கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2025
பார்வையிட்டோர்: 76 
 
 

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

அத்தியாயம் – 1

மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்…

ஆதவன் முழுவதுமாக விழித்தெழாமல் கொஞ்சம் சோம்பல் முறித்து தன்னுடைய கதிர்களை பூமி மேல் பரப்ப முயற்சித்துக் கொண்டிருந்தான்.

நாகர்கோயில் மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் மெதுவாக திருநெல்வேலி ரயில் நிலையத்துக்குள் நுழைந்தது. மூன்றாவது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. மும்பை செல்லும் பயணிகள் அவசர அவசரமாக ரயிலுக்குள் நுழைந்து தங்கள் இடங்களில் பெட்டி படுக்கைகளை அடுக்கி வைக்க ஆரம்பித்தனர்.

சிவாவின் குடும்பத்தினர் ரயிலில் ஏறிக் கொள்ள, பின்னால் சிவாவின் மைத்துனன் திவாகர் ஒரு மூட்டை தேங்காய் கொண்டு வந்து இருக்கையின் கீழே வைத்து விட்டு, வேகமாக இறங்கி வந்து இன்னொரு கோணியில் இருந்த முருங்கை காயை எடுத்து வந்து எதிர் இருக்கையின் கீழே வைத்து விட்டு வியர்வையை துடைத்துக் கொண்டான்.

சிவா தன்னுடைய உடைமைகள் எல்லாம் வந்து விட்டதா என்று சரி பார்த்துக் கொண்டிருந்தான். சிவாவின் மனைவி கையில் இருந்த திவ்யாவை மடிக்கு மாற்றி விட்டு ஜன்னலருகே நின்று கொண்டிருந்த அம்மாவை கொஞ்சம் வருத்தத்துடன் பார்த்தாள்.

“அசடு, ஏன் அழுகிறாய்?’’ என்றாள் அம்மா.

“அம்மா, எனக்கு இந்தக் குழந்தை திவ்யாவை நினைத்தால் தான் மிகவும் பயமாக இருக்கிறது’’ என்றாள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு.

‘‘புவனா, இந்தப் பிள்ளையை நீ நல்ல முறையில் பாதுகாப்பாய் என்ற நம்பிக்கையில் தான் சிவா உன்னை கல்யாணம் பண்ணிக் கொண்டான். பாரு, சின்னக் குழந்தை. விரலை சூப்பிக் கொண்டு தூங்குகிறது. நீ தான் எல்லாமாக

இருந்து பார்த்துக்கணும். நம்ம நிலைமை உனக்கு நல்லாத் தெரியும். உன் தங்கச்சியை இனி எப்படி கரையேற்றப்போறோமுன்னு நினைக்கும் போது தான் இப்பவே வயற்றில் புளியை கரைக்குது. நல்லா நடந்துக்கோ. சிவா மனம் கோணாமல் பார்த்துக்கோ. திவ்யா என்றால் அவனுக்கு எவ்வளவு உயிருன்னு உனக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும்.’’ ஜன்னல் வழியாக புவனாவின் அம்மா பிரசங்கம் செய்து கொண்டிருந்தாள்.

திடீரென்று விழித்த திவ்யா ‘‘அத்தா, அப்பா எங்கே?’’ என்றது.

‘‘பாரும்மா, இப்பவும் அத்தான்னு தான் கூப்பிடுது, குரங்கு. அம்மான்னு கூப்பிடச் சொன்னா, அம்மா கடவுள் கிட்ட பொம்மை வாங்கப் போயிருக்கா. நீ ஒன்னும் அம்மா இல்லேங்குது’’ கண்ணில் தெறித்த நீரை துடைத்துக் கொண்டாள் புவனா.

‘‘புவனா நீ ஒண்ணும் சின்னப் பெண் இல்லே. இருபத்தாறு வயசில தான், எங்களால் அதுவும் உனக்கு சிவாவைத் தான் கல்யாணம் பண்ணி வைக்க முடிஞ்சுது. நீ தான் நல்ல முறையில் குடும்பம் நடத்தப் பழகிக் கொள்ளணும். அழக் கூடாது புவனா. அழுது அழுது வீணாக சோகப்படுகிறதை விட எது வந்தாலும் என்னால் சமாளிக்க முடியும்ணு மனசை திடப் படுத்திக் கொண்டு, வர்றதை எதிர்த்து நின்னேன்னு வச்சுக்கோ, அப்புறம் வாழ்க்கையும் கூட உன் காலுக்கு முன்னாலே முட்டிப் போடும்.

‘‘அது சரி தாம்மா நம்ம சித்தி மகள் தேவகி இறந்தவுடன் நான் துடிச்சுப் போனபோது கூட, இப்படி சிவா அத்தானை கட்டிக்குவேன்னு நான் நெனைக்கலே. சரி, இது தான் எனக்கு

அமைஞ்சதுன்னு சந்தோசமா வாழ்க்கையை தொடங்கலாம்னு நெனச்சா இந்த திவ்யாவை என்னாலே சமாளிக்க முடியலை.’’

‘‘என்ன புவனா இப்படி பேசற? இந்தச் சின்னப் புள்ளையை சமாளிக்க முடியலைன்னு சொல்றியே. குழந்தைகள் பாசத்துக்கு ஏங்குறவங்க. அன்பைக் கொட்டு. ரௌத்திரம் காட்டுவதை மறந்திடு.’’

‘‘அம்மா, நான் என்ன சொல்ல வர்றேனா…’’

‘‘நல்லா புரியுது புவனா, புதுப்பொண்ணா வாழ்க்கையைத் தொடங்கப் போற நேரத்துலே ஒரு பிள்ளைக்கு அம்மாவா அதை சாந்தப்படுத்திக் கொண்டு, அதோடு போராடி ஜெயித்து, அதன் மூலம் புருஷனை ஜெயிக்க வேண்டிய சூழ்நிலையை மற்ற பெண்கள் மாதிரி இல்லை புவனா நீ. தேவகி இடத்தை நிரப்பப் போறவ நிறைய விஷயங்களை எதிர் கொண்டாகணும். எது நடந்தாலும் சிவா என்ன சொன்னாலும், கோபப்படாமல் அதே சமயத்திலே தன் மானம் போகாமல், அசிங்கப்படாமல் நடந்துக்கணும்.’’

‘‘நீ சாதாரணப் பொண்ணாக மும்பைக்குப் போய் குப்பை கொட்டப் போகவில்லை புவனா. எதிர் நீச்சல் போடும் வீராங்கனையா மாறணும். அப்பத்தான் நீ மாட்டிக் கொண்டிருக்கிற இந்த வாழ்க்கை வேஷத்துலே ஜெயித்துக் காட்டமுடியும்.’’

‘‘அம்மா, என் முதுகிலே பெரிய பாராங்கல்லை தூக்கி வைச்சி சுமந்துண்டு போன்னு சொல்றியே, நான் தாங்கிக்குவேனா?’’

‘‘கல்யாணத்துக்கு முன்னாலே உன்னிடம் எத்தனை முறை கேட்டேன் புவனா. நல்லா யோசிச்சுக்கோ. அப்புறம் வருத்தப் படக்கூடாது. நம்ம நிலையிலே ஒரு ஏழை பையனுக்கு வேணும்னா உன்னை கல்யாணம் பண்ணி வைக்கவா? ஏற்கனவே அந்த பால்கார அம்மா பையன் செல்வனுக்கு உன்னை கேட்குறாங்கன்னு சொன்னப்ப கூட நீ என்ன சொன்னேன்னு நினைச்சுப் பாரு. நீயா விரும்பிப் போட்டுக் கொண்ட விலங்கு இது. சிவாவைத் தானே கட்டிகிறேன்னு சொன்னே. இப்ப இப்படிக் கேட்டா என்ன நியாயம்?’’

திரும்பவும் புவனாவின் கன்னத்தை பிடித்துக்கொண்டு ‘‘அத்தா, அப்பா எங்கே?’’ என்றாள் திவ்யா.

‘‘என்னம்மா வேணும்? நான் தர்றேன். அப்பா பெட்டியெல்லாம் எடுத்து வச்சிக்கிட்டிருக்காங்க. அவங்களை தொந்தரவு பண்ணக் கூடாது பார்.’’ என்றாள் புவனா.

சிவாவை பார்த்த திவ்யா, புவனாவின் மடியிலிருந்து இறங்கி வேகமாக வந்து ‘‘அப்பா தண்ணி’’என்றாள்.

‘‘என்னம்மா வேணும் குட்டிப் பெண்ணுக்கு? என்று கேட்டவாறு பெட்டியை அடுக்குவதில் மும்முரமாக இருந்தான் சிவா.

‘‘அப்பா, தண்ணி வேணும்’’

‘‘பாரு அம்மா… என்னிடம் தண்ணீர் கேட்டால் கொடுக்காமலா இருப்பேன்? போய் அவரை தொந்தரவு செய்யறது பாரேன்.’’ என்றாள் புவனா குசுகுசுப்பாக.

‘‘புவனா இந்த மாதிரி விஷயங்களிலே நீ மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திவ்யாவிற்கு அவளுடைய அப்பா மூணு வருடப் பரிச்சயம். நீ இன்று முழுசா மூணு வாரம் கூட அவளோடு இருக்கவில்லை.’’ என்றாள் புவனாவின் அம்மா.

‘‘அதுக்காக?’’

‘‘கோபப்படாமல் கூப்பிட்டு தண்ணீர் கொடு’’

‘‘அத்தா, தண்ணிகொடு.’’

‘‘வா. கன்னுக்குட்டி, தண்ணீர் தர்றேன்’’ என்று மடியில் தூக்கி வைத்துக் கொண்டு புவனா அவளுக்கு தண்ணீர் கொடுக்க முயல, ‘‘நீ எங்கிட்ட தா. நான் அப்பா கிட்டே கொடுத்து தண்ணீர் குடிச்சுக்கறேன்.’’ என்று தண்ணீர் பாட்டிலை வாங்கிக் கொண்டு இறங்கி சிவாவிடம் சென்றாள் திவ்யா.

முந்தானையை எடுத்து வாயில் வைத்துக் கொண்டு திரும்பவும் அழ ஆரம்பித்தாள் புவனா.

‘‘புவனா, சும்மா அழறது புத்திசாலித்தனமில்லே. இது வாழ்க்கை. எதிர் நீச்சல் போட்டுத் தான் ஆகணும். கண்ணைத் துடைத்துக்கொள். பார் சிவா பார்க்கிறார்.’’ என்றாள் அம்மா.

‘‘என்னாச்சு?’’ குழந்தையை கையில் தூக்கிக் கொண்டு வந்தான் சிவா.

அத்தியாயம் – 2

“உன் கைப்பை எங்கே?”.

திவ்யா தண்ணீர் குடித்து விட்டு சிவாவின் கையிலிருந்து இறங்காமலே ‘’அத்தா இந்தா நீயும் தண்ணி குடி’’ என்றாள்.

‘’என்னாச்சு புவனா அழுத மாதிரி இருந்தது?” என்றான் அருகில் வந்த சிவா.

‘’இல்லே கண்ணுலே தூசி விழுந்து விட்டது அதான் துடைச்சேன். நம்ம பெட்டி பை எல்லாம் வந்துடுச்சா..” என்றாள் கண்களையும் கன்னங்களையும் அழுந்தத் துடைத்துக் கொண்ட புவனா.

‘’எல்லாம் ஒழுங்காக அடுக்கி வச்சாச்சு. உன் கைப்பை எங்கே?” என்றாள் சிவா.

திடுக்கிட்டுப் போனாள் புவனா. ரயிலில் ஏறிய அவசரத்தில் கைப்பையை எங்கே வைத்தேன் என்பது அவளுக்கு மறந்து போய்விட்டது. எழுந்து ‘எங்கேயாவது வைத்திருக்கிறேனா?’ என்று தேடிப்பார்த்தாள். காணவில்லை.

‘’என்ன புவனா, ஒண்ணுமே சொல்லாமல் இருந்தா எப்படி? ரயில் டிக்கெட் பணம் எல்லாம் உன் கைப்பையிலே தானே இருந்தது?”

உள்ளுக்குள் அதிர்ந்து போனாள் புவனா. அம்மாவிடம் பேச வேண்டும் என்கிற வேகத்தில் கைப்பையை எங்கோ வைத்து விட்டேன். எங்கே? நினைவுக்கு வர மறுத்தது. இப்போது கைப்பையை காணவில்லை என்று சொன்னால்… என்னாகும்? கடவுளே ….எனக்கு ஏன் இப்படி ஒரு மறதியை தந்தாய்?.

நிதானமாக யோசித்தாள். ரயிலுக்கு வருமுன் பிளாட்பார பெஞ்சில் அமர்ந்திருக்கும் போது கைப்பை தோளில்தானே இருந்தது. ரயிலுக்கு வரும்போது எடுத்து வந்தேனா? ரயில் வருகிறது என்று எல்லோரும் எழுந்ததும் நான் கைப்பையை அவசரத்தில் விட்டு விட்டு வந்து விட்டேனா… திரும்பப் போய் தேடிப்பார்த்தால் கிடைக்குமா? யாராவது எடுத்துக்கொண்டு போயிருப்பார்களா?

பையைத் தோளில் போட்டுக்கொண்டு ரயிலில் ஏறிய ஞாபகம் தான் இருக்கிறது. எங்கே வைத்தேனென்று நினைவுக்கு வர மறுக்கிறது?.

‘’மாப்பிள்ளை கைப்பையை எங்கே என்று கேட்கிறார். மரம் மாதிரி நின்னு கிட்டிருக்கியே… பையை எங்கே வச்சே?” என்று பிளாட்பாரத்தில் நின்று கொண்டே அம்மா அதட்டினாள்.

‘’கொண்டு வந்தேம்மா. ஆனா எங்கே வச்சேன்னுதான் தெரியலே.” சிவா வெடிக்கப்போகிறான் என்கிற பயத்திலே முணுமுணுத்தாள் புவனா.

‘’பையைச் சரியாகத் தேடிப்பாரு. மறந்து எங்கேயாவது வைச்சிட்டியான்னு பார்த்துட்டு வா. இல்லேண்ணா பெட்டியிலிருந்து …. மும்பை போகலாம். வீணாகப் பயப்படாதே” என்று சிவா மெதுவாகச் சொல்லச் சொல்ல அவன் மீதிருந்த மரியாதை அவளுக்குள் ஏறிக்கொண்டே போனது.

’என்ன ஒரு அருமையான மனிதனை தேவகி இழந்து விட்டுப் போயிருக்கிறாள். இந்த நேரத்தில் எந்த சாதாரண மனிதனும் எரிந்து விழுந் திருப்பான். ஒரு கடுஞ்சொல் கூட சொல்லாமல்… சிவா… சிவா… உன்னை அடைந்ததற்கு நான் ஏழேழு ஜென்மங்கள் தவம் இருந்திருக்க வேண்டும்.’

அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மனதின் மூலையில் ஜெயமோகன் எட்டிப்பார்த்தான். மனதை அதட்டிய புவனா, ‘எண்ணங்களே ஒழிந்து போ’ என்று முனங்கினாள்.

‘’என்னடி புவனா கைப்பையைத் தொலைத்து விட்டு இப்படி குத்துக் கல்லாட்டம் நின்னா எப்படி? செம்மையா தேடிப்பாரு” என்றாள் பிடாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த அம்மா.

“……………………………”

‘’செம்மையா ஞாபகம்படுத்திப் பாரேண்டி”

‘’அத்தை, நீங்கள் ஏன் அவளைப்போட்டு விரட்டுகிறீர்கள். பாவம் நேற்றிரவு முழுவதும் விழித்திருந்து ரயில் பயணத்துக்கான சாப்பாடெல்லாம் பண்ணி இருக்கிறாள். தூக்கக் களைப்பிலே எங்கே வைத்தாளோ?” என்றான் சிவா.

‘’அத்தா …” என்று தன்னை எடுக்கச் சொல்லி கையை நீட்டினாள் திவ்யா.

‘’அம்மா கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். அவளைத் தொந்தரவு செய்யாதே. புவனா. கைப்பை காணாமல் போனால் பரவாயில்லை. வீணாக வருத்தப் படாதே. சீக்கிரம் ரயில் புறப்பட்டு போய்விடும். அம்மாவிடம் பேச வேண்டிய தெல்லாம் பேசி முடித்து விடு”” என்று திவ்யாவைத் தூக்கிக் கொண்டு பாத்ரூமிற்கு கிளம்பினான் சிவா.

அத்தியாயம் – 3

என் வாழ்வில் செய்த முதல் நல்ல காரியம்!

எவ்வளவு அருமையான மனிதன். ஒரு அதிர்வு பேச்சுக்கூட இல்லாமல் இவனால் எவ்வளவு எளிமையாக அமைதியாக பேச முடிகிறது. ஒரு சாதாரண மனிதன் இந்த நேரத்தில் எவ்வளவு திட்டித் தீர்த்து விட்டு அலைந்து கொண்டே போயிருப்பான். போனது வராது என்ற எண்ணம் எத்தனை பேருக்குள்ளே இந்த மாதிரி நேரத்திலே எழும்?.

அங்குமிங்கும் தேடி என்னையும் திட்டி பரிதவித்துப் போக மாட்டானா? எவ்வளவு திட்டினாலும் அலைந்தாலும் நடக்கக் கூடியதுதான் நடக்கும் என எந்த ஒரு அதிர்வும் ஆத்திரமும் இல்லாமல் எப்படி அமைதியாக போக முடிகிறது.

சிவா, கடவுள் என் வாழ்வில் செய்த முதல் நல்ல காரியம் என்ன வென்றால் உன்னை எனக்கு துணையாகக் கொடுத்ததுதான். உங்களைத் திருமணம் செய்த அன்றே எனக்குள் என்னைத் தெரிய வைத்து உங்களையும் புரிய வைத்தீர்களே…

என்னை ஒரு வேலைக்காரியாகவோ உயிருள்ள மண்பாண்டமாகவோ பார்க்காமல் ஒரு நல்ல சிநேகிதியாக மதிக்க ஆரம்பித்த என் வாழ்க்கையின் வழித்துணையே… உன்னை எனக்கு வழங்கியதற்கு அந்த ஆண்டவனுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள்.

‘’மச மசன்னு நிக்காம கைப்பையைத் தேடிப்பாரேண்டி. மாப்பிள்ளை எவ்வளவு நல்லவரா இருந்ததாலே ஒழிஞ்சே…. இதே உங்க அப்பாவா இருந்திருந்தா உண்டு இல்லேண்ணு பண்ணிருப்பார்?” என்றாள் அம்மா.

‘’பையை உள்ளே எடுத்துட்டு வந்தேன். ஆனால் எங்கே வச்சேண்ணுதான்…. ஆங்… திவாகர் கிட்ட கொடுத்த ஞாபகம் தானிருக்கு” என்று எழுந்தவள் தம்பி திவாகரனைத் தேடினாள்.

மேல் படுக்கையில் பெட்டியைத் திறந்து லுங்கி எடுத்த திவாகர் ‘’என்னக்கா? என்ன தேடறீங்க?” என்றான்.

திரும்பி வந்த சிவா, திவ்யாவை புவனாவிடம் கொடுத்து விட்டு ‘’உங்கக்கா கைப்பையை எங்கேயோ மறந்து வச்சிட்டு வந்துட்டாடா.. அதிலேதான் இரயில் டிக்கெட்டும் பணமும் இருக்கிறது” என்றான்.

கீழே நின்றுகொண்டிருந்த அம்மா ‘’அக்கா கைப்பையை உன்கிட்ட கொடுத்தாளா?” என்றாள்.

‘’எங்கிட்டே தரவில்லையே” என்றான் திவாகர்.

‘’சரி போகட்டும் விடு” என்றான் சிவா.

‘’இதோ இங்கே இருக்கிறது. அக்காதான் இங்கே பையை வைத்திருக்கா” என்று எதிரிலே மேல் படுக்கையிலிருந்த கைப்பையை எடுத்துக் கொடுத்தான் திவாகர்.

”இப்பதான் உயிர் வந்த மாதிரி இருக்கு. இப்படி அசடு மாதிரி எதையும் கண்ட இடத்தில் வச்சிண்டு நின்று தவிக்காதே….” என்று அம்மா இரைந்தாள்.

‘’வீணாக ஏன் அத்தை அவளைத் திட்டுகிறீர்கள்?. பாவம் தூக்கக் கலக்கத்தில் பையை மேல் படுக்கையில் வைத்ததை மறந்து போயிருப்பாள்.

‘’அத்தா… பலூன்” என்று பிளாட்பாரத்தில் பலூன் விற்றுக் கொண்டிருந்தவனை காட்டினாள் திவ்யா .

‘’வாங்குவோமா?’’ என்றாள் புவனா.

மும்பையிலே வீடெல்லாம் சின்னதாதானிருக்கும். சமாளிச்சுக்கணும். எல்லாம் எப்பவும் சுத்தமா வச்சுக்க பழகிக்கோ. உனக்கு அதிகமாகச் சொல்லித்தர வேண்டியதில்லே. முக்கியமா

இந்தச் சின்ன குழந்தையை நீ ஜெயிச்சாகணும். அதுதான் மிக முக்கியம்.””

அடுத்த முறை நீ ஊர் வரும்போது உனக்கு குழந்தை பொறக்குதோ இல்லையோ அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. திவ்யா உன்னைப் பார்த்து அம்மாண்ணு கூப்பிடணும்.”

“நான் முயற்சி பண்ணுகிறேனம்மா… சில நேரங்களில் திவ்யா முரண்டு பண்ணினா கூட அவர் என்னைத் திட்டறதில்லே. அதைப் பார்க்கும் போதுதான் என்னவோ என்னையே அடித்த மாதிரி ஒரு வலி வருகிறது.”

“…………………”ஒன்றும் சொல்லாமல் அம்மா முறைத்துப் பார்த்தாள்.

‘’சின்னக் குழந்தை அடம் பிடிக்கத்தான் செய்யும். தப்பு செய்யத்தான் செய்யும். எனக்குக் கூட கோபம் வரும். நான் கோபப்படக் கூடாது என்பதற்காக அவரே அவளை அதட்டுவதும் மிரட்டுவதும் பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது.”

மற்றபடி அவரைப்போல ஒரு நல்ல மனிதன் கிடைப்பது கஷ்டம் அம்மா. திவ்யாவை கண்டிப்பாக ஜெயித்துதான் ஆக வேண்டும். முயற்சி செய்கிறேன் அம்மா.

‘’வடை போண்டா காபி” வியாபாரம் செய்கிறவன் கூவிக்கொண்டே போக “திவ்யா கண்ணுக்கு வடை வேணுமா?” என்றாள் புவனா.

‘’ம்கூம்” என்று அவள் மடியிலிருந்து இறங்கியவள், ‘’அப்பா வடை வாங்கு” என்றாள்.

‘’பாரும்மா இதைத்தான் என்னாலே தாங்க முடியவில்லை.” என்றள் புவனா மறுபடியும்.

‘’பொறு புவனா. குழந்தை இன்னும் உன்னில் ஒட்ட வில்லை. அவளை நீ கொஞ்சம் கொஞ்சமாக உன் பக்கம் இழுக்க வேண்டும். அவள் தன்னுடைய அம்மாவிடம் என்னவெல்லாம் எதிர்பார்த்தாளோ அதையெல்லாம் நீயாக அவளுக்கு தரவேண்டும். அப்போது அந்தக் குழந்தை உன்னிடமே ஒட்டிக்கொள்ள ஆரம்பிக்கும். தகப்பனை தேடாது” என்றாள் அம்மா.

‘’ஏ… வடை… நான்கு வடை கொடப்பா” என்று கூப்பிட்டான் சிவா.

பையிலிருந்து பணம் எடுத்து கொடுத்து விட்டு ‘’அம்மாவிற்கும் பாட்டிக்கும் வடை கொடு” என்றான் சிவா.

‘’எங்களுக்கு எதற்கு மாப்பிள்ளை வடை?….. ” என்றாள் புவனாவின் அம்மா.

‘’பரவாயில்லை அத்தை சாப்பிடுங்கள். திவ்யா அவர்களிடம் கொண்டு கொடும்மா…” என்றான்.

‘’ம்கூம்.. நான் தரமாத்தேன்.” அடம்பிடித்தாள் திவ்யா.

‘’திவ்யா நீ எல்லாம் சாப்பிட மாட்டே, அம்மாவிற்கும் பாட்டிக்கும் வடை கொடு” என்று தலையில் தட்டினான் சிவா.

‘’வீணாக ஏன் அடிக்கிறீர்கள்” என்று புவனா திவ்யாவை தூக்க முயன்றாள். அவள் வர மறுத்து திரும்பவும் சிவாவின் கால்களைக் கட்டிக்கொண்டாள்.

புவனாவிற்கு என்னவோ போலிருந்தது. திரும்பவும் அந்தப் பக்கம் வந்த வடை காரனிடம் ‘’இன்னும் நாலு வடை கொடு தம்பி” என்று பணம் தந்தான் சிவா.

‘’நாங்க என்ன சின்ன பிள்ளைகளா.. வடை சாப்பிடுவதற்கு?” என்று வாங்க மறுத்தாள் புவனாவின் அம்மா.

‘’பரவாயில்லை அத்தை சாப்பிடுங்கள்” என்று வடையை அத்தையிடம் கொடுத்து விட்டு திவ்யாவைத் தூக்கி தோளில் வைத்துக்கொண்டான்.

‘’அப்பா பயமாயிருக்கு. ஏன் அடிச்சே?” என்றாள் திவ்யா.

‘’திவ்யா கன்னுகுட்டி, நீ எல்லாத்தையும் திங்கப்போறதில்லை. ஒழுங்கா அம்மாவுக்கும் பாட்டிக்கும் கொடுத்திருக்கலாமில்லே”

‘’நீ கேட்டா தர்றேன். அத்தாவுக்கும் பாடிக்கும் ஏன் தரணும்?” பிடிவாதம் பண்ணியது குழந்தை.

’’திவ்யாவிற்கு எப்படி புரிய வைக்கப்போகிறேன்” அசதியோடு படுக்கையில் சாய்ந்தான் சிவா.

– தொடரும்…

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *