சலில் உட்கார்ந்து கொண்டாள். ஹேமா சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு நின்றாள். நான் ஏதோ குற்றம் செய்து விட்டவளைப் போல் அடிமேல் அடி வைத்து உள்ளே சென்றேன். அப்போது நாங்கள் ஒன்றாக இருந்த காலத்தில் ஜயம் வருவது எனக்கு நினைவுக்கு வந்தது. வந்தவள் நேராக மாடிக்குப் போவாளே ஒழிய, என் மாமியாரை லட்சியம் பண்ணிக் கீழே வந்து பார்க்கவே மாட்டாள். அவள் கூட நல்லவளாக இருக்கிறாள். பயந்து பயந்து நடுங்கின நான் பொல்லாதவளாகத் தோன்றினேன் அவர்களுக்கு.

“அத்தை வந்திருக்கிறாள்” என்று நான் என் மாமியாரிடம் அறிவித்த போது பழக்க தோஷமோ அல்லது இயற்கையான என் பயங்கொள்ளித் தனமோ, நெஞ்சு படபடத்தது.

“அதுதான் ராமு வந்து சொன்னானே! எங்கே? இப்படி உள்ளே வரச் சொல்லேன்” என்றாள் அவள்.

“மன்னி, குழந்தைகள் எல்லோரையும் எங்கே காணோம்?” என்று விசாரித்தவாறே சாப்பிடும் அறையில் ஒரு பலகையைப் போட்டு உபசரித்த வண்ணம், இப்படி வாருங்கள், அத்தை” என்று உள்ளே கூப்பிட்டேன்.

கையிலிருந்த மாவை அலம்பித் துடைத்துக் கொண்ட என் மாமியார், “குழந்தைகள் பிய்த்துப் பிடுங்கினார்கள். எங்கேயோ சினிமாவுக்கு அழைத்துப் போனார்கள். ‘இன்று தானே ஊரிலிருந்து வந்திருக்கிறார்கள், அதற்குள் வரப் போகிறார்களா?’ என்று சொல்லிக் கொண்டே போனாள். பத்து நாள் இருப்பீர்களோ இல்லையோ?” என்று கேட்டாள்.

குதிகால் ஜோடும் தானுமாக வெளியே நின்ற ஹேமா, “சுசீ?” என்று சங்கடம் தொனிக்கக் கூப்பிட்டாள்.

“அங்கே யார் நிற்கிறார்கள்? உங்கள் பெண்ணா? இப்படி வாயேன் அம்மா உள்ளே” என்றார் என் மாமியார்.

ஜோட்டைக் கழற்றி வைத்துவிட்டு அத்தையின் பக்கலில் வந்து அவள் நின்றாள். பாட்டிகள் இருவர்களுக்கிடையே அம்மா பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டு அங்கே நிற்க அவளுக்குப் பிடிக்கவேயில்லை என்பதை முகம் நிதர்சனமாகக் காட்டியது.

“லீலாவும் போயிருக்கிறாளா?” என்று நான் அவள் தாயிடம் விசாரித்தேன்.

“இல்லையே? மாடியில் இருப்பாள்” என்று பதில் வந்தது.

“வா, ஹேமா” என்று அவளை அழைத்துக் கொண்டு நான் மாடிப் பக்கம் சென்றேன்.

முன் கூடத்திலே நான் கண்ட காட்சி என்னை அப்படியே சிலையாக்கி விட்டது. மேஜை மேல் ஒரு கட்டுக் காகிதங்களைப் பிரித்து வைத்துக் கொண்டு என் கணவர் ஏதோ கூட்டிக் கொண்டிருந்தார். கீழே மின்சார விசிறியின் அடியில் லீலா தையல் யந்திரத்தில் ஏதோ தைத்துக் கொண்டிருந்தாள்.

முதலில் ஆச்சரியம் தாளாமல் ஹேமாதான் பேசினால். “நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? ஆபீஸ் பேப்பர்களா?” என்று அவள் அவரருகில் மேஜையில் குனிந்து பார்த்தாள்.

லீலா திடுக்கிட்டவள் போலத் துணியை எறிந்து விட்டு எழுந்தாள். “ஓ! சுசியா?” என்று என்னைக் கேட்டு விட்டு அவள் ஹேமாவைப் பார்த்தாள்.

“நீங்கள் இங்கே வருவதாக சுசீ சொல்லச் சொன்னது எனக்கு ஒரு மணிக்கு மேல் தான் நினைவுக்கு வந்தது. வந்தேன். அண்ணா நேற்றே ஏதோ தவறுதல் பார்க்கும்படி கூறியிருந்தான். அதுதான் இங்கேயே இப்படியே பார்க்கலாம் என்று உட்கார்ந்தேன். லீலா இது யார் தெரியுமா?” என்று புன்னகை செய்தவாறு அவர் லீலாவை நோக்கி ஹேமாவைக் காட்டினார்.

லீலா சிரமப்பட்டுப் புன்னகையை வரவழைத்துக் கொண்டு நிற்கையிலேயே அவர் பின்னும், “மிஸஸ் மூர்த்தியாகக் காத்துக் கொண்டிருக்கும் ஹேமா. ஹேமா, லீலாவும் மூர்த்தியும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் தாம்” என்று அறிமுகப் படலத்தை நடத்தி வைத்தார்.

“ஓ! சந்தோஷம்” என்று லீலாவின் கையைப் பிடித்துக் குலுக்கின ஹேமா, “நீங்கள் ஏன் அப்போது இவர்களுடன் மைசூருக்கு வரவில்லை” என்று கேட்டாள்.

துர்ச்சொப்பனம் ஏதோ கண்டு விட்டவளைப் போலத் தவித்த லீலா, “வரவில்லை…” என்று சிரித்து மழுப்பினாள்.

மனநிலை லேசாக இருந்தால் சம்பாஷணை சரளமாக ஓடப் பேச்சுகள் தாராளமாக வெளிவரும். ஹேமா ஒருத்திதான் திருப்பித் திருப்பிப் பேசிக் கொண்டிருந்தாளே ஒழிய, லீலாவுக்குப் பேச வார்த்தைகளே அகப்படாமல் கஷ்டப்படுவது போல் தோன்றியது. எனக்கோ, அவரை அங்கே கண்டதிலிருந்து என்னை அறியாமலே ஏதோ ஒன்று நெஞ்சை உறுத்தியது.

‘அவர் ஹேமாவுக்குக் கூறிய காரணம் உண்மைதானா? காரியாலயக் காகிதங்கள் வீட்டுக்கு எப்படி வந்தன? இந்த வேளையில் அவருக்கு ஆபீஸில் வேலை இல்லையா? தினமும் இங்கே வருகிறாரோ என்னவோ? அண்ணாவின் பந்தத்திலிருந்து விடுபட்ட பிறகும் ஏன் இவர் இதையெல்லாம் பார்க்க வேண்டும்?’ என்று எண்ணற்ற கேள்விகள் என் மூளையைத் தாக்கின. அவரும் ஏதும் சொல்வதில்லை. நானும் அவர் விஷயத்தில் தலையிடுவதில்லை என்றாலும் நான் இன்னும் ஒன்றும் கேட்காமல் இருப்பது சரியாகுமா? மனத்துக்குச் சரியாக ஒப்ப மாட்டேன் என்கிறதே!

வீட்டுக்குக் கிளம்பும் சமயம் அவரருகில் நின்று நான், “நாங்கள் போகவா? நீங்கள் வர நேரமாகுமா?” என்று கேட்டேன்.

“உம், உம்” என்று அவர் கண்ணை எடுக்காமலே, உம் கொட்டினார். ‘வர நேரமாகும் போல் இருக்கிறது’ என்று நான் அவர் பதிலுக்குக் காத்திராமலே திரும்பினேன்.

வீட்டை விட்டு வெளியே வந்ததும் ஹேமாதான் லீலாவைப் பற்றி முதல் முதலாக அபிப்பிராயம் கொடுத்தாள். “ரொம்ப அகம்பாவம் உண்டு போல் இருக்கிறது அவளுக்கு! வாயைத் திறந்து இரண்டு வார்த்தை விட்டு விட்டால் மதிப்புக் குறைந்துவிடும் என்ற எண்ணம். ஆமாம் சுசீ, ராமநாதன் இங்கு வருவதாகச் சொல்லவில்லையே! தமையனுடைய கம்பெனிக் கணக்கை எல்லாம் இங்கே உட்கார்ந்து விழுந்து விழுந்து கூட்டிக் கொண்டிருக்கிறாரே, மண்டையை உடைத்துக் கொண்டு. ஆள் கொஞ்சம் அழுத்தல் போல் இருக்கிறது உள்ளுக்குள்!” என்று சிரித்துக் கொண்டு அவள் மொழிந்தாள்.

“ஏன் சுசீலா, நீங்கள் தனிக் குடித்தனம் வந்ததே சண்டை பூசலுடன் வந்தீர்களோ? உன் மாமியார் என்னிடம் அத்தனை குற்றம் அடுக்குறாளே! உன் ஓர்ப்படிதான் ஆகட்டும் இன்று நான் வருவேன் என்று தெரிந்துதானே வெளியே போயிருக்கிறாள்? இவர்கள் குணம் நல்லதில்லை என்று எனக்கு அப்போதே தெரியும். எப்படியோ, அவர் நல்ல மாதிரியாக இருக்கிறார். அதுதானே வேண்டும்?” என்றாள் அத்தை.

‘அன்றே சொன்னீர்களே, உங்கள் வாய்க்குச் சர்க்கரை வழங்கலாம்’ என்று நான் முணுமுணுத்துக் கொண்டேன்.

நாங்கள் வீடு திரும்பிய போது, ஜயம் என்னைப் பார்க்க அங்கே வந்திருந்தாள். என்னைக் கண்டதும் வேலைக்காரி, “அம்மா வந்திடுவாங்க இப்போன்னு சொல்லிக்கிட்டே இருந்தேன், வந்துட்டாங்க” என்றாள்.

“பார்த்தாயா? உள்ளூர் மதனி உயர்த்தி இல்லை என்று அத்தையை முதலில் அங்கே தானே கூட்டிப் போனாய்?” என்றாள் அவள்.

“ஓ! அதில்லை மன்னி உள்ளூராரை ஆற அமரப் பார்க்கலாம். அங்கே முதலில் போய் வந்துவிடலாம் என்று போனோம். மன்னி கூட வீட்டில் இல்லை. இங்கே நீங்கள் திரும்பி விடுவதற்குள் வந்தோமே” என்று சொல்லிப் பாயை விரித்துப் போட்டு, உட்காரச் சொன்னேன்.

“நான் அங்கே நேற்றுப் பகல் போயிருந்தேன். அப்போதும் மன்னி இல்லை” என்று உட்கார்ந்த ஜயம் அத்தையுடனும் ஹேமாவுடனும் சம்பிரதாயமாகப் பேசினாள். அவள் கிளம்பும் முன், ஹேமா உடை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றாள். அத்தையும் பின் கட்டுக்கு ஏதோ காரியமாகச் சென்றாள். ஜயம் என்னிடம் தனியாக, “சுசீலா, நான் சொல்கிறேன் என்று நினைத்துக் கொள்ளாதே, நேற்று நான் அங்கே போயிருந்தேனா? ராமு அங்கே தான் மாடியில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். வேறு இடத்தில் மானேஜர் என்று சொன்னார்களே என்று கூட எண்ணிக் கொண்டேன். ஆபீஸ் காரியங்கள் வீட்டுக்குள் வருவானேன்? லீலா நான் போன போது மாடியிலே படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் பாட்டுக்கு மேஜையில் குனிந்து கொண்டிருக்கிறான். கிழவர்கள் இருவரும் காலை நீட்டிக் கொண்டு லோக க்ஷேமம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மைத்துனர் ஊரிலேயே இல்லையாம். எனக்கே இது பார்க்க நன்றாக இல்லை. ஆபீஸ் வேலையை இங்கே கொண்டு வந்து செய்யக் கூடாதா? நீ பரம சாது, சுசீலா. இல்லாவிட்டால் அந்த வங்கினியிடம் அத்தனை நாள் குடித்தனம் செய்ய முடியுமா? என்னவோ தனியா வந்தானே என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தேன். ராமுவுக்கு இதெல்லாம் நீ தெரிய வைக்க வேண்டும், சுசீலா. அத்தை வந்திருப்பது கூட எனக்குத் தெரியாது. உன்னிடம் சொல்லவே ஓடி வந்தேன். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பி விடுகிறாய். புருஷ மனசுதானே? சந்தர்ப்பமும் வேளையும் பொல்லாதவையாக இருந்தால் எப்படிப் போகுமோ? கல்யாணம் ஆகுமுன்பு அவளுடன் சிரித்துப் பேசினால் அப்புறமும் அப்படி இருப்பது பார்க்க நன்றாக இல்லையே! அப்புறம் பார், டாக்டரிடம் நான் கேட்டேன், அவர் சொல்கிறார், மைத்துனர் கம்பெனி உள்ளே கிடுகிடுத்து விடும்போல இந்த இரண்டு மாதத்திலே நிர்வாகம் குட்டிச்சுவராக ஆகிவிட்டதாம். அதுதான் ராமு ஆபீஸிலே லீவு போட்டுவிட்டு விழுந்து விழுந்து அண்ணாவுக்காக உழைக்கிறானாம்! அது எத்தனை நிஜமோ? இருந்தாலும் இவன் எதுக்கு இதையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொள்ள வேண்டும்?” என்று கொண்டு வந்திருந்த மூட்டை முழுவதையும் வாயிற்படியில் நின்றவாறே அவிழ்த்து விட்டாள்.

என் தலைக்கு மேலே பத்து நூறு வெடி விமானங்கள் பறப்பது போலவும், ஜயத்தின் வார்த்தை ஒவ்வொன்றும் வெடிகுண்டென என் மீது விழுவது போலவும் இருந்தது. ஜயத்தைப் பட்டுவுடன் ஒப்பிடும் பட்சத்தில் எவ்வளவோ நல்ல மாதிரி என்றே அபிப்பிராயப்பட வேண்டும். தானும் பிறர் வழிக்கு அநாவசியமாகப் போக மாட்டாள். பிறர் அவள் விவகாரத்தில் தலையிட்டாலும் சும்மா விடமாட்டாள். என்னைப் பொறுத்தவரை அதிகமாக இழைந்து குழைவதும் இல்லை. கண்டபோது மதிக்காமலும் பேசாமலும் இருந்ததும் இல்லை. அவளே என் விஷயத்தில் இப்படித் தலையிட்டுக் கொண்டு வருவானேன்?

‘புருஷ மனசுதானே? சந்தர்ப்பமும் வேளையும் போதாதவையாக இருந்தால் என்ன நேருமோ? நீ தெரிய வைக்க வேண்டும்.’ என் மூளையைப் பிடித்து இவை உலுக்கின. கண்களிலே சுற்றிச் சுழன்று வந்தன. நெஞ்சிலே சம்மட்டி கொண்டு அறைந்தன. அந்த புருஷ மனசு எப்படி இருக்குமோ? வெறுமே ஜயம் இப்படிச் சொல்லும் போது எங்கள் வாழ்க்கையின் அலங்கோலம் வேறு தெரிந்தால்?

லீலா நெருப்பாக இருக்கலாம். ஆனால் அந்த புருஷ மனசு நெருப்பிற்கும் மேல் சக்தி வாய்ந்த தண்ணீராக இருந்தால்?

சீ! இது அசட்டுப் புத்தி. லீலாவையா நான் இப்படி நினைத்தேன்? என் மனத்துக்கு ஏதாவது கோளாறு வந்து விட்டதா என்ன? கள்ளமற்ற குழந்தை போலத் தூய மனம் படைத்த லீலாவைத் தெரியாதா எனக்கு? என்றாலும் விஷயங்கள் இவ்வளவு வளர்ந்திருக்கும் போது, அவர் ‘நான் அண்ணாவிடமிருந்து விலகி விட்டேன்’ என்று கூட என்னிடம் ஒரு வார்த்தை தெரிவிக்காதது எத்தனை பிசகு? தினம் தினம் அவர் காரியாலயம் செல்கிறார் என்று நான் நம்பிக் கொண்டிருக்க, அங்கே போய் உட்கார்ந்திருப்பது பார்க்க நன்றாக இருக்கிறதா? என் கண்களுக்கு மாசு ‘பளிச்’சென்று தென்படாவிட்டாலும் ஜயமும் இன்னொருத்தரும் பார்த்துச் சொல்வது கேவலமாக இருக்கிறதே!

அன்றிரவு தனிமையில் நான் அவரிடம் கேட்டு விட்டேன். “நீங்கள் அண்ணா கம்பெனியில் இல்லை என்று கேள்விப்பட்டேன்…” என்று மெதுவாக ஆரம்பித்தேன். திடீரென்று அவரிடம் வழக்கமில்லாமல் பேச்சு எடுக்க வேண்டும் என்றாலே ஏதோ பாம்பை நெருங்குவது போல மனம் நடுங்கியது.

பத்திரிகை படித்துக் கொண்டிருந்தவர் பார்வையைத் திருப்பிக் கண்களைத் தூக்காமலே, “ஆமாம், உனக்குத் தெரிந்திருக்கும் என்று தான் நான் சொல்லவில்லை” என்றார்.

சற்றுத் தைரியமாகவே “அப்படியானால் நீங்கள் இரண்டு நாட்களாக அங்கே போய் ஆபீஸ் பேப்பர்களுடன் உட்கார்ந்திருக்கிறீர்களே! மறந்து விட்டேன், சாயங்காலம் இங்கு ஜயம் மன்னி வந்திருந்தாள். நேற்றும் அங்கே உங்களைக் கண்டதாகச் சொன்னாள்” என்றேன்.

கண்களை உயர்த்தி அவர், “உம் வேறு என்ன சொன்னாள் ஜயம் மன்னி?” என்று கேட்டார்.

வேறு ஏதாவது என்னிடம் சொல்லியிருக்கப் போகிறாளோ என்ற பயமா? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதாக்கும்!

“வேறு ஒன்றும் இல்லை. சாதாரணமாக ஏதோ பேச்சு நேர்ந்தது. தெரிவித்தாள்” என்றேன்.

“உனக்கு ஒன்றும் இல்லை. நீ கவலைப்படவும் ஒன்றுமில்லை. உனக்குத் தெரிவிக்க வேண்டிய அவசிய சமாசாரமாக இருந்தால் நீ கேட்காமலே கூறி விடுவேன். அண்ணா ஏதோ கணக்கு பிசகுகிறது என்றார். நான் பார்த்தேன். அவ்வளவுதான்” என்று முடித்து விட்டு மீண்டும் அவர் பத்திரிகையில் கண்களை ஓட்டினார்.

இதற்கு மேல் அவரிடம் என்ன கேட்பேன்? ‘இதெல்லாம் நீ தெரிய வைக்க வேண்டும் சுசீலா. சந்தர்ப்பக் கோளாறும் வேளைப் பொல்லாப்பும் எப்படி இருக்குமோ? புருஷ மனசுதானே?’ எனக்குள்ளே இவை ஓலமிட்டன.

எப்படித் தெரிவிப்பது? எதைத் தெரிய வைப்பது? ஜயம் மன்னி இந்த மாதிரி கூறினாள் என்று சொல்லலாமா? அவருடன் சண்டை போட வேண்டும். கடும் நெஞ்சைக் கோபித்துக் கலைக்க வேண்டும் என்றெல்லாம் பல சமயங்களில் எண்ணிக் கொள்வேன். ஆனால் பொழுது விடிந்ததும் மாயமாக மறைந்துவிடும் பனியைப் போல, அவர் முன் நிற்கும் போது என் வாயடைத்து, மனசு ஒடுங்கிப் போய் விடுகிறதே! ஏற்கனவே ‘மன்னி இன்னும் என்ன கூறினாள்?’ என்று கேட்டார். ‘வேண்டாம். அசட்டுத்தனமாக எதுவும் இப்போது உளறக் கூடாது. வெளிக்கு அமைதியாகச் செல்லும் வாழ்க்கைப் படகு உள்ளே பொத்தலானது என்று தெரியும்படி அத்தை அத்திம்பேர் வந்திருக்கும் இந்தச் சமயத்திலே எதையும் கிளப்பி விடக் கூடாது’ என்று முடிவு செய்து கொண்டேன்.

ஆனாலும் பெண்ணொருத்தியின் பொறுமைக்கு அளவு இல்லையா? கிட்ட நெருங்கிப் பேச்சுக் கொடுக்கவே இடம் இல்லாதபடி அன்றோ வார்த்தைகளை எண்ணிப் பேசிவிட்டு நத்தை ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்வது போல மனத்தை இழுத்துக் கொண்டு விடுகிறார்? அருகே இன்னும் துணிச்சலாகச் சென்று துளைத்துப் பார்க்க எனக்குப் பலம் போதவில்லையே!

இத்தனை நாட்களாக என் மீது காதல் இல்லை. அன்பு அவருக்கு சுரக்கவில்லை. அண்ணன் மதனியிடம் நான் மனஸ்தாபத்தைச் சம்பாதிக்கும்படி செய்து விட்டேன் என்று நான் என்னைச் சுற்றி அவரை மறைத்து எழுப்பிய சுவர்களெல்லாம் வெறும் மண்சுவர்! ஒரு மழைக்குக் கூடத் தாங்காதவை. அவை இத்தனை பலமுள்ளவையாக குண்டுக்கும் அசையாதவையாக இருக்க முடியாது? பின் இந்தச் சுவர் எதனாலானது?

ஆரம்பத்தில் அவர் இப்படியா இருந்தார்? ஆகா! அவர் ஊர்வலத்தின் போது என்னுடன் பேசியது, பரிசு கொடுத்தது, அந்த முதல் இரவின் திரை திறக்கும் போது என் மனதிலே எழுந்த இன்பக் கிளர்ச்சி! அவ்வளவும் பொய்யா? எங்கள் இன்ப வாழ்வுக்குச் சந்தர்ப்பங்களேயா யமனாக இருக்க வேண்டும்? அந்த ஓரிரவில் கூட அவரிடம் மனம் விட்டுப் பழகவும், அவர் உள்ளத்தை அறிந்து கொள்ளவும் சமயம் வாய்க்காதபடி என் வாழ்வு பூராவும் மண்ணை அள்ளிப் போடும் பூகம்பமாக வேறு சந்தர்ப்பங்கள் தொடர்ந்து நேரிட்டு விட்டனவே?

குறுக்கே சுவர் மறைக்கிறது. சுற்றி வளைத்து உள்ளே என்ன இருக்குமோ என்று பார்க்க ஆவலாக இருக்கிறதே ஒழிய, கடப்பாரையை எடுத்துப் போடும் மனவலிமை எனக்கு என்ன முயன்றும் வரமாட்டேன் என்கிறதே! நான் முதலில் எண்ணிய பிரகாரம் அவர் உடலின்பத்திலே பற்றுக் கொண்டவராக இருந்திருந்தால் கூட இத்தனை வீம்பாக இருக்க மாட்டார். உண்மையான மனக்கலப்பு இருந்தாலோ இந்த வைராக்கியத்திற்கு இடம் இல்லை. என்ன தான் காரணமாக இருக்கும்? அவருடைய இந்த மன நோய் எதனால் வந்ததாக இருக்கும்?

என் மண்டையிலே பொறியொன்று சிதறி வந்து விழுந்தது. வேறு எந்த இடத்திலாவது பிடிப்பு இருக்கக் கூடாதா? அந்தப் பிடிப்பே அவர் உறுதி கொண்டிருக்க ஏதுவாயிற்றே.

‘கல்யாணத்துக்கு முன் சிரித்துப் பேசிப் பழகினால் அப்புறமும் அப்படி இருப்பது பார்க்க நன்றாக இல்லையே!’

ஆ! அப்படியும் இருக்குமோ?

ராவணன் கோட்டைக்குள் சுற்றிச் சுற்றி வந்தும் பின்னும் பின்னும் பின்னும் உள்ளேயே போகும் ஆட்டக்காய் போலப் பின்னும் பின்னும் பின்னும் இங்கேயே வருகிறதே எண்ணம். மூர்த்தியிடம் காதல் கொண்டு மனமுடைந்து தவிக்கும் லீலாவையா நான் சந்தேகக் கூட்டுக்குள் அடைக்கிறேன்? சே, நான் நன்றி கெட்டவள். என் உள்ளத்தினுள்ளே உண்மையாக நிறைந்திருக்கும் உயிர் தோழியாயிற்றே. அவளா எனக்குத் துரோகமிழைப்பாள்?

படக் காட்சிகளில் பின்னிருந்து வருவது போல உள்ளே இன்னொரு குரல், ‘அதெல்லாம் இப்போது சரி. நீ அவர் வாழ்வில் புகாததற்கு முன்பு? அழகிய இளமங்கை அவள். வீட்டிலே சகஜமாகப் பேசிப் பழகும் ஆண் அல்லவா அவர்? அவர் மனம் பளிங்காகவே இருந்திருக்கும் என்று எந்த அத்தாட்சியுடன் நம்புகிறாயோ அதே அத்தாட்சி அவர் மனம் நிர்மலமில்லாமலும் இருந்திருக்க முடியும் என்று எண்ணவும் இடம் இருக்கவில்லையா? அவர் அந்தக் காலத்தில் அவளைக் காதலித்திருக்கக் கூடாதா’ என்றது. நினைக்கவே என் நெஞ்சம் நடுங்கியது.

என்றாலும் உள்ளம் குரலுக்கு ஒப்புக் கொண்டே ஆக வேண்டியதாயிற்று. அவள் முரண்பட்டதனால் முறிவு பட்டிருக்கலாமோ? மனத்தைத் திடம் செய்து கொண்டு என் மீது அவர் அன்பு செலுத்த முயன்றும் தோல்வி பின்னுக்கு இழுக்கிறதோ?

அப்படித்தான் இருக்கும். நான் இணைந்து போயிருந்தால் ஒரு வேளை அவரும் காவிய நாயகனைப் போல அன்புலகத்திலே குடும்பம் செய்யாது போனாலும் ஏதோ, உலக ரீதியில் குழந்தை குட்டிகள் என்று வாழ்க்கை சென்றிருக்கும். இப்போதோ?

‘உன்னை மணம் செய்து கொண்டது தவறு. மன மயக்கத்திலே தவறு செய்தேன்’ என்றாரே. அவைகளுக்கு உண்மையான அர்த்தம் இந்த விடை தெரிந்த பின் அல்லவோ துலாம்பரமாக விளங்குகிறது?

பள்ளிக்கூட நாட்களிலே ஏகவர்ண சாம்யங்கள், துவிவர்ண சாம்யங்கள் என்று நான் கணக்குப் போட்டது என் நினைவுக்கு வந்தது. அந்த நோட்டுப் புத்தகத்துக் கணக்குகளைப் போல என் மன ஏட்டிலே நான் அங்கும் இங்கும் தெரிந்த சங்கைகளைக் கொண்டு விடுபடாமல் இருந்த அவர் உள்ளத்தின் விடையைக் கண்டுபிடித்து விட்டேன். விடை சரிதானா என்று பார்க்கும் ரீதியிலே இந்த விடையைக் கொண்டும் ஆராய்ந்து விட்டேன். இதை விடப் பொருத்தமாக எதுவும் இருக்க முடியாது. ஒரே விடை தான். எங்கள் இருவருக்கும் இடையே இன்று வளர்ந்திருக்கும் வலிமை வாய்ந்த கற்சுவர், லீலாவின் எழில் உருவமாகிய அஸ்திவாரத்தைக் கொண்டு எழுப்பியது.

லீலாவா! எந்த உருவத்தை என் இன்னுயிர்த் தோழி என்று பூசனை செய்து வந்தேனோ, அந்த உருவமே என் இன்ப வாழ்வை எழுப்ப வொட்டாமல் செய்கிற முட்டுக்கட்டையாக இருக்கிறது! எவளுடைய பேச்சும் சிரிப்பும் என் மனத்தில் அமுதத்தை வளர்க்கின்றனவோ அவையே என் வாழ்விலே அமுதத்தை வளர்க்கத் தடை கட்டும் அணையாக இருக்கின்றன!

ஆனால் லீலாவா குற்றவாளி? அவள் அழகாக இருப்பது குற்றமா? மனங் கவரும் செயல்களும் சாயைகளும் கொண்டிருப்பது அவள் குற்றமா?

அவளை என் விரோதியாக, என் இன்ப வாழ்க்கையின் யமனாகக் கருதவே என் மனம் மறுத்தது.

குற்றம் அவர் மீதுதான். மாசு ஒரு தரப்பிலே தான் நிறைந்திருக்கிறது. அவர் அவளை மறந்து இருக்கலாம். ஆனால் தம் குற்றம் உணராதவராகவா அவர் இருப்பார்?

சுற்றிச் சுற்றிச் சுழன்று நான் அன்றிரவு கண்ணைக் கொட்டவில்லை. கண்ணை மூடினால் லீலா வந்தாள். அவர் வந்தார். இருவரும் என் இதயத்துள் சுற்றிச் சுற்றிக் கண்ணாமூச்சி ஆடினார்கள்.

‘பொழுது விடிந்ததும் அவசியம் லீலாவைப் பார்க்க வேண்டும். தனிமையில் அவளைக் கண்டு மனச் சுமையை அவளிடமே தான் இறக்கி ஆறுதல் பெற வேண்டும். அவருடைய தன்மையை அவளிடமே அறிய முயல வேண்டும் என்று முடிவு செய்தவாறு நித்திரையை வரவழைத்துக் கொள்ள முயன்றேன். ஆனால் எதுவும் நினைத்தபடியே நடக்காமல் இருக்கும் போதே இத்தனை இறுமாப்பும் அகம்பாவமும் படைத்து நிமிர்ந்து நிற்கும் மனித வர்க்கத்துக்கு நினைக்கும் வண்ணம் செயல்களைக் கடவுள் இசைவாக நடத்திக் கொடுத்து விட்டால் பூவுலகம் குடை கவிழ்ந்து விடும் போலும்!’

நான் நினைக்காததே நேர்ந்தது. ‘அப்பாவுக்கு உடல்நிலை சரியாக இல்லை. உடனே புறப்பட்டு வருக’ என்று ஊரிலிருந்து சுந்து தந்தி அடித்திருந்தான். உடல் ஆட, உள்ளம் கிடுகிடுக்க, அத்தையும் நானும் அன்றே புங்கனூரை நோக்கி வண்டி ஏறினோம்.

– தொடரும்…

– நாராயண சுவாமி ஐயர் முதல் பரிசு பெற்றது – 1953.

– பெண் குரல், முதல் பதிப்பு: நவம்பர் 1954, கலைமகள் காரியாலயம் சென்னை.

– பெண் குரல், முதல் பதிப்பு: 2011, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் [பி] லிட், சென்னை.

நன்றி: https://www.projectmadurai.org/

ராஜம் கிருஷ்ணன் ஆசிரியை திருமதி.ராஜம் கிருஷ்ணன் 1952-ல் நடந்த அகில உலகச் சிறுகதைப் போட்டியில் இவரது 'ஊசியும் உணர்வும்' என்ற சிறுகதை தமிழ்ச் சிறுகதைக்குரிய பரிசைப் பெற்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியீடாக வந்த உலகச் சிறுகதைத் தொகுப் பில் அதன் ஆங்கில வடிவம் இடம் பெற்றது.  1953, கலைமகள் நாராயணசாமி ஐயர் நாவல் பரிசைப் பெற்றது இவரது 'பெண்குரல்' நாவல். 1958-ல் ஆனந்தவிகடன் நடத்திய நாவல் போட்டியில் இவரது 'மலர்கள்' நாவல் முதல் பரிசைப் பெற்றது. …மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *