நிறப் பார்வைக் குறைபாடு






விஸ்வம் முற்பகலில் தற்செயலாக தனது ஆறு வயது மகன் ப்ரசன்னாவின் தொடக்கப் பள்ளி அருகில் இருந்தார். மகனை ஆச்சரியப்படுத்த விரும்பி, அவனைக் காணச் சென்றார்.
அவனது வகுப்பினருக்கு அப்போது விளையாட்டுப் பாடவேளை என்பதால் மைதானத்தில் இருந்தனர். விஸ்வம் அங்கே சென்றார். குழந்தைகளின் கூட்டத்தில் இருந்த ப்ரசன்னா அவரைப் பார்த்ததும் ஓடி வந்தான். அவனது கைகளில் பவர் ரேஞ்சர் மாதிரி ஒரு சிறிய பொம்மை.
“இது ஏது?” அவர் கேட்டார்.
“என்னோட ஃப்ரன்டு ஒருத்தன்கிட்டருந்து, கொஞ்ச நேரம் வெச்சுட்டிருக்கறதுக்காக வாங்கினேன் டாடி…” சொல்லிவிட்டு தன் குழுவில் யாரையோ சுட்டிக் காட்டினான்.
அங்கே சுமார் ஒரு டஜன் குழந்தைகள் இருந்தன. அவர்களில் யாராக இருந்தாலும் இருக்கலாம் என்பதால் விஸ்வம் சிரித்தார்.
சிறுவன் அதை கவனித்துவிட்டு, “அந்த… ப்ளூ ஷர்ட் போட்ட பையன்” என சுட்டிக் காட்டினான்.
அது ஏழு குழந்தைகளாக சுருக்கியது.
ஆயினும் அவன் யாரைச் சுட்டுகிறான் என்பது தெரியவில்லை. அதை மகனுக்குத் தெரிவிக்க தலையை இட வலமாக ஆட்டினார்.
“ரெட் ஸ்னீக்கர் போட்டிருக்கானே,… அவந்தான், டாடி!”
அது நீல சட்டை அணிந்த எந்தக் குழந்தைகளுக்கும் பொருந்தவில்லை. ஒருவேளை, அந்தப் பையனின் ஸ்னீக்கர் வரைகலையில் எங்கேனும் சிறிய அளவில் சிவப்பு இருக்கலாம். இங்கிருந்து பார்க்கும்போது தெரியவில்லை.
இறுதியாக, ப்ரசன்னா, “அங்கே,… டாடி! இப்ப பந்தை வெச்சிட்டிருக்கானே,… அவன்!” என்றபோது, விளையாட்டு மைதானத்தின் மறு பகுதியில் உள்ள ஒரே கருப்புக் குழந்தையைக் குறிப்பிடுகிறான் என்பது புரிந்தது.
“நீ சொல்றது கருப்புக் குழந்தையா?” கேட்க வாயெடுத்தவர், உதடுகளைக் கடித்து நிறுத்திக்கொண்டார்.
ப்ரசன்னா அந்தக் குழந்தையின் தோலின் நிறத்தைப் பார்க்கவே இல்லை. அதன் சட்டை மற்றும் ஸ்னீக்கர்களின் நிறத்தைப் பார்க்க முடிந்த அவனால், தோலின் நிறத்தை எப்படிப் பார்க்க முடியவில்லை என்பது விஸ்வத்துக்குப் புரியவில்லை. இருப்பினும் அதில் அவருக்கு திருப்தி, மகிழ்ச்சி. மகனுக்குத் தெரியாத அதை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் உணர்ந்தார்.
– நடுகல் இணைய இதழ், மார்ச் 2025.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |