ஸ்டிரைக்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 4, 2025
பார்வையிட்டோர்: 734 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பனியையும் குளிரையும் ஊடறுத்துக் கொண்டு செல்கின்ற அந்த பஸ் மலைநாட்டின் வளைவுகளை மிகுந்த சிரமத்தோடு கடந்து கொண்டிருந்தது. இனிமேல் திணிப்பதற்கு இடமேயில்லை என்ற போதும் ஒவ்வொரு நிறுத்தத்திலும் பஸ் நிற்காமலும் இல்லை. ஆட்கள் ஏறாமலுமில்லை. பஸ்ஸினுள் சீட்டில் அமர்ந்திருப்போர் கதி நின்று அவஸ்தைப்படுகின்றவர்களை விட கஷ்டமானது. தலை வரை நிறைந்து விட்ட புத்தகப் பைகளையும், கைப்பைகளையும் குடைகளையும் எந்த கையால் பிடிப்பது எனத் தடுமாறிக் கொண்டு, பாதை வளைவுகளில் பஸ் திரும்புகையில் மடியிலுள்ள சுமைகளைப் பிடிப்பதா தாம் விழாமல் காத்துக் கொள்வதா என புரியாமல்… 

பஸ்ஸின் பின் சீட்டில் அமர்ந்து மேற்சொன்ன அவஸ்தைகளை அனுபவித்துக் கொண்டிருந்த பைரவியின் தற்போதைய பிரச்சினை தான் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் எப்படி இறங்குவது என்பதுதான். இறங்க வேண்டிய நிறுத்தத்துக்கு ஒரு மைலுக்கு முன்னதாகவே தவிக்கத் தொடங்கியவள் ‘எப்படி இந்த வியூகத்தை ஊடறுத்துச் செல்வேன்… அதற்குள் நான் இறங்க வேண்டிய இடம் கடந்து விடுமே… என எண்ணியவளாய் அவசர அவசரமாய் தன்னிடம் ஒப்படைத்திருந்த பொதிகளை இறக்கி வைத்து விட்டு அந்த நெரிசலின் திட்டுக்களை சுமந்து கொண்டு கீழிறங்கினாள். 

கீழிறங்கியவளுக்கு தான் இறங்க வேண்டிய நிறுத்தத்திற்கு முன்னாலேயே இறங்கிவிட்டதை உணர்ந்த போது சோர்வேற்பட்டது. கண் முன்னால் தெரிந்த பாதையின் ஏற்றம் வேறு பயமுறுத்தியது. எப்படியும் இந்த துாரத்தை நடந்து கடந்தேயாக வேண்டிய நிர்ப்பந்தத்துடன் இயலாமையும் சேர நடக்கத் தொடங்கியவள் சற்று நிதானித்து தன்னை…. பார்த்துக் கொண்டாள். கசங்கிய சேலையும் கலைந்த கூந்தலும் சே… காலையில் கஷ்டப்பட்டு கட்டிய அந்த புடவையின் கோலம் மனதில் எரிச்சலை ஏற்படுத்தியது. தன் மீதான கழிவிரக்கத்துடன் நடக்கத் தொடங்கியவளை பின்னாலிருந்து வந்த பல குரல்கள் திரும்பிப் பார்க்க வைத்தன. 

“குட்மோர்னிங் டீச்சர்” 

“குட்மார்னிங்.. அட நீங்கள்ளாம் இங்கயிருந்துதா வாறீங்களா?” என்று பைரவியைப் பார்த்து,

“ஆமா டீச்சர்! நம்ம லயம் கீபிரட்டுல தானே இருக்கு, அங்கயிருந்து ஸ்கூலுக்கு பஸ் கெடயாது டீச்சர். நாம நடந்துதா வருவோம்” என்றான் ஒரு பையன். 

“அப்ப ஒங்க லயம் கிட்டத்துலதா இருக்கா” என்றாள் பைரவி. 

“இல்ல டீச்சர்…தோ… பாருங்க தெரியுது. அதுதான் நம்ம லயம்”. அவன் காட்டிய அந்த லயகாம்பராக்கள் பைரவியின் கண்களுக்கு சின்ன பொட்டாய்த் தெரிந்தது. 

“இவ்…வளவு தூரத்துல இருந்து நடந்தா வாறீங்க” ஆச்சரியமாய் கேட்டாள் பைரவி. 

“ம்….அப்புறம்..” என்ற பதிலை கேட்ட பைரவி சட்டென்று திரும்பிப் பார்த்தாள். “அதுதானே பார்த்தேன் இப்புடி பேசுறவன் நீயாதானே இருக்க முடியும். நீயும் இங்கிருந்துதா வாறியா ராசு…?” 

சிரித்தபடி தலையாட்டிய அந்த பத்து வயதுச் சிறுவன் முகத்தில் சிறுபிள்ளைத்தனமான அழகு இருந்தது..அவன் சிரிக்கின்றபோது தெரிகின்ற தெத்துப் பல்லின் வடிவில் எப்போதுமே பைரவிக்கு ஒரு பிரியம் உண்டு. பைரவியின் வகுப்பில் கற்கின்ற ராசுவின் முகத்தில் மாத்திரமல்ல, பேச்சிலும் சிறுபிள்ளைத்தனம் இருக்கும். அவனிடம் கேள்வி கேட்பது டீச்சராயிருக்கட்டும், அதிபராயிருக்கட்டும், ஏன் கல்வி அதிகாரிகளாயிருக்கட்டுமே. ஆமாம் என பதில் சொல்ல வேண்டியதற்கு பதிலாக ‘ம்….அப்புறம்” என ஒரு எகத்தாளமான பதில் அவனிடமிருந்து வரும். ‘ராசு, காலயில சாப்பிடியா?

“ம்… அப்புறம்”

“வீட்டு வேலை முடிச்சுட்டியா ராசு?

“ம்…அப்புறம்”

“பூக்கன்றுகளுக்கு தண்ணி ஊத்துறது ராசுவோட வேலதானே?”

“ம்…அப்புறம்”… 

அவனுடைய பதிலில் தொனிக்கின்ற குழந்தைத்தனமும் பேச்சில் தெரிகின்ற மழலைத்தனமும் அவனை அதட்டவோ, அடிக்கவோ முடியாது செய்துவிடும். 

இந்தப் பாடசாலையில் கடந்த மூன்று வருடங்களாக கடமை புரிகின்ற பைரவிக்கு, போக்குவரத்து வசதி குறைந்த, பின்தங்கிய அந்த பாடசாலை ரொம்ப பிடித்துக் கொண்டது. இங்குள்ள சிறார்களின் அன்பு, மதிப்பு, கள்ளமற்ற வெள்ளை உள்ளம் எல்லாவற்றுக்கும் மேலாக, வெகுளித்தனமிக்க அந்த சிறுவர் மீதான அன்பும் அவர்கள் இவள் மேல் செலுத்துகின்ற அபரிதமான அன்பும் பைரவியை இப் பாடசாலையிலேயே கட்டிப் போட்டு விட்டது. 

ஐந்தாம் தரத்திற்கு ஆசிரியையான பைரவி அந்த வகுப்பு மாணாக்கர் மீது அதீத கவனம் செலுத்தியதால் மாணவர்கள் அனைவருக்குமே எதற்கெடுத்தாலும் பைரவி டீச்சர் தான் வேண்டும். அதிபர் கேட்டுக் கொண்டதற்கிணங்க புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட வகுப்புக்களை பைரவி நடாத்தத் தொடங்கிய பின் அவர்களோடு கூடுதலாக பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பாடசாலை  விட்டதும் அவர்களைச் சாப்பிடச் சொல்லுவாள் பைரவி. சிலர் அருகிலிருக்கும் தம் லயங் களுக்குச் சென்று சாப்பிட்டு விட்டு வருவர். தூரத்திலிருந்து வருகின்ற மாணவர்கள் சாப்பாட்டை கட்டி எடுத்து வந்து சாப்பிடுவர். என்ன சாப்பாடு என்றால் சோறு கறி இத்யாதி களோடு இருக்குமா?? வழக்கமான ரொட்டிதான். 

ஏண்டா எந்த நாளும் ரொட்டி சாப்பிடுறீங்களே; ரொட்டின்னா அவ்வளவு விருப்பமா? என்றால், பிடிக்குதோ பிடிக்கலியோ ஆச்சி இதத்தா சுட்டு வச்சிருக்கும் என்பார்கள். 

இப்படித்தான் ஒருநாள் மாணவரை சாப்பிட சொல்லிவிட்டு தானும் சாப்பிடவென கைகழுவ போனாள் பைரவி. பாடசாலை வளவில் இருந்த ஜேம் மரத்தில் பழங்களைப் பறிக்கத் தயாராகிக் கொண்டிருந்த ராசுவை கண்டதும் சாப்பிடாமல் என்ன பண்ணுகிறான் என எண்ணியபடி… 

“ராசு சாப்பிடலயா நீ? இன்னும் பத்தே நிமிசத்துல பாடத்தைத் தொடங்கிடுவேன். சுருக்குன்னு சாப்பிட்டுட்டு வா” என்றாள் பைரவி, மரத்தை பார்த்தபடியே பதில் வந்தது.

“சாப்பாடு கொண்டாறல டீச்சர்’ 

“ஏன் இன்டர்வலுக்கு கொண்டாந்த எல்லா சாப்பாட்டையும் சாப்பிட்டுட்டியோ”

“இல்லீங்க டீச்சர். இன்டர்வலுக்கு சாப்பிடல நா. இன்னிக்கு சாப்பாடே கொண்டாறல டீச்சர்”. 

பாவமாய் போனது பைரவிக்கு. அவனருகில் போய் தோளில் கைவைத்து, 

“ஏண்டா சாப்பாடு கொண்டாறல” என ஆதுரத்தோடு கேட்டவள் அவன் முகத்தைப் பார்த்ததும் திகைத்துப் போனாள். பசியால் வாடியிருந்த அந்த முகத்தில் ஏராளமாய் உணர்வலைகள் நிரம்பியிருந்தன. ஏதோ புலப்பட, 

“சரி சரி வா நானும் நீயுமாய் சாப்பிடலாம்” என அழைத்தாள். 

வர மறுத்தவனை வலுக்கட்டாயமாய் இழுத்து வந்து அமர வைத்தாள் அவள். கண்களில் நீர் நிறைய பைரவியை பார்த்தபடி அவள் கொடுத்த இடியப்பத்தை வாய்நிறைய திணித்துக் கொண்டான் ராசு. பாவம் பசியை மறைக்கத் தெரியாத அந்தப் பச்சை மனசு வேண்டாம் என மறுக்காமல் வாயில் இடியப்பத்தை திணித்த காட்சி பைரவி மனதில் ஆழமாய் பதிந்தது. எந்தக் கேள்வியும் கேட்காமல் சாப்பிட்டு முடித்ததும் வகுப்பை நடாத்த ஆரம்பித்தாள் அவள். 

அடுத்தநாள் காலை பாடசாலைக்கு பைரவி வந்ததிலிருந்து அவளது காலையே சுற்றிச் சுற்றி வந்தான் ராசு. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பைரவி தாளாமல் கேட்டாள், 

“என்ன ராசு ஏதாவது வேணுமா?” 

தயங்கியபடி பேசினான் ராசு, 

“இல்ல டீச்சர் நேத்திக்கு ஒங்க சாப்பாட்ட நா சாப்புட்டுட்டனா… ஒங்களுக்கு பசிச்சிருக்குமே… அப்படின்னு குமார் சொன்னான். ஏ… டீச்சர் ஒங்களுக்கு நேத்து ரொம்ப பசிச்சுச்சா? ‘இல்லியேடா நானும் ஒங்ககூட சாப்பிட்டேன்தானே” 

“ஆமா, இத்துண்டுதா சாப்பிட்டிருப்பீங்க. நான்தா எல்லாத்தையும் முழுங்கிப்புட்டனே” ‘போடா நா ஒண்ணும் இத்துனூண்டு சாப்பிடல. நல்லா சாப்பிட்டேன். அது சரி நேத்து ஓம்பசி போயிருச்சா?” 

“ம்…அப்புறம் அதுதா வயிறு ரொம்ப சாப்பிட்டனே” 

அவன் முகமலர்ச்சியோடு கூறிய விதம் பைரவிக்கு சிரிப்பை ஏற்படுத்தியது. 

“அது சரி இப்ப சொல்லு ஏ நேத்து சாப்பாடு கொண்டாரல”

“இருந்தாத்தானே கொண்டார”

எகத்தாளமாய் வந்தது பதில்.

“முந்தியெல்லாம் கொண்டு வருவதானே” 

“முந்தி அம்மா வீட்டுல இருந்தாங்க. சமைப்பாங்க. இப்ப அப்பா நல்லா இருந்தா சமைப்பாரு. குடிச்சுப்பிட்டு வந்தா ஒண்ணுமில்ல”

“ஏன் ஒங்க அம்மா எங்க” 

“அவங்கதா வெளிநாடு போயிட்டாங்களே. ஒரு வருசமாவுது” 

“காசு அனுப்புவாங்களா?” 

“ம்… அப்புறம் அனுப்பாமயா. அப்பா அதானே நல்லா குடிச்சுப்பிட்டு கெடக்குறாரு” 

தோட்டங்களுக்கு தொற்றியுள்ள நோய் இது. அம்மாமார் வெளிநாடு சென்று அனுப்பும் காசில் குடித்து வெறித்துக் கொண்டு அப்பாமார் கிடக்க பாவம் இந்த சின்னஞ்சிறுசுகள் தான் தாய்ப் பாசமும் இல்லாமல் தந்தையிடம் அடிபட்டுக் கொண்டு, கால் வயிற்றுக்கும் அரை வயிறுக்கு மாய் சாப்பிட்டுக் கொண்டு படுகின்ற அவஸ்தை சொல்லி மாளாது. அட வெளிநாட்டில் எத்த னையோ பிரச்சினைகளுக்கு மத்தியில் உழைக்கின்ற அந்தப் பெண்களின் உழைப்புமல்லவா வீணாகிக் கொண்டிருக்கிறது. 

மனசுக்குள் பொருமிக் கொண்ட பைரவி தன்னை சுதாகரித்துக் கொண்டு, 

“சரி எல்லா கதையையும் விட்டுபுட்டு நா சொல்றத கேளு. இனிமே நீ சாப்பாடு கொண்டு வராட்டி எங்கூடதா வந்து சாப்பிடணும் சரியா?” என அன்புக் கட்டளை இட்டாள். 

“சரி டீச்சர். ஆனா நீங்க நெறய சாப்பாடு கொண்டாறனும். இல்லாட்டி ஒங்களுக்கு இல்லாம போயிடுமே” என்றான் ராசு 

காலம் நகர்ந்தது. 

பைரவியோடு ரொம்பவும் ஒட்டிப் போன ராசு அவள் கூறுகின்ற எதையும் தட்டாமல் செய்வான். அன்றும் அப்படித்தான் பிரத்தியேக வகுப்பில் வைப்பதற்காக தீர்மானிக்கப்பட்ட பரீட்சை களுக்காக எல்லோரையும் அப்பியாசக் கொப்பி வாங்கிவர பணித்தாள் பைரவி. 

“இங்க பாருங்க. தொடர்ந்து நடக்கப் போற எல்லா டெஸ்ட்களையும் நீங்க ஒரே கொப்பியில செய்தாதா ஒங்களுக்கு படிக்க வசதியா இருக்கும். அதனால சின்ன கொப்பியா வாங்கிடாம பெரிய கொப்பியா வாங்குங்க. என்ன சரிதானே” என்ற அவளின் குரலுக்கு, 

“சரி டீச்சர்” என கோரஸாக பதில் கிடைத்தது. 

“டீச்சர் அந்தக் கொப்பி எவ்வளவு விலை?” சிறுபிள்ளைத்தனமாய்க் கேட்டான் ராசு 

‘என்ன முப்பது நாப்பது ரூபாய்க்குள்ள வரும். ஏன் கேக்குற?”

தெத்துப்பல் தெரிய சிரித்துவிட்டு அமர்ந்துவிட்டான். ஒரு கிழமையாகி விட்டது. வகுப்பில் ஓரிருவரைத் தவிர வேறு யாரும் கொப்பி இன்னும் வாங்கவில்லை. 

“நாளைக்கு வாங்கித் தாறேன்னாங்க டீச்சர்” 

இதே பல்லவி நாலைந்து நாள் தொடர பைரவிக்கு கோபம் வந்விட்டது. 

“எத்தனை நாளா கொப்பி கொண்டு வரச் சொல்றன். ஏன் இன்னும் ஒருத்தரும் கொப்பி கொண்டு வரல” 

ஒருவன் எழும்பிச் சொன்னான், 

“சம்பளம் போட்டவுடன வாங்கியாறதா அப்பா சொன்னாரு டீச்சர். இன்னும் சம்பளம் போடலயாம். இப்ப வேலநிறுத்தம் நடக்குதாம்” 

அடடா இதை எப்படி மறந்தேன் நான் என மனசுக்குள் குற்றவுணர்வு தலைதூக்க…

“அப்பிடியா அப்ப அரவிந்தன், ஜெகன் நீங்க மட்டும் எப்பிடி வாங்கீனீங்க?” என்றாள். 

டீச்சர் ஏச மாட்டார் என தெரிந்ததும் ராசு எழுந்தான். 

“அது டீச்சர்… அவங்க அப்பாமாரு தோட்டத்துல வேல செய்யலியே. டவுனுல கடையில வேல பாக்குறாங்க” 

“நீ ஏன் கொப்பி வாங்கிட்டு வரல. ஒங்கம்மா அனுப்புற காசு இருக்குல்ல” 

“ம்… அப்புறம் அந்த காசத்தான் அப்பா குடிச்சே முடிச்சுடுவாரே. அதுதா அம்மா இப்ப காசே அனுப்புறதில்ல; கடுதாசியும் போடுறதில்ல” 

“ம்‘ம்… இந்த ஸ்டிரைக் எப்ப முடிஞ்சு… எப்ப சம்பளம் போட்டு… எப்ப நீங்க கொப்பி வாங்கிட்டு வந்து… எப்ப நான் டெஸ்ட் வைக்கிறது” என அங்கலாய்த்த பைரவியைப் பார்த்து சிரித்தார்கள் மாணவர்கள். 

ஸ்டிரைக் தொடர்ந்தது. சம்பள உயர்வு வேண்டி இவர்கள் நடாத்தும் இந்த அகிம்சா போராட்டம் தொழிலாளர்களை பாதித்தது போல அதிபர் ஆசிரியர்களையும் பாதித்தது. பாடசாலை முழுதும் வரண்ட பூமியாய்க் கிடந்தது. மாணவர்களின் முகங்களில் தெரிகின்ற சோர்வு களை படிப்பிக்க விடாமல் செய்தது. கொப்பி, பென்சில் பேனா என அத்தியாவசியமான பொருட்கள் இல்லாமல் மாணவர் வர மாணவரைத் தட்டிக் கேட்கவும் வழியில்லை. அரசாங்கம் இவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க மறுக்கவே வேலை நிறுத்தம் தொடர்ந்தது. பாடசாலைக்கு மாணவர் வரவு படிப்படியாகக் குறைந்தது. வருகின்ற மாணவர்களையும் கூட படிப்பில் ஈடுபடுத்த முடியாதவாறு சோர்ந்து காணப்பட்டனர். 

“மூணு நாளா ஒருவேள கஞ்சி மட்டும்தான் டீச்சர் சாப்பாடு. வீட்டுல இருந்தா பசிக்குது. கோபம் கோபமா வருது. அதுதா ஸ்கூலுக்கு வந்தோம். இங்க வந்தாலாவது ப்ரெண்ட்ஸ் கூட கதைச்சுக் கிட்டு இருக்கலாமே” என அங்கலாய்த்தனர். 

ஸ்டிரைக் முடிந்தபாடில்லை. தோட்டப்புற ஆசிரியர்களும் அதிபர்களும் தொழிலாளிகளோடு தோள் கொடுக்கத் தயாரானார்கள். இந்த வேலை நிறுத்தம் ஒரு முடிவுக்கு வந்தாலேயொழிய பாடசாலை நடாத்த முடியாது என்ற நிலையில் அவர்களோடு இணைவதே சரியான வழி என ஆசிரியர் சங்கம் தீர்மானித்து அதை நடைமுறைப் படுத்தியது. 

தோட்டத்துக் காரியாலயத்தின் முன் அனைவரும் குழுமியிருந்து கோஷங்களை எழுப்பினர். தம்மோடு ஆசிரியர்களும் அதிபரும் இணைந்ததில் தோட்டத்து மக்கள் பெரிதும் உற்சாகமாயினர். 

கூட்டத்தில் ஒருவர் எழுந்து, 

“நீங்கள்ளாம் நம்ம கூட சேர்ந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு கெடைக்கணும்னு பாடுபடவந்திருக்கிறது நம்ம எல்லாருக்கும் ரொம்ப சந்தோசம். நாம கேக்குற சம்பள உயர்வு மாத்திரம் அரசாங்கம் கொடுத்துடட்டும், அப்புறம் பாருங்க. மொத வேலயா நம்ம பிள்ளைகள் படிக்க தேவையான எல்லாத்தையும் வாங்கி குடுத்துப்பிட்டுத்தா மறுவேல. அவங்களாவது படிச்சு பெரியாளா வரணும். நம்மள மாதிரி கூலிவேல செஞ்சுகிட்டு மத்தவங்க முன்னால கைகட்டிகிட்டு நிக்காம பெரிய மனுசனா வரணும்.” 

“உண்மையிலேயே நாம இந்த சம்பள உயர்வு கேட்கிறதே பசங்களுக்காக செலவு செய்யத்தான். என்னடாப்பா நாஞ் சொல்றது?” 

என கூட்டத்தைப் பார்த்து கேட்கவும்… கூட்டம் வீரமாய் கைதட்டி ஆமோதித்தது. 

நாட்கள் நகர்ந்தன. நாடு முழுவதும் இந்த வேலைநிறுத்தம் பரவியது. தோட்டத்தில் கொழுந்துகள் எல்லாம் முற்றிவிட்டன. நாட்டின் பொருளாதார ஏணி சற்றே ஆட்டம் கண்டது. அரசாங்கம் விழித்துக் கொண்டு அவசர அவசரமாய் தோட்டத்து யூனியன்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஒரு தீர்மானத்துக்கு வந்தது. 

அன்று காலை அரசாங்கத்தின் முடிவு அறிவிக்கப்பட்டது. தொழிலாளர் கேட்ட நாள் சம்பளத்தை வழங்காவிட்டாலும் தொழிலாளரின் அன்றாட வாழ்விற்கு ஏற்ற விதத்தில் நியாயமான ஒரு சம்பள உயர்வை அரசாங்கம் வழங்க தீர்மானத்திருப்பதாக அறிவித்த அந்த செய்தி கேட்டு தொழிலாளர் ஆனந்தக் கோஷமிட்டனர். 

பைரவி, ‘அப்பாடா…’ என பெருமூச்சு விட்டுக் கொண்டாள். இந்த மட்டிலாவது ஒரு தீர்வு ஏற்பட்டு பாடசாலை மீண்டும் இயங்கத் தொடங் கினால் போதுமென்றிருந்தது அவளுக்கு. ஒரு கிழமைலேயே அரசாங்கம் தான் அறிவித்தபடி அந்த சம்பள உயர்வை வழங்கியது. ஒவ்வொரு தொழிலாளியும் தமது நிலுவை சம்பளத்துடன் | அதோ அந்த மூலையில்… மிக்க சந்தோசத்தோடு வீடுகளுக்குப் போவதில் உண்மையான சந்தோஷத்தின் தார்ப்பரியம் புரிந்தது. 

அடுத்த நாள் காலை பாடசாலைக்கு வந்த பைரவிக்கு அந்த சோக செய்தியை கூறினார் அதிபர். ராசுவின் தந்தை காலமான செய்தி கேட்ட பைரவிக்கு அந்த பையனின் குழந்தை முகம் ஞாபகத்துக்கு வந்து அவஸ்தைப்படுத் தியது. பாடசாலை மாணவர்களையும் அழைத்து கொண்டு அந்த இழவு வீட்டுக்குள் நுழைந்த பைரவிக்கு தூக்கிவாரிப் போட்டது. 

“இவரா ராசுவின் அப்பா? அன்னைக்கு பசங்க ளோட படிப்ப பத்தி ரொம்பவும் அக்கறையா பேசினாரே. பாவம் இப்படி அநியாயமாய் போயிட்டாரே” என மனசுக்குள் புலம்பிக் கொண்டவள், ராசுவை கண்களால் தேடினாள். 

“ராசு…” என பக்கத்தில் அமர்ந்து கூப்பிட்டாள் பைரவி. நிமிர்ந்து பார்த்தவன் கண்கள் கலங்க, நெஞ்சு விம்ம “டீச்சர்…” என்றபடி அவள் மடியில் படுத்து அழுதான். அவனைத் தடவிக் கொடுத்தபடி எதுவும் பேச முடியாதவளாய் அமர்ந்திருப்பதைத் தவிர பைரவிக்கு வேறு வழி தெரியவில்லை. 

திடீரென அவள் மடியிலிருந்து நிமிர்ந்தவன்… 

“டீச்சர் எனக்கு… நா …இனி கொப்பி வாங்கிட்டு வரவே முடியாது டீச்சர். ஏன்னா… அப்பா அந்த…அந்தக் காசிலதா நேத்தைக்கு குடிச்சுப்பிட்டு வந்து…” 

நா கேட்டேன்… “ஏம்பா எனக்கு கொப்பி பென்சில் ஒண்ணும் வாங்கிட்டு வரலயான்னு. கேட்டதுக்கு என்னய அடிச்சுப்பிட்டு… படுத்தவருதா… 

டீச்சர், இனி எனக்கு கொப்பி வாங்கிட்டு வரவே முடியாது டீச்சர்” என்றபடி விம்மினான். 

– ஊடறு (பெண் படைப்பாளிகளின் தொகுப்பு). முதற் பதிப்பு: மே 2002, விடியல் பதிப்பகம், கோயம்பத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *