கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 6,463 
 
 

(1947ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

1. நள்ளிரவு ரயில்வண்டி 

கன்னங்கரிய இருள் சூழ்ந்த இரவு. திட்டுத் திட்டான கருமேகங்கள் வானத்தை மூடிக்கொண்டிருந்தன. அந்த மேகக் கூட்டங்களுக்கு இடைஇடையே விண்மீன்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளியில் வரலாமோ கூடாதோ என்ற சந்தேகத்துடன் எட்டிப் பார்த்தன.

கீழே பூமியில் அந்தக் காரிருளைக் காட்டிலும் கரியதான ஒரு மொட்டைப்பாறை பயங்கரமான கரும் பூதத்தைப்போல் எழுந்து நின்றது.

பாறையின் ஓரமாக இரண்டு கரிய கோடுபோல் ரயில்பாதையின் தண்டவாளங்கள் ஊர்ந்து செல்வதை ஓரளவு இருளுக்குக் கண்கள் பழக்கப்பட்ட பிறகு உற்றுப்பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

ரயில்பாதையின் ஒருபக்கத்தில் மனிதர்கள் அடிக்கடி நடந்து சென்றதனால் ஏற்பட்ட ஒற்றையடிப் பாதையில் ஒருமனிதன் அந்த நள்ளிரவு வேளையில் நடந்து கொண்டிருந்தான். பாதையைக் கண்ணால் பார்த்துக் கொண்டு அவன் நடக்கவில்லை. காலின் உணர்ச்சியைக் கொண்டே நடந்தான். ரயில் தண்டவாளத்தின் ஓரமாகக் குவிந்திருந்த கருங்கற் சல்லிகளில் அவனுடைய கால்கள் சில சமயம் தடுக்கின. ஒற்றையடிப் பாதையின் மற்றொரு பக்கத்தில் வேலியைப் போல் வளர்ந்திருந்த கற்றாழைச் செடிகளின் முட்கள் சில சமயம் அவனுடைய கால்களில் குத்தின. அவற்றையெல்லாம் அந்த மனிதன் சற்றும் பொருட்படுத்தவில்லை. அவனுடைய நடை சிறிதேனும் தளரவில்லை. தடுக்கல்களையும் தடங்கல்களையும் பொருட்படுத்தாமல் விரைவாக நடந்தான். 

ரயில்பாதை ஓரிடத்தில் மொட்டைப் பாறையை வளைத்துக் கொண்டு சென்றது. வளைவு திரும்பியவுடனே இரத்தச் சிவப்பு நிறமான பெரிய நட்சத்திரம் ஒன்று தோன்றி அந்த நள்ளிரவுப் பிரயாணியின் கண்ணைப் பறித்தது. அங்கே சிறிது நின்று நிதானித்து பார்த்து ‘அது நட்சத்திரமில்லை’ கைகாட்டி மரத்தின் உச்சியில் வைத்துள்ள சிவப்பு விளக்கு என்றும் ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் தான் வந்திருக்க வேண்டுமென்றும் தெரிந்து கொண்டான். மேலும் ரயில்பாதையைத் தொடர்ந்து போவதா அல்லது ரயில்பாதையை அங்கே விட்டுவிட்டு வேறு வழியில் திரும்புவதா என்று அம் மனிதன் எண்ணமிட்டான். அந்த வேளையில் வேறு வழி கண்டு பிடித்துச் செல்லுவது என்பது சுலபமான காரியமில்லைதான். ரயில்பாதையின் ஒரு பக்கத்தில் கரிய பாறை செங்குத்தான சுவரைப் போல் நின்றது. மற்றொரு பக்கத்தை உற்றுப் பார்த்தான். கல்லும் முள்ளும் கள்ளியும் கருவேல மரமும் நிறைந்த காட்டுப் பிரதேசமுமாகக் காணப்பட்டது. ஆயினும் அந்தக் காட்டுப் பிரதேசத்தின் வழியாகச் சென்றுதான் வேறு நல்ல பாதை கண்டுபிடித்தான வேண்டும். ரயில்வே ஸ்டேஷனுக்குப் போவது ஆபத்தாக முடியலாம். 

இவ்விதம் அந்தப் பிரயாணி யோசித்துக் கொண்டிருந்த போது அவனுக் கெதிரே தெரிந்த கை காட்டியின் விளக்கில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. சிவப்பு வெளிச்சம் பளிச்சென்று பச்சை வெளிச்சமாக மாறியது!

அந்த மாறுதல் ஏன் ஏற்பட்ட தென்பதை அம் மனிதன் உடனே ஊகித்து உணர்ந்தான். தான் வந்த வழியே திரும்பிச் சில அடி தூரம் நடந்தான். வளைவு நன்றாய்த் திரும்பியதும் நின்று தான் வந்த திசையை நோக்கிக் கவனமாக உற்றுப் பார்த்தான். வெகு தூரத்தில் மின் மினிப் பூச்சியைப் போன்ற ஓர் ஒளித் திவலை பெரிதாகிக் கொண்டு வந்தது. ‘கிஜுகிஜு கிஜுகிஜு’ என்ற சத்தமும் அந்தத் திசையிலிருந்து கேட்கத் தொடங்கியது. ரயில் ஒன்று நெருங்கி வருகிறது என்று தெரிந்து கொண்டான்.

நம் கதாநாயகனுடைய உள்ளம் ஒரு கணம் துடித்தது. அவனுடைய கைகளும் துடித்தன. மறுகணம் அவன் மிக விந்தையான காரியம் ஒன்று செய்தான். தன்னுடைய அரைச் சட்டையின் பையிலிருந்து ஏதோ ஓரு ஆயுதத்தையும் ஒரு சிறு ‘டார்ச் லைட்’டையும் எடுத்தான். டார்ச் லைட்டின் விசையை அமுக்கித் தண்டவாளத்தின் மீது விழும்படிச் செய்தான். ஒரு விநாடி நேரந்தான் விளக்கு எரிந்தது. அந்த ஒரு விநாடியில் அவன் பார்க்க வேண்டியதைப் பார்த்துக் கொண்டான். ஒரே பாய்ச்சலில் தாவிச் சென்று தண்டவாளத்தில் ஓரிடத்தில் போய் உட்கார்ந்தான். ஆயுதத்தைக் கொண்டு ஏதோ செய்தான். திருகைச் சுழற்றுவது போன்ற சத்தம் கேட்டது. பின்னர் எழுந்து நின்று தன்னுடைய கைகளின் பலம் முழுவதையும் உபயோகித்துத் தண்டவாளத்தைப் பெயர்த்து நகர்த்தினான்.

அவ்வளவுதான்; அடுத்த நிமிஷம் ஆயுதத்தை வீசி எறிந்துவிட்டுக் கத்தாழை வேலியை ஒரே தாண்டலாகத் தாண்டிக் குதித்து வேலிக்கு அப்பாலிருந்த காட்டு நிலத்தில் அதி வேகமாக ஓட ஆரம்பித்தான். இரண்டு மூன்று தடவை தடுமாறிக் கீழே விழுந்து மறுபடியும் எழுந்து ஓடினான். சுமார் அரை பர்லாங்கு தூரம் ஓடிய பிறகு சற்றே நின்று திரும்பிப் பார்த்தான்.

ரயில் வண்டி பாறையின் வளைவை நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. என்ஜின் முகப்பில் பொருத்தியிருந்த ‘ஸர்ச் லைட்’டின் வெளிச்சமானது பாறையையும், ரயில் பாதையையும் அந்தப் பிரதேசம் முழுவதையுமே பிரகாசப் படுத்தியது. தண்டவாளத்தைப் பெயர்த்துவிட்டு ஓடிப்போய் நின்ற மனிதன் சட்டென்று பக்கத்திலிருந்த புதர் ஒன்றின் மறைவில் ஒளிந்து கொண்டான். ரயில் வண்டி பாதையின் வளைவை நெருங்கி வருவதை ஆவலுடன் கண் கொட்டாமல் பார்க்கலானான். அவனுடைய நெஞ்சு ‘தடக் தடக்’கென்று அடித்துக் கொண்டது. உடம்பெல்லாம் ‘குபீ’ரென்று வியர்த்தது. 

பாறையின் முடுக்கை நெருங்கியபோது ரயிலின் வேகம் திடீரென்று குறைந்தது. சட்டென்று ‘பிரேக்’ போட்டு ரயிலை நிறுத்தும்போது உண்டாகும் ‘கடபுட’ சத்தங்களும் ரயிலில் சக்கரங்கள் வீலிடும் சத்தங்களும் கலந்து கேட்டன. ரயில் நின்றது.

நின்ற ரயிலிலிருந்து ‘சடசட’வென்று சில மனிதர்கள் இறங்கினார்கள். அவர்களில் ஒருவன் கையில் லாந்தர் விளக்குடன் இறங்கி வந்தான். எல்லாரும் கும்பலாக ரயில் என்ஜினுக்கு முன்னால் வந்து தண்டவாளத்தை உற்று நோக்கினார்கள். ஏக காலத்தில் காரசாரமான வசை மொழிகள் அவர்களுடைய வாயிலிருந்து வெளியாயின. இரண்டொருவர் குனிந்து பெயர்த்து நகர்த்தப்பட்டிருந்த தண்டவாளத்தைச் சரிப்படுத்தினார்கள். தலையில் தொப்பி யணிந்திருந்த ஒருவர் தம் சட்டைப் பையிலிருந்து கைத் துப்பாக்கியை எடுத்துக் காட்டுப் பிரதேசத்தை நோக்கிச் சுட்டார். ரயில்பாதையின் ஓரத்துப் புதர்களிலிருந்து இரண்டு நரிகள் விழுந்தடித்து ஓடின. அதைப் பார்த்துக் கும்பலி லிருந்தவர்களில் இரண்டொருவர் ‘கலகல’வென்று சிரித்த சத்தம் காற்றிலே மிதந்து வந்தது. புதரில் மறைந்திருந்த மனிதனுடைய உடம்பு நடுங்கிற்று. குளிர்ந்த காற்றினாலா, துப்பாக்கி வேட்டினாலா, சிரிப்புச் சத்தத்தினாலா என்று சொல்ல முடியாது. 

மேலும் சில நிமிஷ நேரம் அங்கேயே நின்று அந்த மனிதர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். எப்பேர்ப்பட்ட அபாயத்திலிருந்து ரயில் தப்பியது என்பதைப் பற்றித்தான் அவர்கள் பேசியிருக்க வேண்டும். பிறகு எல்லாரும் திரும்பிச் சென்று அவரவர்களுடைய வண்டியில் ஏறிக் கொண்டார்கள். அவர்கள் திரும்பிய போது ரயிலின் ஒவ்வொரு வண்டியிலிருந்தும் சிலர் தலையை நீட்டி “என்ன சமாசாரம்” என்று விசாரித்ததும் புதரில் ஒளிந்திருந்த நம் கதாநாயகனுக்குத் தெரிந்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் ‘பப்பப்’ ‘பப்பப்’ என்ற சத்தத்துடன் ரயில் புறப்பட்டது.

இருள் சூழ்ந்த இரவில் நீண்ட ரயில் வண்டித் தொடர் போகும் காட்சி ஓர் அழகான காட்சிதான். நின்ற இடத்தில் நிலையாக நிற்கும் தீப வரிசையே பார்ப்பதற்கு எவ்வளவோ ரம்மியமாக இருக்கும். அத்தகைய தீப வரிசையானது இடம் பெயர்ந்து நகர்ந்து போய்க் கொண்டிருக்குமானால், அந்த அபூர்வமான காட்சியின் அழகைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா?

அந்த அழகை யெல்லாம் நமது நள்ளிரவுப் பிரயாணி சிறிதும் விடாமல் அநுபவித்தான். ரயில் வண்டித் தொடரில் கடைசி வண்டியும், தீப வரிசையில் கடைசித் தீபமும் மலை முடுக்கில் திரும்பி மறையும் வரையில் அவன் அந்தக் காட்சியை அடங்காத ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகுதான் அவனுக்குத் தன் சுயநினைவு வந்தது. அவனுடைய மனத்தில் அதற்கு முன் என்றும் அநுபவித்தறியாத அமைதி அச்சமயம் குடி கொண்டிருந்தது. தான் செய்த காரியத்தினால் அந்த ரயில் வண்டித் தொடருக்கும் அதிலிருந்த நூற்றுக்கணக்கான ஆண் பெண் குழந்தைகளுக்கும் நல்ல வேளையாக அபாயம் எதுவும் ஏற்படாமல் போனதில் அவனுக்கு அளவில்லாத திருப்தி உண்டாகியிருந்தது. 

2. சின்னஞ்சிறு நட்சத்திரம்

‘சரித்திரப் புகழ் பெற்ற வருஷம்’ என்று பண்டித ஜவஹர்லால் நேரு முதலிய மாபெருந் தலைவர்களால் கொண்டாடப் பெற்ற 1942-ஆம் வருஷத்து ஆகஸ்டு மாதத்தில் மேற்கூறிய சம்பவம் நடந்தது.

சில காலமாகவே இந்திய மக்களின் உள்ளத்தில் குமுறிக்கொண்டிருந்த கோபாக்கினி மலை மேற்படி 1942-ஆகஸ்டில் படீரென்று வெடித்தது. புரட்சித்தீ தேசமெங்கும் அதிவேகமாகப் பரவியது. அந்தப் புரட்சித்தீயை நாடெங்கும் பரப்புவதற்குக் கருவியாக ஏற்பட்ட தேசபக்த வீரத்தியாகிகளில் நமது கதாநாயகன் குமாரலிங்கமும் ஒருவன்.

அந்த அதிசயமான 1942-ஆகஸ்டில், அதுவரையில் தேசத்தைப் பற்றியோ தேச விடுதலையைப் பற்றியோ அதிகமாகக் கவலைப்பட்டறியாத அநேகம் பேரைத் திடீரென்று தேசபக்தி வேகமும் சுதந்திர ஆவேசமும் புரட்சி வெறியும் பிடித்துக் கொண்டன. ஆனால் குமாரலிங்கமோ வெகு காலமாகவே தேச பக்தியும் தேச சுதந்திரத்தில் ஆர்வமும் கொண்டிருந்தவன். அந்த ஆர்வத்தைக் காரியத்திலே காட்டுவதற்கு ஒரு தக்க சந்தர்ப்பத்தைத்தான் எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். அந்தச் சந்தர்ப்பம் இப்போது வந்துவிட்டதென்றும், பாரதத்தாயின் அடிமை விலங்கை முறித்தெறிவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவன் பரிபூரணமாக நம்பினான். 

காந்தி மகாத்மாவையும் மற்றும் தேசத்தின் ஒப்பற்ற மாபெருந் தலைவர்களையும் அந்நிய அதிகார வர்க்க சர்க்கார் இரவுக்கிரவே சிறைப்படுத்தி யாரும் அறியாத இரகசிய இடத்துக்குக் கொண்டு போனார்கள் என்ற செய்தி அவனுடைய உள்ளத்தில் மூண்டிருந்த ஆத்திரத் தீயில் எண்ணெயை ஊற்றிப் பொங்கி எழச் செய்தது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் அதிசயமான வீரச் செயல்களைப் பற்றிய அந்தரங்க விபரங்கள், தேச விடுதலைக்காக எத்தகைய தியாகத்துக்கும் அவன் ஆயத்தமாகும்படி செய்திருந்தன. உலக மெங்கும் அந்தச் சமயம் நடந்துகொண்டிருந்த சம்பவங்களும், தேசத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த காரியங்களும் அவனுடைய நவயௌவன தேகத்தில் ஓடிக் கொண்டிருந்த சுத்த இரத்தத்தைக் கொதிக்கும்படி செய்திருந்தன. தேச விடுதலைக்காக ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்று அவனுடைய நரம்புகள் துடித்துக் கொண்டிருந்தன. அவனுடைய உடம்பின் ஒவ்வோர் அணுவும் குமுறி மோதி அல்லோல கல்லோலம் செய்து கொண்டிருந்தது. பாரத நாட்டின் இறுதியான சுதந்திரப் போரில் அவசியமானால் தன்னுடைய உயிரையே அர்ப்பணம் செய்துவிடுவதென்று அவன் திடசங்கல்பம் செய்து கொண்டான்.

இந்த நிலையில் அவனுடைய மனோ திடத்தையும் தீவிரத்தையும் உபயோகப் படுத்துவதற்கு நல்லதொரு சந்தர்ப்பம் வாய்த்தது. வடநாட்டிலிருந்து புரட்சித் தலைவர் ஒருவர் சென்னைக்கு வந்தார். புரட்சித் திட்டத்தை மாகாண மெங்கும் அதிவிரைவாகப் பரப்புவதற்கு அவர் தக்க ஆசாமிகளைத் தேடிக் கொண்டிருந்தார். மேற்படித் தொண்டில் ஈடுபடுவதற்குக் குமாரலிங்கம் முன் வந்தான். அவனுடன் பேசிப் பார்த்துத் தகுந்த ஆசாமிதான் என்று தெரிந்துகொண்ட தலைவர் தெற்கே பாண்டிய நாட்டுக்குப் போகும்படி அவனைப் பணித்தார். குமாரலிங்கம் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவன் என்பதோடு அந்தநாட்டில் பிரயாணம் செய்து பழக்கம் உள்ளவன். எனவே மேற்படி தொண்டை மேற்கொள்ள அவன் உற்சாகத்துடன் முன்வந்தான்.

‘சைக்ளோ ஸ்டைல்’ இயந்திரத்தில் அச்சடித்த துண்டுப் பிரசுரங்களுடன் குமாரலிங்கம் பாண்டிய நாட்டுக்குச் சென்றான். அந்த நாட்டில் ஒவ்வோர் ஊரிலும் முக்கியமான தேசபக்த வீரர்களின் ஜாபிதா அவனிடம் இருந்தது. அவர்களைக் கண்டுபிடித்துத் துண்டுப் பிரசுரங்களை அவர்களிடம் கொடுத்தான். தேசசுதந்திரத்தில் அவன் அச்சமயம் கொண்டிருந்த ஆவேச வெறியில், துண்டுப் பிரசுரத்தில் கண்டிருந்ததைக் காட்டிலும் சில அதிகப்படியான காரியங்களையும் சொன்னான். தந்தி அறுத்தல் தண்டவாளம் பெயர்த்தல் முதலிய திட்டங்களோடு, ரயில்வே ஸ்டேஷன்களையும் கோர்ட்டுகளையும் தீவைத்துக் கொளுத்துதல், சிறைகளைத் திறந்து கைதிகளை விடுதலை செய்தல், சர்க்கார் கஜானாக்களைக் கைப்பற்றுதல் முதலிய புரட்சித் திட்டங்களையும் அவன் சொல்லிக்கொண்டு போனான். இவ்வளவும் சொல்லிவிட்டு மகாத்மாவின் அஹிம்சா தர்மத்துக்கு மாறாக எந்தக் காரியமும் செய்யக்கூடாதென்று எச்சரித்துக் கொண்டும் சென்றான். 

இப்படி அவன் புயல்காற்றின் வேகத்தில் ஊர் ஊராகப் பிரயாணம் செய்து கொண்டிருந்த போது ஒரு ஊரில் அவனைக் கைது செய்யும்படி போலீஸ் உத்தியோகஸ்தர்களுக்குச் சென்னையிலிருந்து உத்தரவு வந்திருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான். கைதியாவதற்கு முன்னால் தேச விடுதலைக்காகப் பிரமாதமான காரியம் ஒன்று செய்ய வேண்டும் என்று அவன் தீர்மானித்தான். பொதுக்கூட்டம் போடக் கூடா தென்னும் தடை உத்தரவு அந்த ஊரில் அமுலில் இருந்தது. அந்த உத்தரவை மீறிப் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தான். அந்தக் கூட்டத்தில் தேசபக்தி ஆவேசமும் சுதந்திர வெறியும் ததும்பிய பிரசங்கம் ஒன்று செய்தான்: “பாரதத் தாயின் அடிமை விலங்கைத் தகர்க்கும் காலம் வந்துவிட்டது. இதுதான் சமயம். ஆறிலும் சாவு நூறிலும் சாவு. கிளம்புங்கள் உடனே! இந்த ஊர்ச் சிறையில் சில தேசபக்தர்கள் இருப்பதாகக் கேள்விப்படுகிறேன். சிறைக் கதவை உடைத்து அவர்களை விடுதலை செய்யுங்கள்! தாலுக்கா கச்சேரியையும் கஜானாவையும் கைப்பற்றுங்கள். வெளியூர்களிலிருந்து போலீஸார் வராதபடி தந்திக் கம்பிகளை அறுத்துவிடுங்கள். ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்து விடுங்கள்! பூரண சுதந்திரக் கொடியை வானளாவ உயர்த்துங்கள்! நமதே ராஜ்யம்! அடைந்தே தீருவோம்!” என்று வீர கர்ஜனை புரிந்தான்.

அவனுடைய ஆவேசப் பிரசங்கத்தைக் கேட்ட ஜனங்கள் அந்த க்ஷணமே “வந்தே மாதரம்! மகாத்மா காந்திக்கு ஜே! புரட்சி வாழ்க!” என்ற கோஷங்களை இட்டுக்கொண்டு தாலுக்கா கச்சேரியை நோக்கிக் கிளம்பினார்கள். போகப் போக ஜனக்கூட்டம் பெருகியது. அந்தப் பெருங்கூட்டத்தின் மத்தியில் குமாரலிங்கம் ஆண் சிங்கத்தைப் போல கர்ஜித்துக் கொண்டு நடந்தான். 

இதற்குள்ளாக அதிகாரிகளுக்கு விஷயம் எட்டி விட்டது. பொதுக் கூட்டத்திலேயே குமாரலிங்கத்தைக் கைது செய்யும் நோக்கத்துடன் புறப்பட்டு வந்த போலீஸ் ஸப் இன்ஸ்பெக்டரும் சேவகர்களும் பாதி வழியிலேயே எதிரிலே வந்த ஜனக் கூட்டத்தைப் பார்த்துவிட்டு வேகமாகத் திரும்பிச் சென்றார்கள். ஜனங்கள் அவர்களைத் துரத்திக் கொண்டு ஓடினார்கள். போலீஸ்காரர்கள் விரைந்தோடித் தாலுக்கா கச்சேரிக்குள் போய் ஒளிந்து கொண்டார்கள்.

ஆவேச வெறியில் மூழ்கியிருந்த ஜனங்கள் தாலுக்கா கச்சேரியை வளைத்துக் கொண்டார்கள். கச்சேரியின் காம்பவுண்டுக்குள் இருந்த ஸப் ஜெயிலின் கதவுகளை உடைத்துத் திருடர்கள் குறவர்கள் உள்பட எல்லாரையும் விடுதலை செய்தார்கள். சரமாரியாகக்கற்கள் தாலுக்கா கச்சேரியின் மேல் விழுந்தன. உள்ளேயிருந்த போலீஸார் துப்பாக்கியை எடுத்து வெளியே குருட்டாம் போக்காகச் சுட்டார்கள். இரண்டொருவர் காயமடைந்து விழவும் ஜனங்களின் கோபாவேச வெறி அதிகமாயிற்று. தாலுக்கா கச்சேரிக் கட்டிடத்தில் தீ வைப்பதற்கு முயன்றார்கள். மண்ணெண்ணெய், பெட்ரோல், வைக்கோல் நெருப்புப் பெட்டி முதலியவை எல்லாம் அதி சீக்கிரத்தில் வந்து சேர்ந்தன. 

இந்த ஏற்பாடுகளைப் பார்த்ததும் உள்ளே யிருந்த போலீஸார் வெளியேறிச் செல்ல முயன்றார்கள். துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே வெளியில் வந்தார்கள். துரதிருஷ்டவசமாக அவர்களிடம் துப்பாக்கிகள் இரண்டே இரண்டுதான் இருந்தன. தோட்டாக்களும் குறைவாக இருந்தன. இரண்டு மூன்று தடவை சுட்டதும் தோட்டாக்கள் தீர்ந்து போயின. சுட ஆரம்பித்ததும் சற்று விலகிப்போன ஜனக்கூட்டம் தோட்டா தீர்ந்து விட்டது என்பதை அறிந்ததும் திரும்பி வந்து போலீஸாரைச் சூழ்ந்து கொண்டு தாக்கியது. இன்னது செய்கிறோம், அதனுடைய பலன் இன்னது என்று தெரியாமல் ஜனக்கூட்டம் மூர்க்கமாகத் தாக்கியதன் பலனாக இரண்டு போலீஸார் உயிரிழந்து விழுந்தனர்.

இதற்குள்ளே பெரிய உத்தியோகஸ்தர்களுக்குத் தகவல் கிடைத்தது. போலீஸ் டெபுடி சூபரின்டெண்டெண்டும் பல போலீஸ் ஜவான்களும் பயங்கரமான ஹூங்கார சத்தங்களை இட்டுக் கொண்டு விரைந்து வந்தார்கள். அவ்வளவுதான் “ஓடு, ஓடு!” என்று ஒரு குரல் கேட்டது. ஜனங்கள் நாலா பக்கமும் விழுந்தடித்து ஓடினார்கள். புதிதாக வந்த போலீஸார் அவர்களைத் துரத்தி அடித்தார்கள். ஒரே அல்லோல் கல்லோலமாய்ப் போய்விட்டது. 

வெகு துரிதமாக நடந்த இவ்வளவு காரியங்களையும் குமாரலிங்கம் பார்த்துக் கொண்டிருந்தான். போலீஸ்காரர் இருவர் உயிர் இழந்து விழுவதையும் பார்த்தான். தூரத்திலே பெரிய போலீஸ் படை வருவதையும் ஜனங்கள் சிதறி ஓடுவதையும் கவனித்தான். சற்று நேரம் திகைத்து நின்றான். பிறகு மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு மற்ற எல்லாரையும் போல் அவனும் ஓட்டம் பிடித்தான். தான் அங்கு நின்றால் கட்டாயம் தன்னைக் கைது செய்துவிடுவார்கள். போலீஸார் இருவர் இறந்ததற்காகத் தன் மீது கொலைக் குற்றம் சாற்றினாலும் சாற்றுவார்கள். ஸப் ஜெயிலில் வைத்துக் கொடுமை செய்வார்கள். போலீஸாரிடம் சிக்கிக் கொள்ளுவதற்கு முன்னால் தேசத்துக்காக எவ்வளவு காரியம் செய்யலாமோ அவ்வளவும் செய்துவிட வேண்டும். இன்னும் சில நாள் தலைமறைவாக இருந்து வேலை செய்தால் ஒரு வேளை தேசமெல்லாம் நடக்கும் மகத்தான புரட்சி இயக்கம் வெற்றி பெற்றுத் தேசம் சுதந்திரம் அடைந்தாலும் அடைந்துவிடும். அதைக் கண்ணால் பார்க்காமல் அவசரப்பட்டுத் தூக்கு மேடைக்குப் போவதால் என்ன லாபம்? எப்படியும் இந்தச் சமயம் ஓடித் தப்பித்துக் கொள்வதுதான் சரி.

மின்னல் மின்னுகிற நேரத்தில் இவ்வளவு யோசனைகளும் குமாரலிங்கத்தின் மனத்தில் தோன்றி மறைந்தன. முடிவாக அவன் உள்ளம் செய்த தீர்மானத்தைக் கால்கள் உடனே நிறைவேற்றி வைக்க ஆரம்பித்தன. சந்து பொந்துகளில் புகுந்து விரைந்து ஓடினான். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்தப் பட்டணத்தின் எல்லையைக் கடந்து பட்டணத்தைச் சுற்றியிருந்த புன்செய்க் காடுகளில் புகுந்தான். 

பொழுது விடிவதற்குள்ளே ஒரு பத்திரமான இடத்தை அடைந்துவிட வேண்டுமென்று தீர்மானித்து விரைவாகச் சென்றான். இரவு வேளையில் வழி கண்டு பிடிக்க முடியாமலும் திக்கு திசை தெரியாமலும் போய்க் கொண்டிருந்தபோது அதிர்ஷ்டவசமாக ரயில்பாதை அகப்பட்டது. ரயில்பாதையோடு அவன் கொஞ்ச தூரம் நடந்து சென்ற பிறகு நாம் ஆரம்பத்தில் பார்த்தபடி மொட்டைப் பாறையின் வளைவை அடைந்தான். அச்சமயம் ரயில் வருவதைப் பார்த்ததும், தேசத்தின் சுதந்திரத்துக்காக இன்னும் ஒரு பிரமாதமான காரியம் ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் மின்னலைப் போல் உதித்தது. உடனே அதை நிறைவேற்ற ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய வேலை வெற்றி அடையாமல் போனதையும் அதன் பலனாக அவன் உள்ளத்தில் ஏற்பட்ட திருப்தியையும் மேலே பார்த்தோம்.


இரவில் செல்லும் ரயிலின் அழகிய தீபாலங்காரக் காட்சி மறைந்ததும் மறுபடியும் நாலாபுறமும் காரிருள் வந்து மூடிக் கொண்டது. குமாரலிங்கம் அப்போது நின்ற இடத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் தெரியாதபடி கரிய பாறை மறைத்துக் கொண்டிருந்தது. எனவே நாலாபக்கமும் ஒரே அந்தகாரந்தான். வெளியில் இருந்தது போலவே குமாரலிங்கத்தின் உள்ளத்தையும் இருள் மூடியிருந்தது. திக்குத் திசை தெரியாத இருட்டிலே என்ன செய்வது, எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அவன் மனம் திகைத்தது. அவனுடைய வருங்கால வாழ்க்கையே அப்படி இருள் சூழ்ந்ததா யிருக்குமோ என்ற எண்ணம் ஒரு கணம் அவன் மனத்தில் தோன்றியபோது அது வரையில் எத்தனையோ ஆபத்தான நிலைமைகளிலும் அவன் உணர்ந்தறியாத ஒரு விதத் திகில் அவன் நெஞ்சில் உண்டாயிற்று. இருதயம் படபட வென்று அடித்துக் கொண்டது. நின்று கொண்டிருக்கும் போதே அவன் கால்கள் வெடவெட வென்று நடுங்கின. 

அடுத்த கணத்தில் அடியோடு பலமிழந்து நினைவிழந்து அவன் கீழே விழுந்திருப்பான். நல்ல வேளையாக அச்சமயம் குபீரென்று வீசிய குளிர்ந்த காற்றினால் அவன் உடம்பெல்லாம் சிலிர்த்தது. ஒரு பெரும் பிரயத்தனம் செய்து ‘இம் மாதிரிக் கோழைத்தனத்துக்குச் சற்றும் இடங் கொடுக்கக் கூடாது’ என்று மனத்தில் திடசங்கல்பம் செய்து கொண்டான். இருதயத்தின் படப்படப்பும் கால்களின் நடுக்கமும் ஏக காலத்தில் நின்றன. மறுபடியும் ஒரு தடவை நாலா பக்கமும் கூர்ந்து கவனமாக பார்த்தான். எந்தப் பக்கம் போகலாம் என்ற எண்ணத் துடனேதான், சிறிது நேரம் அப்படி உற்றுப் பார்த்த பிறகு, மேற்கே வெகு தூரத்தில் அடிவானத்துக்கருகில் ஒரு சின்னஞ்சிறு நட்சத்திரம் அவன் கண்ணுக்குத் தெரிந்தது. மினுக்கு மினுக்கு என்று மின்னிய அந்த நட்சத்திரத்தில் ஏதோ கவர்ச்சி இருந்தது. அதையே வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். சற்று முன்னால் ரயில்வே ஸ்டேஷன் கைகாட்டி விளக்கை நட்சத்திரம் என்று எண்ணி ஏமாந்தது அவன் நினைவுக்கு வந்தது. இதுவும் அம்மாதிரி ஏமாற்றந்தானா? இல்லை இல்லை! அந்தக் கை காட்டியின் சிவப்பு விளக்கு அவனைப் பயமுறுத்தித் தடுத்து நிறுத்தியது. இந்தக் கோமேதக வர்ண நட்சத்திரமோ அவனைக் கைகாட்டி அழைத்தது.

ஆம்; இதுவும் உண்மையில் நட்சத்திரமில்லைதான் சோலைமலை மீதுள்ள முருகன் கோயிலில் ஏற்றி வைத்து இரவு பகல் அணையாமல் காப்பாற்றப்படும் தீபம் அது! அந்த அமரதீபந்தான் தன்னைப் பரிவுடன் அழைக்கிறது என்று அறிந்து கொண்டான். 

சோலை மலைக்கும் அந்த மலைமீதிருக்கும் முருகன் கோயிலுக்கும் ஏற்கெனவே குமாரலிங்கம் போயிருக்கிறான். அந்த மலையின் அடிவாரத்திலுள்ள பாழடைந்த கோட்டையையும் பார்த்திருக்கிறான். சோலை மலைக் காட்டிலும் அதன் அடிவாரத்துக் கோட்டையிலும் மலைக்கு அப்பாலுள்ள பள்ளத்தாக்கிலும் ஒளிந்து கொண்டிருக்க வசதியான பல இடங்கள் இருக்கின்றன. இன்னும் சில காலத்துக்கு அந்த மலைப் பிரதேசந்தான் தனக்குச் சரியான இடம். முருகப் பெருமானுக்குத் தன்னிடமுள்ள கருணைதான் அந்த அமரதீபமாக ஒளிர்ந்து தன்னை அவ்விடம் வரும்படி அழைக்கிறது! தேச விடுதலைத் தொண்டில் ஈடுபட்ட தன்னைப் பிரிட்டிஷ் போலீஸாரிடம் காட்டிக் கொடுப்பதற்குக் கடவுளே இஷ்டப்படவில்லை போலும் அதனாலே தான் உள்ளம் சோர்ந்து உடல் தளர்ந்து போய் நின்ற தன் கண் முன்னால் அந்தச் சோலைமலை முருகன் கோயில் தீபம் தெரிந்திருக்கிறது. தான் வேறு வழியாக அந்தக் கரிய செங்குத்தான பாறைக்குப் பின்புறமாகச் சென்றிருந்தால், அந்தச் சோலைமலைத் தீபத்தைப் பார்த்திருக்க முடியாதல்லவா? சிலகாலம் அந்த மலைப் பிரதேசத்தில் நாம் மறைந்திருக்க வேண்டுமென்பது முருகனுடைய சித்தமாக இருக்க வேண்டும்!

இவ்விதம் முடிவு கட்டிய குமாரலிங்கம் சோலைமலை அமர தீபத்தைக் குறியாக வைத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினான். அவனுடைய நெஞ்சிலே ஏற்பட்ட உறுதியும் திடமும் அவனுடைய கால்களுக்கு அதிசயமான பலத்தை அளித்தன.

3. சேவல் கூவிற்று

குமாரலிங்கம் சோலைமலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தபோது மலைமேலே ஒளிர்ந்து அவனை அவ்விடத்துக்கு கவர்ந்து இழுத்த முருகன் கோயிலின் அமரதீபம் பார்வைக்கு மறைந்துவிட்டது. அதற்குப் பதிலாக கீழ்த்திசையில் உதித்து மேலே சிறிது தூரம் பிரயாணம் செய்து வந்திருந்த விடி வெள்ளியானது உதய கன்னியின் நெற்றிச் சுட்டியில் பதித்த கோஹினூர் வைரத்தைப் போல் டால் வீசிற்று. அதுமட்டுமல்லாமல் வானத்தை மறைத்திருந்த மேகத் திட்டுகள் விலகிவிட்டபடியால், ஆகாச வெளியெங்கும் கோடானுகோடி வைரச்சுடர்கள் வாரி இறைத்தாற் போன்று காட்சி தோன்றியது.

கிழக்கு நன்றாய் வெளுத்து, சுக்கிரனுடைய பிரகாசமும் மங்கத் தொடங்கிய சமயத்தில் குமாரலிங்கம் சோலைமலையை அடுத்திருந்த பாழடைந்த கோட்டையை அடைந்தான். களைப்பினால் அவனுடைய கால்கள் கெஞ்சின. தன்னை மீறி வந்த தூக்கத்தினால் கண்களும் தலையும் சுழன்றன. ‘இனிமேல் சிறிது தூரமும் நடக்க முடியாது; இந்தப் பாழடைந்த கோட்டைக்குள்ளே புகுந்து எங்கேயாவது ஓர் இடிந்த மண்டபத்தைப் பார்த்துப் படுத்துக் கொள்ள வேண்டியதுதான். ஜனசஞ்சாரம் இல்லாத இடம். பத்திரத்துக்குக் குறைவு ஒன்றுமில்லை!’ என்று மனத்தில் எண்ணினான். மதில்சுவர் இடிந்ததனால் ஏற்பட்டிருந்த வழி மூலமாகக் கோட்டைக்குள்ளே புகுந்து சென்றான். மிக வியப்பான எண்ணம் ஒன்று அப்போது அவன் மனத்திலே தோன்றிற்று. அந்த கோட்டைக்குள்ளே முன் எப்போதோ ஒரு சமயம் ஏறக்குறைய இதே மாதிரிச் சந்தர்ப்பத்தில் ஒளிந்து கொள்வதற்காகப் பிரவேசித்தது ஞாபகத்துக்கு வந்தது. எப்போது எதற்காக அவ்விதம் நிகழ்ந்தது என்பதெல்லாம் ஒன்றும் தெளிவாகவில்லை. 

மூன்று வருஷத்துக்கு முன்னால் அவன் இந்த மலைமேலுள்ள முருகன் கோயில் திருவிழாவுக்கு வந்திருந்த போது அந்தப் பாழடைந்த கோட்டையை மேலேயிருந்து பார்த்தானே தவிர, அதற்குள்ளே பிரவேசிக்கவில்லை. பின் எப்போது அங்கே தான் வந்திருக்கக்கூடும்? இது என்ன பைத்தியக்கார எண்ணம்? கோட்டைக்குள்ளே மேலும் போகப் போக, அந்த எண்ணம் உறுதிப்பட்டு வந்தது. மேட்டிலும் பள்ளத்திலும் கல்லிலும் காரையிலும் அவன் ஏறி இறங்கி நடந்து சென்ற போது, “நிச்சயமாக இங்கே முன்னொரு தடவை நாம் வந்திருக்கிறோம். ஆனால் அச்சமயம் இந்த இடங்கள் எல்லாம் இவ்விதமாக இல்லை” என்று தோன்றியது.

இன்னும் கொஞ்ச தூரம் சென்றதும் காடாக மண்டிக் கிடந்த மரம் செடிகளுக்கு மத்தியில் ஒரு சிறு மண்டபம் இருப்பது தெரிய வந்தது. அதற்குச் சற்றுத் தூரத்தில் மேல் மச்சுக்களெல்லாம் தகர்ந்து விழுந்து கீழ்த்தளம் மட்டும் அதிகம் சிதையாமலிருந்த ஒரு கட்டிடம் காணப்பட்டது. மேற்படி மண்டபமும் அப்பாலிருந்த கட்டிடமும் அவனுக்கு நன்றாய்ப் பழக்கப்பட்டவையாகத் தோன்றின. எப்பொழுது எந்த முறையில் என்பது மட்டும் தெளிவாகவில்லை. தூக்க மயக்கத்தினால் நன்றாக யோசித்து ஞாபகப் படுத்திக் கொள்ள முடியவில்லை. ‘எல்லாவற்றுக்கும் இந்த மண்டபத்தில் சிறிது நேரம் படுத்து உறங்கலாம். உறங்கி எழுந்த பிறகு மனத்தெளிவுடன் யோசிக்கலாம்’ என்று தீர்மானித்தான். அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக மண்டபத்தின் விளிம்பில் ஒரு தூண் ஓரமாக உட்கார்ந்தான். கீழ்த்தளம் அவ்வளவு சுகமாக இல்லை. குண்டும் குழியும் கல்லும் கட்டியுமாகத்தான் இருந்தது. தலைக்கு வைத்துக் கொள்ளவும் ஒன்றுமில்லை. ஆனாலும் இனி ஒரு நிமிஷமும் தூக்கத்தைச் சமாளிக்க முடியாது; கையை மடித்துத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்துக் கொள்ள வேண்டியதுதான் என்று குமாரலிங்கம் எண்ணினான். அப்போது எங்கேயோ பக்கத்திலிருந்த கிராமத்திலிருந்து ‘கொக்கரக்கோ’ என்று சேவல் கூவும் சத்தம் கேட்டது. ‘கொக்கரக்கோ! கொக்கரக்கோ! கொக்கரக்கோ!’.

மூன்றாவது தடவை சேவல் கோழி ‘கொக்கரக்கோ’ என்று கூவியபோது, குமாரலிங்கத்தின் கண்ணெதிரே இந்திர ஜாலமோ, மகேந்திர ஜாலமோ என்று சொல்லும்படியாக ஒரு பெரிய அதிசயம் நிகழ்ந்தது. அவன் உட்கார்ந்த மண்டபம் புத்தம் புதிய அழகான வஸந்த மண்டபமாக மாறியது. மண்டபத்தைச் சுற்றியிருந்த காடு ஒரு நொடியில் மலர்கள் பூத்துக் குலுங்கிய செடிகளும் மரங்களும் உள்ள உத்தியான வனம் ஆயிற்று. அதற்கப்பாலிருந்த இடிந்த கட்டிடம் மூன்றடுக்கு மெத்தையுள்ள அழகிய வேலைப்பாடுகள் அமைந்த அரண்மனை ஆயிற்று. இன்னும் அதற்கப்பால் இரு புறங்களிலும் வேறு அழகிய கட்டிடங்கள், சுவர்களில் பூசிய முத்துச் சுண்ணாம்பினால் வைகறையின் மங்கிய வெளிச்சத்தில் தாவள்யமாகப் பிரகாசித்த கட்டிடங்கள் காணப்பட்டன. சேதம் சிறிதுமில்லாத கோட்டைச் சுவர்கள், கோட்டை வாசல்களின் மேல் விமானங்கள் ஆகியவை மங்கலாகவும் ஆனால் முழு வடிவத்துடனும் கண்முன்னே தோன்றின.

இந்த மாயாஜால மாறுதல் எல்லாம் சில விநாடி நேரத்துக்குள்ளேயே ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்து குமாரலிங்கத்தைத் திக்குமுக்காடச் செய்தன. அதே சமயத்தில் அரண்மனை ஆசார வாசலில் நாதஸ்வரம் வாசிக்கும் இனிய ஓசையும், கோட்டை வாசலில் நகரா முழங்கும் சத்தமும் கேட்டன.

நல்ல அந்தகாரத்தில் பளிச்சென்று மின்னும் மின்னலில் விஸ்தாரமான பூப்பிரதேசத்தின் தோற்றம் கண்ணுக்குப் புலனாவது போல, அந்தப் பழைய கோட்டையின் அதிசயமான வரலாறு முழுவதும் குமாரலிங்கத்துக்கு ஞாபகம் வந்தது. ஏறக்குறைய இதே மாதிரி சந்தர்ப்பத்தில் முன்னொரு தடவை இந்தக் கோட்டைக்குள்ளே தான் பிரவேசித்தது முற்றிலும் உண்மை; அதில் சிறிதும் சந்தேகமேயில்லை.


இன்றைக்கு ஏறக்குறைய நூறு வருஷத்துக்கு முன்னால் தென்பாண்டி நாட்டில் மேற்கு மலைத் தொடருக்கருகில் இரண்டு பெரிய பாளையப்பட்டு வம்சங்கள் பிரசித்தி பெற்று விளங்கின. ஒவ்வொரு வம்சத்தின் ஆளுகையிலும் சுமார் 300 கிராமங்கள் உண்டு. மறவர் வகுப்பைச் சேர்ந்தவர்களாகிய பழந் தமிழ்க் குடிகளாகிய இரண்டு பாளையக்காரர்களும் பூரண சுதந்திரத்துடன் சிற்றரசர்களாக ஆட்சி செலுத்தி வந்தார்கள். கீழே குடிபடைகள் அவர்களுக்கு அடங்கி நடந்தார்கள். மேலே அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவதற்கோ, கப்பம் கேட்பதற்கோ உரிய பெரிய அரசாங்கம் எதுவும் கிடையாது. அப்படி யாராவது கப்பம் கேட்க வந்தால் அவர்களை எதிர்த்துப் போரிடும் வீரமும், போர் வீரர்களும் அவர்களிடம் இருந்தார்கள். சோலைமலையிலும், மாறனேந்தலிலும் நீடித்த முற்றுகையைச் சமாளிக்கக் கூடிய பெரிய கோட்டை கொத்தளங்கள் இருந்தன.

அக்காலத்திலே தான் ‘கும்பெனி’யாரின் ஆட்சி பாரத நாடெங்கும் பரவிக்கொண்டு வந்தது. பண்டம் விற்கவும் பண்டம் வாங்கவும் வந்த வெள்ளைக்கார வியாபாரிகள் முதலில் தங்கள் சொத்துக்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வீரர்களைச் சேர்த்துப் படை திரட்டினார்கள். பிறகு அந்தப் படைகளைக் கொண்டு நாடு பிடித்து அரசாளத் தொடங்கினார்கள். அரசாட்சியெல்லாம் ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பெயரிலேயே நடந்தது. வியாபாரத்துக்காக வந்தவர்கள் அரசாங்கம் நடத்தத் தொடங்கினால் அதன் இலட்சணம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. எந்தெந்த முறையில் பொருள் திரட்டலாமோ, எவ்வளவு சீக்கிரத்தில் திரட்டலாமோ, அதுதான் கும்பெனி அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாயிருந்தது. நாட்டின் அரசாட்சி கையிலே இருந்தால், வியாபாரம் நன்றாய் நடக்கிறது என்றும், லாபம் ஒன்றுக்கு நாலு மடங்காகக் கிடைக்கிறது என்றும் கண்ட பிறகு மேலும் மேலும் இராஜ்யத்தை விஸ்தரிக்கத் தொடங்கினார்கள். சண்டையும் உயிர்ச்சேதமும் இல்லாமல் சமாதான பேத உபாயங்களினால் சில பிரதேசங்களைத் தங்கள் ஆட்சியின் கீழ்க் கொண்டு வந்தார்கள். உடுத்திக் கொள்ள ஸூட்டும் பூட்ஸும் வேட்டையாடத் துப்பாக்கியும் அழகு பார்க்க நிலைக் கண்ணாடியும் க்ஷவரக் கத்தியும் கொடுத்துச் சில மகாராஜாக்களைத் தங்கள் வசத்தில் கொண்டு வந்தார்கள். அந்தந்தப் பாளையக் காரர்களுக்கு விரோதி யார் என்று தெரிந்து கொண்டு விரோதிகளைப் பூண்டோடு அழித்து விடுவதாக வாக்குறுதி கொடுத்துச் சிலரைத் தங்கள் மேலதிகாரத்தை ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். இந்தியர்களின் பரம்பரைக் குலதர்மமான விருந்தோம்பல் குணத்தை உபயோகப்படுத்திக் கொண்டு சில சிற்றரசர்களையும் ஜமீந்தார்களையும் பிரிட்டிஷ் கும்பெனி ஆட்சியின் அத்தியந்த சிநேகிதர்களாக்கிக் கொண்டார்கள். இந்த வருஷம் சிநேகிதர்களாயிருந்தவர்களை அடுத்த வருஷம் அடிமைகளாக்கிக் கொண்டார்கள். 

இப்படியெல்லாம் நடந்து கொண்டிருந்த காலத்தில், சோலைமலைக் கோட்டையின் புராதன சிங்காதனத்தில் வீற்றிருந்து செங்கோல் செலுத்தி வந்த மகா ராஜாதிராஜ வீர ராமலிங்க குலோத்துங்க ருத்திரத் தேவர் பிரிட்டிஷ் கும்பெனியாரின் அத்தியந்த சிநேகிதர் ஆனார். கப்பல் ஏறிக் கடல் கடந்து வியாபாரம் செய்ய வந்த வெள்ளைக்காரச் சாதியாரின் அதி அற்புத சாமர்த்தியங்களைப் பற்றி ஏற்கெனவே சோலைமலை மகாராஜா ரொம்பவும் கேள்விப்பட்டிருந்தார். எனவே ஆங்கிலேயன் ஒருவன் துப்பாக்கிகள் தோட்டாக்கள் சகிதமாகச் சோலைமலைக்கு வந்து, மகாராஜாவுக்குப் பெரிய ஸலாம் ஒன்று போட்டுச் சோலைமலைக் கோட்டையை அடுத்த காடுகளில் வேட்டையாட விரும்புவதாகத் தெரிவித்ததும், மகாராஜாவின் ஆனந்தம் அளவு கடந்ததாயிற்று. வேட்டைக்குக் அனுமதி கொடுத்ததோடு, தாமே அவனுடன் வேட்டைக்குக் கிளம்பிப் போனார். ஆங்கிலேயன் அவருக்குத் துப்பாக்கியை உபயோகிக்கக் கற்றுக் கொடுத்தான். இம்மாதிரி ஆரம்பமான சிநேகிதம் சீக்கிரத்தில் நெருங்கிய அத்தியந்த நட்பாக முதிர்ந்தது. சீமையிலிருந்து மேற்படி ஆங்கிலேயன் கொண்டு வந்திருந்த இனிப்பும் போதையும் கொண்ட சாராய வகைகள் அவர்களுடைய நட்பு முதிர்வதற்கு ரொம்பவும் துணை செய்தன. சில நாளைக்குள்ளே அந்த ஆங்கிலேயனுடைய சிநேகிதர்கள் சிலரும் சோலைமலைக் காடுகளில் வேட்டையாடுவதற்கு வந்து சேர்ந்தார்கள். 

– தொடரும்…

– கல்கி இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– சோலைமலை இளவரசி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 12-01-1947 – 13-04-1947, கல்கி இதழ்.

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *