கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 6, 2024
பார்வையிட்டோர்: 9,065 
 
 

அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15

அத்தியாயம்-10

மரி கிளாட் கார்பெண்ட்டர்(Marie-Claude Carpenter) அமெரிக்க பெண்மணி. எனது நினைவுத்திறனை நம்புவதால் அவள் பாஸ்ட்டனைச்( Boston) சேர்ந்தவள் என்பது உறுதி. மிகவும் நிர்மலமான கண்கள். வெளிர்நீலம். 1943. இளமஞ்சள்நிறம். வயதுக்கான தளர்ச்சியில்லை, தவிர அழகானவளென்றும் ஞாபகம். முகத்திற் சட்டென்று மின்னலாய் தோன்றி மறையும், கணநேரப் புன்னகை. நன்றாக நினைவிருக்கிறது, தாழ்ந்த குரல், உரத்துபேசுவதைத் தவிர்க்கும் ரகம். நடுத்தர வயதைக் கடந்திருந்தாள், நாற்பத்தைந்துவயது.

பாரீஸின் பதினாறாவது வட்டத்தில், அல்மா(Alma)வுக்கு அருகில் வசித்துவந்தாள். அவளுடையது கடைசி மாடி, மிகப்பெரியது, எட்டிப்பார்த்து சேன்(Seine)நதியை வியக்கலாம். குளிர்காலத்தின் இரவு உணவுக்கும், கோடையில் மதிய உணவுக்கும் அங்கு சென்றதுண்டு. அவற்றைப் பாரீஸ் நகரத்திலிருந்த உயர்ரக உணவு விநியோக விடுதிகளிலிருந்து தருவிப்போம். பெரும்பாலும் அவை தரமானவை என்பது உறுதி, ஆனால் வயிறு நிறைந்ததில்லை.

மரி கிளாட் கார்பெண்ட்டரை அனேகமாக அவளது குடியிருப்பில் மட்டுமே பார்த்திருக்கிறேன், வெளியிற் சந்தித்ததில்லை. சில நேரங்களில் அங்கே கவிஞர் மல்லார்மே(Mallarme)யின ஆசாமி ஒருவரைப் பார்த்ததாக ஞாபகம். அவ்வப்போது இலக்கியவாதிகளைச் சந்தித்த நினைவுமிருக்கிறது, அவர்கள் ஒருவரா, இருவரா அல்லது மூவரா, நினைவில்லை. ஒருமுறை அனைவரையும் சேர்த்தேக் கண்டிருக்கிறேன். அதன்பிறகு என்ன ஆனார்கள் தெரியவில்லை. அவர்களை மரி கிளாடு எங்குப் பிடித்தாள், எப்படி அவர்களை அறிமுகம் செய்துகொண்டாள், தனது குடியிருப்பிற்கு அவர்களை அழைப்பதற்கான காரணங்களென்ன.. ம் தெரியாது. அதற்குமுன்பு அவர்களைக் குறித்து கேள்விப்பட்டதில்லை. அவ்வாறே அவர்களுடைய படைப்புகளை வாசித்ததுமில்லை, அவைபற்றி பிறர்சொல்ல கேட்டதுமில்லை. உணவுக்கென்று நாங்கள் எடுக்கும் நேரம் மிகக் குறைவு. ஆனால் போரைப் பற்றி நிறைய பேசுவோம்.

இடம் ஸ்டலின்கிராடு(Stalingrad), 1942ம் ஆண்டு – பின்பனிக்காலம். மரி கிளாட் கார்பெண்ட்டர், கேட்பது அதிகம். அத்தனை தகவல்களையும் மனதிற் பதிவுசெய்திருப்பாள். பேசுவது குறைவு. எப்படி இதுபோன்ற சம்பவங்களை அவள் அறியாமற்போனாளென்று இடைக்கிடை வியப்பாள், கலகலவென்று சிரிக்கவும் செய்வாள். உண்டு முடித்தாளோ இல்லையோ, சில வேலைகள் நிமித்தமாக உடனே தான் விடைபெற வேண்டியிருக்கிறதென்று கூறி வருத்தப்படுவாள். அதென்ன வேலைகளென்று ஒருபோதும் அவள் சொன்னதில்லை.

எஞ்சி இருப்பவர்கள் எண்ணிக்கையிற் கூடுதலாக இருந்தால், அவள் போனபிறகு ஒன்றிரண்டு மணிநேரம் கூடுதலாக பேசிக்கொண்டிருப்பதுண்டு. புறப்படுவதற்குமுன், அவளும் உங்கள் விருப்பம்போல நிதானமாக இருந்து உரையாடிவிட்டுச் செல்லுங்கள் என்பாள். அவளைப் பற்றி பின்னால் பேசுகிற வழக்கமெல்லாம் எங்களிடத்திலில்லை. அவளைப்பற்றி ஒன்றுமே தெரியாத நிலையில், பேசுவதற்கு எதுவுமில்லையென்பது உண்மையான காரணமாகவிருக்கலாம்.

புறப்படுகிறபோது, ஏதோ பொருளற்ற கனவுலகில் சஞ்சாரித்து மீள்வதுபோலவும், பழக்கமற்ற மனிதர்களுடன் சிலமணிநேரங்கள் இருந்ததுபோலவும், நாங்கள் கழித்தத் தருணத்திற்கு நாளை என்ற சொல்லே அந்நியம்போலவும், மனிதர்வாழ்க்கை பற்றிய சிரத்தையோ அல்லது வேறுவகையான பிரக்ஞைகளோ அற்றவள்போலவும் உணர்ந்தேன், மற்றவர் அனுபவமும் அதுவாகத்தானிருந்தது. வேறொரு எல்லைக்குள் பிரவேசித்து கடந்துவந்திருந்தேன். தொடர்வண்டியில் பயணித்திருந்தேன். மருத்துவர் அழைக்கும்வரை, அதற்கான அறையில் காத்திருந்த நோயாளியைப்போலவும், ஓட்டல்களில், விமான நிலையங்களில் காத்திருந்ததுபோன்றும் அவ்வனுபவமிருந்தது.

கோடையில் சேன் நதியைப் ரசித்தவண்ணம் மொட்டைமாடியில் அமர்ந்து பகலுணவு கொள்வதும், செடிகொடிகள் நிறைந்திருக்கும் கட்டிடத்தின் மேற்தளத்தில் காப்பி குடிப்பதும் வழக்கம். நீச்சல் குளமொன்றும் இருந்தது. ஆனால் ஒருவருக்கும் நீந்தவராது. சிற்சில நேரங்களில் பாரீஸ்நகரத்தின் வெறிச்சோடிய பெரியவீதிகள், நதி, சிறிய தெருக்களென்று எங்களது கவனஞ்செல்லும். ஆட்கள் நடமாட்டமற்ற வீதிகளில் கட்டல்பா மரங்கள் பூத்துக்குலுங்கும்.

மரி கிளாட் கார்பெண்ட்டர்மீதே என் கவனமிருக்கும், அவளுக்கு அது இடையூறாக இருக்கிறதென்றும் அறிவேன், இருந்தும் என்னால் அதனைத் தவிர்க்க இயல்வதில்லை. மரி கிளாட் கார்பெண்ட்டர் என்பவளைக் கண்டறிய, அதாவது அவள் யாரென்பதைக் கண்டறிய, அப்படி அவதானிப்பதுண்டு. எதற்காக மற்ற இடங்களையெல்லாம் தவிர்த்துவிட்டு இங்கே வந்திருக்கிறாள், அவ்வளவு தூரத்திலிருந்து அதாவது பாஸ்ட்டனிலிருந்து அவளை வரச் செய்தது எது? ஏன் அவள் மட்டும் பணக்காரியாக இருக்கிறாள்? பிறர் அவளைப்பற்றி ஒன்றுமே தெரிந்து வைத்திராததின் காரணமென்ன? அவ்வபோது விருந்துகள் கொடுக்கவேண்டிய அவசியமென்ன? அவளுடைய கண்களில் மாத்திரம், வெகுதூரத்தில், ஆழமான பார்வைக்குப் பின்னே துகளாய் மரணம் உறுத்துவது எதனால்? ஏன்? இந்தவகை இந்தநிறம் எனச் சொல்லமுடியாதபடி, நல்ல குளிர்காலத்திலும், கோடைகாலத்து வெண்மையைப்போல, அத்தனைத் திருத்தமாய், அவள் அணிகிற கவுன்களுக்கிடையிலுங்கூட ஏதோவொரு ஒற்றுமையிருப்பதும், அது என்னவென்று அறியாமல் நான் திணறுவதும் உண்டு. அதுவும் தவிர, இன்னொரு உடலுக்குச் சொந்தமான அவ்வாடைகளை இரவல்பெற்று அணிந்திருப்பதாலேயே அவை, அவளுக்குப் பொருந்தவில்லை என்பதுமாதிரி, எனது கண்களுக்கு அவள் தெரிவாள்.

மரி கிளாட் கார்பெண்ட்டர் வரவேற்றவர்கள் பட்டியலில் பெட்டி ·பெர்ணாண்டெஸ்(Betty Fernandez)உண்டு. பெண்கள் என்று நினத்தவுடன் பிரகாசிக்கிற நினைவுகளில், ஆண்கள் கலந்திருப்பதில்லை. பெட்டி ·பெர்ணாண்டெஸ் வித்தியாசமான பெண்மணி. அவளுடைய பெயரை உச்சரித்த அடுத்த கணம் பாரீஸ் நகர வீதியொன்றில் அவள் நடக்கிறாள். பார்வையில் குறைபாடுடையவள்போல கவனித்து நிதானமாக
நடக்கிறாள். விழிமடல்களிரண்டும் அவ்வப்போது திறந்து மூடுகின்றன. சம்பிரதாய வணக்கத்தைத் தெரிவிக்கக் கை உயர, வாய் “வணக்கம், எப்படி இருக்கீர்கள்”, என்கிறது. இப்போது அவளில்லை, இறந்து பல வருடங்களாகின்றன. முப்பது வருடங்களிருக்கலாம்.

இன்றைக்கும் பெட்டி ·பெர்ணாண்டெஸ்(Betty Fernandez) வசீகரம் கண்முன்னே நிற்கிறது, அவற்றையெல்லாம், நான் மறப்பதேது, அதற்கான காலமெல்லாம் கடந்துவிட்டது. அவளது ஈர்ப்பு சக்தி அப்பழுக்கற்றதென்று சொல்வதற்கில்லை. குறைகளில்லாததென்று உலகில் ஒன்றிருக்கிறதா என்ன? அது சூழ்நிலைகளாக இருக்கட்டும் அல்லது காலமோ, குளிரோ, பசியோ, ஜெர்மானியர்களுடைய போர்த்தோல்வியோ, குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதோ எதுவாக இருந்தாலென்ன?, முழுமையானதென்று ஒன்றில்லை. இதுபோன்ற வரலாறுகளை அலட்சியம் செய்தவளாகவே வீதியில் நடக்கிறாள், எத்தனை நெஞ்சழுத்தம் அவளுக்கு. இங்கேயும் கண்கள் என்னவோ நிர்மலமாவே இருக்கின்றன. பழமையான கவுன், வீதி வெயிலில் புழுதிபடிந்த கறுப்புத் தொப்பி. வெடவெடவென்று நல்ல உயரத்துடன் சீன மையினால் எழுதப்பட்ட ஓவியம், அல்லது செதுக்கிய சிற்பம் போன்றிருக்கிறாள். மகாராணியை வீதியில் எதிர்ப்படும் பலரும், நின்று ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள் என்பதை அறியாதவள் போலவே கடந்து செல்கிறாள்.

அவள் எங்கிருந்து வருகிறாளென சட்டென்று நம்மால் யூகித்துவிட முடியாது, ஆனாலும் வேறொரு உலகத்திலிருந்து வந்தவளென்றே நினைக்கத் தோன்றும். அவள் அழகி, இந்நிகழ்வு அவளை அழகியாக மாற்றியிருக்கிறது. போன தலைமுறை ஐரோப்பிய உடைகள், ஜரிகைத் துணிகள், காலவதியான கவுன்கள், பழைய திரைத்துணிகள், குளியல் தொட்டிக்கென உபயோகித்தவை, ஆடை அலங்கார நிபுணர்கள் வெட்டியெறிந்தவைகளென எதையும் விட்டுவைக்காமல் அணிந்து, கறையான் வாய்க்கு அகப்பட்ட கிழநரிகள்போலவும், கிழட்டு நீர்நாய்கள்போலவும், நாராய்க் கிழிந்து, கவர்ச்சியற்று, அழுது வடியும் அழகுடனுடன், அந்நியத் தன்மையுடன், எதுவுமே சரிபட்டு வராது என்பதைப்போல லொடலொடவென்று அவை இருந்தபோதிலும், காற்றில் அசைகிறபோது, அவ்வளவு அழகு. உடலுக்குப் பாந்தமாய் இல்லாதிருந்தும், ஒருவித எழிலை அப்பெண்மணிக்கு அள்ளித்தருகின்றன. எப்பொருளாக இருந்தாலும், அது எந்நிலையில் இருந்தாலும், அவளது உடலையோ, தலையையோ தீண்டிய மறுகணம், தம் பங்கிற்குப் பெட்டி ·பெர்ணாண்டெஸ் சௌந்தர்யத்தில் பங்கேற்க அவை தவறுவதில்லை.

மரி கிளாட் கார்பெண்ட்டர், பெட்டி ·பெர்ணாண்டெஸையும் தன்னுடைய இல்லத்திற்கு அழைப்பதுண்டு. அதற்கான நாளொன்று இருந்தது. ஒரு தடவை, திரியே லா ரொஷெல்(Drieu la Rochelle)கூட வந்திருந்தார். செருக்கினால் துன்புறுவது வெளிப்படையாகத் தெரிந்தது. வார்த்தைகளை அளந்து பேசினார், பிறருக்குத் தயவுகாட்டிவிடக்கூடாது எனத் திட்டமிட்டவர்போல, மொழிபெயர்ப்பாளிக்குரிய இரட்டைக்குரலில் சங்கடப்பட்டுக்கொண்டு பேசினார். பிராசில்லா(Brasillah)வும் அங்கிருந்திருக்கலாம், ஞாபகபடுத்தமுடியவில்லை என்கிறபோது வருத்தமாக இருக்கிறது. ஆனால் சார்த்ரு வந்ததில்லையென்று உறுதியாகச் சொல்லமுடியும். மோன்பர்னாஸ் கவிஞர்களும் வந்திருந்தார்கள் என்று சொல்லமுடியுமேயன்றி, அவர்களுடைய பெயர்களையோ அல்லது வேறுதகவல்களையோ சொல்வதற்கில்லை. ஜெர்மானியர்கள் எவருமில்லை. அரசியல் பேசியதில்லை. இலக்கியம் குறித்து உரையாடுவோம். ரமோன் ·பெர்னாண்டெஸ்(Ramon Fernadez) பல்சாக்(Balzac) பற்றி நிறைய பேசுவார், விடியவிடியக் கேட்டுக்கொண்டிருப்போம். அவர் சொன்னவை அனைத்துமே மறக்கபட்டவை என்கிறபோது, சொல்வதற்கு என்ன இருக்கிறது, தவிர அவற்றின் நம்பகத்தன்மையை சோதிக்க இயலாதவர்களாக வேறு
இருந்தோம். அவர் தெரிவித்தவை அனைத்துமே கொசுறு செய்திகளாக இருந்ததால் அவற்றை அபிப்ராயங்கள் என்று கொள்ளமுடிந்ததே தவிர ஆதாரபூர்வமானத் தகவல்களாகக் கொள்ள முடியவில்லை. தனக்கும் ஒருமுறை பல்ஸாக்போல வரவேண்டும் என்ற எண்ணமிருந்ததை மெய்ப்பிப்பதுபோல, பல்ஸாக் ஆகவே தன்னை நினைத்துக்கொண்டு அவரைப்பற்றி ரமோன் நிறைய பேசினார். அறிபொருள் விடயத்திலும், ரமோனிடம் ஓர் உயர்வகைப் பண்பிருந்தது. ஞானமென்பது கடப்பாடு, சுமை என அடுத்தவர் உணராவண்ணம் அதனை எளிமையாகக் கையாண்டார், ஒருவகையில் அது அவசியமுங்கூட. ஓர் உண்மையான மனிதர். அவரை வீதியிலோ, காப்பி பாரிலோ சந்திக்க நேருவது, ஒருவகையான கொண்டாட்டமெனலாம். உங்களைக் கண்டதும் அவர் கொள்கிற குதூகலமும், உங்களுக்கு வணக்கம் தெரிவித்து அவரடைகிற உவகையும், அவ்வளவும் உண்மை. வணக்கம் எப்படி இருக்கிறீர்கள்? எனக் கால் புள்ளியின்றி ஆங்கிலேயர்களைப்போல கேட்பார், கூடவே சிரிப்பும் வரும். உண்மையில் அந்நேரத்தில் எழும் வேடிக்கைபேச்சுக்கள் தங்களுக்குள்ளே மோதிக்கொள்வதால் ஏற்படும் சங்கடங்களைத் தவிர்க்க அவ்வாறு சிரிக்கிறாரென்று சொல்லலாம். ஒருபக்கம் ஒத்து¨ழையாமை, இன்னொருபக்கம் ஒத்துழைப்பு, ஒருபக்கம் பசி மறுபக்கம் குளிர், ஒருபுறம் தியாகம், மறுபுறம் சுயநலம். பெட்டி ·பெர்னாண்டெஸ், வேறு இனம். அவள் பேச்சு, வீதிகளில் அவள் பார்த்த, அவள் அறிந்த மனிதற்களின் நிலைமை, கடைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள விற்பனைக்கான பொருட்களென்று எப்படியும் இருக்கலாம், சில நேரங்களில் கூடுதலாக விநியோகிக்கப்படும் பால், மீன், பற்றாகுறையை நிவர்த்திப்பதற்கான ஆலோசனைகள், நிரந்தரமாகிப்போன பசி, பட்டினி என மனிதர் தங்களை நிலைநிறுத்திக்கொள்வதில் ஏற்படும் அத்தனை சங்கடங்களிலும், இடுக்கண் களைய விருப்பிய நட்பு மனத்துடன், அக்கறையுடனும், மிகுந்த பரிவுடனும் கருத்தினை வைக்க, அவள் கூட்டாளிகளான அனுதாபிகள் கவனத்துடன் கேட்பர். போர்முடிந்த இரண்டாண்டுகளுக்குப் பின்னர், பிரெஞ்சு பொதுவுடமை இயக்கத்தில் என்னை இணைத்துக்கொண்டேன். அதுவே நிரந்தரமென்றும், தீர்வென்றும் கருதினேன். என்ன நடந்தது? மீண்டும் அதே நிலைமை, அதே பரிவு, யாசகம், மீண்டும் முட்டாள்தனமான தீர்ப்புகள், மூடநம்பிக்கையுடனான தீர்வுகள்- அதாவது சொந்தப் பிரச்சினைகளின் வழியில் அரசியல் சிக்கல்களுக்கு விடைகாண முனைவது. பெட்டி ·பெர்னாண்டெஸூம் மாறினாள். ஜெர்மானியப் படைகள் ஆக்ரமித்திருந்த வெறிச்சோடிய பிரான்சு வீதிகளில் இப்போது அவளது கவனம், பாரீஸைப் பார்த்தாள், மரி கிளாட்
கார்ப்பெண்ட்டரைப்போலவே கட்டல்பா மரங்கள் பூத்துக்குலுங்குவதைப் பார்க்கிறாள், அவளைப்போலவே இவளுக்கும் விருந்தினரை உபசரிக்கும் நாட்கள் அமைந்தன.

அத்தியாயம்-11

அவளது விடுதிவரை தனது சொகுசுக் காரில் அழைத்துசெல்கிறான். பிறர் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக விடுதியின் வாசலுக்கு சற்று முன்பாகவே நிறுத்திக்கொள்கிறான். இரவு நேரம். அவள் இறங்கிக்கொள்கிறாள். அவனைத் திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறாள். சாலையையொட்டி வெளிக்கதவினைக் கடந்ததும் பள்ளியின் மிகப்பெரிய விளையாட்டுத் திடல், அது ஒளிவெள்ளத்தில் மூழ்கியிருக்கிறது. நடைகூடத்தின் மறுமுனையில் இவளுக்கென்றே காத்திருக்கும் அவளைப் பார்க்கிறாள். இவளைக் காணாததால் ஏற்பட்டப் பதட்டம், நேரான பார்வை, ‘எங்கே போயிருந்தாய்?’, என்று கேள்வி. ‘உறங்குவதற்கு நான் வரவில்லை’, என்பது இவள் பதில். ஆனால் அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. ஹெலென் லாகோனெல்லும் அதைக் கேட்கவில்லை. தனது பிரத்தியேகத் தொப்பியை தலையிலிருந்து அகற்றியவள்,சடைகளைப் பிரித்து படுப்பதற்கு முன்பாகச் செய்யும் வழக்கப்படித் தலைமயிரை ஒழுங்கு செய்துகொள்வதில் மும்முரமாக இருக்கிறாள். பள்ளிக்குக்கூட நீ போகவில்லை போலிருக்கிறது. ஆம் அங்கும் போகவில்லை. பள்ளியிலிருந்து தொலைபேசியில் தெரிவித்திருந்தார்களாம். அதனாற்றான் ஹெலெனுக்குத் தெரியவந்ததாம், சொல்கிறாள். விடுதியின் தலைமைக் கண்காணிப்புப் பெண்மணியை அவள் சந்தித்தாக வேண்டுமென்கிறாள். கூடத்து இருட்டில், நிறைய இளம்பெண்கள். அனைவரும் வெள்ளையுடையில் இருக்கின்றனர். நின்றிருந்த மரங்களில் பெரியபெரிய விளக்குகள். படிப்பதற்கென உபயோகத்திலிருக்கும் அறைகள் சிலவற்றில் வெகுநேரத்திற்குப் பிறகும் அணைக்கப்படாமல் மின்சார விளக்குககள், ஒருசில பெண்கள் படிக்கவோ அல்லது எழுதவோ செய்கிறார்கள் என்பதற்கான சாட்சி. மற்றவர்கள் வகுப்பறைகளில் பேசிக்கொண்டிருக்கலாம், சீட்டுக்கட்டு விளையாடலாம் அல்லது பாடிக்கொண்டிருக்கலாம். உறங்கச்செல்வதற்கான நேரமென்று எதுவுமில்லை. பகல் நேரங்களில் வெப்பத்தின் கடுமை அதிகம். மாலையில், இளம் கண்காணிப்புப் பெண்களின் விருப்பப்படி சிறிது நேரம் ஓட அனுமதியுண்டு. அரசு காப்பகத்தில் வெள்ளைக்காரப் பெண்கள் என்று சொன்னால் நாங்கள் இருவர்மட்டுமே. மற்றவர்களனைவரும், கால்வாசி அரைவாசியான கலப்பினத்து பெண்கள். அவர்கள் கப்பல் மற்றும் தரைப்படை ராணுவ வீரர்கள், சுங்கத்துறை ஊழியர்கள், பொதுப்பணித்துறை மற்றும் அஞ்சலகப் பணியிலிருந்த தகப்பன்மார்களால் கைவிடப்பட்டவர்கள். பெரும்பாலும் அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்புத்துறையினால் பராமரிக்கப்படுபவர்கள். ஹெலெனை பொறுத்தவரையில், மருத்துவமனைகளுக்குத் தாதிகளும், அநாதை இல்லங்களுக்குக் கண்காணிப்பாளர்களும், தொழுநோய் கூடங்களூக்குச் சேவையாளர்களும், மனநோய் மருத்துவ மனைகளில் பணியாளர்களும் வேண்டும், அதற்காகவே பிரெஞ்சு அரசாங்கம், அப்படிப்பட்ட பெண்பிள்ளைகளை வைத்துப் பராமரிக்கிறதென்று நினைக்கிறாள். காலரா, கொள்ளைநோய் காலங்களில் அதற்கான பணிவிடங்களுக்கும் அரசாங்கம் இவர்களை அனுப்பக்கூடுமென நம்புகிறாள். தனக்கும் அப்படியேதேனும் நடந்துவிடுமோ என்ற அச்சமிருப்பதால் பல நேரங்களில் அவள் அழுவதுண்டு. ஆகவே விடுதியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, அங்கேயே பாதுகாப்பாக இருந்துவிடுவது நல்லதென அடிக்கடிச் சொல்லிக்கொண்டிருப்பாள்.

கண்காணிப்பு அலுவலகத்திற்குச் சென்றேன். கண்காணிப்பு அலுவலகர் ஒரு பெண்மணி. கலப்பினத்தவள், இளம் வயது. என்னையும், ஹெலெனையும் சற்று அதிகமாகவே அவதானிக்கும் வழக்கம் அவளுக்குண்டு. என்னிடத்தில் அவள், “நீ பள்ளிக்குச் செல்லவில்லை, இரவு நேரத்திற்கு உறங்க வரவுமில்லை, வெளியிலிருந்திருக்கிறாய். நடந்தவற்றை உனது தாயாரிடம் சொல்ல நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோமென்றாள். நான் அவளிடத்தில், ” எனக்கு வேறு வழியில்லை அதாற்றான் அப்படி நடந்துகொண்டேன். ஆனால் இன்றிரவுமுதல் அப்படி எதுவும் நடக்காது, உறங்குவதற்கு இங்குதான் வருவேன், தவிர அம்மாவிடம் சொல்வதால் எந்தப் பயனுமில்லை”, என்று கூறினேன். என்னை நேராக நோக்கியவள், சிரிக்கிறாள்.

பள்ளிக்கு மட்டம்போடுவதும், இரவுநேரங்களில் வெளியிற் தங்குவதும், விடுதிக்குத் தாமதித்து வருவதும் எனக்கு வாடிக்கையாகிறது. எனது அம்மாவிற்குத் தகவல்போனது. அவள், காப்பகத்தின் தலைமை நிருவாகத்திலிருந்தப் பெண்மணியை வந்து பார்த்தாள். அவளிடம், ” மாலை நேரத்தில் என்னைச் சுதந்திரமாகச் சுற்றித் திரிய அனுமதிக்கவேண்டுமென்கிறாள். நான் விடுதிக்குத் திரும்பிவருவதற்கான நேரத்தைத் திட்டமிடுதலோ, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுதியில் தங்கியுள்ள பிற பிள்ளைகளோடுமட்டுமே வெளியிற் செல்லவேண்டுமென்றோ நிர்ப்பந்தம் எதுவும் கூடாதென்கிறாள். மேலும், “என் மகள் எந்நேரமும் சுதந்திரமாக இருக்கிறவள், அப்படியில்லையென்றாள், ஓடிவிடக்கூடியவள், அம்மாவான எனக்கே, அவள் அப்படி இருப்பதைப்பற்றி கவலைகளில்லை, அப்படியே இருந்துபோகட்டுமென நினைக்கிறேன், சுதந்திரமாக இருக்க அனுமதிக்கிறேன்”, என்கிறாள். காப்பக நிர்வாகியிடமிருந்து பதிலில்லை, அம்மா சொல்வதயெல்லாம் அவள் கேட்டுத்தான் தீரவேண்டும், காரணம் எனக்குள்ள வெள்ளைத் தோல், கலப்பினசிறுமிகள் அதிகமுள்ள அப் பள்ளியின் மரியாதை, என்னைப்போல ஒன்றிரண்டு வெள்ளைத்தோல் பெண்களின் இருப்பால் காப்பாற்றப்படுகிறதென்று நினைப்பவள் அவள். அம்மாவுக்கோ, தன்னுடைய மகள் ஊர் சுற்றினாலும், ஒழுங்காகப் படிக்கிறாள், அவளுடைய பிள்ளைகளால் ஏற்பட்ட வேதனைகளும், அவலங்களும், என்னால்தான் தீர்ந்தாகவேண்டும் என்பதான கவலை. விளைவு, விடுதிவாழ்க்கை அடுத்துவந்த நாட்களில், ஹோட்டெல் வாழ்க்கையாகிப்போனது, அதற்கானச் சுதந்திரத்தை விடுதி நிருவாகி எனக்குக் கொடுத்திருந்தாள்.

கூடிய சீக்கிரம், திருமண ஒப்பந்தத்திற்கான வைரமோதிரமொன்று எனது கைவிரலில் ஜொலிக்கக்கூடும். காப்பகத்தில் பணிபுரிகிற பெண்கள் எனது நடவடிக்கைகளையும் மற்றதையும் அவதானித்துக்கொண்டிருக்கப் போவதில்லை. ஒருவேளை எனது திருமண ஒப்பந்தத்தை வேண்டுமானால் சந்தேகிக்கலாம், ஆனால் இத்தனை விலைகூடிய வைர,மோதிரத்தை என்னைப்போல சிறுமியொருத்திக்குக் காரணமின்றி கொடுப்பார்களா என்கிறபோது நம்பத்தானே வேண்டும்.

ஹெலென் லாகோனெல், விசுப்பலகையொன்றில் ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள், எனது நடவடிக்கைகள், விரைவில் காப்பகத்தை விடுச்செல்வதற்கான அறிகுறியென நினைத்திருக்கக் கூடும், மெல்ல விசும்புகிறாள். நான் அவளை நெருங்கி பக்கத்தில் அமர்கிறேன். எனது உடலொட்டிக் கிடந்த ஹெலென் லாகோனெல் சரீரத்தின் அழகினை மெய்மறந்து ரசிக்கிறேன். எனக்கு மிக அண்மையில், உள்ளாடை ஏதுமின்றி, சௌந்தர்யமயமான ஓர் உடல். இதுவரை நான் பார்த்திராத மார்பகங்கள். கூச்சமற்ற ஜென்மம். மற்றவர்கள் என்ன நினைப்பார்களென்ற கவலைப்படமாட்டாள், நாங்கள் அனைவரும் ஒன்றாக உறங்கும் மண்டபத்தில், நிர்வாணமாக அவள் உலாத்த பலமுறைக் கண்டிருக்கிறேன். கடவுள் படைப்புகளிலேயே மேன்மைக்குரியது, ஹெலென் உடலாகத்தான் இருக்கவேண்டும், ஒப்பிடமுடியாதது, இவ்வளவு பொருத்தமாக உடலும் மார்பும் அமைந்திருக்கக் கண்டதில்லை. உடலிருந்து கச்சிதமாய் பிரிந்து, தேவைப்படும் கைகளுக்குச் சௌகரியமாகத் தோற்றமளிக்கும் மார்பகங்களின் அசாதாரண வெளிவட்டங்கள். என்னுடைய இறந்துபோன இளைய சகோதரனுடைய உறவு வைத்திருந்த கூலிப்பெண்ணுடைய மார்புகளுக்குக்கூட இத்தனை வளப்பமில்லை. ஆண்களுடைய அங்கங்களுக்கிடையே இப்படியொரு இணக்கமிருப்பதில்லை, அதுவன்றி அவற்றை வெளிப்படையாகப் பிரித்தறிய முடியாது. ஹெலெனுடைய மார்பகங்களுக்குண்டான வதைகளும் அவளுக்கில்லை. ஹெலெனோடு அதிககாலமென்றில்லை, அதிகபட்சமாக ஒரு கோடைகாலமென்று சொல்லலாம், அவ்வளவுதான். ஹெலென் தலா(Dalat)விலிருந்து வந்தவள். அவளுடைய தந்தை ஓர் அரசு அலுவலர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னால் வகுப்புகளெல்லாம் தொடங்கி ஒரு சில மாதங்கள் முடிந்திருந்த நிலையில் காலம் கடந்து பள்ளியில் சேர்ந்திருந்தாள். அவளுக்கு அச்சம். எப்போதும் எவருடனாவது இருக்கவேண்டும், இருக்கிறாள். வாய் திறக்கமாட்டாள். பெருவாரியான நேரங்களில் அழுதபடி இருப்பவள். அவளுடலுக்கென்று பிரத்தியேகமான ஒரு நிறம், மலையின் பழுப்புமில்லாமல்,ரோஜா நிறத்திலுமில்லாமல், வித்தியாசமான கலவை. இங்கே எல்லாப்பெண்களும் கடுமியான வெக்கை காரணமாக இரத்த சோகைப் பீடித்ததுபோலிருக்க, அவளைச் சுலபமாகப் பிரித்து இனங்காண முடியும். அவள் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்பவளல்ல, பள்ளிக்குச் செல்வதென்பது அவள் கேட்டறியாதது. எதையும் நினைவில் நிறுத்த அவளுக்குப் போதவும்போதாது, படிப்பும் வராது. விடுதியிலிருந்த தொடக்க வகுப்புகளுக்குச் சென்றுவருவது உண்மை என்றபோதிலும், பலனென்று எதுவுமில்லை. என்னைக் கட்டிப்பிடித்தபடி அழுகிறாள். அவள் கேசத்தை மெல்ல அளைந்தபடி, விடுதியைவிட்டுச் செல்லும் எண்ணமெதுவும் எனக்கில்லையென அமைதிப்படுத்துகிறேன். தான் அழகாய் இருக்கிறோமென்ற உணர்வுகூட அவளிடத்திலில்லை அவளது பெற்றோர்க்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.

சீக்கிரம்,மணம் செய்து விடுவதென்று குறியாய் இருந்தார்கள். அவள் விரும்புகின்றவகையில் எல்லாவிதமான ஆண்களும் கிடைக்கலாம். ஆனால் அவள் அவர்களை விரும்பவில்லை. திருமணம் செய்துகொள்ளூம் எண்ணமுமில்லை. அவளுக்கு அவள் அம்மாவுடன் இருப்பதற்கு விருப்பம், அவள் சொற்படி நடக்க விருப்பம். வேடிக்கையான தொப்பியும், லாமே காலணியுமாக இருக்கும் என்னைக் காட்டிலும் மணம் செய்துகொள்ளூம் தகுதி ஹெலெனுக்கு நிறையவே உண்டு. அவளை மணம் செய்துகொள்ளலாம், கணவன் மனைவி என்ற பந்தத்திற்குள் நிறுத்தலாம், அச்சுறுத்தலாம், அல்லது சொல்வதெதுவும் விளங்காமற் போனாலும், எவைகளெல்லாம் பயமுறுத்தக் கூடியவை என்பதையாவதுச் சொல்லிக்கொண்டிருக்கலாம், எங்கும் போகாதே, காத்திரு என்றும் கட்டளை இடலாம். இருவருக்குமே பதினேழு வயது இருந்தும், அவளுக்கு அநேக விஷயங்களில் என் அளவிற்கு எப்போதுமே ஞானம் போதாது என்பதுதான் எனது எண்ணம்.

அத்தியாயம்-12

ஹெலென் லாகொனெல் நல்ல வளர்த்தி, ஆனால் அவள் ஓர் அசடு. அவளுடைய சரீரம் ஒரு சில பழங்களின் மேற்தோல்போல அத்தனை மென்மையானது. சட்டென்று அதன் இருப்பை உணரமுடியாது. மிகைப்படுத்தி சொல்வதுபோல இருக்கிறதா? உண்மையும் அதுதான். பொறாமையில் அவளை எவரேனும் கொன்றாலும் ஆச்சரியமில்லை. அவளுடையக் கைகளைக் கொண்டே அவளுடைய கழுத்தை நெறிக்கலாம் என்பதைப்போன்ற வித்தியாசமான கனவுகளில் நம்மை ஆழ்த்தக்கூடியவள். தனது பலத்தை அறிந்திராத, தனது அருமை பெருமைகளை உணர்ந்திடாத- நினைத்துபார்க்காத, பிசையுங்களென்று கைகளையும், உண்ணென்று வாயையும் அழைக்கும், மிக மென்மையான கோதுமை மா அவள். கடவுளைக்குறித்து மிக ஆழமாக அறிந்துணர்வதற்காக ஒவ்வொருநாளும் சீனர்கள் நகரத்திலிருந்த அறையொன்றிர்க்குச் செல்வதும், அங்கே எனது மார்பிரண்டும் ஒருவனால் உண்ணப்பட்டதில்லையா, அதுபோலவே எனக்கும் ஹெலேன் லாகொனெல், மார்பகங்களை உண்ண விருப்பம். சன்னமான கோதுமைமாவினாலான அவளுடைய மார்பகங்கள் உண்ணப்படவேண்டியவை.

ஹெலென் லாகொனெலிடம் கொண்ட தாபம் என்னை முடக்கிப் போட்டிருக்கிறது, உடல்மீதான இச்சையில் தவிக்கிறேன். இனி ஒவ்வொரு இரவும் தவாறாமல் அவளையும் அங்கு அழைத்து போகவேண்டும், கண்களை மூடி, கலவியின் உச்சத்தில் கத்துவதில் என்னை மறக்கவேண்டும். என்னை சந்தோஷபடுத்தியவனுக்கு, ஹெலெனைக் கொடுக்க விரும்பினேன், இப்போது அவள் முறை. என் கண் முன்னே, எனது இச்சைகளை அவள் நிறைவேற்றுவாள், என்னுடைய இடத்தில், அவள் இருந்துகொண்டு தன்னைத் தருவாள். அவளுடைய உடல் ஊடாக, அவளுடைய சரீரத்தின் வழியாகத்தான், அவன் தருகின்ற இன்பம் என்னைச் சேர்ந்தாகவேண்டும், அதுபோதும். பிறகென் உயிர் பிரிய சம்மதம்.

அவளுடைய உடலென்னவோ கொலென் பிரதேசத்து மனிதனுடல்போலத்தான் இருக்கிறது, ஆனால் அவளுடைய இருத்தல் எங்கும் பரவிக்கிடக்கிற சூரிய ஒளி, சூதுவாதற்றது- செய்யும் பாவனைகளில், விடும் கண்ணீரில், உள்ள குறைபாடுகளிள், வெளிப்படுத்தும் அறியாமைகளில், ஒவ்வொன்றிலும் தனதன்றி வேறொன்றை முன்னிலைப்படுத்தாதது. ஹெலென் லாகொனெல் யாரென்று நினைக்கிறீர்கள், இன்னதென்று விவரிக்கவியலாதவகையில், ஆகக் கடுமையானதொரு பரவசத்தில் என்னைக் கொண்டுபோய் நிறுத்துகிற, சீன- கொலென் பிரதேசத்து விந்தை மனிதன் இருக்கிறானில்லையா, அவனுடையக் கூட்டத்தைச் சேர்ந்தவள்தான் இவளும்.

ஹெலென் லாகொனெல்லை மறக்கவில்லை. என் உடலை வதைத்த மனிதனையும் இன்றுவரை ஞாபகத்தில் வைத்திருக்கிறேன். நான் புறப்பட்டபொழுது, அதாவது அவனைப் பிரிந்து வந்தபிறகுங்கூட, இரண்டாண்டுகாலம் ஆண் துணையின்றி இருந்திருக்கிறேன். ஆச்சரியமாக இருக்கிறதில்லையா? பிறருக்காக அல்ல. உண்மையில் எனக்கு நானே நேர்மையாக இருக்கவேண்டுமென்று ஏற்படுத்திக்கொண்ட ஒழுங்கு.

இன்னமுங்கூட அவர்களில் ஒருத்தியாக நான் இருக்கிறேன், நான் வாழ்ந்த இடமென்று சொன்னால் அதைத்தான் குறிப்பிடவேண்டும்.

அதனுடைய மலட்டுத் தன்மையில், மிருகத்தனமான அதன் போக்கில், அதன் அட்டூழியத்தில் ஒருவித பாதுகாப்பினை, அதாவது எதிர்காலத்தில் நான் எழுதுவதற்குத் தேவையான நம்பகத் தன்மையை கொடுத்த இடம். எத்தனையோ இடங்களிருக்க, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் என்னை நினைவு கூறவைக்கும் இடம். மணிக்கணக்கில் கொலென் பிரதேசத்து ஜாகையில் இருந்திருக்கிறேன், ஒருபோதும் இருண்டுக் கிடந்ததில்லை எந்நேரமும் புத்தம்புது ஒளிவெள்ளத்தில் மூழ்கிக்கிடப்பதான பிரமை. மூச்சைத் திணறவைக்கும் இடம்., மரணத்துடன் கைகுலுக்குமிடம், வன்முறைக்கான இடம், உடல்வலி, நம்பிக்கையின்மை, இழிவு என்று எதற்கும் அதை நினைவில் கொள்ளலாம், அதுதான் கொலென், நதியின் மறுபக்கத்தில் இருக்கிறது. அங்கே செல்ல நதி¨யைக் கடக்கவேண்டும் அவ்வளவுதான்.

ஹெலென் லாகொனெல் என்ன ஆனாளென்று எனக்குத் தெரியாது, இறந்துமிருக்கலாம். அதாவாது நான் பிரான்சு திரும்புவவதற்கு மிகவும் முன்பாக, உணவு விடுதியைவிட்டு முதலில் வெளியேறியவள் அவள். தலா என்ற ஊருக்குப் புறப்பட்டுச் சென்றாள். அங்கே அவளை வரச் சொன்னது அவளுடைய அம்மா. எனது ஞாபகக்குறிப்பின்படி, தனது திருமணத்திற்காக தலா சென்றிருக்கவேண்டும். பிரான்சிலிருந்து யாரேனும் புதிதாக வந்திருக்கவேண்டும், அந்நபரை அவள் சந்தித்திருக்கக் கூடும். ஒருவேளை ஹெலென் லாகொனெல்லைக் கட்டாயமாக அவளுடைய அம்மா புறப்பட்டுவரச்சொன்னதின் அடிப்படையில் எனக்கேற்பட்ட ஊகத்தை உண்மையென்று நினைக்கிறேனோ என்னவோ?. எனது நினைவில் பிழையிருக்கவும் வாய்ப்புண்டு.

நான் சொல்லிக்கொண்டுவரும் உண்மைகளில் ‘எப்படி, எதுவாக’ எனபதெல்லாங்கூட அடங்கி இருக்கின்றன. ஆம். கஞ்சா புகைப்பதற்காக, வேலைக்கார பயன்களிடமும் அவன் திருடுகிறான். எங்கள் அம்மாவைத் திருடுகிறான். அலமாரிகளை அலசுகிறான். திருடுகிறான். சூதாடுகிறான். ஆந்த்ர்- தே-மேர்(Entre-Deux-Mers) என்ற இடத்தில் இறப்பதற்கு கொஞ்சம் முன்பாக, அப்பா வீடொன்றை வாங்கி இருந்தாள். எங்களுக்கென்று இருந்த ஒரே சொத்து. கடன்களை அடைக்கலாமென்று அம்மா அந்த வீட்டை விற்கிறாள். போதவில்லை. ஒவ்வொருமுறையும் அதுதான் நடந்திருக்கிறது. கூப்போல் சூதாட்ட விடுதி வாடிக்கையாளர்களுக்கு என்னை விற்கவும் முயற்சிக்கிறான். அவன் சாப்பிட்டானா, அவன் நன்றாய் தூங்கினானா, அவன் பெயர் சொல்லி அழைப்பதை காதில் வாங்கினானா, என்பதற்காகவே அம்மாவுக்கு உயிர்வாழ விருப்பம். ஆம்பூவாஸ் பக்கத்தில் அவனுக்கென்று வாங்கிய சொத்து, அவளது பத்தாண்டுகால சேமிப்பு. ஒரே இரவில் அதை அடைமானத்திற்கு வைத்தாயிற்று. வட்டி கட்டிகொண்டிருக்கிறாள். பிறகு, நான் இதற்கு முன்பு குறிப்பிட்டதுபோல அங்கிருந்த அத்தனை மரங்களும் கபளீகரம் செய்யப்பட்டன. அது நடப்பதற்கும் ஓர் இரவுதான் தேவைபட்டது. இறக்கும் தறுவாயிலிருந்த அம்மாவைத் திருடினான். அலமாரிகளைத் திறந்து எல்லாவற்றையும் அலசிக்கொண்டிருக்கிற ஒருவன், எப்படி மறைத்துவைத்திருந்தாலும் எங்கே வைத்திருந்தாலும், அது விரிப்புகளின் மடிப்புகளாக இருக்கட்டும், ரகசிய மறைவிடங்களாக இருக்கட்டும், மோப்பம் பிடித்துவிடுவான். திருமண உறுதிப்பாட்டுமோதிரங்கள்( எங்கள் வீட்டில் அவை எண்ணிக்கையில் அதிகம்), நகைகள், உணவுப் பொருட்கள் என்று எதையும் விட்டுவைப்பவனில்லை, திருடுகிறான். தோ, வேலைக்கார பையன்கள், எனது இளைய சகோதரனென்று பேதமின்றி திருடுவான். என்னிடத்தில் திருடியது அதிகம். எந்த நேரமும் அம்மாவின் உயிர்போகலாம் என்ற நிலைமையில் வீடெங்கும் இழவின் சாயல், வக்கிலோடு வந்து நிற்கிறான். மரணத் தறுவாயில் செய்யவேண்டியதாம், தள்ளிப்போடக்கூடாதாம், சொல்கிறான். ‘எழுதப்படும் உயில் சட்டப்படி செல்லாது’ என்று வக்கில் சொல்கிறார். என்னைப் பலிகொடுத்து, அவனுக்குச் சாதகமாக அம்மா நடந்துகொண்டதுண்டு. கேட்டால் நகைப்பீர்கள், நிறைய விஷயங்களில் எனக்கும் அவனுக்கும் பேதம்பார்த்திருக்கிறாள். அதன் விளவுகளை தெளிவாய் உணர்ந்தின் அடிப்படையில் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ வேண்டும். உடன்படுவதாக எழுதி கையெழுத்து இடுகிறேன். ஒப்பதல் தந்தேன். “நன்றி” என்று எனது சகோதரன் உச்சரித்தபோது தலை தாழ்ந்திருந்தது. பொறுப்பானவன். மரணத்தறுவாயில் செய்யவேண்டியது எதையும் தள்ளிப்போடக்கூடாதில்லையா, கண்ணீர் சிந்துகிறான். பாரீஸ் நகர விடுதலைக்குப்பிறகு, மிதிப்(Midi) பகுதியில் முந்தைய அரசாங்கத்திற்கு துணைபோனவர்க¨ளையெல்லாம் புதிய அரசாங்கம் தேட ஆரம்பித்தது. எங்கே ஒளிவதென்று தெரியவில்லை, என்னைத் தேடிவருகிறான். எதையும் முழுவதுமாக, நான் தெரிந்துகொண்டவளில்லை, ஏதோ ஒரு ஆபத்திலிருந்து தப்ப நினைக்கிறான் என்பது உறுதி. மனிதர்களைk காட்டிக்கொடுத்திருக்கலாம், அதாவது யூதர்களைப் பற்றிய தகவலைச் சொல்லியிருக்கலாம். அவன் எதையும் செய்யக்கூடியவன். உங்கள் உயிரைவாங்கிய மறுகணம் அல்லது உங்கள் உதவிக் கட்டாயம் தேவை என்கிறபோதெல்லாம் நல்லவன், மிகுந்த நேசம் காட்டக்கூடியவன். எனது கணவரைக்கூட நாஜிகள் கைது செய்து, முகாமுkகென்று இரயிலேற்றப்பட்டார். அதற்காக மிகவும் வருந்துகிறான். மூன்று நாட்கள் எனது வீட்டில் தங்குகிறான். மறந்துபோனேன். வெளியிற்செல்கிறபோது பாதுகாப்புடன் பூட்டிவைக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கிருப்பதில்லை. அவன் தேடுகிறான். எனது கணவர் திரும்பவந்தால் உதவுமென்று அரிசி, மற்றும் சர்க்கரைக்கான கூப்பன்களை பத்திரமாக வைத்திருந்த நேரம். கையிற்கிடைக்க அவற்றை எடுத்துக்கொள்கிறான். பிறகு எனது அறையிலிருந்த ஒரு சிறிய அலமாரியையும் குடைகிறான். அதற்குப் பலனிருக்கிறது. எனது மொத்த சேமிப்பும் -ஐம்பதாயிரம் பிராங்- இப்போது அவன் கையில். ஒரே ஒரு பிராங்கைக் கூட விட்டுவைக்கவில்லை. திருடிய பொருட்களோடு எனது அப்பார்ட்மெண்ட்டிலிருந்து வெளியேறுகிறான். அவனை மறுமுறைபார்த்தபோது நான் வாய்திறக்கவில்லை. அவனுக்கு அது மிகவும் அவமானத்திற்குரியது, அதைபற்றிபேச என்னாலும் முடியாது. போலியான உயில் தயாரிப்பிற்குப் பிறகு, பதினான்காம் லூயி காலத்து கோட்டை என்று எங்களால் உருவகிக்கப்பட்ட சொத்தும் அநியாயவிலைக்குப் போனது. அம்மா இறக்குந் தறுவாயில் போலி உயில் தயாரித்து என்னை ஏமாற்றி கையொப்பம் வாங்கியதைப்போலவே, கோட்டைவிற்பனையிலும் நடந்துகொண்டான்.

அம்மா இறந்ததிலிருந்து தனிமனிதனாக அவன் வாழ்கிறான். அவனுக்கென்று நண்பர்களில்லை. சில நேரங்களில் “வேலை”க்கென்று சில பெண்களை அவன் உடன் வைத்திருந்தான், மோம்பர்ணாஸ் அதற்கு உகந்ததாக இருந்தது. அவர்கள் வேலை ஏதும் செய்யாமலும் இருந்தார்கள், குறைந்தபட்சம் ஆரம்பத்தில். சில வேளைகளில் ஆண்கள் சிலரையும் அவனுடன் கண்டிருக்கிறேன், அதற்கான ஊதியத்தை அவர்கள்தான் கொடுக்கவேண்டும். மிகக்கடுமையான தனிமையில் அவன் வாடினான் என்று சொல்லலாம்., வயதுக் கூடக்கூட அவனுடைய தனிமையின் வெளியும் வளர்ந்தது. அவனொரு போக்கிரி அவ்வளவுதான். பெரிய குற்றங்களென்று எதையும் செய்ததில்லை. சுற்றி இருப்பவர்களை பயமுறுத்தவேண்டும், அவனுக்கான எல்லை குறுகியது, அதைத் தாண்டிச் செல்ல அவன் நினைத்ததில்லை. அவனுடைய அசலான ராச்சியத்தை தொலைத்ததென்னவோ எங்களிடத்தில்தான். நீங்க நினைப்பதுபோல ஊரே பயப்படுப்படியான ரவுடி இல்லை, ஒரு குடும்பத்தை பயமுறுத்திய வம்பன், போக்கிரி, அலமாரிகளைக் குடைபவன், இரக்கமற்ற கொலைகாரன், வெட்கங்கெட்ட பிறவி. ஆதரவற்று, பிறர் தூற்றும்படியாக, அச்சத்துடன் வாழும் எல்லா போக்கிரிகளையும் போலவே அவனும் வாழ்ந்தான். ஆம் அவன் பயந்து வாழ்ந்தான். என் அம்மாவின் மரணத்திற்குப் பிறகு ஒரு புதிராக இருக்கிறான். உதாரணத்திற்கு தூர் நகர் காப்பி பாரில், அங்கு வேலை செய்யும் பையன்களோடும் (குதிரைகளில் பணங்கட்ட அவர்கள் வேண்டியிருந்தது) பாரின் பின்புறமிருந்த இடத்தில் சீட்டுக்கட்டு விளையாடும் ஒயின் குடியர்களிடமும் அவனுக்குச் சிநேகிதம் இருக்கிறது. இவனும் அவர்களில் ஒருவனாக மாறிக்கொண்டிருக்கிறான், நிறைய குடிக்கிறான், கண்கள் சிவந்திருக்கின்றன, வாய் கோணிக்கொண்டு போகிறது. தூர் நகரில் அவனுக்கென்று ஒன்றுமில்லை. இருந்த இரண்டு பெரிய அசையா சொத்துக்களும் கடனில் மூழ்கின. ஓராண்டுகாலம், பொருள்களைபோட்டு வைப்பதற்காகவென்று அம்மா ஒரு சிறிய இடத்தை வாங்கிப்போட்டிருந்தாள், அங்கே தங்கிக்கொள்கிறான். ஒருவருடகாலம் சாய்வு நாற்காலியொன்றில் அமர்ந்தபடி தூங்கிக் கழிக்கிறான். போனால் போகிறதென்று வீட்டில் அனுமதிக்கிறோம், ஒரு வருடம் எங்களோடு இருக்கிறான், பிறகு வெளியில் தள்ளி கதவைச் சாத்துகிறோம்.

– தொடரும்…

– பதிவுகள் சஞ்சிகை , ஜூன் 2008, மூலம்: மார்கெரித் த்யூரா (1914-1996), தமிழில: நாகரத்தினம் கிருஷ்ணா.

Krishna_Nagarathinam நாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன வாழ்க்கைச் சுருக்கம் இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *