வீசாத-வாள்

0

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குளத்தங்கரை சிருங்கார ரசத்தின் விளை நிலம் மட்டும் அல்ல, குளத்தின் வடபுறத்தில் மதுரைவீரன் காவல் காத்து நிற்கிறான். வாளின் சக்தி வாள் வீச்சில் இல்லை என்பது அங்கு நன்கு தெரிகிறது. ஏனெனில் மதுரையான் வாள்வீச முடியாது. வீசினாலும் வாள் வெட்டாது. ஏனென் றால் வாள் காரையால் கட்டப்பட்டது. ஆனால் இதை நான் சொல்ல வரவில்லை. வாள் என்பதே விழாமல் இருக்கும் வரையில்தான் அதற்கு மதிப்பு. வாளின் கொள்ளுப்பேரன், பேக்திகளைக் கேளுங்கள்! நீர்மூழ்கி, ஆளில்லா விமானம், அணுகுண்டு எல்லாம் சொல்வது என்ன? நாசலீலை புரியப் போகிறோம். எங்களை எதிர்த்து எங்களை நாசம் செய்கிறார்கள். ஓரளவுக்குத் தங்களையும் நாசம் செய்து கொள்ளுகிறார்கள். அதனால்தான் அசுரர்களின் ஒரு துளி ரத்தம் சிந்தினாலும் அதிலிருந்து ஆயிரம் அசுரர்கள் பிறக் கிறார்கள், என்று பழய ஞானிகள் கூறினார்கள். தீமை சென்ற இடமெல்லாம் தீய்த்துக்கொண்டே செல்லும். பாரதப் போர் முடிவில் தருமர் கண்டது என்ன? ஆனால் மதுரைவீரன் வாளுக்கு மட்டும் ஏன் அவ்வளவு கௌரவம்? 

திருடப்போகிறவன் அங்கே ஒரு கும்பிடு போட்டு விட்டுப் போகிறான். மாடு பால் கறக்கவில்லை என்றால் மதுரையானுக்கு வேண்டிக் கொள்கிறார்கள். கமலையில் காளையைப் பழக்கு முன்பு மதுரையான் மனசு வைக்கணும் என்கிறார்கள். புதிதாக கிராமத்திற்கு ஒட்டி வரப்படும் காளை கூட நைந்து தயங்கும்பொழுது மதுரையானை நினைத்த பிறகு, எப்படியோ காளைகள் ஊர்வந்து சேர்ந்து விடுகின்றன. 

ஊரில் மகமாயித் தாயாரின் திருவிளையாடல், சூறை போகிறது – பிஞ்சும் பூவுமாய்! கிராமமே நடுங்குகிறது. சாவடியில் கும்பல் கூடி உடுக்கடித்துக் கேட்கிறார்கள். 

“ஆதிமகமாயி நான் 
அம்பலத்தை ஆட்டுறவள், 
பாதி பிறை முடியான் 
மார்மேல் கால்வைக்கிறவள்,
பஞ்சமா பாதகங்கள் 
பொடியாகப் பொசுக்கிறவள், 
சூரரையும் சோதித்துத் 
தோகையரைத் தூண்டுறவள், 
ஆதி மகமாயி நான் 
அம்பலத்தை ஆட்டுறவள்.” 

“அம்மா தாயே! நாங்க கண் அவிஞ்சுபூட்டோம். என்ன குத்தமோ, பொறுத்துக்கோ” என்று விம்முகின்ற குரல்கள். 

“ராஜ வீதி வந்தில்லை 
சர்க்கார் ரோடு கண்டதில்லை, 
குளத்தடி மீசைக் காரன், 
கொக்கி வாள் கைக்காரன்,
சாலை முனை குந்திக் கிட்டான், 
ஆனை பரி அவிழ்த்துவிட்டு.
வழி மறிக்கும் தம்பி மீறி 
வந்திடவும் நெஞ்சமில்லை, 
எல்லையிலே காலோடுங்கி 
ஏக்கத்துடன் நிற்கையிலே, 
வந்ததொரு மாட்டுடனே 
வயல்வழியே நுழைஞ்சு வந்தேன்.” 

“பாத்தீங்களா? ஆயி சொல்றா? அந்த ஊரிலே இருந்து நம்ம ஊருக்கு மாட்டு வழியா அல்ல வைசூரி வந்திருக்காம்.” 

மதுரையானுக்குப் பயந்து மகமாயி கூட சாலை வழி விட்டு வந்து பொந்தைத் தேடுகிறாள்! 

ஏன்? விழாத கொக்கி வாளை மதுரையான் பிடித்திருக் கிறான். இந்த வீசாத வாளே நமது மனச்சாட்சியின் கண்ணாடி; சமுதாயத்தின் ரகசியக் கடிவாளம். அளவுக்குள் பட்ட மனித அறிவின் அரண், ஆலயம். அறிவு அசைக்கும், அலைக்கும். ஆறுதலோ ஆனந்தமோ தராது. அசைவுடை யதுவும் அசைவில்லாததைப் பற்றிக் கொள்ளாவிட்டால் அசைவு, இயக்கம் என்பதற்கே பொருளிராது. தன்னைத் தானே அழித்துக்கொள்ளும், வண்டி ஜகடை உருள்கிறது. எதனால்? அசையாத அச்சினால். 

அறிவு ஜகடை அசையாத அச்சு, மனிதனின் உணர்வின் அறை இருளில் எரியும் ஒரு மின்மினி. நம்பிக்கையே மின்மினி. அதுவே அசையாத அச்சு. அசை அச்சின் ஒரு வார்ப்பு மதுரையான். மதுரையான் கோவில் காரையால் கட்டப்பட்டிருந்தால் என்ன? யானை, குதிரை யின் கால்கள் உப்பளர் பட்டிருந்தால் என்ன? கிராமத்தைக் காக்க சாலை வழியில் மதுரையான் சித்தமாயிருக்கிறான். என்பது மட்டும் போதாதா, ஒரு ஆளை ஒன்பது ஆள் ஆக்க?

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *