திருஷ்டி பொம்மை

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 2,785 
 

இரவு ஏழு மணி. வழக்கம்போல வந்து செல்லும், தனியார் பேருந்து, பயணிகளை உஷார்படுத்துவதற்காக நீண்ட ஹாரனை ஒலித்தது. கடைகளிலும் வீட்டுத் திண்ணைகளிலும் உட்கார்ந்து கொண்டிருந்தவர்கள், எழுந்து பேருந்து நிற்கும் இடத்தில் ஒதுங்கி நின்றார்கள். அப்போது, அருகிலிருந்த கடை ஒன்றில், சக்கு மனைவி ஹம்சத்வணி, விற்காமல் இருந்த பழைய பொருட்களை, விற்றுவிடும் ஆயத்தததில், சரக்குகளை கைக்கு எட்டும் வகையில், தயார் நிலையில் அடுக்கிக் கொண்டிருந்தாள். பேருந்து வந்து நின்றது. பேருந்து நிறுத்தததிறகு, எதிரே இருந்த சக்கு கடையை பார்த்தார்களே தவிர, சரி பிழைத்துப் போகட்டும் என்று, ஒருவர்கூட எதையும் வாங்கவில்லை.

வந்து, விலையைக்கூட கேட்காமல்போன பயணிகளால், நொந்து நூலாகி நின்ற ஹம்சத்வணி, கல்லாப்பெட்டியை திறந்து, திறந்து மூடினாள். இருக்கிறதா, அதுவும் ஓடிப்போயிற்றா என்று…! இருக்காதோ பின்னே.. ஏமாற்றத்தால் ஏற்பட்ட விரக்தியில் எதையும் உடைத்துவிடவில்லை. இப்போதெல்லாம் அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டை, பொறுக்க முடியாமல், கண்ணீர விடுவது போன்று, ஒழுகி ஓடிக் கொண்டிருந்தன கோன் ஐஸ்கள். . இதைப்பார்த்த ஹம்சத்வணி, ஒன்றை எடுத்து வாயில் திணித்தாள். அவள் தொண்டையில் இறங்கியதோ, இல்லையோ, இதைப்பார்த்து எச்சில் குடித்த, மளிகைக்கடை சுப்பு, ஒரு கோன்ஐஸை வாங்கிச் சாப்பிடவில்லை. செலவு செய்யத் தெரியாததுபோல், நின்று பார்த்துக் கொண்டிருந்த அவன், தன் கடையிலிருந்த தக்காளியைத் தின்று, ஹம்ஸத்வணிக்கு போட்டியாளனாக நினைத்துக் கொண்டார்.

அப்போது கோவிந்தன் கடையில் டீ குடித்துவிட்டுத் திரும்பிய, திருஷ்டி பொம்மை போன்ற உருவத்தை உடைய ஒருவன்,, ஹம்சத்வணியிடம் விலைகளை மட்டும் விசாரித்து விட்டு, பஞ்சாயத்து கழிப்பறை இருக்கும் திசை நோக்கி நடந்தான். தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், சர்க்கஸ் கரடியைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். கன்னங்கரேனற உருவம், நெருங்கியபோது, விளையாடிக் கொண்டிருந்த கவிதா மகன் சபரி, “..அம்மா பூச்சாண்டி” என்று ஓடினான். கருத்த அந்த உருவம், செழியன் கடை அருகே சென்றபோது, சின்னஞ்சிறுசுகள் மாயமானதால், சந்தைக் கடையைப்போல இருந்த தெருவில், நிசப்தம் நிவியது.

ரோட்டோரமாகப் பேசிக் கொண்டிருந்த கருப்பையா “என்ன மாப்ளே சௌக்கியமா” என்றார்.

“.. சவுரியம்மா இல்லாமையா வந்தோம்” என்று சொல்லிவிட்டு கோவில் தெப்பத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். அப்போது திசை திருப்பிய கருப்பையா,

“சவுரியம்மாவோடவா வந்தீங்க” என்று வழக்கமாக நையாண்டி செய்தார். அதற்கு பதில் எதுவும் பேசாமல் சிரித்தான் அவன். “ஒரு மூணு மாசத்துக்கு முன்னாலே எதிர்பார்த்தோம், வரலை, இப்ப திடீர்னு வந்திருக்கீங்க” என்றார் கருப்பையா.

“ஒண்ணுமில்லெ, சும்மாதான்” என்று சொல்லிவிட்டு, எதிரே இருந்த தன் வீட்டுக்கதவைத் தட்டியது அந்தக்கருத்த உருவம்.. உள்ளே படுத்துக் கிடந்த வெண்ணிலா, கதவைத் திறந்தாள். எதிரே நின்ற அவனை, “தம்பி வாடா ..வா.. இப்பத்தான் வந்தியா…?” என்றாள்.

“ஏண்டா.. சித்தப்பா செத்ததுக்கு வரலை…?”

“வர முடிலெ வேலை…”

“சாவுக்கு வந்த எல்லாரும் , வல்மீகம் எங்கண்ணு கேட்டாங்கடா..”

“அப்புரம் .. என்னாச்சு..?”

“..அவருக்கு, என்னோட கொழுந்தந்தாடா கொல்லி வச்சது…”

“..முடிஞ்சது சரி ஓகே” என்ற வல்மீகம், திண்ணையில் வந்து உட்கார்ந்தான். அப்போது அங்கு வந்த ஆறுமுகம் “உங்களுக்கு, வல்மீகம்னு பேரு வச்சதுக்குப் பதிலா, கட்டக் கருப்புனு வச்சிருக்கலாம்” என்றார். சிரித்துக்கொண்டே கண்ணாடியைப் பார்க்க முடியாத ஆதங்கத்தில், “அதுக்கென்ன மாமா” என்றான். அப்போது தன் மாமாமகன் ஆணிக்கினியுடன் வந்த மாரியம்மாள் “அண்ணெ எப்பொ வந்தே” என்றாள்.

“….இப்பத்தான் நீ எங்கெ போனே?”

“..நா அத்தை வீட்டுக்கு நேத்துப் போனேன். விவசாய வேலை தடபுடலா நடந்துக்கிட்டு இருக்கு… எனக்கும் அங்கெ வேலை இருந்துச்சு… நைட்டு பாசனம் பண்ணாங்க.. அத முடிச்சிட்டு இப்பத்தான் வர்றேன். இனிமே வெள்ளாமை, வேலை, பாசனம்னு திரிய வேண்டியதுதான். நம்ம அக்கா மக கூட நைட்டுபூரா தண்ணி எறைக்கிற வேலையை முடிச்சிட்டுத்தான் போறா..” என்று விவசாயப் பணிகளை, வரலாறைப்போல நீட்டி முழக்கினாள்.

“..ஆனிக்கிணியோட மாமா பேரு என்ன, அப்துல்லாவா?” என்றான் வல்மீகம்.

“இல்லை, அந்தப்பயபுள்ளெ வாகைக்குடிக்காரன்..”

“உனக்குத்தான் ஒரு கல்லாணம் பண்ணி வெக்கெ முடியலெ” என்ற மாரியம்மா “இந்தா காபி கொண்டாரேன்” என்று சமையல் அறைக்குள் நுழைந்தாள். அப்போது பஞ்சாயத்து ஆபீஸ் வாசலில் உட்கார்ந்திருந்த பெண்கள், “இவ அண்ணனுக்கு பொண்ணு குடுக்க யாரு போட்டி போட்டதாம்..கல்லாணமா கல்லாணம்” என்று முகத்தை கோண வைத்தார்கள்.

அப்போது வாயைத்திறந்த கோகிலா “… கல்லாணம் பண்ணிருந்தாலும் டெய்லி பிரச்சினையாத்தான் இருந்திருக்கும்” என்றாள்.

“அடி ஒன்னோட ஊத்த வாயைக் கழுவுடி” என்ற சிநேகவள்ளி, “ஏண்டி அப்டிச் சொல்றே..?” என்றாள்.

“..மெட்ராஸ்லெ இவெந்தக்கச்சி புருசணோட காசை ஆட்டையப் போட்ருக்கான். இன்னொன்னு, பேங்கு பாஸ்புக்கு, செக்குப்புக்கு எல்லாத்தையும் கிழிச்சிப் போட்டுட்டானாம். அப்ப நடந்த சின்னப் பிரச்னைல, தங்கச்சி வீட்டுக்காரன் அடிச்சிருக்கான்… இந்தப்பய கடிச்சிப்புட்டானாம்..” என்றாள் கோகிலா..

“.. அய்யய்யோ இது தெரிலையே, இப்ப தங்கச்சி புருசென் இருக்கானா செத்துப் போயிட்டானா..?!!”

“…உடம்புக்கு சரியில்லாமே ஊருக்குப் போயிடனாம்..”

“நல்ல வேலையாப்போச்சு இவனுக்கு பல்லு இல்லாததாலே தப்பிச்சானாம். இல்லேனா ஸ்பார்ட்லே அவுட்டுத்தானாம்..” என்று நீட்டினாள்.

“…இந்தக்குடும்பம் பண்ணுண பாவம் சும்மா விடுமா, நமக்கிட்டே ஓட்டை வாங்குண, இந்தப்பயலோட தாத்தா, காவாசி எடத்தைப் பட்டா மாத்திக்கலையா? அதாங் குடும்ப நெலவரம் கிலுகிலுனு இருக்கு” என்று சொன்னாள் கனகா.

அப்போது அருகிலிருந்த சின்னத்தாயி, “எப்பவுமே, குடும்பத்துக்கு லாயக்கு இல்லாதவனை, ஒரு வீட்லெ ஒண்ட விட்டா, இப்டிலாம் ஆகும். இவென் மாதிரி ஆளுக, வீட்லே தங்கிக்கிறதுக்கு போடக்கூடாத தகிடுத த்தம்லாம் பண்ணுவாங்கெ… அப்பிடி அவென் பண்ணுன கோளாறுலெதான் இவ இங்கெ வந்து கெடக்காலா… சரிதான்….”

“…இவ அங்காளி, பங்காளி, அவ ஆத்தாளோட அப்பன், ஆத்தா பண்ணுன காரியத்தை இப்பெ இருக்குற சொந்தப்ந்தமும் பண்ணிருக்கு… இவளுக்குத்தான் புத்தி வேணாம். அன்னைக்குச் சொல்லிக்கிட்டு இருக்கா, ஷாமு அப்பாவெ எங்க அண்ணெ நல்லா கடிச்சிருச்சுன்னு… இப்ப பக்கத்துக்கு ஊரு ஜான்சு குடும்போதாட குலையுறாங்கள்ல, என்னென்ன நடக்கப்போகுதோ, நடக்கட்டும் பாக்கலாம்.. “

“இந்த விவகாரம் சும்மா போகாது போல…. அடியே வாங்க நம்ம கெளம்பலாம்” என்ற சிநேகாம்பாள், இதைப் பத்தி, வருசம் முழுதும் பேசலாம் போல… எல்லாம் இந்த பாகம்பிரியாதான், நம்ம பொழுது போக்குறதுக்கு என்னென்ன காரியத்தெல்லாம் நம்ம கண்ணுக்கும், காதுக்கும் கொண்டு வந்து சேக்குது பாத்தியா என்றபடி, கோவில் கோபுரத்தை வணங்கியபடி விடைபெற்றுச் சென்றனர்.

Print Friendly, PDF & Email

1 thought on “திருஷ்டி பொம்மை

  1. இதுபோல எங்கள் உறவினர் வீட்டிலும் நடந்துள்ளது. எங்கள் கதை சித்தரிக்கப்பட்டதோ என உணரத் தோன்றுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *