கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 5,671 
 
 

டேய், மத நல்லிணக்கத்துக்கு ஒரு வாழும் உதாரணம் நம்ம முதலாளி தாண்டா! தன் நண்பன் சுந்தரிடம், ஷேக்முகம்மது கூறினான்.

எதை வச்சுடா அப்படிச் சொல்லுற? நண்பனிடம் எதிர்க்கேள்வி கேட்டான் சுந்தர்.

பின்ன என்னடா நம்ம கம்பெனியில கிட்டத்தட்ட நூறு பேர் வேலை பார்க்கிறாங்க. ஒரு இந்துவா இருக்கிற முதலாளி எண்பது சதவீதம் தொழிலாளிகளை கிறிஸ்துவர்களாகவும், முஸ்லிம்களாகவும் வச்சிருந்தா அதுக்கு காரணம் மத நல்லிணக்கம் தானே?

டேய் ஷேக் நீ நம்ம முதலாளியை பற்றிசரியா புரிஞ்சுக்காம பேசுற. அவருக்கு 365 நாளும் கம்பெனியை இயக்கனும். இந்துக்களுக்கு ஏகப்பட்ட விடுமுறை வரும். அதுவும் இல்லாம கோயில் கொடை அது இதுன்னு ஏகப்பட்ட லீவு வேற எடுப்பாங்க. ஆனா, முஸ்லிம், கிறிஸ்துவர்களுக்கு லிமிட்டாத்தான் பண்டிகைகள் வரும். லீவும் கம்மியாத்தான் எடுப்பாங்க. இப்ப புரியுதா, நம்ம முதலாளியோட மத நல்லிணக்கம்?

சோழியன் குடுமி சும்ம ஆடலைனு சொல்லு. என்று நண்பனிடம் கூறினான் ஷேக்முகம்மது.

– வி.சகிதா முருகன் (அக்டோபர் 2011)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *